Monday, June 5, 2017

திருவாசகம் - கர மலர் மொட்டித்து, இருதயம் மலர

திருவாசகம் - கர மலர் மொட்டித்து, இருதயம் மலர


நமது உடலில் இரண்டு தாமரை மலர்கள் உண்டு. ஒன்று மலரும் போது ,மற்றது கூம்பும்.

நமது கைகள் ஒரு மலர். நம் இதயம் இன்னொரு மலர்.

இரண்டு கைகளையும் சேர்த்து , குவித்து வைத்தால் தாமரை மொட்டு போல இருக்கும். அப்படி உள்ளன்போடு வணங்கும் போது , உள்ளத் தாமரை மலரும்.

அதற்கு மாறாக,

எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும் என்று இரண்டு கைகளையும் விரித்து பிச்சை ஏற்பவனின் உள்ளத் தாமரை கூம்பும்.

தாய்மார்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது சோற்றை கை நுனிக்கு கொண்டு வந்து, மலர் மொட்டு போல கூம்பி , குழந்தையின் வாயில் தருவார்கள். அந்தத் தாயிடம் கேட்டுப் பாருங்கள், அந்த நொடியில் அவர்கள் மனம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று.

மணிவாசகர் சொல்கிறார்

"கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,"

கரமாகிய மலர் மொட்டுப் போல ஆகி, இருதய தாமரை மலர என்கிறார்.

போற்றித் திரு அகவல்.

இறைவன் தனக்குத் தந்த நன்மைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கிறார். பதிலுக்கு தான் ஒன்றுமே செய்யவில்லையே என்று வருந்துகிறார். ஒரு பக்கம் நன்றியில் மனம் நெகிழ்கிறது. மறு புறம் , தான் ஒன்றுமே செய்யவில்லையே என்ற ஆதங்கத்தில் மனம் வருந்துகிறது.

மணிவாசகர் குழைகிறார்.

பாடல்


தப்பாமே, தாம் பிடித்தது சலியா,
தழல் அது கண்ட மெழுகு அது போல,
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
`கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும்
படியே ஆகி, நல் இடை அறா அன்பின்,
பசு மரத்து ஆணி அறைந்தால் போல,
கசிவது பெருகி, கடல் என மறுகி,
அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து,
சகம் `பேய்' என்று தம்மைச் சிரிப்ப,
நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை
பூண் அதுவாக, கோணுதல் இன்றி,
சதிர் இழந்து, அறி மால் கொண்டு, சாரும்
கதியது பரம அதிசயம் ஆக,
கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்,
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது,
அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து,
குருபரன் ஆகி, அருளிய பெருமையை,
சிறுமை என்று இகழாதே, திருவடி இணையை,
பிறிவினை அறியா நிழல் அது போல,
முன் பின் ஆகி, முனியாது, அத் திசை
என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,
அன்பு எனும் ஆறு கரை அது புரள,
நன் புலன் ஒன்றி, `நாத' என்று அரற்றி,
உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்ப,
கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,
கண் களி கூர, நுண் துளி அரும்ப,
சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர்
தாயே ஆகி, வளர்த்தனை போற்றி!


பொருள் 

தப்பாமே = விடாமல்

தாம் பிடித்தது சலியா = தான் பிடித்த கொள்கையில் இருந்து விலகாமல்

தழல் அது கண்ட மெழுகு அது போல = தீயில் விழுந்த மெழுகு போல

தொழுது = வணங்கி

உளம் உருகி = உள்ளம் உருகி

அழுது = அழுது

உடல் கம்பித்து =  உடல் நடுங்கி

ஆடியும் = ஆடி

அலறியும் = அலறி

பாடியும் = பாடி

பரவியும் = போற்றி

`கொடிறும், பேதையும், கொண்டது விடாது' எனும் = இது ஒரு பழ மொழி. கொடிறு என்பது குறடா போன்ற சாதனம். வீட்டில் சூடான பொருள்களை அடுப்பில் இருந்து இறக்க பயன் படுத்துவோமே , கிடுக்கி என்று சொல்லுவார்கள். அதுவும் , முட்டாளும் பிடித்ததை விட மாட்டார்கள்.  என்பது போல

படியே ஆகி = அப்படியே ஆகி

நல் இடை அறா அன்பின் = நல்ல , இடை விடாத அன்பின்

பசு மரத்து ஆணி அறைந்தால் போல = பச்சை மரத்தில் ஆணி அடித்தால் எப்படி இறுக பற்றிக் கொள்ளுமோ அது போல பற்றி

கசிவது பெருகி = கண்ணீர் பெருகி

கடல் என மறுகி = கடல் அலை போல அங்கும் இங்கும் அலைந்து

அகம் குழைந்து = உள்ளம் குழைந்து

அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து = அதற்கு ஏற்ப உடல் நடுங்கி

சகம் `பேய்' என்று தம்மைச் சிரிப்ப = ஊரில் உள்ளவர்கள் (சகம் ) எல்லாம் என்ன இவன் இப்படி பேய் போல அலைகிறானே என்று சொல்லும் படி

நாண் அது ஒழிந்து = அதற்காக வெட்கப் படாமல்

நாடவர் பழித்துரை = நாட்டில் உள்ளவர்களின் பழிச் சொற்களையே

பூண் அதுவாக = அணிகலனாக கோட்னு

கோணுதல் இன்றி = குறைவு இன்றி

சதிர் இழந்து = திறமை இழந்து

அறியாமல் கொண்டு  சாரும் = தன்னை அறியாமல் கொண்டு போய் சேர்க்கும்

கதியது = உயர்ந்த கதியான அது

பரம அதிசயம் ஆக = பெரிய அதிசயமாக ,

கற்றா மனம் எனக் கதறியும் = கன்றை ஈன்ற பசுவைப் போல கதறியும்

பதறியும் = பதறியும்

மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது = மற்ற வேறு ஒரு தெய்வத்தையும் கனவிலும் நினைக்காமல்

அரு பரத்து ஒருவன் = அரிய மேலான ஒருவன்

அவனியில் வந்து = உலகில் வந்து

குருபரன் ஆகி - உயர்ந்த குருவாகி

அருளிய பெருமையை = அருள் செய்த பெருமையை

சிறுமை என்று இகழாதே = சிறியது என்று இகழாமல்

திருவடி இணையை = இரண்டு திருவடிகளையும்

பிறிவினை அறியா நிழல் அது போல = உடலை விட்டு பிரிந்து அறியா நிழல் போல

முன் பின் ஆகி = முன்னும் பின்னும் ஆகி

முனியாது = கோபம் கொள்ளாமல்

அத் திசை = அந்தத் திசை நோக்கி

என்பு நைந்து உருகி = எலும்பு நைந்து உருகி

நெக்கு நெக்கு ஏங்கி = தேம்பி தேம்பி ஏங்கி

அன்பு எனும் ஆறு கரை அது புரள = அன்பென்ற ஆறு இரு கரையும் தொட்டுக் கொண்டு ஓட

நன் புலன் ஒன்றி = நல்ல புலன்கள் எல்லாம் ஒன்றாக

`நாத' என்று அரற்றி, = தலைவனே என்று அரற்றி

உரை தடுமாறி = பேச்சு தடுமாறி

உரோமம் சிலிர்ப்ப = மெய் கூச்சம் அடைந்து

கர மலர் மொட்டித்து, இருதயம் மலர = இரண்டு கரங்களும் கூப்பி, இருதயம் மலர்ந்து

கண் களி கூர, =  கண்கள் ஆனந்தத்தை வெளிப் படுத்த

நுண் துளி அரும்ப = வியர்வை அரும்ப

சாயா அன்பினை = தளராத அன்பினை

நாள்தொறும் தழைப்பவர் = தினமும் வளரச் செய்பவர்களுக்கு

தாயே ஆகி = தாய் போல இருந்து

வளர்த்தனை போற்றி! = வளர்த்தனை போற்றி

இறைவன் தாய் போல கருணை செய்வான்.

அது ஏன் தாய் போல என்றார்.  தாயன்பு உயர்ந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தும், ஏன் அது உயர்ந்தது என்று சிந்திப்போமா ?


முதலாவது, நமக்கு யாராவது துன்பம் செய்தால், அவர்களுக்கு திருப்பி துன்பம் செய்ய வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. திரும்பிச் செய்ய முடியாவிட்டாலும் , அவர்களுக்கு ஒரு கெடுதல் வர வேண்டும் என்று உள்ளத்திலாவது நினைப்பது இயல்பு.

பத்து மாதம் , படாத பாடு படுத்திய குழந்தை, சொல்லொண்ணா வலி கொடுத்து பிறந்த குழந்தையை  கண்டு ஒரு தாய் மகிழ்வாள். அந்த குழந்தையின் மேல் கோபம் கொள்ள மாட்டாள். முடியுமா ?

இரண்டாவது, ஒரு பெண் எப்போதும் அழகாக இருக்க விரும்புவாள். அவளுடைய அழகை  சிதைத்தால் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது. ஒரு பெண் அறியாமல் , அவளுடைய கூந்தலை வெட்டி விட்டால் அவள் அடையும் துன்பத்திற்கும் , கோபத்திற்கும் அளவு இருக்காது.

சூர்பனகையை மூக்கையைம், காதையும், முலையையும் அரிந்தான் இலக்குவன். அவளால் தாங்க முடியவில்லை. எந்தப் பெண்ணாலும் சகிக்க முடியாது.

ஆனால், ஒரு பிள்ளை பெறுவது என்றால் ஒரு பெண்ணின் அழகு குன்றும்.  வயிற்றில்  வரி வாரியாக தோல் சுருங்கும். உடலின் கட்டு குலையும்.

இருந்தும் அந்தப் பிள்ளையை  தாய் பாராட்டி சீராட்டி வளர்ப்பாள் .

மூன்றாவது, கருவில் இருக்கும் பிள்ளை எப்படி இருக்கும் என்று கூட தாய்க்கு தெரியாது. ஆணா , பெண்ணா என்று கூட தெரியாது. கறுப்பா , சிவப்பா, ஒல்லியா, குண்டா என்று ஒன்றும் தெரியாது. முகம் கூட தெரியாத அந்த சிசுவின் மேல் அவ்வ்ளவு அன்பு பாராட்டி தன்னுள் வளர்ப்பாள் . குழந்தைக்கு வேண்டுமே என்று  காலாகாலத்தில் உணவு உண்பாள் . குழந்தைக்கு வலிக்கும் என்று   ஒரு விதமாக படுப்பாள். அவ்வளவு வலியையும் சகித்துக் கொள்வாள்.

அது போல இறைவனை வெறுத்தாலும், இகழ்ந்தாலும் , வணங்கா விட்டாலும் அவன் அருள் செய்வான் , ஒரு தாயைப் போல என்கிறார் மணிவாசகர்.

குழந்தைக்குத் தெரியாது தாய் தனக்கு எவ்வளவு உதவி செய்கிறாள் என்று. வயிற்றில் எட்டி உதைக்கும். அதையும் மகிழ்வோடு ஏற்றுக் கொள்வாள் ஒரு தாய்.


அந்த கருணையை நினைத்து உருகுகிறார் மணிவாசகர். 

Thursday, June 1, 2017

இராமாயணம் - அப்பா சொன்னா சரியாத்தான் இருக்கும்

இராமாயணம் - அப்பா சொன்னா சரியாத்தான் இருக்கும் 


அரசை நீ ஏற்றுக் கொள் என்று இராமனிடம் பரதன் சொல்கிறான். அதை மறுத்துச் சொல்கிறான் இராமன்.

மிக மிக முக்கியமான கட்டம்.


அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் அரசின் மேல் ஆசை இல்லை. ஆனால், எது சரியோ அதைச் செய்ய வேண்டும் என்பதில் இருவரும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

தந்தை சொல் கேட்க வேண்டும் என்பது இராமனின் வாதம்.

யார் என்ன சொன்னாலும், அறம் தான் முக்கியம். அதற்கு எதிராக யார் சொன்னாலும் அதை கேட்கக் கூடாது என்பது பரதனின் வாதம்.

இங்கே இராமன் வாதத்தைத் தொடங்குகிறான்....அண்ணன் தம்பிக்குள் நடக்கும் வாதத்தைப் பார்ப்போம். எது சரியான வழி என்று நமக்கு ஒரு தெளிவு பிறக்கும்.

"சரியான வழியும், உண்மையும், நீதியும், மேலான அறமும் இவை யாவும் எல்லாம் படித்த தந்தை சொல்லில் அடங்கும் " என்கிறான் இராமன்.


பாடல்

‘முறையும் வாய்மையும் முயலும் நீதியும்
அறையும் மேன்மையோடு அறனும் ஆதியாம்
துறையுள் யாவையும் சுருதி நூல் விடா
இறைவர் ஏவலால் இயைவ காண்டியால்.


பொருள் 


முறையும் = ஒழுக்கமும்

வாய்மையும் = உண்மையும்

முயலும் நீதியும் = அடைய நினைக்கும் நீதியும்.

அறையும் = சொல்லப் படும்

மேன்மையோடு அறனும் = மேலான அறங்களும்

ஆதியாம் துறையுள் = தொன்மையான வழிகள்

யாவையும் = அனைத்தும்

சுருதி நூல் விடா = வேத நெறிகளை விட்டு விலகாத

இறைவர் = அரசர் (தயரதன்)

ஏவலால் = செய்யச் சொன்ன செயல்களால்

இயைவ காண்டியால் = சேர்ந்திருக்க காண் .


இராமானுக்குத் தெரியும் , பரதன் நீதி, நேர்மை, அரம் , அரச குல வழக்கம் என்று எல்லாவற்றையும் சொல்லப் போகிறான் என்று. அதற்கு முன்பே, சொல்லி விடுகிறான், அவை எல்லாம் தயரதன் சொன்ன சொல்லில் இருக்கிறது என்று.

தயரதனுக்குத் தெரியாத, அவன் அனைத்தையும் அறிந்தவன் எனவே அவன் சொல்லில் எல்லாம் அடங்கி இருக்கிறது என்கிறான் இராமன்.

புத்தக அறிவா, சான்றோர் சொல்லும் மொழிகளா - எதை கடை பிடிக்க வேண்டும் ?

தந்தையும் , ஆசிரியரும் சொல்லவதை கேட்பதா அல்லது தான் படித்து அறிந்தவற்றை பின் பற்ற வேண்டுமா ?

விடை வருகிறது....


Monday, May 29, 2017

இராமாயணம் - கவிதையும் ஆறும்

இராமாயணம் - கவிதையும் ஆறும் 


கவிதை என்பது ஒரு ஆறு போல இருக்க வேண்டும் என்கிறார் கம்பர்.

இன்று யார் யாரோ கவிதை எழுதுகிறார்கள்.  கவிதை எழுத முதல் தகுதி காதல் தோல்வி என்று வைத்திருக்கிறார்கள்.

எப்படி ஆறு இருக்கிறதோ அது போல கவிதை இருக்க வேண்டும் என்கிறார்.

ஆறு எப்படி இருக்கும் ?

பாடல்

புவியினுக்கு அணியாய்,ஆன்ற பொருள்தந்து,புலத்திற்றாகி
அவி அகத் துறைகள் தாங்கி,ஐந்திணை நெறி அளாவி
சவி உறத் தெளிந்து ,தண்ணென்று,ஒழுக்கமும் தழுவிச்
சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்’’

பொருள்


புவியினுக்கு அணியாய் = நிலமகள் கழுத்தில் கிடக்கும் ஒரு சங்கிலி போல, இடுப்பில் உள்ள ஒரு ஒட்டியாணம் போல அணிகலனாக

ஆன்ற பொருள்தந்து = வரும் வழியில் உள்ள நல்ல பொருள்களை எல்லாம் ஏந்தி கொண்டு வந்து

புலத்திற்றாகி = புலன்களையும் தாண்டி மகிழ்ச்சி தருவதை போல

அவி அகத் துறைகள் தாங்கி =  மனதுக்கு குளிர்ச்சி தந்து

ஐந்திணை நெறி அளாவி = ஐந்து திணைகளையும் தொட்டுக் கொண்டு

சவி உறத் தெளிந்து = தெளிந்த நீரோடையாக

தண்ணென்று = குளிர்ந்து

ஒழுக்கமும் தழுவிச் = கரைகளுக்குள், ஒரு கட்டுப்பாட்டோடு

சான்றோர் கவி எனக் = பெரியவர்கள் சொன்ன கவிதை போல

கிடந்த = சென்ற

கோதாவரியினை = கோதாவரி  ஆற்றினை

வீரர் கண்டார் = வீரர்களான இராமனும் இலக்குவனும் கண்டார்கள்

அவ்வளவுதானா ?

ஆழ்ந்து சிந்திப்போமா ?

ஆற்றினை பார்த்து இருக்கிறீர்களா ?

அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும். இரண்டு அடி எடுத்து வைத்தால் சில் என்று இருக்கும். கரையில் ஆழம் இல்லை என்று இன்னும் கொஞ்சம் உள்ளே போனால், திடீரென்று ஆழமாக இருக்கும். இழுத்து விடும்.  நதியின் ஆழம் எவ்வளவு என்று  மேல் இருந்து பார்த்து சொல்ல முடியாது.

சில கவிதைகள் அப்படித்தான். பார்க்க ஏதோ மேலோட்டமாக சாதாரண கவிதை போல இருக்கும். உள்ளே போக போக இழுத்துக் கொண்டே போகும். அவ்வளவு  பொருள் ஆழம் இருக்கும்.

ஆறு மலையில் இருந்து வரும் போது வரும் வழியில் உள்ள பல மலர்கள் அதன் மேல் விழும். அத்தனை மலர்களையும் சுமந்து வரும். சந்தனம் போன்ற  மரத்தை உரசிக் கொண்டு வருவதால் அந்த மணமும் சேர்ந்து இருக்கும்.

தள்ளி நின்று பார்த்தால் மிதக்கும் பூ தெரியும். நீரில் இறங்கினால் தான் மணம் புரியும்.

கவிதையும் அப்படித்தான். சும்மா வாசித்துக் கொண்டு போனால் ஏதோ அழகு தெரியும். உள்ளே இறங்கி அனுபவிக்கும் போது தான் அதன் மணம் புரியும்.

"புவியினுக்கு அணியாய்"  ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் ஆறு ஏதோ  ஒரு அணிகலன் போல வளைந்து நெளிந்து மின்னும்.

அது போல கவிதை என்பது வாழ்க்கைக்கு ஒரு அணிகலன் போல அழகு சேர்க்க வேண்டும்.


"புலத்திற்றாகி" - புலத்து + இற்று + ஆகி

புலன்களை கடந்து செல்ல வேண்டும். ஏதோ கிளர்ச்சிக்கு மட்டும் பாடல் இருக்கக் கூடாது. ஆற்றில் குளித்தால் புலன்களுக்கு இன்பம் தருவது மட்டும் அல்ல, ஒரு மன நிறைவும் இருக்கும். அது போல ஒரு பாடலைப் படித்தால் மன நிறைவு இருக்க வேண்டும்.

"அகத் துறைகள் தாங்கி" - ஆறு என்பது உயிர் வாழ உதவுகிறது.  உணவு அளிக்கிறது.  ஆறு எப்படி உயிரை தாங்கிப் பிடிக்கிறதோ, அது போல கவிதையும் உள் மனதை தாங்கிப் பிடிக்க வேண்டும். .துக்கம் வந்த நேரத்தில், சோகம் வரும் போது , மனம் சோர்வு அடையும் போது அதை தாங்கிப் பிடிக்க வேண்டும்.  நல்ல கவிதை என்பது மனதுக்கு ஆறுதல் தரும். அகத்துறை என்பது ஆண் பெண் சேர்ந்து வாழும் இல்லற வாழ்க்கை. அதை தாங்கிப் பிடிக்க வேண்டும். துறை என்றால் கரை என்றும் பொருள்.

ஐந்திணை நெறி அளாவி = ஆறு மலை, காடு, நிலம், கடல் என்று பாய்ந்து ஓடுகிறது. ஒவ்வொரு திணைக்கும் ஒரு ஒழுக்கம் உண்டு. மனித வாழ்வின் ஒழுக்கம் அவன் இருக்கும் இடத்தைப் பொறுத்து அமைகிறது. கவிதை எல்லா வாழ்க்கை முறைகளையும் தொட்டுக் கொண்டு செல்ல வேண்டும்.


ஆறு கடைசியில் கடலைப் போய் சேரும். அது போல நல்ல கவிதையும் ஒரு ப்ரமாண்டத்ததில் கலக்க வேண்டும். உண்மை, அழகு, அறம் , ஒழுக்கம் , கடவுள் , மனித நேயம் , காதல் என்று அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நம்மை விட பெரிய ஒன்றில் அது நம்மை கொண்டு சேர்க்க வேண்டும்.

சான்றோர் கவி என கிடந்த கோதாவரி என்கிறான் கம்பன்.

ஒரு கவிதையை படித்தால் இதில் உள்ளவை எத்தனை அதில் இருக்கிறது என்று பாருங்கள்.

அழகு
பொருள் செறிவு
மன நிறைவு
மன அமைதி
ஒழுக்கம், வாழ்க்கை நெறி

இதெல்லாம் கலந்திருக்க வேண்டும்.

இன்றும் வரும் புதுக் கவிதைகளையும், சினிமா பாடல்களையும் படிக்கம் போது  , நல்ல கவிதைக்கு மனம் ஏங்கத்தான் செய்கிறது.

நல்ல கவிதைகளை தேடிப் பிடித்து படியுங்கள்.


Saturday, May 27, 2017

புறநானுறு - அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்

புறநானுறு - அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்


வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் , அந்தப் பெற்றோருக்குத் தெரியும்....

என்னைக்கும் இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப் போகிறவள் தானே, இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும் என்று அந்த பெண் பிள்ளைக்கு கொஞ்சம் அதிகமாகவே அன்பு காட்டுவார்கள். அதிலும் அப்பாக்கள் ரொம்பத் தான் செல்லம் கொடுப்பார்கள்.

ஒரு பக்கம் செல்லம் கொடுத்தாலும், அம்மாவுக்கு கொஞ்சம் பயம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

போகிற இடத்தில் இந்த பெண் எப்படி சமாளிக்கப் போகிறாளோ ?  போகிற இடத்தில் இந்த சௌகரியம் எல்லாம் இருக்குமா ? இவ்வளவு சுதந்திரம் இருக்குமா ?  என்றெல்லாம் கவலைப் படுவாள். அதற்காக இப்போது இருந்தே அந்த பெண்ணை கஷ்டப் படுத்த வேண்டுமா ? அதுவும் முடியாது.

இப்போது உள்ள அம்மாக்களுக்கு இன்னொரு சிக்கலும் உண்டு. இந்த பெண் எப்படி விடுதியில் (ஹாஸ்டல்) தங்கி படிப்பாள் ? பிடித்த உணவு கிடைக்குமா ? எப்படி துணி துவைப்பாள் ? வேலைக்குப் போகிற இடத்தில் எங்கு தங்குவாள் ? எப்படி இந்த உலகை எதிர் கொள்ளுவாள் என்று பயந்து கொண்டே இருப்பார்கள்.

இந்த கவலை இன்று வந்தது அல்ல. சங்க காலம் தொட்டே இருக்கிறது.

செல்லமாக வளர்ந்த ஒரு பெண் திருமணம் ஆகி புகுந்த வீடு போகிறாள்.

போன இடம் அவ்வளவு பெரிய இடம் இல்லை. அவளின் பிறந்த வீடோ பெரிய பணக்கார வீடு. பால் சோறு தான், தங்கக் கிண்ணம் தான், பெரிய வீடு, வீட்டை அடுத்த தோட்டம் , தோட்டத்தில் மல்லிகையும், முல்லையும் பூத்து குலுங்குகிறது.

போன இடத்தில் சரியான சாப்பாடு கூட கிடையாது.

கட்டிக் கொடுத்த பெண் எப்படி இருக்கிறாள் என்று பார்த்து வர செவிலித் தாய் போகிறாள்.

அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

இந்தப் பெண் நம் வீட்டில் இருக்கும் போது தேனும் பாலும் கலந்த உணவை பொற் கிண்ணத்தில் ஏந்தி சாப்பிடு சாப்பிடு என்று பூ சுற்றிய குச்சியை வைத்து அவளை விரட்டிக் கொண்டு சென்றோம், பொற் சிலம்பு ஒலிக்க அங்கும் இங்கும்  பூ பந்தலுக்கு கீழே ஓடுவாள். சரியான விளையாட்டுப் பெண்ணாக இருந்தாள் . நீரோடும் இடத்தில் பரல் கற்கள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் நீர் சோறுதான் இருக்கிறது. அது கூட மூன்று  வேளையும் இல்லை. ஒரு பொழுது விட்டு ஒரு பொழுது உண்கிறாள். அப்போது கூட தந்தை வீட்டில் இருந்த செல்வச் செழுமையை நினைத்து வருந்தவில்லை. இந்த அறிவையும், கற்பையும் இவள் எங்கு கற்றுக் கொண்டாள் என்று அந்த செவிலித் தாய் வியக்கிறாள். பாடல்
   


பாடல்

பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று 5
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்
கொண்ட கொழுநன் குடி வறன்_உற்று என 10
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே

பொருள்

பிரசம் கலந்த = தேன் கலந்த

வெண் சுவை = சிறந்த சுவை உடைய

தீம் பால்  = சிறந்த பாலினால் செய்த உணவை

விரி கதிர் = ஒளி விடும்

பொன் கலத்து = பொன்னால் செய்த ஒரு பாத்திரத்தில்

ஒரு கை ஏந்தி = ஒரு கையில் ஏந்திக் கொண்டு

புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல் = ஒரு சிறிய குச்சியில், பூவை சுற்றி, அவளை அந்த கோலால் அடிப்பது போல விரட்டி

உண் என்று = சாப்பிடு என்று மிரட்டி

ஓக்குபு பிழைப்ப = ஓங்கி கொண்டு சென்றாலும், தப்பி ஓடிய அவள்

தெண் நீர் = தெளிந்த நீர் போல

முத்து அரி = முத்துக்கள் கொண்ட

பொன் சிலம்பு ஒலிப்ப = பொன்னால் செய்யப்பட்ட சிலம்பு ஒலிக்க  

தத்து_உற்று = தத்தி தத்தி ஓடி

அரி நரை கூந்தல் = அங்கொன்றும் இங்கொன்றுமாக நரைத்த கூந்தல்

செம் முது செவிலியர் = சிறந்த செவிலித்தாயார்

பரி மெலிந்து ஒழிய = பற்ற முடியாமல் 

பந்தர் ஓடி = பந்தலின் கீழ் ஓடி

ஏவல் மறுக்கும் = சொன்னதைக் கேட்க மறுக்கும்

சிறு விளையாட்டி = விளையாட்டுப் பெண்

அறிவும் ஒழுக்கமும் = அறிவும் ஒழுக்கமும்

யாண்டு உணர்ந்தனள்-கொல்  = எப்போது பெற்றாள்

கொண்ட கொழுநன் = கொண்ட கணவன்

குடி வறன்_உற்று என = குடும்பம் வறுமையில் உள்ள போது

கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் = தன் தந்தை வீட்டில் கிடைத்த சிறந்த உணவினை நினைக்க மாட்டாள்

ஒழுகு நீர்= ஆற்றில் செல்லும் நீரில் (ஒழுங்கு நீர் = ஒழுங்காக செல்லும் நீர்)

நுணங்கு அறல் போல = மெல்லிய சிறு சிறு கூழான் கற்களைப் போல

பொழுது மறுத்து உண்ணும்  = ஒரு வேளை விட்டு மறு வேளை உண்ணும்

சிறு மதுகையளே =சிறிய இனிய    கைகளைக் கொண்டவளே


பெண்ணைப் பெற்ற அம்மாக்களே, கவலைப் படாதீர்கள். உங்கள் பெண்  எந்த சிக்கலையும் எதிர் கொண்டு சமாளிப்பாள். நீங்கள் சமாளிக்கவில்லையா ? வழி வழியாக இப்படித்தானே செய்து கொண்டு  வந்து இருக்கிறீர்கள். கவலைப் படாதீர்கள். விளையாட்டுப் பெண்ணாக இருக்கும் உங்கள் மகள் , அது விடுதியாக இருந்தாலும் சரி, வேலைக்குப் போகும் இடமாக இருந்தாலும் சரி, புகுந்த வீடாக இருந்தாலும் சரி  , நல்ல படி எதிர் கொண்டு சமாளிப்பாள்.

ஐயோ, நான் அவளுக்கு ஒண்ணுமே சொல்லித் தரவில்லையே என்று பயப்படாதீர்கள். 

இந்தப் பாடலில் செவிலி வியக்கிறாள் - அறிவும்,  ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்  என்று.

எப்படி இவற்றை படித்துக் கொண்டாள் ? யார் இவளுக்குச் சொல்லித் தந்தார்கள் ? நானோ அவளின் தாயோ சொல்லித் தரவில்லை. தானே கற்றுக் கொண்டு விட்டாளே என்று வியக்கிறாள்.

அது தான் பெண்.

மகா சக்தி.  அவள் அனைத்தும் நடத்துவாள். கவலையை விடுங்கள். 

Thursday, May 25, 2017

திருக்குறள் - அமிழ்தின் இயன்றன தோள்

திருக்குறள் - அமிழ்தின் இயன்றன தோள் 


வெயில் காலத்தில் செடிகள் எல்லாம் வாடி நிற்பதை பார்க்கலாம். மாலை நேரத்தில் தண்ணீர் பாய்ச்சினால் அவை சிலிர்த்து கொண்டு தள தள என்று பச்சை பசேல் என்று ஒரு புத்துணர்ச்சியோடு சிரிப்பது போல இருக்கும். செடிக்கு நீர் வார்த்தவர்களுக்குத் தெரியும் அது.

கணவன் எப்போதெல்லாம் தளர்ந்து, சோர்ந்து போய் இருக்கிறானோ, அப்போது அவன் புத்துணர்ச்சி பெற அவனுடைய மனைவியின் தோள்களே அமிழ்தம் போன்றது என்கிறார் வள்ளுவர்.

பாடல்

உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலான், பேதைக்கு
அமிழ்தின் இயன்றன, தோள்.

பொருள்

உறுதோறு = உறு + தோறும் = சேரும் போது எல்லாம்

உயிர்  = உயிரானது

தளிர்ப்பத் = தளிர்க, துளிர்க்க

தீண்டலான் = தீண்டுவதால்

பேதைக்கு = எங்கே பெண்ணுக்கு , மனைவிக்கு

அமிழ்தின் = அமிழ்தில்

இயன்றன = செய்யப்பட்ட

தோள் = தோள்


காமத்துப் பால் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை சொல்ல வந்த பகுதி. ஒரு எல்லைக்கு மேல் விவரித்தால் விரசத்தின்  எல்லைக்குள் போய் விடும்.  அதற்காக சொல்லாமலும் விட முடியாது. கத்தி மேல் நடப்பது போன்ற காரியம்.

வள்ளுவரின் காமத்துப் பாலை ஒரு தந்தையும் மகளும் ஒன்றாகப் படிக்கலாம். தாயும் மகனும் ஒன்றாக இருந்து படிக்கலாம். ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களுக்குச் சொல்லித் தரலாம்.

படிக்கும் போது இன்பம் தரும். ஆனால், விரசம் என்பது ஒரு துளியும் இருக்காது.

"தளிர்ப்ப" என்ற ஒரு சொல்லுக்குள் எவ்வளவு அர்த்தங்களை வைக்கிறார் வள்ளுவர் என்று பார்ப்போம்.

செடி வாடும். நீர் வார்த்தால் தளிர்க்கும். அதற்காக இருக்கிற நீரை எல்லாம் ஒரே நாளில்  ஊற்றி விட்டு, நீ பார்த்து வளர்ந்து கொள் என்று சொல்ல முடியாது. நிதமும் கொஞ்சம் கொஞ்சம் நீர் வார்க்க வேண்டும். மனைவியின் அன்பும் அப்படித்தான். ஏதோ ஒரு நாள் சந்தோஷமாக இருந்தால் போதாது. நாளும் நீர் வார்ப்பது போல அது எப்போதும் வேண்டும்.

தளிர்த்தல் என்றால் புத்துணர்ச்சி பெறுதல் மட்டும் அல்ல. நீர் வார்த்தால், வேரின் மூலம் சத்துகளை உறிஞ்சி அந்த செடியை உரம் கொள்ளச் செய்யும். வலிமை கொள்ளச் செய்யும். செடி வளர்ந்து , மரமாகி, நிழல் தரும், காய் கனிகளை தரும். அது போல, மனைவியின் அன்பானது கணவன் வலிமை பெற உதவும். அவன் உயர்ந்து வீட்டையும், நாட்டையும் காக்க பயன் படுவான்.

நீரை வேருக்கு மட்டும் ஊற்றினால் போதும். ஆனால், செடியின் இலையின் மேல் தெளித்தால்  அது சிலிர்த்து புத்துணர்ச்சி பெரும். அது போல அன்பு என்பது ஏதோ கடைமைக்கு இருக்கக் கூடாது. செலுத்தும் அன்பினால் கணவன் முகம் மலர வேண்டும்.

உறு தோறும் என்கிறார் வள்ளுவர். ஒவ்வொரு முறை அணைக்கும் போதும் புத்துணர்ச்சி தருமாம். தவிர்க்க வைக்குமாம்.

மனைவி என்பவை அமுதுக்கு ஒப்பானவள் என்று கணவன் நினைக்க வேண்டும்.

அமுதம் எப்படி இருக்குமோ அப்படி இருக்க மனைவியும் முயற்சி செய்ய வேண்டும். அமிலம் போல, சுடு நீர் போல இருக்கக் கூடாது. சுடு நீரில் செடி தளைக்குமா ?


அமிழ்து என்பது உயிரையும் உடலையும் இணைப்பது. எப்போதும் இளமையோடு வைப்பது. மனைவியின் தோள்கள்  அமுதத்தால் செய்யப்பட்டது என்கிறார் வள்ளுவர்.

சரி, அது என்ன "தோள் " என்று சொல்கிறார். தோள்கள் என்றல்லவா இருந்திருக்க வேண்டும். ஒரு தோள் மட்டும் எப்படி அமுதில் செய்யப்பட்டதாக இருக்கும் ?

இங்கு கொஞ்சம் இலக்கணம் படிப்போம்.

பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்று தமிழ் இலக்கணத்தில் ஒன்று உண்டு.

என்ன இது ஏதோ வேற்று மொழிப் பெயர் மாதிரி இருக்கிறதா ?

தமிழில் பெயர் சொற்களை உயர் திணை , அஃறிணை என்று இரண்டாக பிரிப்பார்கள்.

பெயர் சொல்லின் இறுதி (விகுதி) பொதுவாக பால் எது என்று காட்டும்.

அவன் என்றால் அதில் உள்ள இறுதிச் சொல் 'ன்' அது அது ஆண் பால் ஒருமை என்று காட்டும்.

அவள் என்றால் பெண்பால் ஒருமை

ஒருமையா பன்மையா, ஆண்பாலா பெண்பாலா எ ன்று உயர் திணையில் அறிய வாய்ப்பு உள்ளது.

ஆனால், அஃறிணையில் அப்படி இல்லை.

அஃறிணை சொற்கள் பால் எது என்று காட்டாது.

பாலை பகராத சொற்கள் அவை.

உதாரணமாக

ஆடு வந்தது என்றால் ஒருமை
ஆடு வந்தன என்றால் பன்மை

அது ஆடு என்றால் ஒருமை
அவை ஆடு என்றால் பன்மை

வினை மற்றும் அதற்கு தொடர்புடைய சொல்லால் அவற்றின் பாலை (ஒன்றன் பாலா, பலவின் பாலா ) என்று அறிந்து கொள்ள முடியும்.

அது போல, தோள் என்பது பால் பகா அஃறிணை சொல். ஒரு தோளை மட்டும் அணைக்க முடியாது அல்லவா, அதனால் அவை தோள்கள் என்று அறியப் படும்.


















இராமாயணம் - மீண்டு அரசு செய்க

இராமாயணம் - மீண்டு அரசு செய்க 


கானகத்தில் உள்ள இராமனை காண வந்த பரதன், தயரதன் இறந்த செய்தியை கூறுகிறான். பின், "நீ வந்து ஆட்சியை ஏற்றுக் கொள் " என்று இராமனிடம் கூறுகிறான்.

"உன் தந்தையான தசரதன் செய்த தீமையும், தாயாகிய கைகேயி செய்த தீமையும் நீங்க , என் தந்தை போன்றவனே , நீ மீண்டு வந்து ஆட்சி செய் " என்று கூறுகிறான்.


பாடல்

‘உந்தை தீமையும் உலகு உறாத நோய்
தந்த தீவினைத் தாய் செய் தீமையும்
எந்தை! நீங்க மீண்டு அரசு செய்க ‘எனாச்
சிந்தை யாவதும் தெரியக் கூறினான்.

பொருள்

‘உந்தை = உன் தந்தை (தயரதன்)

தீமையும் = செய்த தீமையும்

உலகு உறாத நோய் =உலகு இது வரை பெறாத நோய்

தந்த = தந்த

தீவினைத் = தீய வினை

தாய் செய் தீமையும் =தாயாகிய கைகேயி செய்த தீமையும்

எந்தை! = என் தந்தை போன்றவனே

நீங்க  = அந்த துன்பங்கள் நீங்க

மீண்டு அரசு செய்க = இந்த கானகத்தில் இருந்து மீண்டு வந்து அரசை ஏற்று நடத்து

‘எனாச் = என்று

சிந்தை யாவதும் = சிந்தை முழுவதும்

தெரியக் கூறினான் = அறியும்படி கூறினான்


தயரதனை , "உன் தந்தை என்கிறான்" .  ஏன் என்றால், தயரதன் பரதனை தன் மகன் அல்ல என்று சொல்லி விட்டு இறந்தான். எனவே, தயரதனை தன் தந்தை என்று பரதன்  கூறவில்லை.

இராமனை , தந்தை இடத்தில் வைத்துப் பார்க்கிறான்.

தந்தையும் , தாயும் செய்தது தீமை, தீவினை என்கிறான்.

இங்கு நாம் பார்க்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று,  பெரியவர்கள் சொன்னால் அப்படியே  கேட்க வேண்டியது என்று ஒரு முறை வைத்திருக்கிறோம்.  

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

என்று பெற்றோர் என்ன சொன்னாலும் அப்படியே கேட்பது என்று ஒரு கொள்கை  வைத்து இருக்கிறோம்.

இராமன் அந்தப் பாதையில் தான் செல்கிறான்.

ஆனால், பரதன் அதில் இருந்து விலகுகிறான் .

அறம் அல்லாத ஒன்றை யார் செய்தாலும் அது தவறுதான் என்பது அவன் கொள்கை.

அறத்தின் முன், தாய், தந்தை, என்று யாரும் கிடையாது.

"உந்தை தீமையும்...தாய் செய் தீமையும்"  என்று அவர்கள் இருவரும் செய்தது பெரிய தீமை என்கிறான்.

இராமா, நீ அரசை ஏற்றுக் கொள்ளா விட்டால், அந்த தீமை தொடரும் என்ற குறிப்பில், "தாய் செய் தீமை" என்கிறான்.

செய் தீமை - வினைத் தொகை. செய்த தீமை, செய்கின்ற தீமை , செய்யும் தீமை.

அந்தத் தீமை விலக வேண்டும் என்றால், நீ மீண்டு வந்து ஆட்சி செய் என்று இராமனை அழைக்கிறான்.

யார் செய்வது சரி ?

பெற்றோர் பேச்சை கேட்ட இராமன் செய்வதா ?

யார் சொன்னால் என்ன, அறம் தான் முக்கியம் என்று செயல்படும் பரதன் செயலா ?

யோசித்துக் கொண்டிருங்கள். கம்பன் கடைசியில் தீர்வு தருகிறான்.

அது என்ன என்று வரும் நாட்களில் பார்ப்போம். 

Wednesday, May 24, 2017

திருக்குறள் - அகர முதல் எழுத்து எல்லாம்

திருக்குறள் - அகர முதல் எழுத்து எல்லாம் 



அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

முதற்றே உலகு என்பதில் உள்ள ஏகாரம் தேற்றப் பொருளில் வந்து எப்படி பொருள் தந்தது என்று நேற்றைய பிளாகில் பார்த்தோம்.

ஆதி பகவன் என்றால் என்ன என்று இன்று சிந்திப்போம்.

அதற்கு முன் கொஞ்சம் இலக்கணம்.

முதலில் ஒலி வடிவம்.

பின் ஒலியைக் குறிக்கும் எழுத்து வடிவங்கள்.

முதலில் எழுத்து.

எழுத்துகள் சேர்ந்து சொற்கள் உருவாகின்றன.

சொற்கள் சேர்ந்து வாக்கியம் உருவாகிறது.

மற்றவற்றை  விடுவோம். சொற்கள் சேர்ந்து வாக்கியம் உருவாவதைப் பற்றி சிந்திப்போம்.

இரண்டு சொற்களை சேர்க்க சில விதி முறைகள், இலக்கணங்கள் உண்டு.

வீடு காட்டும் போது இரண்டு செங்கலை வைத்தால் அவை தானாக ஒட்டிக் கொள்ளாது. அதை சேர்த்து வைக்க சிமெண்ட் அல்லது வேறு ஏதாவது ஒரு கலவை வேண்டும். அப்போது தான் அது விழுந்து விடாமல் உறுதியாக இருக்கும்.

அது போல

இரண்டு வார்த்தைகளை சேர்க்கும் சிமென்டுக்கு தொகைமொழி என்று பெயர்.

தொகுக்கும் மொழி தொகை மொழி.

புரிகிறது அல்லவா ?

தமிழிலே ஆறு வகையான தொகை மொழிகள் இருக்கின்றன.

1. வேற்றுமைத்தொகை
2. வினைத்தொகை
3. பண்புத்தொகை
4. உவமைத்தொகை
5. உம்மைத்தொகை
6. அன்மொழித்தொகை

இதில் நாம் பண்புத் தொகையை மட்டும் பார்ப்போம் .

ஒரு பொருளை அல்லது செயலை மேலும் விளக்கி கூறுவது பண்புத் தொகை.

உதாரணமாக

பச்சை இலை  என்றால் இலையின் நிறம் பச்சை என்று இலையைப் பற்றி மேலும் விலக்கிக் கூறுகிறது.

உயர்ந்த மரம்

கரிய மலை

இவை எல்லாம் பண்புத் தொகைகள்.

இதில் உள்ள பச்சை, உயர்ந்த, கருப்பு என்பவை பண்புப் பெயர்கள்.

சில சமயம் பண்புப் பெயருக்கு பதிலாக இன்னோர் பெயர்ச் சொல் வரும்.

தாமரைப் பூ
தென்னை மரம்
நாகப் பாம்பு

என்பனவற்றில் தாமரை என்ற சொல் பூவைப் பற்றி மேலும் விளக்குகிறது.

வெறும் மரம் என்று சொன்னால் என்ன மரம் என்ற கேள்வி வரும். அதை விளக்குவது தென்னை என்ற சொல். இங்கே தென்னை என்ற சொல் மரத்தின் பண்பை குறிக்கிறது. தென்னை என்பது பண்புப் பெயர் அல்ல. இருந்தும் அது பண்புப் பெயரின் வேலையைச் செய்கிறது அல்லவா.

இதற்கு இரு பெயரொட்டு பண்புத் தொகை என்று பெயர்.

இரண்டு பெயர்கள் சேர்ந்து வந்து, அதில் ஒன்று மற்றொன்றின் பண்பைக் குறிப்பது.

இருபெயரொட்டு பண்புத் தொகையை பிரிக்கக் கூடாது. அவற்றை சேர்த்தே படிக்க வேண்டும்.

சரி, அதற்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம் ?

ஆதி பகவன் என்ற சொல்லில், பகவன் என்றாலே ஆதியில் இருந்து இருப்பவன் தான். ஆதி என்றாலே அது இறைவனைத் தான் குறிக்கும்.

ஆதி மூலமே  என்ற அந்த யானை அழைத்தது நினைவு இருக்கிறது அல்லவா.

ஆதி பகவன் என்பது இரு பெயரொட்டு பண்புத் தொகை.

இரண்டும் ஒன்றையே குறிப்பது.

பகவன் என்றால் வேறு ய யாரையோ நினைத்துக் கொள்ளக் கூடாது. பலப் பல சமயங்கள் பின் நாளில் தோன்றலாம். ஒவ்வொரு சமயமும் புதுப் புது கடவுள்களை பற்றிக் கூறலாம்.

அவையெல்லாம் கருத்தில் கொள்ளக் கூடாது.

ஆதி பகவன் எவனோ அவனே உலகுக்கு முதல்.

இரு பெயரொட்டு பண்புத் தொகை பற்றி அறிந்தால் இந்த குறளை மேலும் நாம் இரசிக்க முடியும்.

இலக்கியத்தை ஆழ்ந்து அறிய இலக்கணம் அவசியம்.