Sunday, July 16, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - இறுதியுரை

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - இறுதியுரை 


நேற்று வரை இராமாயணத்தில் திருவடி சூட்டுப் படலம் என்பது பற்றி சிந்தித்தோம்.

தொடர்ந்து வாசித்து வந்தவர்களுக்கு சில விஷயம் தெளிவில்லாமல் இருக்கலாம்.

எதற்காக இராமன் கானகம் போக வேண்டும் ? பேசாமல் பரதன் மற்றும் குல குரு வசிட்டர் பேச்சை கேட்டுக் கொண்டு அயோத்தியிலேயே இருந்திருக்கலாமே. அங்கிருந்து கொண்டே இராவணன் மேல் போர் தொடுத்து இருக்கலாமே என்றெல்லாம் பல கேள்விகள் வரும்.

இதற்கு இரண்டு விடைகள் தரலாம்.

ஒன்று சாதாரணமான விடை. செய்திருக்கலாம். அப்படியும் ஒரு கதை எழுதலாம். இன்னமும் கூட வேறு விதமாக யோசிக்கலாம். எதற்காக இராவணன் மேல் சண்டை போட வேண்டும் ? அவன் போரிட்டு எதிரிகளை வென்றான் (தேவர்களை). கைதிகளை , கைதிகள் போல் நடத்தினான். அவ்வளவுதானே. அது ஒரு பெரிய குற்றமா ? அவன் பாட்டுக்கு அந்த பக்கம் இருக்கட்டும். நாம் பாட்டுக்கு இந்த பக்கம் நாட்டை ஆளுவோம் என்று கூட சிலர் சிந்திக்கலாம்.

பொதுவாகவே, உயர்ந்த நூல்களை படிக்கும் போது , அவற்றை படிப்பதன் மூலம் நம்மை நாம் எப்படி உயர்திக் கொள்ளலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர, எப்படி அந்த நூல்களை நம் தரத்துக்கு கீழே கொண்டு வருவது என்று சிந்திக்கக் கூடாது.

இராமாயணம் போன்ற உயர்ந்த நூல்களை படித்து விட்டு சிலர் அதை பரிகசித்து வேறு மாதிரி நூல்கள் எழுதினார்கள். இராமாயணத்தை கொளுத்த வேண்டும், அதை அடியோடு அழிக்க வேண்டும் என்று சில இயக்கங்கள் புறப்பட்டன.

இவை எல்லாம், உயர்ந்த நூல்களை நம் தரத்துக்கு கீழே இறக்கும் முயற்சி.

அதை விடுத்து, அதில் உள்ள உயர்ந்த கருத்துகளை தேடிப் பிடித்து , அந்த கருத்துகளை நம் வாழ்வில் கடை பிடித்து நாம் உயர என்ன வழி என்று சிந்திக்க வேண்டும்.

சரி, இன்னொரு காரணம் என்ன ?

வள்ளுவர் கூறினார், வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானில் உள்ள தேவர்களுக்கு சமமாவான் என்று.

இந்த உலகில் வாழும் முறைப்படி வாழ்ந்தால் , இந்த உலகிலேயே அவன் தேவனாக மதிக்கப் படுவான் என்றார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்.


சரி. வாழ்வாங்கு என்றால் வாழும் முறைப்படி என்று அர்த்தம். அது என்ன முறை ? அந்த முறை எங்கே எழுதி இருக்கிறது ? யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது ?

அப்படி வாழ்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா ?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை இராமாயணம்.

இங்கே நல்லபடி வாழ்ந்து , தேவர்களைப் போல ஆனவர்கள் யார் என்று சொன்னாலும், அவர்கள் வாழ்வில் உள்ள சில குறைகளை கண்டு பிடித்து , இதுவா வாழ்வாங்கு வாழும் முறை என்று சிலர் ஆரம்பித்து விடுவார்கள்.

எனவே, கம்பர் என்ன செய்தார் தெரியுமா, வானில் உள்ள ஒருவனை பூமிக்கு கொண்டு வந்தார். அங்குள்ள ஒருவன் இங்கு வந்தால் எப்படி வாழ்வான் என்று  படம் பிடித்து காட்டுகிறார்.

திருமாலையே நேராகக் கொண்டு வந்து , அவனை சாதாரண மானிடன் போல வாழ வைக்கிறார்.

திருமால் , மனித வாழ்க்கையை வாழ்ந்தால் எப்படி வாழுவார் என்று காண்பிக்கிறார்.

இராமன் என்னென்ன செய்தான் என்று தெரிகிறது.

ஏன் செய்தான் என்று நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.  இராமனின் சில காரியங்களுக்கு   நமக்கு காரணம் விளங்காமல் இருக்கலாம். அதனால் அவை தவறு என்று  ஆகி விடாது.

ஒரு கடவுளே இங்கு வந்து வாழ்ந்தால் எப்படி வாழ்வான் என்று காண்பிக்கும் முயற்சி தான்  இராமாயணம்.

வேண்டாம், எனக்கு இராமன் போல வாழ வேண்டாம். இராமன் செய்த செயல்களில் எனக்கு   உடன்பாடு இல்லை என்று சிலர் சொல்லலாம்.

சரி. வேறு வழியில் வாழ்வாங்கு வாழத் தெரியும் என்றால், முடியும் என்றால்  அந்த  வழியிலேயே போகலாம்.ஒரு தவறும் இல்லை.

இது இராமன் + அயனம் (பாதை; உத்தராயணம், தட்சிணாயனம் என்று கூறுவது போல).

வாழ்வாங்கு வாழ இராமன் காட்டிய வழி.

முடிந்தவரை அந்த வழியில் செல்வோம்.

வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_16.html

Saturday, July 15, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - பாதுகம் செந்தனிக் கோல் முறை செலுத்த

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - பாதுகம் செந்தனிக் கோல் முறை செலுத்த 


இந்தப் படலத்தின் இறுதிப் பாடல் இது.

இராமன் அரசை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். தேவர்கள் "இராமன் கானகம் போவதும், பரதன் அரசை ஆள்வதும் கடமை " என்று கூறி விட்டார்கள். பரதன் , இராமனின் இரண்டு பாதுகைகளை வாங்கிக் கொண்டு செல்கிறான்.

சில அருமையான பாடல்கள் உள்ளன. அவற்றைத் தாண்டி, இறுதி கட்டத்துக்கு வருவோம்.

நந்தியம்பதி என்ற இடத்தில் , இராமனின் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து, அதற்கு முடி சூட்டி, தன் புலன்களை எல்லாம் அடக்கி , அழுத கண்ணீரோடு அரசாட்சி செய்கிறான் பரதன்.

பாடல்


நந்தி அம் பதி இடை நாதன் பாதுகம்
செந் தனிக் கோல் முறை செலுத்தச் சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்.

பொருள்


நந்தி அம் பதி இடை = நந்தியம்பதி என்ற இடத்தில்

நாதன் = இராமன்

பாதுகம் = பாதுகைகளை

செந்  = செம்மையான

தனிக் = தனிச் சிறப்பான

கோல்  = செங்கோல் (அரசாட்சி)

முறை செலுத்தச்  = வழியில் செலுத்த

சிந்தையான் = சிந்தனை கொண்ட பரதன்

இந்தியங்களை அவித்து = இந்திரியங்களை அவித்து

இருத்தல் மேயினான் = இருக்கத் தொடங்கினான்

அந்தியும் = இரவும்

பகலும் = பகலும்

நீர்  = கண்ணீர்

அறாத = வற்றாத

கண்ணினான் = கண்களை கொண்டவன்


கல்லும் உருகும் கவி நயம் ஒரு புறம் இருக்க, மிக மிக ஆழ்ந்த கருத்துகளை கொண்ட பாடல் இது.

முதலாவது,  ஏன் நந்தியம்பதி ? அந்த பாதுகைகளை அயோத்திக்கு கொண்டு போய் , அங்குள்ள சிம்மாசனத்தில் வைக்கக் கூடாதா ?

வைக்கலாம். ஆனால், இராமன் இல்லாத அயோத்திக்குள் போவதற்கு கூட பரதனுக்கு  மனம் இல்லை.

சில சமயம் பிள்ளைகள் திருமணம் ஆகியோ, அல்லது மேற் படிப்புக்கோ, வேலைக்கோ  வீட்டை விட்டு போய் விடுவார்கள். அவர்கள் போன பின், அவர்கள் இருந்த அறையை பார்க்கவே  மனதுக்கு வருத்தமாக இருக்கும். பிள்ளை எப்படி  இருக்கிறானோ / ளோ என்று. அந்த அறைக்கு போகவே மனம் வராது.

அது போல,  இராமன் இருந்த அயோத்தியில், அவன் இல்லாமல் இருக்க பரதனுக்கு மனம் இல்லை. எனவே, ஊருக்கு வெளியே , நந்தியம்பதி என்ற இடத்தில் இருந்து விட்டான்.


இரண்டு, "இந்திரியங்களை அவித்து ". அதாவது புலன்களை அடக்கி அரசு செலுத்தினான்.  பதவி என்றாலே சுகம் அனுபவிக்கத்தான் என்று ஆகிவிட்ட இந்நாளில் , சக்கரவத்தி பதவியில் சுகம் எதையும் அனுபவிக்காமல் இருந்தான் பரதன் என்கிறார் கம்பர்.  பதவி என்பது வேலை செய்யவே தவிர சுகம் அனுபவிக்க அல்ல.  ஒரு சக்கரவர்த்திக்கு எவ்வளவு சுகம், வசதி கிடைக்கும்? சின்ன கம்பெனியில் வேலை செய்பவர்கள் கூட, கார் கதவை ஓட்டுநர் திறக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.  தனது சுகத்தை நினைக்காமல்  மக்களின் சுகத்தை நினைத்து ஒவ்வொருவரும் பணியாற்றினால்  இந்த நாடும் உலகும் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள்.  எந்த பதவியில் இருப்பவர்களுக்கும் இந்த பாடல் ஒரு வழிகாட்டி.  பிரிண்ட் பண்ணி அலுவலகத்தில் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது, பாதுகைகளுக்கு பட்டாபிஷேகம் ? கொஞ்சம் நெருடலாக இல்லை ? இராமன் படத்தை வைத்து , அதற்கு பட்டாபிஷேகம் செய்திருக்கலாமே ?

பதவி வேண்டாம் என்று எல்லாவற்றையும் துறந்தவனின் பாதுகைகளை சக்கரவர்த்தி  பட்டம் ! எல்லாம் துறந்தவனுக்கு, எல்லாம் கிடைக்கும்.  வேண்டும் வேண்டும்   என்று மேலும் மேலும் ஆசைப் படுபவன் பிச்சைக்காரனாகவே இருப்பான்.  ஒன்றும் வேண்டாம் என்று மர உரி உடுத்து கானகம் போனவன்  பாதுகைகளை மணி மகுடம்.


நான்காவது,  அரசை யார் செலுத்துகிறார்கள் ? இராமனா ? அவன் தான் கானகம் போய் விட்டானே. பாதுகைகளா ? அவற்றிற்கு என்ன தெரியும் ? பரதனா  ?  அவன் இராமனின் பொறுப்பாளனாக இருக்கிறான். (representative ).  பின் யார் தான்  அரசை செலுத்துகிறார்கள் ?

யார் செலுத்துகிறார்கள் என்பதல்ல முக்கியம். அரசு என்பது ஒரு தனி மனிதன்  செலுத்த வேண்டிய ஒன்று அல்ல. பாதுகை என்பது ஒரு அடையாளம். ஒரு சின்னம். தர்மம், அறம்  , தர்மம் இவற்றின் வழியில் அரசு செலுத்தப் பட வேண்டும். பிரதம மாதிரி, முதல் மந்திரி என்பதெல்லாம் ஒரு குறியீடு. அவர்கள்தான் ஆட்சியை செலுத்த வேண்டும் என்றல்ல.

ஐந்தாவது, பரதனுக்கு தனி மனித சோகம் உண்டு. அண்ணனை பிரிந்த சோகம். இருந்தும் அது அரசை பாதிக்க விடாமல் . "செந் தனிக் கோல் முறை செலுத்தச்" என்பான் கம்பன். நமது சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்து விட்டு  கடமையை செய்ய வேண்டும்.

இந்தப் படலத்தின் மணிமகுடமான பாடல் இது.


காலம் கருதி சில பாடல்களை விட்டு விட்டேன்.  மூல தேடி பிடித்து , அவற்றையும் படியுங்கள்.

இதுவரை பொறுமையாக அனைத்து பாடல்களையும் படித்து வந்த உங்களுக்கு ஒரு  ஒரு நன்றி.

Friday, July 14, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எம்மையும் தருவன

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எம்மையும் தருவன 


கானகம் வந்த இராமனை பின் தொடர்ந்து வந்த பரதன் ஆட்சியை மீண்டும் ஏற்றுக் கொள்ளுபடி வேண்டுகிறான். இராமன் மறுக்கிறான். வசிட்டன் சொல்லிப் பார்க்கிறான். அப்பவும் இராமன் ஏற்றுக் கொள்ளவில்லை. பின் தேவர்கள் வந்து இராமன் கானகம் செல்வதும், பரதன் நாடு ஆள்வதும் அவர்கள் கடமை என்று சொன்ன பின்  இராமன் பரதனிடம்   கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் , நாட்டை ஆளும்படி.

பரதனும் சரி என்று ஏற்றுக் கொள்கிறான். ஆனால் "பதினான்கு ஆண்டுகளில் நீ திரும்பி வராவிட்டால் உயிர் விடுவேன் " என்று கூறுகிறான்.

அதற்கு இராமன் சம்மதிக்கிறான்.

இறுதியில் பரதன் , வேறு ஒன்று செய்வதற்கு இல்லை என்று அறிந்த பின் "உன் திருவடிகளை தா" என்று இராமனிடம் கேட்கிறான். இராமனும் அவற்றை கொடுக்கிறான்.


பாடல்

விம்மினன் பரதனும், வேறு செய்வது ஒன்று
இன்மையின், ‘அரிது’ என எண்ணி, ஏங்குவான்,
‘செம்மையின் திருவடித்தலம் தந்தீக’ என,
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்.


பொருள்

விம்மினன் பரதனும் = பரதனும் மனம் விம்மி

வேறு செய்வது ஒன்று = வேறு ஒன்று செய்வது

இன்மையின் = இல்லாததால்

‘அரிது ‘என எண்ணி ஏங்குவான் = ஒன்றும் செய்ய

முடியவில்லையே என்று எண்ணி ஏங்கி

செம்மையின் = செம்மையான

திருவடித் தலம் = திருவடி இருக்கின்ற தலம், அதாவது பாதுகை

தந்தீக ‘என = தந்து ஈக. தானமாக கொடு என்று வேண்டினான்

எம்மையும் தருவன = எம்மையும் தருவன

இரண்டும் நல்கினான். = இரண்டையும் தந்தான்

''எம்மையும்" என்றால் என்ன ?

எம்மையே எமக்குத் தரும் என்று கொள்ளலாம்.

"தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை"

என்று பின்னொரு இடத்தில் கம்பன் கூறுவான்.

இம்மைக்கும், மறுமைக்கும் எல்லாவற்றையும், எப்போதும்  தரும் என்ற பொருளில், "எம்மையே " என்றான்.

"நல்லன எல்லாம் தரும் அபிராமி கடைக் கண்களே " என்பார் அபிராமி பட்டர்.


இறைவன் உயர்ந்தவன்.

அவனைத் தாங்கும் அவன் பாதங்கள் அதை விட உயர்ந்தது.

பாதங்களையும் சேர்த்துத் தாங்கும் பாதுகை அதை விட உயர்ந்தது.

இராமனின் திருவடிகளை கொண்டு போய் பரதன் என்ன செய்யப் போகிறான் ?

இந்த படலம் முடிவதற்கு இன்னும் ஒரு சில பாடல்களே இருக்கின்றன.

சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_14.html


Thursday, July 13, 2017

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான்

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான் 


தயரதன் சொல் கேட்டு கானகம் வந்த இராமனை மீண்டும் அரசை ஏற்றுக் கொள்ளும்படி பரதனும், பின் வசிட்டனும் வேண்டிய பின்னும், இராமன் மறுத்து விடுகிறான். பரதன் பிடிவாதம் பிடிக்கிறான்.

இறுதியில் வானவர் வந்து இராமன் கானகம் போவதும், பரதன் நாடாள்வதும் கடமை என்று சொல்லி விடுகிறார்கள்.

இராமன் பரதனிடம் சொல்கிறான்

"வானவர்கள் சொல்லி விட்டார்கள். அவர்கள் சொல்லை மீறக் கூடாது. நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீ இந்த நாட்டை ஆள்"

என்று பரதனின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு சொல்கிறான்

பாடல்

வானவர் உரைத்தலும்,
    ‘மறுக்கற்பாலது அன்று;
யான் உனை இரந்தனென்,
    இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின்
    அளித்தி பார் ‘எனா,
தான் அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான்.
  

பொருள்


வானவர் = தேவர்கள்

உரைத்தலும் = சொன்ன பின்னால்

‘மறுக்கற்பாலது அன்று = அதை மறுக்க முடியாது

யான் உனை இரந்தனென் = நான் உன்னை கேட்டுக் கொள்கிறேன்

இனி என் ஆணையால்  = இனி மேல் என் ஆணையால்

ஆனது ஓர் அமைதியின் = உனக்கென்று அமைந்து விட்ட

அளித்தி பார் ‘எனா, = இந்த உலகை ஆள் என்று

தான் = இராமன்

அவன் = பரதனின்

துணை  = இரண்டு

மலர்த் = மலர் போன்ற

தடக்கை = பெரிய கைகளை

பற்றினான் = பற்றிக் கொண்டான்


கண்ணில் நீர் வரவழைக்கும் பாடல்

நினைத்துக் கூட பார்க்க முடியாத இடம். கற்பனை கூட செய்ய முடியாத சூழ்நிலை.

எவ்வளவோ இருக்கிறது இந்தப் பாடலில் அறிந்து கொள்ள.

அண்ணன் சொல்லி விட்டான்.

குல குருவும் மௌனமாகி விட்டார் . அப்படி என்றால் அவரும் ஏற்றுக் கொண்டு விட்டார் என்று தான் அர்த்தம்.

இப்போது தேவர்களும் கூறி விட்டார்கள்.

பரதனுக்கு வேறு வழியில்லை.

இராமன் கை ஓங்கி இருக்கிறது. "நான் தான் அப்பவே சொன்னேனே ...பார் இப்போது தேவர்களும் சொல்லி விட்டார்கள். நீ போய் நாட்டை ஆள் " என்று சொல்லி இருக்கலாம்.

இராமன் அப்படி சொல்லவில்லை.

"நான் உன்னிடம் பிச்சை கேட்கிறேன்' என்று கூறுகிறான்.

"யான் உனை இரந்தனென்". இரத்தல் என்றால் பிச்சை கேட்டல், கெஞ்சி கேட்டல்.

அவ்வளவு தூரம் கீழே இறங்கி வருகிறான் இராமன்.

பல வீடுகளில் கணவன் மனைவி உறவுச் சிக்கல்கள் இருக்கலாம். கொஞ்சம் வாதம், பிரதி வாதம் செய்த பின், யாரோ ஒருவர் சொன்னது சரியாகவும் மற்றவர் சொன்னது தவறாகவும் இருக்கலாம்.

உடனே, வென்றவர் , "நான் தான் அப்பவே சொன்னேனே. நீ கேட்கவில்லை. பாத்தியா இப்ப..." என்று தோற்றவர் மனதை மேலும் குத்தி புண் படுத்துவதை கண்டிருக்கிறோம்.

அப்படி செய்யக் கூடாது .

வென்றவர் , தோல்வி அடைந்தவர் மனதுக்கு ஆறுதலாக பேசினால் , தோற்றவர் கூட  தோல்வியை பெரிதாக நினைக்காமல் அந்த அன்பை நினைத்து செயல்படுவார்கள்.

இது கணவன் மனைவி உறவில் மட்டும் அல்ல, பெற்றோர் பிள்ளைகள் , அதிகாரி ஊழியர் உறவு என்று எல்லா இடத்திலும் வெற்றி பெற்றவர் ஆணவம் கொள்ளாமல் , தோற்றவர் மனதுக்கு மருந்து போடுவது போல பேச வேண்டும்.

அடுத்தது, பரதனின் இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டு கேட்கிறான். அவ்வளவு பாசம் தம்பி மேல்.

தான் காட்டுக்குப் போகவும், தம்பிக்கு நாட்டைத் தரவும் இந்த கெஞ்சல்.

உதவி என்று கேட்கும் போது , எவ்வளவு இனிமையாக கேட்கிறான் இராமன்.

ஏதோ, அரண்மனையில் , சுகமாக இருந்து கொண்டு இவ்வளவு அன்பாக பேசவில்லை.

இருக்கும் இடம் கானகம். சற்று முன் தான் தந்தை இறந்த செய்தியை கேள்விப் படுகிறான் இராமன். தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி கடன்களை செய்கிறான். இன்னும் பதினாலு வருடம் காட்டில் இருக்க வேண்டும்.

சோகமான இடம். இறுக்கமான சூழ்நிலை. கடினமான காலம்.

இருந்தும் இராமனின் சொல்லிலும், செயலிலும் அவ்வளவு கனிவு.

"நாட்டைப் பார்த்துக் கொள் " என்று பரதனின் கைகளை பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறான்.

முடியுமா ?

முடிந்த வரை முயற்சி செய்வோம். உறவுகளோடு அன்போடு பழகுவோம். இனிமையாக பேசுவோம். பேச்சிலும், செயலிலும் இனிமையை வெளிப் படுத்துவோம்.

வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_13.html

Wednesday, July 12, 2017

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - ஏத்த அரும் பெருங் குணத்து இராமன்

கம்ப இராமாயணம் -  திருவடி சூட்டுப் படலம் - ஏத்த அரும் பெருங் குணத்து இராமன்


தயரதன் ஆணை ஏற்று கானகம் வந்த இராமனை மீண்டும் நாட்டுக்கு வந்து ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி பரதன் வேண்ட, அதை இராமன் மறுக்க, வசிட்டனும் பரதன் சொன்னதை சொல்ல, அதற்கும் இராமன் மறுக்க...யார் வேண்டுமானாலும் நாட்டை ஆண்டு கொள்ளுங்கள், நான் காட்டிலேயே இருக்கப் போகிறேன் என்று பரதன் இருந்து  விடுகிறான்.

இக்கட்டான சூழ்நிலை.

அப்போது தேவர்கள் அங்கே வருகிறார்கள்.

வந்தவர்கள் ....

"போற்றுதலுக்குரிய பெரிய குணங்களை உடைய இராமன் அவனுடைய தந்தையின் சொல் கேட்டு நடக்கவும், பரதா நீ அந்த நாட்டை 14 ஆண்டுகள் ஆளவும், இது உங்கள் இருவரது கடமையும் ஆகும் "

என்றனர்.

பாடல்


ஏத்த அரும் பெருங் குணத்து இராமன் இவ் வழிப்
போத்து அரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான்;
ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அந் நிலம்
காத்தல் உன் கடன்; இவை கடமை’ என்றனர்.


பொருள்

ஏத்த = போற்றுதலுக்குரிய

அரும் = அருமையான

பெருங்  = பெருமை நிறைந்த

குணத்து = குணங்களை கொண்ட

இராமன் = இராமன்

இவ் வழிப் = இந்த வழி

போத்து = போய்

அரும் = அரிய அல்லது அருமையான

தாதை சொல்  = தந்தையின் சொல்லை

புரக்கும் = காக்கும்

பூட்சியான் = மேற்கொண்டுள்ளான் ;

ஆத்த = அந்த

ஆண்டு  = ஆண்டுகள்

ஏழினொடு ஏழும் = பதினான்கு ஆண்டுகளும்

அந் நிலம் = அயோத்தியை

காத்தல் உன் கடன்; = காப்பது உன் கடைமை

இவை கடமை’ = இவை உங்களது கடமைகள்

என்றனர் = என்றனர்.

இவை எல்லாம் கடமைகள்.

பெற்றோரின் சொல்லை கேட்பது என்பது பிள்ளைகளின் வசதிப்படி அல்ல. கேட்க வேண்டியது கடமை.

அது மட்டும் அல்ல, பெற்றோரின் பேச்சை ஒரு பிள்ளை கேட்டால், மற்ற உடன் பிறப்புகள்  அவனுக்கு உதவ வேண்டும் என்பதும் கடமை.

இலக்குவனை கானகம் போ என்று யாரும் சொல்லவில்லை.  அவன் தானே கிளம்பி விட்டான்.

பரதன் கொஞ்சம் முரண்பட்டான்.

தேவர்கள் வந்து அவனுக்கு எடுத்துச் சொல்கிறார்கள்.

இராமன் , தந்தையின் சொல்லை கேட்டு கானகம் போவதால், நீ நாட்டை ஆள வேண்டும் என்பது உன் கடமை என்று பரதனிடம் கூறுகிறார்கள்.

பெற்றோர் சொல்லை கேட்டு பிள்ளைகள் வாழ வேண்டும் என்று பாரம்பரியம் இருந்தது இந்த நாட்டில்.

இந்த தேவர்கள் ஏன் வருகிறார்கள், அதற்குப் பின் என்ன அர்த்தம் என்று இந்த படலத்தின் முடிவில்  சிந்திக்க இருக்கிறோம். அது மட்டும் அல்ல, ஏன் திருமால் இப்படி  அவதாரம் எடுத்து சங்கடப் படவேண்டும். பேசாமல், நேரடியாகவே வந்து  இராவணனிடம் சண்டையிட்டு ஒரு நொடியில் வேலையை தீர்த்து இருக்கலாம் அல்லவா ? இது என்ன கொக்கு தலையில் வெண்ணையை வைத்து  அதை பிடிப்பது போல உள்ளது ?


இதற்கெல்லாம் என்ன காரணம் ?

எவற்றையும் இந்த படல முடிவில் சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_12.html


Tuesday, July 11, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அன்று நம் செயல் - பாகம் 2

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அன்று நம் செயல் - பாகம் 2 


தயரதன் ஆணை ஏற்று கானகம் வந்த இராமனை மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் படி பரதன் வேண்டினான். இராமன் மறுத்தான். வசிட்டன் சொல்லிப் பார்த்தான். அப்போதும் இராமன் ஏற்கவில்லை. இறுதியில், "யாராவது நாட்டை ஆண்டு கொள்ளுங்கள். நான் இங்கேயே இருந்து விடுகிறேன் " என்று பரதன் அடம் பிடிக்கிறான்.

என்ன செய்வது என்று எல்லோரும் குழம்பி நிற்கிறார்கள்.

அப்போது, தேவர்கள் அங்கு கூடி யோசித்தார்கள்

"இப்போது பரதன் இராமனை கூட்டிக் கொண்டு போய் விட்டால், நம் காரியம் ஒழுங்காக நடக்காது என்று எண்ணினர்"

பாடல்

அவ் வழி, இமையவர் அறிந்து கூடினார்,
‘இவ் வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல்,
செவ் வழித்து அன்று நம் செயல்’ என்று எண்ணினார்.
கவ்வையர், விசும்பிடைக் கழறல் மேயினார்;

பொருள்

அவ் வழி =  அந்த இடத்தில் ,

இமையவர் = கண்களை இமைக்காத தேவர்கள்

அறிந்து கூடினார் = நடப்பதை அறிந்து கூடினார்கள்

‘இவ் வழி = இந்த வழியில்

இராமனை = இராமனை

இவன் = பரதன்

கொண்டு ஏகுமேல் = அயோத்திக்கு கொண்டு சென்று விட்டால்
,
செவ் வழித்து அன்று  = நல்ல வழி அன்று

நம் செயல்’ = நம்முடைய செயல் (இராவணனை கொல்லும் செயல்)

என்று எண்ணினார் = என்று நினைத்தார்கள்

கவ்வையர் =  கவலை உள்ளவர் ,

விசும்பிடைக் = வானத்திடை

கழறல் மேயினார் = பேசத் தொடங்கினார்கள்

தேவர்கள் வந்து என்ன சொன்னார்கள் ?

அடுத்த பிளாகில் பார்ப்போம்


============= பாகம் 2 =======================================


எடுத்த எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்க என்ன செய்ய வேண்டும் ?


காரியத்தை முடிக்க வேண்டும் என்ற உறுதி வேண்டும். 

பலருக்கு தோல்வி ஏன் வருகிறது என்றால், எடுத்த வேலையில் உறுதி கிடையாது. கொண்ட கொள்கையில் உறுதி கிடையாது. எதிலும் சந்தேகம். 

இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ, இது சரிதானா, இப்படி செய்யலாமா என்று ஆயிரம் சந்தேகங்கள். இப்படி சந்தேகப் பட்டுக் கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம் கிட்டாது. 

எண்ணித் துணிக கருமம் , துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு 

என்பார் வள்ளுவர். 

சரி, துணிந்து இறங்கி விட்டால் என்ன ஆகும் ?

இந்த உலகமே அப்படிப் பட்டவன் பின்  இந்த உலகமே நிற்கும். அவனுக்கு உதவி செய்யும். 

நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை சாதிக்கப் பிறந்திருக்கிறோம். அது நமக்குள் சதா சர்வ காலமும் ஒலித்துக் கொண்டே இருக்கும். நாம் என்ன வேலை செய்தாலும், நம் மனம் அந்த ஒன்றை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும். 

நாம் அதை தொடங்கும் வரை , நம் மனம் நம்மை தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கும். 

கீதை அதை சுதர்மம் என்கிறது. 

நம் சுதர்மம் நமக்கு முன்னே பிறந்து நமக்காக காத்துக் கொண்டிருக்கும் என்பார் ஆச்சாரியா வினோபாபாவே. 

நாம் அதை தொடங்கியவுடன்,  அதன் பாதையில் செல்லத் தொடங்கியவுடன், இந்த உலகமே நமக்கு உதவி செய்ய பின் நிற்கும். 

இராமகிருஷ்ண இயக்கம் தொடங்கிய துறவிகளிடம் இருந்தது ஒரே ஒரு மாற்று உடைதான். அது மட்டும்தான் அவர்கள் சொத்து. ஆனால், அவர்கள் அந்த மிஷனை தொடங்கிய பின், எங்கிருந்தோ செல்வம் வந்து கொட்டியது. 

இராமனின் சுதர்மம், பெற்றோர் சொல் கேட்பது. 

அதற்கு பல தடங்கல்கள்.  அமைச்சர்கள், உடன் பிறந்த தம்பி, கல்வி கற்றுத்தந்த குரு  என்று பல தடைகள் வந்தாலும், தான் கொண்ட கொள்கையில் இராமன் தெளிவாக இருந்தான். 

அப்போது, தேவர்கள் வந்து அவனுக்கு உதவி செய்தார்கள்.

தேவர்கள் என்றால் ஏதோ தேவர்கள் வானில் இருந்து குதித்து வந்து உதவினார்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 

நீங்கள் உங்கள் நல்ல கொள்கையில் உறுதியாக இருந்தால், தெய்வமும் இறங்கி வந்து உங்களுக்கு உதவி செய்யும். 

நம்பிக்கை, உறுதி இரண்டும் வேண்டும். 

சந்தேகமே வேண்டாம். 

நமது புராண இதிகாசங்கள் மீண்டும் மீண்டும் இதைத்தான் பல்வேறு விதங்களில் சொல்கின்றன. 

அசரீரி வந்தது, கடவுள் நேரில் வந்து உதவினார் என்பதெல்லாம், கொண்ட செயலில் உறுதியாக இறங்கினால், தெய்வமும் உதவி செய்யும் என்பதை உணர்த்தவே. 


“Until one is committed, there is hesitancy, the chance to draw back, always ineffectiveness. Concerning all acts of initiative (and creation), there is one elementary truth, the ignorance of which kills countless ideas and splendid plans: that the moment one definitely commits oneself, then Providence moves too. All sorts of things occur to help one that would never otherwise have occurred. A whole stream of events issues from the decision, raising in one's favour all manner of unforeseen incidents and meetings and material assistance, which no man could have dreamt would have come his way. I have learned a deep respect for one of Goethe's couplets:
Whatever you can do, or dream you can, begin it.
Boldness has genius, power, and magic in it!”


― William Hutchison Murray


உங்கள் மனதுக்குள் நீண்ட காலமாக ஓடிக் கொண்டிருக்கும் அந்த எண்ணத்தை செயல்படுத்த உறுதியாக இறங்குங்கள்.

இராமன் உறுதியாக நின்றான். வான் உலகம் இறங்கி வந்தது.

நீங்களும் இறங்குங்கள்.

வையமும், வானமும் உங்கள் பின்னால் நிற்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/2.html

Monday, July 10, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அன்று நம் செயல்

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அன்று நம் செயல் 


தயரதன் ஆணை ஏற்று கானகம் வந்த இராமனை மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் படி பரதன் வேண்டினான். இராமன் மறுத்தான். வசிட்டன் சொல்லிப் பார்த்தான். அப்போதும் இராமன் ஏற்கவில்லை. இறுதியில், "யாராவது நாட்டை ஆண்டு கொள்ளுங்கள். நான் இங்கேயே இருந்து விடுகிறேன் " என்று பரதன் அடம் பிடிக்கிறான்.

என்ன செய்வது என்று எல்லோரும் குழம்பி நிற்கிறார்கள்.

அப்போது, தேவர்கள் அங்கு கூடி யோசித்தார்கள்

"இப்போது பரதன் இராமனை கூட்டிக் கொண்டு போய் விட்டால், நம் காரியம் ஒழுங்காக நடக்காது என்று எண்ணினர்"

பாடல்

அவ் வழி, இமையவர் அறிந்து கூடினார்,
‘இவ் வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல்,
செவ் வழித்து அன்று நம் செயல்’ என்று எண்ணினார்.
கவ்வையர், விசும்பிடைக் கழறல் மேயினார்;

பொருள்

அவ் வழி =  அந்த இடத்தில் ,

இமையவர் = கண்களை இமைக்காத தேவர்கள்

அறிந்து கூடினார் = நடப்பதை அறிந்து கூடினார்கள்

‘இவ் வழி = இந்த வழியில்

இராமனை = இராமனை

இவன் = பரதன்

கொண்டு ஏகுமேல் = அயோத்திக்கு கொண்டு சென்று விட்டால்
,
செவ் வழித்து அன்று  = நல்ல வழி அன்று

நம் செயல்’ = நம்முடைய செயல் (இராவணனை கொல்லும் செயல்)

என்று எண்ணினார் = என்று நினைத்தார்கள்

கவ்வையர் =  கவலை உள்ளவர் ,

விசும்பிடைக் = வானத்திடை

கழறல் மேயினார் = பேசத் தொடங்கினார்கள்

தேவர்கள் வந்து என்ன சொன்னார்கள் ?

அடுத்த பிளாகில் பார்ப்போம்

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_10.html