Thursday, May 30, 2019

அபிராமி அந்தாதி - வெருவிப் பிரிந்தேன்

அபிராமி அந்தாதி - வெருவிப் பிரிந்தேன் 


உறவினர்களை பெரும்பாலும் நாம் தேர்ந்து எடுப்பதில்லை. அது அமைந்து விடுகிறது. திருமணம், அது சம்பந்தப்பட்ட உறவுகள் வேண்டுமானால் நாம் தேர்ந்து எடுக்கிறோம் என்று சொல்லலாம். அது தவிர ஏனைய உறவுகள், தானே அமைவதுதான்.

நண்பர்களும் அப்படித்தான். நாம் தேடிப் போய் தேர்ந்து எடுப்பது இல்லை. நம் வாழ்வில் எதிர்படுபவர்களில் , நமக்கு பிடித்தவர்களை நாம் நண்பர்களாகக் கொள்கிறோம். அலுவலகம், வேலை செய்யும் இடம், குடி இருக்கும் இடம் என்று பொதுவாக அனைத்து இடங்களிலும் நமக்கு ஏற்படும் தொடர்புகள் நம்மால் முடிவு செய்யப் படுபவை அல்ல. அவை அப்படி நிகழ்ந்து விடுகின்றன.

அப்படி நிகழ்ந்தவைகள், அந்த உறவுகள் நமக்கு நன்மை பயக்கும் என்று எப்படிச்  சொல்வது?

நம் நண்பர்களில், நம் உறவினர்களில் நம்மை விட மிக மிக அதிகம் படித்தவர்கள், அறிந்தவர்கள் எத்தனை பேர்? அப்படி ரொம்ப அறிந்தவர்கள் இருந்தாலும், நாம் அவர்களை விட்டு கொஞ்சம் தள்ளியே இருப்போம்.

நமக்குத் தேவை, அரட்டை அடிக்க ஆள், whatsapp போன்றவற்றில் வெட்டிப் பேச்சு பேச, துணுக்குகள் அனுப்ப, கதை பேச, அரசியல் நையாண்டிகள் வாசிக்க , பகிர ஆட்கள்.

சரி, எப்படியோ உறவும், நட்பும் அமைந்து விடுகிறது . அதில் சில நமக்கு நன்மை பயக்காவிட்டாலும் தீமை  பயப்பவை என்று அறிந்தும் அவற்றை விட முடிகிறதா?

இருந்து விட்டுப் போகட்டும். அந்த whatsapp குரூப் இல் இருந்து விலகினால் தப்பா நினைப்பாங்க,  அந்த association மீட்டிங்குக்கு போகாட்டி நல்லா இருக்காது,  என்று தேவை இல்லாத, தீமை பயக்கும் உறவுகளை தூக்கிச் சுமந்து திரிகிறோம்.

அந்த உறவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். கணவன், மனைவி, உற்றார், உறவினர், ஆசிரியர், ஆச்சாரியார், என்று எந்த உறவும், தீமை பயப்பதாக இருந்தால்,  அது தேவையா என்று சிந்திக்க வேண்டும்.

விடுவது கடினம்.

"கல்யாணம் ஆயிருச்சு, இனிமே என்ன பண்றது...ஒண்ணா வாழ்ந்து தொலைக்க வேண்டியதுதான் " என்று உழலும் எத்தனை உறவுகள் நமக்குத் தெரியும்.

அபிராமி பட்டர் துணிந்து முடிவு எடுக்கிறார்.

"தீய வழியில் செல்லும், நரகத்துக்கு செல்லும் மனித உறவுகளை வெறுத்து, அவற்றில் இருந்து பிரிந்து  வந்து விட்டேன்"

என்கிறார்.

அது மட்டும் அல்ல, "தீயவர் தொடர்பை விட்டது மட்டும் அல்ல, நல்லவர்கள் நட்பை, உறவை தேடி கண்டு பிடித்து ஏற்றுக் கொண்டேன்" என்றும் சொல்கிறார்.

அற்புதமான பாடல்.

சறுக்குப் பலகையில் வழுக்கிக் கொண்டு செல்வது போல, கை பிடித்து அழைத்துச் செல்லும் பாடல்

பாடல்

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! - வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே!


பொருள்

அறிந்தேன் = நான் அறிந்து கொண்டேன்.  எதை அறிந்து கொண்டேன் என்கிறார் ?

எவரும் அறியா மறையை = யாரும் அறியாத ஒரு மறைவான, இரகசியமான பொருளை

அறிந்துகொண்டு = அறிந்து கொண்டு.

செறிந்தேன் = நெருங்கி வந்தேன். நெருங்கி எங்கே வந்தார்?

உனது திருவடிக்கே = உன்னுடைய திருவடிக்கே. உன்னுடைய என்றால் யாருடைய என்ற கேள்வி வரும் அல்லவா?

திருவே! = திரு என்றால் சிறப்பு, செல்வம், உயர்வு, மதிப்பு என்று பல பொருள் உண்டு. சிறந்தவளே என்று பொருள் கொள்ளலாம்

வெருவிப் = வெறுத்துப் போய்

பிறிந்தேன் = பிரிந்தேன். பிரிந்து விட்டேன். எதை விட்டு பிரிந்தார்?

நின் அன்பர் = உன்னுடைய அன்பர்களின்

பெருமை எண்ணாத = பெருமையை நினைக்காத

கரும நெஞ்சால் = வினைப் பயனால், அதை அறிய மாட்டாத என்னுடைய மனதால்

மறிந்தே = மறித்தல் என்றால் தடுத்தல். மறியல் என்றால் strike. தடுமாறி

விழும் = விழும்

நரகுக்குறவாய = நரகத்துக்கு உறவான

மனிதரையே! = மனிதர்களையே

ஆழ்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்றால் ?


முதலாவது, "அறிந்தேன்" . அறிய வேண்டும். எது நல்லது, எது கெட்டது , நமக்கு எது நன்மை  பயக்கிறது, எது நமக்கு தீமை பயக்கிறது என்று அறிய வேண்டும்.

இரண்டாவது, "அறிந்து கொண்டு"...அறிந்தால் மட்டும் போதாது. நம்மிடம் உள்ள பெரிய  குறையே அது தான், அறிந்து கொண்ட பின் அதன் படி நடப்பதே இல்லை. சர்க்கரை உடலுக்கு நன்மை பயக்காது என்று அறிவோம். இருந்தாலும்  இனிப்பு பண்டங்கள், ஐஸ் கிரீம் என்று ஒன்று விடாமல் சாப்பிடுவோம். நொறுக்குத் தீனி கெடுதல் என்று அறிவோம். உடற் பயிற்சி நல்லது என்று அறிவோம்.  என்ன பலன். அறிந்து கொண்டு, ஒன்றும் செய்வது கிடையாது.

கற்ற பின் நிற்க அதற்கு தக 

என்பார் வள்ளுவப் பேராசான்.

கற்றால் மட்டும் போதாது. கற்பது மிக எளிது. அதன் படி நிற்பது மிகக் கடினம்.

மூன்றாவது "கரும நெஞ்சால்". நாம் நம் நண்பர்களை, நாம் சார்ந்த உறவினர்களை  எவ்வாறு தேர்ந்து எடுக்கிறோம்? இவர் நமக்கு பிடித்தமானவர் என்று எவ்வாறு  முடிவு செய்கிறோம்? நம் மனம் சொல்கிறது. நம் மனதுக்கு எப்படி தெரியும்?  அனுபவ வாசனை. நாம் பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்வது இல்லை. ஏதோ ஒன்றினால் உந்தப்பட்டு, இயந்திர கதியில்  செய்கிறோம். அதை பட்டர் , வினைப் பயன் என்கிறார். நம் அறிவு, உணர்ச்சிகள், விருப்பு வெறுப்பு எல்லாம் நாம் விரும்பி தேர்ந்து எடுப்பது இல்லை. அவை நம்முள் ஏற்கனவே இருக்கின்றன.

நான்காவது, "நின் அன்பர் பெருமை எண்ணாத". நல்லவர்களின் சிறப்பை அறியாமல். உலகில் எத்தனை நல்லவர்களை, உயர்ந்தவர்களை நமக்குத் தெரியும்?

ஐந்தாவது, "வெருவிப் பிரிந்தேன்". தீயவர்களின் உறவை வெறுத்துப் பிரிந்தேன்  என்கிறார். ஐயோ, இவர்களின் உறவை விட்டு விட்டுப் போகிறோமே என்று வருத்தம் அல்ல.  "இவ்வளவு நாளா இவர்களோடு இருந்து  எவ்வளவு நேரத்தை வீணாக்கி விட்டேன் " என்று வெறுத்துப் பிரிந்தேன்  என்கிறார். 


சிந்தியுங்கள்.

தேவை இல்லாத உறவுகளை உதறுங்கள்.

நன்மை தரும் உறவுகளை தேடிக் கண்டு பிடியுங்கள்.

இது யாரும் அறியாத இரகசியம் ("எவரும் அறியா மறை"). பட்டர்  நமக்குச் சொல்லித் தருகிறார்.

வினைப்பயன் இருந்தால் அறிந்து கொண்டு முன்னேறுவோம்.

இல்லை என்றால் , இருக்கவே இருக்கிறது "...இது எல்லாம் சரி தான்...நடை முறைக்கு  ஒத்து வருமா " என்று பெரிய ஞானி போல பேசி விட்டு, whatsapp , youtube , facebook, டிவி ல் என்ன இருக்கிறது என்று பார்க்கப் போகலாம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_30.html 

Wednesday, May 29, 2019

கம்ப இராமாயணம் - என்னை நீ இகழ்வது என்னே

கம்ப இராமாயணம் - என்னை நீ இகழ்வது என்னே



தன்னை மணந்து கொள்ளும்படி சூர்ப்பனகை, இராமனை வேண்டுகிறாள். அவளோடு சிறிது நேரம் பேச்சுக் கொடுத்துவிட்டு, முடிவில் மணக்க முடியாது என்று இராமன் கூறி விடுகிறான். அப்போது அங்கே சீதை வருகிறாள். சீதையின் அழகை உள்ளுக்குள் வியந்தாலும், வெளிக்கு அவள் மேல் கோபம் கொள்ளுகிறாள்.

அது மட்டும் அல்ல, தன்னைத்தானே சூர்ப்பனகை புகழ்ந்து கொள்கிறாள்.

"மூவரும் தேவரும் என்னை அடைய தவம் கிடக்கிறார்கள். நீ என்னடா என்றால் என்னை இகழ்வது மட்டும் அல்ல, இந்த பொறுமை இல்லாத கள்வியான சீதையை விரும்புகிறாய்"

என்று இராமனிடம் கூறுகிறாள்.


பாடல்

பொற்புடை அரக்கி, 'பூவில்,
     புனலினில், பொருப்பில், வாழும்
அற்புடை உள்ளத்தாரும், அனங்கனும்,
     அமரர் மற்றும்,
எற் பெறத் தவம் செய்கின்றார்; என்னை
     நீ இகழ்வது என்னே,
நல் பொறை நெஞ்சில் இல்லாக்
     கள்வியை நச்சி?' என்றாள்.


பொருள்

பொற்புடை அரக்கி = அழகிய வடிவம் கொண்ட அரக்கி (சூர்ப்பனகை)

'பூவில் = தாமரை மலரில் (வாழும் பிரம்மாவும்)

புனலினில் = நீரில், அதாவது பாற்கடலில் வாழும் திருமாலும்

பொருப்பில் = மலையில், அதாவது கைலை மலையில் வாழும் சிவனும்

 வாழும் = வாழும் மும்மூர்த்திகளும்

அற்புடை = அன்பு உடைய

உள்ளத்தாரும் = உள்ளம் உடையவர்களும்

அனங்கனும்,  = மன்மதனும்

அமரர் மற்றும் = மற்றும் உள்ள தேவர்கள் யாவரும்

எற் பெறத் = என்னைப் பெற

தவம் செய்கின்றார்; = தவம் செய்கிறார்கள்

என்னை  நீ இகழ்வது என்னே = என்னை நீ ஏன் பழிக்கிறாய்

நல் = நல்ல

பொறை  = பொறுமை

நெஞ்சில் இல்லாக்  = மனதில் இல்லாத

கள்வியை  = கள்ளத்தனம் கொண்ட இந்த சீதையை

நச்சி?' = விரும்பி

என்றாள். = என்றாள்

இங்கே முக்கியமாக இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

முதலாவது, சீதை மிக மோசமானவள் என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்லுவது?  சீதை பொறுமை இல்லாதவள் என்கிறாள் சூர்ப்பனகை. ஆகப் பெரிய  தீய குணம் பொறுமை இல்லாமை என்பது கம்பனின் வாக்கு.

பொறுமை பற்றி திருவள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தன்னை கடப்பாரை, மண்வெட்டி முதலியவற்றால் தோண்டுபவர்களையும் பொறுமையுடன் தாங்கும்  நில மகளை போல தம்மை இகழ்பவர்களை பொறுத்துக் கொள்வது ஆகச் சிறந்தது என்கிறார்.

சாப்பிடாமல் விரதம் இருந்து செய்யும் தவத்தை விட, பிறர் சொன்ன கடும் சொற்களை பொறுத்துக் கொள்வது  பெரியது என்கிறார்.

யோசித்துப் பாருங்கள், நம்மை ஒருவர் ஏதாவது தவறாக சொல்லி விட்டால், நமக்கு எவ்வளவு கோபம் வருகிறது. தவறு என்ன தவறு, உண்மையையே சொன்னாலும்,  அது நமக்கு பிடிக்கவில்லை என்றால், கோபம் வருகிறது அல்லவா?

அது மனைவியாக இருக்கட்டும், கணவனாக இருக்கட்டும், பிள்ளைகளாக இருக்கட்டும், உடன் பிறப்பு, நட்பு, சுற்றம், வேலை பார்க்கும் இடத்தில் யாரவது  நமக்கு பிடிக்காத ஒன்றைச் சொன்னால் பொறுமையாக கேட்க முடியுமா நம்மால்?

கேட்க வேண்டும். உண்மையோ பொய்யோ. சரியோ தவறோ. பொறுமையை கை விடாமல்  கேட்க வேண்டும். அவர்கள் சொன்னது தவறாகவே இருந்தாலும், அவர்களை பொறுக்கும் (சகிக்கும்) குணம் வேண்டும். அது ஒரு மிகச் சிறந்த  குணம் என்கிறார் வள்ளுவர்.

அதையே கம்பனும் தன் காவியத்தில் கொண்டு வந்து சேர்கிறான்.

சூர்ப்பனகை வாயில் இருந்து பெரிய அறத்தை சொல்கிறான் கம்பன்.

அடுத்தது, தற்புகழ்ச்சி.

தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறாள் சூர்ப்பனகை.

மூவரும் தேவரும், மன்மதனும் என்னை வேண்டி தவம் கிடக்கிறார்கள் என்கிறாள்.

அளவுக்கு மீறி தன்னை நினைத்துக் கொள்வதும் ஒரு அரக்க குணமே.

பணிவு வேண்டும்.

அடக்கம் வேண்டும்.

அடக்கம் அமரருள் உய்க்கும் என்பார் வள்ளுவப் பெருந்தகை.

அடக்கம் என்பது ஒரு சொத்து மாதிரி என்கிறார். நிலம், வீடு, பணம், நகை, வண்டி, வாகனம் போல அடக்கமும் ஒரு சொத்து என்கிறார்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வற்கே செல்வம் தகைத்து

என்பார் வள்ளுவப் பேராசான்.

சிந்தித்துப் பாருங்கள்.

உங்களிடம் எவ்வளவு பொறுமை இருக்கிறது. எப்போது பொறுமை தவறுகிறது. ஏன் தவறுகிறது. எப்படி பொறுமையாக இருப்பது என்றும்...

உங்களை நீங்கள் பெரிய ஆளாக நினைத்துக் கொண்டிருந்தால் , அது பற்றியும் சிந்தியுங்கள்.

இராமாயணம் படிப்பது கதை படிப்பது போல அல்ல.

அதில் பொதிந்து கிடக்கும் நல்ல விஷயங்களை நம் வாழ்வில் கடை பிடிக்க வேண்டும்.

வாழ்வு சிறக்க அதுவும் ஒரு வழி.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_29.html



Saturday, May 25, 2019

கம்ப இராமாயணம் - உளைவன இயற்றல்

கம்ப இராமாயணம் - உளைவன இயற்றல் 


இராமனோடு சூர்ப்பணகை பேசிக் கொண்டிருக்கும் போது, சீதை அங்கு வந்தாள். முதலில் அவளைப் பார்த்து வியந்த சூர்ப்பணகை , பின் அவள் மேல் கோபம் கொள்ளுகிறாள். சீதையை அரக்கி என்று இராமனிடம் கூறுகிறாள். சீதையை நம்பாதே என்றும் சொல்லி வைக்கிறாள். அவள் சொல்வதைக் கேட்டு சீதை அஞ்சி, இராமன் பின் ஒடுங்கி நின்று கொள்கிறாள்.

விளையாடியது போதும் என்று நினைத்த இராமன், சூர்பனகையை விரட்டுகிறான்.

"கோரை பற்களை கொண்ட அரக்கர்களோடு விளையாடினாலும் தீமையே வரும் என்று உணர்ந்து, மனம் வருந்தும் படியான செய்லகளை செய்யாதே. சீக்கிரம் இந்த இடத்தை விட்டு சென்று விடு. என் இளையவன் இலக்குவன் உன்னைப் பார்த்தால் கோபப் படுவான் "

என்று கூறி அவளை விரட்ட முனைகிறான்.

பாடல்

'வளை எயிற்றவர்களோடு வரும் 
     விளையாட்டு என்றாலும், 
விளைவன தீமையே ஆம்' என்பதை 
     உணர்ந்து, வீரன், 
'உளைவன இயற்றல்; ஒல்லை உன் 
     நிலை உணருமாகில், 
இளையவன் முனியும்; நங்கை! ஏகுதி 
     விரைவில்' என்றான்.


பொருள்


'வளை  = வளைந்த

எயிற்றவர்களோடு = பற்களை கொண்டவர்களோடு (அரக்கர்கள்)

வரும் விளையாட்டு என்றாலும் = விளையாட்டு என்றாலும்

விளைவன தீமையே ஆம்'  = அதில் தீமையே விளையும்

என்பதை  = என்பதை

உணர்ந்து, = உணர்ந்த

வீரன் = வீரனாகிய இராமன்

'உளைவன இயற்றல்;  = மனதுக்கு துன்பம் தருபவனவற்றை செய்யாதே

ஒல்லை  = சீக்கிரம்

உன்  நிலை உணருமாகில்,  = உன் நிலையை அறிந்தால் (நீ அரக்கி என்று அறிந்தால்)

இளையவன் முனியும்; = இளையவனான இலக்குவன் கோபம் கொள்வான்

நங்கை!  = நங்கை,

ஏகுதி  விரைவில்' என்றான். = போய்விடு சீக்கிரம் என்று கூறினான்

இராமன் வாக்கு மூலம் தருகிறான். "நான் இதுவரை அவளோடு விளையாடினேன் " என்று.

ஒரு பெண்ணின் காதலோடு, காமத்தோடு விளையாடுவது சரியா ?


அவள் செய்தது தவறாகவே இருந்து விட்டுப் போகட்டும்.

அவளோடு இப்படி விளையாட்டாக பேசியது மட்டும் சரியா ?

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால், அர்க்கியோடு (தீயவளோடு) இராமன் விளையாடினான். அது  எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டு போய்  விட்டது.

தீயவர்களின் சகவாசமே கூடாது.

விளையாட்டுக்குக் கூட அவர்களோடு உறவாடக் கூடாது

நாம் ஏதோ   கிண்டல், நையாண்டி என்று நினைத்து பேசி இருப்போம். ஆனால், அவர்கள் மனதில் அதை வைத்து இருந்து, தக்க நேரத்தில் நம்மை பழி தீர்த்து விடுவார்கள்.


கூனி அப்படி செய்தாள் .

சூர்பனகையும் அப்படிச் செய்வாள் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.

விபரீதம் நிகழவே செய்தது.

"தீயவர் தம் கண்ணில் படாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி


இராமன் போ என்று சொல்லிவிட்டான்.

போனாளா? அல்லது வேறு எதுவும் செய்தாளா?


https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_25.html

Thursday, May 23, 2019

கம்ப இராமாயணம் - விலக்குதி வீர

கம்ப இராமாயணம் - விலக்குதி வீர 


இராமனுக்கும் சூர்பனகைக்கும் உரையாடல் நடந்து கொண்டிருந்த போது , சீதை பர்ணசாலையில் இருந்து வெளியே வந்தாள் என்று பார்த்தோம்.

சீதையின் அழகைக் கண்ட சூர்ப்பனகை திகைத்துப் போய் விட்டாள்.

சீதையின் அழகில் சூர்பனகை வியந்ததை கம்பன் சொல்லிக் கொண்டே போகிறான். அவற்றை எல்லாம் விட்டு விடுவோம்.

கடைசியில், சூர்ப்பனகை சொல்கிறாள்

"இராமா, இவள் (சீதை) மாயா ஜாலங்களில் வல்லவள். வஞ்சனையான அரக்கி. நல்ல மனம் கொண்டவள் இல்லை. எதையும் ஆராய்ந்து செய்பவனே, இந்தப் பெண்ணின் உண்மையான உருவம் இது அல்ல. இவள் மாமிசம் சாப்பிடும் அரக்கி. இவளை விட்டு நீ விலகு"

சூர்பனகை, சீதையை அரக்கி என்கிறாள்.


பாடல்

வரும் இவள், மாயம் வல்லள்;
    வஞ்சனை அரக்கி; நெஞ்சம்
தரெிவு இலம்; தேறும் தன்மை,
    சீரியோய்! செயல் இது அன்றால்,
உரு இது மெய்யது அன்றால்;
    ஊன் நுகர் வாழ்க்கையாளை
வெருவினென்; எய்திடாமல்
    விலக்குதி, வீர! என்றாள்.



பொருள் 


வரும் இவள் = இங்கே வந்து நிற்கும் இவள்

மாயம் வல்லள் = மாயா ஜாலங்களில் வல்லவள்

வஞ்சனை அரக்கி = வஞ்ச மனம் கொண்ட அரக்கி

நெஞ்சம்  தெரிவு இலம் = இவள் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள முடியாது

தேறும் தன்மை  சீரியோய்!    -  காரியங்களை தேர்ந்து எடுத்து செய்பவனே

செயல் இது அன்றால் = நீ செய்ய வேண்டிய செயல் என்ன என்றால்
,
உரு இது மெய்யது அன்றால் = இவளின் உருவம் மெய்யானது அல்ல

ஊன் நுகர் வாழ்க்கையாளை = மாமிசம் சாப்பிடும் இவளை

வெருவினென் = இவளை பார்த்தால் எனக்கே பயமாக இருக்கிறது

எய்திடாமல் = இவளை அடையாமல்

விலக்குதி, வீர! என்றாள். = அவளை விலக்கிவிடு என்றாள்

இது எப்படி இருக்கு ?

சூர்ப்பனகை, சீதையை அரக்கி என்கிறாள்.

அது போகட்டும். சூர்ப்பனகை சீதையை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்.

நமக்கு இதில் இருந்து கிடைக்கும் பாடம் என்ன?

தீயவர்கள் (அரக்கர்கள்), தங்களது தீய குணத்தை நம் மேல் ஏத்தி மற்றவர்களிடம் சொல்லுவார்கள்.  சீதையை சூர்ப்பனகை சொன்ன மாதிரி...அவள்  உருவம் மெய்யானது அல்ல (சூர்ப்பனகை மாறு வேடத்தில் வந்து இருக்கிறாள் ), சீதை வஞ்ச மனம் கொண்ட அரக்கி, சீதை புலால் உண்பவள் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகிறாள்.  தீயவர்களிடம்  நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களது தீய குணங்களை நம்மிடம் உள்ள தீய குணங்கள் போல  ஊராரிடம் சொல்லி கதை கட்டி விடுவார்கள்.

இரண்டாவது, சீதைக்கும் சூர்பனகைக்கும் ஒரு பகையும் கிடையாது. இருவரும் முன்ன பின்ன சந்தித்தது கூட இல்லை.  பார்த்த உடனேயே, சீதையைப் பற்றி  இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வைக்கிறாள். எனவே தான், தீயவர்கள் கண்ணுக்கு படாமல் நீங்குவதே நல்ல நெறி  என்று சொல்லி  வைத்தார்கள். அவர்கள் பார்வையிலேயே படக் கூடாது. "பட்டால் என்ன  ஆகும். இப்படி தீயவர்களை கண்டு பயந்து ஒளிந்து கொண்டே இருக்க முடியுமா ?" என்று விதண்டாவாதம் பண்ணினால் , இராமனுக்கும் சீதைக்கும் என்ன ஆயிற்று   என்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். அவர்களுக்கே அந்த கதி என்றால்.....


மூன்றாவது, தீயவர்கள், தங்களுக்கு ஒன்று வேண்டும் என்றால், என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.  இங்கே, சூர்ப்பனகை, கணவன் மனைவியை பிரிக்க  வழி தேடுகிறாள். அவளுக்கு இராமன் வேண்டும். எனவே, சீதையை இராமனிடம் இருந்து பிரிக்க வழி தேடுகிறாள்.

நான்காவது, தீயவர்கள் சொல்வதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. இராமனுக்கு சீதையைப் பற்றி நன்கு தெரியும். எனவே, அவன் சூர்ப்பனகை சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை.  இல்லை என்றால் யோசித்துப் பாருங்கள். சந்தேகத்தின் விதை விழுந்து விடும் அல்லவா?

அம்மாவைப் பற்றி மகனிடம், மகனைப் பற்றி அம்மாவிடம்,  இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி  குடும்பத்தை பிரித்து, அதை சிதற அடித்த பெண்கள் பற்றி நாம்  நிறைய கேட்டு இருக்கிறோம் அல்லவா?

நண்பர்களை பிரித்து விடுவது, அம்மா மகன், அப்பா மகன் உறவை துண்டித்து விடுவது  என்று எவ்வளவோ நடக்கிறது.

இறுதியாக, தீயவர்கள், எப்போதும் நம்மை தனிமைப் படுத்தி, அவர்களோடு சேர்த்துக் கொள்ளவார்கள்.

யார் நம்மை தனிமை படுத்த நினைக்கிறார்களோ அவர்கள் தீயவர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

கதை படிக்கும் போது, கொஞ்சம் கருத்தையும் படித்துக் கொள்வோம்.


Tuesday, May 21, 2019

திருக்குறள் - அறிவு

திருக்குறள் - அறிவு 


சில தினங்களுக்கு முன்னால், அறிவுடைய எல்லாம் உடையார், அறிவிலார் என்னுடையரேனும் இலர் என்ற குறளின் அர்த்தம் பற்றி சிந்தித்தோம்.

அறிவு என்பது என்ன ? அறிவு எப்படி வருகிறது? அறிவைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகள் எழுவது இயல்பு.

அறிவு யாருக்குத்தான் வேண்டாம் ? அறிவில்லாமல் முட்டாளாக இருக்க யாருக்கு விருப்பம் இருக்கும் ?

எனவே அறிவு என்றால் என்ன, அதை எப்படி அடைவது என்பது பற்றி சிந்திப்போம்.

முதலில், கற்பதனால் அறிவு வளரும் என்று பார்த்தோம்.

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு 

என்று பார்த்தோம்.

தோண்ட தோண்ட நீர் வருவது போல, படிக்க படிக்க அறிவு வளரும்.

சரி,எதைப் படிப்பது ? படித்தால் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே ? ஆளுக்கு ஒரு வழி சொல்கிறார்கள்.

ஆன்மீகம் ஒன்று சொல்கிறது. அறிவியல் இன்னொன்று சொல்கிறது.

எதை எடுத்துக் கொள்வது.

ஆன்மீகத்திலும் எத்தனையோ பிரிவுகள், ஒவ்வொரு பிரிவும் ஒன்றைச் சொல்கிறது.

என் கடவுள் தான் பெரியவர்,  என் வழிதான் ஒரே வழி,  நான் கண்டதே உண்மை, மற்றதெல்லாம் பொய், என் கடவுள் தான் முக்தி தருவார்,  என்று ஆளாளுக்கு  கொடி பிடிக்கிறார்கள்.

அறிவியலோ , நேற்று ஒன்று சொன்னது. இன்று அதை மாற்றிச் சொல்கிறது. நாளை  என்ன சொல்லுமோ, தெரியாது.

நாம் நடுவில் குழம்பிப் போய் நிற்கிறோம்.

சரி, யாரிடமாவது போய் கேட்கலாம் என்றால், யார் உண்மையானவர் என்று தெரியவில்லை.  அப்படியே ஒருவர் நல்லவராக இருந்தாலும், அவருக்கு எல்லாம் தெரியுமா  என்பதும் சந்தேகமே.

என்னதான் செய்வது ?

வள்ளுவர் சொல்லிவைத்து விட்டுப் போய் இருக்கிறார்.

"யார் என்ன சொன்னலாலும் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு இருக்காம சொன்னதில் உள்ள உண்மை என்ன என்று தெரிந்து கொள்வது அறிவு" என்கிறார்.


பாடல்


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 

பொருள்

எப்பொருள் = எந்தப் பொருளை

யார்யார்வாய்க்  = யாரிடம் இருந்து

கேட்பினும்  = கேட்டாலும்

அப்பொருள்  = அந்தப் பொருளின்

மெய்ப்பொருள் = உண்மையான பொருளை

காண்பது = காண்பது

அறிவு.  = அறிவு


என்ன இது சரியான கதையா இருக்கே. எங்களுக்கு அறிவு எப்படி வரும் என்று கேட்டால், எல்லாவற்றிற்கும் உண்மை எது என்று எங்களையே கண்டு பிடிக்கச் சொன்னால் எப்படி. அது தெரிந்தால் நாங்க ஏன் இப்படி இருக்கோம் ?

ஒரு ஒரு படியாக வருவோம். 

அது என்ன "யார் யார் வாய்"

மனிதர்ளுக்கு முக்குணங்கள் மாறி மாறி வருவது இயல்பு. 

சாத்வீகம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்கள் நமக்குள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். 

அப்படி மாறி மாறி வரும்போது நண்பர்களும், உறவினர்களும் தவறான ஒன்றை நமக்குச் சொல்லி விடலாம், நம் பகைவர்கள் நமக்கு நல்லதைச் சொல்லிவிடலாம்,  உயர்ந்தவர்கள் வாயில் தாழ்ந்த கருத்துகளும், தாழ்ந்தவர் வாயில் இருந்து உயர்ந்த கருத்துகளும் வரலாம். 

யாரிடம் இருந்து எப்போது எது வரும் என்று தெரியாது. 

எதையும், அது எப்போதும் சரியாக இருக்கும் என்றும் நினைக்கவும் கூடாது.  அது போல, சிலர் சொல்லுவது எப்போதும் தவறாகவே இருக்கும் என்றும் நினைக்கக் கூடாது. 

அது ஆளாக இருந்தாலும் சரி, புத்தகமாக இருந்தாலும் சரி, எதுவானாலும்  சொன்னது யார் என்று பார்க்கக் கூடாது. என்ன சொன்னார்கள் என்று பார்க வேண்டும். 

வேதம், கீதை, பைபிள், குரான், தேவாரம், திருவாகம், பிரபந்தம், அறிவியல், கணிதம், என்று யார் எதில் என்ன சொன்னாலும், அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. 

சிந்திக்க வேண்டும். என்ன சொல்கிறார்கள், அதன் அர்த்தம் என்ன, அது சரிதானா என்று உரசிப் பார்க்க வேண்டும். 

கடவுளே நேரில் வந்து சொன்னாலும், அவர் சொன்னதின் மெய் பொருள்  என்ன என்று அரிய வேண்டும். 

"அப்பொருள் மெய் பொருள்" என்றால் என்ன ?

நாம் படிப்பது, கேட்பது எல்லாமே நமக்குத் தெரிந்தவற்றின் மூலமாகத் தான். 

புதிதாக ஒரு கருத்தை படித்தாலோ, கேட்டாலோ நமக்கு அது பற்றி ஏற்கனவே  ஒரு அப்பிராயம் இருக்கும். நம் மனதில் உள்ளதோடு புதிய கருத்தை நாம் ஒப்பிட்டுப் பார்போம். நமக்கு வசதியாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம்.  இல்லை என்றால் தூக்கி எறிந்து விடுவோம். 

நமக்குத் தெரிந்தவற்றை முதலில் தூக்கி ஒரு ஓரத்தில் வைத்து விட வேண்டும். 

சொல்லப்படுவது என்ன என்று கேட்க வேண்டும். அதை ஆராய வேண்டும் 

அது உண்மை என்றால், அது நமக்கு ஏற்கனவே இருக்கும் எண்ணங்களுக்கு எதிரானது என்றால், நமது எண்ணங்களை மாற்றிக் கொள்ளவேண்டுமே அல்லாது, புதிய கருத்துகளை விட்டு விடக் கூடாது. 

அது தான் அறிவு வளரும் வழி. 

நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று சாகும் வரை சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது. 

யார் எதைச் சொன்னாலும், ஆராய வேண்டும், சிந்திக்க வேண்டும், கேள்வி கேட்க வேண்டும்...

அது அறிவு வளர்வதின் முதல் படி.....

அடுத்த படி என்ன தெரியுமா ?

Monday, May 20, 2019

கம்ப இராமாயணம் - திரு இங்கு வருவாள்கொல்லோ?

கம்ப இராமாயணம்  - திரு இங்கு வருவாள்கொல்லோ?


இராமனுக்கும் சூர்பனகைக்கும் இடையே உரையாடல் நடந்து கொண்டிருந்த போது , பர்ணசாலையின் உள் இருந்து சீதை வெளியே வந்தாள்.

சீதையை கண்ட சூர்ப்பனகை திகைக்கிறாள்.


"நறுமணம் பொருந்திய கூந்தலை உடைய இந்தப் பெண்ணை இவன் இந்தக் காட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டான். இப்படி ஒரு அழகு உள்ள பெண் இந்த காட்டில் யாரும் இல்லை. தாமரை மலரில் இருந்து, கால் தோய அந்த இலக்குமியே எங்கு வந்தாளோ" என்று உள்ளை திகைத்து நிற்கிறாள் சூர்ப்பனகை.


பாடல்

'மரு ஒன்று கூந்தலாளை வனத்து 
     இவன் கொண்டு வாரான்;
உரு இங்கு இது உடையர் ஆக, மற்றையோர் 
     யாரும் இல்லை; 
அரவிந்த மலருள் நீங்கி, அடி 
     இணை படியில் தோய,
திரு இங்கு வருவாள்கொல்லோ?' என்று அகம் 
     திகைத்து நின்றாள்.


பொருள்


'மரு ஒன்று = நறுமணம் பொருந்திய

கூந்தலாளை = கூந்தல் கொண்ட இந்தப் பெண்ணை

வனத்து = காட்டுக்கு

இவன் = இராமன்

கொண்டு வாரான்; = கொண்டு வந்திருக்க மாட்டான்

உரு = இப்படி ஒரு உருவம் உள்ள பெண்கள்

இங்கு = இந்தக் காட்டில்

இது உடையர் ஆக = இப்படி அழகு உடையவர் ஆக

மற்றையோர்  = வேறு பெண்கள்

யாரும் இல்லை;  =யாரும் இல்லை

அரவிந்த = தாமரை

மலருள்  = மலரில் இருந்து

நீங்கி = நீங்கி

அடி  = திருவடி

இணை = இரண்டும்

படியில் தோய = நிலத்தில் படும்படி

திரு = திருமகள்

இங்கு வருவாள்கொல்லோ?' = இங்கு வந்திருப்பாளோ?

என்று = என்று

அகம்  = மனம், உள்ளம்

திகைத்து நின்றாள். = திகைத்து நின்றாள்

சீதை அப்போதுதான் பர்ண சாலையில் இருந்து வெளியே வருகிறாள். அவள் கூந்தலின்  மணம் சூர்பனகைக்குத் தெரிந்து விடுகிறது.

தாடகையும் அப்படித்தான்.


தாடகையைப் பற்றி கூறும் போது விசுவாமித்திரன் வாயிலாக கம்பன் கூறுவான்,

"எமன் கூட நமது இறுதி நாளில் தான் வந்து நம் உயிரை கொண்டு செல்வான். ஆனால், இவளோ, உயிர்களின் வாடை பட்டாலே போதும், எடுத்து தின்று விடுவாள்" என்கிறான்.

‘சாற்றும் நாள் அற்றது எண்ணித்,
    தருமம் பார்த்து,
ஏற்றும் விண் என்பது அன்றி,
    இவளைப் போல்.
நாற்றம் கேட்டலும் தின்ன
    நயப்பது ஓர்
கூற்று உண்டோ? சொலாய்!
    கூற்று உறழ் வேலினாய்!

சிலருக்கு உணவின் வாடை பட்டாலே போதும். பசி வந்து விடும். ஹ்ம்ம்...நல்ல மணம் வருதே...இன்னிக்கு என்ன ஸ்பெஷல் என்று சாப்பிட கிளம்பி விடுவார்கள். அது அரக்க குணம். பசித்தால் அன்றி சாப்பிடக் கூடாது.

இங்கே, சூர்பனகைக்கு சீதையின் கூந்தல் வாசம் வருகிறது.

"இவளை பார்த்தால் நல்ல குலப் பெண் போல இருக்கிறாள். இராமன் எதுக்கு இவளை  காட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கப் போகிறான்" எனவே, இது அவன் மனைவியாக இருக்காது  என்று அவள் நினைக்கிறாள்.

சரி, மனைவி இல்லை என்றால், இங்கே காட்டில் இருக்கும் பெண்ணாக இருக்கும் என்றால், இப்படி ஒரு அழகான பெண் இந்தக் காட்டில் ஏது. எனவே, இவள் இந்தக் காட்டில் திரியும் பெண்ணும் இல்லை.

ஒருவேளை, இராமன் பூஜை சேத பலனாக, அந்த திருமகளே இங்கு வந்திருப்பாளோ என்றால், இவள் கால் தரையில் படுகிறது. எனவே, இவள் திருமகளும் இல்லை.

யார் இவள் என்று திகைக்கிறாள்.

பெண் என்றால், பார்த்தவுடன் ஒரு நல்ல மதிப்பு மனதில் வர வேண்டும்.

சீதையின் அழகை கம்பன் வர்ணித்த மாதிரி இன்னொரு கதாநாயகியை வேறு எந்த இலக்கிய  கர்த்தாவும் வர்ணித்திருப்பார்களா என்பது சந்தேகமே.

வர்ணனையின் உச்சம் தொடுவான் கம்பன், சீதையை வர்ணிக்கும் போது.

அது பற்றி தனியாக கொஞ்சம் சிந்திப்போம், பின்னொரு நாளில்.


சற்று இந்த சூழ்நிலையை சிந்தித்துப் பாருங்கள்.

தனியான காடு.

சீதை ஒரு புறம். சூர்ப்பனகை மறுபுறம். நடுவில் இராமன்.

சூர்பனகையும், சீதையும் ஒருவரை ஒருவர் முதன் முதலாக சந்திக்கும் இடம்.

அந்த இடத்தில் கம்பன் நிறுத்துகிறான்.

அடுத்து என்ன நிகழ்ந்திருக்கும் ?


Saturday, May 18, 2019

திருக்குறள் - எல்லாம் உடையார்

திருக்குறள் - எல்லாம் உடையார் 


பாடல்

‘அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்’’

பொருள்

‘அறிவுடையார் = அறிவு உள்ளவர்கள்

எல்லாம் உடையார் = எல்லாம் உடையவர்கள்

அறிவிலார் = அறிவு இல்லாதவர்கள்

என்னுடைய ரேனும்  = எவ்வளவுதான் இருந்தாலும்

இலர் = ஒன்றும் இல்லதாவர்களே

இது பொதுவாக சொல்லும் பொருள்.

திருக்குறளை ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கும் சொல்லலாம். முதுகலை படித்து முடித்து, முனைவர் (doctorate ) படிப்பு படிப்பவர்களுக்கும் சொல்லலாம். எளிமைக்கு எளிமை. ஆழத்துக்கு ஆழம்.

சரி, இதில் என்ன ஆழம் இருக்கிறது.

"அறிவுடையார்" ... கல்வி உடையார், கற்றவர் என்று சொல்லவில்லை. அறிவு உடையார்  என்று சொல்கிறார். கல்வி வேறு, அறிவு வேறு.  அறிவுடைமைக்கும் கல்விக்கும்  இரு வேறு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

அறிவு என்பது நமக்குள் இருப்பது. அதை வெளியே கொண்டு வருவது கல்வி.

அது என்ன உள்ளே இருப்பது, வெளியே வருவது ?

இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்று நினைத்தார் வள்ளுவர்.

ஆற்றில் நீர் வற்றிய காலங்களில் மக்கள் ஆற்றுப் படுகையை தோண்டுவார்கள். அதில் நீர் ஊற்றெடுத்து வரும்.  அதற்கு மணற்கேணி என்று பெயர். நீர் உள்ளே இருக்கும். கொஞ்சம் தோண்டினால்  நீர் வரும்.

அது போல, அறிவு உள்ளே இருக்கும். கொஞ்சம் தோண்டினால் அது வெளியே வரும்.

‘‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’’

எவ்வளவு தோண்டுகிறோமோ அவ்வளவு நீர் வரும் மணற்கேணியில் இருந்து. அது போல எவ்வளவு கற்கின்றோமோ அவ்வளவு அறிவு வளரும்.

சிலருக்கு லேசாக தோண்டினாலே நீர் வந்து விடும். சிலருக்கு பல அடி ஆழம் தோண்ட வேண்டும்.

சரி, அறிவு புரிகிறது.

அறிவு இருந்தால் எல்லாம் இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்? எத்தனையோ அறிவாளிகள்  ஏழையாக இல்லையா? படிக்காத தற்குறிகள் செல்வத்தில்  திளைக்கவில்லையா ?

நாம் ஏழ்மை என்று சொல்லுவது பொன் , பொருள்  இல்லாமல் இருப்பதை. ஒருவனிடம்  நிறைய காசு இருந்தால்  அவனிடம் எல்லாம் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம்.

செல்வம் நிலையாதது.

ஒரு அளவுக்கு மேல் செல்வம் இருந்தால் அதனால் ஒரு பயனும் இல்லை. அது மட்டும் அல்ல , அதனால் சிக்கல்களே அதிகம்.

மேலும், இந்த பொருளும், பொன்னும் நாம் இறந்த பின் நம் கூட வருமா ?

வராது.

அறிவு மட்டும் வருமா ?

வரும் என்கிறார் வள்ளுவர்.


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து

ஒரு பிறவியில் ஒருவன் கற்ற கல்வி, ஏழேழ் பிறவிக்கும் வரும் என்கிறார்.

அப்படி என்றால், நம் வாழ்நாளை இதில் செலவிட வேண்டும் ?

பொன்னும் பொருளும் சேகரிப்பதிலா? அல்லது அறிவை சேகரிப்பதிலா ?

"என்னுடையரேனும் இலர்"

என்ன இருந்தாலும், ஒன்றும் இல்லாதவர்களைப் போலத்தான் இருப்பார்கள் அறிவு இல்லாதவர்கள் என்கிறார்.

அறிவில்லாதவனிடம் நிறைய செல்வம் இருந்தாலும், அவனுக்கு அதை அனுபவிக்கத் தெரியாது.

பிற்காலத்துக்கு வேண்டும் என்று சேர்த்து வைப்பான். பிற்காலம் வரும் முன்னே  இறந்தும் போவான். அந்த செல்வம் அவனிடம் இருந்து என்ன பலன்.  செல்வம் இல்லாதவன் எப்படி ஒன்றையும் அனுபவிக்காமல் இறப்பானோ , அதே போல  இவனும் இருக்கிற பணத்தை எல்லாம் shares, stocks, gold, mutual fund, real estate  என்று வாங்கிப் போட்டுவிட்டு, ஒன்றையும் அனுபவிக்காமல் இறந்து போவான்.

நிறைய பணம் இருக்கும், கண்டதையும் சாப்பிடுவது, சர்க்கரை வியாதி வந்து விடும்.  அரசி சோற்றை நினைத்துக் கூட பார்க்க கூடாது என்று சொல்லிவிடுவார்  வைத்தியர். பணம் இருந்து என்ன பலன்? ஒரு பிச்சைக்காரனுக்கு  கிடைக்கும் இன்பம் கூட இவனுக்கு கிடைக்காது.

செல்வம் நிறைய இருக்கிறதே என்று மது, புகை பிடிப்பது என்று கெட்ட வழக்கங்களை  மேற்கொள்ளுவான். இதய நோய் , காச நோய் , கான்சர் என்று   அவதிப் படுவான்.

என்ன இருந்து என்ன செய்ய ?

அறிவு இல்லை என்றால், மனைவி மக்களோடு பிரச்சனை வரும். குடும்ப உறவுகள் சிக்கலாகும். அது ஒரு சுகமா ?

தீயவர் சகவாசம் வரும். அது மேலும் பல தீமையில் கொண்டு போய் விடும்.

அறிவில்லாதவன் பல செல்வங்களை சேர்த்தாலும், நம்மை விட அவன் அதிகம் சேர்த்து விட்டானே என்று மற்றவர்களைப் பார்த்து  பொறாமை படுவான். அந்த பொறாமை, அவனை, அவனது செல்வங்களை நிம்மதியாக அனுபவிக்க விடாது.


அறிவு இல்லை என்றால், மற்றவை எல்லாம் இருந்தும் ஒன்றுக்கும் பயன் படாது.

கேக்க நல்லாத்தான் இருக்கு.

சரி, இந்த அறிவை எப்படி பெறுவது?

அதற்கு ஏதாவது வழி சொல்லி இருக்கிறார்களா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_60.html