Saturday, September 17, 2016

குறுந்தொகை - அது கொல் தோழி காம நோயே

குறுந்தொகை - அது கொல் தோழி காம நோயே 




அது ஒரு கடற்கரையை அடுத்த சின்ன கிராமம். எப்போதும் அலை ஓசை கேட்டுக்கொண்டிருக்கும். புன்னை மரங்கள் நீர் பரப்பின் ஓரத்தில் இருக்கும். அங்கே கொஞ்சம் பறவைகள், அந்த மரத்தின் நிழலில் படுத்து உறங்குகின்றன.

அந்த ஊரில் ஒரு பெண். மிக மிக இளம் பெண். அந்த வயதுக்கு உரிய நாணம், குறுகுறுப்பு எல்லாம் உள்ள பெண். அவள் காதல் வயப்பட்டிருக்கிறாள். பேசி மகிழ்ந்த அவளுடைய காதலன் பிரிந்து சென்று விட்டான். அவளுக்கு தவிப்பு. தூக்கம் வரவில்லை.

இந்த அனுபவம் அவளுக்குப் புதியது. ஏன் இப்படி ஆனோம் என்று அவளுக்குப் புரியவில்லை. தவிக்கிறாள்.

யாரிடம் சொல்லுவாள் ?

தன் தோழியிடம் கேட்கிறாள்

"ஏண்டி, இது தான் காதல் என்பதா ? தூக்கம் வரலடி" என்று வெகுளியாக கேட்கிறாள்.

பாடல்

அது கொல் தோழி காமநோயே!
வதிகுறு உறங்கும் இன்நிழல் புன்னை
உடை திரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்இதழ் உண்கண் பாடு ஒல்லாவே” 

பொருள்

அது கொல் = அதுவா ?

தோழி = தோழியே

காமநோயே! = காம நோயே !

வதிகுறு உறங்கும் = (தன்னிடம்) வந்து உறங்கும் குறுகு (பறவை)

இன்நிழல் = இனிய நிழலைத் தரும்

புன்னை = புன்னை மரம்

உடை = உடைக்கின்ற

திரைத்  திவலை = திரண்டு வரும் நீர் துளிகள்

அரும்பும் = மொட்டும் போல் அரும்பும்

தீநீர் = இனிய நீர்

மெல்லம் புலம்பன் = புலம்பு என்றால் கடற்கரை. புலம்பன் என்றால் கடற்கரையை உடையவன். மெல்லம் புலம்பன் என்றால் மென்மையான கடாரகரையை உடையவன் (தலைவன்)

பிரிந்தெனப் = பிரிந்த பின்

பல்இதழ் = பல இதழ்களை கொண்ட தாமரை மலரைப்

உண்கண் = போன்ற என் கண்கள்

பாடு ஒல்லாவே = உறங்காமல் இருக்கின்றன


" பாரு இந்த சின்ன குருவி எப்படி நிம்மதியா தூங்குது...எனக்குத் தான்  தூக்கம் வரல"  என்று புலம்புகிறாள்.

தனக்கு ஏன் தூக்கம் வரவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை.

இது தான் காதல் நோயா என்று தோழியிடம் கேட்கிறாள்.

கடல் நீர் உப்பு தான். ஆனாலும், அது அவளுக்கு இனிய நீராக இருக்கிறது.

தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா  என்று பாரதி சொன்னது போல, உப்புத் தண்ணியும் தித்திக்கிறது அவளுக்கு .

சங்க கால காதல்.

அந்த ஈரமான உப்பு காற்றும், கண் மூடி தூங்கும் அந்த குருவியும்,  தூங்காத அந்த பெண்ணும், அவள் தோழியும் இன்னமும் அந்த பாடலுக்குள்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_24.html



இராமாயணம் - விராதன் வதைப் படலம் - என் கொண்டு என் செய்வாரோ ?

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - என் கொண்டு என் செய்வாரோ ?




விராதன்  என்ற கந்தர்வன் , ஒரு சாபத்தால் அரக்கனாக  பிறந்து,பின் இராமனால் சாப விமோசனம்  பெறுகிறான். அவன் விண்ணுலகம் போகுமுன் சில சொல்லிப் போகிறான்.

அவன் வாயிலாக கம்பன் இராமனே பரம்பொருள் என்று திகட்ட திகட்ட  சொல்லுகிறான்.

பாடல்

பனி நின்ற பெரும் பிறவிக் கடல்
     கடக்கும் புணை பற்றி
நனி நின்ற சமயத்தோர் எல்லாரும்
     "நன்று" என்னத்
தனி நின்ற தத்துவத்தின் தகை
     மூர்த்தி நீ ஆகின்
இனி நின்ற முதல் தேவர் என் கொண்டு,
     என் செய்வாரோ?

பொருள்

பனி நின்ற = பனி போல குளிர்ந்த

பெரும் = பெரிய

பிறவிக் கடல் = பிறவி என்ற கடலை

கடக்கும் = கரை ஏற

புணை பற்றி = தெப்பத்தைப் பற்றி

நனி நின்ற சமயத்தோர் = பெரிய சமயங்களைச் சேர்ந்தோர்

எல்லாரும் = எல்லாரும்

"நன்று" என்னத் = நல்லது என்று

தனி நின்ற தத்துவத்தின் = தனிப்பட்டு நின்ற தத்துவத்தின்

தகை மூர்த்தி நீ ஆகின் = உயர்ந்த மூர்த்தி நீ என்றால்

இனி = இனிமேல்

நின்ற = நிற்கும், இருக்கும்

முதல் தேவர் = முதல் என்று சொல்லப் படும் மற்ற தேவர்கள்

என் கொண்டு, = எதைக் கொண்டு

என் செய்வாரோ? = எதைச் செய்வார்களோ ?

பிறவி என்ற பெருங்கடலை கடக்க தெப்பமாக, மற்ற  சமயத்தவரும், உன்னை பற்றிக் கொண்டார்கள். உயர்ந்த தனி  மூர்த்தி நீ. இது இப்படி என்றால், மற்ற தெய்வங்கள் என்ன செய்யும். ஒன்றும் ஒன்றும் செய்யாது.

பாடலின் சாரம் அது.

கொஞ்சம் ஆழமாக  சிந்திப்போம்.

பிறவி என்பது பெரிய கடல்தான். நீந்திக் கடந்து விடமுடியுமா ? கை கால்  சோர்ந்து விடும் அல்லவா ? அப்போது பற்றிக் கொள்ள ஒரு தெப்பம்  வேண்டும் அல்லவா ? அந்த தெப்பமாக ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைப் பற்றிக்  கொள்கிறார்கள்.

கல்லைக் கட்டி கடலில் போட்டாலும் , நல்ல துணையாவது நமச்சிவாய என்ற  நாமமே என்றார் அப்பர்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

என்பது அவர் வாக்கு.

அந்தப் பிறவிக் கடல் கொஞ்சம் வெது வெதுப்பாக இருந்தால் நீந்த சுகமாக இருக்கும்.  ஆனால் அது அப்படி இல்லை. பனி போல சிலீர் என்று  குளிக்கிறது. அந்தத் தண்ணீரில் எப்படி இறங்குவது. இறங்குவது என்ன  இறங்குவது. தூக்கிப் போட்டு விட்டார்கள். நடுங்குகிறது. குளிர்கிறது. குளிர் எலும்பு வரை எட்டிப் பாய்கிறது.

வாழ்க்கை அப்படித்தானே இருக்கிறது.

அந்தக் குளிர் கடலில் , நீந்திக் கரை ஏற , அனைத்து சமயத்தினரும் இராமனைப் பற்றிக் கொண்டார்கள் என்றால் மற்ற தேவர்கள் என்ன செய்வார்கள்  என்று கேட்கிறார் கம்பர்.

எங்கெங்கோ போய் துன்பப் படாதீர்கள். இராமனைப் பற்றிக் கொள்ளுங்கள். பிறவி என்ற பெருங்கடலை நீந்திக் கரையேற சிறந்த தெப்பம்  அவன் தான்.


Friday, September 16, 2016

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த - பாகம் 2

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த  - பாகம் 2


செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.

இந்தப் பாடலின் முன்னுரையை ஏற்கனவே பார்த்து விட்டதால் நேரடியாக பொருளுக்குப் போவோம்

முதல் பாகம் படிக்க

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/1.html

கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

செழும் கமல  திரள் அன நின் சேவடி சேர்ந்து அமைந்த 
பழுத்த மனத்து அடியார்களுடன் போயினர் யான்  பாவியேன்
புழுக் கண் உடை புன்குரம்பைப் பொல்லாக் கல்வி ஞானம் இல்லா 

அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன்  அடைக்கலமே.


பொருள்


செழும் = செழுமையான, சிவப்பான 

கமல  திரள் அன = தாமரை மலர்களின் தொகுப்பு 

நின் = உன்னுடைய 

சேவடி = சிவந்த திருவடிகள்  

சேர்ந்து = சென்று சேர்ந்து 

அமைந்த = அமைதி அடைந்த 

பழுத்த மனத்து = பழுத்த மனத்து 

அடியார்களுடன் = அடியவர்களுடன் 

போயினர் = போனவர்கள் 

யான் = நான் 

பாவியேன் = பாவியேன் 


புழுக் கண் உடை = புழுக்கள் உடமையாகக் கொண்ட இந்த  

புன்குரம்பைப் = கீழான இந்த உடலை 

பொல்லாக் = தீயன  

கல்வி = கல்வி 

ஞானம் இல்லா = ஞானம் இல்லா  

அழுக்கு மனத்து அடியேன் = அழுக்குகள் கொண்ட மனத்தை உடையவன் 

உடையாய் = உடையவனே 

உன்  அடைக்கலமே = உன் அடைக்கலமே 

எனக்கு ஒன்றும் தெரியாது. உன்னிடம் அடைக்கலமாக வந்து விட்டேன்.  இனி என்னை சரி ஆக்குவது உன் பாடு என்கிறார். 

வீடு பேறு , முக்தி இவற்றை அடைய மூன்று வழிகளை சொல்கிறார்கள். 

கர்ம யோகம் 

ஞான யோகம் 

பக்தி யோகம் 

மணிவாசகர் பாண்டிய நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். ஒரு அரசனின் கீழ் அமைச்சராக இருப்பது எளிதான காரியம் இல்லை. அவ்வளவு கடினமான வேலையைச் செய்த மணி வாசகருக்கு கர்ம யோகம் கடினமாக இருக்கிறது. 

சிலர் உன் அடியார்களுடன் சேர்ந்து , மனதை பக்குவப் படுத்தி உன் திருவடிகளை அடைந்தார்கள். என்னால் முடியவில்லை என்கிறார். 

சேர்ந்து அமைந்த பழுத்த மனத்து

முதலில் சென்று சேர வேண்டும். பின் அவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும் (அமைய). பின் மனம் பக்குவப் படவேண்டும்.இவ்வளவு வேலை இருக்கிறது. 

என்னால் முடியவில்லை என்கிறார் மணிவாசகர். நான் இந்த புழுக்களுக்கு இடமான உடலோடு இருக்கிறேன் என்கிறார். 

மணிவாசகர் பெரிய அறிவாளி. 

 திருவாசகம், திருக்கோவையார் எழுதியவர்.  

இருந்தும், ஞான யோகத்தில் அவரால் செல்ல முடியவில்லை. 

கற்பனவும் இனி அமையும் என்றார். படித்தது எல்லாம் போதும் என்ற  நிலைக்கு வந்தார். 

கல்வி எனும் பல் கடல் பிழைத்தும் என்றார். கல்வி என்பது பெரிய கடல். அதில் இருந்து தப்பித்தால் தான் இறைவனை அடைய முடியும்  என்கிறார். 

ல்வி ஞானம் இல்லா 

கல்வி  அறிவும்,அதில் இருந்து பிறக்கும் ஞானமும் தனக்கு இல்லை என்கிறார். 

மணிவாசகருக்கே அப்படி என்றால், நம் நிலை என்ன. நம் அறிவும் , ஞானமும் எவ்வளவு இருக்கும் ?


சரி, கர்ம யோகமும் சரிப் பட்டு வரவில்லை. ஞான யோகமும் சரிப் பட்டு வரவில்லை. 

பக்தி யோகம் தான் தனக்கு உகந்தது என்று அறிந்தார். 

பக்தி செய்யக் கூட தெரியாது. 

நான் உன் அடைக்கலம் என்று அவனிடம் அடைக்கலம் அடைந்து விட்டார். 

ஒரு வேளை பக்தி மார்க்கம் எளிமையாக இருக்குமோ ?

உங்கள் மார்க்கம் எது என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/2_16.html

Thursday, September 15, 2016

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த - பாகம் 1

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த  - பாகம் 1


நம்பிக்கை.

நம்பிக்கை என்பது எவ்வளவு பெரிய விஷயம். நம்மால் எதையாவது முழுவதுமாக நம்ப முடிகிறதா ?

வைகுண்டம் வேண்டும், கைலாயம் வேண்டும் , இறைவன் திருவடி நிழல் வேண்டும் என்று நம்பிக்கையோடு தொழுபவர்கள் கூட, இறைவனே நேரில் வந்து "பக்தா உன் பக்திக்கு மெச்சினோம்...வா பரலோகம் போகலாம் " என்று கூறினால் , எத்தனை பேர் உடனே கிளம்புவார்கள் ?

இது ஒரு வேளை கடவுள் இல்லையோ ? பரலோகம் கூட்டிப் போகிறேன் என்று வேறு எங்காவது கூட்டிக் கொண்டு போய் விட்டால் ? போட்டது போட்ட படி இருக்கிறது. பிள்ளையின் படிப்பு, அவர்களின் திருமணம், அவர்களின் பிள்ளைகள், சொத்து விவகாரம் என்று ஆயிரம் விஷயங்கள் கிடக்கிறது. அத்தனையும் விட்டு விட்டு எப்படி போவது என்று தயங்குவார்கள்.

கடவுள் தானே கூப்பிடுகிறார். அவர் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எத்தனை பேருக்கு இருக்கும் ?

நான் எல்லா விட்டால் இந்த குடும்பம் என்ன ஆகும் என்று நினைப்பவர்களே அதிகம் இருப்பார்கள்.

சரி , அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இறைவன் தான் அனைத்தையும் செய்கிறான் என்றால், நமக்கு வரும் துன்பங்களும் அவன் செய்வது தானே. அதற்காக ஏன் வருந்த வேண்டும். நமக்கு என்ன வேண்டும் , எவ்வளவு வேண்டும், எப்போது  வேண்டும் என்று அவனுக்குத் தெரியாதா ?

புலம்புவது ஏன் ?

நம்பிக்கை இன்மை.

நமது சமயமும், இலக்கியமும் சரணாகதி, அடைக்கலம் என்பதைப் பற்றி உயர்வாகப் பேசுகின்றன.

நம்மை, நம் வாழ்க்கையை இன்னொருவரிடம் ஒப்படைப்பது என்பது பெரிய விஷயம்.

வைணவம் சரணாகதி பற்றி பேசுகிறது.

சைவம் அடைக்கலம் என்று கூறுகிறது.

எல்லாம் ஒன்று தான். ஒருவரிடம் நம்மை முழுவதுமாக கொடுத்து விடுவது.

இதில் மூன்று நிலை இருக்கிறது.

கையடைப் படுத்துவது. இடைக்கலம் . அடைக்கலம்.

கையடை என்றால் ஒருவரை இன்னொருவரிடம் "இனி இவன்/இவள் உன் பொறுப்பு " என்று ஒப்படைப்பது.

பெற்றோர் , ஆசிரியரிடம் பிள்ளையை விட்டு "இனி இவன் உங்கள் பொறுப்பு...அவனை / அவளை படித்து நல்ல குடிமகனாக ஆக்குவது உங்கள்  பொறுப்பு " என்று விடுவது கையடை.

இதில், கையடையாக போபவரின் சம்மதம் இருக்காது. குழந்தையின் சம்மதம் கேட்டு ஆசிரியரிடம் விடுவது கிடையாது.

இராமாயணத்தில் , தீ வளர்த்து, சீதையை இராமனிடம் "இவன் இனி உன் கையடை " என்று சனகன் கொடுத்தான்.

'நெய் அடை தீ எதிர் நிறுவி, ''நிற்கு இவள்
கையடை'' என்ற அச் சனகன் கட்டுரை
பொய் அடை ஆக்கிய பொறி இலேனோடு,
மெய் அடையாது; இனி, விளிதல் நன்றுஅரோ.


அடுத்தது, இடைக்கலம். இது ஒருவர் தன்னைத் தானே மற்றோரிடம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்புக்  கொடுப்பது.

படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென்
நாவிற்கொண்டேன்

இடைக்கல மல்லே னெழுபிறப் பும்முனக்
காட்செய்கின்றேன்

துடைக்கினும் போகேன் றொழுது வணங்கித்
தூநீறணிந்துன்

அடைக்கலங் கண்டா யணிதில்லைச் சிற்றம்
பலத்தரனே.

இடைக்கலம் அல்லேன் என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள் .


அடைக்கலம் என்பது, தன்னை முழுமையாக ஒருவரிடம் ஒப்புக் கொடுப்பது.

விபீஷணன் அடைக்கலமாக வந்தான். சரணாகதி என்பது.

‘இடைந்தவர்க்கு “அபயம் யாம் “ என்று
    இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி ஆலம்
    உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின்,
    உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின்,
    அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்?

அப்படி வந்த விபீடணனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த அறம் என்ன ஆண்மை என்ன என்று கேட்கிறான் இராமன்.

திருவாசகத்தில், மாணிக்க வாசகர் அடைக்கலப் பத்து என்று பத்து பாடல்கள் பாடி இருக்கிறார்.

தன்னை எப்படி ஆண்டவனிடம் அடைக்கலமாகத் தருகிறார் என்பது பற்றி.

முதல் பாடல்


செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.

பொருள்

அடுத்த பிளாகில் பார்ப்போம்

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/1.html

Tuesday, September 13, 2016

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு 


சாப விமோச்சனம் பெற்று விண்ணுலகம் போகும் முன், இராமனைத் தொழுது விராதன் சில சொல்லுகிறான்.

ஆன்மீகத்தின் சாரம் அந்தப்  பாடல்கள்.

பாடல்

துறப்பதே தொழில் ஆகத் தோன்றினோர்
    தோன்றியக்கால்,
மறப்பரோ தம்மை? அது அன்றாகில்,
    மற்றவர்போல்
பிறப்பரோ? எவர்க்கும் தாம் பெற்ற
    பதம் பெறல் அரிதோ?
இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு
    இனிது உகந்தோய்!

பொருள்

துறப்பதே = துறப்பதையே

தொழில் ஆகத் = தமது கடமை என்று

தோன்றினோர் = தோன்றியவர்கள்

தோன்றியக்கால் = தோன்றினால்

மறப்பரோ தம்மை?  = தங்களை மறப்பார்களா ?

அது அன்றாகில்  =  அது அப்படி இல்லை என்றால்

மற்றவர்போல் = மற்றவர்களை போல

பிறப்பரோ? = பிறப்பார்களா ?

எவர்க்கும் = அவர்களுக்கும்

தாம் பெற்ற பதம் பெறல் அரிதோ? = எஅவர்கள் பெற்ற நிலை அறியதானதே

இறப்பதே = இறப்பதே

பிறப்பதே = பிறப்பதே

எனும் விளையாட்டு = எனும் விளையாட்டு

இனிது உகந்தோய்! = இனிமையாகக் கொண்டவனே

நாம் மிக மிக பயப்படுவது எதைக் கண்டு ?

மரணத்தைக் கண்டு தான்.

பயங்களுக்குள் பெரிய பயம் மரண பயம்.

ஆனால், அந்த மரணம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அதைக் கண்டு இவ்வளவு பயப்படத் தேவை இல்லை என்று தான் நம் இலக்கியம் சொல்லி வந்திருக்கிறது.

பயமான விஷயத்தை விடுவோம்.

எது சுகமான விஷயம் ? தூங்குவது சுகமான விஷயம்தானே.

ஆடி, ஓடி களைத்த பின் அப்பாட என்று கிடந்து உறங்குவது ஒரு சுகம்தான்.

இந்த மரணம் கூட தூக்கம் போல சுகமானதுதான் என்கிறார் வள்ளுவர்.

தூங்குவது போலும் சாக்காடு தூங்கி விழிப்பது போலும் பிறப்பு.

அவ்வளவுதான் வாழ்க்கை.

தினம் தினம் தூங்கி தூங்கி எழுந்திரிக்கிறோம். ஐயோ, தூக்கம் வரப் போகிறதே என்று யாராவது பயப்படுவார்களா ? எப்படா படுக்கலாம் என்று தான்  நினைப்போம்.அது போல , இறப்பும் ஒரு குட்டித் தூக்கம் போலத் தான்.

இதை , விராதனும் சொல்லுகிறான்.

மரணம் இனிமையாக இருக்கும் எப்போது என்றால், வாழும் போது எனக்கு எனக்கு  என்று சேர்த்து வைத்துக் கொள்ளாமல், பற்று அற்று இருந்தால்  , இந்த மரணம் கூட ஒரு விளையாட்டு தான்.


துறப்பதே தொழில் ஆகத் தோன்றினோர்

எது கிடைத்தாலும் அதை துறப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள். அப்படியும் சிலர் இருந்திருக்கிறார்கள். இந்த சொத்து, சுகம், பட்டம் , பதவி எல்லாம் வேண்டாம் என்று வைத்தவர்கள் இருக்கிறார்கள்.

எட்டு கோடி பொன்னை (அந்தக் காலத்தில்) வேண்டாம் என்று ஒரு கோவணத்துடன் தெருவில் இறங்கினார் பட்டினத்தடிகள். முடியுமா ?

அகண்ட இராஜ்யத்தை வேண்டாம் என்று இரவோடு இரவாக  இறங்கினான்  சித்தார்த்தன். நினைத்துப் பார்க்க முடியுமா ?

நாடு இல்லை, காட்டுக்குப் போ என்றவுடன் சிரித்துக் கொண்டே போனான் இராமன். சிந்தித்துக் கூட பார்க்க முடியுமா நம்மால்.

அப்படி துறப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள்.


தோன்றியக்கால்,

அப்படிப்பட்டவர்கள், மீண்டும் மீண்டும் பிறக்க மாட்டார்கள்.


'அவா' என்ப-'எல்லா உயிர்க்கும், எஞ் ஞான்றும்,
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து'.

என்பார் வள்ளுவர். ஆசை என்பது பிறவிக்கு வித்து என்பது வள்ளுவம். "பிறப்பு ஈனும் வித்து".

தோன்ற மாட்டார்கள்.

ஒரு வேளை தோன்றினால் ?


மறப்பரோ தம்மை?

அவர்கள் தாங்கள் யார் என்று மறக்க மாட்டார்கள். அதாவது , ஒரு பிறவியில் துறவறம் மேற் கொண்டால், பின் பிறவி என்பது இல்லை. அப்படியே பிறந்தாலும், அவர்கள் தங்கள் முப்பிறவியில் செய்ததை இந்தப் பிறவியிலும் மறக்காமல் தொடர்வார்கள்.

இது உண்மையா ? கற்பனையா என்று தெரியாது.

இருந்தாலும், ஒரு வசீகரமான  கருத்து. நம்புபவர்கள் அதிகமாக இரசிக்க முடியும்.




அது அன்றாகில், மற்றவர்போல் பிறப்பரோ?

அப்படி இல்லை என்றால் மற்றவர்கள் மாதிரி பிறப்பார்களா ? மாட்டார்கள். அதாவது, ஒரு பிறவியில் துறவு மேற்கொண்டவர்கள், மறு பிறவி எடுத்தாலும் அது மற்றவர்கள் மாதிரி இருக்காது.



எவர்க்கும் தாம் பெற்ற பதம் பெறல் அரிதோ?

துறவு அடைந்தவர்கள் அடைகின்ற நன்மை இருக்கிறதே, அது அரிதிலும் அரிதானது.


இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு
    இனிது உகந்தோய்!

இந்த இறப்பும் , பிறப்புமாய் நடக்கும் இந்த வாழ்க்கையை ஒரு விளையாட்டு போல மகிழ்ச்சியாக செய்பவனே (இராமா).


அலகிலா விளையாட்டு உடையவன் அவன் என்று முதலிலேயே கம்பர் சொல்லி இருக்கிறார். 


 உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.


விளையாடுத்தான் வாழ்க்கை.

பிறப்பும், இறப்பும், இருப்பும் எல்லாமே ஒரு விளையாட்டுதான்.

ரொம்ப serious ஆக வாழ்க்கையை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

எதற்கெடுத்தாலும், ஒரு கோபம், சிடுசிடுப்பு, எல்லோர் மேலும் ஒரு வெறுப்பு என்று வாழ்க்கையை சிக்கலாக்காதீர்கள்.

சிரியுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.

இது வரை எப்படியோ, இன்று முதல் மகிழ்ச்சியாக இருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_13.html



Sunday, September 11, 2016

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - அறம் காக்க - பாகம் 2

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - அறம் காக்க  - பாகம் 2


விராதன் என்ற கந்தர்வன் , ஒரு சாபத்தால் , அரக்கனாக இருந்தான். இராமனிடம் போரிட்டு, மாண்டு சாப விமோசனம் பெற்றான். அவன் விண்ணுலகம் போவதற்கு முன் சில சொல்லிச் செல்கிறான்.

அகத்தையும், புறத்தையும் கண்டு, எப்போதும் அருள் நோக்கோடு,  காற்று போல தன்னந் தனியாக சுற்றி  சுற்றி வந்து அறத்தை காக்கிறாய் என்கிறான் அடுத்தப் பாடலில்.


பாடல் 

புறம் காண அகம் காணப் பொது முகத்தின்
     அருள் நோக்கம்
இறங்காத தாமரைக் கண் எம்பெருமாஅன்!
     இயம்புதியால்;
அறம் காத்தற்கு, உனக்கு ஒருவர் ஆரும் ஒரு
     துணை இன்றி,
கறங்கு ஆகும் எனத் திரிய,
     நீயேயோ கடவாய்தான்?

பொருள்

புறம் காண = வெளிப் புறத்தைக் காண

அகம் காணப் = உள் புறத்தைக் காண

பொது முகத்தின் = பொதுவாக

அருள் நோக்கம் = அருள் பார்வை

இறங்காத = தாழாத

தாமரைக் கண் = தாமரை போன்ற கண்களை உடைய

எம்பெருமாஅன்! = எங்கள் பெருமானே

இயம்புதியால்; = எங்களுக்குச் சொல்

அறம் காத்தற்கு, = அறத்தை காப்பதற்கு

உனக்கு = உனக்கு

ஒருவர் ஆரும் = வேறு ஒருவர் யாரும்

ஒரு துணை இன்றி = ஒரு துணையும் இன்றி

கறங்கு ஆகும் = காற்றுப் போல

எனத் திரிய = எங்கும் திரிந்து

நீயேயோ கடவாய்தான்? = நீ உன் கடமையைச் செய்கிறாய்


இறங்காத தாமரைக் கண் எம்பெருமாஅன்

என்ற வரியில், ஏன் தாமரையை உதாரணமாகச் சொல்ல வேண்டும்  என்ற கேள்வியோடு போன blog  ஐ முடித்திருந்தோம்.

மல்லிகை, முல்லை போல தாமரைக்கு ஒரு மணம் கிடையாது. தாழம்பூ மாதிரி நீண்ட நாள் வாடாமலும் இருக்காது. பின் ஏன் தாமரை ?

ஒரு இனிமையான பாடலை கேட்கிறோம். சிறப்பான ஒரு இராகத்தில் அமைந்த  பாடல். நல்ல தாள இலயம் . கேட்டு சொக்கிப் போகிறோம். 

இராகம் என்பது என்ன ? காற்றுதான், ஒலி தான் இருந்தும் அதில் உள்ள  இராகத்தை எல்லோரும் அறிவது இல்லை. இசையின்  நுணுக்கம் தெரிந்தவர்கள் அதை அறிந்து இரசிப்பார்கள். எல்லோர் காதிலும் தான் விழுகிறது. நல்ல இசை அறிஞரின்  காதில் அதில் உள்ள இராகம், அதன் தாளம், சுருதி  எல்லாம் தெளிவாகக் கேட்கும். நமக்கு ஏதோ பாட்டு கேட்கும். 

திருஞான சம்பந்தர் சிறு பிள்ளை. அவர் பாடல் பாடும் போது தாளம் போடுவார். அவருக்கு கை வலிக்குமே என்று இறைவன் பொன்னால் ஆன ஒரு தாளத்தை கொடுத்தார். விண்கலத்தில் ஓசை வரும். பொன்னில் ஓசை வராது. பின் ஏன் பொற்தாளத்தை கொடுத்தார் ? 

பொன்னில் ஓசை வரும்.மிக நுட்பமான ஓசை. காதை கூர்மை படுத்தினால் அந்த ஓசை கேட்கும். 

தாமரை மலரில் ஒரு வாசம் உண்டு. எல்லோருக்கும் தெரியாது. மிக நுட்பமான வாசம் அது. புகையிலும், தூசியிலும்  கிடந்து பழக்கப் பட்ட நம் மூக்குக்கு அந்த வாசம் தெரியாது. 

புலன்களை கூர்மை படுத்த கூர்மை படுத்த பொருள்களின் நுட்பம் தெரியும். 

ஒலிக்கு பின்னால் உள்ள பாடல் தெரியும். பாடலுக்கு பின்னால் உள்ள   இராகம் தெரியும். இராகத்தை தழுவிய தாளம் தெரியும். இரண்டையும் இணைக்கும் ஸ்ருதி தெரியும். 

புலன்களை கூர்மை படுத்த , கூர்மை படுத்த இந்த உலகம், அதன்  பின்னால் உள்ள உண்மைகள் புரியும். 

  உலகம், அதில் உள்ள மக்கள் வரை புரிகிறது.  

அதற்கு பின்னால் உள்ளது என்ன ? உயிரா ? ஆத்மாவா ? இறைவனா ? 

அது நேரடியாகத் தெரியாது. பயிற்சி வேண்டும். புலன்கள் தெளிவு பெற வேண்டும். 

எப்போது மனதில் சலனம் இல்லையோ, அப்போது புலன்கள் தெளிவு பெறும் . 

தெளிவு பெற்ற புலன்கள் உண்மையைக் காணும். 

அடுத்த முறை தாமரை மலர் கிடைத்தால் , முகர்ந்து பாருங்கள். 

அதன் நுண்ணிய வாசம் புரியும். 

அட, இத்தனை நாள் என் கண் முன்னே இருந்தது. இந்த வாசனை  தெரியாமல் இருந்து விட்டேனே என்று ஆச்சரியப் படுவீர்கள். 

அப்படித்தான், பல உண்மைகள் கண் முன்னே கிடக்கிறது . நாம் சரியாக பார்ப்பது இல்லை. 

பாருங்கள். தெரியும். 

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/2.html


Saturday, September 10, 2016

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - அறம் காக்க

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - அறம் காக்க 


விராதன் என்ற கந்தர்வன் , ஒரு சாபத்தால் , அரக்கனாக இருந்தான். இராமனிடம் போரிட்டு, மாண்டு சாப விமோசனம் பெற்றான். அவன் விண்ணுலகம் போவதற்கு முன் சில சொல்லிச் செல்கிறான்.

அகத்தையும், புறத்தையும் கண்டு, எப்போதும் அருள் நோக்கோடு,  காற்று போல தன்னந் தனியாக சுற்றி  சுற்றி வந்து அறத்தை காக்கிறாய் என்கிறான் அடுத்தப் பாடலில்.


பாடல்

புறம் காண அகம் காணப் பொது முகத்தின்
     அருள் நோக்கம்
இறங்காத தாமரைக் கண் எம்பெருமாஅன்!
     இயம்புதியால்;
அறம் காத்தற்கு, உனக்கு ஒருவர் ஆரும் ஒரு
     துணை இன்றி,
கறங்கு ஆகும் எனத் திரிய,
     நீயேயோ கடவாய்தான்?

பொருள்

புறம் காண = வெளிப் புறத்தைக் காண

அகம் காணப் = உள் புறத்தைக் காண

பொது முகத்தின் = பொதுவாக

அருள் நோக்கம் = அருள் பார்வை

இறங்காத = தாழாத

தாமரைக் கண் = தாமரை போன்ற கண்களை உடைய

எம்பெருமாஅன்! = எங்கள் பெருமானே

இயம்புதியால்; = எங்களுக்குச் சொல்

அறம் காத்தற்கு, = அறத்தை காப்பதற்கு

உனக்கு = உனக்கு

ஒருவர் ஆரும் = வேறு ஒருவர் யாரும்

ஒரு துணை இன்றி = ஒரு துணையும் இன்றி

கறங்கு ஆகும் = காற்றுப் போல

எனத் திரிய = எங்கும் திரிந்து

நீயேயோ கடவாய்தான்? = நீ உன் கடமையைச் செய்கிறாய்


மேலோட்டமாக பார்த்தால் எளிமையான பாடல்  தான்.


புறம் காண அகம் காணப்

நமக்கு ஒருவரின் வெளித்  தோற்றம் மட்டும் தான் தெரியும். அவர்கள்  உடுத்தும் உடை, பேசும் பேச்சு, நடை , பாவனை  என்று இவை மட்டும்  தான் தெரியும்.

அவனுக்கு உள்ளும் புறமும் தெரியும்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று  வேண்டினார் வள்ளலார்.

உள்ளே என்ன இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்...

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே


என்பார் நாவுக்கரசர். வெளி உலகுக்கு பக்தனைப் போல நடித்தாலும், உள்ளுக்குள் பக்தி இல்லை , எப்படி கள்ளனைப் போல வேடம் போடுகிறேன் என்று தன்னை தானே நினைத்து சிரிக்கிறார் நாவுக்கரசர்.

அவர் நிலை அப்படி என்றால் நம் நிலை எப்படியோ ?

பொது முகத்தின் அருள் நோக்கம்


அவனுக்கு உயர்ந்தவன், தாழ்ந்தவன், படித்தவன், படிக்காதவன், செல்வந்தன், ஏழை என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. எல்லோருக்கும்  பொதுவானவன்.

எல்லாருக்கும் பொதுவில் நடம் இடும் சிவமே என்பார் வள்ளலார்.


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.  


அடுத்ததாக 

அருள் நோக்கம் இறங்காத தாமரைக் கண்

நமக்கு ஒரு நாள் நல்ல மன நிலை இருந்தால் உதவி தேடி வந்தவர்களுக்கு உதவி  செய்வோம்.இன்னோர் நாள் ஏதோ கோபத்திலோ, சோகத்திலோ இருந்தால் , அநத நேரத்தில் யாராவது உதவி என்று வந்தால் எரிந்து விழுவோம். குறைந்த பட்சம் அப்பறம் வாங்க என்று அனுப்பி விடுவோம். 

ஆண்டவனுக்கு அப்படி எல்லாம் இல்லை. அவன் அருள் நோக்கம் ஒரு போதும்  குறையாது. 



தாமரைக் கண்..

அது என்ன அடிக்கடி தாமரை பூவே உதாரணம் சொல்கிறார்கள். இலட்சுமி தாமரை பூவில் இருக்கிறாள், சரஸ்வதி தாமரை பூவில் இருக்கிறாள். அன்றலர்ந்த செந்தாமரையை ஒத்தது என்கிறார் கம்பர் இராமனைப் பற்றி கூறும் போது . இங்கும் தாமரைக் கண் என்கிறார். 

தாமரையில் என்ன விசேஷம் இருக்கிறது ?

இறைவனை எப்படி அறிவது ? இறைவன் என்பது ஒரு ஆளா ? ஒரு வடிவமா ? ஒரு தத்துவமா ? ஒரு சித்தாந்தமா ? ஒரு உணர்வா ? அது என்ன ?

அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். அதை எப்படி அறிவது ? இந்த புலன்களுக்கு புலப் படுமா ? கண்ணால் காண முடியுமா ? காதால் கேட்க முடியுமா ? தொட்டு உணர முடியுமா ?

முடியும். 

முடிந்திருக்கிறது. பார்த்தவர்கள், பார்த்தேன் என்று சொல்லி  இருக்கிறார்கள்.


திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று

என்று ஒன்றுக்கு ஐந்து முறை பேயாழவார் சாதிக்கிறார். 

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்

கண்டு அறியாதன கண்டேன் என்கிறார் திருநாவுக்கரசர்.

கணக்கிலலாத வடிவங்களை காட்டினாய்  கழுக் குன்றிலே என்பார் மணிவாசகர் 

பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்உன் நாமங்கள் பேசுவார்க்
கிணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 

பார்த்திருக்கிறார்கள். பார்க்காமலா , பார்த்தேன் என்று பாட்டு எழுதுவார்கள் ?

கண்ணால் கண்டிருக்கிறார்கள். 

எப்படி முடிந்தது ? அதே கண்கள்தான் நமக்கும் இருக்கிறது. நம்மால் ஏன் காண முடியவில்லை ?

சரி, அதுக்கும் இந்த தாமரை மலருக்கும் என்ன சம்பந்தம் ?

சிந்திப்போம்.