Monday, April 15, 2019

அபிராமி அந்தாதி - எந்தன் விழுத் துணையே

அபிராமி அந்தாதி - எந்தன் விழுத் துணையே


பையன்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரி அது.  அவர்கள் முதன் முதலாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். மனதுக்குள் ஆயிரம் மின்னல். விட்ட குறை தொட்ட குறையாக எங்கேயோ எப்போதோ தொடங்கிய சொந்தம் இந்தப் பிறவியிலும் தொடர்கிறதோ என்று இருவர் மனத்திலும் ஒரு மெல்லிய உணர்வு.

பேச்சு எல்லாம் இல்லை. எல்லாம் கண் பார்வைதான். அதில் ஆயிரம் கவிதைகள்.

தொடாமல் பேசாமல் அவர்கள் காதல் நாளொரு வண்ணமாய் வளர்கிறது.

அவனுக்கு உள்ளுக்குள் ஒரு சந்தேகம்...."அவள் உண்மையிலேயே என்னை விருப்புகிறாளா அல்லது நான் தான் ஏதோ நினைத்துக் கொண்டு அலைகிறேனா " என்று. நேரே போய் கேட்டு விட்டால் என்ன? ஒரு வேளை "அப்படி எல்லாம் இல்லை " என்று சொல்லி விட்டால் ? அந்தப் பயத்திலேயே ஒவ்வொரு நாளும் கழிகிறது.

ஒவ்வொரு நாளும் அவள் வரும் வழி பார்த்து காத்திருப்பான். தூரத்தில் அவள் வருவது தெரிந்தால் அவன் மனதில் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் ஒரு சேர மலரும். அவள் அருகில் வர வர அவன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.


கண்ணை மூடி அபிராமியை நினைக்கிறார் அபிராமி பட்டர்.

அவள் முகம், அவள் கண், அவள் உதடு, அவள் நெற்றி ஒவ்வொன்றாக அவர் மனக்கண்ணில் வந்து போகிறது. அவளின் ஒவ்வொரு அவயவமும் அவ்வளவு அழகு. அவ்வளவு பிரகாசம்.

பாடல்

‘‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழத்துணையே’’ 


பொருள்


‘‘உதிக்கின்ற செங்கதிர் = உதிக்கின்ற சூரியன்.

உதித்தல் என்றால் இதுவரை மறைந்து இருந்தது, தெரியாமல் இருந்தது, இப்போது தோன்றுவதற்கு உதித்தல் என்று பெயர்.

சூரியன் இன்று தோன்றவில்லை. அது என்றுமே உள்ளது. இரவில் தெரியாமல் இருந்தது, இப்போது உதித்தது.

"ஒரு திரு முருகன் வந்து அங்கு உதித்தனன்" என்பார் கச்சியப்பர் கந்த புராணத்தில்.


அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்,
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகி,
கருணை கூர் முகங்களாறும், கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே,
ஒருதிரு முருகன் வந்து, ஆங்கு, உதித்தனன் உலகமுய்ய.

இறைவன் என்றும் உள்ளவன். அவன் தோன்றாத தன்மையன். எனவே தான் முருகன் உதித்தான் என்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

சூரியன் ஒளி போல் பிரகாசமாய் இருந்தது...எது ?

 உச்சித் திலகம்  = அவளுடைய உச்சியில் வைத்த திலகம்

 உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் = உணர்வு உடையோர் மதிக்கின்ற மாணிக்கம்.

அறிவுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்று சொல்லி இருக்கலாம் தானே. அறிவு, மேலும் மேலும் குழப்பத்தையே தரும். உணர்வு அப்படி அல்ல. அதில் ரொம்ப குழப்பம் இல்லை.


 மாதுளம் போது = மாதுளை மொட்டு

மலர்கமலை = தாமரை மலர்

துதிக்கின்ற மின் கொடி =   வணங்கத்தக்க மின்னல் போன்ற கொடி

எவ்வளவு சிக்கல்கள், குழப்பங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒரே நொடியில் தீர்த்து வைப்பவள். மின்னல் அடிக்கும் நேரத்தில். எனவே மின் கொடி

மென்கடிக் = மென்மையான வாசனை கலந்த

குங்கும தோயமென்ன =குங்கும நீர் போல

விதிக்கின்ற மேனி = விளங்குகின்ற மேனி

அபிராமி  = அபிராமி

என்தன் = என்னுடைய

விழுத்துணையே’’ = சிறந்த  துணையே


உதிக்கின்ற செங்கதிர் 
உச்சித் திலகம் 
மதிக்கின்ற மாணிக்கம் 
மாதுளம் பூ 
குங்குமம் 

எல்லாம் சிவப்பு மயம். அவள் சிவந்த மேனியள். 

அம்பாளை பலர் பச்சை நிறம் என்று சொல்லுவார்கள், கறுப்பு நிறம் என்று சொல்லுவார்கள். 

பட்டர் சிவந்த மேனியாக பாக்கிறார். கண்ணை ஒரு நிமிடம் மூடிப் பாருங்கள். 

சிவப்பும், ரோஸ் கலரும் கண்ணுக்குள் குழைந்து ஓடுவதை காண்பீர்கள். 

அப்படிப்பட்ட அவள், என்னுடையவள். எனக்கு வழி காட்டுபவள் என்கிறார் பட்டர்.

"விதிக்கின்ற மேனி, அபிராமி, "எந்தன்" விழுத் துணையே"

என்னுடைய துணை அவள் என்று சொந்தம் கொண்டாடுகிறார். 

"விதிக்கின்ற மேனி , அபிராமி, "நமக்கு" விழுத் துணையே"

என்று சொல்லவில்லை. 

அவ்வளவு அன்யோன்யம்.



கம்ப இராமாயணம் - சூர்ப்பனகைக்கு நல்வரவு - பாகம் 2

கம்ப இராமாயணம் - சூர்ப்பனகைக்கு நல்வரவு - பாகம் 2


'தீது இல் வரவு ஆக, திரு! நின் 
     வரவு; சேயோய்! 
போத உளது, எம்முழை ஓர் 
     புண்ணியம்அது அன்றோ? 
ஏது பதி? ஏது பெயர்? யாவர் 
     உறவு?' என்றான். 
வேத முதல்; பேதை அவள் தன் 
     நிலை விரிப்பாள்;

வெறும் சொல்லுக்கு வலிமை உண்டா ? மந்திரங்கள் என்று சொல்கிறார்களே அதற்கெல்லாம் ஒரு வலிமை உண்டா ?

உண்டு என்று நம்பியது நம் தமிழ் இலக்கியம்.

மந்திரம் என்றால் என்ன?

மன் + ஸ்திரம் = மனதில் நினைப்பதை உறுதியாகச் செய்வது.

சொல்லுக்கு வலிமை உண்டு. அர்த்தம் உண்டு. சொல், செயலாகும் என்று நம்பினார்கள்.

சாபம் கொடுப்பது என்று கேட்டு இருக்கிறோம் அல்லவா. தவ சீலர்களின் சொல், உடனே நடக்கும். அவர்கள் சொல் , செயலாகும், பொருளாகும்.

சூர்ப்பனகை வருகிறாள். இராமன் என்ன சொல்லி இருக்க வேண்டும் "தங்கள் வரவு நல்வரவாகுக" என்று தானே சொல்லி இருக்க வேண்டும்?

மாறாக, "தீது இல் வரவு ஆக" நின் வரவு என்கிறான். 

தீது நடக்கப் போகிறது. இராமன் வாயில் அந்த "தீது" என்ற சொல் வந்து விழுகிறது.

கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம். எல்லாம் நல்லபடி நடக்கிறது. அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும்.


காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்,
தீது அறுக!’ என ஏத்தி, சில் மலர் கொடு தூவி,
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்-’


பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று வாழ்த்தி விட்டுப் போக வேண்டியதுதானே. 

"காதலர்கள் பிரியாமல், பற்றிய கை விட்டு விடாமல், தீமை எதுவும் இல்லாமல் " என்று மலர் தூவி வாழ்த்தினார்கள் என்கிறார் இளங்கோ அடிகள்.

அவர்கள் பின்னால் பிரிந்தார்கள், பற்றிய கை நெகிழ்ந்தது, தீமை வந்து சேர்ந்தது.

வார்த்தைகளுக்கு வலிமை இருக்கிறது. 

எனவே தான், திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளில் கொட்டு மேளம், கொட்டு மேளம் என்று பெரிய சத்தமாக வாசிப்பார்கள். ஏன் என்றால், யாராவது, ஏதாவது அமங்கலச் சொல்லை சொல்லி விடலாம். பெரிதாக வாத்ய சத்தம் எழுந்தால் , அதையும் மீறி கத்தி பேச முடியாது அல்லவா. எனவே, எந்தவிதமான அமங்கலச் சொல்லும் நிகழாது என்பதற்காகத்தான் அப்படி ஒரு  பெரிய சத்தத்தை எழுப்புகிறார்கள். 

எனவே,  நமக்கு பாடம் என்ன என்றால்  எப்போதும் நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும். அமங்கல சொற்களை பேசக் கூடாது. எண்ணம் சொல்லாகும், சொல் செயலாகும். பிள்ளைகள் படிக்கவில்லை என்றால் "நீ மண்டு, நீ  மாடு மேய்க்கத்தான் இலாயக்கு" என்று சொல்லக் கூடாது. அதற்காக "நீ தான் உலகிலேயே பெரிய புத்திசாலி " என்று சொல்லியும் கெடுக்கக் கூடாது. 

தீய வார்த்தைகள் எப்படி நம் வாயில் வரும் ? தீயவற்றை பார்ப்பதால், படிப்பதால், கேட்பதால் நமக்கும் அந்த தீய வார்த்தைகள் வந்து ஒட்டிக் கொள்ளும். 

எனவேதான் சொல்லி வைத்தார்கள் , "தீயாரை காண்பதுவும் தீது" என்று. 



தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

தீயார் சொல் கேட்பதுவும் தீது. 

டிவி சீரியல், whatsapp போன்றவற்றில் வெட்டி அரட்டை, அறிவற்ற மூடர்களோடு வெட்டிப் பேச்சு என்று இருந்தால் அது தான் நம்மிடம் ஒட்டிக் கொள்ளும். 

நாம் தீயவர்களை காண்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்த தீயவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் நம்மைத் தேடி வருவார்கள்.  அவர்கள் கண்ணில் படாமல் ஓடி விட வேண்டும் என்கிறது நம் இலக்கியம்.

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி 
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி

என்பது நீதி வெண்பா. 

"தீங்கினர் தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி"

அவன் அந்தப் பக்கம் இருந்தால், நான் பாட்டுக்கு இந்தப் பக்கம் போகிறேன் என்று சொல்லக் கூடாதாம். அவன் கண்ணில் படாத படி சென்று விடவேண்டும் என்கிறது நீதி வெண்பா. 

நம் வீடு தேடி, டிவியில் வருகிறதா இல்லையா சீரியல் என்ற பெயரில் குப்பைகள். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , நாள் ஒன்றுக்கு நூற்றுக் கணக்கான மெசேஜ் கள் வருகிறதா இல்லையா. அவற்றை விட்டு விலக வேண்டும். 

இல்லை என்றால், தீமை வந்தே தீரும். 

பின்னால் வரப் போகும் தீமைகளுக்கும் இவை முன்னால் வரும் சகுனங்கள்.

புரிந்து நடப்பதும், வாதம் செய்வதும் அவரவர் விருப்பம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/2.html


------------------- பாகம் 1 கீழே உள்ளது ------------------------------------------------------------------


தெய்வப் பெண் போல வடிவு கொண்டு இராமன் முன் நாணி கோணி நிற்கிறாள் சூர்ப்பனகை.

"உன் வரவு தீமை இல்லாதாக இருக்கட்டும். தூரத்தில் இருப்பவளே, நீ இங்கு வந்தது பெரிய புண்ணியம் . உன் ஊர் என்ன. உன் பெயர் என்ன " என்று வேத முதல்வனான இராமன் கேட்டான்

பாடல்

'தீது இல் வரவு ஆக, திரு! நின் 
     வரவு; சேயோய்! 
போத உளது, எம்முழை ஓர் 
     புண்ணியம்அது அன்றோ? 
ஏது பதி? ஏது பெயர்? யாவர் 
     உறவு?' என்றான். 
வேத முதல்; பேதை அவள் தன் 
     நிலை விரிப்பாள்;

பொருள்

'தீது இல் = தீமை இல்லாத

வரவு ஆக, = வரவு ஆகட்டும்

திரு! = திருமகள் போன்றவளே

நின் வரவு; = உன் வரவு

சேயோய்! = தூரம் இருப்பவளே, அல்லது அந்நியமானவளே

போத உளது, = நீ இங்கு வந்தது

எம்முழை = எம் இருப்பிடத்துக்கு

ஓர்  = ஒரு

புண்ணியம்அது அன்றோ?  = அது அல்லவா புண்ணியம்

ஏது பதி? = உன் சொந்த ஊர் எது

ஏது பெயர்? = உன் பெயர் என்ன

யாவர் உறவு?' என்றான்.  = உன் உறவினர்கள் யார் யார் ? என்று கேட்டான்

வேத முதல்; = வேத முதல்வனான (இராமன்)

பேதை அவள் தன்      நிலை விரிப்பாள்; = பேதை அவள் தன் நிலை கூறத் தொண்டங்கினாள்

சூர்பனகையிடம் தேவை இல்லாததை பேச ஆரம்பிக்கிறான் இராமன்.

பாக்க இலட்சுமி மாதிரி இருக்கிறாயே

நீ வந்தது பெரிய புண்ணிய பலன் என்கிறான்.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். ஒரு ஆடவன், முன் பின் தெரியாத ஒட்டு பெண்ணைப் பார்த்து, இப்படி பேசுவது சரியானதா ?

சூர்ப்பனகை வந்தது தேவர்கள் செய்த புண்ணியத்தின் பலன் என்று வேண்டுமானால் வியாக்கியானம் செய்யலாம். "உன்னைப் பார்த்தால் இலட்சுமி போல  இருக்கிறது" என்று சொன்னது ?

அது பற்றி மேலும் சிந்திக்க இருக்க இருக்கிறோம்.

உங்களுக்கு சகுனத்தில் நம்பிக்கை உண்டா? நம் தமிழ் இலக்கியம் சகுனத்தை நம்பியது. பின்னால் வரப்போகும் நன்மை தீமைகளை சில நிகழ்ச்சிகள் நமக்கு அறிவிக்கின்றன என்று நம் இலக்கியம் பேசுகிறது.

அதற்கான சான்றுகள் பல இருக்கின்றன.

இந்தப் பாடலில் அப்படி என்ன சகுனம் இருக்கிறது?

நாளை சிந்திப்போமா ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/04/1.html

Friday, April 12, 2019

கம்ப இராமாயணம் - சூர்ப்பனகைக்கு நல்வரவு - பாகம் 1

கம்ப இராமாயணம் - சூர்ப்பனகைக்கு நல்வரவு - பாகம் 1


தெய்வப் பெண் போல வடிவு கொண்டு இராமன் முன் நாணி கோணி நிற்கிறாள் சூர்ப்பனகை.

"உன் வரவு தீமை இல்லாதாக இருக்கட்டும். தூரத்தில் இருப்பவளே, நீ இங்கு வந்தது பெரிய புண்ணியம் . உன் ஊர் என்ன. உன் பெயர் என்ன " என்று வேத முதல்வனான இராமன் கேட்டான்

பாடல்

'தீது இல் வரவு ஆக, திரு! நின் 
     வரவு; சேயோய்! 
போத உளது, எம்முழை ஓர் 
     புண்ணியம்அது அன்றோ? 
ஏது பதி? ஏது பெயர்? யாவர் 
     உறவு?' என்றான். 
வேத முதல்; பேதை அவள் தன் 
     நிலை விரிப்பாள்;

பொருள்

'தீது இல் = தீமை இல்லாத

வரவு ஆக, = வரவு ஆகட்டும்

திரு! = திருமகள் போன்றவளே

நின் வரவு; = உன் வரவு

சேயோய்! = தூரம் இருப்பவளே, அல்லது அந்நியமானவளே

போத உளது, = நீ இங்கு வந்தது

எம்முழை = எம் இருப்பிடத்துக்கு

ஓர்  = ஒரு

புண்ணியம்அது அன்றோ?  = அது அல்லவா புண்ணியம்

ஏது பதி? = உன் சொந்த ஊர் எது

ஏது பெயர்? = உன் பெயர் என்ன

யாவர் உறவு?' என்றான்.  = உன் உறவினர்கள் யார் யார் ? என்று கேட்டான்

வேத முதல்; = வேத முதல்வனான (இராமன்)

பேதை அவள் தன்      நிலை விரிப்பாள்; = பேதை அவள் தன் நிலை கூறத் தொண்டங்கினாள்

சூர்பனகையிடம் தேவை இல்லாததை பேச ஆரம்பிக்கிறான் இராமன்.

பாக்க இலட்சுமி மாதிரி இருக்கிறாயே

நீ வந்தது பெரிய புண்ணிய பலன் என்கிறான்.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். ஒரு ஆடவன், முன் பின் தெரியாத ஒட்டு பெண்ணைப் பார்த்து, இப்படி பேசுவது சரியானதா ?

சூர்ப்பனகை வந்தது தேவர்கள் செய்த புண்ணியத்தின் பலன் என்று வேண்டுமானால் வியாக்கியானம் செய்யலாம். "உன்னைப் பார்த்தால் இலட்சுமி போல  இருக்கிறது" என்று சொன்னது ?

அது பற்றி மேலும் சிந்திக்க இருக்க இருக்கிறோம்.

உங்களுக்கு சகுனத்தில் நம்பிக்கை உண்டா? நம் தமிழ் இலக்கியம் சகுனத்தை நம்பியது. பின்னால் வரப்போகும் நன்மை தீமைகளை சில நிகழ்ச்சிகள் நமக்கு அறிவிக்கின்றன என்று நம் இலக்கியம் பேசுகிறது.

அதற்கான சான்றுகள் பல இருக்கின்றன.

இந்தப் பாடலில் அப்படி என்ன சகுனம் இருக்கிறது?

நாளை சிந்திப்போமா ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/04/1.html

Thursday, April 11, 2019

கம்ப இராமாயணம் - சூர்பனகையை இராமன் வியத்தல்

கம்ப இராமாயணம் - சூர்பனகையை இராமன் வியத்தல் 


தேவ மங்கை வடிவம் கொண்டு சூர்ப்பனகை வருகிறான்.

சீதையைத் தவிர வேறு யாரையும் சிந்தையாலும் தொட்டேன் என்ற உறுதி பூண்டவன் இராமன். சூர்ப்பனகை வரும் கொலுசு, மேகலை சப்தத்தை கேட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பி இருப்பான்...அது தானே நாம் எதிர் பார்ப்பது?

நடந்தது என்ன?

"வானத்தில் இருந்து வந்த அமுதம் போல, அழகிய மார்பகங்களையும், அதன் பாரம் தாங்காமல் துவளும் இடையையும் தன் இரு கண்களால் கண்டான் "

என்கிறான் கம்பன்.


பாடல்

விண் அருள வந்தது ஒரு 
     மெல் அமுதம் என்ன, 
வண்ண முலை கொண்டு, இடை 
     வணங்க வரு போழ்தத்து,- 
எண் அருளி, ஏழைமை துடைத்து, 
     எழு மெய்ஞ்ஞானக் 
கண் அருள்செய் கண்ணன் 
     இரு கண்ணின் எதிர் கண்டான்.

பொருள்

விண் அருள வந்தது = வானில் இருந்து மண் உயிர்களுக்கு அருள

ஒரு  மெல் அமுதம் என்ன = ஒரு மென்மையான அமுதம் போல

வண்ண முலை கொண்டு = வண்ண மயமான  மார்பகங்களை கொண்டு

இடை வணங்க = அதன் பாரத்தால் இடை துவண்டு விழ

வரு போழ்தத்து = அவள் வரும் போது

எண் அருளி = மனதில் எண்ணி, அருள் செய்து

ஏழைமை துடைத்து = அறியாமையை துடைத்து

எழு மெய்ஞ்ஞானக்  = எழுகின்ற மெய் ஞான

கண் = கண்களை

அருள்செய் = அருளிச் செய்கின்ற

கண்ணன்  = கண்களைக் கொண்ட இராமன்

இரு கண்ணின் எதிர் கண்டான். = தன்னுடைய இரு கண்களால் எதிரில் வரக் கண்டான்

இங்கே ஏழைமை என்பது பொருள் செல்வம் இல்லாத ஏழ்மை அல்ல, அறிவுச் செல்வம் இல்லாத ஏழ்மை. அறிவு இல்லாவிட்டால் என்ன, பொருள் இருந்தால் போதும்  என்று நினைக்கிற உலகம்.

வயிற்றுப் பசி தெரிகிறது.

உடல் பசி தெரிகிறது.

அறிவுப் பசி தெரிவதில்லைல். பலருக்கு அந்தப் பசி எடுப்பதே இல்லை.

வயிற்றில் பசி இல்லை என்றால், மருத்துவரிடம் சென்று "டாக்டர் எனக்கு இரண்டு மூணு நாளா சரியா பசியே இல்ல. ஏதாவது மருந்து கொடுங்கள்" என்று கேட்டு வாங்கி மருந்து சாப்பிட்டு, அதன் மூலம் பசியைத் தூண்டி, உணவு உண்கிறார்கள்.

யாராவது, எங்காவது போய் "எனக்கு கடந்த 30 அல்லது 40 வருடமாக அறிவுப் பசியே இல்லை.  ஒண்ணுமே படிப்பது இல்லை. படிக்கணும்னு தோணவே மாட்டேங்குது. புத்தகத்தை கண்டாலே வெறுப்பா இருக்கு.  அதுக்கு எதாவது மருந்து இருக்கா...நல்லா படிக்க ஏதாவது மருந்து இருந்தா கொடுங்க " என்று கேட்டது உண்டா ?

அறிவுச் செல்வம் இல்லாத ஏழ்மையை போக்குபவன் இராமன். நமக்கு அப்படி ஒரு செல்வம் இருப்பதே தெரியாது. அறிவு இல்லை என்பதே நமக்குத் தெரியாது. அப்புறம் அல்லவா அதை அடைய முயற்சி செய்வது. அறியாமை என்ற ஏழ்மையில் மூழ்கிக் கிடக்கிறோம். அதை நீக்கி நமக்கு அறிவு என்ற செல்வத்தை  அருளுபவன் அவன். ஞானக் கண்ணைத் தருபவன்.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
சிந்தை மகிழ சிவ புராணம் தன்னை 
முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான் "

என்கிறார் மணிவாசகப் பெருந்தகை.

அவன் அருள் இருந்தால் தான் அவன் தாளை வணங்க முடியும்.

நாம் கேட்காமலேயே அவன் நமக்குத் தருகிறான். நாம் கூப்பிடாமலேயே நம் உள்ளத்தை கவர்ந்து கொள்கிறான்.

"உள்ளம் கவர் கள்வன்" என்பார் திரு ஞான சம்பந்தர்


தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்       
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் "உள்ளங்கவர் கள்வன்"        
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த         
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.   



அப்படிப்பட்ட இராமன், சீதை குடிசைக்கு உள்ளே இருக்கிறாள்...இங்கே எதிரில் வரும் பெண்ணை  பார்க்கிறான்...

அவள் கண்ணை மட்டும் பார்த்தான் என்று சொல்லி இருந்தால் பெருமையாக இருந்திருக்கும்.

அவள் மார்பைப் பார்க்கிறான்.

தேவலோக அமுதம் போல் இருக்கிறதாம்.

அதன் எடையால், அவள் இடை தாங்கவில்லையாம்.

இது ஒரு சரியான பார்வையா என்ற முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_11.html


Wednesday, April 10, 2019

கம்ப இராமாயணம் - சூர்ப்பனகை வருகையை இராமன் நோக்குதல்

கம்ப இராமாயணம் - சூர்ப்பனகை வருகையை இராமன் நோக்குதல் 



இராமன் மேல் கொண்ட காதலால், சூர்ப்பனகை அவன் அழகை வியந்ததை இது வரி கண்டோம்.

இப்போது, அழகான தேவ மங்கை உருக் கொண்டு சூர்ப்பனகை வருகிறாள்.

இங்கே ஒரு கணம் நிறுத்தி, கொஞ்சம் யோசிப்போம்.

இராமன் என்ன செய்தான், என்ன செய்திருக்க வேண்டும் என்பதை எல்லாம் மறந்து விடுவோம்.

ஒரு பெண், ஒரு ஆணின் மேல் காதல் கொள்கிறாள். அவனிடம் நேரே வந்து, "நான் உன்னை விரும்புகிறேன்..என்னை ஏற்றுக் கொள் " என்கிறாள்.

அந்த ஆடவன் என்ன செய்ய வேண்டும் ?

ஒன்று, அவள் காதலை ஏற்றுக் கொண்டிருக்கலாம். அல்லது, அந்தக் காதலை மறுத்து இருக்கலாம்.

அவ்வளவுதானே? வேறு என்ன செய்ய முடியும்?

இல்லை என்றால், அவளை ஆசை காட்டி மோசம் செய்யலாம். அவள் காதலை கேலி செய்து, அவள் மனதை புண்ணாக்கலாம்.

அவளோடு பேச்சுக் கொடுத்து, அவள் மனதில் மேலும் ஆசையை வளர்த்து விட்டு, பின், "உனக்கு நான் சரியாக மாட்டேன், வேண்டுமானால் இன்னொரு ஆடவனை  தேடிக் கொள்" என்று அவள் பெண்மையை பரிகசிக்கலாம்.

இராமன் என்ன செய்திருப்பான் என்று நினைக்கிறீர்கள்?

"இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம் " தந்தவனாயிற்றே...சூர்பனகையை ஏறெடுத்தும் பார்த்து இருக்க மாட்டான் அல்லவா?

அவள் அழகை இரசித்து இருக்க மாட்டான் அல்லவா? குறிப்பாக, பெண்ணின் அங்க  அழகை உன்னிப்பாக கவனித்து இருக்கமாட்டான் அல்லவா? உன் குலம் என்ன, உன் கோத்திரம் என்ன என்று கேட்டு இருக்க மாட்டான் அல்லவா?

அப்படித்தான் இருக்க வேண்டும்.

ஒக்க மாட, ஒக்க பாண , ஒக்க பத்தினி விரதன் வேறு எப்படி இருந்திருக்க முடியும்?

சூர்ப்பனகை வருகிறாள்


பாடல்


“நூபுரமும், மேகலையும்,
    நூலும் அறல் ஓதிப்
பூ முரலும் வண்டும் இவை,
    பூசலிடும் ஓசை
தாம், உரை செய்கின்றது; ‘ஒரு
    தையல் வரும் “ என்னாக்
கோமகனும், அத்திசை
    குறித்து எதிர் விழித்தான்.



பொருள்

“நூபுரமும் = கொலுசும்

மேகலையும் = சிறிய மணிகள் கோர்த்த இடுப்புச் சங்கிலி

நூலும் = நூல் போன்ற மெல்லிய சங்கிலியும்

அறல் = நுண்ணிய கரு மணல். ஆறு ஓடிய பாதையில், நீர் வற்றிய பின் பார்த்தால் சிறு சிறு கரிய மணல்கள் தெரியும். அதற்கு அறல் என்று பெயர்.

ஓதிப் = பெண்களின் கூந்தலுக்கு ஓதி என்று பெயர். ஆண்களின் கூந்தலுக்கு குடுமி அல்லது குஞ்சி என்று பெயர். அப்படி கரிய கூந்தல் இருந்ததாம். ஆற்றோட்டத்தில் ஏற்பட்ட கரிய துகள்கள் படிந்த பாதை போல அவள் கூந்தல் அலை பாய்ந்து கிடந்தது. அதில்



பூ முரலும் வண்டும் = பூவில் ஒலி எழுப்பும் வண்டும்

இவை, = இவை யாவும் (கொலுசு, மேகலை, அலை பாயும் கூந்தலில் உள்ள வண்டுகள்)

பூசலிடும் ஓசை = சப்தமிடும் ஓசை

தாம் = அந்த ஓசை

உரை செய்கின்றது = சொல்கின்றது

‘ஒரு தையல் வரும் “ = ஒரு பெண் வருகிறாள்

 என்னாக் = என்று

கோமகனும் = இராமனும்

அத்திசை = அந்தத் திசை

குறித்து = நோக்கி

எதிர் விழித்தான். = விழித்துப் பார்த்தான்


சூர்ப்பனகை நடக்கிறாள். அவள் நடையில் ஒரு தளுக்கு இருக்கிறது. அதனால், அவள் சூட்டியுள்ள பூக்களில் உள்ள தேனும், மகரந்தமும் கலந்து போய் ஒரு கலவையாகிப் போய் விட்டது. வண்டுகளால் தேனை உண்ண முடியவில்லை. அவை கோபித்து சப்தம் எழுப்புகிறதாம். 

ஆண்களின் கூந்தலுக்கு குஞ்சி என்று பெயர் என்று சொன்னேன்.

இராமன் மிதிலை நகருக்குள் வருகிறான். சீதை மேல் மாடத்தில் இருந்து பார்க்கிறாள். 

அவளுக்கு அவன் தலைதான் தெரிகிறது. இராமன் காட்டில் இருந்து வருகிறான். அவன் தலை முடி கலைந்து கிடக்கும். அதை காண்கிறாள் சீதை

இந்திர நீலம் போன்ற இருண்ட முடியும், சந்திர வதனமும், நீண்ட கைகளும், மலை போன்ற உயர்ந்த தோள்களும், அவன் புன்முறுவலும் என்னை உண்டு விட்டது என்கிறாள் சீதை. 
இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே.


கைகேயி "உனக்கு மகுடம் கிடையாது, காட்டுக்குப் போ " என்று சொல்லிவிட்டாள். இது கோசாலைக்குத் தெரியாது. கோசலை இருக்கும் மாளிகை நோக்கி இராமன் வருகிறான் அந்த சேதியை சொல்ல. மாடத்தில் இருந்து கோசலை பார்க்கிறாள். தூரத்தில் இராமன் வருவது தெரிகிறது. 

அவன் முடியில் மஞ்சள் நீராட்டுக்கான அடையாளம் ஒன்றும் இல்லை 

‘புனைந்திலன் மௌலி! குஞ்சி மஞ்சனப்
    புனித நீரால்
நனைந்திலன்! என்கொல்? ‘என்னும் ஐயத்தாள்,
    நளின பாதம்,
வனைந்த பொன் கழல் கால் வீரன் வணங்கலும்,
    குழைந்து வாழ்த்தி,
‘நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி
    புனைதற்கு? ‘என்றாள்.


‘புனைந்திலன் மௌலி'

தலையில் மகுடம் இல்லை.

இன்னும் கொஞ்சம் கிட்ட வருகிறான் இராமன்.

"குஞ்சி மஞ்சனப்  புனித நீரால் நனைந்திலன்!"

தலை முடியில் மஞ்சன நீராட்டுக்கான அறிகுறி இல்லை

மேகலை என்று ஒரு ஆபரணம். பெண்கள் இடுப்பில் கட்டுவது. அதில் சிறு சிறு மணிகள் இருக்கும்.

இடுப்பில் இருந்து அது ஆடைக்கு உள்ளே செல்வது.

துரியோதனின் மனைவி பானுமதி. ஒரு நாள் அவளும் கர்ணனும் தாயம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது துரியோதனன் அங்கு வந்தான். வந்தவன் கர்ணனுக்கு பின் இருந்தான். கணவன் வரவை கண்ட பானுமதி எழுந்தாள். அவள் ஆட்டத்தில் தோற்பதை தவிர்க்கவே எழுந்திருக்கிறாள் என்று எண்ணி கர்ணன் அவள் இடுப்பை பிடித்து , "எங்கே போகிறாய் உட்கார் " என்று இழுத்தான். அப்போது அவள் இடுப்பில் கட்டியிருந்த மேகலையில் இருந்து சிறு மணிகள் அறுந்து சிதறி ஓடியது. துரியோதனன் கேட்டான் "இந்த முத்துக்களை எடுக்கவோ, கோர்க்கவோ" என்று.



மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ?
கோக்கவே?'" என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்
சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,

"மேகலை மணி உகவே" .

இராமனுக்கு, சூர்ப்பனகையின் இடுப்பில் உள்ள மேகலையின் மணிச் சத்தம் கேட்கிறது.

யாரோ ஒரு பெண் வருகிறாள் என்று எண்ணி அந்த சத்தம் வரும் திசை நோக்குகிறான்.

அடுத்த என்ன நிகழ்ந்தது?

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_10.html


Tuesday, April 9, 2019

கம்ப இராமாயணம் - வஞ்ச மகள் வந்தாள்

கம்ப இராமாயணம் - வஞ்ச மகள் வந்தாள் 


சூர்ப்பனகையின் வாயிலாக இராமனை வர்ணித்துக் கொண்டே போகிறான் கம்பன். பாடல்கள் இன்னும் இருக்கின்றன. விட்டு விட்டு மேலே சொல்வோம்.

அரக்கி வடிவில் சென்றால் இராமனை மயக்க முடியாது என்று தன் அரக்கி வடிவத்தை மறைத்து கொண்டு, அழகான பெண் போல உருக் கொண்டு சூர்பனகை வருகிறாள்.

பாடல் 



பஞ்சி ஒளிர்விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர்சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை எனஅன்னம் எனமின்னும்
வஞ்சி எனநஞ்சம் எனவஞ்ச மகள் வந்தாள்.

பொருள் 

சூர்பனகையின் பாதம் நடந்து நடந்து வருந்துகிறது

அது எவ்வளவு மெல்லிய பாதம் தெரியுமா?


பஞ்சி = பஞ்சு போன்ற

ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க = பல்லவம் அப்படினா தளிர்.அனுங்க என்றால் வருந்த. குளிர்ச்சியான தளிர்கள் வருந்துமாம். ஏன் ? தங்களை விட சூர்ப்பனகையின் பாதம் இவ்வளவு மென்மையாக இருக்கிறதே, நாம் அப்படி இல்லையே என்று வருந்துமாம். 

செஞ் செவிய = செக்க சிவந்த

கஞ்சம் நிகர் = தாமரை மலருக்கு நிகரான

சீறடியள் ஆகி = சிறிய அடி. சிறப்பான அடி. மெல்ல மெல்ல அடி எடுத்து வந்ததால் சிற்றடி

அம் சொல் இள மஞ்ஞை என = இனிமையாக அகவும் மயில் போல

அன்னம் என = மென்மையான அன்னம் போல

மின்னும் வஞ்சி என = மின்னும் வஞ்சிக் கொடி போல

நஞ்சம் என = விஷம் போல

வஞ்ச மகள் வந்தாள் = வஞ்சனையாக அந்தப் பெண் வந்தாள்

பஞ்சு போன்ற மென்மை. இளந்தளிரின் வெதுவெதுப்பான அந்த ஈரம். மயில் போல சாயல். தாமரை மலர் போல சிவப்பு. அன்னம் போன்ற தூய்மை. இத்தனையும் இருக்கிறது. ஆனால், நிஜம் இல்லை. வஞ்ச மகள் வந்தாள். 

பாடலை கொஞ்சம் வாய் விட்டு வாசித்துப் பாருங்கள். 

ஒவ்வொரு வரி முடிவிலும் ஒரு சின்ன jerk இருக்கும். 

...பல்லவம் அனுங்க 
...சீரடியள் ஆகி 
...அன்னம் என மின்னும் 
...வஞ்ச மகள் வந்தாள் 

சூர்ப்பனகை தளுக்கி மிளுக்கி நடந்து வருகிறாள். பாட்டின் சந்தம் அப்படி அசைகிறது. 

கம்பனின் பாட்டும், சந்த நயமும் ஒரு புறம் இருக்கட்டும். 

சூர்ப்பனகை உரு மாறி வருகிறாள். 

இராவணன் கபட சாமியார் போல் உரு மாறி சீதையை தூக்கிச் செல்கிறான் 

மாரீசன் பொன் மான் போல் உருமாறி இராம இலக்குவர்களை ஏமாற்றி சீதையை அபகரிக்க உதவுகிறான். 

இராவணன், மாயா ஜனகன் உருவம் எடுத்து வருகிறான் 

கந்த புராணத்தில்,சூர பத்மன் இரும்பாலான மாமர உருவில் வருகிறான். 

அரக்கர்கள் தான் உரு மாறுகிறார்கள். 

இராமன் உரு மாறியதாகவோ,  இலக்குவன் உரு மாறியதாகவோ எங்கும் வரவில்லை. 

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று காட்டுபவர்கள் அரக்கர்கள். 

உள்ளும் புறமும் ஒன்றாக இருப்பவர்கள் அரக்கர்கள் அல்லாதவர்கள். 

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார்   வள்ளலார் 


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான
பேய் பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே

என்பது திருவருட்பா.

நாம் எவ்வளவு பெரிய அரக்கர்களாக இருக்கிறோம் என்று யோசித்துப் பார்ப்போம்.

நம்மைச் சுற்றி எத்தனை அரக்கர்கள் என்று சிந்தித்துப் பார்ப்போம். 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் 
ஐந்தும் அகத்தே நகும்

வஞ்ச மனம் கொண்டது பிறருக்குத் தெரியாவிட்டாலும், தன் மனம் அறியும் அல்லவா. அது, அப்படி வஞ்ச மனம் கொண்டவனைப் பார்த்து உள்ளுக்குள் சிறிக்குமாம். 

வள்ளுவர் சொல்கிறார். 

உள்ளும் புறமும் ஒன்றாக வைக்க முயற்சி செய்வோம். 

மனம் வாக்கு செயல் மூன்றும் ஒன்ற வேண்டும். 

அப்படி பிரிந்து இருந்தவர்கள் அரக்கர்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_9.html

Monday, April 8, 2019

கம்ப இராமாயணம் - தேயும் கற்பினாள்

கம்ப இராமாயணம் - தேயும் கற்பினாள் 


சூர்ப்பனகை இராமனை காண்கிறாள். கண்டவுடன் காமம் கொழுந்து விட்டு எரிகிறது.

இராவணன் குடும்பத்தைப் பார்ப்போம்.

சூர்பனகைக்கு காமம் தலைக்கு ஏறி நிற்கிறது.

எவ்வளவோ சிறப்புகள் இருந்தாலும், இராவணனுக்கும் காமம் ஒரு சிக்கல் தான்.

கும்பகர்ணன், தூக்கம் மற்றும் சாப்பாட்டு பிரியன்.

வீடணன், தப்பிப் பிறந்தவன் அந்தக் குடும்பத்தில்.

சூர்ப்பனகையின் காமமும், இராவணனின் காமமும் அந்த அரக்க குலத்தையே வேரறுத்தது.  எத்தனை தவம், எத்தனை செல்வம், எத்தனை வீரம், எத்தனை புகழ், எவ்வளவு அதிகாரம் ...அத்தனையையும் காமம் என்ற ஒரு குணம் எரித்துத் தீர்த்தது.

அதீத காமம் எவ்வளவு மோசமானது என்று அறிந்து கொள்ளலாம்.

சூர்ப்பனகை மனதில் தோன்றிய இந்த பொருந்தா காமத்தால் அவளின் கற்புக்கு களங்கம் வந்தது. அவள் கற்பு தேய்ந்தது. அதற்கு ஒரு உவமை தேடுகிறான் கம்பன்.

என்ன சொல்லலாம் என்று யோசிக்கிறான் ....நிலவு போல தேய்ந்தது என்று சொல்லலாமா என்று யோசிக்கிறான். இல்லை, நிலவு பின்னால் வளருமே. ஏதேதோ யோசித்து விட்டு கடைசியாக ஒரு உவமை கண்டு பிடிக்கிறான் கம்பன்.

"இல்லை என்று வருபவர்களுக்கு உதவாமல் சேர்த்து வைப்பவன் புகழ் போல தேய்ந்தது அவள் கற்பு" என்று ஒரு உவமை சொல்கிறான்.

கவிச் சக்கரவர்த்தி !


"வானத்தை விடவும், கடலை விடவும் பெரிய அன்பை மனதில் தேக்கி, அந்த அளவு கடந்த பொருந்தா காமத்தால், அறிவு அதில் மூழ்கிப் போக, கேட்பவர்களுக்கு ஒன்று தராமல் பொருளை சேர்த்து வைப்பவன் புகழ் போல தேயும் கற்பை உடைய சூர்ப்பனகை அங்கே வந்தாள்" என்கிறான் கம்பன்.


பாடல்

நீத்தமும் வானமும் 
     குறுக, நெஞ்சிடைக் 
கோத்த அன்பு உணர்விடைக் 
     குளிப்ப மீக்கொள, 
ஏத்தவும், பரிவின் ஒன்று 
     ஈகலான், பொருள்
காத்தவன், புகழ் எனத் 
     தேயும் கற்பினாள்.

பொருள்


நீத்தமும் = கடலும்

வானமும்  = வானமும்

குறுக = சிறிதாகத் தோன்றும்படி

நெஞ்சிடைக்  = மனதில்

கோத்த = சேர்த்த

அன்பு = அன்பானது

உணர்விடைக் குளிப்ப = உணர்ச்சியில் குளிக்க

மீக்கொள = மேலோங்கி நிற்க

ஏத்தவும் =  பிறர் புகழவும்

பரிவின்  = பரிதாபப் பட்டு

ஒன்று ஈகலான் = ஒன்றும் தராத

பொருள் காத்தவன் = பொருளை கட்டி காத்தவன்

புகழ் எனத்  = புகழ் போல

தேயும் கற்பினாள். = தேயும் கற்பினாள்


மனதில் அன்பு, கருணை, பரிதாப உணர்ச்சி எதுவும் இல்லாமல், பொருளை கட்டி காத்தவன்  புகழ் போல தேயும் கற்பினாள்.

ஈகை என்பது சிறந்த அறம். 

மற்றவர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லையே என்று  நீங்கள் நினைக்கலாம். 

என்ன கொடுத்து , என்ன நிறையப் போகிறது. நான் கொஞ்சம் பணம் கொடுத்தால்  பெற்றுக் கொள்பவனின் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது ? 

என்றெல்லாம் நாம் நினைக்கலாம்.

நம் தமிழ் இலக்கியம் ஈகை பற்றி மிக மிக விரிவாக சொல்கிறது. 

"அறம் செய்ய விரும்பு"  என்கிறாள் ஒளவை.   முதலில் விரும்பு. ஏதாவது சாக்கு போக்கு சொல்லிக்  கொண்டு இருக்காதே. அறம் செய்கிறாயோ இல்லையோ, முதலில் செய்ய விரும்பு. விருப்பத்தில் இருந்து செயல் தானே பிறக்கும்  என்கிறாள். 

ஐயோ, என்னிடம் நிறைய பணம் இல்லையே என்று நினைக்கிறீர்களா?

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை;
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை;
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

என்கிறார் திருமூலர். 

ரொம்ப வேண்டாம், 

இறைவனுக்கு ஒரு பச்சை இலை போதும்...ஒரு வில்வம், ஒரு துளசி....

போகிற வழியில் பசித்து இருக்கும் ஒரு பசு மாட்டுக்கு ஒரு பிடி புல் ...

பெரிய அன்ன தானம் எல்லாம் வேண்டாம்....சாப்பிடும் உணவில் ஒரு கைப்பிடி  உணவு ஒரு ஏழைக்கு தர முடியும்தானே 

இதெல்லாம் கூட முடியாதா, பரவாயில்லை, மற்றவர்களுக்கு ஒரு இனிய சொல் சொல்லுங்கள். அதுவும் கூட தானம்தான், அறம் தான். 

வேலைக்காரியிடம் ஒரு இனிய சொல்.  நமக்கு லிப்ட் ல் பட்டன் அழுத்தும் ஆளுக்கு ஒரு இனிய சொல்.  வீட்டு செக்யூரிட்டி க்கு ஒரு இனிய சொல். கணவனுக்கு,மனைவிக்கு, பிள்ளைகளுக்கு, பக்கத்து வீட்டு காரருக்கு என்று யாருக்காவது ஒரு  இனிய சொல்லை தானம் செய்யலாம்தானே. 

செய்து பாருங்கள், உங்கள் புகழ் எப்படி மேலே போகிறது என்று தெரியும். 

அருணகிரிநாதர் சொல்கிறார், 

சாதாரண அரிசி இருக்கிறது அல்லவா, அது கூட வேண்டாம், நொய் அரிசி என்று இருக்கும். அதாவது உடைந்த அரிசி. அந்த அரிசியை உடைத்து, அதில் ஒரு  துணுக்காவது தானம் செய்யுங்கள் 


" வறிஞர்க்கு என்றும் நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்" என்பார். 

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா உடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

நொய் அரிசியில் ஒரு சிறு பிளவேனும் வறியவர்களுக்கு தாருங்கள் என்கிறார். அது கூட முடியாதா ?

பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றில் எல்லாம் தலை 

என்பார் வள்ளுவர். 

பல்லுயிர் என்றால் மனிதர்கள் மட்டும் அல்ல,  மற்ற உயிர்களும் அடங்கும். 

காக்கைக்கு சோறு, நாய்க்கு உணவு, புறாவுக்கு கொஞ்சம் தண்ணீர், வாடும் புல்லுக்கு கொஞ்சம் தண்ணீர் என்று எல்லா உயிர்க்கும் என்கிறார். 

இல்லாதை கொடுக்கச் சொல்லவில்லை. நீ உண்ணும் உணவில், கொஞ்சம் கொடு என்கிறார். 

பகுத்து உண்டு ....

தானம் செய்வதால் என்ன பலன் என்று கேட்டால் அருணகிரிநாதர் சொல்கிறார் 

"எங்காயினும் வரும் ஏற்பவருக்கு இட்டது

ஏழைகளுக்கு கொடுக்கும் தானம் வேறு வடிவில், வேறு எங்காவது கட்டாயம் வந்து சேரும் என்கிறார். 


பொங்கார வேலையில் வேலைவிட் டோனருள் போலுதவ
"எங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட" திடாமல்வைத்த
வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்
சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே.


இது சத்தியமான வார்த்தை. என் அனுபவத்தில் நான் பல முறை கண்ட, அனுபவித்த வார்த்தை. 

எங்காவது வரும், ஏற்பவருக்கு இட்டது. 

இருக்கிற பணத்தை மற்றவர்களுக்கு கொடுப்பது கஷ்டமாக இருக்காதா? 

கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தை சும்மா எப்படி தூக்கிக் கொடுக்க முடியும்?

வள்ளுவர் சொல்கிறார் 

கொடுப்பது இன்பமாக இருக்குமாம். 

"ஈந்துவக்கும் இன்பம்" என்பார் வள்ளுவர். 


ஈந்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை 
வைத்திழக்கும் வன்க ணவர்.

கொடுத்துப் பாருங்கள். 

எங்காவது வரும், ஏற்பவருக்கு இட்டது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_8.html