Monday, September 5, 2016

திரு இரட்டை மணிமாலை - ஆழாமை காப்பானை

திரு இரட்டை மணிமாலை - ஆழாமை காப்பானை 


காரைக்கால் அம்மையார் அருளிச் செய்தது.

சங்கரனை, சடை முடி கொண்டவனை, அந்த சடையில் பாம்பை அணிந்தவனை, நாம் ஆழ்ந்து விடாமல் காப்பவனை , நெஞ்சே, எப்போதும் வணங்கு என்பது பாடல்.

பாடல்

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை. 

பொருள்

சங்கரனைத் = இன்பம் தருபவனை

தாழ்ந்த சடையானை = பரந்து  விரிந்து கிடைக்கும் சடை முடியினைக் கொண்டவனை

அச்சடைமேற் = அந்த சடையின் மேல்

பொங்கரவம் = பொங்கு + அரவம் = சீறும் பாம்பினை

வைத்துகந்த = வைத்து + உகந்த = வைத்து மகிழ்ந்தவனை

புண்ணியனை = புண்ணியம் நிறைந்தவனை

அங்கொருநாள் = அங்கு ஒரு நாள்

ஆவாஎன்று = ஆ ஆ என்று

ஆழாமைக் = மூழ்கி விடாமல்

காப்பானை = காப்பவனை

எப்பொழுதும் = எப்பொழுதும்

ஓவாது = இடைவிடாமல்

நெஞ்சே உரை = மனமே சொல்

இவ்வளவுதானா ? இதில் என்ன பெரிய சிறப்பு இருக்கிறது ?


"அங்கொருநாள்" - அது எந்த நாள் ?  கடைசி நாள், உயிர் உடலை விட்டு பிரியும் நாள். புலன்கள் தள்ளாடி, அறிவு மயங்கும் அந்த நாள்.

வாழ் நாள் எல்லாம், எப்போதும் ஒரு அவசரகதியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

நல்ல விஷயங்களை எல்லாம் அப்புறம் அப்புறம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி  வைக்கிறோம்.

பின்னாள் , எந்நாளோ ? அந்த நாள் வரும் போது எப்படி இருப்போமோ.

அன்று என்று எண்ணாது அறம் செய்க என்றார்  வள்ளுவர்.



"ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை"


பிறவியை பெரிய கடலுக்கு ஒப்பிட்டு சொன்னார்கள் நம் முன்னவர்கள்.

ஏன் ?

ஏன் ஒரு பெரிய நில பரப்புக்கு ஒப்பிட்டுச் சொல்லவில்லை ?

நிலத்தில் வழித் தடம் போட்டு விடலாம். ஒரு சாலை அமைத்து விடலாம்.  போகும் இடத்துக்கு ஒரு வழி அமைத்து, சாலையின் இருமருங்கிலும்  வழி காட்டி பலகைகள் வைத்து விடலாம்.

கடலில் அது முடியாது.

இப்படித்தான் போக வேண்டும் என்று சொல்ல முடியாது.

இறைவனை அடையும் வழி என்று ஒன்று இல்லை.

இருந்திருந்தால் இந்நேரம் எல்லோரும் அந்த வழியில் போய் இறைவனை  அடைந்திருக்க மாட்டோமா ?

உண்மை என்பது ஒவ்வொருவரும் , தனக்குத் தானே கண்டு கொள்ள  வேண்டிய ஒன்று.

மற்றவர் போன பாதையில் நாம் போக முடியாது.

பூஜைகளும், புனஸ்காரங்களும் , புத்தகங்களும், பிரசங்ககளும் வழி காட்ட  முடியாது. 

நம் வழியை நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும். 

கடலில் வழி கிடையாது. 

நீங்கள் போய் அடைந்தாலும், உங்கள் வழியை இன்னொருவர் உபயோகப் படுத்த  முடியாது. 

இரண்டாவது, தரையில் நடந்தால், கால் வலித்தால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்  கொள்ளலாம். கடலில் ஓய்வு எடுக்க முடியாது.   நீந்துவதை  நிறுத்தினால் மூழ்க வேண்டியதுதான். 

பிறவி பெருங்கடல் நீந்துவர், நீந்தாதார் இறைவனடி சேராதார் என்பார் வள்ளுவர். 

கால் சலித்து, கை சலித்து ஓயும் போது , அந்த சமயத்தில், நாம் மூழ்கி விடாமல் காப்பவன் இறைவன் என்கிறார்  அம்மையார். 

"ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை"

ஆழ்ந்து விடாமல் காப்பவன் இறைவன். 

பிறவி என்னும் பெருங்கடலில் நாம் தனியாக நீந்தவில்லை. 

கல்லை கட்டிக் கொண்டு நீந்துகிறோம். 

குடும்ப பாரம், சமுதாய பாரம், பயம், கோபம், காமம்  போன்ற பாரங்களை சேர்த்து கட்டிக் கொண்டு நீந்துகிறோம். 

நாவுக்கரசர் சொன்னார் 

"கற்றுணை பூட்டி ஒரு கடலுள் பாய்ச்சினும் 
நற்றுணை ஆவது நமச்சிவாயவே " 

என்று.

ஒரு கல்லா, இரண்டு கல்லா...ஆயிரம் கல்லை கட்டிக் கொண்டு நீந்துகிறோம்.


மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.

 என்பதும்,நாவுக்கரசர் வாக்கே. 

 சிந்திப்போம்.




Saturday, September 3, 2016

பெரிய புராணம் - மனம் மலரும் கலை

பெரிய புராணம் - மனம் மலரும் கலை


பெரிய புராணத்தை படிக்க படிக்க , இப்படி ஒரு நூலா என்ற வியப்புதான் மேலிடுகிறது. அது  மட்டும் அல்ல, இத்தனை நாள் படிக்காமல் இருந்து விட்டோமே என்ற வருத்தமும் கூடவே வருகிறது.

கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன், எல்லோருக்கும் தோன்றும் கவலை என்ன ?

இந்த பணத்தை எதில் முதலீடு செய்வது என்பதுதான் ?

 நிறைய வட்டியும் வர வேண்டும், முதலுக்கும் மோசம் வரக் கூடாது, வேண்டிய போது எடுக்கும் படியும் இருக்க வேண்டும்...அப்படிப்பட்ட ஒரு முதலீடு எது என்று ஒரே யோசனையாக இருக்கும்.

இது ஒரு பிரச்னை.

இன்னொரு பிரச்னை என்னவென்றால், பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கு, பிள்ளைகளை என்ன படிப்பு படிக்க வைப்பது/படிப்பது  என்பதுதான்.

பிள்ளைகளுக்கு ஒன்றில் விருப்பம் இருக்கும். ஆனால், அதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்குமா என்ற கவலை இருக்கும். சரி, அது வேண்டாம் என்றால் , பிடிக்காத ஒன்றை படிக்க வைக்க முடியுமா ? அதுவும் முடியாது. பின் எதைத்தான் படிப்பது ?

அது ஒரு பக்கம் இருக்க, பள்ளி கல்லூரிகளை விடுத்து , பொதுவாக எதைப் படிப்பது ? நாவல், சிறுகதை, தொடர் கதை, கவிதை, கட்டுரை என்று எதைப்  படிப்பது  என்ற இன்னொரு சந்தேகம்.

கண்டதையும் படித்தால் மனம் திரிந்து போகும்.

இப்படி நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சேக்கிழார் பெருமான்  விடை தருகிறார்.

திருநாவுக்கரசு நாயனாருக்கு படிப்பு ஆரம்பிக்க வேண்டும்.

அதை சொல்ல வருகிறார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

முதலில் அவருக்கு மொட்டை அடித்து, குழப்பம் இல்லாத தெளிந்த மதி உடைய பெரியவர்கள் எல்லாம் மகிழும்படி ஒரு விழா எடுத்து, ஆற்று வெள்ளம் போல செல்வத்தை அள்ளிக் கொடுத்து, புலன்கள் பற்றி, மனம் மலரும், மனச் சுருக்கத்தை நீக்கும் கலைகளை பயிலத் தொடங்குவித்தார்.

பாடல்

மருணீக்கி யார்சென்னி
   மயிர்நீக்கும் மணவினையுந்
தெருணீர்ப்பன் மாந்தரெலாம்
   மகிழ்சிறப்பச் செய்ததற்பின்
பொருணீத்தங் கொளவீசிப்
   புலன்கொளுவ மனமுகிழ்த்த
சுருணீக்கி மலர்விக்குங்
   கலைபயிலத் தொடங்குவித்தார்


பொருள்

மருணீக்கி யார் = மருள் நீக்கியார் (திருநாவுக்கரசரின் இயற் பெயர்)

சென்னி = தலை

மயிர்நீக்கும் = முடிகளை களைந்து

மணவினையுந் = சிறந்த வைபவத்தையும்

தெருணீர்ப்பன் = தெருள் நீங்கிய

மாந்தரெலாம் = சுற்றம் மற்றும் நண்பர்கள் எல்லாம்

மகிழ்சிறப்பச் = மகிழ்ந்து சிறப்பாக

செய்ததற்பின் = செய்த பின்

பொருணீத்தங் கொள = பொரு நீத்தம் என்றால் வெள்ளம்.

வீசிப் = அள்ளிக் கொடுத்து

புலன்கொளுவ = கொளுவுதல் என்றால் சிக்கிக் கொள்ளுதல், மாட்டிக் கொள்ளுதல் என்று அர்த்தம். புலன் கொளுவ என்றால் புலன்கள் சேர்ந்து கொள்ளுதல்.

மனமுகிழ்த்த = மனம் மொட்டு மலர்வது போல மலர்ந்து

சுருணீக்கி = சுருள் நீக்கி

மலர்விக்குங் = மலர வைக்கும்

கலைபயிலத் = கலைகளை கற்றுக்கொள்ள

தொடங்குவித்தார் = ஆரம்பித்து வைத்தார்

மேலோட்டமாகப் பார்த்தால், பாடல் என்னவோ இவ்வளவுதான்.

சற்று ஆழ்ந்து யோசிப்போம்.

முதலில் , எதற்கு மொட்டை அடிக்க வேண்டும் ? படிப்புக்கும் மொட்டைக்கும் என்ன சம்பந்தம்.

இளம் வயதில், உடல் அழகில் மனம் செல்லச் தொடங்கினால், மனம் புலன்கள் பின்னேயே போய் விடும்.  முதலில் முடி வளர்க்கச் சொல்லும், பின் அதை அழகாக வெட்டி, அதற்கு எண்ணெய் போட்டு அழகு செய்யச் சொல்லும். பின் அவன் முடி அழகா, என் முடி அழகா என்று  ஒப்பிடச் சொல்லும்.

கவனம் சிதறும்.

முடி வெட்டுவது என்பது ஒரு அடையாளம். பொதுவாக படிக்கும் காலத்தில் புலன் இன்பங்களை நுகர விடக் கூடாது. புலன் இன்பங்களின் சுகம் தெரிந்து விட்டால், புலன்கள் அதையே மேலும் மேலும்  வேண்டும் என்று கேட்கும்.  டிவி, பகட்டான உடை, பலவிதமான  சுவை உள்ள சாப்பாடு என்று குழந்தைகளுக்கு ருசியை காட்டி  விட்டால், பின் கவனம் எல்லாம் அதிலேயே போகும்.

எந்த சினிமாவுக்குப் போகலாம், எந்த ஓட்டலில் போய் என்ன சாப்பிடலாம், என்றே மனம் செல்லும்.

அது மட்டும் அல்ல, கிடைக்காததற்கு மனம் ஏங்கும் , வாங்கித் தராத  பெற்றோர் மேல் கோபம் வரும். வீட்டுகுத் தெரியாமல் பணம் எடுத்துப் போய் வங்கச் சொல்லும், உண்ணச் சொல்லும்.

இதை தவிர்க்க வேண்டும் என்றால், முதலில் ஆடம்பரங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யக் கூடாது.

தசரதன் , தன் பிள்ளைகளான இராம இலக்குவனர்களை வசிட்டரின் ஆசிரமத்துக்கு அனுப்பித்து படிப்பு சொல்லித் தரச் செய்தான்.

சக்கரவர்த்தி அவன். நினைத்து இருந்தால், வசிட்டருக்கு ஒரு அரண்மனை  ஒதுக்கி அங்கேயே பாடம் சொல்லித் தந்து இருக்கலாம். செய்ய வில்லை. ஏன் , அரச போகங்களை அனுபவிக்க  ஆரம்பித்து விட்டால், படிப்பு மண்டையில் ஏறாது.

இது முதல் பாடம்.

இரண்டாவது, முடியை எடுப்பது என்பது அடையாளத்தை மாற்றுவது. இறைவனுக்கு ஏன் முடி காணிக்கை கொடுக்கிறோம் ? முடி ஒரு  அடையாளம். மொட்டை அடித்து விட்டால் அழகு போகும். அடையாளம் போகும்.  அழகு போனால் ஆணவம் போகும். அடையாளம் போனால்  நான் என்பது இந்த முடியிலா இருக்கிறது என்ற எண்ணம் வரும். நான் என்ற அடையாளம் போய் இறைவன் முன்  நான் பணக்காரன், படித்தவன், என்ற அடையாளங்கள் எதுவும் இல்லாமல்  எளிமையாக இருக்க முடியும்.

அதே போல, படிக்கும் முன், முடி களைவது , நான்  புதிய அவதாரம் எடுக்கிறேன். மாணவன் என்ற அவதாரம். இன்னாரின் பிள்ளை என்ற  அடையாளம் போய் , இன்னாரின் மாணவன் என்ற புது பிறவி  எடுக்கிறேன்.

இது இரண்டாவது பாடம்.

நம்மிடம் பணம் இருந்தால், வீடு வாங்குவோமா, கார் வாங்குவோமா, பங்குகள் வாங்குவோமா, நகை நட்டுகள் வாங்குவோமா என்று  நினைப்போம். யாராவது, நம்மிடம் இருக்கும்  இந்த பணத்தை கொண்டு நம்  பிள்ளைகளுக்கு மிக உயர்ந்த கல்வியை வாங்குவோமா  என்று யோசித்தது உண்டா? அப்படியே யோசித்தாலும்,  எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரம்பு கட்டுவோம் .

திருநாவுக்கரசரின் தமக்கையார்,  பணத்தை தண்ணியாக செலவழித்தாராம். பெருகி வரும் வெள்ளம் போல பணத்தை செலவழித்து  தம்பியை படிக்க வைத்தாராம்.

பணத்தை பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு தாராளாமாக செலவு செய்யுங்கள்.

இது  மூணாவது பாடம்.

பிள்ளைகளை tuition  அனுப்ப வேண்டும் என்றால் எவ்வளவு ஆகும் என்று  கனக்குப் போடுவோம். மிக மிக சிறந்த ஆசிரையைக் கொண்டு  படிப்பித்தால் செலவு அதிகமாகும். இவ்வளவு செலவழிக்க  வேண்டுமா என்று யோசிப்போம்.

யோசிக்காதீர்கள், என்று சேக்கிழார் பாடம் நடத்துகிறார்.

Tuition , விலை அதிகம் உள்ள புத்தகங்கள்,  CD , போன்றவற்றை வாங்கித் தாருங்கள்.

தெருணீர்ப்பன் மாந்தரெலாம்...தெருள் என்றால் தெளிவு. தெளிவான சுற்றமும் நட்பும் இருந்தது. இருக்க வேண்டும்.

அது என்ன தெருள் ?

மனிதனுக்கு அறிவு நான்கு படிகளில் இருக்கிறது.

இருள், மருள், தெருள் மற்றும் அருள்.

இருள் என்பது ஒன்றும் தெரியாமல்  இருப்பது. தெரியாது என்பது கூட தெரியாமல்  இருப்பது.   படிப்பறிவும்,அனுபவ அறிவும்  இல்லாமல் இருப்பது.

அடுத்த படி, மருள். அறியாமை புலப்படும்.  அறிந்து கொள்ள வேண்டும் என்ற  ஆவல்  இருக்கும். எதைப் படிப்பது,  எது  சரி,எது
தவறு என்று தெரியாமல்  தடுமாறுவது.

அடுத்த படி, தெருள். குழப்பங்கள் நீங்கி தெளிவு பெற்று இருப்பது.

அதற்கும் அடுத்த படி அருள்.

அறிவின் கடைசிப் படி அருள்.

உயிர்கள் மேல் அன்பு செலுத்துவது.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை என்பார் வள்ளுவர்.

அது அருளின் உச்சம்.


   புலன்கொளுவ மனமுகிழ்த்த
சுருணீக்கி மலர்விக்குங்
   கலைபயிலத் தொடங்குவித்தார்


புலன்கள் சென்று பற்றிக் கொள்ள. அறிவு நமக்கு புலன்கள் மூலமாகத்தான் வரவேண்டும். வாசித்து , கேட்டு, தொட்டு அறிந்து, நாம் அறிவைப் பெறுகிறோம். ஐந்து புலன்கள் + மனம் என்ற ஆறாவது கருவியும் சேர்த்து நமக்கு ஆறறிவு. 

அறிவு சேர சேர மனம் மலர வேண்டும். மொட்டு போல கூம்பி இருக்கும் மனம் மலரும். 

மலரும் என்றால், மணம் வீசும், தேனை அள்ளித் தரும். அழகாக இருக்கும். 

அறிவு ஒரு அழகு.

மனம் விரியாத கலை ஒரு கலை இல்லை. 

படிக்க படிக்க உற்சாகம் பீறிட்டு எழ வேண்டும். மனம் ஒரு மலரைப் போல மென்மையாக வேண்டும். வேண்டியவர் வேண்டாதவர் என்று பார்க்காமல் எல்லோர்க்கும் மணம் தர வேண்டும். 

அப்படி படிக்க வேண்டும். 

இது ஒரு பாடல்.

எனக்குத் தெரிந்தது  இவ்வளவுதான்.

இப்படி எத்தனை பாடல்கள். எவ்வளவு கருத்துச் செறிவு. 

நாம் தான் எவ்வளவு புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_3.html

Thursday, September 1, 2016

இராமாயணம் - வாலி வதம் - வேறு உளதோ தருமம் ?

இராமாயணம் - வாலி வதம்  - வேறு உளதோ தருமம் ?


இராமனின் அம்பால் அடி பட்டு இறக்கும் தருவாயில் உள்ள வாலி இராமனைப் பார்த்து சொல்லுகிறான் "என்னை கொல்லும் உன் அம்பை விட சிறந்த தருமம் வேறு உள்ளதோ "

பாடல்

'புரம் எலாம் எரி செய்தோன்
      முதலினோர் பொரு இலா
வரம் எலாம் உருவி, என்
      வசை இலா வலிமை சால்
உரம் எலாம் உருவி, என்
      உயிர் எலாம் நுகரும் நின்
சரம் அலால், பிறிது
      வேறு உளதுஅரோ, தருமமே?

பொருள்

'புரம் எலாம் = முப்புரங்களையும்

எரி செய்தோன் = எரி ஊட்டிய சிவனின்

முதலினோர் = இந்திரன் மற்றும் பிரமன் போன்றோர்

பொரு இலா =  ஒப்பில்லாத

வரம் எலாம் உருவி = வரங்களை எல்லாம் கவர்ந்து

என் = என்னுடைய

வசை இலா = குற்றமற்ற

வலிமை சால் = பெரிய வலிமையை

உரம் எலாம் உருவி = உறுதியான மார்பை ஊடுருவி

என் உயிர் எலாம் நுகரும் = என்னுடைய உயிரை நுகரும்

நின் = இராமா உன்னுடைய

சரம் அலால் = அம்பைத் தவிர

பிறிது வேறு உளது = வேறு ஏதாவது இருக்கிறதா

அரோ = அசைச் சொல்

தருமமே = தர்மம் என்று ?


தன்னை மறைந்து நின்று கொன்ற இராமனின் அம்பை தர்மத்தின் வடிவம் என்று  போற்றுகிறான் வாலி. 

ஏன் அப்படி போற்ற வேண்டும் ?

கொஞ்சம் வேறு விதமாக யோசித்துப் பார்ப்போம். 

ஆயிரம் சமாதானம் சொன்னாலும் ஏற்க முடியாத இந்த வாலி வதத்தை  வேறு ஒரு கோணத்தில் சிந்தித்துப்  பார்ப்போம் .


ஒரு வேளை , இராமன் நேரில் சண்டைக்கு வந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் ?


ஒன்று, இராமனின் பாதி ஆற்றல் வாலிக்குப் போய் இருக்கும்.  பாதி ஆற்றலை  இழந்த இராமன் கட்டாயம் தோற்றிருப்பான். அல்லது போரில் இறந்து  கூட போய் இருக்கலாம்.  சீதை அங்கேயே இருந்திருக்க வேண்டியதுதான்.  

அது போகட்டும். வாலி என்னவாகி இருப்பான் ? ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல்   இராமனின் ஆற்றலில் பாதியைக் கொண்டு, மிகப் பெரிய  வீரனாக மாறி இருப்பான். 

சரி அடுத்து என்ன ஆகும் ?

வாலியை யாராலும் வெல்ல முடியாது. 

ஆனால், வயது ஆகிக் கொண்டே போகும். எமன் கிட்ட வர பயப்படுவான். எனவே மரணம் வராது. ஆனால், மூப்பு வரும். கண் பார்வை மங்கும்,  காது கேட்காது, ஞாபக சக்தி போய் விடும். ஆண்டுகள்  ஆயிரம் ஆனாலும் மரணம் என்ற ஒன்று இல்லாமல் வயதாகி, முடங்கி மூலையில் கிடப்பான். அப்படி ஒரு நிலை யாருக்காவது  வேண்டுமா என்று கேட்டால் யாருமே வேண்டாம் என்று தான்  சொல்லுவார்கள். கல்ப கோடி ஆண்டுகள் மரணமில்லாமல்,  ஆனால் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருக்க யாருக்குப்  பிடிக்கும் ? அப்படி   

 சரி,  அப்படி எதுவும் நடக்கவில்லை. 

இராமனை கண்டவுடன் வாலி அவனிடம் சரண் அடைந்து , அவனுக்கு  உதவி செய்து இருக்கலாம். அப்படி நடந்து இருந்தால் இராமானுக்கே  நான் உதவி செய்தவன் என்ற எண்ணம் தான் அவனுக்கு  இருந்திருக்கும். அந்த ஆணவம், அவன் முன்னேற்றத்திற்கு  ஒரு தடையாக இருந்திருக்கும். 

எப்படி பார்த்தாலும், சிக்கல் தான். 

ஆனால், இப்போது நடந்தது என்ன ?

இந்த சிக்கல் எல்லாம் தாண்டி, வாலி மோட்சம் அடைகிறான். 

இது வாலிக்குத் தெரிந்திருக்கிறது.

இதுதான் தருமம் என்று அவன் முடிவு செய்கிறான்.

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post.html


Wednesday, August 31, 2016

இராமாயணம் - வாலி வதம் - ஆவி போம் வேலை வாய்

இராமாயணம் - வாலி வதம்  - ஆவி போம் வேலை வாய்


இராம பாணத்தால் அடிபட்டு இறக்கும் தருவாயில் உள்ள வாலி தன் நிலை உணர்ந்து இராமனிடம் சில செய்திகள் கூறுகிறான்.

ஏவிய கூறிய அம்பை என் மேல் எய்து , நாய் போன்ற கீழானவனான எனக்கு ஆவி போகும் வேளையில் அறிவு தந்து அருளினாய். மூவர் நீ, முதல்வன் நீ, அனைத்தும் நீ என்று போற்றினான்.

பாடல்

‘ஏவு கூர் வாளியால்
    எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலை வாய்,
    அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ! முதல்வன் நீ!
    முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ!
    பகையும் நீ! உறவும் நீ! ‘

பொருள் 

‘ஏவு கூர் = ஏவும் கூறிய

 வாளியால் = அம்பினால்

எய்து = என் மேல் எய்து

நாய் அடியனேன் = நாய் போன்ற அடியவனான எனக்கு

ஆவி போம் வேலை வாய் = ஆவி போகின்ற வேலையில் (?)

அறிவு தந்து அருளினாய்; = அறிவும் அருளும் தந்தாய்

மூவர் நீ! முதல்வன் நீ! =  மூவர் நீ! முதல்வன் நீ!

முற்றும் நீ! மற்றும் நீ! =  முற்றும் நீ! மற்றும் நீ!

பாவம் நீ! தருமம் நீ! =  பாவம் நீ! தருமம் நீ!

பகையும் நீ! உறவும் நீ! ‘ = பகையும் நீ! உறவும் நீ! ‘

வாலி பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு இந்தப் பாடல்.


நாய் அடியனேன் - நாய்க்கு உள்ள ஒரு நல்ல குணம் என்ன என்றால், எஜமான் என்ன அடித்தாலும் அவன் காலடியிலேயே கிடக்கும் . அவன் காலையே சுற்றி சுற்றி வரும். அது போல, இராமா, நீ எனக்கு துன்பம் தந்தாலும் நான் உன்னையே சுற்றி சுற்றி வருவேன் என்கிறான்.



ஆவி போம் வேலை வாய் - ஆவி போகின்ற நேரத்தில் என்று சொல்வதென்றால்

ஆவி போம் வேளை  வாய் என்று சொல்லி இருக்க வேண்டும். இங்கே, "வேலை" என்று சொல்கிறான் கம்பன். மிக மிக கவனமாக ஒரு சொல்லை  தேர்ந்து எடுத்துப் போடுகிறான்.

வேளைக்கும் , வேலைக்கும் என்ன வித்தியாசம்.

ஆவிக்கு உடலினுள் வருவதும் பின் ஒரு உடலை விட்டு விட்டு இன்னொரு உடலுக்குப் போவதும் தான் வேலை.

இராமன் அம்பு எய்து கொல்லாவிட்டாலும் வாலியின் உயிர் ஒரு நாள் போகத்தான் போகிறது. உயிரின் வேலை போவது.  வேறு விதமாக  போயிருந்தால் இராம தரிசனம் கிடைத்திருக்காது. வாலி ஞானம் பெற்று , பின் வீடு பேறும் அடைந்திருக்க மாட்டான்.


அறிவு தந்து அருளினாய்...அறிவு தந்தாய் என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம்.  அறிவு தந்து அருளினாய் என்கிறான் வாலி. வாலியின் மேல் உள்ள  அன்பால் , கருணையால் அவனுக்கு அறிவு தந்தான் இராமன் என்பது  வாலியின் வாக்கு. 

அறிவு தந்ததால் என்ன நிகழ்ந்தது ?


இதற்கு முன்னால் அறிவு இல்லாதவன் அல்ல வாலி. வேதங்களை கற்று உணர்ந்தவன்  வாலி. 

அது கல்வி அறிவு. 

படித்து வருவது. 

இராமன் அவனுக்குத் தந்தது மெய் அறிவு.

அந்த மெய்யறிவு பெட்ற வாலி என்ன ஆனான் ?

மிகப் பெரிய ஞானிகளுக்குக்  கூட அறிய முடியாத பரம் பொருளின் தன்மையை அறிந்தான். 

மூவர் நீ! முதல்வன் நீ!
    முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ!
    பகையும் நீ! உறவும் நீ! ‘


பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆன மூவரும் நீ.

அவர்களுக்கு முன்னால் தோன்றியவனும் நீ. 

பாவம், தர்மம், பகை , உறவு எல்லாம் நம் ஆசாபாசங்களை பொறுத்தது. 

ஆண்டவனுக்கு எல்லாம் ஒன்றுதான். அவன் யாரை பகைக்க முடியும் ? யாரோடு உறவு கொள்ள முடியும். 

ஞானிகளுக்கும் எட்டாத அந்த பார்வை பெற்றான் வாலி. 


ஒருவன்மு கமூடி அணிந்து கொண்டு , மயக்கமாய் கிடைக்கும் இன்னொருவனை கத்தியால் குத்தி  கிழிப்பதைப் பார்த்தால் என்ன தோன்றும் ?  பாதகா , இப்படி ஈவு இரக்கம் இல்லாமல் , மயக்கத்தில் இருக்கும்  ஒருவனை இப்படியா கத்தியால் குத்துவது என்று நம் மனம் பதறும். 

அதுவே ஒரு மருத்துவர் இரண சிகிச்சை செய்கிறார் என்றால், மயங்கி கிடக்கும் நோயாளி , அறுவை சிகிச்சைக்குப் பின் எழுந்து சுகம் அடைந்து , அந்த மருத்துவருக்கு நன்றி சொல்லுவான் அல்லவா.

காரியம் அல்ல முக்கியம். 

காரியத்தால் விளைந்தது என்ன என்று பார்க்க வேண்டும். 

காரியம் - மறைந்து இருந்து அம்பு போட்டது. 

விளைந்தது - வாலி மோட்சம். வாலி மெய்யறிவு பெற்றது.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் 
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் 
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ 
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே  

என்று ஆழ்வார் சாதித்தது போல, வாலிக்கு வலிதான். 

அந்த வலியில் வழி பிறந்தது. 

இராமன் செய்தது சரியா தவறா ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_31.html


Tuesday, August 30, 2016

இராமாயணம் - வாலி வதம் - சிறியன சிந்தியாதான் - பாகம் 2

இராமாயணம் - வாலி வதம்  -       சிறியன சிந்தியாதான் - பாகம் 2



இறக்கும் தருவாயில் இருக்கும் வாலி முன், இராமன் வந்து நின்றான்.

வாலி நிறைய கேள்விகள் கேட்டான்.

ஒன்றுக்கும் சரியான பதில் இல்லை.

பின் என்ன நிகழ்ந்ததோ தெரியாது.

வாலி தலை கீழாக மாறிப் போனான்.

இராமனைப் பார்த்து கூறுகிறான், "நான் தவறு செய்து விட்டேன், என்னை மன்னித்துக் கொள்" என்று.

வாலி என்ன தவறு செய்தான் ?

பாடல்

'தாய் என உயிர்க்கு நல்கி,
      தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி!
      நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?
தீயன பொறுத்தி' என்றான் -
      சிறியன சிந்தியாதான்.

பொருள்

'தாய் என = தாய் போல

உயிர்க்கு நல்கி = உயிருக்கு வேண்டியதைத் தந்து

தருமமும் = தர்மத்தையும்

தகவும் = நடு நிலையையும்

சால்பும் = சான்றோர்க்கு உரிய குணங்கள் யாவும்

நீ என நின்ற நம்பி! = சிறந்தவனான நீயே அவை அனைத்துமாய் நின்றாய்

நெறியினின் = நெறி என்றால் வழி. நேர்மையான வழி, வேதம் முதலியவற்றில் சொன்ன வழி.

நோக்கும் நேர்மை = நேர்மையான பார்வை

நாய் என நின்ற எம்பால் = நாய்  போன்றவனான என் மேல்

நவை அற உணரலாமே? = நவை என்றால் குற்றம். நவை அற என்றால் குற்றம் இல்லாமல். எங்களால் குற்றம் இல்லாமல் பார்க்க முடியாது.

தீயன பொறுத்தி' என்றான் - = நாங்கள் செய்யும் தீமைகளை பொறுத்துக் கொள்  என்றான்

சிறியன சிந்தியாதான் = கீழானவைகளை சிந்திக்காத வாலி

தாய் என உயிர்க்கு நல்கி என்ற வரியின் விளக்கத்தை முந்தைய blog இல் பார்த்தோம்.

மேலும் சிந்திப்போம்.


தருமமும், தகவும், சால்பும், நீ என நின்ற நம்பி!

மூன்று சொற்களால் இராமனை போற்றுகிறான் வாலி.

தருமம், தகவு, சால்பு

தருமம் என்றால் என்ன என்று தெரிகிறது.

அது என்ன தகவு, சால்பு ?

தகவு என்றால் நடுவு நிலைமை.  தர்மத்தின் வழி செல்பவர்கள் கூட சில சமயம் பாசம் அல்லது அறியாமை காரணமாக நடுவு நிலைமை பிறழ்ந்து விடலாம்.  இராமன் நடு நிலை தவறாதவன் என்று வாலி கூறுகிறான்.

சால்பு என்றால் சான்றோர் இயல்பு. சான்றோன் என்றால் கல்வி , கேள்வி மற்றும் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள்.

இதை விட இராமன் செய்தது சரி தான் என்று சொல்ல வேறு என்ன சொல்ல முடியும் ?

இந்த மூன்று குணங்களாகவே இராமன் இருந்தான் என்று வாலி சொல்கிறான் என்றால் என்ன நிகழ்ந்தது ? ஏதோ ஒன்று வாலிக்கு தெரிய வந்திருக்கிறது. இல்லை என்றால், மறைந்து நின்று போட்ட அம்பு மார்பில் துளைக்க, இரத்தம் பெருக்கெடுத்து ஓட , உயிர் போகும் தருணத்தில் , அப்படி அம்பு போட்டவனை வாலி ஏன் புகழ வேண்டும் ?


நெறியினின் நோக்கும் நேர்மை

சில சமயம் பிள்ளைகள் படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருக்கும், அல்லது கை பேசியில் யாருடனாவது chat பண்ணிக் கொண்டிருக்கும். அப்பா, பிள்ளையை அதட்டி, அதை பிடுங்கி வைத்து, படி என்று அதட்டுவார். கேட்கவில்லை என்றால் திட்டுவார், தேவைப் பட்டால் இரண்டு அடி கூட தருவார்.

பிள்ளை அழும். சந்தோஷமாக இருந்த பிள்ளையை துன்பப் படுத்தி அழ வைப்பதா பெற்றோரின் நோக்கம் ?

இப்போது அழுதாலும் பரவாயில்லை, பிள்ளை பின்னாளில் நன்றாக இருப்பான் என்ற தொலை நோக்கோடு அவர் அப்படி செய்கிறார்.

பிள்ளை , தகப்பனை, ஒரு வில்லனை பார்ப்பது போலத் தான் பார்க்கும்.

அதற்காக , ஒரு தகப்பன் மிரட்டி, திட்டி, அடித்து பிள்ளையை நெறி படுத்தாமல் இருந்து விட முடியுமா ?

இராமன் செய்தது வேதம் சாஸ்திரம் போன்றவற்றில் சொல்லப் பட்ட வழியின் பால் நேர்மையாக சென்றது.

நெறி என்றால் உயர்த்த வழி.

நோக்குதல் , தொலை நோக்கு. இராமன் நினைத்து இருந்தால் வாலியின் உதவி பெற்று சீதையை எளிதாக மீட்டிருக்க முடியும். அது சுய இலாபத்துக்காக நேர்மையை கை விட்டது மாதிரி ஆகி இருக்கும்.

இராமன் செய்தது தொலை நோக்குப் பார்வை.

அதிலும் ஒரு நேர்மையை கடை பிடித்தான் என்றான் வாலி.


நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?

நாய் போன்றவன் நான். எதிலும் குற்றம் காண்பதே என் வேலை. குற்றமற்று பார்க்கும் பார்வை என்னிடம் இல்லை என்கிறான் வாலி. 

கல்வி கேள்விகளில் சிறந்தவன் வாலி.பெரிய சிவ பக்தன். சிறந்த வீரன். 

பின் ஏன் தன்னை நாய் என்று சொல்லிக் கொள்கிறான் ?

நாயிடம் உள்ள ஒரு கெட்ட குணம் என்ன என்றால், எவ்வளவு தான் அதற்கு உயர்ந்த உணவு அளித்து , வீட்டில் சௌகரியமாக வைத்து இருந்தாலும், சில சமயம் அது வெளியில் போகும்போது தெருவில் கிடக்கும்  அசிங்கத்தை ருசி பார்க்கும். அது   நாயின் பிறவிக் குணம். 

எவ்வளவுதான் படித்தாலும், கேட்டாலும், சில சமயம் புத்தி கீழ் நோக்கிப் போவது மனிதர்களின் இயல்பு. 

அதையே வாலி சொல்கிறான். 

தீயன பொறுத்தி' என்றான் -
      சிறியன சிந்தியாதான்.

தீயவைகளை பொறுத்துக் கொள்வாய் என்று இராமனிடம் வாலி வேண்டுகிறான். 

வாலி என்ன தீமை செய்து விட்டான் ? அவனே "நான் செய்த தீமைகளை பொறுத்துக் கொள் " என்று சொல்லும் அளவுக்கு என்ன தீமை  செய்து விட்டான் ?

ஒரே ஒரு தீமை தான், இராமனை நிற்க வைத்து கேள்வி கேட்டது. 

அரசு அவனுடையதுதான். 

மாயாவியோடு சண்டை போட்டு குகைக்குள் போனபோது , காவலுக்கு நின்ற  சுக்ரீவன், குகையை மூடி விட்டு தானே அரசனாகிவிட்டான். 

குகையில் இருந்து வெளியே வந்த வாலி கோபம் கொண்டது இயற்கை. 

அண்ணன் தம்பி உறவை விடுங்கள். ஒரு அரசன் ஆணையை மீறியது மட்டும் அல்ல, அவனை சிறை வைத்து விட்டு ஆட்சியை எடுத்துக் கொண்டால் , எந்த அரசனுக்குத் தான் கோபம் வராது ?

வாலிக்கு சுக்ரீவன் மேல் கோபம் வந்தது. அவனை அடித்து விரட்டினான். 

அது அல்ல அவன் செய்த தீமை. 

இராமன் செய்தது சரி தான் என்று பின்னர் உணர்ந்த வாலி, அதற்கு முன்னால் , உண்மை தெரியாமல் இராமனை கேள்வி கேட்டதற்காக, இராமனை தரக் குறைவாக பேசிய தீமையை குறித்து கூறுகிறான். 

அடுத்து நடந்தது தான் வாலி வதையின் மிக மிக முக்கியமான நிகழ்வு.

அது என்ன நிகழ்வு ?


http://interestingtamilpoems.blogspot.com/2016/08/2.html




இராமாயணம் - வாலி வதம் - சிறியன சிந்தியாதான் - பாகம் 1

இராமாயணம் - வாலி வதம்  -       சிறியன சிந்தியாதான் - பாகம் 1



இறக்கும் தருவாயில் இருக்கும் வாலி முன், இராமன் வந்து நின்றான்.

வாலி நிறைய கேள்விகள் கேட்டான்.

ஒன்றுக்கும் சரியான பதில் இல்லை.

பின் என்ன நிகழ்ந்ததோ தெரியாது.

வாலி தலை கீழாக மாறிப் போனான்.

இராமனைப் பார்த்து கூறுகிறான், "நான் தவறு செய்து விட்டேன், என்னை மன்னித்துக் கொள்" என்று.

வாலி என்ன தவறு செய்தான் ?

பாடல்

'தாய் என உயிர்க்கு நல்கி,
      தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி!
      நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?
தீயன பொறுத்தி' என்றான் -
      சிறியன சிந்தியாதான்.

பொருள்

'தாய் என = தாய் போல

உயிர்க்கு நல்கி = உயிருக்கு வேண்டியதைத் தந்து

தருமமும் = தர்மத்தையும்

தகவும் = நடு நிலையையும்

சால்பும் = சான்றோர்க்கு உரிய குணங்கள் யாவும்

நீ என நின்ற நம்பி! = சிறந்தவனான நீயே அவை அனைத்துமாய் நின்றாய்

நெறியினின் = நெறி என்றால் வழி. நேர்மையான வழி, வேதம் முதலியவற்றில் சொன்ன வழி.

நோக்கும் நேர்மை = நேர்மையான பார்வை

நாய் என நின்ற எம்பால் = நாய்  போன்றவனான என் மேல்

நவை அற உணரலாமே? = நவை என்றால் குற்றம். நவை அற என்றால் குற்றம் இல்லாமல். எங்களால் குற்றம் இல்லாமல் பார்க்க முடியாது.

தீயன பொறுத்தி' என்றான் - = நாங்கள் செய்யும் தீமைகளை பொறுத்துக் கொள்  என்றான்

சிறியன சிந்தியாதான் = கீழானவைகளை சிந்திக்காத வாலி


இந்தப் பாடலை நாளெல்லாம் வாசித்து வாசித்து உருகலாம்.



இங்கே சில விஷயங்களை சொல்கிறான்.

சொல்பவன் யார் ?

வாலி.

அவன் எப்படிப் பட்டவன் ?

சிறியன சிந்தியாதவன்.

எது சிறியது ?

ஆட்சி, செல்வம், புகழ், அதிகாரம், ஏன் உயிர் இவை எல்லாமே சிறியதுதான்.

இதைப் பற்றியெல்லாம் வாலி சிந்திக்கவில்லை.

பின் ஏதோ உயர்ந்த ஒன்றை சிந்தித்த வாலி, சொல்கிறான்....

"'தாய் என உயிர்க்கு நல்கி,"

தாய் போல உயிர்க்கு நல்கி.

நல்குதல் என்றால் அருள் செய்தல் என்று பொருள்.

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி என்பார் மணிவாசகர்


 விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே

தாய் உடலுக்குத் தான் உணவு தருவாள். பாலூட்டி, சோறூட்டி உடலை வளர்ப்பாள் .

உயிரை யார் வளர்ப்பார்கள் ?

இராமன் உயிரை வளர்த்தான் என்கிறான் வாலி.

"உயிர்க்கு நல்கி"

சில சமயம் குழந்தை உணவு உண்ணாமல் அடம் பிடிக்கும். அம்மா, குழந்தையை இழுத்து பிடித்து, தன் கால்களுக்கு நடுவில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு உணவை கட்டாயமாக ஊட்டுவாள். வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஏதோ அந்த அம்மா கருணை இல்லாத அரக்கி போலத் தோன்றும். அந்த கடுமைக்கு பின்னால் உள்ள கருணையை அந்த பிள்ளை கூட உணராது. அம்மா ஒரு இராட்சசி என்றே நினைக்கும். ஆனால், பின்னால் அந்த பிள்ளை அறிவு வளர்ந்த பின், தாயின் அன்பை எண்ணி கண்ணீர் விடும்.

இராமன் செய்தது அறம் அற்ற செயலாகத்தான் தெரியும் வெளியில் இருந்து பார்க்கும் போது.

வாலி கூட அப்படித்தான் நினைத்தான்.

ஆனால், அவன் அறிவு அடைந்தான். இராமனின் கருணையை உணர்ந்தான்.

உடலை வளர்க்கும் தாயே இந்த பாடு படுகிறாள் என்றாள் என்றால், உயிரை வளர்க்க என்ன பாடு பட வேண்டும்.

யாருக்குப் புரியும் ?

(மேலும் சொல்வேன் )

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/1.html

Sunday, August 28, 2016

இராமாயணம் - செவியுறு கேள்விச் செல்வன்

இராமாயணம் - செவியுறு கேள்விச் செல்வன்


இராமனின் அம்பால் அடிபட்டு வீழ்ந்த வாலி, முதலில் இராமனின் நாமத்தை அம்பில் கண்டான். பின், இராமனே நேரில் வரக் கண்டான். நேரில் வந்த இராமனை வாலி பலவாறு கேள்வி  கேட்கிறான்.அவன் குற்றச்சாட்டெல்லாம் , ஏன் மறைந்து இருந்து அம்பு எய்தாய் , என்பதுதான்.

இராமன் கொஞ்சம் சமாதானம் சொல்கிறான். வாலி ஏற்கவில்லை.

இலக்குவன் கொஞ்சம் சமாதானம் சொல்கிறான். வாலியின் மனம் ஒப்பவில்லை.

அடுத்து என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது.

ஏதோ நடந்திருக்கிறது.

யாருக்கும் தெரியாது.

ஒரு மனமாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

கீழே வரும் பாடல் மிக நுண்ணிய பாடல்.

பாடல்

கவி குலத்து அரசும் அன்ன
      கட்டுரை கருத்தில் கொண்டான்;
அவியுறு மனத்தன் ஆகி, 'அறத்
      திறன் அழியச் செய்யான்
புவியுடை அண்ணல்' என்பது
     எண்ணினன் பொருந்தி, முன்னே
செவியுறு கேள்விச் செல்வன்
      சென்னியின் இறைஞ்சி, சொன்னான்:

பொருள்

கவி குலத்து அரசும் = குரங்கு கூட்டத்தின் அரசனான வாலி

அன்ன = அந்த

கட்டுரை கருத்தில் கொண்டான் = இராமன் மற்றும் இலக்குவன் சொன்ன கருத்துகளை மனதில் கொண்டான் ;

அவியுறு மனத்தன் ஆகி, = மனதில் பொங்கிய கோபம் அமைதி உற்று

'அறத் திறன் அழியச் செய்யான் = அறத்தின் வலிமையை அழிய விடமாட்டான்

புவியுடை அண்ணல்' = புவியின் அரசனான இராமன்

என்பது எண்ணினன் பொருந்தி = என்று மனதுள் பொருந்தி

முன்னே = முன்பே

செவியுறு கேள்விச் செல்வன் = செவியுற்ற கேள்விச் செல்வனான வாலி

சென்னியின் இறைஞ்சி, சொன்னான்: = தலையால் வணங்கிச் சொன்னான்

அறம் என்பது இன்னது என்று யாரும் அறுதியிட்டு கூற முடியாது.

ஈறில் அறம் என்பான்  கம்பன்.

அறம் என்று ஒன்று உண்டு அதை தேவரும் அறிய மாட்டார்கள் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்

இராமன் மறைந்து இருந்து அம்பு போட்டது அறமா , அறம் அற்ற செயலா ?

வாதம் பண்ணிக் கொண்டே வந்த வாலி, திடீரென்று மனம் மாறுகிறான்.

இராமன் செய்தது சரி என்று அவன் ஏற்றுக் கொள்கிறான்.

அவன் படித்த அறத்தின் படி, மறைந்து நின்று அம்பு போடுவது வில்லறம் பிறழ்ந்த செயல்தான்.

பின், வாலி மனம் மாறக் காரணம் என்ன ?

அம்பு அவன் மார்பில் பட்டு அவன் கேள்விகள் கேட்பது வரை , அவன் கண்ட அறம் அவன் படித்து உணர்ந்த அறம்.

இப்போது , அவன் இராமனிடம் கேட்ட அறம் .

அப்படி என்ன இராமன் சொல்லி விட்டான் ?

நமக்குத் தெரியாது.

கம்பன் நேரடியாகச் சொல்லவில்லை.

உயர்ந்த உண்மைகளை வார்த்தைகளால் சொல்லி உணர வைக்க முடியாது.

அது மௌனத்தில் உணரப் படவேண்டிய ஒன்று.

காதலி, தன் காதலை , அவளுடைய காதலனுக்கு கண்ணால் சொல்லுவது போல.

ஆயிரம் வார்த்தைகளை ஒரு கண் அசைவு காட்டி விடும்.

ஒரு புன்முறுவல் சொல்லி விடும்.

பக்கம் பக்கமாக வசனம் பேச முடியாது.

இராமன் சொன்னான். வாலி கேட்டான்.


"செவியுறு கேள்விச் செல்வன்"

காதில் கேட்டுக் கொண்ட கேள்வியின் செல்வன் என்று வாலியை கம்பன்  அழைக்கிறான். 

செவியுறு கேள்விச் செல்வன் என்று அவனுக்கு ஒரு அடை மொழி  தருகிறான்.

அவன் என்ன கேட்டான். கேட்ட பின் மனம் மாறினான்.

அவன் கேட்டதில் கொஞ்சம் தான் நாம்  கேட்டோம்.

நேரில் வந்த இராமன் ஏதோ சொல்லி இருக்கிறான். வாலியும் கேட்டிருக்கிறான். 

கேட்ட பின் தலையால் வணங்கி வாலி கூறுகிறான். 

என்ன கூறினான் ?