Friday, February 17, 2017

தேவாரம் - இறைவன் எங்கு உள்ளான் ?

தேவாரம் - இறைவன் எங்கு உள்ளான் ?


இறைவன் எங்கே இருக்கிறான் என்று நாளும் மனிதன் தேடிக் கொண்டிருக்கிறான். கைலாயத்தில் இருக்கிறான். வைகுண்டத்தில் இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டு அங்கே போக வழி தேடிக் கொண்டிருக்கிறான்.

நாவுக்கரசர் சொல்லுகிறார்

"மனதில் இருக்கிறான். வாக்கில். அடியவர்கள் மத்தியில் இருக்கிறான். தேவர்களின் தலைக்கு மேலே இருக்கிறான். அண்டங்களுக்கு அப்பால் இருக்கிறான். மலையில் இருக்கிறான். கொன்றைப் பூவில். நெருப்பில் இருக்கிறான். காற்றிலும் இருக்கிறான். மேகத்தில் இருக்கிறான். கைலாயத்தின் உச்சியில் உள்ளான். என் கண்ணுக்குள்ளே இருக்கிறான் " என்கிறார்.

பாடல்

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
    வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
    ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான்
    பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்
    காளத்தி யானவனென் கண்ணு ளானே


சீர் பிரித்த பின்

மனத்து அகத்தான் தலை மேலான் வாக்கினுள் உள்ளான்
    வாயாரத் தன் அடியே  பாடும்  தொண்டர்
இனத்து அகத்தான் இமையவர் தம் சிரத்தின் மேலான்
    ஏழு அண்டத்துக்கு அப்பாலன் இப்பாற் செம்பொன்
புனத்து அகத்தான்  நறுங்கொன்றைப் போதினுள் உள்ளான்
    பொருப்பின் இடையான்  நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சியில் உள்ளான் 
    காளத்தியான் அவன் என் கண்ணுளானே

பொருள்

மனத்து அகத்தான் = மனதினுள் இருக்கிறான்

தலை மேலான் = தலைக்கு மேலே இருக்கிறான்

வாக்கினுள் உள்ளான் = சொல்லில் இருக்கிறான்

வாயாரத் = வாயால்

தன் அடியே = தன்னுடைய திருவடிகளையே

பாடும் = பாடும்

தொண்டர் இனத்து = தொண்டர் கூட்டத்தின்

அகத்தான் = நடுவில் இருப்பான்

இமையவர் = இமைக்காமல் இருக்கும் தேவர்கள்

தம் சிரத்தின் மேலான் = அவர்களுடைய தலைக்கு மேலே இருக்கிறான்

ஏழு அண்டத்துக்கு = ஏழு அண்டங்களுக்கு

அப்பாலன் = வெளியே இருக்கிறான்


இப்பாற் = இந்தப் பக்கம்

செம்பொன் = சிவந்த பொன்னைப் போன்ற

புனத்து அகத்தான் = புனைகளுக்கு மத்தியில் இருக்கிறான்

நறுங்கொன்றைப் = நல்ல கொன்றைப்

போதினுள் = பூவில்

உள்ளான் = இருக்கிறான்

பொருப்பின் இடையான் = மலையின் மேல் இருக்கிறான்

நெருப்பிடையான் = நெருப்பில் இருக்கிறான்

காற்றி னுள்ளான் = காற்றில் இருக்கிறான்

கனத்தகத்தான் = மேகத்தில் இருக்கிறான்

கயிலாயத்து உச்சியில் உள்ளான் = கைலாயத்தின் உச்சியில் இருக்கிறான்

காளத்தியான் = திருக்காளத்தி என்ற ஊரில் இருக்கிறான்

அவன் என் கண்ணுளானே = அவன் என் கண்ணில் இருக்கிறான்.



அங்கே இருக்கிறான், இங்கே இருக்கிறான் என்று பெரிய பட்டியயல் தருகிறார். படித்து முடித்தவுடன் நமக்கு என்ன தோன்றுகிறது ?

பெரிசா ஒன்றும் இல்லை. எல்லோரும் சொல்லுவதுதான். கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறான்.

சரி. அதை அறிந்து கொண்டு என்ன செய்வது. இருக்கட்டும் என்று நாம் நம் வேலையை பார்க்கப் போய் விடுவோம். அந்தப் பாடல் நமக்குள் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை.

நாவுக்கரசர் போன்ற பெரியவர்கள் இப்படி ஒரு பாடலை ஏன் எழுதுகிறார்கள்.  நமக்கு பயன் இல்லாத ஒன்றை அவர்கள் சொல்லுவார்களா ?

சொல்லவே மாட்டார்கள். அப்படி என்றால் அதில் என்னதான் இருக்கிறது.

ஆழ்ந்து சிந்திப்போம்.


"மனத்து அகத்தான் தலை மேலான் வாக்கினுள் உள்ளான் "

அதாவது மனம், வாக்கு, காயம் (உடல் , இங்கே தலை)  என்ற மூன்றிலும் இருக்கிறான். நம் மனத்தில், நாம் பேசும் பேச்சில், நாம் நினைக்கும் எண்ணத்தில் இருக்கிறான். 

நாம் பேசும் பேச்சில் இறை தன்மை இருக்கிறதா ? நல்லதைப் பேசுகிறோமா ? உயர்ந்தவற்றை பேசுகிறோமா ? அன்போடு பேசுகிறோமா ? நம் பேச்சில் கருணை இருக்கிறாதா ?  

நல்லவற்றை சிந்திக்கிறோமா ? நம் சிந்தனையில் அன்பும், கருணையும், அருளும் இருக்கிறதா ? 

நம் உடலை இறைவன் கோவில் கொண்டிருக்கும் இடமாக நினைக்கிறோமா ? அப்படி நினைத்தால் மற்றவர்களின் உடலும் இறைவனின் கோவில் கொள்ளும் இடம்தானே. அந்த உடலுக்கு தீங்கு செய்யும் எண்ணம் வருமா ? கொலை, கற்பழிப்பு போன்ற உடல் சார்ந்த தீங்குகள் ஏன் நிகழுகிறது ?  அனைத்து உடலும்  இறைவன் வாழும் கோவில் என்று நினைத்தால் 

- உயர்ந்தவன், தாழ்ந்தவன், 
- பணக்காரன், ஏழை 
- படித்தவன், படிக்காதவன் 
- தீண்டத் தகாதவன் , தகுந்தவன் 

என்ற பாகுபாடுகள் வருமா ?

கோவிலை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டுமோ அப்படி இந்த உடலையும்  வைத்திருக்க வேண்டும். 

உடல், உள்ளம், பேச்சு எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும்.  இந்த ஒரு வரியை விரித்துச் சொன்னால் , ஒரு புத்தகமே எழுதலாம். 


"வாயாரத் தன் அடியே  பாடும்  தொண்டர் இனத்து அகத்தான்"

இறைவன் அடியார்கள் மத்தியில் இருக்கிறான். அப்படி என்றால் என்ன ?  ஏதாவது ஒரு அடியார் கூட்டத்திற்கு போய் , அங்கே இறைவன் இருக்கிறானா என்று  பார்க்க முடியுமா ?

அது அல்ல அர்த்தம்.

தீயவர்கள் மத்தியில் இருந்தால் , தீய எண்ணங்களே தோன்றும். மது அருந்தலாமா, புகை பிடிக்கலாமா என்பது பற்றிய சிந்தனைகளே தோன்றும். சிந்தனை வராவிட்டாலும், நம்மை அறியாமலேயே அது போன்ற செயல்களில்  இறங்கி விடுவோம். சூழ்நிலை அப்படி.

அடியவர்கள் மத்தியில் இருந்தால்  இறை சிந்தனை இருக்கும். உயர்ந்த சிந்தனைகள் இருக்கும். மனம் வேறு ஒன்றை நினைக்காது. அந்த சிந்தனைகள் நம்மை இறைவனிடம் சேர்க்கும் அல்லது அவனை நமக்கு காண்பித்துத் தரும்  எனபது அர்த்தம்.

நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.

என்பார் மணிவாசகர். நம்பிக்கை இல்லாவிட்டால் கூட, நடிப்புக்காக கூட அடியார்கள் மத்தியில் போய் இருந்தால் , பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல நமக்கும் நல்லது கிடைக்கும்.

போக வேண்டும். அவ்வளவுதான்.


இன்னும் எழுத ஆசைதான். படிக்க உங்களுக்கு பொறுமை இருக்குமா என்று தெரியவில்லை......

யாராவது நாலு பேர் , மேலும் படிக்க பொறுமை இருக்கிறது என்று கூறினால், மேலும் எழுத  ஆசை


Thursday, February 16, 2017

திருக்குறள் - நட்பின் இலக்கணம்

திருக்குறள் - நட்பின் இலக்கணம் 


நல்ல நட்பு என்பதின் இலக்கணம் என்ன ?

மனிதர்களுக்கு வாழ்வில் தளர்வு வரும். துன்பம் வரும். சிக்கல்கள் வரும். அப்படி தளர்ச்சி வரும் நேரங்களில் எதை செய்தால் சரியாகும் என்று தவிப்பார்கள். குழப்பத்தில் எங்கு சென்றாலும் ஏதோ சிக்கல் இருப்பது போலத் தெரியும். இப்படி போவதா, அப்படி போவதா என்று திக்குத் தெரியாமல் தவிக்க நேரிடும். யாரை நம்புவது, யாரை சந்தேகிப்பது என்று தெரியாது.


அந்த மாதிரி சமயங்களில், விரைந்து சென்று, அவர்களின் தளர்ச்சியை நீக்கி, அவர்கள் மீண்டும் நிலையான ஒரு வாழ்வைப் பெற உதவ வேண்டும்.

அதுதான் நட்பிற்கு இலக்கணம்

பாடல்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி 
ஒல்லும்வாய் ஊன்று நிலை


பொருள்


நட்பிற்கு = நட்பினுக்கு

வீற்றிருக்கை = வீற்று இருக்கும் இருக்கை

யாதெனில் = எது என்றால்

கொட்பின்றி = தளர்ச்சி இன்றி

ஒல்லும்வாய் = விரைந்து சென்று அல்லது அனைத்து வழிகளிலும்

ஊன்று நிலை = நிலை பெறுமாறு செய்யும் நிலை

வீற்று இருக்கும் இருக்கை என்றால் உயர்ந்த சிம்மாசனம். நட்பின் உயர்ந்த நிலை எது என்றால்.

"ஊன்று நிலை " - உறுதியாக வைக்கும் நிலை. எதில் உறுதியான நிலையை உண்டாக்க வேண்டும்.

"ஒல்லும் வாய் " = அனைத்து வழிகளிலும். அனைத்து வழிகளிலும் என்றால் இம்மை மட்டும் அல்ல மறுமைக்கும் உள்ள வழிகள். அறம் , பொருள், இன்பம் என்ற இம்மைக்கும், வீடு பேறு  என்ற மறுமைக்கும் உள்ள அனைத்து வழிகளிலும் உறுதியாகச் செலுத்த வழி செய்ய வேண்டும்.

சிந்தித்துப் பார்ப்போம்.

நண்பருக்கு ஒரு பொருளாதாரச் சிக்கல். கையில் பணம் இல்லை. அவருக்கு உதவி செய்கிறேன் என்று தவறான வழியில் பணம் சம்பாதிக்கக் கற்றுத் தரக் கூடாது.  அறம் அல்லாத வழியில் அவர் செல்வதாகவே இருந்தாலும் அவரை அந்த  வழியில் செல்லாமல் தடுத்து நிறுத்த வேண்டும். இன்று மகிழ்ச்சியாக இருந்தால் போதாது. மறுமைக்கும் சேர்த்து வழி தேட வேண்டும்.

அதுவும் எப்படி செய்ய வேண்டும் ?


"கொட்பின்றி"  - தளர்ச்சி இன்றி. நண்பரின் தளர்ச்சியை போக்க வேண்டும். அவருக்கு நாம் பல விதங்களில் உதவி செய்வோம். ஒன்றும் சரியாக வராது. சில சமயம் நாமே தளர்ந்து போவோம். நாமும் தளரக் கூடாது , நண்பரின் தளர்ச்சியையும் போக்க வேண்டும்.

"தளர்ந்தேன் எம்பிரான் என்னை  தாங்கிக் கொள்ளேன் " என்பார் மணிவாசகர்.

கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.


என்பது நீத்தல் விண்ணப்பம்.

தளர்ச்சி என்பது இயலாமையால் வருவது. பணம் கையில் இருக்கலாம். அதிகாரம் கையில் இருக்கலாம். வீட்டில் மனைவி சரி இல்லை என்றால் தளர்வு வரும், பிள்ளைகள் படிக்கவில்லை என்றால் தளர்வு வரும், உடல் ஆரோக்கியம் குறைந்தால் தளர்வு வரும்.  தொழிலில் நட்டம் , மேலதிகாரியுடன் சண்டை என்று தளர்ச்சி எங்கு வேண்டுமானாலும் வரலாம்.  
அதைப் போக்கி, அவர்கள் நல்ல நிலையில் இருக்க உதவ வேண்டும்.

சிந்திப்போம். செயல்படுவோம்.





Tuesday, February 14, 2017

இராமாயணம் - பரதன் குகன் - தொடர்ந்து பின்னே போனவன்

இராமாயணம் - பரதன் குகன் - தொடர்ந்து பின்னே போனவன் 


நாம் யாரையாவது பார்த்தால் , 'நீ எப்படி இருக்க ' என்று கேட்போம். அதையே கொஞ்சம் நீட்டி "வீட்ல எப்படி இருக்காங்க, பிள்ளைங்க எல்லா நல்லா இருக்காங்களா ? அப்பா அம்மா எப்படி இருக்காங்க ' என்று கேட்டால் அவர்களுக்கு சந்தோஷம் அதிகம் ஆகும்.

இராமன் எங்கே இருந்தான், எங்கே படுத்தான் என்று குகனிடம் கேட்டு அறிந்த பரதன் அந்த இடத்தையெல்லாம் பார்த்து கண்ணீர் விட்டான். என்னால் அல்லவா இராமன் இந்த துன்பங்களை அடைந்தான் என்று எண்ணி வருந்தினான்.

உடனே அவனுக்கு இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது.

இராமனும் , சீதையும் இங்கே இருந்தார்கள் என்றால் , அவர்கள் கூட வந்த இலக்குவன் என்ன ஆனான் ? அவன் எங்கே படுத்தான், எங்கே உறங்கினான் என்று கேட்டான்.

பாடல்

தூண்தர நிவந்த தோளான்
     பின்னரும் சொல்லுவான்! ‘அந்
நீண்டவன் துயின்ற சூழல்
     இதுஎனின், நிமிர்ந்த நேயம்
பூண்டவன், தொடர்ந்து பின்னே 
     போந்தவன், பொழுது நீத்தது
யான்டு?’ என, இனிது கேட்டான்;
     எயினர்கோன், இதனைச் சொன்னான்;

பொருள்

தூண்த= தூண் போல

நிவந்த = உயர்ந்த

தோளான் = தோள்களை உடைய பரதன்

பின்னரும் = மேலும்

சொல்லுவான்! = கேட்பான்

‘அந் நீண்டவன் = அந்த உயர்ந்த இராமன்

துயின்ற = தூங்கிய

சூழல் = இடம்

இதுஎனின் = இது என்றால்

நிமிர்ந்த நேயம் = உயர்ந்த அன்பு

பூண்டவன் = கொண்ட இலக்குவன்

தொடர்ந்து = தொடர்ந்து

பின்னே - பின்னே

போந்தவன் = சென்றவன்

பொழுது நீத்தது = பொழுது நீக்கியது (உறங்கியது)

யான்டு?’ என,= எப்படி என்று

இனிது கேட்டான் = இனிமையாகக் கேட்டான்

எயினர்கோன், = வேடர் குலத்தலைவன்

இதனைச் சொன்னான் = இதைச் சொன்னான்

இராமனும் சீதையும் துன்பப்பட்டது ஒரு புறம் இருக்க. இலக்குவன் எவ்வளவு துன்பப் பட்டிருப்பான் என்று பரதன் பதறுகிறான்.

இராமாயணத்தை படித்துக் கொண்டே போகும் போது , இராமனும் சீதையும் பட்ட  துன்பங்கள் , தவிப்புகள் தான் நமக்குத் தெரியும்.

இலக்குவனும், அவன் மனைவி ஊர்மிளையும் பட்ட துன்பங்கள் தெரியாது. கதைப் போக்கில்  அது மறந்து போய் விடுகிறது.

குறிப்பாக கேட்கிறான் பரதன்.

ஒரு வீட்டில் ஆணோ அல்லது பெண்ணையோ சாதிக்கிறார்கள் என்றால் , அந்த சாதனைக்குப் பின்னால் மற்றவர்களின் தியாகங்கள் நிறைய இருக்கும்.


ஒரு நிறுவனம் வெற்றிகரமாக செயல் படுகிறது என்றால் அதன் தலைவர் மட்டும்  காரணம் இல்லை. அதில் உள்ள ஒவ்வொரு ஊழியனும் அந்த வெற்றிக்கு தங்கள் பங்களிப்பை அளித்து இருக்கிறார்கள். அவர்களின் தியாகங்களும்  காரணம். அதை அந்த நிறுவனத்தின் தலைவர் உணர வேண்டும்.

கணவனின் வெற்றிக்குப் பின்னால் மனைவியும், மனைவியின் வெற்றிக்குப் பின்னால்  கணவனும், பிள்ளைகளின் வெற்றிக்குப் பின்னால் பெற்றோரும் இருப்பார்கள்.

பரதனிடம் பெற்ற பாடம்.



Thursday, February 9, 2017

தேவாரம் - என்று வந்தாய் என்னும் எம்பெருமான்

தேவாரம் - என்று வந்தாய் என்னும் எம்பெருமான்


ரொம்ப நாள் கழித்து யாராவது நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் வீட்டுக்குப் போனால் "என்னப்பா ஆளையே காணோம். இப்பத்தான் என் நெனப்பு வந்துச்சா " என்று கேட்பார்கள் அல்லவா....

அது போல

நீண்ட நாள் கழித்து நாவுக்கரசர் சிதம்பரத்தில் உள்ள சிவ பெருமானை தரிசிக்கப் போகிறார்.

அங்கே சிவன் ஆடிய கோலத்தில் கையை அபிநயம் பிடித்தப்பிடி இருக்கிறார்.

அதைப் பார்த்த நாவுக்கரசருக்கு  "எப்ப வந்தாய் " என்று கேட்பது போல இருந்ததாம்....

பாடல்

ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனம் இல்லை
கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்கா
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.

பொருள்

ஒன்றி இருந்து = மனம் வாக்கு காயம் என இவை எல்லாம் ஒன்றாக இருந்து

நினைமின்கள் = நினையுங்கள்

உம் தமக்கு =உங்களுக்கு

ஊனம் இல்லை = குறை இல்லை

கன்றிய = சினந்த

காலனைக் = எமனை

காலால் கடிந்தான் =காலால் எட்டி விலக்கினான்

அடியவற்கா = அடியவனான மார்கண்டேயனுக்காக

சென்று தொழுமின்கள் = அவனை சென்று தொழுங்கள்

தில்லையுள் = தில்லையுள்

சிற்றம்பலத்து =சிற்றம்பலத்தில்

நட்டம் = நடனம் புரியும்

என்று வந்தாய் என்னும் = என்று வந்தாய் என்று கேட்கும்

எம்பெருமான் = எம்பெருமானாகிய சிவனின்

தன் திருக்குறிப்பே = சைகையே


ஒன்றி இருந்து நினைமின்கள் - மனமும் உடலும் ஒன்றாக இருக்க வேண்டும். எங்கே முடிகிறது. கண்ணை மூடினால் ஆயிரம் சிந்தனைகள். அலையும் மனதை நிறுத்தி ஒருமுகப் படுத்த வேண்டும்.

காலால் கடிந்தான் - கடிதல் என்ற சொல்லுக்கு கண்டித்தல் , விலக்குதல் , ஓட்டுதல் என்று  பொருள்.

காலனை காலால் ஓட்டினான் என்ற தொடருக்கு எமனை எட்டி உதைத்தார் என்று பொருள்  கொள்ளக் கூடாது. எமன் என்ன தவறு செய்தான் ? காலம் முடிந்த ஒருவனின் உயிரை எடுப்பது அவனுக்கு இடப்பட்ட வேலை. கடமை.  அதைத்தானே  அவன் செய்தான். கடமையை செய்ததற்காக அவனை தண்டிக்கலாமா ? அதுவும் பல பேர் அறிய எட்டி உதைக்கலாமா ?

அது அல்ல பொருள்.

சைவ சித்தாந்தம் 36 தத்துவங்களை கூறுகிறது. அதில் காலம் என்பது ஒரு தத்துவம். மார்கண்டேயர் யோக மார்கத்தில் கால தத்துவத்தை கடந்து  சென்று விட்டார்.  "இரவும் பகலும் அற்ற வெளிக்கு " சென்று விட்டார்.  இதை அறியாத எமன் அவர் ஏதோ 16 வயது முடிந்து விட்டது என்று அவருடைய உயிரை எடுக்கச்  சென்றார். கால தத்துவத்துக்கு உட்பட்டவர்கள் உயிரை எடுப்பதுதான் அவனுக்கு இட்ட வேலை.  காலத்தை தாண்டிய மார்கண்டேயர் போன்ற யோகிகளின் உயிரை பறிக்க முயன்றது அவன் தவறு.

சரி. எமன் தவறு செய்த்ததாகவே  இருக்கட்டும். அதற்காக அவனை எட்டி உதைப்பதா ?

ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ள  வேண்டும். சமய இலக்கியங்கள் இறைவனின் திருவடி என்று சொல்லுவது ஞானத்தை.

'திருவடிகளைத் தருவாய் " என்றால் ஞானத்தை தருவாய் என்று பொருள்.


நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வைத்து என்பார் அபிராமி பட்டர்.

ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் 
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும் 
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட 
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.

என்பது அபிராமி அந்தாதி.

இறைவன் திருவடி தீண்டப் பெறுவதற்கு திருவடி தீட்சை என்று பெயர்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இறைவனின் சிலை நாவுக்கரசரைப் பார்த்து "எப்போது வந்தாய்" என்று கேட்பது போல இருந்ததாம்.

என்னிடம் வர ஏன் இவ்வளவு நாள் ? முதலிலேயே வரவேண்டியது தானே என்று கேட்பது போல இருந்ததாம்.

உடலில் வலு இருக்கும் போது , மனதில் உறுதி இருக்கும் போது , இரத்தம் சூடாக இருக்கும் போது மனிதன் இறைவனை நினைப்பது இல்லை.

தோல்விகள் துரத்தும் போது , வாழ்வின் நிகழ்வுகள் தன்னுடைய சக்தியை தாண்டி  நிகழும் போது , மனிதன் இறைவனை நோக்கி ஓடுகிறான்.

இறைவன் காத்து   இருக்கிறான்.

நீங்கள் எப்போது வருவீர்கள் என்று.





Wednesday, February 8, 2017

முத்தொள்ளாயிரம் - யானையே , பைய நட

முத்தொள்ளாயிரம் - யானையே , பைய நட


பாண்டிய மன்னன் மேல் அவளுக்கு காதல். அவ்வப்போது பாண்டியன் நகர் வலம்  வருவான். அப்போது அவனை பார்த்து இரசிப்பாள் அவள்.  சாதாரணப் பெண். மன்னன் மேல் காதல் கொண்டாள் . நேரில் சென்று பேசவா முடியும் ? வெளியில் சொல்லவா முடியும்.

பாண்டியன் அமர்ந்து வரும் பெண் யானையிடம் சொல்லுகிறாள்....

"ஏய் , யானையே...உனக்கு என்ன  அவசரம்.ஏன் இவ்வளவு வேக வேகமாக போகிறாய். ஒரு பெண்ணா , இலட்சணமா மெல்ல நடந்து போகக் கூடாது ? இப்படி விசுக் விசுக்கென்று வேகமாக நடந்து போனால் , பாக்குறவங்க நீ ஒரு பெண் தானா என்று சந்தேகப்  படுவார்கள்.மெல்லமா நடந்து போ...என்ன ?"

என்று அந்த பெண் யானையிடம் மெல்ல போகச் சொல்லுகிறாள்.

அப்படி மெதுவாகப் போனால் , அவள் பாண்டியனை இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் அல்லவா ...அதுக்குத்தான்.

நேரடியா சொல்ல முடியுமா ? நாணம்.


பாடல்

எலாஅ மடப்பிடியே! எங்கூடல்க் கோமான்
புலாஅல் நெடுநல்வேல் மாறன், உலா அங்கால்ப்
பைய நடக்கவுந் தேற்றாயால் நின்பெண்மை
ஐயப் படுவ(து) உடைத்து!


பொருள்


எலாஅ மடப்பிடியே! = ஏய் , பெண் யானையே

எங்கூடல்க் = எம்முடைய கூடல் (மதுரை) மாநகரத்து

கோமான் = மன்னன்

புலாஅல் = எப்போதும் புலால் இருக்கும்

நெடுநல்வேல் = பெரிய நல்ல வேலைக் கொண்ட (அவனுடைய வேலில் எதிரிகளின் உடல் சதை ஒட்டிக் கொண்டிருக்குமாம். எப்போதும் புலால் இருக்கும் நல்ல வேல்)

மாறன் =மன்மதன்  போன்ற அழகு உடையவன்

உலா அங்கால்ப் = உலா வரும் அந்த வேளையில்

பைய = மெல்ல

நடக்கவுந் தேற்றாயால் = நடக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா

நின்பெண்மை = உன்னுடைய பெண் தன்மையை

ஐயப் படுவ(து) உடைத்து = சந்தேகப் படும்படி இருக்கிறது !


மெல்ல நடக்காமல் வேகமாக நடப்பதால் ஒரு சந்தேகம்.

ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்று சொல்வார்கள். என் மனம் உனக்குத் தெரியாததால் , நீ ஒரு ஒரு பெண் தானா என்று  சந்தேகம்.

ஒரு தலைக் காதல்தான். அதன் சோகம் தெரியாமல், நகைச் சுவையாக சொல்லும் அந்தப்  பெண் நம் கண் முன் வந்து போகிறாள்.

இலக்கியம் ஒரு கால இயந்திரம். நம்மை வேறு ஒரு கால கட்டத்துக்கு கொண்டு சென்று  விடும்.

மதுரை வீதி, மன்னன் மேல் காதல் கொண்ட சாதாரணப் பெண், அவளின் மன  ஏக்கங்கள், உலாப் போகும் மன்னன், மதுரையின் வீதிகள் எல்லாம் நம் கண்  முன்னே விரிகின்றன - இந்த நாலு  வரியில்.


Tuesday, February 7, 2017

நீதி நெறி விளக்கம் - நிலையாமை மூன்று

நீதி நெறி விளக்கம் - நிலையாமை மூன்று 


குமரகுருபரர் அருளிச் செய்தது நீதி நெறி விளக்கம். இவர் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். பிறந்து ஐந்து வருடம் வரையில் வாய் பேசாமல் இருந்ததாகவும், பின் திருச்செந்தூர் முருகன் அருளால் வாய் பேசினார் என்றும் இவரின் வரலாற்று குறிப்பு கூறுகிறது.

இவருடைய மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் கேட்க மீனாட்சியே நேரில் வந்து அவள் கழுத்தில் இருந்த மாலையை இவர் கழுத்தில் போட்டாள் என்றும் ஒரு குறிப்பு இருக்கிறது.

நீதிநெறி விளக்கம் என்ற இந்த நூல் 102 பாடல்களைக்  கொண்டது.அத்தனையும் வாழ்க்கைக்கு வழி காட்டும் அற்புதமான பாடல்கள். எளிய தமிழில் இனிமையான பாடல்கள்.

சில பாடல்களை இந்த பிளாகில் பார்ப்போம். முடிந்தால் மூல நூலைப் படித்துப் பாருங்கள். தேனினும் இனிய தமிழ் பாடல்கள்.

மனிதன் மூன்று விஷயங்களை நிரந்தரமானது என்று பிடிவாதமாக  நினைக்கிறான்.  இல்லை,அவை நிரந்தரமானவை இல்லை என்று எவ்வளவு சாட்சிகள் தந்தாலும் அனைத்தையும் மறுதலிக்கிறான்.  ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.

அவை - இளமை, செல்வம், வாழ்க்கை (உயிர்).

முடி நரைக்கிறது . பல்  விழுகிறது.தோலில் சுருக்கம்  வருகிறது. ஞாபக சக்தி குறைகிறது.  இருந்தும், ஏதோ இளமை நிலையானது என்று விடாப்பிடியாக  நினைக்கிறான். முடி கறுத்தால் அதற்கு சாயம் பூசி மறைக்கிறான். பல் விழுந்தால் அதற்கு பொய் பல் கட்டிக் கொள்கிறான். பல்லாயிரம் ஆண்டுகள் இருக்கப் போவதைப் போல நாளும் ஆடி ஓடி சாகும் வரை சொத்து சேர்கிறான். அனுபவிக்காமலே இறந்தும்  போகிறான்.

இவை நிலையானவை என்று நினைக்காமல் இருந்தால், வாழ்வு எவ்வளவோ சுகமாக இருக்கும்.

பாடல்

நீரில் குமிழி இளமை நிறை செல்வம் 
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில் 
எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே 
வழுத்தாதது எம்பிரான் மன்று


பொருள் 

நீரில் குமிழி இளமை = நீரில் தோன்றும் குமிழி போன்றது இளமை

நிறை செல்வம் நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் = நிறைகின்ற செல்வம் நீரில் தோன்றும் அலை 

நீரில் எழுத்து ஆகும் யாக்கை = நீரில் மேல் எழுத்து ஆகும் இந்த உடல் 

நமரங்காள் = நம்மவர்களே

என்னே = ஏன்

வழுத்தாதது = வாழ்த்தாதது

எம்பிரான் மன்று = இறைவன் சந்நிதியில்

இளமையை நீரின் குமிழி என்றும், செல்வத்தை நீரில் தோன்றும் அலை என்றும்,  உடலை நீர் மேல் எழுத்து என்று கூறுகிறார்.

ஏன் ?

நீர் குமிழி முதலில் சாதாரணாமாகத் தோன்றும் பின் வான வில் நிறம் காட்டி பின் உடையும். அது போல, இளமை என்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பலப் பல வண்ணம் காட்டி  மறையும்.

பெண்ணைப் பார்த்தால் அழகு. அவள் சிரித்தால் அழகு. நடந்தால் அழகு. வெட்கப் பட்டால் அழகு....என்று மயங்கும் போது தெரிய வேண்டும் இது நீர் குமிழி என்று.


செல்வம் நீர் மேல் தோன்றும் அலை. அலை மேலே எழும் பின் கீழே விழும். செல்வமும் அப்படித்தான்.  ஒரு கால கட்டத்தில் மேலே வரும், பின் சட்டென்று  மறையும். மேலே வரும்போது இப்படியே வந்து கொண்டே இருக்கும் என்று மகிழக் கூடாது.  குறையும் போதும் இப்படியே இருந்து விடும் என்றும் நினைத்து வருந்தக் கூடாது. கூடுவதும் குறைவதும் செல்வத்தின் இயல்பு.

நீர் மேல் எழுத்து உடல்.

கடற் கரையில் எழுதி வைத்தால் எந்த அலை அந்த எழுத்தை அழிக்கும் என்று  தெரியாது.  அது போலத்தான் இந்த உடலும். எந்த நேரமும் மறைந்து விடும். மரணம் என்ற  அலை அடித்துக் கொண்டே இருக்கிறது. எந்த அலை நம்மை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரியாது.

சரி,  இளமையும்,செல்வமும், உடலும் நிலை இல்லாதது.

 புரிகிறது. அதனால் என்ன ? அதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்.

நமது பெரும்பாலான கவலைகளுக்கு , துன்பங்களுக்குக் காரணம் நம் ஆணவம்.

எப்படி ?

நான் , எனது என்ற எண்ணங்கள் தான் ஆணவத்திற்கு காரணம்.

நான் பெரிய ஆள், படித்தவன்/ள் , அழகானவள் / ன் , பணக்காரன், செல்வாக்கு  உடையவன் , அதிகாரம் உடையவன் என்று நினைத்து நமது ஆணவத்தை வளர்த்துக்  கொள்கிறோம்.

என் வீடு, என்  கார்,என் வேலை, என் மனைவி, என் பிள்ளை என்று நமக்கு உரியவற்றினால் நமக்கு ஆணவம் வருகிறது.

இப்படி ஆணவம் வருவதால் அவற்றை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் , மேலும் பெருக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.  நம்மை விட மற்றவன் அதிகம்  பெற்று விடுவானோ , அவன் மனைவி என் மனைவியை விட அழகாக இருக்கிறாள்,  அவன் பிள்ளை என் பிள்ளையை நன்றாகக் படிக்கிறான்  என்ற பொறாமை வருகிறது. இருக்கிற செல்வம் , இளமை போய் விடுமோ   என்ற பயம் வருகிறது.

இப்படி ஆசை, பொறாமை, பயம் என்று பலப் பல துன்பங்களுக்கு காரணமாய் இருப்பது  இந்த ஆணவம்.

ஆணவத்திற்கு காரணம் நான் , எனது என்ற எண்ணம்.

 நான் எனது என்ற எண்ணத்திற்கு காரணம் இளமையும், செல்வமும், இந்த உடலும்.

இவை நிரந்தரமானவை என்று நினைத்தால் ஆணவம் போகும்.

ஆணவம் மறைந்தால் துன்பம்  விலகும்.

"எல்லாம் அற என்னை இழந்த நலம்" என்பார் அருணகிரி.

துன்பம் நீங்கினால் , இன்பம் தான். 

Sunday, February 5, 2017

இராமாயணம் – பரதன் குகன் – மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்

இராமாயணம் – பரதன் குகன் – மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்


பிள்ளைகள் ஒரு கால கட்டத்திற்குப் பின், வீட்டை விட்டு போய் விடுவார்கள். மேல் படிப்பு படிக்க வேண்டியோ, அல்லது வேலை நிமித்தமாகவோ அல்லது திருமணம் முடித்தோ வீட்டை விட்டு போக வேண்டியது இருக்கும்.

அவர்கள் போன பின், வீடு கொஞ்சம் வெறிச்சோடித் தான் போய் விடுகிறது.

அவர்கள் உபயோகப் படுத்திய பொருள்கள் அவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். பைன் விளையாடிய வீடியோ கேம்ஸ், அவன் பைக், சைக்கிள், புத்தகங்கள் என்று. பெண் பிள்ளையாக இருந்தால் அவளின் துணி மணிகள், அழகு சாதன பொருள்கள், புத்தகங்கள், என்று அவர்களின் பொருள்கள் எல்லாம் அவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

அந்த பொருள்களை தூக்கி வேறு எங்காவது கண் காணாத இடத்தில் வைத்து விடலாம் என்றால் அதுக்கும் மனம் வராது. சரி, அவற்றை பார்காமலாவது இருக்கலாம் என்றால் அதுக்கும் மனம் வராது.

பிள்ளை ஹாஸ்டலில் எப்படி இருக்கிறான் என்று பார்க்கப் போவோம். அங்கே ஒரு சிறிய கட்டில் இருக்கும். உட்கார கடினமாக ஒரு நாற்காலி இருக்கும். புழங்க அதிகமான இடம் ஒன்றும் இருக்காது. அடடா , பிள்ளை எப்படி இருந்தவன் இங்க வந்து இப்படி துன்பப் படுகிறானே என்று மனம் தவிக்கும். இருந்தாலும் வெளியே சொல்ல முடியாது. சொன்னால் அவனுக்கு கஷ்டமாக இருக்குமே என்று "நல்லாதான் இருக்கு " என்று ஒப்புக்குச் சொல்லி விட்டு வருவோம். 

கட்டிக் கொடுத்த பெண்ணைப் பார்க்கப் போனால் அவள் அதிகாலை எழுந்து வீட்டு வேலை செய்து கொண்டிருப்பாள். நம் வீட்டில் இருந்தவரை காலையில் சுகமாக படுத்து உறங்கி இருப்பாள். காலைத் தூக்கம் அவளுக்கு ரொம்பப்  பிடிக்கும். 

 என்ன செய்வது. வந்த இடம் அப்படி. பொறுப்புகள் அதிகம். 

எப்படி சுகமாக இருந்த பிள்ளைகள் எப்படி கஷ்டப் படுகின்றனவே என்று மனதுக்குள் அழுவோம். 

வேறு என்னதான் செய்ய முடியும் ?

பிரிவுத்    துன்பம் பெரிய துன்பம்தான்.

இராமனை பிரிந்த பரதன் , அவனைத் தேடிக் கொண்டு கங்கை கரையை அடைகிறான். அங்கே குகனின் நட்பு கிடைக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின், இராமன் இருந்த இடத்தை காட்டும் படி குகனிடம் பரதன் வேண்டுகிறான். குகனும் காட்டுகிறான். 

ஓடோடிச் சென்று இராமன் இருந்த இடத்தை காணுகிறான் பரதன். 

இராமன்  கல்லின் மேல் புற்களை பரப்பி அதன் மேல் படுத்து உறங்கி இருக்கிறான். அரண்மனையில், ஒரு சக்ரவர்த்தியின் மகன் எப்படி இருந்திருப்பான். அவன் படுக்கை எப்படி இருந்திருக்கும் ? 

இங்கே, கல்லின் மேல் புல்லைப் பரப்பி அதன் மேல் படுத்து உறங்கி இருக்கிறான். 

அதைக் கண்ட பரதன் உருகுகிறான்.  

பாடல் 

கார் எனக் கடிது சென்றான்;
     கல்லிடைப் படுத்த புல்லின்,
வார் சிலைத் தடக் கை வள்ளல்,
    வைகியபள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்;
    பருவரற்பரவை புக்கான்-
வார் மணிப் புனலால் மண்ணை
    மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்.



 பொருள் 

கார் எனக் = நீர் கொண்ட மேகம் போல 

 கடிது சென்றான் = விரைந்து சென்றான் 

கல்லிடைப் படுத்த புல்லின் = கல்லின் மேல் புல்லைப்  பரப்பி

வார் சிலைத் = நீண்ட , நேர்மையான வில்லை 

தடக் கை வள்ளல் = தன்னுடைய கையில் கொண்ட வள்ளல் 

வைகிய = தங்கிய, உறங்கிய 

பள்ளி = படுக்கையைக் 

கண்டான் = கண்டான் 

பார்மிசைப் = தரையின் மேல் 

பதைத்து = பதறி 

வீழ்ந்தான் = வீழ்ந்தான் 

பருவரல் = துன்பம் 

பரவை = கடலில் 

புக்கான் = புகுந்தான் 

வார் மணிப் புனலால் = மணி போன்ற கண்களில் இருந்து 

மண்ணை = மண்ணை 

மண்ணு நீர் = மஞ்சன நீர் 

ஆட்டும் = ஆட்டும் 

கண்ணான் = கண்களை கொண்ட பரதன் 


கார் எனக் கடிது சென்றான்... கார் மேகம் போலச் சென்றான் பரதன். பரதன் கரிய செம்மல். அதுவும் இல்லாமல், பின்னால் மண்ணை தன்னுடைய கண்ணீரால் நீராட்டினான் என்று சொல்லும் போது கார் மேகம் மழை பொழிவது நமக்கு நினைவுக்கு வரும். 

வைகியபள்ளி கண்டான்.... வைகுதல் என்றால் இருத்தல். "உண் " என்றால் ஒன்று படுதல். சேர்ந்து இருந்தல் என்று பொருள். "அம் " விகுதி. 

வை + உண்  + தம் = வைகுண்டம்.  

ஒன்று பட்டு இருத்தல். 

அது இருக்கட்டும் ஒரு புறம்..

நமக்கு ஒரு துன்பம் வந்தால் நாம் எவ்வளவு துவண்டு போகிறோம்.

உடல் நோவு, பணக் கஷ்டம், பிள்ளைகள் படிப்பு என்று எவ்வளவோ கவலைப் படுகிறோம். ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு துன்பம் என்று அலுத்துக் கொள்கிறோம். 

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்....

சக்கரவர்த்தி திருமகன் இராமன், எல்லாம் இழந்து  காட்டில் வந்து பாறையின் மேல் புல்லை பரப்பி அதன் மேல் படுத்து உறங்கி இருக்கிறான். நம்மால் ஒரு நாள் மெத்தை இல்லாமல் படுக்க முடியுமா ? 

ஒரு நாள் வீடு வேலை செய்யும் பெண் வரவில்லை என்றால் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. இராமனுக்கு அரண்மனையில் எவ்வளவு பணியாட்கள் இருந்திருப்பார்கள். காட்டில் ? 

துன்பம் வரும். அதுவும் வாழ்வில் ஒரு பகுதி.  அந்த அனுபவத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். இராமனின் துன்பத்தை விடவா நம் துன்பம் பெரியது ? 

எல்லாம் பழகிக் கொள்ள வேண்டியதுதான். 

கல்லின் மேல் இராமன் படுத்து இருந்தது மட்டும் அல்ல பரதனின் கவலைக்கு காரணம்.... பின் ?