Saturday, May 11, 2019

கம்ப இராமாயணம் - என் உயிர் காண்பென்

கம்ப இராமாயணம் - என் உயிர் காண்பென் 


தன்னை மணந்து கொள்ளும்படி இராமனிடம் சூர்ப்பனகை கூறுகிறாள். "என்னால் உன்னை மணந்து கொள்ள முடியாது" என்று கூறாமல், "நான் எப்படி உன்னை மணந்து கொள்ள முடியும். நானோ அரச வம்சத்தில் வந்தவன், நீயோ வேதியர் குலத்தில் வந்தவள். நமக்குள் எப்படி தொடர்பு ஏற்பட முடியும் " என்று கேட்கிறான்.

அதற்கு என்ன அர்த்தம் ?

ஒரு வேளை அவளும் அரச குலமாக இருந்தால், பிரச்சனை இல்லை என்பதுதானே முடிவாக இருக்க முடியும்?

அதை அறிந்து கொண்டு, சூர்ப்பனகை சொல்லுகிறாள்

"ஓ..இப்ப அதுதான் பிரச்சனையா? என் தந்தை வேதியர் குலத்தில் பிறந்தவர். என் தாய் சாலகங்கடர் என்ற அரச வம்சத்தை சேர்ந்தவள். எனவே, நான் அரச குலத்தில் வந்தவள் தான். என்னை ஏற்றுக் கொள். இல்லை என்றால் உயிரை விட்டு விடுவேன்"

என்கிறாள்.


பாடல்

'ஆரண மறையோன் எந்தை; அருந்ததிக்
     கற்பின் எம் மோய், 
தாரணி புரந்த சாலகடங்கட 
     மன்னன் தையல்; 
போர் அணி பொலம் கொள் வேலாய்! 
     பொருந்தலை இகழ்தற்கு ஒத்த 
காரணம் இதுவே ஆயின், என் உயிர் 
     காண்பென்' என்றாள்.

பொருள்


'ஆரண மறையோன் எந்தை; = என் தந்தை மறை ஓதும் குலத்தில் தோன்றிய அந்தணர்

அருந்ததிக் கற்பின் எம் மோய்,  = என் தாய் அருந்ததி போல் கற்பில் உயர்ந்தவள்

தாரணி புரந்த = உலகத்தை ஆண்ட

சாலகடங்கட = சாலகடங்கட என்ற வம்சத்தில் வந்த

மன்னன் தையல்;  = மன்னனின் மகள் அவள்

போர் = போர் செய்வதையே

அணி பொலம்  = ஒரு அணிகலன் போல

கொள் வேலாய்!  = கொண்ட வேலை உடையவனே

பொருந்தலை = நமக்குள் பொருத்தம் இல்லை என்று

இகழ்தற்கு = இழந்ததற்கு

ஒத்த காரணம் இதுவே ஆயின், = சரியான காரணம் இது தான் என்றால்

என் உயிர்  காண்பென்' என்றாள். = என் உயிரை விட்டு விடுவேன் என்றாள்

இராமனுக்கு குல வேறுபாடு உண்டா ?

குகனோடு ஐவரானோம் என்று குகனை தம்பியாக ஏற்றுக் கொண்டான்.

குன்று சூழ்வான் மகனோடு அறுவாரானோம் என்று சுக்ரீவனை தம்பியாக ஏற்றுக் கொண்டான்.

காதல் ஐய உன்னோடும் எழுவரானோம் என்று அரக்கர் குலத்தில் பிறந்த  வீடணனை தம்பியாக ஏற்றுக் கொன்றான்

குகனோடும் ஐவரானோம் முன்புபின் குன்று சூழ்வான் 
மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின்வந்த 
அகமனர் காதல் ஐய! நின்னொடும் எழுவரானோம் 
புகலருங் கானம் தந்து புதல்வரால் பொலிங்தான் உங்தை



குகனை தம்பி என்று சொன்னால், ஏதோ ஒப்புக்கு சொன்னான், ஒரு உபசார வார்த்தை   என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

இராமன் ஒரு படி மேலே போகிறான். 

"இந் நன்நுதல் அவள் நின் கேள்" என்று சொல்கிறான். 

இந்த சீதை இருக்கிறாளே உனக்கு கொழுந்தியாள் என்று அதை மேலும்  உறுதிப் படுத்துகிறான். 

தயரதனுக்கு இராமன் நேரடியாக இறுதிக் கடன் செய்யவில்லை. 

ஜடாயு என்ற பறவைக்கு, மகன் இடத்தில் இருந்து இறுதிக் கடன் செய்தான். 

அப்படிப்பட்ட இராமனுக்கு குல வேறுபாடு இருக்குமா ?

சரி, அப்படியே இருந்தாலும், சூர்ப்பனகை அதற்கும் பதில் சொல்லி விட்டாள் . என் தாய் அரச குலத்தில் பிறந்தவள். எனவே நானும் அரச குலம் தான் என்று.

இராமன் கூறிய ஒரே எதிர்ப்பும் இப்போது சரி செய்யப்பட்டு விட்டது. 

திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே ?

செய்தானா ?

Wednesday, May 8, 2019

குறுந்தொகை - நாணம் இல்லாத கண்ணே

குறுந்தொகை - நாணம் இல்லாத கண்ணே



புதிதாக திருமணம் ஆனவர்கள் அவர்கள். ஏதோ வேலை நிமித்தம் அல்லது வேறு ஏதோ தவிர்க்க முடியாத காரணம், அவளை விட்டு அவன் பிரிந்து கொஞ்ச காலம் போக வேண்டி இருக்கிறது. அவளுக்கு அவனை விட்டு பிரியவே மனம் இல்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது. அதே சமயம், போகும் நேரத்தில் அபசகுனமாக அழுது கொண்டிருந்தால் அது நல்லா இருக்காது என்று எண்ணி, மனதை திடப்படுத்திக் கொண்டு அவனை வழி அனுப்புகிறாள்.

அவனும் ஊர் போய், செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு ஊர் திரும்புகிறான்.

அவனை கண்டதும் ஓடோடி வந்து அவனை கட்டித் தழுவிக் கொள்கிறாள். உணர்ச்சிகளை கட்டுப் படுத்த முடியவில்லை. கண்ணீர் பொங்கி பொங்கி வருகிறது. அடக்க முடியாமல் அழுகிறாள்.

கண்ணைத் துடைத்துக் கொண்டு, மெல்லச் சிரிக்கிறாள். வெட்கம் வருகிறது. ஐயோ, நான் ஏன் இப்படி அழுகிறேன்...அவர் தான் வந்து விட்டாரே , எதுக்கு அழுகிறேன். அழுவதாய் இருந்தால் அவர் போகும் போது அழுதிருக்க வேண்டும். அழுது, அவர் போவதை நிறுத்தி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இப்போது ஏன் அழுகிறேன் என்று நினைத்து தனக்குத் தானே வெட்கப் படுகிறாள். "இந்த கண்ணுக்கு ஒரு நாணம் இல்லை. அழ வேண்டிய நேரத்தில் அழாமல் இப்போது அழுகிறேதே " என்று தன்னைத் தானே வியக்கிறாள்.


பாடல்

நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண்ணுறை யழி துளி தலைஇய
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.

பொருள்

நாணில = நாண் + இல்லை = நாணம் இல்லை

மன்ற = மற்ற

வெங் கண்ணே = என் கண்ணே

நாணேர்பு = நாள் + ஏற்பு = அவர் சென்ற நாளை ஏற்றுக் கொண்டு. அவர் பிரிந்து போவதை ஏற்றுக் கொண்டு

சினைப் = கரு கொண்ட

பசும்  = பச்சை

பாம்பின் = பாம்பின்

சூன் = சூல் , கரு

முதிர்ப் பன்ன = முதிர்ந்த போது. பச்சை பாம்பின் வயிற்றில் இருக்கும் கரு போல

கனைத்த = வளர்ந்த

கரும்பின் = கரும்பின்

கூம்பு = தோகை

பொதி யவிழ = விரித்து நிற்க

நுண்ணுறை = நுண்ணிய

யழி துளி = மழை துளி

தலைஇய = பெய்ய



தண்வரல் வாடையும்  = குளிர்ந்த வாடை காற்று 

பிரிந்திசினோர்க் = பிரிந்து வாழும் தலைவருக்கு 

கழலே. = அழுவதால் 

பிரிந்த போது அழாமல், சேரும் போது அழுவதால், இந்த கண்களுக்கு ஒரு நாணம் இல்லை. 

மழைச் சாரல், குளிர்ந்த சூழ் நிலை.  ஊரெல்லாம் ஒரே பச்சை பசேலென இருக்கிறது. கரும்பு முற்றி வளர்ந்து அதன் தோகை அசைந்து ஆடுகிறது. 

பிரிந்தவர் வந்திருக்கிறார். 

அப்புறம் என்ன?....

சங்க காலப் பாடல். 

மனித மனம், மனிதனின் உணர்ச்சிகள் எப்படி நிலத்தோடும், கால சூழ் நிலையாலும் பாதிக்கப் படுகிறது என்பதைக் காட்டுகிறது. 

நாம் அவ்வளவாக நேரடியாக அறிவது இல்லை. நாம் வாழும் சூழ்நிலை நம் எண்ணங்களை, நம் சிந்தனைகளை பாதிக்கிறது என்பதை. 

வீட்டைப் பெருக்கி , பொருள்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, அழகாக வைத்திருங்கள்....மனம் சந்தோஷமாக இருக்கும். 

வீட்டை குப்பை கூளமாக வைத்து இருங்கள். மனமும் குழப்பத்தில் இருக்கும். 

தமிழர்கள் வாழ்க்கையை அகம் புறம் என்று பிரித்தார்கள். 

அகம் , புறத்தை பாதிக்கிறது. 

புறம், அகத்தை பாதிக்கிறது. 

அகமும் புறமும் ஒன்றான ஒரு கூட்டு கலவைதான் நம் வாழ்க்கை. 

சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_8.html

Tuesday, May 7, 2019

திருக்குறள் - கொள்ளாத கொள்ளாது உலகு

திருக்குறள் - கொள்ளாத கொள்ளாது உலகு 


வீட்டில், அலுவலகத்தில், வெளி உலகில் என்று பல இடங்களில் நாம் பல செயல்களை செய்கிறோம். அப்படி தொழில் ஆற்றும் போது எப்படி வேலை செய்ய வேண்டும் என்று நமக்குச் சொல்லித் தருகிறார் வள்ளுவர்.

என்னங்க இது, நாம இருக்கிறது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு. வள்ளுவர் இருந்தது இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு என்று சொல்கிறார்கள். இப்ப இருக்கிற அலுவலகம், தொழில் நுட்பம், வேலைச் சிக்கல்கள் எல்லாம் வள்ளுவருக்கு எப்படித் தெரியும். அவர் எப்படி எனக்கு அறிவுரை கூற முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்.  மேலும், எப்படி வேலை செய்ய வேண்டும் கட்டு காட்டாக வழிகாட்டி நூல்கள் இருக்கின்றன (operating manual ). அதன் படி நடந்தாலே சிக்கல் வருகிறது. வள்ளுவர் ஒண்ணே முக்கால் அடியில் என்ன பெரிதாக சொல்லி விட முடியும் என்றும் நினைக்கலாம். அப்படி நினைத்தால் தவறு ஒன்றும் இல்லை.

வள்ளுவர் என்ன தான் சொல்கிறார் என்று கேட்போம். அப்புறம் முடிவு செய்வோம்.

பாடல்

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு

பொருள்

எள்ளாத = பிறர் பார்த்து நகைக்கும் படியாக இல்லாமல்

எண்ணிச் = திட்டமிட்டு

செயல்வேண்டும் = செயல் பட வேண்டும்.

தம்மொடு = தம்மோடு

கொள்ளாத = ஒத்து வராதாவற்றை

கொள்ளாது உலகு = ஒத்துக் கொள்ளாது உலகு

உலகு ஒத்துக் கொள்ளும் காரியங்களை செய்ய வேண்டும். பிறர் பார்த்து நகைக்கும்படியான காரியங்களை செய்யக் கூடாது.

அவ்வளவுதான் குறள்.

இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது? இதெல்லாம் நமக்குத் தெரியாதா? இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா ?

சிந்திப்போம்.

"பிறர் பார்த்து நகைக்கும் படியாக செயல் செய்யக் கூடாது" அப்படி என்றால் என்ன அர்த்தம்?

முதலாவது, நம் தகுதிக்கு குறைவான செயல்களை செய்யக் கூடாது. நம் தகுதிக்கும் நிலைமைக்கும் ஏற்ற  செயல்களை செய்ய வேண்டும்.  அதை இன்னும்  விரிவாக பார்க்கலாம்.

இரண்டாவது, தெரியாதவற்றை செய்தால் உலகம் நகைக்கும் படி ஆகி விடும். எனக்கு ஒரு நிறுவனத்தில் வரவு செலவு கணக்கு பார்க்கத் தெரியும் என்று வைத்துக் கொள்வோம். ஒரு கணக்குப்பிள்ளை என்று வைத்துக் கொள்வோம். நான் கணக்கு வேலை செய்தால் யாரும் ஒன்றும் நினைக்க மாட்டார்கள். மாறாக, நான் போய் அந்த நிறுவனத்தின் மின்சாரம் வரும் transformer கழட்டி மாட்டுகிறேன் என்று இறங்கினால் எப்படி இருக்கும் ? உலகம் நகைக்குமா? நகைக்காதா ? கோமாளி இருக்கும். தெரியாத ஒன்றில் இறங்கி  பிறர் நகைக்கும் படி செயல் செய்யக் கூடாது.

மூன்றாவது, தெரிந்த வேலையை செய்யாமல் சோம்பிக் கிடந்தாலும் உலகம் எள்ளி நகையாடும்.  "வேலை செய்ய மாட்டோம்னா சொல்றோம். நல்ல வேலை கிடைக்கணும்ல " என்று சிலர் சொல்லுவார்கள்.

இலம் என்று அசைஇ இருப்பாரை காணின் 
நிலம் எனும் நல்லாள் நகும் 

என்பார் வள்ளுவர். வேலை இல்லை, கையில் காசு இல்லை, எனக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை, எனக்கு உதவி செய்பவர் யாரும் இல்லை என்று இப்படி  ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பவரைக் கண்டால் இந்த நில மகள் சிரிப்பாள் என்கிறார். நில மகள் என்றால் இந்த உலகில் உள்ளவர்கள் சிரிப்பார்கள் என்று அர்த்தம். நிலமா சிரிக்கும்.

நான்காவது, பிறர் நகைக்கும் படி வேலை செய்யக் கூடாது என்றால் என்ன அர்த்தம், பிறர் போற்றும் படி, பிறரை வியக்கும் படி வேலை செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

ஒரு வேலை செய்தால், "அடடா என்ன அற்புதம்...இப்படி யாராலயும் செய்ய முடியாது  "என்று வியக்க வேண்டும்.

...வீட்டை என்னமா அழகா வச்சிருக்கா அந்த பொண்ணு. கண்ணுல ஒத்திக்கலாம். அப்படி ஒரு சுத்தம். அப்படி ஒரு ஒழுங்கு வீட்டில் என்று பிறர் சொல்லும் படி இருக்க வேண்டும். வீடா அது, குப்பை கூளமா மாதிரி இருக்கு இருக்கு என்று  இகழ்ந்து நகைக்கும் படி இருக்கக் கூடாது.

...ஆஹா சாப்பாடு என்ன உருசியாக இருக்கிறது என்று வியக்க வேண்டும்.

....இந்த ரிப்போர்ட், இந்த presentation என்ன நேர்த்தியாக இருக்கிறது என்று வியந்து பாராட்ட வேண்டும்.

...என்னமா படித்து எவ்வளவு மார்க் வாங்கி இருக்கிறான் பாரு என்று மாணவனை பார்த்து வியக்க வேண்டும்.

அப்படி எந்த வேலை செய்தாலும், பிறர் பார்த்து வியக்கும் படி செய்ய வேண்டும்.

சொல்லிக் கொண்டே போகலாம். உங்களுக்கு புரிகிறது அல்லவா?


சரி, அது என்ன "தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு"


தம்மொடு என்பதை கடைசியில் உள்ள உலக என்று வார்த்தையோடு சேர்த்துக் கொள்ளுங்கள். 

"உலகோடு கொள்ளாத கொள்ளாது உலகு" என்று பொருள் வரும். 

அதாவது,  இந்த உலகிற்கு ஒத்து வராததை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஒவ்வொரு சமுதாயத்துக்கும்  ஒரு சில கோட்பாடுகள் உண்டு. வரை முறைகள் உண்டு.  அதற்கு ஒவ்வாத செயல்களை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளுவது இல்லை. 

உதாரணமாக, சில உறவு முறைகளில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று  ஒரு வரைமுறை வைத்து இருக்கிறது இந்த உலகம். அது இடத்துக்கு இடம் மாறுபடலாம். மதத்திற்கு மதம் மாறுபடலாம். ஆனால், ஒரு இடத்தில், ஒரு மதத்தில்  இதுதான் சட்டம் என்று ஆன பின், அதை மீறுவதை உலகம் ஏற்றுக் கொள்ளாது. 

மேலும், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கறி மீன் சாப்பிடக் கூடாது என்று வரை முறை இருக்கிறது.  அவர்கள் மாமிசம் சாப்பிடுவதை உலகம் ஒத்துக் கொள்ளாது. 

பொதுவாக சொல்லுவது என்றால், சட்ட விதி முறைகள், சமுதாய பழக்க வழக்கங்களை மீறுவதை  உலகம் ஏற்றுக் கொள்ளாது. 

சிறப்பாக செய்கிறேன் பேர்வழி என்று சட்ட விதிமுறைகளை மீறக் கூடாது. 

நிறைய மதிப்பெண் வாங்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார் என்பதற்காக தேர்வில் காப்பி அடிக்கக் கூடாது. 

இன்னொரு விதமாக இதை சிந்திக்கலாம். 


"தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு"


அதாவது, நம்முடைய மனசாட்சிக்கு விரோதமான செயல்களை செய்வதை உலகம் ஏற்றுக் கொள்ளாது. தவறு என்று மனசாட்சி சொன்னால், அதை செய்யக் கூடாது. 

படிக்காமல் வீடியோ கேம்ஸ் விளையாடுவது சரி என்று மனசாட்சி சொல்கிறதா? 

உருப்படியாக எதுவும் செய்யாமல் வாட்ஸாப்ப், பக்கத்து வீட்டு பெண்கள், டிவி சீரியல், என்று நேரத்தை வீணடிப்பதை சரி என்று மனசாட்சி சொல்கிறதா ?

மனம் தவறு என்று சொல்வதை செய்யக் கூடாது. 

என்ன? ஒண்ணே முக்கால் அடி போதுமா ? 

வினை செயல் வகை என்று ஒரு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர். 

எப்படி வேலை செய்ய வேண்டும் என்று  சொல்லி இருக்கிறார்.  பிரமிப்பூட்டும் குறள்கள். 

படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_7.html

Monday, May 6, 2019

கம்ப இராமாயணம் - நீதி நிலை இல்லாள்

கம்ப இராமாயணம் - நீதி நிலை இல்லாள் 


இராமன் மேல் தனக்குள்ள காதலை சூர்ப்பனகை வெளிப்படையாகவே சொல்லி விட்டாள். "பெண்மைக்கு ஒரு பங்கமும் இல்லாமல் வந்து இருக்கிறேன். என் இளமை எல்லாம் வீணே கழிந்து விட்டது" என்று கூறினாள்.

இராமனுக்கு தெரிந்து விட்டது. இவள் சாதாரண பெண் இல்லை. அரக்கி என்று அறிந்து கொண்டான். அவள் நோக்கமும் சரி இல்லை என்றும் புரிந்து கொண்டான்.

புரிந்தவன் என்ன செய்திருக்க வேண்டும்? "அம்மா தாயே, ஆளை விடு...வேறு இடம் பார் " என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு இராமன் சொல்கிறான் ..."உனக்கும் எனக்கும் எப்படி பொருந்தும். நீயோ அந்தணர் மரபில் வந்தவள். நானோ அரச குலத்தில் பிறந்தவன். நமக்குள் எப்படி ஒரு தொடர்பு இருக்க முடியும் " என்று சொல்கிறான்.

"எனக்கு திருமணம் ஆகி விட்டது. நான் வேறு ஒரு பெண்ணை தொடுவது இல்லை என்ற விரதம் பூண்டவன். எனவே உன் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாது " என்று  சொல்லி இருக்க வேண்டும்.

மாறாக, "நம் குலம் வேறு வேறாக இருக்கிறதே" என்று கூறுகிறான். ஒரு வேளை அவள் அரச குலத்தில் பிறந்தவளாக இருந்தால் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தது இருப்பானா ?

எதற்காக வீணாக அவள் மனதில் ஆசையை வளர்க்க வேண்டும் ?

பாடல்


நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்; 
     வினை மற்று எண்ணி 
வந்தனள் ஆகும்' என்றே வள்ளலும் 
     மனத்துள் கொண்டான்; 
'சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின் 
     துணிவிற்று அன்றால்,
அந்தணர் பாவை நீ; யான் அரசரில் 
     வந்தேன்' என்றான்.


பொருள்

நிந்தனை = பழிக்கத்தக்க

அரக்கி = அரக்கி

நீதி நிலை இலாள் = நீதி வழியில் நில்லாதவள்

வினை = செயல்

மற்று எண்ணி = வேறு எதையோ எண்ணிக் கொண்டு

வந்தனள் ஆகும்' என்றே = வந்திருக்கிறாள் என்று

வள்ளலும்  = இராமனும்

மனத்துள் கொண்டான்;  = மனதில் நினைத்துக் கொண்டான்

'சுந்தரி! = சுந்தரி (சூர்பனகையே)

மரபிற்கு = பழக்க வழக்கத்திற்கு

ஒத்த தொன்மையின்  = ஒத்துப் போகக் கூடிய தன்மையில்

துணிவிற்று அன்றால் = துணிந்து செய்ய முடியாது (உறுதியாக செய்ய முடியாது)

அந்தணர் பாவை நீ; = நீயோ அந்தணர் பாவை

யான் அரசரில்  வந்தேன்' என்றான். = நான் அரச குலத்தில் வந்தவன் என்றான்

இது ஒரு தேவை இல்லாத வாக்கு வாதம். "நம்ம இரண்டு பேருக்கு நடுவில் குலம் தான் வேறுபாடு .." என்று கூறினால் என்ன அர்த்தம்.

அதற்கும் சூர்பனகை பதில் வைத்து இருக்கிறாள் ....

அது என்ன என்று நாளை பார்ப்போமா


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_6.html



Sunday, May 5, 2019

கம்ப இராமாயணம் - எழுதரு மேனியாய்

கம்ப இராமாயணம் - எழுதரு மேனியாய் 


தன் காதலை சொன்ன பின்னும் அமைதியாக நிற்கும் இராமனை கண்டு சூர்பனகைக்கு குழப்பம் வருகிறது. அவன் என்னை விரும்புகிறானா இல்லை விரும்பவில்லையா என்று சந்தேகம் கொள்கிறாள்.

சரி, இன்னும் கொஞ்சம் பேச்சு கொடுப்போம் என்று பேசுகிறாள்.

"ஓவியத்தில் எழுத முடியாத அளவுக்கு அழகானவனே...நீ இங்கு எதற்கு வந்தாய் என்று நான் அறியவில்லை. இங்கே வாழும் முற்றும் துறந்த முனிவர்களிடம் அவர்கள் சொல்லும் செயலை செய்து நான் வாழ்கிறேன். என் பெண்மைக்கு ஒரு பங்கமும் வரவில்லை. என் இளமை அப்படியே இருக்கிறது, ஒரு பயனும் இன்றி. என் வாழ் நாட்கள் அப்படியே வீணாக கழிந்து கொண்டு இருக்கின்றன"

என்றாள்.

பாடல்


‘எழுதரு மேனியாய்! ஈண்டு
    எய்தியது அறிந்திலாதேன்,
முழுது உணர்முனிவர் ஏவல்
    செய் தொழில் முறையின் முற்றிப்
பழுது அறு பெண்மையோடும்
    இளமையும் பயனின்று ஏகப்
பொழுதொடு நாளும் வாளா
    கழிந்தன போலும் ‘என்றாள்.

பொருள்

‘எழுதரு =  ஓவியத்தில் எழுதுவதற்கு அருமையான. கடினமான

 மேனியாய்! = மேனியை உடையவனே

ஈண்டு = இங்கு

எய்தியது = (நீ) வந்தது

அறிந்திலாதேன், = (ஏன் என்று) அறிய மாட்டேன் . எனக்குத் தெரியாது.

முழுது உணர்முனிவர் = முழுவதும் உணர்ந்த முனிவர்கள்

ஏவல் செய் தொழில் = அவர்கள் ஏவிய வேலையை

முறையின் முற்றிப் = முறைப்படி முழுவதும் செய்வேன்

பழுது அறு பெண்மையோடும் = குற்றம் இல்லாத பெண்மையோடும்

இளமையும் = என் இளமையும்

பயனின்று ஏகப் = பயனின்று போக

பொழுதொடு = சிறு பொழுதோடு

நாளும் = ஒவ்வொரு நாளும்

வாளா = வீணாக

கழிந்தன போலும் ‘என்றாள். = கழிந்து விட்டது போல என்றாள்


அது என்ன பொழுதொடு நாளும் ?

கொஞ்சம் இலக்கணம் படிப்போமா ?

தமிழர்கள் காலத்தை இரண்டாகப் பிரித்தார்கள்.

பெரும் பொழுது என்றும் சிறு பொழுது என்றும்.

பெரும் பொழுது என்றால் ஆண்டின் பகுதிகள்.

கார்காலம் - ஆவணி, புரட்டாசி
குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
முன்பனிக் காலம் - மார்கழி, தை
பின் பனிக் காலம் - மாசி பங்குனி
இள வேனில் - சித்திரை, வைகாசி
முது வேனில் - ஆனி , ஆடி

இவற்றை பெரும் பொழுது என்று குறித்தார்கள்.

ஒரு நாளின் சிறு பகுதிகளை சிறு பொழுது என்று வரையறுத்தார்கள்


வைகறை = இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
காலை = 6 am முதல்  10 am  வரை
நண்பகல் = 10 am   முதல் 2 pm வரை
எற்பாடு = 2 pm  முதல் 6 pm வரை
மாலை = 6 pm முதல் 10 pm வரை
யாமம் = 10 pm முதல் அதி காலை 2 am வரை

இவற்றிற்கு சிறு பொழுதுகள் என்று பெயர்.

நம்முடைய மனமும் புத்தியும் சத்வம், ராஜஸம், தாமசம் என்று முக்குணங்களில் மாறி மாறி இயங்கும் தன்மை படைத்தவை. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு குணத்தில் இருக்கும்.

வைகறை என்று சொல்லப் படும் இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரையில் உள்ள நேரம் சத்வ குணம் ஓங்கி நிற்கும் காலம் என்று சொல்கிறார்கள்.

எனவே தான், பூஜை, படிப்பது என்ற நல்ல காரியங்களை அந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று விதித்தார்கள்.

திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி எல்லாம் இந்த நேரத்தில் தான்  பாடப்படும்.

நான்கு மணிக்கு எழுந்து படித்துப் பாருங்கள். மனதில் அப்படியே உட்காரும்.

காலத்துக்கும் மனித மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதை உன்னித்து கவனித்து, எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் வரையறுத்து தந்திருக்கிறார்கள்.  நேரம் இருப்பின், அது பற்றி பின் ஒரு நாள் விரிவாக சிந்திப்போம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

சூர்ப்பனகை சொல்கிறாள்

பொழுதும் நாளும் கழிந்தது என்று.

காலை போய் இரவாய் , கார் காலம் போய் வேனில் காலமாய் நாட்கள் உருண்டோடி விட்டன ..என் இளமை பாழாய் போகிறது என்று உருகுகிறாள்.

ஒரு பெண் காமத்தில் தவிக்கிறாள். வாய் விட்டுச் சொல்கிறாள்.

இராமன் என்ன செய்திருக்க வேண்டும்?

சிந்தித்துக் கொண்டிருங்கள்.....

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_5.html




Saturday, May 4, 2019

அபிராமி அந்தாதி - துணையும் தொழும் தெய்வமும்

அபிராமி அந்தாதி - துணையும் தொழும் தெய்வமும் 



அவள் மேல் அவனுக்கு தீராத காதல். அவள் பெரிய இடத்துப் பெண். இவனோ சாதாரண நடுத்தர வர்க்கம். அவள், அழகு என்றால் அப்படி ஒரு அழகு. இவன் ஒன்றும் அப்படி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. காதல் இதை எல்லாம் கேட்டுக் கொண்டா வருகிறது ? அது பாட்டுக்கு அழையா விருந்தாளியாக வந்து கதவை தட்டுவது மட்டும் அல்ல, வீட்டுக்குள் வந்து சம்மணம் போட்டு அமர்ந்து கொள்கிறது.

எப்படி சொல்வது, எப்படி  சொல்வது என்று தவிக்கிறான் அவன்.

அவளை தூரத்தில் பார்க்கும் போதெல்லாம் அவன் மனதுக்குள் மழை. இவள் மட்டும் என் வாழ்க்கை துணையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கனவு காண்கிறான். அவளை காதலியாக மட்டும் அல்ல, சில சமயம் பார்க்கும் போது, அவளின் அழகு, அந்த வெகுளித்தனம், களங்கம் இல்லாத அந்த முகம்...கை எடுத்து கும்பிடலாம் என்று தோன்றும் அவனுக்கு.

அவள் மடியில் குழந்தையாக தலை வைத்து படுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பான்.

காலம் அப்படியே கனவில் கரைந்து கொண்டிருந்தது....


பாடல்

துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.


துணையும் -  மனைவியை வாழ்க்கை துணை என்றார் வள்ளுவர்.  வாழ்க்கை துணை நலம் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார். அது என்ன துணை? அவர்தான் மெயின், நாங்க என்ன துணையா என்று பெண் விடுதலையாளர்கள் போர் கொடி தூக்கக் கூடும். ஏன், கணவன் என்பவன் எங்களுக்கு துணையாக இருக்கக் கூடாதா என்றும் கேட்கக் கூடும். 

துணை எப்போது தேவைப் படும்?

பயம் வரும்போது, துன்பம் வரும்போது, ஒரு சிக்கல் வரும்போது துணை தேவைப்படும். 

விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த
பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!

என்பார் அருணகிரி.

"துணையோடல்லது நெடு வழி போகேல்" என்பார் ஒளவையார். 

"துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ " என்பார் திருநாவுக்கரசர். 


அப்பன் நீ அம்மைநீ ஐயனும் நீ 
               அன்புடைய மாமனும் மாமியும் நீ 
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ 
               ஒருகுலமும் சுற்றமும் ஒருரும் நீ 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ 
               துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ 
இப்பொன்நீ இம்மணி நீ இம்முத்தும் நீ 
               இறைவன் நீ ஏறுரர்ந்த செல்வன் நீயே”

துணை என்பது பெரிய விஷயம். 


தொழும் தெய்வமும் = துணை மட்டும் அல்ல, நான் தொழும் தெய்வமும் நீ தான். 

பெற்ற தாயும் = எனை ஈன்ற தாயும் நீ தான். 

சுருதிகளின் = வேதங்களின் 
பணையும் = பணை  என்ற சொல்லுக்கு சிறப்பு, உயர்வு, எழுச்சி, பெருமை என்று பல பொருள் உண்டு. வேதங்களின் சாரமாக இருப்பவள், சிறப்பாக இருப்பவள், வேதங்கள் பெருமை படுத்தும் பொருளாக இருப்பவள் அபிராமி. 

கொழுந்தும் = வேதங்களில் இருந்து வெளிவரும் அர்த்தம், உண்மையாக இருப்பவள் அபிராமி. மரத்தில் இருந்து கொழுந்து வருவது போல. "அச்சுதா அமரர் ஏறே, ஆயர் தம் கொழுந்தே"  என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் கூறியது போல. 

பதிகொண்ட வேரும்  = கொழுந்து என்றால் வேர் வேறு ஏதோ என்று நினைக்கக் கூடாது. வேதம் என்ற மரத்தின்  வேரும் அவள் தான், அது தரும் சாரமும் அவள் தான், அதில் துளிர்க்கும் தளிரும் அவள்தான். 

பனி மலர்ப்பூங் = குளிர்ந்த மலர்களை 

கணையும் = கொண்ட கணை . கணை என்றால் அம்பு. 

கருப்புச் சிலையும் = கரும்பு வில் 

மென் பாசாங்குசமும் = மென்மையான பாசக் கயிறும், அங்குசமும் 

கையில் அணையும் = கையில் எப்போதும் கொண்டு இருக்கும் 
திரிபுர சுந்தரி = அனைத்து உலகங்களிலும் அழகானவள்  

ஆவது அறிந்தனமே = நீ தான் என்று அறிவோம். 

அது என்ன மலர் அம்பு, கரும்பு வில், பாசக் கயறு, அங்குசம் ? 

கரும்பு வில்லும் மலர் அம்பும் மன்மதனின் ஆயுதங்கள். அது மோகத்தை, காமத்தை, அன்பை தோற்றுவித்து  உயிர்களின் படைப்புக்கு வழி வகுப்பது. எல்லா உயிர்களின் தோற்றமாய், தோற்றத்திற்கு காரணமாய் அவள் இருக்கிறாள். அவள் காமத்தை ஆட்சி செய்பவள். காமாட்சி. மனதில் ஆசையை தருபவள். அப்படி ஒரு அழகு. 

மென் பாசக் கயறு: குழந்தைக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்கும் அதற்காக எந்த தாயும் அளவு இல்லாமல் இனிப்பை குழந்தைகளுக்குத் தருவது இல்லை போதும், அப்புறம் நாளைக்கு என்று எடுத்து உள்ளே வைத்து விடுவாள். கணவனுக்கு எண்ணெய்  பலகாரம் பிடிக்கும். ஆனால் ஏற்கனவே கொழுப்பு அதிகமாக இருக்கிறது. "போதுங்க...ரொம்ப சாப்பிடாதிங்க...இந்த ஒண்ணு தான் ... சரியா " என்று அவர்களின் ஆசைகளை கட்டு படுத்துபவள் அவள். ஆசைகளுக்கு கடிவாளம் போட கையில் மென்மையான பாசக் கயறு.  

ஆசையை தூண்டி விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பவள் அல்ல அவள். அதை ஒரு கட்டுக்குள் வைக்கவும் தெரிந்தவள் அவள். 

அங்குசம்: தவறு செய்தால் தண்டிக்க குழந்தைகள் தவறான வழியில் சென்றால், தண்டித்து, திருத்துபவளும்  அவளே . அதற்கு அங்குசம். 

அவள் தாயாக இருக்கிறாள். வாழ்க்கை துணையாக இருக்கிறாள். தொழும் தெய்வமாக இருக்கிறாள். 

வாழ்வை சந்தோஷமாக அனுபவிக்க ஆசையையும், காமத்தையும் மோகத்தையும் தருகிறாள் 

அது எல்லை மீறி போகாமல் அளவோடு இருக்க, அதை கட்டுப் படுத்தி நம் வாழ்வை நெறிப் படுத்துகிறாள். 

இன்பத்தை மட்டும் அல்ல, ஞானத்தையும் தருகிறாள். அவளே வேதமாகவும் வேதத்தின் சாரமாகவும், அதன் பலனாகவும் இருக்கிறாள். 


பெண் என்பவள் இன்பத்தின் இருப்பிடம் மட்டும் அல்ல.

அவள் துன்பம் வரும் போது துணையாக இருப்பவள். தளர்ந்த போது தோள் தந்து தாங்குபவள். 

குழப்பம் வரும் போது தெளிவு தரும் ஞானம் தருபவள். 

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

திமிர்ந்த ஞானச் செருக்கு உள்ளவள் பெண் என்பான் பாரதி.
தாயக, தோழியாக, காதலியாக, தாரமாக, சகோதரியாக, மகளாக எல்லாமாக இருப்பவள்  அவளே. 

திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_4.html

கம்ப இராமாயணம் - ஊசலின் உலாவுகின்றாள்

கம்ப இராமாயணம் - ஊசலின் உலாவுகின்றாள் 


சூர்பனகைக்கும் இராமனுக்கும் நடந்து கொண்டிருக்கின்ற உரையாடலை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

யார் என்று இராமன் கேட்டதற்கு, சூர்ப்பனகை பதில் சொல்லுகிறாள். அதற்கு இராமன் மேலும் சந்தேகம் கேட்கிறான். சூர்ப்பனகை விளக்குகிறாள். கடைசியில், தன் மனதில் உள்ள ஆசையை சொல்லி விடுகிறாள்.

இராமன் பேசாமல் நிற்கிறான்.

"எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. உன் எண்ணம் தவறானது. வேறு இடம் பார்" என்று சொல்லி இருக்கலாம்.

அல்லது, பலதார மணம் என்பது அந்தக் காலத்தில் உள்ள ஒன்று தான் (பாடல்களை அது நடந்த காலத்தோடு சேர்த்து வைத்துப் பார்த்தல்). எனவே, இராமன் இன்னொரு பெண்ணை நினைப்பதில் தவறில்லை என்று சூர்ப்பனகை நினைத்திருக்கலாம்.

இராமனின் உரையாடல் சூர்பனகைக்கு ஒரு தெளிவான முடிவைத் தரவில்லை. குழம்புகிறாள்.

"இப்படி பேசாமல் நிற்கிறானே. அவன் உள்ளத்தில் என்ன இருக்கிறது. என் மேல் ஆசை இருக்கிறதா ? அல்லது நான் வேண்டாம் என்று  நினைக்கிறானா. ஒரு குழப்பமாக இருக்கிறதே "

என்று தவிக்கிறாள் சூர்ப்பனகை.

பாடல்


பேசலன், இருந்த வள்ளல் உள்ளத்தின் 
     பெற்றி ஓராள்; 
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்ம் மகள், 
     'புகன்ற என்கண் 
ஆசை கண்டருளிற்று உண்டோ? அன்று 
     எனல் உண்டோ?' என்னும் 
ஊசலின் உலாவுகின்றாள்; மீட்டும் 
     ஓர் உரையைச் சொல்வாள்;

பொருள்


பேசலன் = பேசாமல் இருக்கிறான்

 இருந்த வள்ளல்  = இருக்கின்ற வள்ளலான இராமனின்

உள்ளத்தின் = மனதின்

பெற்றி ஓராள்;  = தன்மை, நிலைமை தெரியாதவள்

பூசல் வண்டு அரற்றும்  = பூவில் வண்டு முரலும்

கூந்தல் = கூந்தலைக் கொண்டவள்

பொய்ம் மகள்,  = பொய்யானவள்

'புகன்ற = இவற்றை எல்லாம் சொல்லிய

என்கண்  = என்னிடத்தில்

ஆசை கண்டருளிற்று உண்டோ?  = ஆசை கண்டு அருள் செய்வானா

அன்று எனல் உண்டோ?' = இல்லை வேண்டாம் என்று நினைக்கிறானா

 என்னும் = என்று

ஊசலின் உலாவுகின்றாள் = ஊஞ்சல் ஆடுவதைப் போல அவள் மனம் அங்கும் இங்கும் ஆடுகிறது

மீட்டும்  = மீண்டும்

ஓர் உரையைச் சொல்வாள்; = ஒரு செய்தி சொல்வாள்


ஒரு சிக்கலான, தர்ம சங்கடமான இடம்.

இராமன் உண்டு அல்லது இல்லை என்றது சொல்லி இருக்க வேண்டும்.

தேவை இல்லாமல் பல கேள்விகளை கேட்டுவிட்டு, பின் அவள் மனதில் உள்ள ஆசையை  சொன்ன பின், அமைதியாக நின்றால் என்ன அர்த்தம்?

நமக்குத் தெரியும் இராமன் ஏக பத்தினி விரதன் என்று.

சூர்பனகைக்குத் தெரியாதே.

வாசகர்களை ஒரு குழப்பத்தில், ஒரு நிலையற்ற தன்மையில், ஒரு எதிர்பார்ப்பில் கொண்டு வந்து  நிறுத்துகிறான் கம்பன்.

கதை சொல்லும் உத்தி அது.

வாசிப்பவனுக்கு  ஒரு tension , anxiety , suspense இருக்க வேண்டும். அப்போதுதான் கதை படிக்க சுவையாக இருக்கும்.

"ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம். அது ஒரு நாள் என்ன பண்ணுச்சு தெரியுமா ?..."

என்று கேள்வி கேட்டு நிறுத்தும் போது, கேட்பவர்களுக்கு ஒரு ஆவல் உண்டாடுகிறது.

"சொல்லு சொல்லு...என்ன பண்ணுச்சு " என்று கேட்பார்கள்.

சரி, இதுக்கு மேலேயும் சூர்ப்பனகை என்னதான் சொல்லி இருப்பாள் ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post.html