Sunday, October 8, 2017

கம்ப இராமாயணம் - சாகா வரம் பெற்றவன்

கம்ப இராமாயணம் - சாகா வரம் பெற்றவன் 


பொதுவாகவே அரக்கர்கள் கடுமையாக தவம் செய்வார்கள். இறைவன் நேரில் வந்து "பக்தா, உன் பக்திக்கு மெச்சினோம். என்ன வரம் வேண்டும் " என்று கேட்பார்கள். உடனே, அந்த அரக்கர்கள் , "சாகா வரம் வேண்டும் " என்று கேட்பார்கள். "பிறந்தது எல்லாம் இறக்க வேண்டும் என்பது விதி. அதை யாராலும் மாற்ற முடியாது. வேறு ஏதாவது கேள்" என்று இறைவன் சொல்வான். அரக்கர்களும் எப்படியெல்லாம் சாவை வெல்ல முடியும் என்று சிந்தித்து வரம் கேட்பார்கள். இறைவனும் கொடுத்து விடுவான்.

என்ன வரம் கேட்டாலும், கடைசியில் அவர்களுக்கு மரணம் வந்தே தீருகிறது.

ஆனால், இதற்கு விதி விலக்காக , விராதன் இருக்கிறான்.

"நான் முகன் தந்த வரத்தினால் என் உயிர் என்னை விட்டு போகவே போகாது. இந்த  உலகங்கள் அனைத்தும் எதிர்த்து வந்தாலும், ஒரு ஆயுதம் கூட இல்லாமல் அவற்றை வெல்லுவேன். உங்களுக்கு (இராம இலக்குவனர்களுக்கு) உயிர் பிச்சை தருகிறேன். இந்த பெண்ணை (சீதையை) என்னிடம் விட்டு விட்டு ஓடி விடுங்கள் "

என்கிறான்.

பாடல்

‘ஆதி நான்முகன் வரத்தின் எனது
     ஆவி அகலேன்;
ஏதி யாவதும் இன்றி, உலகு
     யாவும் இகலின்,
சாதியாதனவும் இல்லை; உயிர்
     தந்தனென்; அடா!
போதிர், மாது இவளை உந்தி, இனிது’
     என்று புகல


பொருள்

‘ஆதி நான்முகன் = உயிர்களுக்கு எல்லாம் மூலமான  பிரமன்

வரத்தின் = வரத்தினால்

எனது ஆவி அகலேன் = என் உயிர் என்னை விட்டு போகாது. என்னை கொல்ல முடியாது

ஏதி யாவதும் இன்றி = காரணம் எதுவும் இன்றி. இங்கு படை அல்லது துணை எதுவும் இன்றி என்று கொள்ளலாம்.

உலகு யாவும் = உலகங்கள் யாவும்

இகலின் = சண்டைக்கு வந்தால்

சாதியாதனவும் இல்லை = அவற்றை வென்று முடிக்காமல் இருக்க மாட்டேன்

உயிர் தந்தனென் = உங்களுக்கு உயிர் பிச்சை தருகிறேன்

அடா! = அடேய்

போதிர் = போய் விடுங்கள்

மாது இவளை உந்தி = மாது இவளை விட்டு விட்டு

இனிது = சந்தோஷமாக

என்று புகல = என்று கூறினான்

உயிர் பிழைத்தோம் என்று சந்தோஷமாக ஓடி விடுங்கள் என்கிறான்.

உங்களுக்கு சகுனம், விதி இவற்றில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ. தமிழில் எப்போதும் , எதையும் மங்களமாகவே சொல்ல வேண்டும் என்று ஒரு விதியே வைத்து இருக்கிறார்கள்.  அமங்கலமான சொற்களை விலக்க வேண்டும்  என்பது விதி.

ஏன் என்றால், வார்த்தைகளுக்கு வலிமை உண்டு என்று நம்பினார்கள். நாம் என்ன சொல்கிறோமோ, அது நமது மனத்தில் பதிந்து அப்படியே நடக்கும் என்று உறுதியாக நம்பினார்கள்.

எனவே, எப்போதும் நல்லதையே சொல்ல வேண்டும், மங்களமான சொற்களையே பேச வேண்டும் விதித்து வைத்திருந்தார்கள்.

இதை தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் காணலாம். 

(யாருக்கேனும் படிக்க விருப்பம் இருந்தால் தெரிவியுங்கள். சமயம் கிடைக்கும் போது எழுதுகிறேன்)


இங்கே விராதன் சொல்வதை வேறு விதமாக பார்க்கலாம்.

"உயிர் போகாது என்று பிரமன் வரம் தந்திருக்கிறான். ஆனால், இப்போது இந்த பெண்ணை கடத்திக் கொண்டு போவதன் மூலம் என் உயிரை விடப் போகிறேன். நீங்கள் இந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போய் இனிதாக வாழுங்கள் "

என்று அர்த்தம் சொல்லலாம்.



‘ஆதி நான்முகன் வரத்தின் எனது
     ஆவி அகலேன்"

பிரமன் வரத்தினால் , என்னை கொல்ல முடியாது

 உயிர்  தந்தனென் = என் உயிரை தரப் போகிறேன்


போதிர், மாது இவளை உந்தி, இனிது = இந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போய் இனிமையாக வாழுங்கள்

என்று புகல = என்று கூறினான்.

அவன் எதை நினைத்துச் சொன்னானோ தெரியாது. அவன், தெரியாமல் சொன்ன வார்த்தை கூட பலித்தது. உயிரை விட்டான்.


எனவே, மறந்தும், அமங்களமான சொற்களை பேசக் கூடாது. 

கோபம் வரும்போது, எரிச்சல் வரும்போது, வருத்தத்தில் அமங்களமான சொற்களை சொல்லாமல் இருப்பது நலம். 

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_8.html

Saturday, October 7, 2017

கம்ப இராமாயணம் - அடா, மீள்தி, எங்கு அகல்தி

கம்ப இராமாயணம் - அடா, மீள்தி, எங்கு அகல்தி


விராதன் என்ற அரக்கன் வந்து சீதையை தூக்கிக் கொண்டு செல்கிறான். அவன் பின்னே, அவனை துரத்திக் கொண்டு இராமனும் இலக்குவனும் செல்கிறார்கள்.

"டேய், அவளை எங்கே தூக்கிக் கொண்டு போகிறாய். நில் " என்று அவனை அதட்டிக் கொண்டு கையில் வில்லோடு அவனை துரத்துகிறார்கள்.

பாடல்

காளை மைந்தர் அது கண்டு,
    கதம் வந்து கதுவத்
தோளில் வெம் சிலை இடம் கொடு
    தொடர்ந்து, சுடர் வாய்
வாளி தங்கிய வலங்கையவர்,
    வஞ்சனை, “அடா!
மீள்தி; எங்கு அகல்தி? ‘‘ என்பது
    விளம்ப, அவனும்.

பொருள்


காளை மைந்தர் = காளை போன்ற வீரம் கொண்ட மைந்தர்களான இராமனும், இலக்குவனும்

அது கண்டு = சீதையை விராதன் தூக்கிச் செல்வதைக் கண்டு

கதம் வந்து கதுவத் = கோபம் வந்து பற்றிக் கொள்ள

தோளில் = தோளில்

வெம் சிலை = கொடுமையான வில்லை

இடம் கொடு = இடக் கையில் பிடித்துக் கொண்டு

தொடர்ந்து, = விராதனை தொடர்ந்து துரத்திக் கொண்டு போய்

சுடர் வாய் = சுடர் விட்டு பிரகாசிக்கும்

வாளி தங்கிய = அம்பை தங்கிய

வலங்கையவர் = வலக்கையில்

வஞ்சனை, = வஞ்சனையாக

“அடா! = அடேய்

மீள்தி; = திரும்பி வா

எங்கு அகல்தி?  - எங்கு அகன்று போகிறாய்

என்பது = என்று

விளம்ப, = கேட்க

அவனும் = அந்த விராதனும்

விதி.  வேறென்ன சொல்ல. சக்கரவர்த்தி திருமகனும், அவன் தம்பியும் காட்டில்  ஏதோ ஒரு அரக்கனை விரட்டிக் கொண்டு செல்ல வைத்தது. கட்டிய மனைவியை எவனோ ஒருவன் தூக்கிக் கொண்டு போகிறான் . அவன் பின்னால் விரட்டிக் கொண்டு செல்ல விதி.

நமக்கு துன்பம் வரும்போது இவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.


இவர்கள் இப்படி அவனை விரட்டிக் கொண்டு போனபோது அவன் என்ன சொன்னான் தெரியுமா ?


http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_7.html

Friday, October 6, 2017

கம்ப இராமாயணம் - சீதையை தூக்கிச் செல்லுதல்

கம்ப இராமாயணம் - சீதையை தூக்கிச் செல்லுதல் 


இராவணன் சீதையை தூக்கிச் சென்றான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், சீதையை தூக்கிச் செல்வதில் இராவணன் முதல் ஆள் அல்ல. அவனுக்கு முன்னே இன்னொரு அரக்கன் சீதையை தூக்கிச் சென்றான்.

அவன் பெயர் விராதன்.

காட்டில் , சூர்பனகையை எல்லாம் பார்ப்பதற்கு முன் நிகழ்ந்தது இது.

என்ன நடந்தது என்று பார்ப்போம்.

இராமன், இலக்குவன் , மற்றும் சீதை கானகத்தில் நடந்து போகிறார்கள். அப்போது அவர்களை துரத்திக் கொண்டு விராதன் என்ற அந்த அரக்கன் வருகிறான்.

பாடல்


நில்லும், நில்லும் என வந்து, நிணம்
     உண்ட நெடு வெண்
பல்லும், வல் எயிறும், மின்னு பகு
     வாய் முழை திறந்து,
அல்லி புல்லும்அலர் அன்னம்
     அனையாளை, ஒரு கை, 
சொல்லும் எல்லையில், முகந்து உயர்
     விசும்பு தொடர

பொருள்

நில்லும், நில்லும் என வந்து "நில்லுங்கள், நில்லுங்கள் " என்று சொல்லிக் கொண்டே வந்து

நிணம் உண்ட = மாமிசம் உண்ட

நெடு = நீண்ட

வெண் பல்லும் = வெள்ளையான பற்களும்

வல் எயிறும் = வலிமையான கோரை பற்களும்

மின்னு = மின்னும் படி

பகு வாய் = பிளந்த வாயை

முழை திறந்து = குகை போல திறந்து வைத்துக் கொண்டு

அல்லி புல்லும்  = மலர் இதழ்கள் ஒன்றோடு ஒன்று கட்டி பிடித்த வண்ணம் நெருங்கி இருக்கும்

அலர் = தாமரை மலரில் இருக்கும்

அன்னம் அனையாளை = அன்னம் போன்றவளை

ஒரு கை = ஒரு கை

சொல்லும் எல்லையில் = செல்லும் எல்லையில், கையின் முடிவில், உள்ளங் கை

முகந்து = நீரை முகப்பது போல முகந்து கொண்டு

உயர் = உயரமான

விசும்பு = வானம்

தொடர = தொடும்படி சென்றான்

விராதன் வந்தான், சீதையை உள்ளங் கையில் தண்ணீரை முகர்வதைப் போல எளிதாக  எடுத்துக் கொண்டு வானில் பறந்து விட்டான்.

அப்புறம் என்ன நடந்தது ?


http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_6.html

Thursday, October 5, 2017

திருக்குறள் - பிரிவைச் சொல்லும் வளையல்கள்

திருக்குறள் - பிரிவைச் சொல்லும் வளையல்கள் 




அவள் அவனை காதலிப்பது ஊருக்குள் அரசல் புரசலாகத் தெரியும். யார் கேட்டாலும், "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ..." என்று சொல்லி மழுப்பி விடுவாள்.

ஆனால், இப்போது , அவளை விட்டு அவன் அயல் நாடு போய் இருக்கிறான்......

"போறதுக்கு முன்னால அவன்  என்ன சொன்னான்" ?

"நீ கவலைப் படாதே, சிறிது நாளில் வந்து விடுவேன்...தைரியமா இரு " என்று தான் சொல்லிவிட்டுச் சென்றான்...

சொல்லி எத்தனை நாள் இருக்கும் ? இரண்டு நாள் ? நாலு நாள் ? பத்து நாள் ?

இல்லை, அவ்வளவு எல்லாம் இருக்காது...நேத்தோ , முந்தா நாளோதான் சொன்னான்.

அப்படியா, அப்படினா இப்பதான் போனானா ? அப்ப திரும்பி வர ரொம்ப நாள் ஆகும்னு சொல்லு...

இல்ல இல்ல , நேத்து சொன்ன மாதிரி இருக்கு , ஆனால் சொல்லி ஒரு பத்து நாள் இருக்கும்.


பத்து நாளா ? இல்லையே அதுக்கு முன்னாடியே சொன்ன மாதிரி இருக்கே....

இப்படி அவன் பிரிவில் , அவள் தவிக்கிறாள். நாள் கணக்கெல்லாம் மறந்து விட்டாள்.

இருந்தும் அவனைக் காணாமல் மனம் ஒன்றிலும் ஒட்டவில்லை. சரியாக சாப்பிடுவது இல்லை,  தூங்குவது இல்லை.

மெலிந்து போனாள். கை மெலிந்து, கையில் உள்ள வளையல் தானே நழுவி கீழே விழுகிறது.

அவள் சொல்லா விட்டாலும், அவள் கையில் இருந்து நெகிழ்ந்து விழும் வளையல் ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறது, அவளுக்கு அவன் மேல் உள்ள காதலை.

அவள் என்ன செய்வாள் பாவம்.

ஒரு பக்கம், பிரிவு. அதில் வரும் துயரம்.

இன்னொரு பக்கம், அவன் வருவான் நம்பிக்கை.

இன்னொரு புறம், எப்போ வருவானோ என்ற ஏக்கம்.

இதற்கிடையில், இந்த வளையல் வேற , ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கிறது. வெட்கம் வேறு பிடுங்கி தின்கிறது அவளை.

ஒரு பெண் படும் அவஸ்தை , சொல்லி மாளாது.

இத்தனை உணர்ச்சி குவியலையும் வார்த்தையில் வடிக்க முடியுமா ?

வள்ளுவர் அதையும் செய்திருக்கிறார்...

படித்துப் பாருங்கள், உதட்டோரம் ஒரு சோகம் கலந்த இன்பப் புன்னகை படர்வதை உணர்வீர்கள்....


பாடல்


துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை


பொருள்

துறைவன் = தலைவன்

துறந்தமை = என்னை விட்டு சென்றமை

தூற்றாகொல் = சொல்லாதோ (தூற்றுதல் = அவதூறாக சொல்லுதல்)

முன்கை = முன் கையில் உள்ள

இறை = மணிக்கட்டு

இறவா = நெகிழாமல்

நின்ற வளை = நின்ற வளையல்

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_5.html




Wednesday, October 4, 2017

திருக்குறள் - விதியை வெல்ல முடியுமா ?

திருக்குறள் - விதியை வெல்ல முடியுமா ?


என்ன பண்ணி என்ன பலன். எல்லாம் விதி என்று பலர் நொந்து கொல்வதைப் பார்த்து இருக்கிறோம்.

விதி என்று ஒன்று இருக்கிறதா ? இருக்கிறது என்றால் அதை யார் நிர்ணயம் செய்கிறார்கள் ? கடவுளா ? எல்லாம் விதிப்படிதான் என்றால் மனிதன் ஏன் எந்த முயற்சியும் செய்ய வேண்டும் ? மனிதனுக்கு ஏதாவது சுதந்திரம் இருக்கிறதா ?  விதிக்கு நாம் எல்லாம் அடிமைகளா என்ற பல கேள்விகள் வரும்.

விதி என்பதை நமது சூழ்நிலை என்று வைத்துக் கொள்வோம். நாம் பிறந்த குடும்பம், வீடு, பெற்றோர், உடன் பிறப்பு , நாடு, நாம் படித்த பள்ளிகள் இவை எல்லாம் நாம் தேர்ந்தெடுக்க வில்லை. நமக்கு அமைந்தது. நம் விதி அது. நாம் விரும்பி பெற்றது அல்ல. நாம் விரும்பினாலும் மாற்ற முடியாது.

நமக்கு வரும் போட்டிகள், இடர்பாடுகள், எதிரிகள், சிக்கல்கள் இவையும் நமது விதிதான்.

பரிட்சைக்குப் போகிறோம். அதில் வரும் கேள்விகள் நம் விதி. நாம் அதை மாற்ற முடியாது.

வேலைக்கு மனு போடுகிறோம். நம்மோடு எத்தனை பேர் அந்த வேலைக்கு போட்டி போடுவார்கள். அதில் நம்மை விட சிறந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் ? அதுவும் விதி.

பொதுவாகவே , இந்த விதி , அதாவது நமது சூழ்நிலை , நமக்கு எதிராகவே இருக்கிறது  ?

ஏன் ?

இருக்கும் வாய்ப்புகள் குறைவு ? அதை அடைய நினைப்போர் அதிகம். எனவே  ,போட்டி, பொறாமை,  போன்றவை இருப்பது இயற்கை.

காரில் போகிறோம், விபத்து ஏற்பட்டு விடுகிறது. விதி.

அலுவலகத்தில் , செய்யாத தவறு நம் மீது வந்து விழுகிறது. அதுவும் விதி.

சரி, இப்படி எல்லாமே விதி என்றால், மனிதன் என்னதான் செய்வது ? எப்படித்தான் வாழ்வது ?

இந்த விதியை நம்மால் வெல்ல முடியாதா ?


முடியும் என்கிறார் ?

எப்படி என்றால் அதற்கு இரண்டே இரண்டு செயல்பாடுகள் அவசியம்.

விதிக்கு எதிராக நாம் போராட வேண்டும். அந்த போராட்டத்தில் நமக்கு வேண்டியது இரண்டு அம்சங்கள்.

முதலாவது, விடாமல் போராட வேண்டும்.

இரண்டாவது, வெற்றி கிடைக்கும் வரை வலிமையை ஏற்றிக் கொண்டே போக வேண்டும் நமது போராட்டத்தில்.

பாடல்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்


பொருள்


ஊழையும்  = விதியையும்

உப்பக்கம் = புறமுதுகு

காண்பர்  = காண்பர்

உலைவின்றித் = தளர்வின்றி

தாழாது = முயற்சியில் குறைவு இன்றி

உஞற்று பவர் = முயல்பவர்

எத்தனை நாள் ஆனாலும் விடாமல் போராட வேண்டும்.

முயற்சியை விட்டு விடக் கூடாது.

அது மட்டும் அல்ல, முயற்சி குறையக் கூடாது.

முதல் முறை முயன்றோம். முடியவில்லை என்றால், இரண்டாம் முறை முன்பைவிட   அதிக முயற்சி செலுத்த வேண்டும். அதை விட குறைவாக அல்ல.

இரண்டாம் முறையும் தோல்வி என்றால், மூன்றாம் முறை முயற்சியை இன்னும் அதிகரிக்க  வேண்டும்.

நிறைய பேர் கொஞ்சம் முயற்சி செய்வார்கள். தோல்வி வந்ததும் தளர்ந்து விடுவார்கள்.  "என்னால் அவ்வளவுதான் முடியும் ...முடிந்த எல்லா வழியும் முயற்சி செய்து  விட்டேன். இனி மேல் என்ன செய்வது "  என்று விரக்தி அடைந்து அமர்ந்து விடுவார்கள்.


தோல்வி வரும். முயற்சியை தளர விடக் கூடாது. அது மட்டும் அல்ல, அதை அதிகரிக்கவும் வேண்டும்.


பரீட்ச்சையில் தேற வேண்டுமா ? நல்ல வேலை கிடைக்க வேண்டுமா ? கிடைத்த வேலையில் மேலும் மேலும் முன்னேற வேண்டுமா ? போட்டிகளில் முதலில் வர வேண்டுமா ?  பணம் திரட்ட வேண்டுமா ?


மனம் தளராமல், முயற்சி குறையாமல் முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

அவ்வளவுதான் என்னால் முடியும் என்று ஒரு காலத்திலும் சொல்லக் கூடாது.

மேலும் மேலும் முயற்சியின் வலுவை அதிகரிக்க வேண்டும்.

அப்படி செய்தால், விதி என்ற அந்த பெரிய எதிரியை புறம் காட்டி ஓட விடலாம்.


உலகிலேயே பெரிய எதிரி விதி தான்.

வள்ளுவர் சொல்கிறார் "ஊழையும்" என்று . அதில் ஒரு "ம்" சேர்க்கிறார்.


ஊழை (விதியை) மட்டும் அல்ல, அதை விட பெரிய சிக்கல் எது வந்தாலும், அதையும் வெற்றி காண முடியும் என்கிறார்.

ஊழை வெற்றி காண்பது மட்டும் அல்ல, அதை ஓட ஓட விரட்டி அதன் புற முதுகை  காண முடியும் என்கிறார்.

ஊக்கம் தரும் குறள் . வாழ்வில் தளர்ச்சி வரும் போது , சோகம் துக்கம் வரும் போது இதை ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.

ஒரு புத்துணர்ச்சி தோன்றும். உலகையே வென்று விடலாம் என்று தோன்றும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_4.html

Monday, October 2, 2017

திருக்குறள் - அறிவின் பயன்

திருக்குறள் - அறிவின் பயன் 




அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.

இந்த குறள் பற்றி முன்பு ஒரு தரம் பார்த்தோம். நவில் தொரும் நூல் நயம் போல படிக்க படிக்க , சிந்திக்க சிந்திக்க மேலும் மேலும் அர்த்தங்களை தருவது குறள்.


குறளின் எளிய விளக்கம் , மற்ற உயிர்களின் துன்பத்தை நம் துன்பம் போல நினைத்து அதை நீக்கா விட்டால், நாம் பெற்ற அறிவின் பயன் என்ன ? (ஒன்றும் இல்லை )

பொருள்

அறிவினான் = அறிவினால்

ஆகுவ துண்டோ = ஆகுவது உண்டோ ?

பிறிதின்நோய் = மற்றவற்றின் நோய் (துன்பம்)


தந்நோய்போல் = தன்னுடைய துன்பம் போல

போற்றாக் கடை = நீக்காவிட்டால்

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_2.html

சரி, இதில் என்ன ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா ?

சிந்திப்போம்.

ஏன் "தன் நோய் போல்" என்று கூறினார் ?

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் போற்றாக் கடை என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ?

அது என்ன "தன் நோய் "


சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ளவர்கள், உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் , பல துன்பங்களை அறிய மாட்டார்கள்.

உதாரணமாக, ஒரு பெரிய பணக்காரன் , பசி என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியாது. வேளா வேளைக்கு உணவு அவனுக்கு கிடைத்து விடும்.  குளிர், வெயில் இவற்றின் கொடுமை அவனுக்குத் தெரியாது.

தனக்கு அந்த துன்பம் இல்லை என்பதால் வேறு யாருக்கும் அந்த துன்பம் இருக்காது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

நமக்கு உணவு இல்லாமல் , பசியால் வாடினால் எப்படி இருக்கும், என்ன செய்வோம் என்று நினைத்து பார்த்து மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.


ஒரு பிச்சைக்காரன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு பசியின் கொடுமை தெரியும் . தனக்கு பசி வந்தால் அவன் என்ன செய்வான் ? பிச்சை எடுப்பான்.  ஆனால் ஒரு செல்வந்தன் , தனக்கு பசி வந்தால் என்ன செய்வான் ?  "யப்பா, இந்த பசி ரொம்ப பொல்லாதது. ஒரு தரம் துன்பப் பட்டு விட்டோம்.  இனிமேல் இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு மட்டும் அல்ல. என் பெண்டாட்டி பிள்ளைகளும் இந்த பசியால் துன்பப் படக் கூடாது " என்று நினைத்து அதற்கு வேண்டியவற்றை செய்வான் அல்லவா.

அது போல,  மற்றவர்களுக்கு வரும் துன்பத்தையும் ஒருவன் துடைக்க வேண்டும்.  ஏதோ, ஒரு வேளைக்கு உணவு போட்டால் போதாது. எப்படி தன்னுடைய பசி கொடுமையை நிரந்தரமாக போக்க முயல்வானோ, அப்படி மற்றவர்கள்  துன்பத்தையும் போக்க வேண்டும்.

மற்றொன்று, பெண்களின் உடல் ரீதியான பிரச்னைகளை ஆண்கள் அறிந்து கொள்ளவே முடியாது. யோசிக்கலாம். கற்பனை பண்ணி பார்க்கலாம். அப்படி ஒரு பிரசவ வலி தனக்கு வந்தால் என்னவெல்லாம் வேண்டியிருக்கும் என்று  யோசிக்கும் ஒவ்வொரு ஆணும், அதை அந்த பெண்களுக்கும் அளிக்க முயல வேண்டும்.

மற்றொன்று, வீட்டிலோ, அல்லது உறவினருக்கோ, நண்பருக்கோ ஆரோக்கிய குறைவு ஏற்பட்டால், நமக்கு என்னென்ன வேண்டியிருக்கும் என்று  நினைத்து அவர்களுக்கு செய்ய வேண்டும்.

"பிறிதின்" என்றால் என்ன அர்த்தம். பிற மனிதர்கள் மட்டும் அல்ல, பிராணிகள், செடி கொடிகள்,  ஊர்வன, பறப்பன என்று எல்லாமே அந்த "பிறிதின்" என்பதில் அடங்கும். தன்னைத் தவிர மற்ற எல்லாம். நீர் நிலைகள்,  ஆகாயம், ஆறு, குளம், என்று அனைத்தும் அதில் அடங்கும்.

"போற்றா கடை".  போற்றுதல் என்றால் விலக்குதல் , காத்தல் , நீக்குதல், மதித்தல் என்று பல பொருள் உண்டு.


மற்றவர்கள் துன்பத்தை நீக்கினால் மட்டும் போதாது, அது மீண்டும் வராமல் காக்க வேண்டும். வருவதற்கு முன்பே அந்த துன்பங்களை மாற்றி வைக்க உதவி செய்ய வேண்டும்.

சில சமயம், நம்மால் மற்றவர்களின் துன்பத்தை மாற்றவோ குறைக்கவோ முடியாது. அவர்கள் நமக்காக படும் துன்பத்தை கண்டு தலை வணங்குவதைத் தவிர ஒன்றும் செய்து விட முடியாது. ஒரு பெற்றோர் படும் பாட்டுக்கு , ஒரு பிள்ளை என்ன செய்து விட முடியும் ? ஒரு தாயின் பிரசவ வேதனையை , அவள் பெறும் பிள்ளை ஒன்றும் செய்து விட முடியாது. அந்த வலியை பொறுத்துக் கொண்டு தன்னை ஈன்றெடுத்த தாயின் வலியை போற்றலாம். அவ்வளவுதான் செய்ய முடியும்.

"அறிவினான் ஆகுவது உண்டோ "...மற்ற உயிர்களின் துன்பத்தை தன் துன்பமாக நினைக்க அறிவு உள்ளவர்களால் தான் முடியும் .


எவ்வளவுதான் படித்தாலும் மற்றவர்களின் துன்பத்தை தன் துன்பமாக நினைக்க முடியாவிட்டால் அந்த அறிவினால் ஒரு பயனும் இல்லை.

அறிவு என்பது எத்தனை புத்தகங்கள் படித்திருக்கிறோம் என்பதல்ல, எத்தனை பட்டங்கள் பெற்றோம் என்பதல்ல, மற்றவர்களின் துன்பத்தை நம் துன்பமாக  எப்போது நினைக்கிறோமோ அதைப் பொறுத்தது.

"ஆகுவது உண்டோ "  ....சும்மா ஐயோ பாவம், எவ்வளவு துன்பப் படுகிறார்கள் என்று வருத்தப்படுவதோடு நின்று விடக் கூடாது. அது எல்லோராலும் முடியும்.  "ஆகுவது" என்றால் ஆக்க பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும். ஆக்குதல்  என்பதில் இருந்து வந்தது "ஆகுவது". உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும்.

திருக்குறள் என்ற நூலில், ஒரு குறளுக்காவது  முழு அர்த்தமும் கண்டு விட முடியுமா என்று தெரியவில்லை.

கடல் போல் விரிந்து கிடக்கிறது.  அத்தனை பெரிய அறிவுக் கருவூலம்.







Sunday, October 1, 2017

திருக்குறள் - கல்லாதவனின் அறிவு

திருக்குறள் - கல்லாதவனின் அறிவு 


என்னடா இது , தலைப்பே ஒரு மாதிரி இருக்கே என்று பார்க்கிறீர்களா ? கல்லாதவனிடம் அறிவு எப்படி இருக்கும் ?

அது தான் சிக்கலே.

கல்வி அறிவு இல்லாத பலர்,  அறிவுள்ளவர்களைப் போல பேசுவார்கள்.  பல அரசியல்வாதிகள், போலி சாமியார்கள், என்று இன்று நாட்டில் எவ்வளவோ பேர் தங்கள் பேச்சு சாமர்த்தியத்தால் பெரிய அறிவுள்ளவர்களைப் போல காட்டிக் கொள்வார்கள்.

அப்பாவி மக்களும், அவர்களை நம்பி ஏமாந்து அவர்களுக்கு வோட்டுப் போட்டு விடுகிறார்கள், அவர்களை நம்பி பணம் காசை பறி கொடுக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் பேசுவதைக் கேட்டால் படித்த பண்டிதர் மாதிரி இருக்கிறதே. அவ்வளவு உறுதியாக, தெளிவாக பேசுகிறார்களே. எப்படி நம்பாமல் இருப்பது ? அறிவில்லாமலா அப்படி பேசுவார்கள் ?

சரியான கேள்வி தான்.

நீங்கள் கடற்கரைக்கு போய் இருக்கிறீர்களா ? அங்கே , மணலில் நண்டு அங்கும் இங்கும் ஓடும். சில சமயம், அந்த நண்டு ஓடிய மணல் கோடுகள் எழுத்து வடிவில் இருக்கலாம். ஒரு 'ட' போல, ஒரு 'ப' போல , ஒரு 'ர' போல இருக்கலாம். அதற்காக , அந்த நண்டுக்கு தமிழ் தெரியும் என்று நாம் நினைப்போமா ?

அது போல, அறிவில்லாத மடையர்கள் கூட சில சமயம் நன்றாக பேசி விடலாம். அதற்காக , அவர்கள் பெரிய அறிவாளிகள் என்று நினைத்து அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - அறிவுள்ளவர்கள்.


பாடல்

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் 
கொள்ளார் அறிவுடை யார். 

பொருள்

கல்லாதான்  = கற்காதவன்

ஒட்பம் = அறிவுடைமை

கழியநன்று ஆயினும் = மிக நன்றாக இருந்தாலும்

கொள்ளார் = அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

அறிவுடை யார் = அறிவுள்ளவர்கள்

எனவே, ஒருவர் பேசுவதை மட்டும் வைத்து அவரை எடை போட்டு விடக் கூடாது. அதற்கு, நாம் அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அது ஒன்றுதான் , ஏமாறாமல் இருக்க வழி. ***

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post.html

Tuesday, September 26, 2017

திருக்குறள் - வேலை செய்யும் வழி

திருக்குறள் - வேலை செய்யும் வழி 


எந்த ஒரு வேலையையும் எப்படிச்  செய்ய வேண்டும் என்று வள்ளுவர் சொல்லுகிறார்.

என்னிடம் கேட்டால் எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பேன். ஒழுங்காக செய்ய வேண்டும் என்பேன். விடா முயற்சியோடு செய்ய வேண்டும் என்பேன்.

வள்ளுவர் ஆயிற்றே. மிக மிக ஆழமாக சிந்தித்து சொல்கிறார்.

திட்டமிடுதல் என்றால் என்ன ? எதை திட்டமிட வேண்டும் ? எப்படி திட்டமிட வேண்டும் என்றெல்லாம் கேள்வி வரும் அல்லவா ?

அதை எல்லாம் விளக்க ஒண்ணே முக்கால் அடி குறள் போதுமா ? சுருக்கமாகவும் சொல்ல வேண்டும். அதே சமயம் தெளிவாகவும் சொல்ல வேண்டும், அது ஆழமானதாகவும் இருக்க வேண்டும்.

இதோ அந்தக் குறள்

பாடல்

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
           

பொருள்

ஊறொரால் = ஊறு + ஒரால் = ஊறு என்றால் தடை. துன்பம். ஒரால்  என்றால்
நீக்குதல், விலக்குதல்

உற்றபின் = வந்த பின்

ஒல்காமை = தளராமை , நடுங்காமை, சுருங்காமை

இவ்விரண்டின் = இந்த இரண்டின்

ஆறென்பர் = வழி என்பார்

ஆய்ந்தவர் கோள் = படித்து அறிந்தவர்களின் கோட்பாடு


முதலாவது, ஒரு வேலையை தொடங்குமுன் அதில் என்ன எல்லாம் சிக்கல் வரும், தடைகள் வரும்னு சிந்திக்கணும். நமக்கு ஆசையாக இருக்கிறது என்று யோசிக்காமல் கொள்ளாமல் காரியத்தில் இறங்கக் கூடாது.  அது வீடு வாங்குவதாக இருக்கட்டும், திருமணம், வேலை, தொழில் தொடங்குவது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆசை ஒரு புறம், ஆர்வம் ஒரு புறம் இருக்கட்டும். அவற்றை எல்லாம் தள்ளி வைத்து விட்டு , அந்த காரியத்தில் என்ன எல்லாம் தடை வரும், என்ன எல்லாம் சிக்கல் வரும், யார் தடை சொல்வார்கள், யார் இதை தடுக்க அல்லது கெடுக்க நினைப்பார்கள் என்று பட்டியல் போட்டுக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது, அந்த தடைகளை எப்படி வென்றெடுப்பது என்று வழி காண வேண்டும். எந்த காரியத்திலும் சில சிக்கல் இருக்கத்தான் செய்யும். அவற்றை எப்படி சமாளிப்பது என்று சிந்திக்க வேண்டும். அந்த வழி முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது, சரி நாம் எவ்வளவுதான் சிந்தித்து, காரியத்தில் இறங்கினாலும் நாம் எதிர்பாராத சிக்கல்கள், சவால்கள், தடைகள் வராமல் இருக்குமா ? வரும் என்கிறார் வள்ளுவர். நாம் எவ்வளவுதான் முன் கூட்டியே திட்டமிட்டாலும், எதிர்பாராத சிக்கல்கள் வரத்தான் செய்யும்.  நம்மை அதற்கு தயார் படுத்துகிறார். காதலிக்கும் போது உள்ள சுகம் திருமண வாழ்வில் இல்லாமல் போகலாம். இல்லாமல் போகும் என்று நினைக்கச் சொல்கிறார் வள்ளுவர்.

நான்காவது, சரி அப்படி வந்து விட்டால் என்ன செய்வது ? "ஒல்காமை " வேண்டும் என்கிறார். மனம் தளரக் கூடாது. பிரச்சனைகள் வரும். சிக்கல்கள் வரும். மனம் தளராமல் இருக்க வேண்டும். போராட வேண்டும்.

ஐந்தாவது, இதுதானா வழி. வேற வழி இல்லையா என்றால் , ஆராய்ந்து அறிந்த அறிஞர்கள் கண்ட வழி இது. உங்களுக்கு வேறு வழி தெரிந்தால் அதிலும் போகலாம். எதுக்கு சிரமப் படவேண்டும். நமக்காக சிரமப்பட்டு கண்டு பிடித்து வைத்திருக்கிறார்கள். அந்த வழியிலேயே போவது எளிதுதானே.

வாழ்க்கை என்பதே சிக்கல்களை, துன்பங்களை , சவால்களை , பிரச்சனைகளை எதிர்பார்த்து இருப்பதும், அவற்றை நீக்க போராடுவதும்தான். வேறு அல்ல.

ஒண்ணே முக்கால் அடியில் வாழ்க்கைத் தத்துவத்தை தருகிறார் வள்ளுவர்.

படிப்போம். நடக்க முயற்சிப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/09/blog-post_26.html

Monday, September 25, 2017

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில்

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில் 


வான் பொய்ப்பதும், பஞ்சம் வருவதும் என்றும்  உள்ளது தான்.

அது ஒரு வானம் பார்த்த பூமி. மழை வந்தால் , வாழ்க்கை.

ஏனோ தெரியவில்லை இரண்டு மூன்று ஆண்டுகளாய் கோபம் கொண்ட காதலியாய் வானம் முகம் திருப்பிக் கொண்டு போய் விட்டது. ஒரு புல் பூண்டு கூட இல்லை. பூமி கட்டாந்தரையாக போய் விட்டது. பஞ்சம் பிழைக்க ஊர் மக்கள் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக ஊரை காலி செய்து விட்டு போய் விட்டார்கள். செத்தாலும் இந்த மண்ணிலேலேயே சாவோம் என்று ஒரு சில வயதானவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அந்த ஊரில் இருக்கிறார்கள். மரங்களில் விளையாடும் அணில் சுதந்திரமாக வீடுகளுக்குள் சென்று வருகிறது. வீட்டை காலி பண்ணி விட்டு சென்றவர்கள் விட்டுச் சென்ற நெல் மணிகள், தானியங்கள், என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் இப்படி தின்கின்றன. வீடு திறந்து கிடக்கிறது. உள்ளே என்ன இருக்கிறது பூட்டி வைக்க ? அணில் தொட்டி முத்தத்தில் விளையாடுகிறது.  மற்றபடி ஊரில் உயிர் இல்லை.

இன்றுதான் அப்படி.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் , இந்த கிராமம் எப்படி இருக்கும் தெரியுமா ? தேரும் திருவிழாவும், ஆட்டமும் பாட்டமும், குதூகலமாய் இருந்தது. மாடு கன்னு ஒரு புறம், வண்டிகள் அசைத்து செல்வது ஒருபுறம், தெருவோரக் கடைகளும், பாடும் கூத்துமாய் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

இன்று, எல்லாம் கனவாய் பழங்கதையாய் போய் விட்டது.

அவளுக்கு அந்த ஊர் சொந்த ஊர் அல்ல. ஆனால் அந்த ஊருக்கு வந்து போனவள். சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்ததையும் பார்த்து இருக்கிறாள். இப்போது வெறிச்சோடிப் போன ஊரையும் பார்க்கிறாள்.

அவள் காதலன் அவளை விட்டு விட்டு வெளியூர் போயிருக்கிறான் - பொருள் தேட.

அவனில்லாத வெறுமை அவளை வாட்டுகிறது.

ஒரு விதத்தில் இந்த ஊர் போலத்தான் தன் வாழ்வும் என்று நினைக்கிறாள்.

அவன் இருந்த போது சந்தோஷமும், மகிழ்ச்சியாக இருந்தாள்.

அவன் இல்லாத போது வெறுமை சூழ்ந்து , சோகத்தில் இருக்கிறாள்.

அந்த கிராமம் போல.

பாடல்


காதலர் உழையராகப் பெரிதுவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே.


பொருள் 

காதலர் = காதலர்

உழையராகப் = உடன் இருந்த போது

பெரிதுவந்து = பெரிது உவந்து

சாறுகொள் = சாரம் நிறைந்த

ஊரின்  = ஊரில்

புகல்வேன்  = புகுந்தது போல இருந்தது

மன்ற = ஆனால்

அத்தம் நண்ணிய = பாலை நில வழி சென்ற

அங்குடிச் = அந்த குடிமக்கள் நிறைந்த

சீறூர் = சிறந்த ஊர்

மக்கள் போகிய = மக்கள் எல்லாம் போன பின்

அணிலாடு முன்றில் = அணில் ஆடும் முன் இல். இல்லத்தின் முன்னே, திண்ணையில் அணில் விளையாடும்

புலப்பில் = புலப்பு + இல் = தனிமையான இல்லம்

 போலப் = போல

 புல்லென்று = பொலிவு இழந்து

அலப்பென் தோழி = வருத்தம் கொள்வேன் தோழி

 அவர் அகன்ற ஞான்றே = அவர் என்னை விட்டு பிரிந்த பொழுது .

யாருக்காக வருந்துவது ? பிறந்து வளர்ந்த ஊரை விட்டு பஞ்சம் பிழைக்க எங்கோ சென்ற  அந்த மக்களை நினைத்தா ? சொந்த வீட்டை திறந்து போட்டு விட்டு, இனிமேல் திரும்பி வரும் எண்ணமே இல்லாமல் , இறுதியாக  விலகிப் போன  அந்த மக்களை நினைத்தா அல்லது

காதலனைப் பிரிந்து வாடும் அந்த இளம் பெண்ணை நினைத்தா ?

எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்தும் அந்த ஊரின் சோகம், அதன் தனிமை, அந்த மக்களின் சோகம் மனதுக்குள் என்னவோ செய்கிறது என்பது உண்மை.

http://interestingtamilpoems.blogspot.in/2017/09/blog-post_47.html




Saturday, September 23, 2017

திருக்குறள் - உருவு கண்டு எள்ளாமை வேண்டும்

திருக்குறள் - உருவு கண்டு எள்ளாமை வேண்டும் 


உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.

உருவத்தைப் பார்த்து ஒருவரை கேலி செய்யக் கூடாது. உருண்டு வரும் பெரிய தேருக்கு அச்சாணி போல உள்ளவர்களை உடையது உலகு

அவ்வளவுதானே. எளிமையான குறள் தானே . கடினமான சொல் எதுவும் இல்லையே. இதுக்கு எதுக்கு விளக்கம் என்று நினைப்போம்.

ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க குறளின் ஆழம் புரியும்.

வாருங்கள், சிந்திப்போம்.

அச்சாணி = அச்சாணி என்ன செய்கிறது ? தேரின் சக்கரம் கழண்டு விழாமல் தடுத்து நிறுத்துகிறது. அதை , எப்படி செய்கிறது ? பெரிய புத்திசாலித்தனம் கிடையாது, சிக்கலான வடிவம் கிடையாது. பின் எப்படி செய்கிறது என்றால், உறுதியாக , என்ன வந்தாலும் சரி, எவ்வளவு பாரம் வந்தாலும் சரி, எவ்வளவு அழுத்தம் வந்தாலும் சரி , இந்த சக்கரம் கழண்டு விழ விடுவதில்லை என்று உறுதியோடு இருக்கிறது.  அத்தனை பாரத்தையும் தாங்கிக் கொண்டு, தேரை நல்லபடி கொண்டு செல்ல உதவுகிறது. அது போல, ஒரு வீட்டை, நாட்டை, நிறுவனத்தை நல்லபடி கொண்டு செல்ல வேண்டும் என்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை, கடமை இருக்கும். அதை, விடாப் பிடியாக , உறுதியாக செய்ய வேண்டும். அப்போதத்தான், அந்த வீடோ, நிறுவனமோ, நாடோ தடுமாறி விழாமல் செல்லும்.

இரண்டாவது,  "உருள் பெரும் தேர்".   தேர் என்றால் வெறும் தேர் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.  வீடு, நாடு, நிறுவனம், அனைத்துக்கும் அது ஒரு உவமை.


மூன்றாவது,  தேரில் சப்பரம் தெரியும், வடம் தெரியும், அதில் உள்ள சாமி சிலை தெரியும், கும்பம் தெரியும், பூ வேலைப்பாடு தெரியும், சக்கரம் கூட தெரியும். ஆனால், இந்த அச்சாணி தெரியாது.  "இந்த தேர் விழாமல் இருக்க நான் தான் காரணம்.  என்னை யாரும் கண்டு கொள்வதில்லை" என்று அச்சாணி நினைத்து , கழண்டு முன்னால் வந்து நின்றால் , என்ன ஆகும் ?  அச்சாணி  அங்கு தான் இருக்க வேண்டும். அது போல, வீட்டை, நாட்டை கொண்டு செல்லும் சிலர்   இருப்பார்கள். அவர்கள் வெளியே தெரிவது இல்லை. அதற்காக  அவர்களை உதாசீனப் படுத்தக் கூடாது.

நான்காவது,  அச்சாணி எவ்வளவு பெரிய வேலை செய்கிறது. அதற்காக அதை  தங்கத்தால் செய்து போட முடியுமா  ?  அது இரும்பில் தான் செய்யப் பட வேண்டும். சாதாரண இரும்புதானே, இது என்ன பெரிய மதிப்பு உள்ளதா என்று  கேலி செய்யக் கூடாது.

ஐந்தாவது, "நான் இந்த வீட்டுக்கு எவ்வளவு செய்து இருக்கிறேன். ஒரு நன்றி இல்லை. அவனுக்கு எவ்வளவு உதவி செய்து இருக்கிறேன், கடைசியில் இப்படி செய்து விட்டானே..." என்றெல்லாம் பேசக் கேட்டு இருக்கிறோம். ஒரு அச்சாணி  தேய்து போய் விட்டால் என்ன செய்வார்கள். ? அடடா , எவ்வளவு உதவி செய்தது இத்தனை நாள் என்று அதை யாரும் தூக்கி தேரில் வைப்பது இல்லை. தேய்ந்து போய் விட்டால் , வேறு அச்சாணி போடுவார்கள். பழையதை தூக்கி போட்டு விடுவார்கள்.  அதற்காக அந்த அச்சாணி நொந்து பயனில்லை. அது போல, நாம் நமது வீட்டுக்கோ, நாட்டுக்கோ, நிறுவனத்துக்கோ எவ்வளவு செய்து இருப்போம். நமது தேவை தீர்ந்து போனால், அடுத்தவரை நாடுவார்கள்.  நாம் அதை நினைத்து நொந்து கொள்வதில் அர்த்தம் இல்லை. உலகம் அப்படித்தான் இருக்கும்.

ஆறாவது, "அன்னார் உடைத்து" : இந்த நன்றி கெட்ட உலகில், நான் எதுக்கு அச்சாணி போல கிடந்து  உழல வேண்டும் ? ஒரு மதிப்பும் இல்லை, காரியம் முடிந்தவுடன் தூக்கி எறிந்து விடுகிறார்கள். எனக்கு அச்சாணியாக இருக்க விருப்பமில்லை என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள். அப்படி சொல்கிறவர் மத்தியில் , அச்சாணியாக  இருந்து, சுயநலம் இன்றி நாட்டையும், வீட்டையும், நிறுவனத்தையும் கொண்டு செல்லும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை உடையது உலகம் என்கிறார்.  சில பேர் அப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். அவரக்ளை இந்த உலகம்  "பிழைக்கத் தெரியாதவன்", "அப்பாவி", " பாவம் " என்றெல்லலாம் கேலி பேசும். கேலி பேசக் கூடாது என்கிறார்.  அவர்களால் தான் இந்த உலகம் என்ற தேர் உருண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

ஏழாவது, "எள்ளாமை வேண்டும் "  தேரின் அளவைப் பார்த்தால் , அச்சாணியின் அளவு மிக மிக சிறியதுதான். தேரின் மதிப்பைப் பார்த்தால், அச்சாணியின் மதிப்பு ஒன்றும் இல்லைதான்.  அதற்காக அதை கேலி பேசக் கூடாது.


எட்டாவது, நாம் வாழ்க்கையில் எவ்வளவோ பெரிய சாதனைகளை புரிந்து இருப்போம்.  பெரிய பதவி, அதிகாரம், செல்வம், செல்வாக்கு என்று எல்லாம் வந்திருக்கும். நாம் இந்த இடத்தை அடைய நமக்கு பலர் உதவி செய்து இருப்பார்கள். குறிப்பாக நமது ஆசிரியர்கள், நண்பர்கள், உடன் பிறப்புகள் என்று பலர் பலவித சோதனைகளை தாங்கிக்  கொண்டு நம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்து  சேர்த்திருப்பார்கள். இப்போது திரும்பிப் பார்த்தால், அவர்கள் அற்பமாக தெரியலாம்.  "ஹா, அவர் இல்லாவிட்டால் நான் உயர்ந்திருக்க மாட்டேனா " என்று எள்ளாமை வேண்டும்.

சிந்தித்துப் பாருங்கள்.

எவ்வளவு அர்த்தம் விரியும் என்று.

புதையல். தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/09/blog-post_23.html

Saturday, September 2, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - இவன் ஆவி கவர்க

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - இவன் ஆவி கவர்க 


முன் கதைச் சுருக்கம்:

ஒரு வேதியன்  தன்னுடைய மனைவி மற்றும் கைக் குழந்தையோடு மதுரை நோக்கி வனது கொண்டிருந்தான். நடுவில், மனைவி நீர் வேண்டும் என்று கேட்கவே, அவளை ஒரு மரத்தடியில் இருத்திவிட்டு, நீர் கொண்டு வரச் சென்றான். அப்போது அந்த மரத்தின் மேல் சிக்கியிருந்த ஒரு அம்பு காற்றில் கீழே விழுந்தது. விழுந்த அம்பு, அந்த வேதியனின் மனைவியின் வயிற்றில் பாய்ந்ததால் அவள் இறந்து போனாள். நீர் கொண்டுவந்த வேதியன் இறந்து கிடக்கும் மனைவியைப் பார்த்தான். இவளை யார் கொன்று இருப்பார்கள் என்று சுற்று முற்றும் பார்த்த போது , அங்கு ஒரு வேடன் இருப்பதைக் கண்டு, அவன்தான் கொன்றிருக்க வேண்டும் என்று நினைத்து அவனை பாண்டிய மன்னனிடம் கொண்டு சென்றான்.

வேடனை தண்டிக்க வேண்டும் என்று வேதியன் வேண்டுகிறான்.

தான் கொல்லவே இல்லை என்று வேடன் சாதிக்கிறான்.

அமைச்சர்களும், இதற்கு நூல்களில் ஒரு வழியும் இல்லை. இறைவன் தான் வழி காட்ட வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.

பாண்டியன் இறைவனிடம் முறையிட்டான். அப்போது, "இந்த ஊரில் உள்ள வணிகத் தெருவில் ஒரு திருமணம் நடக்கிறது. அங்கு நீ அந்த வேதியனோடு சென்று பார். உன் குழப்பத்தை தீர்த்து வைப்போம்" என்று அசரீரி சொல்லக் கேட்டு, மன்னனும் வேதியனும் அங்கு சென்றார்கள்.

அப்போது, இறை அருளால், இரண்டு எம தூதர்கள் பேசுவது அவர்களுக்குக் கேட்டது.

இரண்டு பேரில் ஒருவன் கேட்கிறான் "இந்த வீட்டில் உள்ள மணமகனின் வாழ் நாள் முடிந்து விட்டது. அவன் உயிரை கொண்டு வரும்படி நம் தலைவர் சொல்லி இருக்கிறார். இவனுக்கோ ஒரு நோயும் இல்லை. இவன் உயிரை எப்படி எடுப்பது" என்று கேட்கிறான்.

இது முன் கதைச் சுருக்கம்.

இப்போது

அதற்கு இன்னொரு தூதன் சொல்கிறான்,

"எப்படி ஆல மரத்தில் முன்பே சிக்கியிருந்த அம்பை காற்றால் வீழ்த்தி பார்பனியின் உயிரைக் கவர்ந்தோமோ அப்படி, இந்த திருமண ஆரவாரத்தில் வெளியே கட்டியிருக்கும் கன்றை ஈன்ற பசுவை வெருண்டு ஓடச் செய்து , இவனை குத்த வைத்து இவன் உயிரைக் கவர்வோம்"

என்றான்.

பாடல்


ஆற்று ஆல் ஏறு உண்ட கணை அருகு ஒதுங்கும் பார்ப்பனியைக் 
காற்றுஆல் வீழ்த்து எவ்வாறு கவர்ந்தோம் அப்படி  இந்தச் 
சாற்று ஆரவாரத்தில் தாம்பு அறுத்துப் புறம் நின்ற 
ஈற்று ஆவை வெருள விடுத்து இவன் ஆவி கவர்க  என்றான்.


பொருள்


ஆற்று = வழி , வழியில் உள்ள

ஆல் = ஆலமரத்தில்

ஏறு உண்ட = ஏறியிருந்த

கணை = அம்பை

அருகு = அருகில்

ஒதுங்கும் = ஒதுங்கி இருந்த

பார்ப்பனியைக் = பார்பனப் பெண்ணை

காற்றுஆல் = காற்றினால்

வீழ்த்து = விழச் செய்து

எவ்வாறு கவர்ந்தோம் = எப்படி கவர்ந்தோமோ

அப்படி = அப்படி

இந்தச் = இந்த

சாற்று ஆரவாரத்தில் = பெரிய ஆரவாரத்தில்

தாம்பு அறுத்துப் = கட்டியிருக்கும் கயிற்றை அறுத்து

புறம் நின்ற = வெளியே நிற்கும்

ஈற்று ஆவை = கன்றை ஈன்ற பசுவை

வெருள = பயந்து ஓடும்படி

விடுத்து = செய்து

இவன் ஆவி  = இவனுடைய ஆவியை

கவர்க  என்றான் = கவர்ந்து கொள்வோம் என்றான்.


"ஆற்று ஆல் ஏறு உண்ட கணை" என்ற வரியில், ஆற்று என்ற சொல் வருகிறது. 

ஆறு என்றால் வழி. 


ஆற்றுப் படை என்று ஒரு பாடல் வகை உண்டு.  அதாவது, ஒரு தலைவனிடம் நன்மையைப் பெற்ற ஒருவன், மற்றவனை அதே வழியில் சென்று நன்மை அடைய வழி காட்டுவது. 

ஒரு புலவன் அரசனை பாடி பரிசு பெற்றால், மற்ற புலவர்களுக்கும் அதை எடுத்துச் சொல்லி அவர்களை  ஆற்றுப் படுத்துவது.

நக்கீரர் முருகன் அருள் பெற்றார். மற்றவர்களும் முருகன் அருள் பெற வழி சொல்லித் தந்த பாடல்களுக்கு  திருமுருகாற்றுப் படை என்று பொருள். 

சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை என்று பாடல்கள் உண்டு. 


கதை எப்படி போகிறது என்று பாருங்கள். 


திருமண வீடு. மணமகன் சாகப் போகிறான். எப்படி இருக்கும் ? ஒரு படபடப்பு  நமக்குள் வருகிறது அல்லவா ? 

வாசிக்கும் நமக்குத் தெரியும்.  அங்குள்ள யாருக்கும் தெரியாது. 

அடுத்து என்ன ஆகிறது என்று பார்ப்போம் 

Wednesday, August 30, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - என் செய்தும் ?

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - என் செய்தும் ?


இதற்கு முந்தைய கதை சுருக்கங்களை முந்திய ப்ளாகுகளில் காணவும்.

இறைவன் ஆணைப்படி மன்னனும், வேதியனும் அந்த திருமண வீட்டில் மறைந்து இருந்து அங்கு நடப்பவற்றை கவனித்து வந்தார்கள். அப்போது எம தூதர்கள் இவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"இன்றே இந்த மணமகனின் உயிரை கொண்டு வரும்படி நம் தலைவர் சொல்லி இருக்கிறார். இவன் உடலிலோ ஒரு நோயும் இல்லை. எப்படி இவன் உயிரை கொண்டு செல்வது ? " என்று ஒரு எம தூதன் இன்னொருவனிடம் கேட்டான்.

பாடல்

இன்றே இங்கு இவன் உயிரைத் தருதிர் எனும் இரும்   பகட்டுக் 
குன்று ஏறும் கோன் உரையால் கொள்வது எவன் பிணி உடம்பின் 
ஒன்றேன் உமிலன் ஒரு காரணம் இன்றி உயிர்  கொள்வது 
அன்றே என் செய்தும் என மற்றவன் ஈது  அறைகிற்பான்.

பொருள்

இன்றே = இன்றே

இங்கு = இங்கு

இவன் = இவன்

உயிரைத் தருதிர் = உயிரை எடுத்து வாருங்கள்

எனும் = என்று

இரும்  = பெரிய

பகட்டுக் = எருமை

குன்று = மலை போன்ற

ஏறும் கோன் = (மலை போன்ற பெரிய எருமையின் மேல் ) ஏறும் அரசன், நம் தலைவன் = எமன்

உரையால் = ஆணையால்

கொள்வது எவன் = எப்படி இவன் உயிரை கொள்வது ?

பிணி உடம்பின் ஒன்றேன் உமிலன் = உடம்பில் ஒரு நோயும் இல்லை

ஒரு காரணம் இன்றி = ஒரு காரணமும் இல்லாமல்

உயிர்  கொள்வது = உயிரை எப்படி கொண்டு செல்வது ?

அன்றே என் செய்தும் = இப்போது என்ன செய்வது ?

என = என்று சொன்ன போது

மற்றவன் ஈது  அறைகிற்பான் = இன்னொரு தூதுவன் சொல்லுவான்

நமது இலக்கிய கர்தாக்கள் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பினார்கள். இறைவன், விதி, மேல் உலகம், பாவம் , புண்ணியம் என்பதெல்லாம் உண்டு என்று நம்பினார்கள். 

திருவள்ளுவர், கம்பர் தொட்டு பாரதி வரை அனைவரும் இதை நம்பினார்கள். 

நமது வாழ்வில் நடக்கும் பல விஷயங்களுக்கு நமக்கு காரணம் தெரிவதில்லை. ஏன், இப்படி நிகழ்கிறது. நேத்து வரை நல்லாத்தானே இருந்தார், எப்படி திடீரென்று இப்படி ஆகி விட்டது என்று கேட்கும்படி ஆகி விடுகிறது.

நல்லவர்களுக்கு தீமை நிகழ்வதும், தீயவர்களுக்கு நன்மை நிகழ்வதும் புரிந்து கொள்ள முடிவதில்லை. 

நமது சக்திக்கு அப்பாற்பட்ட சில விஷயங்கள் இருக்கிறது என்று அவர்கள் நம்பினார்கள். 

இறையருள் இருந்தால் அவற்றை அறிந்து கொள்ள முடியும் என்று இந்தப் பாடல் காட்டிச் செல்கிறது. 

"இரும்   பகட்டுக்  குன்று ஏறும் கோன்"

பகடு என்ற சொல்லுக்கு எருமை, யானை, எருது என்ற பல பொருள் இருக்கிறது. இந்தப் பாடலில் எருமை கடா என்ற பொருள் பொருந்தி வருகிறது. 

பகடு நடந்த கூழ் என்று சொல்லும் நாலடியார். அதாவது எருது உழுத நிலத்தில் இருந்து வந்த உணவு என்ற பொருளில்....

துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க ;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.


அபிராமியை தொழுதால் , "வெண் பகடு ஊறும் பதம்" கிடைக்கும் என்கிறார் அபிராமி பட்டர். வெண் பகடு என்றால் வெள்ளை யானை, ஐராவதம், அதாவது இந்திரப் பதவி கிடைக்கும் என்கிறார். 


மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன் 
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை 
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு, 
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.

என்பது அபிராமி அந்தாதி. 


Tuesday, August 29, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொடும் பாசக் கையினர்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொடும் பாசக் கையினர் 


தன் மனைவியை வேடன் தான் கொன்று விட்டான் என்று ஒரு வேதியன் பாண்டிய மன்னனிடம் முறையிட்டான். வேடனோ, தான் கொல்லவில்லை என்கிறான். அமைச்சர்களும் , தங்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை என்று சொல்லி விட்டார்கள். அப்போது, அரசன், இறைவனிடம் முறையிட்டான்.  அப்போது, ïஇந்த ஊரில் , வணிகர் தெருவில் ஒரு திருமணம் நடக்கிறது. அங்கு , அந்த மறையவனையும் அழைத்துக் கொண்டு வா, உன் சந்தேகத்தை போக்குவோமென்று" அசரீரி கேட்டது.

அரசனும், அந்த வேதியனை அழைத்துக் கொண்டு, இரவில் அந்தத் திருமண வீட்டுக்குச் சென்றான். இருவரும் இருளில் மறைந்து இருந்து அங்கு நடப்பவற்றை கண்டனர்.

அப்போது, அங்கு இரண்டு எம தூதர்கள் வந்தார்கள். இறைவன் அருளால், அவர்கள் பேசுவது எல்லாம் அரசனுக்கும், அந்த மறையவனுக்கும் கேட்டது.

பாடல்

அன்று இறைவன் அருளால் அங்கவர் கேட்க அம்மனையின்
மன்றல் மகன் தனக்கு அளந்த நாள் உலப்ப மறலி  இருள்
குன்றம் இரண்டு என விடுத்த கொடும் பாசக் கையினர்  வாய்
மென்று வரும் சினத்தவரில் ஒருவன் இது வினவும்  ஆல்.


பொருள்

அன்று  = அன்று

இறைவன் அருளால் = இறைவன் அருளால்

அங்கவர் = அங்கு அவர்கள்

கேட்க  = கேட்கும்படி

அம்மனையின் = அந்த திருமண வீட்டில்

மன்றல் மகன் தனக்கு = மணமகன் தனக்கு

அளந்த நாள் = கொடுத்த நாட்கள்

 உலப்ப = முடிவதால்

மறலி = எமன்

இருள் = கரிய

குன்றம்  = குன்றுகள்

இரண்டு = இரண்டு

என = போல

விடுத்த = அனுப்பிய

கொடும் பாசக் கையினர் = கொடிய பாசக் கயிற்றினை கொண்டவர்கள்

வாய் மென்று  = வாயை மென்று கொண்டு (அதாவது உதட்டை கடித்துக் கொண்டு)

வரும் சினத்தவரில் = வருகின்ற சினத்தால்

ஒருவன் இது வினவும்  ஆல் = ஒருவன் இப்படி கேட்டான்


"மறலி  இருள் குன்றம் இரண்டு என விடுத்த"

மறலி என்றால் எமன்.

மறல் + இ = மறலி . மறத்தல் இல்லாதவன். யாரை எப்போது கொண்டு போக வேண்டும் என்று மறக்காமல்  அந்த நேரத்தில் கொண்டு போய் விடுவான். அந்த வேதியனின் மனைவியின் வாழ் நாள் முடிந்து விட்டது. எனவே, மறக்காமல் கொண்டு போய் விட்டான் என்ற உள் குறிப்பு.

மறலி என்றால் மாறுதல் இல்லாதவன். நல்லவர், கெட்டவர் , உயர்ந்தவர் , தாழ்ந்தவர், படித்தவர், படிக்காதவர் என்று எந்த மாறுதலும் இல்லாதவன். எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பவன்.

மறலி வந்து நம் உயிரை எடுத்துக் கொண்டு போவான் அல்லவா ? அவன் வரும் வழியை அடைத்து விட்டால் ? எப்படி வருவான் ?

அவன் வரும் வழியை அடைக்கும் வழியை அபிராமி பட்டர் கூறுகிறார்.

அபிராமியை மனதில் நினைத்துக் கொண்டால் போதும்.  அவன் வரும் வழி அடைந்து விடும்.

"மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி" என்பார் அபிராமி பட்டர்.

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி
வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே

என்பது அபிராமி அந்தாதி.

அந்த எம தூதர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் ?

கேட்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_29.html

Sunday, August 27, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - உளம் தேறா மாற்றம் எலாம் தேற்றுதும்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - உளம் தேறா மாற்றம் எலாம் தேற்றுதும் 

தன் மனைவியை வேடன் தான் கொன்றான் என்று வேதியன் குற்றம் சுமத்தி வேடனை அரசன் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான். வேடனோ தான் கொலை செய்யவில்லை என்று சாதிக்கிறான். அமைச்சர்களோ , "இது அற நூல்களை படித்து தீர்க்க முடியாது. இறைவன் தான் வழி காட்ட வேண்டும் " என்று கை விரித்து விட்டார்கள்.

பாண்டியன் நேரே கோவிலுக்குப் போனான். அங்கிருந்த சிவனிடம் முறையிட்டான்.

அப்போது

"இந்த ஊரின் வெளியில் ஒரு வணிகத் தெரு இருக்கிறது. அந்தத் தெருவில் ஒரு திருமணம் நடக்கவிருக்கிறது. அந்தத் திருமண வீட்டுக்கு நீ அந்த மறையவனை அழைத்துக் கொண்டு வா. உன் மனதில் உள்ள குழப்பங்களை எல்லாம் தீர்த்து வைப்போம் "

என்று அசரீரி வானத்தில் இருந்து வந்தது.


பாடல்

திரு நகரின் புறம்பு ஒரு சார் குலவணிகத் தெருவின் கண் 
ஒரு மனையின் மணம் உளது அங்கு அந்தணனோடு ஒருங்கு நீ 
வருதி உனது உளம் தேறா மாற்றம் எலாம் தேற்றுதும் என்று 
இரு விசும்பின் அகடு கிழித்து எழுந்தது ஆல் ஒருவாக்கு.


பொருள்


திரு நகரின் = இந்த ஊரின்

புறம்பு = வெளியே

ஒரு சார்  = ஒரு பக்கத்தில்

குலவணிகத் = வணிக குலத்தவர்கள் வாழும்

தெருவின் கண் = தெருவில்

ஒரு மனையின் = ஒரு வீட்டில்

மணம் உளது = திருமணம் நடக்க இருக்கிறது

அங்கு  = அந்த வீட்டுக்கு

அந்தணனோடு = மறையவனோடு

ஒருங்கு நீ = ஒன்றாக நீ

வருதி = வா

உனது = உன்

உளம் = உள்ளம்

தேறா = தேற்றம் அடையாத

மாற்றம் எலாம் = மாறுதலான என்=எல்லாம்

தேற்றுதும் = தெளிவாக்குவோம்

என்று = என்று

இரு விசும்பின் = பெரிய வானத்தில் இருந்து

அகடு =  உள்ளிருந்து

கிழித்து = வெளிப்பட்டு

எழுந்தது = எழுந்தது

ஆல் = அசைச் சொல்

ஒருவாக்கு = ஒரு ஒலி (அசரீரி)

இறைவன் , உடனே இது தான் உண்மை. இப்படிச் செய் என்று சொல்லவில்லை. நீ அந்த கல்யாண வீட்டுக்கு வா. உன் மனதில் உள்ள குழப்பங்களை தீர்க்கிறேன் என்றான் .

ஒரு வேளை இறைவன் , இது தான் உண்மை என்று சொல்லி இருந்தால், வேதியன் நம்பி இருக்க மாட்டான்.  இந்த அரசன் ஏதோ மாயம் பண்ணி இப்படி செகிறான்  என்று சந்தேகம் கொண்டிருப்பான்.

நீ நேரில் அங்கு வா. வரும்போது அந்த அந்தணனையும் அழைத்துக் கொண்டு வா என்று சொல்லி விட்டான்.

அங்கு என்ன நடந்தது என்று அங்கு போனால் தான் தெரியும்.

வாருங்கள் போவோம் .

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_27.html

Saturday, August 26, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - தெய்வத்தாலே தேறும் வழி

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - தெய்வத்தாலே தேறும் வழி



ஒரு புறம் தன் மனைவியை , கானகத்தில், ஆல மரத்தின் கீழ் இளைப்பாறும் போது கொன்றவன் இந்த வேடன் தான் என்று குற்றம் சுமத்தும் வேதியன்.

நான் கொல்லவில்லை , யார் கொன்றார்கள் என்றும் எனக்குத் தெரியாது என்று சாதிக்கும் வேடன் மறுபுறம்.

இதற்கு அற நூல்கள் என்ன சொல்கின்றன என்று அமைச்சர்களிடம் கேட்டான் பாண்டிய மன்னன்.

அவர்களும் அற நூல்களை ஆராய்ந்தபின், இதை புத்தகம் படித்து அறிந்து சரி செய்ய முடியாது. இது தெய்வத்தால்தான் ஆகும் என்று கூறினார்.

பாடல்

என்னா உன்னித் தென்னவன் இன்னம் இது முன்னூல் 
தன்னால் ஆயத்தக்கது அதை என்றன் தகவிற்று தன் 
அன்னார் அந்நூல் ஆய்ந்து இது நூலால் அமையாது                                                          ஆல் 
மன்னா தெய்வத் தாலே தேறும் வழி என்றார்.


பொருள்

என்னா உன்னித் = என்று எண்ணி

தென்னவன் = பாண்டிய மன்னன்

இன்னம்  இது = இனிமேல் இது

முன்னூல் = முன்பு சொல்லப் பட்ட அற நூல்கள்

தன்னால் = அவற்றின் மூல

ஆயத்தக்கது = ஆராயத் தக்கது

அதை = அதை

என்றன் = எனக்கு

தகவிற்று = உயர்ந்தவர்கள் (அமைச்சர்கள்)

தன் அன்னார் = தன்னைப் போன்றவர்கள்

அந்நூல் = அந்த நூல்களை

ஆய்ந்து   = ஆராய்ந்த பின்னால்

இது நூலால் அமையாது    = இதை நூல் அறிவின் மூலம் தீர்க்க முடியாது

மன்னா  = மன்னவனே

தெய்வத் தாலே = தெய்வத்தால் மட்டுமே

தேறும் வழி  = சரியாகும் வழி

என்றார். = என்று கூறினார்கள்


"தகவிற்று தன் அன்னார் அந்நூல் ஆய்ந்து"

தகவு என்றால் தகுதி உடையவர்.   

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தால் காணப் படும்.


என்பது வள்ளுவம். 

ஒருவன் தகுதி உடையவனா , அல்லது தகுதி இல்லாதவனா என்பது அவனுக்குப் பின் நிற்கும் அவனுடைய புகழோ , பழியோ அதைப் பொறுத்தே அமையும் என்கிறார் வள்ளுவர். 

அது பற்றி விரிவாக இன்னொரு பிளாகில் பார்ப்போம். 

தகுதி உடைய  உடையவர்களை  பாண்டிய மன்னன் அமைச்சர்களாக கொண்டிருந்தான். 

எப்போதும் நல்லவர்களை , நம்மை விட அறிவும் தகுதியும் உள்ளவர்களை நம்மோடு வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டும் அல்ல, அவர்கள் சொல்வது எவ்வளவு கடினமாக இருந்தாலும் , அதை கேட்டு நடக்க வேண்டும். 

இடிப்பாரை இல்லா எமரா மன்னன் கெடுப்பார் இன்றியும் கெடும் என்பார் வள்ளுவர். 

நம்மை , நல்லது சொல்லி திருத்தும் நண்பர்கள் இல்லை என்றால், எதிரிகள் இல்லாமலேயே கூட நம் வாழ்வை கெட்டுப் போகும். 

அப்படிப்பட்ட நல்லவர்கள், அற நூல்களை ஆராய்ந்த பின், இந்த சிக்கலுக்கு அந்த நூல்களில் தீர்வு இல்லை. ஆண்டவனிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்கள். 


அறிவின் எல்லையை அவர்கள் அறிந்து இருக்கிறார்கள். 

கல்வியின் பயன் இறைவனைத் தொழுதல் என்பார் வள்ளுவர். 

கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாழ் தொழாஅர் எனின். 

அந்த அறிஞர்கள் மன்னனிடம் சொன்னார்கள் "இதற்கு தீர்வு இறைவனிடம் தான் இருக்கிறது " என்று. 

சட்ட புத்தங்களைத் தாண்டி, அற நூல்களைத் தாண்டி , நீதியை தேடி இருக்கிறார்கள். "சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது ..."என்று இந்தக் காலத்தில் நீதிபதிகள் செய்வது போல தீர்ப்பு சொல்லாமல்  இறை அருளை நாடி இருக்கிறார்கள். 

பாண்டியன் கோவிலுக்குப் போகிறான். சிவனிடம் முறையிடுகிறான். 

சிவன் என்ன சொன்னார் ? இந்த வழக்கு எப்படி தீர்ந்தது ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_26.html

Friday, August 25, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொன்று என் பெற வல்லான்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொன்று என் பெற வல்லான் 


ஒரு புறம் மறையவன் தன்னுடைய மனைவியை வேடன் தான் கொன்றான் என்று குற்றம் சுமத்துகிறான்.

இன்னொரு புறம் , வேடனோ, தான் கொல்லவும் இல்லை, கொன்றவரை காணவும் இல்லை என்று சாதிக்கிறான்.

வேறு எந்த சாட்சியும் இல்லை.

பாண்டிய மன்னன் யோசிக்கிறான்.

"இந்த வேடனோ தண்டனைக்கு அஞ்சுபவனாய் தெரியவில்லை. அவனுடைய பேச்சு முன்னுக்கு பின் முரணாக இல்லாமல் சரியாக இருக்கிறது. ஆளைப் பார்த்தாலும் கொலை செய்தவனைப் போலத் தெரியவில்லை. எதிரியே, விலங்கோ, பறவையோ என்றால் இவன் வேட்டை ஆடியிருப்பான். இந்த அப்பாவி பெண்ணை கொன்று இவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது. கொல்ல ஒரு முகாந்திரமும் இல்லை"   என்று மன்னன் சிந்திக்கிறான்.

பாடல்

ஆற்ற ஒறுக்கும் தண்டமும் அஞ்சான் அறைகின்ற 
கூற்றமும் ஒன்றெ கொன்ற குறிப்பு முகம் தோற்றான் 
மாற்றவரேயோ மாவோ புள்ளோ வழி வந்த 
கோல் தொடியைக் கொன்று என் பெற வல்லான்                                               கொலை செய்வான்.


பொருள்


ஆற்ற = பொறுத்துக் கொள்ள முடியாத

ஒறுக்கும் = தண்டிக்கும்

தண்டமும் = தண்டனைக்கும்

அஞ்சான் = (இந்த வேடன்) அச்சப் படவில்லை

அறைகின்ற = (இவன்) சொல்கின்ற


கூற்றமும் = கூற்றுகள், செய்திகள்

ஒன்றெ = ஒன்றே. முரண் இல்லாமல் ஒரே சீராக இருக்கிறது

கொன்ற குறிப்பு = கொலை செய்ததைப் போல

முகம் தோற்றான் = முகத்தைப் பார்த்தால் தோன்றவில்லை

மாற்றவரேயோ = எதிரிகளோ

மாவோ = கொடிய விலங்குகளோ

புள்ளோ = பறவையோ

வழி வந்த = வழியில் வந்த

கோல் தொடியைக் = பெண்ணை (வளையல் அணிந்த பெண்)

கொன்று = கொலை செய்து

என் பெற வல்லான் = எதை அடையப் போகிறான் ?

கொலை செய்வான் = கொலை செய்வான் (என்று மற்றவர்களால் கூறப் பட்டவன்)

கொஞ்சம் இலக்கணம் படிக்கலாம்


"கோல் தொடியைக் கொன்று என் பெற வல்லான்"


தொடி என்றால் வளையல். கோல் தொடி என்றால் கோலை போல நன்கு பருத்த  வளையல். நல்ல கனமான வளையல் அணிந்து இருக்கும் பெண். 

நேரடியாக அர்த்தம் கொண்டால் "வளையலை கொன்று என்ன பெறப் போகிறான்" என்று வரும். 

வளையலை எப்படி கொல்ல முடியும் ?

அங்கு தான் இலக்கணம் வருகிறது. 

எழுத்துகள் சேர்ந்து வார்த்தை வருகிறது.  சரிதானே. 

வார்த்தைகள் சேர்ந்து வாக்கியம் உருவாகிறது.  சரிதானே ?

இரண்டு வார்த்தைகளை எப்படி இணைப்பது என்பதில் இருக்கிறது  இலக்கணச் சுவை. 

இரண்டு வார்த்தைகளை இணைக்கும் போது , முதலில் வரும் வார்த்தைக்கு நிலை  மொழி என்று பெயர். அதனோடு வந்து சேரும் வார்த்தைக்கு வரு மொழி என்று பெயர். 

இராமன் வந்தான் 

என்பதில் இராமன் என்பது நிலை மொழி. வந்தான் என்பது வரு மொழி. 

புரிகிறது தானே. சிக்கல் இல்லையே ?

அடுத்த கட்டத்துக்கு போவோம். 

இப்படி நிலை மொழியும், வரு மொழியும் சேரும் போது நடுவில் சில வார்த்தைகளை  போடுவோம். இரண்டு பொருளை ஓட்ட வைக்க வேண்டும் என்றால் பசை வேண்டும் அல்லவா அது போல. 

அந்த பசைக்குப் பெயர் "வேற்றுமை உருபு"

உருபு என்றால் சொல் என்று வைத்துக் கொள்ளுங்கள். 

தமிழில் ஆறு வேற்றுமை உருபுகள் இருக்கிறது. அவை 

ஐ (இரண்டாம் வேற்றுமை உருபு)
ஆல் (மூன்றாம்)
கு (நான்காம்) 
இன் (ஐந்து)
அது (ஆறாம்)
கண் (ஏழாம்)

முதலாம் வேற்றுமை கிடையாது. அதற்கு விளி வேற்றுமை என்று பெயர். அதை விட்டு விடுவோம். 

பால் குடித்தான் என்பது பாலைக் குடித்தான் (ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு  வந்துள்ளது) 

அணுக் குண்டு என்பது அணுவால் ஆன குண்டு (ஆல் என்பது மூன்றாம் வேற்றுமை உருபு) 

இப்படி வேற்றுமை உருபு வந்து நிலை மொழியையும் வரு மொழியையும் சேர்த்து வைக்கும். 

இந்த வேற்றுமை உருபு சில சமயம் வெளிப்படையாக வரும்.  சில சமயம் மறைந்து இருக்கும். 

வெளிப்படையாக வந்தால் அது தொகா நிலைத் தொடர் என்று பெயர். 

மறைந்து (தொக்கி) வந்தால் அதற்கு தொகை நிலைத் தொடர் என்று பெயர். 

பாலக் குடித்தான் என்பதில் ஐ என்ற வேற்றுமை உருபு வெளிப்ப்டையாக வந்து உள்ளது. எது தொகா நிலைத் தொடர். 

பால் குடித்தான் என்பதில் ஐ என்ற வேற்றுமை உருபு தொக்கி (மறைந்து) வந்துள்ளது. 

சில சமயம் , இந்த வேற்றுமை உருபுகள் நிலை மொழியையும் வரு மொழியையும் சேர்ப்பதோடு அல்லாமல் , சேர்த்த பிறகு அந்த இரண்டு சொற்களையும் கடந்து இன்னொரு சொல்லை சுட்டிக் காட்டும். அதற்கு அன்மொழித் தொகை என்று பெயர். 

அல் + மொழி = அல்லாத மொழி.

வீட்டில் அம்மா , "தம்பி , யாரோ அழைப்பு மணி அடித்திருக்கிறார்கள். யாருனு கொஞ்சம் பாரு " என்று மகனிடம் சொல்வாள். 

மகன் கதவை திறந்து பார்த்து விட்டு "அம்மா பால் வந்திருக்கு" என்பான். 

வந்தது பால் அல்ல. பாலை கொண்டு வரும் ஆள் வந்திருப்பார். 

பால் + வந்திருக்கு   = பாலை கொண்டு வரும் ஆள் 

இங்கே நடுவில் வந்த ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு , பாலைக் குறிக்கவில்லை, வந்த செயலை குறிக்கவில்லை. அந்த பாலைக் கொண்டு வந்த ஆளை குறிக்கிறது அல்லவா . அதற்கு

"வேற்றுமைத் தொகை புறத்து பிறந்த அன்மொழித் தொகை " என்று பெயர். 

ரொம்ப பெரிய வாக்கியம்தான்...:)

இங்கே 

கோல் தொடி என்றால் , கோலைப் போன்ற தடித்த வளையலை அணிந்த பெண் என்று பொருள். 

அது கோலையும் குறிக்கவில்லை. 
வளையலையும் குறிக்கவில்லை.

அந்த வளையலை அணிந்த பெண்ணை குறிக்கும். 

அப்பாட , ஒரு வழியாக வந்து சேர்ந்து விட்டோம். 


இலக்கணம் படிக்க படிக்க , இலக்கணமும் சுவைக்கும், இலக்கியமும் சுவைக்கும். 

ரொம்ப bore அடித்தால் சொல்லுங்கள். குறைத்துக் கொள்கிறேன். 

Wednesday, August 23, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மெய்யே, யான் அறியேன்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மெய்யே, யான் அறியேன் 


(முன்கதை சுருக்கத்திற்கு , இதற்கு முன்னால் உள்ள ப்ளாகுகளை வாசிக்கவும்).

மறையவன், என் மனைவியை கொன்ற வேடன் இவன் தான் என்று குற்றம் சுமத்தினான் . அரசன், அந்த வேடனைப் பார்த்து, "நீ என்ன சொல்கிறாய்" என்று கேட்டான்.

அதற்கு அவன், "ஐயா நான் கொல்லவும் இல்லை, கொன்றவரை காணவும் இல்லை, இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது " என்றான்.

பாடல்

ஐயே நானும் கொன்றவன் அல்லேன் கொன்றாரைக் 
கையேன் வேறும் கண்டிலன் என்றான் இவள் ஆகத்து 
எய்யேறு உண்ட வாறு என் என்றார் எதிர் நின்றார் 
மெய்யே ஐயா யான் அறியேன் இவ் விளைவு என்றான்.

பொருள்

ஐயே = ஐயனே

நானும் கொன்றவன் அல்லேன் = நான் கொல்லவில்லை

கொன்றாரைக் = யார் இவளைக் கொன்றார்களளோ

கையேன் = கீழ்மையான நான்

வேறும் கண்டிலன் = வேறு யாரையும் காணவும் இல்லை

என்றான் = என்றான்

இவள் ஆகத்து  = இவள் அகத்தில் (உடம்பில்)

எய்யேறு = எய்யப்பட்ட அம்பு

உண்ட வாறு = உள் நுழைந்தது

என் = எப்படி

என்றார் = என்று கேட்டார்

எதிர் நின்றார் = எதிரில் உள்ள அமைச்சர்கள்

மெய்யே ஐயா = உண்மையைச் சொல்கிறேன்

யான் அறியேன் = எனக்குத் தெரியாது

இவ் விளைவு என்றான் = இது எப்படி நடந்தது என்று .

கொன்றவன் இவன் என்று வேதியன் குற்றம் சுமத்துகிறான்.

நான் கொல்லவில்லை . கொன்றாரையும் காணவில்லை என்று வேடன் சொல்கிறான்.

அரசனும் , அமைச்சர்களும் விசாரித்து விட்டார்கள்.

வேறு எந்த சாட்சியும் இல்லை.

காட்டுக்குள் நடந்த சம்பவம்.

கொலை நடந்திருக்கிறது. யாரோ தானே செய்திருக்க வேண்டும் ? யார் செய்தது ?

கதையை எப்படி கொண்டு செல்கிறார்கள் என்று பாருங்கள்.


நமக்குத் தெரியும் வேடன் கொல்லவில்லை என்று.  ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள்  அவனை குற்றவாளியாக்குகிறது.  வேறு எந்த சாட்சியும் இல்லை.

மன்னன் என்ன செய்யப் போகிறான் என்று நமக்கு ஒரே ஆவலாக இருக்கிறது.

ஒரு வேளை வேடனுக்கு தண்டனை கொடுத்து விடுவானோ ?  அப்படியே கொடுத்தாலும், அரசன் மேல் குறை சொல்ல முடியாது.

சரி, வேடன் செய்யவில்லை என்று அவனை விட்டு விட்டால், பின் கொலை யார் தான் செய்தது ? வேதியனுக்கு என்ன பதில் சொல்வது ?

தான் நிரபராதி என்று நிரூபிக்க வேடனுக்கு  வேறு வழி ஒன்றும் இல்லை

ஒரு அப்பாவி சிக்கிக் கொண்டானே என்று நம் மனம் பதறுகிறது. அவன் மேல் பச்சாதாபப் படுகிறது.

மனைவியை இழந்து, கை குழந்தையோடு  நிற்கும் வேதியன் மேலும் பரிதாபம் வருகிறது.

மன்னன் தவறு செய்து விடக் கூடாதே என்று தவிப்பும் இருக்கிறது.

கதை ஒரு புள்ளியில் நிற்கிறது.  கொஞ்சம் அசந்தாலும் பிரண்டு விடும்.

எப்படி மேலே கதையைக் கொண்டு செல்வது ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_23.html



Tuesday, August 22, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - உலை ஊட்டும் கொலை வேல் போல்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - உலை ஊட்டும் கொலை வேல் போல் 


மரத்தில் சிக்கி இருந்த அம்பு காற்றில் கீழே விழுந்து , அங்கே தாகத்திற்கு இளைப்பாறிக் கொண்டு இருந்த ஒரு வேதியனின் மனைவியின் வயிற்றில் பாய, அவள் இறந்து போனாள். அவளுக்கு நீர் கொண்டு வரச் சென்ற வேதியன் வந்து பார்க்கிறான். மனைவி அம்பு பட்டு இறந்து கிடக்கிறாள். அருகில் ஒரு வேடன் நிற்கிறான். அந்த வேடன் தான் கொன்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்து , அவனை அரசனிடம் இழுத்துக் கொண்டு போகிறான்.

"என்ன நடந்தது " என்று அரசன் கேட்டான்.

வேதியன் சொல்கிறான்

"என் மனைவியை மரத்தின் அடியில் விட்டு விட்டு நீர் கொண்டு வரச் சென்றேன். நான் வருவதற்கு முன் இந்த வேடன், என் மனைவியை கொன்று விட்டான்" என்று கூறினான்.

பாடல்


இன்றிவ ளைக்கொண் டோர்வட நீழ லிடையிட்டுச்*
சென்றுத ணீர்கொண் டியான்வரு முன்னிச் சிலைவேடன்
கொன்றய னின்றா னென்றுலை யூட்டுங் கொலைவேல்போல்
வன்றிறன் மாறன் செவிநுழை வித்தான் மறையோனால்.


சீர் பிரித்த பின்

இன்று இவளை கொண்டு ஓர் வட நிழல் இடை இட்டு 
சென்று தண்ணீர் கொண்டு  யான் வரு முன் இச் சிலை வேடன் 
கொன்று அயல் நின்றான் என்று உலை ஊட்டும் கொலை வேல் போல் வன் வன் திறல் மாறன்  செவி நுழை வித்தான் மறையோன் ஆல் 


பொருள்


இன்று = இன்று

இவளை = இவளை

கொண்டு = கொண்டு

ஓர் = ஒரு

வட = மர

நிழல் இடை இட்டு = நிழலின் கீழ் இருத்தி விட்டு

சென்று = சென்று

 தண்ணீர் கொண்டு  யான் வரு முன் = நான் நீர் கொண்டு வருவதற்குள்

இச் சிலை வேடன் = இந்த வில்லை ஏந்திய வேடன்

கொன்று அயல் நின்றான் = அவளை கொன்று அயலில் நின்றான்

என்று = என்று

உலை = கொதி உலையில்

ஊட்டும் = இருக்கும்

கொலை வேல் போல் = கொலைத் தொழிலை செய்யும் வேலைப் போல

வன் திறல் மாறன்  = வலிமையான திறமை கொண்ட பாண்டிய மன்னனின்

செவி நுழை வித்தான் = செவியில் சொன்னான்

மறையோன் = அந்த வேதியன்

ஆல் = அசைச் சொல்

"சிலை வேடன்."

வில்லைக் கொண்ட வேடன். இராமனைப் பற்றிக் கூறும் போது , கம்பர் கூறுவார்,  வில்லை கொண்ட இராமனின் தோளின் வலிமையை சொன்னால் போதும் , நிறைய நன்மைகள் கிட்டும் என்பார்.


 நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே.


இந்த  வேடன் என் மனைவியை கொன்று விட்டான் என்ற சொல்லே கொல்லன்  உலையில் (தீயில்) கொதிக்கும் கூர்மையான வேலை காதில் நுழைத்தது போல  இருந்ததாம். 

இராமாயணத்தில், கைகேயி இரண்டு வரங்களை கேட்டு விட்டாள் . தயரதன் தவிக்கிறான். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிறான். அவள் கேட்ட வரம் அவனை வாட்டுகிறது. எப்படி என்றால், போரில் அடிபட்டு இருக்கும் யானையின் புண்ணில் வேலைப் பாய்ச்சினால் எப்படி இருக்குமோ அப்படி வலியால் துடித்தான் என்கிறான் கம்பன். 


பெண் என உற்ற பெரும்
    பழிக்கு நாணும்;
உள் நிறை வெப்பொடு உயிர்த்து
    உயிர்த்து உலாவும்;
கண்ணினில் நோக்கும்; அயர்க்கும்;
    வன் கை வேல் வெம்
புண் நுழைகிற்க உழைக்கும்
    ஆனை போல்வான்.

தன்னுடைய ஆட்சியில் , இப்படி ஒரு கொடுமை நடந்து விட்டது என்ற சொல் காதில் விழுந்த போது , அது கொதிக்கின்ற வேலை காதில் குத்தியது போல இருந்ததாம் அந்த பாண்டிய மன்னனுக்கு. 

அப்படி என்றால், இந்த மாதிரி அநீதி நடப்பது இல்லை என்று அர்த்தம். தினம் ஒரு கொலை, கொள்ளை என்று நடந்தால் , மன்னன் இது ஒரு சாதாரணமான ஒன்று என்று நினைத்து தள்ளி விட்டிருப்பான். எப்போதோ நடப்பதால் , அதை கேட்கும் போது அவ்வளவு வலி. 

அடுத்து என்ன நடந்திருக்கும் ? 

யோசித்துப் பாருங்கள் ?  கதை எப்படி நகர்கிறது என்று புரியும். மன்னன் என்ன செய்திருப்பான் ? 

பெண் இறந்து கிடக்கிறாள். அருகில் ஒரு வேடன் வில்லோடு நிற்கிறான். இறந்தவளின் கணவன் , இந்த வேடன் தான் கொன்றான் என்கிறான். வேறு யாரும் இல்லை அருகில். 

நமக்குத் தெரியும் வேடன் கொல்லவில்லை என்று. மன்னனுக்குத் தெரியாது. 

அவன் என்ன செய்ய வேண்டும் இப்போது ? நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_22.html

Monday, August 21, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - முறையோ முறையோ

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - முறையோ முறையோ 


வேதியன் ஒருவன் மதுரை வரும் வழியில் , கானகத்தில் மனைவியையும் பிள்ளையையும் ஒரு ஆல மரத்தின் கீழ் தங்க வைத்து விட்டு நீர் கொண்டு வரச் சென்றான். அப்போது அந்த மரத்தின் மேல் என்றோ , யாரோ விட்ட அம்பு ஒன்று தொங்கிக் கொண்டு இருந்தது. அது காற்றில் ஆடி கீழே விழுந்தது. விழுந்த அம்பு, நேரே சென்று அந்த வேதியனின் மனைவியின் வயிற்றில் தைத்தது. அவள் இறந்து போனாள் . அதே சமயம் ஒரு வேடன் , நிழலுக்காக அந்த மரத்தின் கீழ் வந்து நின்றான். அதே சமயம் நீர் கொண்டு வந்த வேடன் இறந்து கிடக்கும் மனைவியைப் பார்த்தான். அருகில் இருக்கும் வேடனைப் பார்த்தான். அந்த வேடன் தான் அவளை கொலை செய்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து , அந்த வேடனை இழுத்துக் கொண்டு பாண்டியன் இருக்கும் அரண்மனை வருகிறான்.

தோளில் பசித்து அழும் பிள்ளை. மனதில் மனைவி இறந்த சோகம். கையில் வேடனை பிடித்துக் கொண்டு அரண்மனை வாசலில் நின்று ஓலமிடுகிறான்.

மன்னா, உன் நாட்டில் இப்படி நடப்பது முறையோ முறையோ என்று கதறுகிறான்.


பாடல்

கோமுறை கோடாக் கொற்றவ ரேறே முறையையோ
தாமரை யாள்வாழ் தண்கடி மார்பா முறையையோ
மாமதி வானோன் வழிவரு மைந்தர முறையேயோ
தீமைசெய் தாய்போற் செங்கை குறைத்தாய் முறையேயோ.


பொருள்

கோமுறை = கோ + முறை = அரச முறை

கோடாக் = கோட்டம் என்றால் வளைவு.  கோடா என்றால் வளையாத, நேரான.

கொற்றவ ரேறே = கொற்றவ + ஏறே  = அரசர்களில் சிங்கம் போன்றவனே

முறையையோ = இது முறையா ?

தாமரை யாள்வாழ் = தாமரையில் இருக்கும் திருமகள் வாழும்

தண்கடி = குளிர்ந்த மலர் மாலை அணிந்த

மார்பா = மார்பை உடையவனே

முறையையோ = இது முறையோ

மாமதி = பெரிய நிலவு. சந்திரன்

வானோன் = வானில் இருக்கும்

வழிவரு = வழியில் வந்த

மைந்தா = மைந்தனே

முறையேயோ = இது முறையா ?

தீமைசெய் தாய்போற் = தீமை செய்தால் போல

செங்கை = சிவந்த கைகளை

குறைத்தாய் = குறைத்தவனே

முறையேயோ = முறையோ


தீமைசெய் தாய்போற் செங்கை குறைத்தாய் முறையேயோ.

என்ற இந்த கடைசி வரிக்கு ஒரு கதை சொல்ல வேண்டி இருக்கிறது.

முன்பொரு காலத்தில் ஒரு பாண்டிய மன்னன் இருந்தான். அவன் நகர் வலம் வரும் போது ஒரு மறையவன் வீட்டின் வாசலில் , நடு இரவு நேரத்தில் பேச்சு சத்தம்  கேட்டது. என்ன என்று , மாறு வேடத்தில் இருந்த மன்னன் ஓட்டு கேட்டான்.

அந்த வீட்டின் பெண், தன் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்

"நீங்கள் ஊரை விட்டுப் போய் திரும்பி வர கொஞ்ச நாள் ஆகும். எனக்கு தனியாக இருக்க பயமாக  இருக்கிறது. நானும் உங்கள் கூடவே வந்து விடுகிறேன் " என்று கூறிக் கொண்டிருந்தாள்.

அதற்கு அந்த மறையவன் " ஒன்றும் பயப்படாதே....பாண்டிய மன்னன் இருக்கிறான். அவன் இருக்கும் வரை , நமக்கு ஒரு தீங்கும் வராது " என்று சொல்லி அவளை தேற்றிக் கொண்டிருந்தான்.

மன்னனுக்கு பெருமிதம். "  அடடா, நம் மக்கள் நம் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்" என்று மகிழ்ந்து சென்றான்.

அன்றிலிருந்து தினமும் அவள் வீட்டை , மாறு வேடத்தில் வரும் போது கவனித்து வந்தான்.

அப்படி இருக்கும் போது ஒரு நாள், திடீரென்று அந்த வீட்டில்  இரவில் பேச்சுக் குரல் கேட்டது.

மன்னனுக்கு  சந்தேகம். கணவன் வெளியூர் போயிருக்கிறான். ஆண் குரல் கேட்கிறது. யாராக இருக்கும் என்று என்று சந்தேகப் பட்டு, வீட்டின் கதவை தட்டினான்.

"யாரது " என்று குரல் கேட்டது. கேட்டது யாரும் அல்ல, அந்த பெண்ணின் கணவன். போன காரியம் முடிந்து விட்டதால் கொஞ்சம் சீக்கிரம் ஊர் திரும்பி விட்டான்.

மன்னனுக்கு தர்ம சங்கடம். உள்ளே போனால், ஒரு வேளை அந்த வேதியன் தன் மனைவியை சந்தேகப் பட்டு  விடுவானோ என்று பயந்து, வேக வேகமாக  அங்கிருந்து விலகினான். போகிற வழியில் அங்குள்ள எல்லா வேதியர் வீட்டின்  கதவையும்  தட்டி விட்டு சென்றான்.

மறு நாள் , வேதியர்கள்  எல்லோரும் அரண்மனை வந்து, மன்னனிடம் முறையிட்டார்கள். "மன்னா, யாரோ தெரியவில்லை, நடு இரவில் எங்கள் வீட்டின் கதவை  தட்டுகிறார்கள் " என்று முறையிட்டார்கள்.

அப்போது மன்னன், "சரி, அவனை பிடித்து விடலாம். பிடித்தால் அவனுக்கு என்ன  தண்டனை கொடுப்பது " என்று கேட்டான்.

அதற்கு அவர்கள் "இப்படி நள்ளிரவில் வந்து மற்றவர்கள் வீட்டின் கதவை தட்டிய அவன் கையை  வெட்டி விட வேண்டும் " என்று கூறினார்கள்.

மன்னவனும் , "அப்படி தட்டியது வேறு யாரும் அல்ல, நான் தான் " என்று கூறி,  தன் கையை தானே வெட்டிக் கொண்டான்.

நீதி என்றால் எல்லோருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்த மன்னன் அவன்.

அவன் வழியில் தோன்றிய மன்னா, உன் நாட்டில் இப்படி நடக்கலாமா , இது முறையா  என்று இந்த வேதியன் முறையிட்டான்.


தீமைசெய் தாய்போற் செங்கை குறைத்தாய் முறையேயோ.


தீமை செய்யவில்லை. செய்தால் போல சிவந்த கைகளை குறைத்தாய் என்று  முன்பு நடந்ததை நினைவு படுத்துகிறான். 

நீதி பரிபாலனம் நாட்டில் அப்படி இருந்தது. 

மக்களை , கண்ணை இமை காப்பது போல மன்னர்கள் காத்தார்கள். 

தவறு , தானே செய்திருந்தாலும், தண்டனை கொடுத்துக் கொண்டார்கள். 

அடுத்து என்ன நடந்தது ?

Sunday, August 20, 2017

திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - உள்ளவா காண வந்தருளாய்

திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - உள்ளவா காண வந்தருளாய் 


நாம் ஒரு வழியில் , ஏதோ ஒரு வேலையாகச் சென்று கொண்டிருப்போம். போகிற வழியில் ஏதோ ஒரு கடையில் நல்ல உணவு சமைக்கும் வாசம் வரும். "அடடா , ஏதாவது சாப்பிட்டு விட்டு போனால் என்ன " என்று தோன்றும் நமக்கு.

போகிற வழியில் , ஒரு குளிர் பானத்தின் விளம்பரம் கண்டால், தாகம் எடுப்பது போலத் தோன்றும்.

அழகான பெண்ணை கண்டால், ஏதேதோ எண்ணம். இப்படி நம் புலன்கள், நம்மை , நாம் செல்ல நினைத்த இடத்துக்கு செல்ல விடாமல் அது வேண்டும்,இது வேண்டும் என்று இழுத்து அலைக் கழிக்கின்றன.

ஆசைப் படுவது தப்பா என்ன ? ஒரு சுவையான, உருசியான பண்டத்தைப் பார்த்தால்  அதை சுவைக்க ஆசைப் படுவது என்ன பாவமா என்றால் இல்லை தான்.

சிக்கல் சுவைப்பதோடு முடிவது இல்லை.

ஒன்றை சுவைத்தால் , இன்னொன்று தேடும். இதே போல வேறு என்ன என்ன இருக்கிறது என்று மனம் தாவும். நிறைய உண்டால் நோய் வரும். அதற்கு மருந்து. அந்த மருந்தின் பக்க விளைவு.  இப்படி வாழ்க்கை எங்கோ  தொடங்கி எங்கோ போய் விடும்.

மனைவிதான், அன்புதான், இனிமைதான் என்று திருமணம் செய்து கொள்கிறான். அதோடு நிற்கிறதா ? பிள்ளைகள், பொறுப்பு என்று ஆயிரம் சிக்கல் கூடவே  வருகின்றன.

முதலில் ஏதோ நமக்கு இன்பம் தருவது போல இழுத்துக் கொண்டு போய் , பின்னால் பெரிய சிக்கலில் மாட்டி விடுபவை இந்த புலன்கள்.


சரி, புலன் இன்பங்கள் முதலில் இன்பம் போல் இருந்தாலும்,  பின்னால் சிக்கல் நிறைய இருக்கிறது என்று புரிகிறது.

அதற்காக இன்பமே வேண்டாம் என்று இருக்க முடியுமா ? அப்படியே இருந்தாலும், அது ஒரு வாழ்க்கையா ? அதற்கு இந்த வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லை என்று நாம் நினைக்கலாம்.

மணி வாசகர் சொல்கிறார்,  இன்பங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று புறத்தே , வெளியே இருக்கும் இன்பம். புலன்கள் மூலம் பெரும் இன்பம்.

இன்னொரு இன்பம் இருக்கிறது. அது உள்ளுக்குள் இருந்து வரும் இன்பம்.  அதற்கு புலன்கள்  வேண்டாம். வெளி உலக பொருள்களோ , மாற்றார்களோ வேண்டாம். உள்ளே இருந்து ஊற்றெடுக்கும் இன்பம் ஒன்று இருக்கிறது. அது வற்றாத இன்பம். திகட்டாத இன்பம்.

அதை நாம் அவ்வப்போது அனுபவித்து இருக்கிறோம். நமக்கு அது கோடி காட்டி விட்டுப் போகிறது.

ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு நல்ல இசையை கேட்கிறீர்கள். உங்களை அறியாமலேயே உங்கள் கண்கள் மூடும். ஏன் ? காதுதானே கேட்கிறது. கண் ஏன் மூடுகிறது ? சிந்தித்துப் பார்த்தால் தெரியும், அந்த இனிய இசையின் இன்பம், உங்களுக்குள் இருக்கிறது.

இல்லை, அந்த இசையில் தான் இருக்கிறது என்றால், எப்போதும் அது இன்பம் தர வேண்டும் அல்லவா ? எல்லோருக்கும் இன்பம் தர வேண்டும் அல்லவா ?

ஒரு துண்டு லட்டை வாயில் போடுங்கள்....உங்களை அறியாமலேயே கண்கள் மூடும், அந்த இன்பத்தை நீங்கள் உள்ளுக்குள் அனுபவிப்பீர்கள்.

ஆனால், அந்த இன்பம் லட்டு கரைந்து தொண்டையை தாண்டும் வரை தான்.

வெளியில் இருந்து வரும் இன்பங்கள்....சீக்கிரம் மறைந்து விடும்.

ஆனால், உள்ளுக்குள் இருக்கும் இன்பம், மறையவே மறையாது.

நீங்கள் அந்த இன்பத்தை கண்டு விட்டால், அனுபவித்து விட்டால், அதற்குப் பிறகு வெளியில் உள்ளவைகளும் உங்களுக்கு நீங்காத இன்பத்தைத் தரும்.

உள்ளும் வெளியும் ஒன்றாகக் கலந்து , ஆனந்த வெள்ளம் கரை புரண்டு ஓடும்.


மாணிக்க வாசகர் சொல்கிறார்,

மாறி நின்று, வஞ்சகம் செய்து என்னை சிக்கலில் ஆழ்த்தும் ஐந்து புலன்களின் வழியை அடைத்து, என்னுள்ளே தோன்றும் இன்பமே , சிவனே, நீ என் அன்பானவன் என்று.


பாடல்

மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து; அமுதே
ஊறி நின்று; என் உள் எழு பரஞ்சோதி! உள்ளவா காண வந்தருளாய்:
தேறலின் தெளிவே! சிவபெருமானே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே!


பொருள்

மாறி நின்று = என் எண்ணங்களுக்கு, என் நோக்கங்களுக்கு , என் குறிக்கோளுக்கு மாறி நின்று

என்னை மயக்கிடும் = என்னை மயக்கம் செய்யும்

வஞ்சப்  = வஞ்சகமான

புலன் = புலன்கள்

ஐந்தின் = ஐந்து புலன்களின்

வழி அடைத்து = வழியை அடைத்து

அமுதே ஊறி நின்று; = எனக்குள் அமுதமாக ஊறி நின்று

என் உள் எழு பரஞ்சோதி! = எனக்குள்ளே எழும் உயர்ந்த ஜோதியே

உள்ளவா = உள்ளவனே

காண வந்தருளாய் ன்= நான் உன்னை வெளியே காணும்படி வந்து அருள்வாய்


தேறலின் தெளிவே! = தேனின் தெளிவே

சிவபெருமானே! = சிவ பெருமானே

 திருப்பெருந்துறை உறை சிவனே! = திருப்பெருந்துறை என்ற தலத்தில் வசிப்பவனே

ஈறு இலாப் = இறுதி இல்லாத

பதங்கள் = நிலைகள்

யாவையும் = எல்லாவறையும்

கடந்த இன்பமே! = கடந்த இன்பமே

என்னுடை அன்பே! = என்னுடைய அன்பே


எத்தனையோ பட்டங்கள். ஒவ்வொரு பட்டத்திலும் ஒரு இன்பம்.

மகள், கன்னிப் பெண், மனைவி, தாய்,  பாட்டி

மகன், பையன், வாலிபன், கணவன், தந்தை, தாத்தா

என்று ஒவ்வொரு கட்டமாக வாழ்வில் பல பட்டங்கள்.  பதங்கள் . ஒவ்வொன்றிலும் ஒரு இன்பம். இவை அனைத்தையும் கடந்த இன்பம் இறைவன் தருவது.


இறைவன் என்பவன் ஏதோ ஒரு ஆள் அல்ல. அவன் அன்பின் மொத்த குறியீடு. அன்பு  என்னவெல்லாம் செய்யுமோ அதுவே இறைவன் செயல்பாடு.

வெளி உலக இன்பங்கள் மறையும் போது , உள்ளே ஊறும் அமுத ஊற்று போன்றவன் அவன்.

ஆனந்தமாய் , என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் என்பார் அபிராமி பட்டர்


ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே

தித்தித்தது இருக்கும் அமுது கண்டேன்....இந்த உலகையே மூழ்க வைக்கும் பரம ஆனந்த சாகரம் என்பார் அருணகிரிநாதர் 


பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.


அந்த இன்பத்தை அறிந்து கொண்டால், பின் உலக இன்பங்கள் ஒன்றும் பெரிதாக இருக்காது. 

இனிப்பான ஒரு பலகாரத்தை தின்றபின் காப்பி குடித்தால் அது கசக்கும் அல்லவா ? அது போல அந்த உள்ளுறை இன்பத்தை அறிந்து கொண்டால் இந்த உலக இன்பங்கள் ,  இன்பங்கள் போலவே தோன்றாது. துன்பம் போல இருக்கும். 

அந்த பரம ஆனந்தத்தை சுவைத்து விட்டால் கரும்பு துவர்க்கும் , செந்தேன் புளிக்கும் என்கிறார் அருணகிரிநாதர் 


பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,
அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!
கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!


உள்ளுக்குள் இருக்கும் ஆனந்தத்தை அறிந்து கொண்டார் மணிவாசகர். 

இந்த உலகை என்ன செய்வது. இந்த உலகில் உள்ள பொருள்கள், மனிதர்கள்  இவற்றோடு எவ்வாறு ஒன்றுவது. இந்த உலகில் எப்படி செயல்படுவது ? எல்லாவற்றையும்  விட்டு விட்டு ஓடி விடுவதா ?

இல்லை, இந்த இன்பத்தை எனக்கும் வெளியிலும் காண அருள் புரிவாய் என்று வேண்டுகிறார். 


"உள்ளவா காண வந்தருளாய்"

வெளியிலும், மற்ற உயிரிகளிலும் உன்னை காண அருள் புரிவாய் என்று வேண்டுகிறார். 

இந்த உரையை மறந்து விடுங்கள். 

பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். 

ஏதோ தோன்றுகிறதா ? அது தான் அர்த்தம்.


http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_20.html

Friday, August 18, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மன்னவன் ஆணை

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மன்னவன் ஆணை


திருப்பத்தூரில் இருந்து ஒரு வேதியன் , அவனுடைய மனைவி மற்றும் கை குழந்தையோடு மதுரை வரும் வழியில் உள்ள கானகத்தில் , மனைவியின் தாகம் தீர்க்க நீர் கொண்டு வரும் வேளையில், அவர்கள் இளைப்பாறிய ஆல மரத்தில் முன்பு எப்போதோ சிக்கியிருந்த ஒரு அம்பு காற்றில் அசைந்து கீழே வந்து அந்த பெண்ணின் வயிற்றில் குத்தியது.

அதனால் அவள் இறந்து போனாள் . அப்போது , அந்தப் பக்கம் ஒரு வேடன் வந்தான். அவன் நிழலுக்கு அதே ஆல மரத்தின் கீழ் வந்து நின்றான்.

அப்போது ,  நீர் கொண்டு வரச் சென்ற வேதியனும் நீரோடு வருகிறான். 

ஒரு புறம் இறந்து கிடக்கும் மனைவி. இன்னொரு புறம், கையில் வில்லோடு நிற்கும் வேடன். 

மனைவியைப் பார்த்து கதறுகிறான். பிள்ளை ஒரு புறம் பாலுக்கு அழுகிறது. கற்பனை செய்து பாருங்கள். எவ்வளவு ஒரு சோகமான காட்சி என்று புரியும்.

கொஞ்சம் தேறி, யார் இந்த கொடுமையான காரியத்தை செய்திருப்பார்கள் என்று சுற்றும் முற்றும் பார்க்கிறான்.

அங்கே நின்ற வேடனைப் பார்க்கிறான். வில்லும் கையுமாக முரட்டுத் தனமாக இருக்கும் இந்த வேடன் தான் இவளை கொன்றிருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான். அவனிருக்கும் இடத்தில் யார் இருந்தாலும் அப்படித் தான் நினைத்திருப்பார்கள் அல்லவா ?

"மன்னவன் ஆணை , வா நீதி மன்றத்திற்கு " என்று அவனை இழுத்துக் கொண்டு போகிறான்.

பாடல்


என்ன மதித்தே ஏடா வேடா என் ஏழை
தன்னை வதைத்தாய் நீயே என்னா அழல் கால் கண்
மின்னல் எயிற்றுக் குற்று என வல் வாய் விட்டு ஆர்த்து
மன்னவன் ஆணைப் பாசம் எறிந்து வலித்து ஏகும்.


பொருள்

என்ன மதித்தே = இவன் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நினைத்து

ஏடா வேடா = ஏண்டா வேடனே

என் ஏழை தன்னை  =  பாவம்,என் மனைவியை

வதைத்தாய் நீயே = கொலை செய்தாய் நீயே

என்னா = என்று

அழல் = தீ. சிவந்த

கால் = காற்று. அனல் வீசும்.

கண் =கண்கள்

மின்னல் எயிற்றுக் = மின்னல் போல வெண்மையான பற்கள்

குற்று என = கூற்று என (கூற்றுவன் என்றால் எமன் )

வல் = வலிமையாக, ஓங்கி

வாய் விட்டு ஆர்த்து = வாய் விட்டு சொல்லி. ஆர்த்து என்ற வார்த்தையை பற்றி கீழே விரிவாகப் பார்ப்போம்

மன்னவன் ஆணைப் = மன்னன் மேல் ஆணை

பாசம் = கயிறை

எறிந்து =எறிந்து

வலித்து ஏகும் = இழுத்துக் கொண்டு போனான்


ஆர்த்து என்றால் கொடுத்து, நிறைவு செய்து, ஊட்டி, அனுபவிக்கச் செய்து  என்று பொருள்.

ஆர்த்த பிறவி என்பார் மணிவாசகர். நல் வினை, தீ வினை என்ற கயிற்றால் கட்டி பிறவி என்ற பெரும் கடலுள் உயிர்கள் செலுத்தப் படுகின்றன என்பதால் ஆர்த்த பிறவி.

நம் பாவங்களை போக்க நமக்கு தீர்த்தமாக தன்னைத் தானே ஊட்டுவதால் , "ஆர்த்தாடும் தீர்த்தன்"

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.

கதைக்கு வருவோம்.

டைரக்டர் cut சொல்லி, காட்சியை மாற்றுவதைப் போல, காட்சி மாறுகிறது.

காமிரா காட்டில் இருந்து அரண்மனைக்குப் போகிறது.

அங்கே என்ன நடக்கிறது. ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_18.html

Thursday, August 17, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - அயல் நின்றான் இளைப்பாற

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - அயல் நின்றான் இளைப்பாற


திருப்பத்தூரில் இருந்து ஒரு வேதியன் , அவனுடைய மனைவி மற்றும் கை குழந்தையோடு மதுரை வரும் வழியில் உள்ள கானகத்தில் , மனைவியின் தாகம் தீர்க்க நீர் கொண்டு வரும் வேளையில், அவர்கள் இளைப்பாறிய ஆல மரத்தில் முன்பு எப்போதோ சிக்கியிருந்த ஒரு அம்பு காற்றில் அசைந்து கீழே வந்து அந்த பெண்ணின் வயிற்றில் குத்தியது.

அதனால் அவள் இறந்து போனாள் . அப்போது , அந்தப் பக்கம் ஒரு வேடன் வந்தான். அவன் நிழலுக்கு அதே ஆல மரத்தின் கீழ் வந்து நின்றான்.

பாடல்

அவ்வாறவ் வணங்கனையா ளுயிரிழந்தா ளவ்வேலைச்
செவ்வாளி யேறிட்ட சிலையுடையா னொருவேடன்
வெவ்வாளி யேறனையான் வெயிற்கொதுங்கு நிழறேடி
அவ்வால நிழலெய்தி யயனின்றா னிளைப்பாற.


சீர் பிரித்த பின்

அவ்வாறு அவ் அணங்கு அனையாள் உயிர் இழந்தாள் உவ் வேலைச் 
செவ் வாளி ஏறிட்ட சிலை உடையான் ஒரு வேடன் 
வெவ் வாளி ஏறு அனையான் வெயிற்கு ஒதுங்கும்  நிழல் தேடி 
அவ் ஆல நிழல் எய்தி அயல் நின்றன் இளைப் பாற.

பொருள்

அவ்வாறு = அவ்வாறு

அவ் = அந்த

அணங்கு அனையாள் = தெய்வ மகள் போன்ற பெண்

உயிர் இழந்தாள் = உயிர் இழந்தாள்

உவ் வேலைச் = அந்த நேரத்தில்

செவ் வாளி = செம்மையான, சிவந்த அம்பை

ஏறிட்ட = ஏற்றும்

சிலை = வில்லை

உடையான் = உடைய

ஒரு வேடன் = ஒரு வேடன்

வெவ் வாளி ஏறு = ஆளி என்றால் சிங்கம். கோபம் கொண்ட ஆண் சிங்கம்

அனையான் = போன்றவன்

வெயிற்கு = வெயிலுக்கு

ஒதுங்கும் = ஒதுங்கும்

நிழல் தேடி = நிழல் தேடி

அவ் = அந்த

ஆல = ஆல மரத்தின்

நிழல் எய்தி = நிழலை அடைந்து

அயல் நின்றன் = தள்ளி நின்றான்

இளைப் பாற = இளைப்பாற

வேடன் , அவன் பாட்டுக்கு வந்து நிழலுக்கு ஒதுங்கி நிற்கிறான். அவன் ஒரு புறம் நிற்க, மறு புறம், அந்த வேதியனின் மனைவி அம்பு தைத்து இறந்து கிடக்கிறாள். அவனுக்கு அது தெரியாது.

கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு புறம்  முரட்டு வேடன். மறு புறம் இறந்து கிடக்கும் ஒரு பெண். பக்கத்தில் ஒரு  குழந்தை.  வேதியன் , நீரோடு வருகிறான்.

சினிமா பார்ப்பது போல இருக்கிறது அல்லவா.

அப்படி ஒரு visual description .

செவ்வாளி . செம்மையான அம்பு அல்லது சிவந்த அம்பு.

இராமாயணத்தில், இராமன் எய்த அம்பை வாலி தன் வாலினால் பிடித்து இழுத்து  , அதில் யார் பெயர் எழுதி இருக்கிறது என்று பார்க்க நினைக்கிறான்.

இழுத்தும் விட்டான். அதில் இராமன் என்ற பெயர் எழுதி இருக்கிறது.

இராமன் என்னும் செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரியக் கண்டான் என்பார் கம்பர்.

செம்மை சேர் நாமம் என்றால் செம்மையான நாமம் அல்லது வாலியின் இரத்தம் தோய்ந்த சிவந்த நாமம் என்றும் கொள்ளலாம்.  வாலி வதை என்பது ஒரு முடிவுறா சர்ச்சையாகவே இருந்து வருகிறது. அது சரி என்று சொல்பவர்கள் 'செம்மை நாமம்" என்பதை செம்மையான நாமம் என்றும், அது தவறு என்று சொல்பவர்கள் "செம்மை நாமம்" என்பதை இரத்தம் தோய்ந்த சிவந்த நாமம் என்று பொருள் சொல்வார்கள்.

மும்மை சால் உலகுக்கு எல்லாம்
    மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
    தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
    மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்
    கண்களின் தெரியக்  கண்டான்.


அடுத்தது,

"உவ் வேலைச்  செவ் வாளி ஏறிட்ட சிலை உடையான்"

அது என்ன உவ் வேலை .

கொஞ்சம் இலக்கணம் படிக்கலாம்.


தமிழில் ஒரு பொருளை சுட்டிக் காட்டும் சொல்லுக்கு சுட்டு பெயர் என்று பெயர்.

அருகில் உள்ள பொருளை சுட்டிக் காட்டினால் அது அண்மைச் சுட்டு என்றும்.

தொலைவில் உள்ள பொருளை சுட்டிக் காட்டினால் அது சேய்மை சுட்டு என்றும் பெயர் பெரும்.

அண்மை சுட்டு இகரத்தில் தொடங்கும்.

இது, இவை, இவர், இவள் என்று.

சேய்மைச் சுட்டு என்பது அகரத்தில் தொடங்கும்.

அது, அவை, அவர், அவள் என்று.

இரண்டுக்கும் நடுவில் இருப்பதை சுட்ட உகரத்தை பயன் படுத்தினார்கள்.

உது, உவை , உவர், உவள் என்று.

ஆனால், அது இப்போது நடை முறையில் இல்லை.


திருஞான சம்பந்தர், மூன்று வயது பிள்ளையாக இருக்கும் போது , அவருடைய தந்தையாருடன் கோவிலுக்குச் சென்றார். கோவிலுக்குப் போவதற்கு முன் , தந்தையார் அங்குள்ள திருக்குளத்தில் நீராடச் சென்றார். அவர் நீரில் மூழ்கியதும், தந்தையை காணமால் குழந்தையாக இருந்த ஞான சம்பந்தர் அழுதார். அவரின் அழு குரலை கேட்ட பார்வதி வந்து ஞானப் பாலை தந்தார்.

குளத்தில் மூழ்கி எழுந்து வந்த தந்தையார் ,  குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்டு  , "யார் தந்தது " என்று கேட்டார்.

தோடுடைய செவியன் என்ற பாடலைப் பாடினார்.


தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


அதில், இறுதியில் "பெம்மான் இவன் அன்றே" என்று சொல்லி முடிக்கிறார்.

இவன் என்றால் அண்மைச் சுட்டு. இறைவன் எங்கோ இல்லை. இதோ, இங்கே இருக்கிறான். அவனைத் தேடி எங்கும் அலைய வேண்டாம் என்று கூறுகிறார்.

"அவன் அன்றே " என்று சொல்லி இருந்தால் , இறைவன் எங்கோ தொலைவில் இருக்கிறான் என்று பொருள் படும்.

அண்மைச் சுட்டின் ஆழம் புரிகிறதா ?


"அவ் ஆல நிழல் எய்தி அயல் நின்றன்"


முரட்டு வேடன்.  அழகான பெண் தனித்து நிற்கிறாள். அருகில் யாரும் இல்லை.

அவன் , அவள் அருகில் கூட போகவில்லை. "அயல் நின்றான்".

அது வேடனின் பண்பாடு என்றால் மற்றவர்களின் பண்பாடு எப்படி இருந்திருக்கும் என்று நாம் யோசித்துக் கொள்ளலாம்.


கதை சொல்லும் பாங்கு. கவி நயம். தத்துவம். கலாச்சாரம் என்று அனைத்தையும்  அள்ளித் தருவது திருவிளையாடற் புராணம்.

மேலும் படிப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_17.html

Wednesday, August 16, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொலைத்தலைய கூர்வாளி

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொலைத்தலைய கூர்வாளி 


திருப்பத்தூரில் இருந்து ஒரு வேதியன் தன் மனைவியோடும் , பச்சிளம் குழந்தையோடும் மதுரையில் உள்ள தன் மாமன் வீட்டுக்கு ஒரு காட்டின் வழியே வந்து கொண்டிருந்தான். அப்போது அவன் மனைவி தாகத்திற்கு நீர் கேட்டாள் . அவன் நீரை கொண்டு வரும் போது .....

என்பது வரை பார்த்தோம்.

அவன் நீரை கொண்டு வரும்போது அந்த மனைவி இருந்த ஆல மரத்தில் முன்பு யாரோ ஒரு வேடன் எய்த, சிக்கியிருந்த அம்பு காற்றில் மரத்தில் இருந்து கீழே இருந்த அந்த பெண்ணின் வயிற்றில் வந்து குத்தியது.....

மென்மையாக போய் கொண்டிருந்த கதையில் ஒரு திடீர் திருப்பம்.

கணவன் நீர் கொண்டு வரப் போனான். நீர் எடுத்துக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறான். அதற்குள், யாரோ எப்போதோ எய்த அம்பு ஒன்று மரத்தில் சிக்கி இருந்தது. அது ஒரு காற்று அடிக்க , மரத்தில் இருந்து நழுவி நேரே வந்து அந்த பெண்ணின் வயிற்றில் குத்தியது....

பாடல்


இலைத்தலைய பழுமரத்தின் மிசைமுன்னா ளெய்ததொரு
கொலைத்தலைய கூர்வாளி கோப்புண்டு கிடந்ததுகால்
அலைத்தலைய வீழ்ந்தும்மை வினையுலப்ப வாங்கிருந்த
வலைத்தலைய மானோக்கி வயிறுருவத் தைத்தன்றால்.


பொருள்

இலைத்தலைய = இலைகள் நிறைந்த

பழுமரத்தின் = பழுத்த மரத்தில்

மிசை = அசைச் சொல்

முன்னா ளெய்ததொரு = முன்னாள் எய்த ஒரு

கொலைத்தலைய = கொலை செய்வதை தொழிலாக கொண்ட

கூர்வாளி = கூர்மையான அம்பு

கோப்புண்டு = சிக்கிக் கொண்டு

கிடந்தது = கிடந்தது

கால் = காற்று

அலைத்தலைய = அலைக்கவும் (அலை, அலைத்தல்)

வீழ்ந்தும்மை = கீழே வீழ்ந்து

வினையுலப்ப = வினை முடிய (உலப்புதல் = அழிதல், முடிதல்)

வாங்கிருந்த =ஆங்கிருந்த

வலைத்தலைய = வலையில் அகப்பட்ட

மானோக்கி  = மானின் நோக்கத்தை போல உள்ள அந்தப் பெண்ணின்

வயிறுருவத் = வயிறு உருவ , வயிற்றுனுள்

தைத்தன்றால் = குத்தியது (தைத்தல் = குத்துதல்)


கொஞ்சம் இலக்கணம் படிப்போமா ?

மிசை என்றால் அசைச் சொல் என்று பார்த்தோம். 

அசைச் சொல் என்றால் என்ன ?

நாம் நினைப்பதை சொல்ல வார்த்தைகள் தேவை. வார்த்தைகளை கோர்த்து வாக்கியங்கள்   அமைத்து நம் எண்ணங்களை வெளிப்படுத்துகிறோம். 

பாடல் எழுதும் போது அதற்கென்று இலக்கணம் இருக்கிறது. அதற்கு யாப்பிலக்கணம் என்று  பெயர். யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள். 

இந்த உடம்புக்கு யாக்கை என்று பெயர். ஏன் என்றால், இது  இரத்தம், எலும்பு, தோல், தசை இவற்றைக் கொண்டு கட்டப் பட்டது. 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி உணின்.

என்பார் வள்ளுவர். (மருந்து என்று ஒன்று வேண்டாம் இந்த உடம்புக்கு, எப்போது என்றால்  உண்ட உணவு நன்றாக ஜீரணமாகி விட்டது அறிந்து உண்டால்) 


ஒரு கவிஞன் தான் நினைத்ததை கவிதையில் சொல்கிறான். சொல்லி முடித்தாயிற்று. ஆனால் கவிதையின் இலக்கணம் சரியாக அமைய வேண்டும் என்றால் இன்னும் ஒரு வார்த்தை போட வேண்டும். சரி ஏதாவது ஒரு வார்த்தை போடலாம் என்றால் அந்த வார்த்தையின் அர்த்தம் கவிதையின் அர்த்தத்தை சிதைத்து விடக் கூடாது. 

வார்த்தையும் வேண்டும், அதே சமயம் அது கவிதையின் அர்த்தத்தை சிதைத்தும் விடக் கூடாது என்கிற போது அர்த்தம் இல்லாத வார்த்தைகள் சில  இருக்கின்றன. அவற்றிற்கு அசை சொற்கள் என்று பெயர். கேண்மியா, சொன்மியா என்றவற்றில் மியா என்பது அசைச் சொல். கேள், சொல் என்பது மட்டும் தான் அர்த்தம். 

தலைய என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது இந்தப் பாடலில். தலைய என்பது குறிப்பு பெயரெச்சம். 

எச்சம் என்றால் மீதி. 

பெயரெச்சம் என்றால், பெயரை மீதியாக கொண்டது.

அது என்ன பெயரை மீதியாக கொண்டது ?

"வந்த " என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.  வந்த என்ற அந்த சொல்லுக்குப் பின் ஒரு பெயர்தான் வர முடியும். 

வந்த பையன், வந்த மாடு, வந்த பெண் என்று தான் இருக்க முடியும்.

வந்த என்ற சொல்லுக்கு பின்னால் ஒரு வினைச் சொல் வர முடியாது.

வந்த ஓடு, வந்த நட , வந்த சாப்பிடு என்று எழுத முடியாது. அதற்கு ஒரு அர்த்தம் இல்லை. 

வந்த என்பது பெயரெச்சம். 

இந்த பெயரெச்சம் தெரிநிலை, குறிப்பு என்று இரண்டு வகைப்படும்.

குறிப்பு பெயரெச்சம் என்றால் காலத்தையோ, செயலையோ வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பை மட்டும் வெளிப்படையாகச் சொல்வது. காலம் மற்றும் செயல் குறிப்பாக பெறப்படும். வெளிப்படையாக இருக்காது. 

நேத்து அந்த மேடையில் பாடிய பெண், அழகா இருந்தாள் என்று சொல்லும் போது ...

பாடிய என்ற பெயரெச்சம் இறந்த காலத்தை காட்டுகிறது. எனவே இது தெரிநிலை பெயரெச்சம். 

சில சமயம், காலம் வெளிப்படையாக தெரியாமல், குறிப்பாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

அழகிய என்பது பெயரெச்சம். அழகிய பெண், அழகிய புறா என்று பெயரைக் கொண்டு முடியும். ஆனால் அதன் காலம் தெரியாது. 

இலக்கணம் போதுமா ?


"அலைத்தலைய வீழ்ந்தும்மை வினையுலப்ப வாங்கிருந்த"

உலப்ப என்றால் முடிதல். இறுதி என்று பொருள். 

இறைவன் திருவருள் முடிவில்லா ஆனந்தத்தைத் தரும் என்பார் மணிவாசகர். 

உலப்பிலா ஆனந்தமாய தேனினை சொரிந்து என்பது திருவாசகம் 


பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
    பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
    உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த
    செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே 


தமிழ், எங்கோ ஆரம்பித்து, எங்கோ இழுத்துக் கொண்டு போகிறது. 

வாசியுங்கள். அத்தனையும் தேன் . அள்ளிப் பருகுங்கள்.


http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_16.html