Friday, August 26, 2016

இராமாயணம் - வாலி வதம் - எண்ணுற்றாய்! என் செய்தாய்?

இராமாயணம் - வாலி வதம்  - எண்ணுற்றாய்! என் செய்தாய்?


இராமனின் அம்பால் அடிபட்டு விழுந்த வாலி, தூரத்தில் இராமன் தன்னை நோக்கி வருவதைக்  கண்டான்.

முதலில் இராமனைப் பற்றி கேள்விப் பட்டான், பின் அவன் நாமத்தை அம்பினில் கண்டான், பின் இராமனே நேரில் வரக் காண்கிறான்.

வானில் உள்ள கார் மேகம், மழை பொழிந்ததால், தரையில் விழுந்து, பல தாமரை மலர்களை மலரச் செய்து, அந்த மேகமே மண்ணில் இறங்கி வந்து கையில் வில் ஏந்தி வந்ததைப் போல வந்த திருமாலைக் கண்டான். தன் உடலில் இருந்து இரத்தம் வழிய, கண்ணில் தீப் பொறி பறக்க, என்ன நினைத்து என்ன செய்தாய் என்று சொல்லத தொடங்குகிறான்.

பாடல்


கண்ணுற்றான் வாலி, நீலக் கார்
      முகில் கமலம் பூத்து,
மண் உற்று, வரி வில்
      ஏந்தி, வருவதே போலும் மாலை;
புண் உற்றது அனையசோரி
      பொறியொடும் பொடிப்ப, நோக்கி,
'எண்ணுற்றாய்! என் செய்தாய்!'
      என்று ஏசுவான் இயம்பலுற்றான்:


பொருள்

கண்ணுற்றான் = கண்டான்

வாலி = வாலி

நீலக் = நீல நிறமும்

கார் முகில் = கரிய நிறமும் கொண்ட மேகம்

கமலம் பூத்து = தாமரை மலர்களை மலரச் செய்து

மண் உற்று = பின் தரை இறங்கி வந்து

வரி வில் ஏந்தி,  = வலிய வில்லை ஏந்தி

வருவதே போலும் = வந்ததைப் போல இருந்த

மாலை; = திருமாலை

புண் உற்றது = புண் உள்ள உடலில் இருந்து

அனையசோரி = இரத்தம் வழிய

பொறியொடும் = கண்ணில் தீ பொறி பறக்கும் படி

பொடிப்ப, நோக்கி = கோபத்தோடு நோக்கி

'எண்ணுற்றாய்! என் செய்தாய்!' = என்ன நினைத்து , என்ன செய்தாய்

என்று ஏசுவான் இயம்பலுற்றான் = என்று ஏசுவான் , இயம்பல் உற்றான்


என்ன பொருள்...

மேகம் வானில் இருந்தே மழை பொழிந்து தாமரைக்கு நீர் வார்க்க முடியும்.  இருந்தும் அது இறங்கி வருகிறது.

அவதாரம் என்றால் அருளினால் , மேலிருந்து கீழிறங்கி வருவது என்று அர்த்தம்.

திருமால் நினைத்திருந்தால் , வைகுந்தத்தில் இருந்தே இராவணனை கொன்று  இருக்க முடியும். இராவணனை கொல்வது மட்டும் நோக்கம்  அல்ல. இன்னும் பலப் பல இராவணன்கள் வராமல் இருக்க, இந்த உலகுக்கு வழி காட்ட , மானிடம் வடிவம் தாங்கி இரங்கி , இறங்கி வந்தான்.

கார்மேகம் , தரை மேல் வந்தது போல.

கம்பன் அதில் ஒரு நுட்பம் வைக்கிறான்.

வாலியை பார்க்க வந்தது, அவனுக்கும் அருள் செய்யவே என்பதை சொல்லாமல் சொல்கிறான்.

தாமரைக்கு நீர் வார்த்த மேகம் தரை மேல் வந்தது மாதிரி இராமன் வந்தான்  என்றான் கம்பன்.

கடைசியில் "ஏசுவான் இயம்பல் உற்றான்"  என்கிறான் கம்பன்.

ஏசுவது, இயம்புவது இரண்டும் ஒன்று தானே. எதற்கு இரண்டு வார்த்தைகள்.

ஏசுதல் என்றால் திட்டுதல், வைதல் .

இயம்புதல் என்றால் போற்றுதல், துதித்தல். ஞானக்கொடிதனை... இயம்புவோமே என்பது குற்றாலக் குறவஞ்சி.

வெளியில் இருந்து பார்த்தால் திட்டுவது மாதிரி இருக்கும். அத்தனையும் புகழாரம்.

அம்பு எய்திய இராமன் அப்படியே போய் இருக்கலாம்.

போகவில்லை. ஏன் ?

வாலி தன்னை திட்டுவான் என்று இராமனுக்குத் தெரியாதா ? தெரியும்.

தெரிந்தும் வந்தான்.

ஏன் ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_26.html





Thursday, August 25, 2016

பெரிய புராணம் - காலையின் ஒலி

பெரிய புராணம் - காலையின் ஒலி 


அந்தக் காலத்தில் , கல்லூரியில் படிக்கும் போது அதி காலை எழும் வழக்கம் இருந்தது.

ஒரு 4:30 அல்லது 5:00 இருக்கும் , வழக்கமாக எழும் நேரம்.

அதி காலையில் வெளிச்சம் முழுவதுமாக இருக்காது. லேசாக வெளிச்சம் படரும் நேரம்.

சில வீடுகளில் வாசல் தெளிக்கும் சத்தம், வாசலை பெருக்கும் சத்தம் கேட்கும்

அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதி வண்டியில் செல்வோர் அடிக்கும் bell  ஒலி கேட்கும்.

தினசரி நாள் இதழ் போடும் சத்தம் கேட்கும். கோவிலில் பாட்டு போடுவார்கள் அந்த சத்தம் கேட்கும்.

கொஞ்ச நேரம் ஆன பின் சில வீடுகளில் வானொலி பெட்டி ஒலிக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஒலிகள் எல்லாம் அதிகரித்துக் கொண்டே  போகும். கல்யாணக் காலம் என்றால் , பல கல்யாண மண்டபங்களில் பாட்டு போடுவார்கள்.

இதையே இன்னும் சில நூறு ஆண்டுகள் முன்னோக்கி எடுத்துச் சென்றால் எப்படி இருக்கும் ?

அன்றுள்ள மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் ? என்ன மாதிரி ஒலி எல்லாம் கேட்டிருக்கும் அந்தக் காலத்தில் ?

சேக்கிழார் படம் பிடிக்கிறார்.

அது ஒரு கடலோர கிராமம்.

அதி காலையில், தூரத்தில் கடலின் அலைகள் எழுப்பும் ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறது.

பொழுது விடிகிறது.

எங்கோ சில வீடுகளில் பாட்டு, நடனம், வேதம் போன்ற கலைகள் நடக்கும். அந்த சப்தம் ஒரு புறம் வருகிறது.

கொஞ்சம் தள்ளி, யானை குட்டிகளை பழக்கப் படுத்துவோர்   எழுப்பும் ஒலி கேட்கிறது.

இன்னொரு பக்கம், சோலையில் வண்டுகள் ரீங்காரமிடும் சப்தம்.

மற்றொரு புறம், குதிரையை பழக்குவோர் எழுப்பும் ஒலி .

சில வீடுகளில் யாழ் முதலிய இசைக் கருவிகளை இசைக்கும் ஒலி .

இன்னும் சில இடங்களில் ஆடல் பாடல் இவற்றிற்காக இசைக்கும் வாத்திய ஒலி .

கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஒலிகள் எல்லாம் கூடி, கடலின் அலை சப்தத்தை பின்னுக்குத் தள்ளி விடுகின்றன.

பாடல்

காலை எழும்பல் கலையின்ஒலி
     களிற்றுக் கன்று வடிக்கும்ஒலி
சோலை எழும்மென் சுரும்பின்ஒலி
     துரகச் செருக்கால் சுலவும்ஒலி
பாலை விபஞ்சி பயிலும்ஒலி
     பாடல் ஆடல் முழவின்ஒலி
வேலை ஒலியை விழுங்கிஎழ 
     விளங்கி ஓங்கும் வியப்பினதால்.

பொருள்


காலை = காலையில்

எழும்பல் = எழும் போது

கலையின்ஒலி = ஆடல், பாடல், போன்ற கலைகளின் ஒலி

களிற்றுக் கன்று = யானைக் குட்டியை

வடிக்கும்ஒலி = பழக்கும் ஒலி

சோலை எழும்மென் = பூங்காவில் தோன்றும்

சுரும்பின்ஒலி = வண்டுகளின் ஒலி

துரகச் செருக்கால் சுலவும்ஒலி = பெருமிதம் கொண்ட குதிரைகளை பழக்கும் ஒலி 

பாலை விபஞ்சி பயிலும்ஒலி = பாலை போன்ற யாழ்களை மீட்டும் ஒலி

பாடல் ஆடல் முழவின்ஒலி = ஆடலுக்கும், பாடலுக்கும் வாசிக்கும் மிருதங்கம், மத்தளம் போன்றவற்றின் ஒலி

வேலை ஒலியை விழுங்கிஎழ = கடலின் ஒலியை மிஞ்சி எழ

விளங்கி ஓங்கும் வியப்பினதால்.= ஓங்கி வியக்கும் படி ஒலித்தன

அந்தக் கால கிராமம் கண் முன்னால் படமாக விரிக்கிறதா ?

தெய்வப் புலவர் சேக்கிழாரின் தமிழ். 

பெரிய புராணத்தைப் படித்துப் பாருங்கள். அத்தனையும் தேன் .

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/blog-post_35.html



இராமாயணம் - வாலி வதம் - இராமன் தோற்றம்

இராமாயணம் - வாலி வதம்  - இராமன் தோற்றம் 


இராமனின் அம்பினால் அடிபட்டு கிடக்கும் வாலி, தன் மேல் பாய்ந்த அம்பினை பற்றி இழுத்து அதில் இராமன் என்ற நாமம் எழுதி இருக்கக் காண்கிறான்.

முதலில் இராமனைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறான்.

இப்போது அவன் நாமத்தை கண்டான்.

அடுத்து ?

அதுத்தது அந்த இராமனே நேரில் வரக் காண்கிறான்.


பாடல்

‘இறை திறம்பினனால்; என்னே
    இழிந்துேளார் இயற்கை? என்னில்
முறை திறம்பினனால் ‘என்று
    மொழிகின்ற முகத்தான் முன்னர்,
மறை திறம்பாத வாய்மை
    மன்னர்க்கு முன்னம் சொன்ன
துறை திறம்பாமல் காக்கத்
    தோன்றினான், வந்து தோன்ற.

பொருள் 


‘இறை திறம்பினனால்; = அரச நீதி தவறினால் (இராமனே)

என்னே இழிந்துேளார் இயற்கை?  = மற்றவர்களின் நிலை என்ன. இராமனே தவறு செய்தால், மற்றவர்கள் என்ன செய்ய மாட்டார்கள்.

என்னில் = என்று

முறை திறம்பினனால் ‘ = வழக்கம் தவறினால் என்ன செய்வது

என்று = என்று

மொழிகின்ற முகத்தான் முன்னர் = சொல்கின்ற வாலியின் முன்
,
மறை திறம்பாத = வேதங்களில் சொல்லப் பட்டதை விட்டு தவறாத

 வாய்மை = உண்மையாக

மன்னர்க்கு  = மாணவர்களுக்கு

முன்னம் சொன்ன = முன்பு சொன்ன

துறை திறம்பாமல் காக்கத் = இடங்கள் தவறாமல் காக்க

தோன்றினான், வந்து தோன்ற.= தோன்றியவன்  தோன்றினான்

வந்தது யார் ?


உணர்ச்சியும் அறிவும் உச்சம் பெட்ற பாடல்.

ஒன்றைப் பார்ப்பவர்கள், மற்றதை மறந்து விட வாய்ப்பு உள்ள பாடல்.

வாலி நினைக்கிறான் -  அரச நீதி தப்பியவன்,  துறந்தவன் வருகிறான் என்று நினைக்கிறான். வில்லறம் , இல்லறம் துறந்தவன் வருகிறான் என்று நினைக்கிறான்.

மறைந்து இருந்து அம்பு தாக்கப்பட்ட அதிர்ச்சியில் உள்ள வாலி , வலியின்  உச்சியில் இருந்து அப்படி பார்க்கிறான்.

அது என்ன இறை திறம்பின்னான் ?

அரசனை இறைவனாகவே நினைத்தார்கள் நமது இலக்கியத்தில்.

ஏன் அப்படி ?

உயிர்களை காப்பது இறைவனின் வேலை. அந்த வேலையை செய்வதால், அரசனையும் இறைவனாகவே நினைத்தார்கள். வள்ளுவர் 'இறை மாட்சி' என்று ஒரு ஒரு அதிகாரமே படைத்தார்.

சரி, அது வாலியின் பார்வை.

கம்பன் எப்படி பார்க்கிறான் ?

வேதம், மனு நீதி இவற்றில் சொல்லப் பட்ட அறங்களை காக்க தோன்றியவன் , அங்கு வந்து தோன்றினான் என்கிறான் கம்பன்.

இராமன் தவறு செய்ததாக கம்பன் நினைத்திருந்ததால் அப்படி ஒரு வரியை  அந்த இடத்தில் போட வேண்டிய அவசியம் இல்லை.

கம்பன் எப்படியோ நினைத்து விட்டுப் போகட்டும்.

அடி பட்டவன் வாலி. வலியும் , வேதனையும் அவனுக்குத்தான்.

இராமனே இப்படி செய்தால் மற்றவர்கள் கதி என்ன என்று நினைத்தவன் முன்  தோன்றினான் என்று கம்பன் கூறுகிறான். வாலி  இன்னும் இராமனைப் பார்க்கவில்லை.

இராமன் இன்னும் சற்று நெருங்கி வருகிறான்.

இராமனைப் பற்றி கேள்வி பட்டான்.

அவன் நாமத்தை கண்டான்.

இப்போது இராமனே நேரில் வருகிறான்.

வந்த இராமனை, வாலி எப்படி கண்டான் ?

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/blog-post_25.html

Wednesday, August 24, 2016

பிரபந்தம் - வினைக்கு நஞ்சு

பிரபந்தம் - வினைக்கு நஞ்சு 


நம் வீட்டில் எலித் தொல்லை, கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால், நாம் என்ன செய்வோம்.

அவை அண்டாமல் இருக்க எலி பாஷாணம், அல்லது கரப்பான் பூச்சி மருந்து வைப்போம். அவை ஓடி விடும், அல்லது அந்த விஷத்தை தின்று உயிர் விடும்.

நம் தொல்லை தீரும்.

இந்த எலி, கரப்பான் போல நமக்கு ஓயாத தொல்லை தருவது நாம் செய்த பழைய வினைகள்.

அந்த வினைகளை எப்படி விரட்டுவது அல்லது இல்லாமல் ஆக்குவது ? அதற்கு என்று ஏதாவது நஞ்சு இருக்கிறதா என்றால் இருக்கிறது என்கிறது பிரபந்தம்.

"நாராயணா " என்ற நாமமே நம் வல் வினைகளுக்கு எல்லாம் நஞ்சு போன்றது.

வல் வினைகள் நம்மை அண்ட விடாது, அண்டிய வல் வினைகளை களைந்து அவற்றின் மூலம் வரும் துன்பங்களில் இருந்து நமக்கு விடுதலை தரும்.

பாடல்


மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர் மங்கையார்வாள் கலிகன்றி,

செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,

துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,

நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணாவென்னும் நாமம்.

சீர் பிரித்த பின்

மஞ்சு உலாவும் சோலை வண்டு அறையும் மா நீர் மங்கையார் வாள்  கலிகன்றி 

செஞ் சொல்லால் எடுத்த தெய்வ நன் மாலை இவை கொண்டு 
சிக்கெனத் தொண்டீர் 

துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயரிலீர் சொல்லலிலும் நன்றாம் 

நஞ்சுதான் கண்டீர் நம் உடை வினைக்கு நாராயாணா எனும் நாமம்


பொருள்

மஞ்சு = மேகங்கள்

உலாவும் = உலவுகின்ற

சோலை = சோலை

வண்டு அறையும் = வண்டுகள் ரீங்காரமிடும்

மா நீர் = சிறந்த நீர்

மங்கையார் = திருமங்கை ஆழ்வார்

வாள் = வாளை கையில் கொண்ட

கலிகன்றி = திருமங்கை ஆழ்வார்

செஞ் சொல்லால் = சிறந்த சொற்களால்

எடுத்த = செய்த

தெய்வ = தெய்வத்திற்கு சாத்திய

நன் மாலை = நல்ல மாலை

இவை கொண்டு  = இவை கொண்டு

சிக்கெனத் தொண்டீர் = இறுக்கமாக பற்றிக் கொண்டு

துஞ்சும் போது அழைமின் = இறப்பு வரும்போது அழையுங்கள்

துயர் வரில் நினைமின் = துன்பம் வரும்போது நினையுங்கள்

துயரிலீர் சொல்லலிலும் நன்றாம்  = துன்பம் வராதபோதும் சொன்னால் நல்லதாம்

நஞ்சுதான் கண்டீர் = விஷம் தான் அறிந்து கொள்ளுங்கள்

நம் உடை வினைக்கு = நம்மை பற்றிக் கொண்டு இருக்கும்

நாராயாணா எனும் நாமம்  = நாராயாணா என்ற நாமம்


கொஞ்சம் ஆழ்ந்து சிந்திப்போம்.

சிக்கெனைப் தொண்டீர் ....இறுக்கி பிடித்துக் கொள்ள வேண்டுமாம். கைகளால் அல்ல. நாராயணா என்ற நாமம் நமது நாவை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.  

சொல்லு நா நமச்சிவாயவே என்று சுந்தரர் சொன்ன மாதிரி நாவில் அந்த நாமம்  பற்றிக் கொள்ள வேண்டும். 

பெற்ற தாய்தனை மகமறந் தாலும் 
          பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் 
     உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் 
          உயிரை மேவிய உடல்மறந் தாலும் 
     கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும் 
          கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் 
     நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் 
          நமச்சி வாயத்தை நான்மற வேனே. 

என்று வள்ளலார் கூறியது போல , நா , நாராயணா என்ற நாமத்தை மறக்கக் கூடாது. 

அது என்ன சிக்கெனைப் பிடித்தல் ?

அந்த காலத்தில் புத்தகங்கள் படிக்க X போல ஒரு மரத்தில் செய்த பலகை இருக்கும். அதன் நடுவில் புத்தகத்தை வைத்துப் படிப்பார்கள். அந்த பலகைக்குப் பெயர் சிக்கு பலகை. புத்தகத்தை எடுத்து விட்டு மூடினால், அது ஒன்றுக்குள் ஒன்று புதைந்து ஒரே கட்டை போல ஆகிவிடும். அப்படி , நாராயாணா என்ற நாமமும், நாவும் ஒன்றோடு ஒன்று  பிணைந்து ஒன்றாக ஆகி விடவேண்டும். 

சிக்கெனைப் பிடித்தேன் என்பார் மணிவாசகர் 

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய

ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய

தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

எப்போதெல்லாம் நினைக்க வேண்டும் , சொல்ல வேண்டும் ?

சாகும் தருவாயில் சொல்ல வேண்டும், துன்பம் வரும் போது சொல்ல வேண்டும்,  துன்பம் வராத போதும் சொல்ல வேண்டும்.

என்ன இது ஒண்ணும் புரியலையே. சாகும் போது சொல்வது, துன்பம் வரும்போது சொல்வது , துன்பம் வராத போது சொல்வது என்றால் என்ன ?


பாடலின் வரிகளை கொஞ்சம் இடம் மாற்றி பொருள் கொள்ள வேண்டும்.


எப்போதும் அந்த நாமத்தை சொல்ல வேண்டும்.

முடியவில்லையா, சரி பரவாயில்லை, துன்பம் வரும்போதாவது சொல்லுங்கள்.

அப்போதும் சொல்லவில்லையா, இறக்கும் தருவாயிலாவது சொல்லுங்கள்.

போகும் இடத்துக்கு புண்ணியம் கிடைக்கும்.

தீய வினைகளுக்கு அது விஷம் போன்றது. இறக்கும் தருவாயில் சொன்னால் கூட, அது வாழ்நாளில் செய்த அத்தனை வினைகளும் அழிந்து போகும்.

சாவு எப்போது வரும், எப்படி வரும், அந்த நேரத்தில் நினைவு இருக்குமா ? தெரியாது. எனவே துன்பம் வராமல் சுகமாக இருக்கும் போதே சொல்லி வையுங்கள். அது உங்கள் நாவில் ஏறி அமர்ந்து கொள்ளும்.

வல் வினைகள் ஓயட்டும்.

வாழ்வில் ஒளி தீபம் வீசட்டும்.

நாராயாணா எனும் நாமம் உங்கள் வாழ்விலும் வசந்தத்தை கொண்டு தரட்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_68.html


இராமாயணம் - வாலி வதை - வாலியின் கேள்விகள்

இராமாயணம் - வாலி வதை - வாலியின் கேள்விகள் 


இராமன் எய்த அம்பை வாலினாலும் கைகளினாலும் பிடித்து இழுத்த வாலி, அதில் இராமனின் பெயர் இருக்கக் கண்டான்.

இல்லறத்தை துறந்த இராமன், எங்களுக்காக தன் வில்லறத்தையும் துறந்தான். வேதத்தில் சொல்லப்பட்டவைகளை யும் , தொன்று தொட்டு வரும் நல்ல அறங்களையும் ஏன் அவன் துறந்தான்  என்று கேள்வி கேட்டு, வெட்கம் வர அவன் நகைத்தான்.

பாடல்

‘இல் அறம் துறந்த நம்பி,
    எம்மனோர்க்கு ஆகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன்,
    தோன்றலால், வேத நூலில்
சொல் அறம் துறந்திலாத
    சூரியன் மரபும், தொல்லை
நல் அறம் துறந்தது ‘என்னா,
    நகை வர, நாண் உள் கொண்டான்.

பொருள்

‘இல் அறம் = இல்லறமாகிய அறத்தை

துறந்த நம்பி, = துறந்த நம்பி

எம்மனோர்க்கு ஆகத் = எங்களுக்காக

தங்கள் வில் அறம் துறந்த வீரன் = தன்னுடைய வில்லறத்தை துறந்த வீரன்

தோன்றலால்,= தோன்றி

வேத நூலில் = வேத நூல்களில்  சொல்லப் பட்ட

சொல் அறம் துறந்திலாத = சொல் அறங்களை துறந்திலாத

சூரியன் மரபும் = சூரிய மரபில்

தொல்லை நல் அறம் துறந்தது = பழமையான நல்ல அறங்களை  துறந்து, கைவிட்டு

‘என்னா, நகை வர, நாண் உள் கொண்டான். = என்று நினைத்து அதனால்  சிரிப்பு வர, நாணம் அடைந்தான்.


தனக்கு வந்த துன்பம் இராமனால் வந்தது என்று அறிந்து கொண்டான்.

மனைவியோடு வாழும் இல்லறம் துறந்தான்.

மறைந்து நின்று அம்பு எய்து வில்லறம் துறந்தான்.

வேத நூல் சொன்ன  சொல்லறம் துறந்தான்.

பழமையான நடைமுறை அறங்களையும் துறந்தான்.

என்று இராமன் மேல் குற்றச் சாட்டுகளை அடுக்குகிறான் வாலி.

நமக்கு ஒரு துன்பம் வரும்போது நாம் என்ன நினைப்போம்.

கடவுள் ஒன்று ஒருவர் இருக்கிறாரா ? நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன் ? பெரியவர்களை மதிக்கிறேன். கோவிலுக்குப் போகிறேன். புத்தகங்களில் உள்ள முறைப்படி பூஜை , விரதம் எல்லாம் இருக்கிறேன். முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவுகிறேன்.

இருந்தும் எனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் வந்தது.

என்னென்னமோ தவறுகள் செய்தவன் எல்லாம் நிம்மதியாக  மகிழ்ச்சியாக இருக்கிறான்.  நான் மட்டும் ஏன் கிடந்து இப்படி துன்பப்  படுகிறேன் என்று நமக்கு ஒரு மன உழைச்சல் ஏற்படுவது இயற்கை.

கடவுள் என்று ஒன்று இல்லை. இந்த வேதம், புராணம், இதிகாசம் எல்லாம் பொய்.  நாட்டில் நீதி நேர்மை என்பதே இல்லை. நல்லது காலம் இல்லை என்று தானே புலம்புவோம்.

அதையே தான் வாலியும் செய்கிறான்.

நீ எல்லாம் ஒரு மனுஷனா என்று கேட்காத குறையாக   .கேட்கிறான்.


இங்கு சற்று நிதானிப்போம்.

இது வரை இராமனை பட்டு கேள்விப் பட்டிருக்கிறான்.

தாரை கூட சொல்லி இருக்கிறாள். சொல்லக் கேள்வி.

அடுத்த கட்டம், இராம நாமத்தை காண்கிறான். அந்த நாமத்தின் மகிமை அவனுக்குப் புரிகிறது. "தெரியக் கண்டான் " என்று சொல்லுகிறான் கம்பன்.

மந்திரத்தின் மகிமை புரிகிறது.

ஆனாலும், அஞ்ஞானம் தடுக்கிறது.

அறிவு குழப்புகிறது. தடுமாற வைக்கிறது.

இறைவன் நல்லவன், உயர்ந்தவன் என்றால் ஏன் வாழ்வில் இத்தனை துன்பங்கள் என்ற விடை தெரியாத கேள்வி வாலியின் மனத்திலும் ஓடுகிறது.

முதலில் இராமனைப் பற்றி கேள்விப் பட்டான்.

அடுத்து அவன் நாமத்தை நேரில் கண்டான்.

அடுத்து...?


http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_24.html

Monday, August 22, 2016

இராமாயணம் - வாலி வதை - மூல மந்திரத்தை

இராமாயணம் - வாலி வதை - மூல மந்திரத்தை 


வாலி வதத்தின் மிக மிக முக்கியமான பாடல்.

தன் மார்பில் பாய்ந்த அம்பை பற்றி இழுத்து , அதில் யார் பெயரை எழுதி இருக்கிறது என்று பார்த்தான்.

கம்பனின் உச்ச பச்ச பாடல்.

என் போன்ற சாமானியர்களால் இந்த பாடலுக்கு ஒரு விளக்கமும் தர முடியாது. தராமல் இருப்பது நலம்.

இருந்தும், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றார் போல, நான் அடைந்த இன்பத்தைப் பற்றி சொல்கிறேன்.

ஆழ்ந்து ஆராய்ந்து மேலும் அறிந்து கொள்க.

அந்த அம்பில் என்ன எழுதி இருந்தது ?


மூன்று உலகுக்கும் மூலமான மந்திரத்தை, முழுவதும் தன்னையே தன் அடியவர்களுக்கு அருளும் சொல்லை, பிறவி பிணிக்கு மருந்தை, இராமன் என்ற நாமத்தைக் கண்டான்.

பாடல்

மும்மை சால் உலகுக்கு எல்லாம்
    மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
    தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
    மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்
    கண்களின் தெரியக்  கண்டான்.

பொருள்


மும்மை சால் உலகுக்கு  = மூன்று என்று சொல்லப் படும் உலகுக்கு


எல்லாம் = அனைத்திற்கும்

மூல மந்திரத்தை = மூலமான மந்திரத்தை

முற்றும் = முழுவதும்

தம்மையே= தன்னையே

தமர்க்கு = அடியவர்களுக்கு

நல்கும் = கொடுக்கும்

தனிப் பெரும் பதத்தை = தனிச் சிறப்பான உயர்ந்த சொல்லை

தானே = அவனே

இம்மையே எழுமை நோய்க்கும் = இந்தப் பிறவிக்கும், ஏழேழு பிறவிக்கும்

மருந்தினை = மருந்தினை

இராமன்  = இராமன்

என்னும் = என்னும்

செம்மை = சிறப்பு

சேர் = சேர்க்கும்

நாமம் தன்னைக் = நாமத்தை

கண்களின் தெரியக்  கண்டான். = கண்களில் தெரியக் கண்டான்


ஆழ்ந்து அறிய வேண்டிய பாடல்.

பாடலின் பொருளை அறியும் முன்,   இப்படி இராமன் என்ற நாமத்தைப் பார்த்தவன் யார் ? வாலி ? வாலியின் பார்வையில் இருந்து  இந்தப் பாடலின் பொருளை நோக்கினால், பாடலின் ஆழமான அர்த்தம் விளங்கும். 


மும்மை சால் உலகுக்கு எல்லாம் ...மேல், நடு , கீழ் என்று சொல்லப் படும்  மூன்று உலகங்கள். சொர்கம், நரகம், பூமி என்று சொல்லப் படும் மூன்று  உலகங்கள். இருந்தது, இருப்பது, இனி வர போகும் என்ற மூன்று  உலகங்கள் என்று எப்படி பிரித்தாலும் அந்த அனைத்து உலகங்களுக்கும் மூலமான மந்திரம்  இராம நாமம். 

முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும்....தன்னுடைய அடியவர்களுக்கு தன்னை  அப்படியே முழுமையாக தந்து விடுவானாம் இராமன். ஏதோ  கொஞ்சம் உனக்கு என்று மிச்சம் வைக்காமல் முழுவதும் தந்து விடுவான். பக்தன் இறைவனிடம் சரணாகதி அடைவது இருக்கட்டும். ஆண்டவனே தன்னை முழுவதும் பக்தனிடம் தந்து விடுகிறான். "கேட்டாய் அல்லவா , எடுத்துக் கொள் " என்று சொல்லுவது போல.


இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை .... தமிழிலே நோய் , பிணி என்று இரண்டு சொல் உண்டு. நோய் என்றால் மருந்து தந்தால் போய் விடும்.  பிணி போகவே போகாது.

பசிப் பிணி என்று சொல்லுவார்கள். பசி வந்தால் நோய் வந்தது மாதிரி  உடல் அல்லல் படும். உணவு உண்டால் பசி போய் விடும். ஆனால்,  சில மணி நேரங்களில் மீண்டும் வந்து விடும். எவ்வளவு சாப்பிட்டாலும்,  எல்லாம் சில மணி நேரம் தான். மீண்டும் பசிக்கும். பசி பிணிக்கு நிரந்தர மருந்து இல்லை.

அதே போலத்தான் பிறவிப் பிணியும். அதற்கு மருந்து இருக்கிறதா ? இது வரை இல்லை. இப்போது இருக்கிறது.

ஏழு பிறப்புக்கும் மருந்தினை என்கிறார் கம்பர். இந்த மருந்தை உட்கொண்டால், ஏழேழு பிறவி என்ற நோய் தீர்ந்து போய் விடும்.

தீராத பிறவி பிணியை தீர்க்கும் அருமருந்து.


செம்மை சேர் நாமம் ...இதற்கு பல பொருள்.

ஒன்று, சிவப்பு சேர்ந்த நாமம். மார்பில் பாய்ந்து , வாலியின் இரத்தத்தில் தோய்ந்ததால் சிவந்த நாமம். சிவப்பு சேர்ந்த நாமம். செம்மை சேர் நாமம்.


இரண்டாவது, செம்மையான நாமம்.  சிறப்பு சேர்ந்த நாமம். செம்மை சேர் நாமம்.


மூன்றாவது, செம்மையான இடத்தில் கொண்டு சேர்க்கும் நாமம். செம்மை சேர் நாமம்.

நான்காவது, வினைத் தொகையாக செம்மையான இடத்தில் முன்பு இருந்தவர்களை சேர்த்த நாமம், இப்போது இருப்பவர்களை சேர்க்கும் நாமம், இனி வரும் காலத்தில் வர இருப்பவர்களையும் சேர்க்கும் நாமம்.


கண்களின் தெரியக்  கண்டான்....அது என்ன கண்களின் தெரியக் கண்டான்.

கண்டான் என்று சொன்னால் போதாதா ? கண்களால் தான் காண முடியும். எதற்காக கண்களின் தெரியக் கண்டான் என்று தேவை இல்லாமல்  இரண்டு வார்த்தைகளை போடவேண்டும் ?

காணுதல் வேறு ,  தெரிதல் வேறு.

இயற்பியலில் ஒரு சிக்கலான விதியை எழுதி என்னிடம் காண்பித்தால் என்னால் அதை காண முடியும். ஆனால், அது என்ன என்று  தெரிந்து கொள்ள முடியாது.

காதலியின் கண்கள் சொல்லும் காதலை அவளுடைய காதலனைத் தவிர வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது.

செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கும் 
உறாஅர்போன் றூற்றார் குறிப்பு.

ஒண்ணும் தெரியாத மாதிரி பார்க்கும் பார்வையில் பொதிந்து கிடைக்கும் ஆயிரம் காதலை அவன் மட்டுமே அறிய முடியும்.

அது போல,  தெரிவது வேறு, காண்பது வேறு.

வாலி, இத்தனை சிறப்பு மிக்க நாமத்தை கண்டது மட்டும் அல்ல, தெரிந்தும் கொண்டான்.

காண்பது, தெரிவது என்று இரண்டு இருந்தாலும், கண் ஒன்றுதானே ?

இல்லை.

அகக்கண், புறக்கண் என இரண்டு உண்டு.

அம்பில் உள்ள நாமத்தை அகக் கண்ணால் கண்டான். அதன் சிறப்பை மனதில் 'தெரிந்து' கொண்டான்.

ஒரு மனிதன் ஆன்மீக வளர்ச்சியின் இரண்டாம் படி.

வாலி என்ற மனிதன் (அல்லது குரங்கு) எப்படி ஒரு ஆன்மீக வளர்ச்சி அடைந்தான் என்று கம்பன் காட்டுகிறான்.

குரங்குக்குச் சொன்னால் என்ன, நமக்குச் சொன்னால் என்ன.


அது என்ன ஆன்மீக வளர்ச்சி...அதற்கும் இந்த மறைந்து இருந்து அம்பு எய்வதற்கும் என்ன சம்பந்தம் ?

(வளரும்)

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/blog-post_22.html


Sunday, August 21, 2016

இராமாயணம் - வாலி வதம் - பொறித்த நாமத்தை

இராமாயணம் - வாலி வதம்  - பொறித்த நாமத்தை 


Self Realization என்பது பெரிய விஷயம்.

உன்னையே நீ அறிவாய் என்றார் சாக்கரடீஸ்.

தன்னைத் தான் அறிவது என்பதுதான் வாழ்க்கையின் நோக்கமாகக் கூட இருக்குமோ ?

வாழ்க்கை தூண்டிக் கொண்டே இருக்கிறது. அறிந்து கொள் , அறிந்து கொள் என்று. நாம் தான் அறிய மாட்டேன் என்று அடம் பிடிக்கிறோம்.

ஒவ்வொரு முறை நாம் கற்றுக் கொள்ளத் தவறும் போதும் வாழ்க்கை இன்னும் அதிக அழுத்தமாக சொல்லித் தர முயல்கிறது.

சில பேர் சீக்கிரம் அதை பற்றிக் கொள்கிறார்கள்.

சிலருக்கு நேரம் ஆகிறது.

வாலி, தான் வலிமை, திறமை, பூஜை, புனஸ்காரம் என்று இருந்து கொண்டிருந்தான்.

தன்னை வெல்ல யாரும் இல்லை என்று நினைத்திருந்தான்.

இராமன் மறைந்து இருந்து ஏவிய அம்பு அவன் மார்பில் பாய்ந்தது.

மிகப் பெரிய அடி. நினைத்துப் பார்க்க முடியாத அடி . வலி.

திகைத்துப் போனான் வாலி.

அவன் மார்பில் தைத்த அம்பை வாலினாலும் கையினாலும் பிடித்து இழுத்து அதில் யார் பெயர் எழுதி இருக்கிறது என்று பார்க்க எத்தனிக்கிறான்.

பாடல்

பறித்த வாளியைப் பரு வலித்
    தடக்கையால் பற்றி,
‘இறுப்பென் ‘என்று கொண்டு எழுந்தனன்,
    மேருவை இறுப்போன்;
‘முறிப்பென் என்னினும் முறிவது
    அன்றாம் ‘என மொழியாப்,
பொறித்த நாமத்தை அறிகுவான்
    நோக்கினன், புகழோன்.


பொருள் 

பறித்த வாளியைப் = மாரிபில் இருந்து பிடுங்கிய அம்பை

 பரு = பருத்த, பெரிய

வலித் = வலிமையான

தடக்கையால் = பெரிய கைகளால்

 பற்றி = இறுகப் பிடித்து


‘இறுப்பென் ‘ = உடைப்பேன்

என்று  = என்று

கொண்டு எழுந்தனன் = எழுந்தான்.

மேருவை = மேரு மலையை

இறுப்போன் = உடைப்பவன், முறிப்பவன்

‘முறிப்பென் என்னினும் = அந்த அம்பை முறித்துப் போடுவேன் என்று நினைத்தாலும்

முறிவது அன்றாம் ‘ = முறிக்க முடியாதது

என மொழியாப் = என்று சொல்லும் படி

பொறித்த = அதில் எழுதி உள்ள

நாமத்தை = நாமத்தை, பெயரை

அறிகுவான் நோக்கினன் = அறியவேண்டி நோக்கினான்

புகழோன் = புகழ் உடைய வாலி

நமக்கு வாழ்வில் வரும் துன்பங்கள் நம்மிடம் சொல்லி விட்டா வருகின்றன ? இன்ன தேதியில், இன்னார் மூலம், இப்படி இப்படி வரும் என்று  சொல்லி விட்டா வருகின்றன.

வாலி மேல் இராமன் மறைந்து இருந்து அம்பு எய்தான் என்பது ஒரு குறியீடு.

துன்பம் வரும் வழி நாம் அறிவதே இல்லை.

துன்பத்தை இறைவன் நமக்குத் தருகிறான் என்றால் , சொல்லி விட்டுத் தருவதில்லை.

இராமன் நேரில் வந்து வாலியிடம் சொல்லி இருந்தால் , ஒரு வேளை வாலி இராமன் சொல்வதைக் கேட்டு அரசை சுக்ரீவனிடம் கொடுத்து விட்டு இராமன் பின்னால் கிளம்பி இருப்பான்.

 ஆனால், வாலி தன்னைத் தான் அறிந்திருக்க மாட்டான்.

இராமனே தான் தான் பரம் பொருள் என்று சொல்லி இருந்தாலும், முதலில் நம்பி  இருந்தாலும், பின்னால் சந்தேகப் பட்டிருப்பான் .  "பரம் பொருள்னு சொல்றான்...கட்டிய மனைவியை பறி கொடுத்து விட்டு காடு மேடெல்லாம் அலைகிறானே ...ஒரு வேளை உண்மையிலேயே இவன் பரம் பொருள் இல்லையோ " என்ற சந்தேகம் வந்திருக்கலாம்.

துன்பம் வரும் போதுதான் நாம் சிந்திக்கத் தொடங்குகிறோம்.

பற்றை விட்டால் தான், பரமனை அறிய முடியும்.

வாலியோ ஒவ்வொரு நாளும் மற்றவர்களிடம் உள்ள வலிமை எல்லாம் தனக்கு வேண்டும் என்று மேலும் மேலும் சேர்த்துக் கொண்டிருக்கிறான்.

என்று இவன் பற்றை விடுவது, என்று இவன் உண்மையை அறிவது ?

அம்பைப் பறித்த வாலி கண்டது என்ன ?


http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_21.html