Tuesday, February 14, 2017

இராமாயணம் - பரதன் குகன் - தொடர்ந்து பின்னே போனவன்

இராமாயணம் - பரதன் குகன் - தொடர்ந்து பின்னே போனவன் 


நாம் யாரையாவது பார்த்தால் , 'நீ எப்படி இருக்க ' என்று கேட்போம். அதையே கொஞ்சம் நீட்டி "வீட்ல எப்படி இருக்காங்க, பிள்ளைங்க எல்லா நல்லா இருக்காங்களா ? அப்பா அம்மா எப்படி இருக்காங்க ' என்று கேட்டால் அவர்களுக்கு சந்தோஷம் அதிகம் ஆகும்.

இராமன் எங்கே இருந்தான், எங்கே படுத்தான் என்று குகனிடம் கேட்டு அறிந்த பரதன் அந்த இடத்தையெல்லாம் பார்த்து கண்ணீர் விட்டான். என்னால் அல்லவா இராமன் இந்த துன்பங்களை அடைந்தான் என்று எண்ணி வருந்தினான்.

உடனே அவனுக்கு இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது.

இராமனும் , சீதையும் இங்கே இருந்தார்கள் என்றால் , அவர்கள் கூட வந்த இலக்குவன் என்ன ஆனான் ? அவன் எங்கே படுத்தான், எங்கே உறங்கினான் என்று கேட்டான்.

பாடல்

தூண்தர நிவந்த தோளான்
     பின்னரும் சொல்லுவான்! ‘அந்
நீண்டவன் துயின்ற சூழல்
     இதுஎனின், நிமிர்ந்த நேயம்
பூண்டவன், தொடர்ந்து பின்னே 
     போந்தவன், பொழுது நீத்தது
யான்டு?’ என, இனிது கேட்டான்;
     எயினர்கோன், இதனைச் சொன்னான்;

பொருள்

தூண்த= தூண் போல

நிவந்த = உயர்ந்த

தோளான் = தோள்களை உடைய பரதன்

பின்னரும் = மேலும்

சொல்லுவான்! = கேட்பான்

‘அந் நீண்டவன் = அந்த உயர்ந்த இராமன்

துயின்ற = தூங்கிய

சூழல் = இடம்

இதுஎனின் = இது என்றால்

நிமிர்ந்த நேயம் = உயர்ந்த அன்பு

பூண்டவன் = கொண்ட இலக்குவன்

தொடர்ந்து = தொடர்ந்து

பின்னே - பின்னே

போந்தவன் = சென்றவன்

பொழுது நீத்தது = பொழுது நீக்கியது (உறங்கியது)

யான்டு?’ என,= எப்படி என்று

இனிது கேட்டான் = இனிமையாகக் கேட்டான்

எயினர்கோன், = வேடர் குலத்தலைவன்

இதனைச் சொன்னான் = இதைச் சொன்னான்

இராமனும் சீதையும் துன்பப்பட்டது ஒரு புறம் இருக்க. இலக்குவன் எவ்வளவு துன்பப் பட்டிருப்பான் என்று பரதன் பதறுகிறான்.

இராமாயணத்தை படித்துக் கொண்டே போகும் போது , இராமனும் சீதையும் பட்ட  துன்பங்கள் , தவிப்புகள் தான் நமக்குத் தெரியும்.

இலக்குவனும், அவன் மனைவி ஊர்மிளையும் பட்ட துன்பங்கள் தெரியாது. கதைப் போக்கில்  அது மறந்து போய் விடுகிறது.

குறிப்பாக கேட்கிறான் பரதன்.

ஒரு வீட்டில் ஆணோ அல்லது பெண்ணையோ சாதிக்கிறார்கள் என்றால் , அந்த சாதனைக்குப் பின்னால் மற்றவர்களின் தியாகங்கள் நிறைய இருக்கும்.


ஒரு நிறுவனம் வெற்றிகரமாக செயல் படுகிறது என்றால் அதன் தலைவர் மட்டும்  காரணம் இல்லை. அதில் உள்ள ஒவ்வொரு ஊழியனும் அந்த வெற்றிக்கு தங்கள் பங்களிப்பை அளித்து இருக்கிறார்கள். அவர்களின் தியாகங்களும்  காரணம். அதை அந்த நிறுவனத்தின் தலைவர் உணர வேண்டும்.

கணவனின் வெற்றிக்குப் பின்னால் மனைவியும், மனைவியின் வெற்றிக்குப் பின்னால்  கணவனும், பிள்ளைகளின் வெற்றிக்குப் பின்னால் பெற்றோரும் இருப்பார்கள்.

பரதனிடம் பெற்ற பாடம்.



No comments:

Post a Comment