Wednesday, January 31, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - கண்டகர் உய்ந்தார் எவர் ?

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - கண்டகர் உய்ந்தார் எவர் ?


சூழ்ச்சியால் சீதையை கவர மாரீசனின் உதவியை நாடுகிறான் இராவணன். அப்படி செய்வது தவறு என்று இராவணனுக்கு , மாரீசன் சில அறிவுரைகள் கூறுகிறான்.

"தண்ணீரை திருடியவர்கள், நாடு கவர்ந்தவர்கள், முறை இல்லாமல் வரி கொண்டவர்கள், மற்றவன் மனைவியை கவர்ந்து கொண்டவர்கள் போன்ற இவர்களை அறம் கொல்லும் . தீயவர்கள் யாரும் தப்பிப் பிழைக்க முடியாது " என்கிறான்

பாடல்

நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார்,
    நடை அல்லா
வாரம் கொண்டார், மற்று ஒருவற்கு
    ஆய் மனை வாழும்
தாரம் கொண்டார் என்று இவர்
    தம்மைத் தருமம் தான்
ஈரும் கண்டாய்! கண்டகர் உய்ந்தார்
    எவர்? ஐயா!


பொருள்

நாரம் கொண்டார் = நீரை எடுத்துக் கொண்டவர்கள்

நாடு கவர்ந்தார் = நாட்டினை கவர்ந்து கொண்டவர்கள்

நடை அல்லா = வழி முறை இல்லாத

வாரம் கொண்டார் = வரி கொண்டவர்கள்

மற்று ஒருவற்கு  ஆய் = மற்றவர்க்கு என்று ஆகி

மனை வாழும் = அவர்கள் இல்லத்தில் வாழும்

தாரம் கொண்டார் = தாரத்தை அபகரித்துக் கொண்டவர்கள்

என்று இவர் தம்மைத் = என்ற இவர்களை

 தருமம் தான் = அறம் தான்

ஈரும் கண்டாய்! = இறுதியை காணும் , அழிக்கும்

கண்டகர்  = தீயவர்

உய்ந்தார் எவர்? ஐயா! = தப்பியவர்கள் யார் ஐயா ? (யாரும் இல்லை )

நார என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள்  உண்டு.அதில் முக்கியமான அர்த்தம் "நீர்"  என்பது. (ஆத்மா என்பது இன்னொரு அர்த்தம்) .

அயனம் என்றால் வழி என்று  நமக்குத்  .தெரியும். சூரியன் , பூமியின் வட பகுதியில் சஞ்சரிக்கும் நேரத்துக்கு உத்தராயணம் என்று பெயர். தென் பகுதியில் இருக்கும் நேரத்துக்கு தட்சிணாயனம் என்று பெயர். (உத்திரம் = வடக்கு)

இராமன் வழி என்பதைக் காட்ட இராமாயணம்.

நீரின் வழி வந்ததால், நாரம் + அயனம் = நாராயணம் , நாராயணன்.

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவம்.

நாரம் கொண்டார் என்றார் நீரைப் பறித்துக் கொண்டவர்கள் என்று பொருள்.

நாம் ஒரு பட்டியல் இடுகிறோம் என்றால், எதை முதலில் சொல்ல வேண்டும், எதை இறுதியில் சொல்ல வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும் . அந்த முறைப்படிதான் சொல்ல வேண்டும். மனம் போன போக்கில் பட்டியல் போடக் கூடாது.

மாதா, பிதா, குரு , தெய்வம் என்று பட்டியல் போட வேண்டும்.

தீமைகளை பட்டியல் போட வந்த கம்பர், முதலில் நீரை திருடியவர்களை முதலில் சொல்கிறார். உள்ளதற்குள் பெரிய தீமை அது.

இன்று மாநிலங்கள் நீருக்காக அடித்துக் கொள்கின்றன. வரும் நாட்களில் நீரை காரணமாக் கொண்டு பெரும் போர்கள் நிகழலாம். நீர் உயிர் வாழ இன்றி அமையாதது.  அதை திருடியவன் பெரிய திருடன்.

அடுத்தது, நாட்டை கவர்ந்து கொண்டவர்கள். தன் பலத்தால் மற்றவர்கள் நாட்டை பறித்துக் கொண்டவர்கள்.

அரசாங்கம் சக்தி வாய்ந்தது. குடி மக்கள் பலம் இல்லாதவர்கள். அரசாங்கம் முறையாக வரி வசூலிக்க வேண்டும். அடக்கு முறையால், முறையற்ற வரி வசூலித்தால்  அது பெரிய தீமை.

அடுத்த தீமையாக, மற்றவன் மனைவியை அபகரிப்பது. பலம் பொருந்தியவன், பலம் இல்லாதவனின் மனைவியை கவர்ந்து கொள்ள முடியும்.  அப்படி செய்தால், சமுதாயம் சீரழியும். குடும்பங்கள் சிதையும்.

பிறன் மனை நோக்கா பேராண்மையாளன் என்பார் வள்ளுவர்.

மாற்றான் மனைவியோடு தனிமையில் இருப்பவனுக்கு பக்கத்தில் சாத்தான் இருப்பான் என்கிறார் நபிகள் நாயகம்.

இப்படி தீமை செய்பவர்களை யார் என்ன செய்யமுடியும் ?

ஒரு அரசே தவறான முறையில் தண்ணீர் தராவிட்டால், முறையற்ற வழியில் வரி வசூலித்தால்  என்ன செய்ய முடியும் ?

யாரிடம் முறையிடுவது ?

மாரீசன் சொல்கிறான் - தர்மம் அவர்களின் இறுதியைக் காணும் என்று. தர்மம் அவர்களை அழிக்கும் என்கிறார் கம்பர், மாரீசன் மூலம்.

யாருக்குப் பயப்படாவிட்டாலும் தர்மத்திற்கு பயப்பட வேண்டும்.


http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_31.html






Monday, January 29, 2018

திருக்குறள் - நட்பு - ஊதியம்

திருக்குறள் - நட்பு - ஊதியம்



ஒருவருக்கு ஊதியம் என்பது பேதையரின் நட்பை விடுவது என்கிறார் வள்ளுவர்.

பாடல்

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

பொருள்

ஊதியம் = ஊதியம், பேறு ,

என்பது = என்பது

ஒருவற்குப் = ஒருவருக்கு

பேதையார் = அறிவில்லாதவர்

கேண்மை = நட்பை

ஒரீஇ விடல் = விலக்குதல் , விட்டு விடுதல்


அவ்வளவுதான் அர்த்தம்.

அறிவில்லாதவர் சேர்க்கையை விட்டு விட்டால் எப்படி நமக்கு அது ஊதியமாகும் ?

ஊதியம் என்றால் என்ன ?

இப்போதைக்கு வருமானம், சம்பளம், இலாபம் என்று வைத்துக் கொள்வோம். பின் மற்றவரை சேர்க்கலாம்.

நமக்கு  ஊதியம் வேண்டும் என்றால் என்ன  செய்ய வேண்டும் ?

நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலையில் சேர வேண்டும். நன்றாக உழைக்க வேண்டும்.

அறிவில்லாதவர்களுடன் சேர்ந்தால் இது எல்லாம் நடக்காது என்கிறார்.

எப்படி என்று  பார்ப்போம்.

நல்ல கோர்ஸில் சேர்ந்து படிக்க வேண்டும். எது நல்ல கோர்ஸ் ?

நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும். எது நல்ல கல்லூரி ?

நல்ல நிறுவனத்தில் சேர வேண்டும். எது நல்ல நிறுவனம் ?

இப்படி நிறைய கேள்விகளுக்கு சரியான விடை தெரிந்தால் தான் நல்ல ஊதியம் கிடைக்கும். அது,  மூடர்களோடு சேர்ந்தால் கிடைக்காது.

இரண்டாவது, அறிவற்ற பேதைகள் தங்கள் நேரத்தை வீணடிப்பது மாத்திரம் அல்ல,  நமது நேரத்தையும் சேர்த்து வீணடித்து விடுவார்கள். நல்ல ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு அவர்களால் நழுவிப் போய் விடும்.

மூன்றாவது, அவர்கள் தவறான வழியில் செல்லும் போது , அவர்களோடு சேர்ந்த நம்மையும்  உலகம் தவறாகத்தான் நினைக்கும். காட்டில் வேங்கை மரம் தீப் பிடித்து எரியும். அதோடு கூட , அருகில் உள்ள சந்தன மரமும் சேர்ந்து எரியும் . தீயவர்களோடு, அறிவற்ற மூடர்களோடு சேர்ந்து திரிந்தால் உலகம் நம்மையும் அப்படித்தான் பார்க்கும்.

மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர் - புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால்.



நான்காவது, அறிவுள்ளவர்களோடு சேரும் போது , அவர்களை போல நாமும் ஆக வேண்டும் என்று ஒரு உத்வேகம், உற்சாகம் பிறக்கும். அது நம்மை நல் வழிப் படுத்தும்.

உங்களுக்கு ஊதியம் வேண்டுமா ? அறிவற்ற பேதைகளின் சகவாசத்தை விடுங்கள். நாளடைவில் உங்கள் ஊதியம் தானாக உயர்கிறதா என்று பாருங்கள்.

அறிவற்ற பேதைகள் நேரில் தான் இருக்க வேண்டும் என்று இல்லை.

Whatsapp , Facebook போன்றவற்றின் மூலமும் நமது பொன்னான நேரத்தை வீணடிப்பார்கள்.

வெட்டி அரட்டை. தேவையில்லாத forward , அர்த்தம் இல்லாத விவாதங்கள் என்று காலம் போய் விடும்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அறிவற்றவர்களின் நடப்பை எல்லா விதத்திலும் தவிர்க்க வேண்டும். அதுவே நல்ல ஊதியம் காண வழி.

http://interestingtamilpoems.blogspot.com/2018/01/blog-post_79.html



அது மட்டும் அல்ல, நாமும் அப்படி ஒரு நண்பராய் மற்றவர்களுக்கு இருக்க வேண்டும்.





இராமாயணம் - மாரீசன் அறிவுரை - செல்வம் பெற்ற வழி

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - செல்வம் பெற்ற வழி 


நமக்கு வாய்த்த செல்வம், புகழ் , பதவி, அதிகாரம் எல்லாம் நம் அறிவினாலும், திறமையினாலும் வந்தது என்று நாம் நினைக்கிறோம். நான் செய்தது,  என் திறமைக்கு கிடைத்த பரிசு என்று நினைக்கிறோம்.

இராவணன் அடையாத செல்வம் இல்லை.

கல்வி  - நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்
வீரம் - ஏனை திக்கோடு உலகு அனைத்தும் சென்றடக்கிய புய வலியும்
ஆயுள் - முக்கோடி வாழ் நாளும்
தவம் - முயன்றுடைய பெரும் தவமும்

இவை எல்லாம் எப்படி வந்தன ? இராவணன் நினைத்துக் கொண்டிருக்கிறான் அவனுடைய தவம் மற்றும் திறமையால் வந்தது என்று.

மாரீசன் சொல்கிறான் , "இவை எல்லாம் உன் திறமையினாலோ, தவத்தாலோ, வீரத்தாலோ வந்தது அல்ல. அறத்தினால் வந்தது. நீ அறம் வழுவினால், இவை அனைத்தும் போய் விடும் " என்று அறிவுரை கூறுகிறான்.

பாடல்

'திறத் திறனாலே, செய் தவம் முற்றித் திரு உற்றாய்,
மறத் திறனாலோ? சொல்லுதி-சொல் ஆய் மறை வல்லோய்!-
அறத் திறனாலே எய்தினை அன்றோ? அது, நீயும்
புறத் திறனாலே பின்னும் இழக்கப் புகுவாயோ?

பொருள்

'திறத் திறனாலே = மிகப் பெரிய திறமையால்

செய் தவம் = செய்த தவத்தால்

முற்றித் = முழுவதுமான

திரு உற்றாய் = செல்வத்தைப் பெற்றாய்

மறத் திறனாலோ? = அதர்மத்தினாலா ?

சொல்லுதி = சொல்லுகிறாய்

சொல் ஆய் = ஆயிந்த சொற்களை கொண்ட

மறை வல்லோய்! = வேதங்களில் வல்லவனே

அறத் திறனாலே = அறத்தினால்

எய்தினை அன்றோ? = அடைந்தாய் அல்லவா

அது = எ அவற்றை

நீயும் = நீயும்

புறத் திறனாலே = அறத்திற்கு புறம்பான செய்கையால்

பின்னும்  = பின்னால் அவற்றை

இழக்கப் புகுவாயோ? = இழக்கப் போகிறாயா ?

அற வழியில் சென்றால் செல்வம் நிலைக்கும். அறம் அல்லாத வழியில் சென்றால் செல்வம் போகும்.

இன்றைய சூழ்நிலையில் அரசியலில், பெரிய பதவிகளில் இருப்பவர்கள் , பணம் மட்டும் இருந்தால் போதும், எப்படியும் தப்பித்துக் கொள்ளலாம் என்று தவறு மேல் தவறு செய்கிறார்கள்.

இராவணனிடம் இல்லாத வீரமா, செல்வமா, புகழா, படையா...

தோற்று, அவமானப் பட்டு, கடைசியில் இறந்தும் போனான்.

இராமாயணம் படிப்பது கதைக்காக அல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி முறை.

அது சொல்லும் அறத்தை விட்டு விட்டு கதையை பிடித்துக் கொள்ளக் கூடாது.

கதையை விட்டு விட்டு அறத்தை பிடித்துக் கொள்ள வேண்டும்.

நீரையும் பாலையும் பிரித்தால் மட்டும் போதாது, பாலைப் பருக வேண்டும். நீரை அல்ல.

இராமாயணத்தில் ஒவ்வொரு பாட்டிலும், ஒரு பாடம் இருக்கிறது.

மாரீசன் என்ற அரக்கன் இராவணன் என்ற இன்னொரு அரக்கனுக்கு சொன்ன அறிவுரை இது....

நினைத்துப் பார்த்திருப்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_29.html




Tuesday, January 23, 2018

இராமாயணம் - மாரீசன் அறவுரை - செற்ற மனத்தோடு அறைகின்றான்

இராமாயணம் - மாரீசன் அறவுரை - செற்ற மனத்தோடு அறைகின்றான் 


அறம் சொல்வது ஒன்றையே பிரதானமான குறிக்கோளாக கொண்டன நமது இலக்கியங்கள்.

கதை சொல்லும் போது கூட, இடை இடையே அறம் சொல்லிப் போகின்றன.

கதையில் பல பாத்திரங்கள் வரும், போகும்.

எந்த பாத்திரத்தின் வழியாக அறம் சொல்லலாம் என்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

படிக்கிறவர்கள் பல தரப் பட்டவர்கள்.

வசிட்டர் வாயாலேயே அனைத்தும் தர்மங்களையும் சொன்னால், "ஆமா, இவருக்கு வேற வேலை இல்லை ...எப்ப பாரு எதையாவது உபதேசம் செய்து கொண்டே இருப்பர் " என்று சலிப்புற்று மக்கள் அதை வாசிக்காமலேயே போய் விடுவார்கள்.

எனவே, கம்பன் வெவ்வேறு பாத்திரங்கள் மூலம் தர்மத்தை சொல்கிறான்.

வீட்டில் கூட, பெற்றோர்கள் சொன்னால் பிள்ளைகள் பெரும்பாலும் கேட்பதில்லை. "ஆமா, உங்களுக்கு வேற வேலை இல்லை. எப்ப பாரு எதையாவது advice பண்ணிக்கொண்டே இருப்பீர்கள் " என்று பிள்ளைகள் பெற்றோரின் நல்ல வார்த்தைகளை உதாசீனம் செய்து விடுவார்கள். அதையே அவர்கள் நண்பர்கள் சொன்னால் கேட்பார்கள்.

இராமாயணத்தில் மாரீசன் வாயிலாக கம்பன் சில தர்மங்களை சொல்கிறான்.

சீதையை கவர்ந்து வர ஒரு திட்டத்தை மாரீசனிடம் சொல்கிறான் இராவணன். அதைக் கேட்ட மாரீசன், துடித்துப் போகிறான். அப்படிச் செய்யாதே என்று இராவணனுக்கு அறவுரை கூறுகிறான்.

பாடல்

இச் சொல் அனைத்தும் சொல்லி, 
     அரக்கன், எரிகின்ற 
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் 
     என்னக் கிளராமுன், 
'சிச்சி' என, தன் மெய்ச் செவி 
     பொத்தி; தெருமந்தான்; 
அச்சம் அகற்றி, செற்ற 
     மனத்தோடு அறைகின்றான்;

பொருள்


இச் சொல்  அனைத்தும் சொல்லி = இராவணன் கூறிய அனைத்து சொற்களையும்

அரக்கன் = இராவணன்

எரிகின்ற கிச்சின் = எரிகின்ற தீயில்

உருக்கு இட்டு = இரும்பை இட்டு உருக்கி

உய்த்தனன்   = காதில் இட்டது போல

என்னக் = என்று

கிளராமுன் = உணர்ச்சி வசப்பட்டு

'சிச்சி' என, =சீ சீ என்று

 தன் = தன்னுடைய

மெய்ச் செவி பொத்தி = காதுகளை மூடி

தெருமந்தான் = தடுமாறினான்,

அச்சம் அகற்றி = அச்சம் அகற்றி (இராவணன் மேல் அச்சம், இராவணன் சொன்னதைக் கேட்டு அச்சம்)

செற்ற மனத்தோடு = கோபம் கொண்ட மனத்தோடு

அறைகின்றான் = சொல்லுகின்றான்

அறம் எங்கே இருந்து வருகிறது பாருங்கள்.

மாரீசன் என்ன சொல்கிறான் என்று கேட்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_23.html



Monday, January 22, 2018

தேவாரம் - என்று வந்தாய் - பாகம் 2

தேவாரம் - என்று வந்தாய் - பாகம் 2


நமக்கு ஆயிரம் வேலை. ஒன்றா இரண்டா ? ஒன்று முடிந்தால் இன்னொன்று என்று வேலைகள் வரிசையாக நிற்கின்றன. இதற்கு நடுவில் இறைவனைத் தேடுவது, ஞானத்தை தேடுவது என்பதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது.

போகிற அவசரத்தில், சாமி படத்துக்கு இரண்டு பூவைப் போட்டு, கற்பூரம் காட்டிவிட்டு , வாயில் இரண்டு பாடல்களை முணுமுணுத்து விட்டுப் போகத்தான் நேரம் இருக்கிறது.

எப்போவாவது நேரம் கிடைத்தால் கோவிலுக்குப் போகிறோம்.

இறைவனுக்கு அப்படி அல்ல. அவனுக்கு என்ன வேலை. சும்மா உட்கார்ந்து இருக்கிறான்.

அவனுக்கும் போர் அடிக்காதா ? யாருடா வருவா என்று எதிர்பார்த்து காத்திருப்பானாம். யாராவது வந்தால், "அப்பாடா, இப்பவாவது வந்தியே. வா வா ...எப்ப வந்த, எப்படி இருக்க " என்று விசாரிப்பானாம். ..என்று திருநாவுக்கரசர்  சொல்கிறார்.

பாடல்


ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே.


சீர் பிரித்த பின்

ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனமில்லை 
கன்றிய காலனை காலால் கடிந்தவன் அடியவற்காக 
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 
என்று வந்தாய் என்னும் எம் பெருமான் தன் திருகுறிப்பே 

பொருள்

ஒன்றி இருந்து  = மனமும் செயலும் வாக்கும் ஒன்றாக இருந்து

நினைமின்கள் = மனதில் நினையுங்கள்

உம் தமக்கு = உங்களுக்கு

ஊனமில்லை = ஒரு குறையுமில்லை

கன்றிய = மிகுந்த கோபம் உள்ள

காலனை = எமனை

காலால் கடிந்தவன் = காலால் உதைத்தவன்

அடியவற்காக = தன்னுடைய அடியவனான மார்கண்டேயருக்காக

சென்று தொழுமின்கள் = சென்று தொழுங்கள்

தில்லையுள் = சிதம்பரத்தில்

சிற்றம்பலத்து = சிறிய அம்பலத்தில்

நட்டம் = நடனம் புரியும் அவன்

என்று வந்தாய் = எப்ப வந்தாய்

என்னும் = என்று கேட்பது போல தோன்றும்

எம் பெருமான் = என்னுடைய பெருமான்

தன் திருகுறிப்பே = அவனுடைய குறிப்பே

ஒன்றி இருந்து நினைமின்கள்: எது ஒன்ற வேண்டும் ? எதோடு ஒன்ற வேண்டும் ?


கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே


ஐந்து புலன்களும் ஒவ்வொரு பக்கம் நம்மை இழுத்துக் கொண்டு போகிறது. 

கை பூ போடுகிறது. 
விழி பிரகாரத்தில் போகும் அந்த சிவப்பு சேலையை பார்க்கிறது 
மனம், இன்று அலுவலகத்தில் என்ன மீட்டிங் என்று யோசிக்கிறது 
நாக்கு ஏதோ பொய் சொல்கிறது 
உடம்பு வேறொன்றில் நாட்டம் கொள்கிறது 
செவியோ அருகில் இருப்பவர்கள் பேசுவதை கேட்கிறது 

இப்படி இருந்தால், நான் செய்யும் பூசையை எவ்வாறு ஏற்றுக் கொள்வாய் ஈசனே என்று புலம்புகிறார் பட்டினத்தார். 

ஐந்து புலன்களும் ஒன்ற வேண்டும். அதோடு மனமும் ஒன்ற வேண்டும். அப்படி ஒன்றி இருந்து நினைமின்கள். 


கன்றிய காலனை காலால் கடிந்தவன் : என்ன சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நடுவில் காலனை காலால் உதைத்தவர் என்று ஒரு வரியைப் போடுகிறார் திருநாவுக்கரசர் என்று தோன்றுகிறதா ?

அவர், நாவுக்கு அரசர். அர்த்தம் இல்லாமல் எதையாவது சொல்வாரா ?

ஐந்து புலன்களும் மனமும் ஒன்றி இருந்தால் என்ன ஆகும் ? ஏன் ஒன்ற வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அது. 

மாக்கண்டேயருக்கு பதினாறு வயதில் மரணம் என்பது அவர் விதி. அவர் ஆயுள் முடிந்ததும் , அவர் உயிரை எடுக்க காலன் வந்தான். மார்க்கண்டேயர் சிவலிங்கத்தை  கட்டி பிடித்துக் கொண்டார். அதற்காக விட முடியுமா ? காலன் அவன் கடமையை செய்ய முயன்றான். அவனை காலால் எட்டி உதைத்து அவன் கடமையை செய்ய விடமால் செய்தது எந்த விதத்தில் நியாயம் ? அந்த சிவனின் செயல் போற்றுதலுக்கு உரியதா ? 

தன் பக்தன் என்பதற்காக அவனுக்கு விதியில் இருந்து விலக்கு அளிப்பதா ? சரி, அப்படியே விதிவிலக்கு அளித்தாலும், அதற்கு முன்னும், பின்னும் அப்படி யாருக்கும்  விதி விலக்கு அளித்த மாதிரி தெரியவில்லை. மார்க்கண்டேயர் மட்டும் தான் உண்மையான பக்தரா ? 

அது அல்ல கதையின் அர்த்தம். 

மார்க்கண்டேயர் மனம் ஒன்று பட்டு இறைவனை வழிபட்டார். அவர் காலத்தை  கடந்து விட்டார். காலம் என்பது அவருக்கு இல்லை. இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்றெல்லாம் ஒன்று இல்லை. நிகழ் காலம் மட்டும்தான் உண்டு.  இறந்த காலம் , எதிர் காலம் என்பதை காட்ட முடியுமா ? இறந்த காலம், இறந்து போய் விட்டது. இனிமேல் அதை காண முடியுமா. எதிர் காலம் வரவே வராது. கானல் நீர் போல அது ஒரு கற்பனை. நம்மால் அதை எட்டிப் பிடிக்கவே முடியாது. இருப்பது ஒரே ஒரு காலம்தான். அது தான் நிகழ் காலம். இது புரியாத சாதாரண மனிதர்கள் இறந்த காலம், எதிர் காலம் இவற்றிற்கு இடையில் கிடந்து அல்லாடுகிறார்கள். 

யோகிகளுக்கு இறந்த காலமும் இல்லை. எதிர் காலமும் இல்லை. நிகழ் காலம் மட்டும் தான் உண்டு. அப்படி என்றால் அவர் காலத்தை கடந்து சென்று விட்டார். அவரைப் பொறுத்தவரை காலம் என்பது இல்லை. அவர் என்றும் பதினாறு என்பதின் தத்துவம், யோகிகள் கால தத்துவத்தை கடந்து சென்று விடுகிறார்கள். 


சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவ யோகிகளே  காலத்தை வென்று இருப்பார். மரிப்பார் வெறும் கர்மிகளே என்பார் அருணகிரிநாதர். 

நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.


காலத்தை வென்று இருக்கலாம். 

பிறப்பும் இறப்பும் அற்றுப், பேச்சும் அற்று, மூச்சும் அற்று,
 மறப்பும் நினைப்பும் அற்று மாண்டிருப்பது எக்காலம்?

என்பார் பத்திரகிரியார். 

பிறப்பும் இறப்பும் அற்ற இடம், காலம் நின்று போன இடம். 

தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் : தில்லையில், சிற்றம்பலத்தில் நடனம் நாடுகிறான். 

சிற்றம்பலம் - சின்ன அம்பலம். அம்பலம்என்றால் பொது இடம். மேடை மாதிரி. 

சிற்றம்பலம் என்று ஒன்று இருந்தால், பேரம்பலம் என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா ? எது பேரம்பலம் ? இந்த உலகம் , பிரபஞ்சம் தான் பேரம்பலம். இந்த பேரம்பலம் ஏன் இருக்கிறது ? எதற்காக இத்தனை நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன்கள்...இவை எல்லாம் ஏன் இப்படி சுழன்று கொண்டிருக்கின்றன. இப்படி சுத்தி சுத்தி அடையப்போவது என்ன ?

ஒன்றும் இல்லை. உலகம் இருப்பதற்கு ஒரு காரணம் இல்லை. நம் வாழ்க்கைக்கும் ஒரு காரணமும் இல்லை. 

இது ஒரு பெரிய விளையாட்டு. லீலா. ரொம்ப சீரியஸ் ஆக வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறார்கள். இறைவனே நடனம் ஆடிக் கொண்டிருக்கிறான். நடனம் என்பது  ரொம்ப சீரியஸ் ஆன வேலையா ?

நடனம் ஆடி எதை சாதிக்க முடியும் ?

ஒன்றும் இல்லை. 

மகிழ்ச்சியாக இருங்கள். சாதிக்க வேண்டியது ஒன்றும் இல்லம். பாடுங்கள். ஆடுங்கள். 

இந்த உலகம் ஒரு மகிழ்ச்சி பிரவாகம். மனமும் புலன்களும் பிரிந்து கிடந்தால் இந்த  மகிழ்ச்சி கிட்டாது. அவை ஒன்றும் போது , காலம் கடந்த இன்பம்  பிரவாகமா ஓடும். 

இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, இரவு , பகல் என்ற எல்லாம் இருமைகளும் மறைந்து  நிர்மலமான நிலை வரும். 

மேலோட்டமான பாடலுக்கு உள்ளே , எவ்வளவு ஆழ்ந்த பொருள் செறிவு. 

நேரம் உண்டாக்கி, தேவாரம் முழுவதும் படியுங்கள். கொட்டிக் கிடக்கிறது. 

Saturday, January 20, 2018

தேவாரம் - என்று வந்தாய் - பாகம் 1

தேவாரம் - என்று வந்தாய் - பாகம் 1 


நமக்கு ஆயிரம் வேலை. ஒன்றா இரண்டா ? ஒன்று முடிந்தால் இன்னொன்று என்று வேலைகள் வரிசையாக நிற்கின்றன. இதற்கு நடுவில் இறைவனைத் தேடுவது, ஞானத்தை தேடுவது என்பதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது.

போகிற அவசரத்தில், சாமி படத்துக்கு இரண்டு பூவைப் போட்டு, கற்பூரம் காட்டிவிட்டு , வாயில் இரண்டு பாடல்களை முணுமுணுத்து விட்டுப் போகத்தான் நேரம் இருக்கிறது.

எப்போவாவது நேரம் கிடைத்தால் கோவிலுக்குப் போகிறோம்.

இறைவனுக்கு அப்படி அல்ல. அவனுக்கு என்ன வேலை. சும்மா உட்கார்ந்து இருக்கிறான்.

அவனுக்கும் போர் அடிக்காதா ? யாருடா வருவா என்று எதிர்பார்த்து காத்திருப்பானாம். யாராவது வந்தால், "அப்பாடா, இப்பவாவது வந்தியே. வா வா ...எப்ப வந்த, எப்படி இருக்க " என்று விசாரிப்பானாம். ..என்று திருநாவுக்கரசர்  சொல்கிறார்.

பாடல்


ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே.


சீர் பிரித்த பின்

ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனமில்லை 
கன்றிய காலனை காலால் கடிந்தவன் அடியவற்காக 
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 
என்று வந்தாய் என்னும் எம் பெருமான் தன் திருகுறிப்பே 

பொருள்

ஒன்றி இருந்து  = மனமும் செயலும் வாக்கும் ஒன்றாக இருந்து

நினைமின்கள் = மனதில் நினையுங்கள்

உம் தமக்கு = உங்களுக்கு

ஊனமில்லை = ஒரு குறையுமில்லை

கன்றிய = மிகுந்த கோபம் உள்ள

காலனை = எமனை

காலால் கடிந்தவன் = காலால் உதைத்தவன்

அடியவற்காக = தன்னுடைய அடியவனான மார்கண்டேயருக்காக

சென்று தொழுமின்கள் = சென்று தொழுங்கள்

தில்லையுள் = சிதம்பரத்தில்

சிற்றம்பலத்து = சிறிய அம்பலத்தில்

நட்டம் = நடனம் புரியும் அவன்

என்று வந்தாய் = எப்ப வந்தாய்

என்னும் = என்று கேட்பது போல தோன்றும்

எம் பெருமான் = என்னுடைய பெருமான்

தன் திருகுறிப்பே = அவனுடைய குறிப்பே

இறைவன் நடனமாடுவது , "எப்பப்பா வந்தாய் " என்று கேட்பது போல இருக்கிறதாம்.

மேலோட்டமாய் பார்த்தால் , இந்த பாட்டில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று தோன்றும். மார்கண்டேயருக்காக , காலனை காலால் உதைத்தார்.  சரி, அதுதான் நமக்குத் தெரியுமே.

தில்லையில், சிற்றம்பலத்தில் நடனம் ஆடுகிறார்....அதுவும் தெரியும்.

போய் பார்த்தால், எப்போது வந்தாய் என்று கேட்பது போல இருக்கும் என்கிறார். சரி , இருந்து விட்டு போகட்டும்.

இதையெல்லாம் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது ? இதை போய் வேலை மெனக்கெட்டு  ஏன் எழுதி இருக்கிறார். அதை இத்தனை காலம் பொக்கிஷமாக  பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன. இதை விட சில சினிமா பாடல்கள் அர்த்தம் நிறைந்ததாகவும், இனிமையாகவும் இருக்கும் போல் இருக்கே.

வைரம் கூட பார்ப்பதற்கு கூழாங்கல் மாதிரித்தான் இருக்கும். சில சமயம் கூழாங்கற்கள் வைரத்தை விட  அழகாகக் கூடத் தோன்றும்.

பட்டை தீட்ட தீட்ட வைரம் ஜொலிக்கும். கூழாங்கல் கரைந்து மண்ணாகிப் போய் விடும்.

சரி, பாடலுக்கு வருவோம்.

தொழுமின்கள் : பிற மதங்களில் தொழுகை உண்டு. மற்ற மதங்கள் தான் தொழுகையை கண்டு பிடித்தன என்று நினைக்கக் கூடாது. தொழுகை என்பது சைவ மற்றும் வைணவ மதத்தின் அடிப்படை கோட்பாடு.

உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.

தொழுது எழு என் மனமே என்பது பிரபந்தம்.

தொழுவார்க்கு ஒரு தீங்கிலையே என்பது அபிராமி அந்தாதி.

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை

சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே

என்பார் அபிராமி பட்டர்.

தொழுவார்க்கு இரங்கி அருள் செய் , என்பார் அப்பர்.


புழுஆய்ப் பிறக்கினும், புண்ணியா!-உன் அடி என் மனத்தே 
வழுவாது இருக்க வரம் தரவேண்டும்-இவ் வையகத்தே 
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச் 
செழுநீர்ப்-புனல் கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே!


 

கொஞ்சம் இலக்கணம் பார்ப்போம் .

தொழுதல் என்பது செயப்படு பொருள் குன்றா  ஏற்கும் வினைப்.

இது என்ன புதுசா இருக்கே. அப்படி என்றால் என்ன ?

வினைச் சொற்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். செயப்படு பொருளை ஏற்கும் வினைச் சொல், செயப்படு பொருளை ஏற்காத வினைச்சொல் என்று.

யாரை அல்லது எதை என்ற கேள்விக்கு விடை தரும் என்றால் அது செயப்படு பொருள் குன்றா  வினைச் சொல்.

உதாரணம்.

தந்தான் - எதைத் தந்தான் ? அறிவை, செல்வத்தை, பொருளை
உண்டான் - எதை உண்டான் ? உணவை உண்டான்

எனவே இவை செயப்படு பொருள் குன்றா வினை.

செயப்படு பொருள் குன்றிய வினை என்றால் என்ன ?

எதை அல்லது யாரை என்று கேள்வி கேட்க முடியாது.

உதாரணம்.

படுத்தான் = எதைப் படுத்தான் ? யாரைப் படுத்தான் என்ற கேள்வி அபத்தமாக இருக்கும்.

தொழுதான் என்ற வினைச்சொல் எதை அல்லது யாரை என்ற கேள்விக்கு விடை தரும்.  செயப்படு பொருள் குன்றா வினை அது.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/1.html



Thursday, January 18, 2018

வினா வெண்பா - என்றும் இடையில் இடமில்லை

வினா வெண்பா - என்றும் இடையில் இடமில்லை 


சமயங்கள் பல வித செய்திகளை சொல்லுகின்றன. இறைவன், ஆத்மா, வீடு பேறு , புலன்களின் மாயத் தன்மை, கர்ம வினை, பாவம், புண்ணியம் என்று பலவிதமான விஷயங்களை பற்றி கூறுகின்றன. ஆழ்ந்து சிந்தித்தால் இவை ஒன்றோடு ஒன்று முரண்பட்டு நிற்பதை காணலாம். அந்த முரண்களை விலக்க மேலும் பல விதிகளை சமயம் படைக்கிறது. சட்டத்தில் ஓட்டைகளும், அந்த ஓட்டைகளை சரி செய்ய மீண்டும் ஒரு சட்ட திருத்தம் வருவதும் போல இவை முடிவு இல்லாமல் போய் கொண்டே இருக்கின்றன.

ஒன்றிலிருந்து ஒன்றாக, மீண்டும் மீண்டும் சுத்திக் கொண்டே இருக்கும்.

ஒரு கால கட்டத்தில் இவை எல்லாம் சரியா ? இல்லை நம்மை போட்டு குழப்பும் உத்திகளா என்ற சந்தேகம் நமக்கு வரலாம்.

பெரும்பாலோனர் இதற்குள்ளே போவது இல்லை . கோவிலுக்குப் போனோமா , சாமி கும்பிட்டோமா, அர்ச்சனை பண்ணினோமா, பிரசாதம் வாங்கினோமா என்று வந்து விடுகிறார்கள். இந்த தர்க்க சிக்கலுக்குள் எல்லாம் போய் மண்டைய உடைத்துக் கொள்வது இல்லை.

இதையெல்லாம் கேட்டு, நம் அறியாமையை நாம் ஏன் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரி போய் விடுவார்கள்.

வினா வெண்பா என்ற சைவ சிந்தாந்த நூல், இந்த அடைப்படை சித்தாங்களை கேள்வி கேட்கிறது. கேள்வி கேட்பது மட்டும் அல்ல, சில சமயம் கேலியும் செய்கிறது.

பதின்மூன்று பாடல்கள் இருக்கின்றன.

அதில் இருந்து ஒன்று

பாடல்

ஒன்றி நுகர்வதிவன் ஊணும் உறுதொழிலும்
என்றும் இடையில் இடமில்லை - ஒன்றித்
தெரியா அருள்மருதச் சம்பந்தா சேர்ந்து
பிரியாவா றெவ்வாறு பேசு.


பொருள்

ஒன்றி = ஒன்றாக

நுகர்வதிவன் = நுகர்வது இவன்

ஊணும் = உடலும்

உறுதொழிலும் = செய்யும் பெரிய தொழிலும்

என்றும் = எப்போதும்

இடையில் = இரண்டுக்கும் இடையில்

இடமில்லை  = இடம் இல்லை

ஒன்றித் = ஒன்றாகத்

தெரியா = தெரியாத

அருள்மருதச் சம்பந்தா = சம்பந்தனே

சேர்ந்து = சேர்ந்து

பிரியா = பிரியாமல்

வாறு எவ்வாறு = இருப்பது எவ்வாறு

பேசு = சொல்

அதாவது,

இறைவன் அனைத்திலும் நிறைந்திருக்கிறான் என்றால், எனக்குள்ளும், நான் அனுபவிக்கும்  பொருள்களின் உள்ளும் அவன் இருக்கிறான் அல்லவா.

அப்படி என்றால், புலன்கள் எவ்வாறு எதையும் அனுபவிக்க முடியும் ? அனுபவம் என்பது  அனுபவிப்பவன், அனுபவிக்கப் படுவது என்று என்ற இரண்டு  வேண்டும் அல்லவா. இரண்டுமே இறைவன் தான் என்றால், பின் அனுபவம் நிகழ்வது எவ்வாறு ?


"ஊணும் உறுதொழிலும்" : ஊன் என்பது இந்த உடல். உறு தொழில் என்பது அனுபவம்.

"என்றும் இடையில் இடமில்லை ": இரண்டுக்கும் இடையில் இடைவெளி இல்லை. அனுபவம் பெறுபவனுக்கும், அனுபவத்துக்கும் இடையில் இடைவெளி இல்லை . இரண்டுமே ஒன்றுதான் என்றால், அனுபவம் நிகழ்வது எவ்வாறு ?

இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறான் என்றான் என்றால், அவனை நாம் ஏன் வணங்க வேண்டும். வணங்குவது யார், வணங்கப் படுவது யார் ? எல்லாமே இறைவன் இறைவன் தான் என்றால் , இறைவனே ஏன் இறைவனை வணங்க வேண்டும் ?

இல்லை..இல்லை...இது ஜீவாத்மா, அது பரமாத்மா என்று வேறு வேறானவை என்றால், இப்படி இது வேறானது ? யார் இந்த வேற்றுமையை தோற்றுவித்தது.

சரி, வேற்றுமை எப்படியோ வந்து விட்டது என்றே வைத்துக் கொள்வோம். பின் எப்படி  இரண்டும் ஒன்றாகும் ? யார் சேர்த்தது வைப்பது ?

"சேர்ந்து பிரியாவா றெவ்வாறு பேசு"- சேர்ந்து இருந்தது எப்படி பிரிந்தது ? பிரிந்தது பின் எப்படி சேரும், சொல்லு என்று கேட்கிறார்.

இந்த தத்துவ விசாரங்கள் எல்லாம் மனிதனே உண்டாக்கியவை. இதில் கிடந்து உழலாதே  என்கிறார். இவை எல்லாம் மனிதர்களின் கற்பனையில் உதித்தவை. இவற்றில் இருந்து உண்மையை கண்டு பிடிக்க முடியாது என்று சொல்கிறார்.

எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாதே. கேள்வி கேள். ஆராய்ச்சி பண்ணு என்கிறது.

இதில் உள்ள சிறப்பு என்ன என்றால், சைவ சித்தாந்தங்களை கேள்வி கேட்ட , கேலி செய்த இந்த வினா வெண்பாவை திருமுறை என்று கொண்டாடுகிறது சைவம். அது சைவத்தின் சிறப்பு. கேள்வி கேட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டுவது அல்ல சமயம். கேள்வி கேள். தேடு. கிண்டல் செய். ஆனால், தேடும் முயற்சியை விடாதே என்று சொல்வதாக, இந்த வினா வெண்பாவை திருமுறையாக ஏற்றுக் கொண்டது.

சைவ சமயத்தின் உன்னதம் அது.

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரனை, நக்கீரத் தேவர் என்று கொண்டாடியது.

சிவனை சைவ சமயத்தில் இருந்து தள்ளி வைக்கிறேன் என்று சொன்னவரை நாயன்மார் வரிசையில் வைத்து அழகு பார்த்தது சைவம்.

கேள்வி கேளுங்கள் . எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

அதுவே உண்மையான ஞானத்தின் முதல் படி.

ஞானம் விடுதலை தரும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_18.html