Wednesday, October 20, 2021

திருக்குறள் - அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

 திருக்குறள் - அன்பிலார் எல்லாம் தமக்குரியர்


அன்பு செலுத்துவது என்றால் என்ன?  


கண்ணே, மணியே என்று கொஞ்சுவதா? வேண்டியது எல்லாம் வாங்கித் தருவதா? நல்லது கெட்டது சொல்லித் தருவதா? 


ஒருவன் அன்புடையவன் என்று எப்படிச் சொல்வது? 


இப்போதெல்லாம் அன்பு என்பது பண்டமாற்று என்று ஆகிவிட்டது. நீ எனக்கு என்ன செய்வாய், நான் உனக்கு இது செய்தால் என்ற கேள்வியில் வந்து நிற்கிறது. எதிர்பார்ப்பில்லாத அன்பு என்று ஒன்றே இல்லை என்று ஆகி விட்டது. அப்படி சொல்பவர்களை பைத்தியகாரர்கள் என்று உலகம் சொல்லத் தொடங்கி விட்டது. 


கணவன் மனைவி அன்பில் கூட, யாருக்கு யார் எவ்வளவு செய்தார்கள் என்று கணக்கு பார்க்கும் காலம். "நான் என்ன வேலைக்காரியா", "நான் என்ன பணம் காய்க்கும் மரமா", என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டோம். 


 பிள்ளை வளர்ப்பதில் கூட, வயதான காலத்தில் பார்த்துக் கொள்வான் என்ற எதிர்பார்ப்பு வந்து விட்டது. 



வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்


பாடல் 


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_20.html


(Please click the above link to continue reading)



அன்பிலார் = அன்பு இல்லாதவர்கள் 


 எல்லாம் = அனைத்தும் 


தமக்குரியர் = தங்களுக்கு உரியது என்று நினைப்பார்கள் 


 அன்புடையார் = அன்பு உள்ளவர்கள் 


என்பும் = தங்களுடைய எலும்பு கூட 


உரியர் பிறர்க்கு = பிறர்க்கு உரியது என்று நினைப்பார்கள் 


அன்பு இல்லாதவர்கள்  எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைப்பார்கள். 


அன்பு உள்ளவர்கள் அனைத்தும் பிறர்க்கு உரியது என்று நினைப்பார்கள். 


இப்படித்தான் நாம் மேலோட்டமாக பொருள் கொள்வோம். 


பரிமேலழகர் மிக ஆழமான பொருள் சொல்கிறார். 


"அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்"


அன்பு இல்லாதவர்களால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை. அவர்களிடம் யாரும் போக மாட்டார்கள். எனவே, எந்த விதத்தில் பார்த்தாலும், அவர்கள் தங்களுக்கு மட்டுமே உரியவர்கள். 


"என் கணவன்", "என் மனைவி", "என் அப்பா, அம்மா" என்று அவர்களை யாரும் கூற முடியாது.  அவர்கள் மேல் யாரும் உரிமை கொண்டாட முடியாது. அவர்கள் யாருக்கும் உரியவர்கள் அல்ல. தமக்கே உரியர். 


காரணம், அவர்கள் ஒரு கணவனாக, மனைவியாக, தந்தையாக, தாயாக ஒன்றும் செய்ய மாட்டார்கள். 


நான் எப்போது ஒரு தந்தையாகிறேன்? என் பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்யும் போது, எனக்கு பசித்தாலும், பிள்ளை சாப்பிடட்டும் என்று அவன்/அவள் சாப்பிடுவதை கண்டு மகிழும் போது நான் தந்தையாகிறேன். அப்போது என் பிள்ளை சொல்லுவான் "...இவர் என் அப்பா" என்று. 


அப்படிச் செய்யாமல், இருந்தால் என்ன ஆகும். பிள்ளைக்கு அப்பா மேல் பாசம் இருக்காது. 


புரிகிறது அல்லவா?


சிலர் இருக்கிறார்கள். பணம் வேண்டுமா, எடுத்துக் கொண்டு போ. என்னை தொந்தரவு செய்யாதே. என் நேரம் எனக்கு முக்கியம். உனக்கு ஊர் சுற்ற வேண்டுமா, போய் கொள், என்னை விட்டு விடு. எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார்கள். 


அது அன்பா? 


வேண்டிய பணம் கொடுத்தேனே? படிக்க வைத்தேனே? பாட வைத்தேனே? உடை வாங்கிக் கொடுத்தேன், உணவு, நல்ல பள்ளிக் கூடம், கல்லூரியில் படிக்க வைத்தேன், கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்தேன்...அது அன்பு இல்லையா என்றால் இல்லை என்கிறார் வள்ளுவர். 


அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 


அன்பு இருந்தால், யார் மேல் அன்பு இருக்கிறதோ அவர்களுக்காக அவர்கள் என்ன கேட்டாலும் கொடுக்க வேண்டும். எலும்பையே கொடுப்பார்கள் என்கிறார். 


நேரத்தை கொடுக்க மாட்டேன் என்றால் அது அன்பு இல்லை. 


மனைவிக்கு புடவை எடுக்க வேண்டும். கணவன் கூட வந்தால் நல்லா இருக்கும் என்று அவள் நினைக்கிறாள். "நான் வந்து என்ன செய்யப் போகிறேன்...நீயே போயிட்டு வா...காரை எடுத்துக் கொண்டு போ" என்று அனுப்பி விடுகிறான் கணவன். 


அன்பில்லை என்றுதான் அர்த்தம். 


சரியா தவறா என்பது வேறு விவாதம். 


அன்பு இருக்கிறதா இல்லையா என்றால், அன்பு இல்லை என்று அர்த்தம். அவ்வளவுதான். 


அன்பு இருந்தால், "இரு நானும் வருகிறேன்...கொஞ்சம் வேலை இருக்கு, அதை வந்து பார்த்துக் கொள்கிறேன்" என்று புறப்பட வேண்டும். 


அப்படிச் செய்தால், எப்பப் பார்த்தாலும் மனைவி பின்னேயே போய் கொண்டு இருக்க வேண்டியது தான். காய் கறி வாங்க, அழகு நிலையம் போக என்று. மற்ற வேலைகளை யார் பார்ப்பது என்றால், மனைவிக்கு அன்பு இருந்தால், அவள் அப்படி இழுத்துக் கொண்டு அலைய மாட்டாள். 


"என் கூட அவர் வந்தால் நல்லா இருக்கும். ஆனால், அவருக்கு தனிமை தேவைப் படுகிறது. என் சந்தோஷத்தை அவருக்காகத் தருகிறேன்" என்று அவளும் நினைக்க வேண்டும். என்பும் உரியர் பிறர்க்கு என்பது அவளுக்கும் பொருந்தும். 


இப்படி ஒருவற்கு ஒருவர் மாறி மாறி அன்பு செய்து கொண்டிருந்தால், இல்லறம் எவ்வளவு இனிமையாக இருக்கும்?


கணவன் மனைவி மட்டும் அல்ல. 


சகோதர்கள் இடையில் அந்த அன்பு இருக்க வேண்டும். 


நாட்டை பரதனுக்கு கொடு என்றவுடன் இராமன் சொன்னான் "என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ" என்று. 


எலும்பையே கொடுக்கலாம் என்றால், இராஜ்யமா பெரிது? கொடுக்கலாம்தானே?


பாதி நாடு கொடு, இல்லை என்றால், ஐந்து ஊர் கொடு, இல்லை என்றால் ஐந்து வீடாவது கொடு என்று துரியோதனிடம் தர்மன் கேட்டான். "ஊசி முனை நிலமும் தர மாட்டேன்" என்றான் துரியோதனன். 


எல்லாம் தமக்கு உரியர். 


ஆழ்ந்த குறள். 


சிந்திப்போம். முடிந்தவரை கடைபிடிப்போம். 


உரை சற்றே நீண்டு விட்டது. மன்னிக்க. 

Sunday, October 17, 2021

கம்ப இராமாயணம் - கங்குலும் பகல் பட வந்தான்

கம்ப இராமாயணம் - கங்குலும் பகல் பட வந்தான் 


இராவணன் பாத்திரத்தை கம்பன் செதுக்கியது போல இன்னொரு பாத்திரத்தை செதுக்கினானா என்று தெரியவில்லை. 


ஒரு புறம் மாபெரும் வீரம், இந்திராதி தேவர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் வீரம், இன்னொரு புறம் அளவுகடந்த சிவ பக்தி, இன்னொரு புறம் இறைவனை இறங்கி வரச் செய்யும் இசை ஞானம், மறு புறம் கல்வி கேள்விகளில் சிறந்த அறிவு....இது எல்லாம் ஒரு புறம். 


இன்னொரு புறம், சீதையின் மேல் அளவு கடந்த காமம், தம்பிகள் மேல் வாஞ்சை, மகன் மேல் உயிர் உருகும் அன்பு....


அறிவு, வீரம், காமம், காதல், பாசம், அன்பு என்று அனைத்தும் கலந்த கலவையாக இருக்கிறான். 


அவனின் வீரம், கம்பீரம் ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் காமத்தால் அவன் எந்த அளவுக்கு ஒரு பெண்ணின் முன்னால் மண்டியிட்டு இறைஞ்சுகிறான் என்று பார்க்கும் போது பாவமாக இருக்கிறது. 


இராவணன், சீதையை பார்த்துப் பேசும் இடங்கள்...நான் என்ன சொல்ல அந்த கவிதைகளை நீங்களே பாருங்கள். 


அசோகவனம் நோக்கி இராவணன் வருகிறான்....


"உலகில் உள்ள பெரிய மலைகள் எல்லாம் ஒன்றாக ஒரு இடத்தில் சேர்ந்தால் எப்படி இருக்கும். அது போல இருந்தது பத்துத் தலையோடு இராவணன் வருவது. உடல் எங்கும் ஆபரணங்கள். அதில் இள வெயில் பட்டு ஜொலிக்கிறது. அது கடல் நீரில் சூரிய ஒளி பட்டு மின்னுவது போல இருக்கிறது. அவன் வரும் போது இரவு கூட பகல் போல ஒளி விடும்"


பாடல் 


 சிகர வண்குடுமி நெடு வரை எவையும்

     ஒரு வழித்திரண்டன சிவண,

மகரிகை வயிரகுண்டலம் அலம்பும்

     திண்திறல் தோள் புடை வயங்க,

சகர நீர் வேலைதழுவிய கதிரின்,

     தலைதொறும்தலைதொறும் தயங்கும்

வகைய பல் மகுடம்இள வெயில் எறிப்ப,

     கங்குலும்பகல்பட, வந்தான்.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_17.html


(please click the above link to continue reading)





 சிகர = சிகரங்கள், மலைகள் 


 வண்குடுமி = உயர்ந்த உச்சி, மலை உச்சி 


நெடு வரை = நீண்ட மலைகள் 


எவையும் = அனைத்தும் 


ஒரு வழித்திரண்டன சிவண, = ஓரிடத்தில் சேர்ந்தது போல 


மகரிகை = மீன் வடிவாய் அமைந்த ஆபரணங்கள் 


வயிரகுண்டலம் = வயிரத்தால் அமைந்த காதில் அணியும் குண்டலம் 


அலம்பும் = அசையும் 


திண்திறல் தோள் புடை = புடைத்த, உறுதியான தோள்களில் 


வயங்க = விளங்க 


சகர நீர் வேலை  = சகர புத்திரர்கள் தோண்டியதால் உண்டானது சாகரம். கடல். அந்த கடல் நீரில் 


தழுவிய கதிரின் = பிரதிபலிக்கும் சூரிய ஒளி 


தலைதொறும்தலைதொறும்  = ஒவ்வொரு தலையிலும் 


தயங்கும் = விளங்கும் 


வகைய = விளங்கும் 


பல் மகுடம் = பல மகுடங்கள் (பத்து) 


இள வெயில் எறிப்ப, = இளமையான வெயில் (மாலை நேரமாக இருக்கும்) 


கங்குலும்பகல்பட, வந்தான். = இரவு கூட பகல் போல் வெளிச்சமாக தோன்றும் படி வந்தான். 


என்ன ஒரு buildup.


கடலுக்கு சாகரம் என்று ஒரு பெயர் உண்டு. 


சகர புத்திரர்கள் தோண்டியதால் அதற்கு சாகரம் என்று பெயர்.


அந்தக் கதையை இங்கே காணலாம். 


https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2014/oct/31/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-1004451.html





Saturday, October 16, 2021

நாலடியார் - பாற்கூழை மூழை சுவையுணராது

நாலடியார் -  பாற்கூழை மூழை சுவையுணராது 


சிலருக்கு எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்மறையான ஒன்றைச் சொன்னால்தான் ஒரு திருப்தி. சொல்பவர் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய கருத்தாக இருந்தாலும், தங்கள் மேதா விலாசத்தை காட்டாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது.


"வள்ளுவர் தவறாக சொல்லி விட்டார்" 


"கம்பர் பாட்டில் பிழை"


என்று ஏதாவது இடக்கு மடக்காக சொன்னால்தான் தாங்கள் அறிவாளிகள் என்று மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது அவர்கள் எண்ணம். 


பெரியவர்கள், தங்களுக்குத் தெரிந்த உண்மைகளை தாங்களே வைத்துக் கொண்டிருக்கலாம். வருங்கால சந்ததிக்கு பயன் படட்டுமே என்று நம் மேல் உள்ள அன்பினால், அருளினால் அவர்கள் கண்ட அறங்களை நமக்குச் சொல்லி விட்டுப் போனார்கள். 


அதை நன்றி உணர்வோடு ஏற்றுக் கொள்வதுதான் அவர்களுக்கு செய்யும் கைம்மாறு. 


சிலருக்கு அது புரிவதே இல்லை. 


அண்டா நிறைய பால் பாயசம் இருக்கும். பாலும், முந்திரி பருப்பும், நெய்யும்,  சர்க்கரையும் இட்டு சுவையாக செய்த பால் பாயசம். அதை முகந்து பரிமாற அந்த அண்டாவில் ஒரு கரண்டி போட்டு இருப்பார்கள். அந்தக் கரண்டி முழுக்க முழுக்க பால் பாயசதுக்குள்தான் மூழ்கிக் கிடக்கும். 


என்ன பயன். கரண்டிக்கு பாயசத்தின் சுவை தெரியுமா?


அது போல, சிலர் எவ்வளவு படித்தாலும், படித்தவை உணர்வில் ஒட்டாது. அது மட்டும் அல்ல, படித்ததை புரியாமல் இகழவும் செய்வார்கள். தங்கள் நிலைக்கு உயர்ந்த புத்தகங்களை கீழ் இறக்கி விடுவார்கள். 


பாடல் 



அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்

பொருளாகக் கொள்வர் புலவர்; -பொருளல்லா

ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை

மூழை சுவையுணரா தாங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_29.html


(Pl click the above link to continue reading)


அருளின் = அருளினால் 


அறமுரைக்கும் = அறத்தினை எடுத்து உரைக்கும் 


 அன்புடையார் = அன்புடைய சான்றோர்களின் 


 வாய்ச்சொல் = வாயில் பிறந்த சொல்லை 


பொருளாகக் கொள்வர் புலவர்; = பெரிய மதிப்பு மிக்க பொருளாகக் கொள்வர் அறிவுடையோர் 


பொருளல்லா = பொருள் புரியாத


ஏழை = பேதை 


அதனை இகழ்ந்துரைக்கும் = அந்த அறங்களை பழித்துக் கூறும் 


பாற்கூழை = பால் பாயசத்தை 


மூழை = கரண்டி 


சுவையுணரா தாங்கு. = சுவை உணராதது போல 


பிறன் மனை நோக்கா பேராண்மை என்கிறார் வள்ளுவர். 


ஏன், மற்றவன் மனைவியைப் பார்த்தால் என்ன? அவளுக்கும் பிடித்து இருந்தால், பார்ப்பதில் என்ன தப்பு? ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் முட்டாள்தனம் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். 


அப்படி இல்லை என்றால், "வள்ளுவருக்கு என்ன சொல்லுவாரு...அதெல்லாம் நடை முறையில் சாத்தியம் இல்லை. அவருக்கு அதெல்லாம் எங்க தெரியப் போகுது" என்று வள்ளுவரின் அறிவை இவர்கள் எடை போடுவார்கள். 


பாற்கூழை சுவை உணரா மூழைகள். 


பாரதியார் சொல்வார், தேன் குடத்தில் இட்ட அகப்பைகள் என்று. 




திருக்குறள் - அடைக்கும் தாழ்

 திருக்குறள் - அடைக்கும் தாழ் 


அழுவது என்பது ஒரு பலகீனம் என்று ஒரு எண்ணம் பரவலாக உண்டு. 


ஆண் என்றால் எது வந்தாலும் அழக் கூடாது. பெண் என்றால் எதற்கு எடுத்தாலும் அழலாம் என்று ஒரு கோட்பாடு நம் மத்தியில் உலவுகிறது. 


சிறு வயதில் பையன்கள் அழுதால், "என்னடா இது பொம்பள புள்ளை மாதிரி அழுகிற" என்று கேலி பேசுவார்கள். அப்படி சொல்லி சொல்லி ஆண்கள் அழக் கூடாது. அது ஆண்மைக்கு அழகு அல்ல என்று செய்து விட்டோம். அப்படி சொல்லி சொல்லி வளர்த்து அவர்களை முரடர்களாக்கி விட்டோம். 


கண்ணீர் என்பது உணர்வின் வெளிப்பாடு. அது துக்கத்தில் வரும், அளவு கடந்த மகிழ்ச்சியில் வரும், எதிர் பாராத ஆச்சரியத்தில் வரும், மிக இனிமையான இசையைக் கேட்டால் வரும், பக்தியில் வரும், பிறர் துன்பம் கண்டு வரும். 


வள்ளுவர் கூறுகிறார், "கண்ணீர் அன்பின் வெளிப்பாடு. அன்பு கொண்டவர்களுக்கு ஒரு துன்பம் வந்தால், உடனே நம் கண்ணில் நீர் வரும். ஐயோ பாவம் அவன்/அவள் எப்படி இதை தங்குகிரானோ/ளோ என்று மனதின் அடியில் இருந்து ஒரு கேவல் பிறக்கும். அதில் இருந்து வரும் கண்ணீர் , மனதில் உள்ள அன்பை காட்டிவிடும். அதை அடைத்து வைக்க முடியாது" என்கிறார். 


பாடல் 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_16.html


(Please click the above link to continue reading)



அன்பிற்கும் உண்டோ  = அன்பிற்கு உண்டா 


அடைக்கும்தாழ் = அடைத்து வைக்கும் தாழ்பாள் (இல்லை) 


ஆர்வலர் = மிகுந்த அன்பு கொண்டவர் 


புன் = துன்பம் கண்டு பிறக்கும் 


கணீர் = கண்ணீர் 


பூசல் தரும் = ஆராவரம் தரும். அறிவிக்கும் 


ஒருவர் மேல் செலுத்தும் அன்பு அதிகமானால் அதற்கு ஆர்வம் என்று பெயர். 


"அன்பீனும் ஆர்வம் உடைமை அது ஈனும் நண்பெனும் நாடாச் சிறப்பு " - குறள் 


அளவு கடந்த அன்பு. தாய்க்கு பிள்ளை மேல் உள்ள அன்பு போல, சில அழ்ந்த நட்பு போல்...ஆர்வம் உண்டானால் அதற்கு ஆர்வம் என்று பெயர். 


யார் மேல் ஆர்வம் உள்ளதோ, அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால், நமக்கு கண்ணீர் வரும். அதை அடைத்து வைக்க முடியாது. 


உண்மையான அன்புக்கு அடையாளம், கண்ணீர். 


அன்பின் அடையாளம் கூறப்பட்டது. 


மேலும் சிந்திப்போம். 




Friday, October 15, 2021

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி - ஆறாக் காமக் கொடியகனல்

 திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி - ஆறாக் காமக் கொடியகனல்


எந்தத் தீயும் சிறிது நாளில் ஆறிவிடும். பெரிய பெரிய எரிமலை கூட வெடித்துச் சிதறி, நெருப்பைக் கக்கினாலும், சில பல மாதங்களில் குளிர்ந்து விடும். 


என்றும் ஆறாத கனல் என்பது காமக் கனல்தான். உடல் உள்ள அளவும், உயிர் உள்ள அளவும் எரிந்து கொண்டே இருக்கும் கனல் அது.


ஏன் அப்படி எரிகிறது? தொடர்ந்து எரிய வேண்டும் என்றால், யாரவது அதில் மேலும் மேலும் எரியும் பொருட்களைப் போட வேண்டும், ஊதி விட வேண்டும் அல்லவா?


ஐந்து புலன்களும் அந்தக் காமக் கனலை அணையவிடாமல் பார்த்துக் கொள்கின்றன. 


பார்வையில் காமம், தொட்டால் சுகம், கேட்டால் இனிமை, அருகில் சென்றால் மணம் காமத்தைத் தூண்டும்...ஐந்து புலன்களும் காமம் என்ற தீ அணைந்து விடாமல் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. 


இப்படி ஒரு தீ எரிந்து கொண்டே இருந்தால், அந்த உடம்புதான் என்ன ஆகும். எரிந்து சாம்பலாகிப் போய் விடும் அல்லவா? அப்படி வெந்து நீராகாமல், காம உணர்வுகளை அகற்றி, உன்னை நினைக்கும் அருள் தந்து, என்னைக் காத்தாய் என்று திருக்கருவை என்ற ஊரில் உறையும் சிவ பெருமானே என்று அதி வீர ராம பாண்டியர் பாடுகிறார். 



பாடல் 


ஆறாக் காமக் கொடியகனல்

        ஐவர் மூட்ட அவலமனம்

    நீறாய் வெந்து கிடப்மேனை,

        நின்தாள் வழுத்த நினைவுதந்து

    மாறா நேயத் திரவுபகல்

        மறவா திருக்க வரமளித்தாய் ;

    சீறா டரவம் முடித்தசடைக்

        கருவை வாழும் செழுஞ்சுடரே !


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_15.html


(Pl click the above link to continue reading)


ஆறாக் = தீராத, அணையாத 


காமக்  = காமம் என்ற 


கொடியகனல் = கொடிய தீயை 


ஐவர் = ஐந்து புலன்களும் 


மூட்ட = பற்ற வைக்க 


அவலமனம் = கீழான மனம் 


நீறாய் = சாம்பலாய் 


வெந்து கிடப்மேனை, = வெந்து கிடக்கும் என்னை 


நின்தாள்  = உன் திருவடிகளை 


வழுத்த = போற்றும் படி, வணங்கும் படி 


 நினைவுதந்து = நினைவு தந்து 


மாறா நேயத் = மாறாத அன்பினால் 


திரவுபகல் = இரவும் பகலும் 


மறவா திருக்க வரமளித்தாய் ; = மறவாமல் இருக்க வரம் அளித்தாய் 


சீறா டரவம் = சீரும் அரவத்தை (பாம்பை) 


 முடித்தசடைக் = முடித்த சடையில் கொண்ட 


கருவை = திருக்கருவை என்ற தலத்தில் 


வாழும் செழுஞ்சுடரே ! = எழுந்து அருளி இருக்கும் உயர்ந்த சுடரே, ஒளியே 


காமத்தில் இருந்து நாமே எங்கு வெளி வருவது.


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் அருளியது போல, காமத்தை மாற்றி அவனை நினைக்க அவன் தான் அருள் புரிய வேண்டும். 


மேலும், அதிவீரராம பாண்டியர் கூறுகிறார்,  ஒரு தீய எண்ணம் போக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? அதை மாற்ற முடியாது. அதோடு போராட முடியாது. தீய எண்ணங்களை மாற்ற எளிய வழி நல்லதை நினைப்பதே. 


whatsapp பார்க்கக் கூடாது என்று நினைத்தால் முடியாது. மனம் அங்கு தான் போகும். அதற்குப் பதில் நல்லதை எதையாவது படிக்க வேண்டும். மனம் நல்லதில் போகும். 


தவறான இடத்துக்குப் போகக் கூடாது என்று சொன்னால் மனம் கேட்காது. அந்த நேரத்தில் கோவிலுக்குப் போய் விட வேண்டும். 


காம எண்ணம் வருகிறதா, அது தவறு என்று தெரிந்தால், அதை மாற்ற மனதை வேறொன்றின் மேல் செலுத்த வேண்டும். 


இதை யோக சாத்திரத்தில் ப்ரத்யாகாரம் என்று சொல்லுவார்கள். 


மனதை மடை மாற்றும் வேலை.


மிக எளிய பாடல்கள் . 


நூறு பாடல்கள் பாடி அருளி இருக்கிறார். 


மூல நூலை படித்துப் பாருங்கள். 


Thursday, October 14, 2021

திருக்குறள் - அன்புடைமை - ஒரு முன்னோட்டம்

திருக்குறள் - அன்புடைமை - ஒரு முன்னோட்டம் 


வாழ்வின் நோக்கம் அன்பின் விரிவாக்கம். 


அவ்வளவுதான். 


எப்படி பார்த்தாலும், அடிப்படை அன்பு மேலும் மேலும் விரிந்து கொண்டே போவதுதான் நோக்கம். 


குழந்தையாக, சிறுவனாக இருக்கும் போது, அதன்  அன்பு எல்லாம் தன் மேலேயே இருக்கிறது. எல்லாம் தனக்கு வேண்டும் என்று குழந்தை நினைக்கும். 


வளர்ந்து, திருமணம் ஆன பின், தனக்கென்று ஒருத்தி (வன்) வந்த பின், அவள் மேல் அன்பு பிறக்கிறது. அவளுக்கு பிடிக்கும் என்று சிலவற்றை செய்கிறான். அவளுக்கென்று நேரம் ஒதுக்குக்கிறான். 


ஆனால், கணவன் மனைவி அன்பு பரிமாற்றத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அவள் எனக்கு இன்பம் தருகிறாள், எனக்கு உதவி செய்கிறாள் எனவே நான் அவள் மேல் அன்பு செய்கிறேன் என்று அன்பு செலுத்துவதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. 


பிள்ளை வந்த பின் அந்த அன்பு மேலும் விரிகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிள்ளை மேல் அன்பு பிறக்கிறது. பிள்ளையை பார்க்கும் போது அன்பு, அது பேசும் போது, அதை தழுவிக் கொள்ளும் போது இன்பம் பிறக்கிறது. அன்பு வருகிறது. 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_14.html


(Please click the above link to continue reading)



இல்வாழ்க்கை, 

வாழ்க்கைத் துணைநலம், 

புதல்வர்களைப் பெறுதல் 


என்று மூன்று அதிகாரங்களை பார்த்தோம்.


அடுத்தது, அன்பு, குடும்பத்தைத் தாண்டி, சமுயாத்தின் மேலும் பரவுகிறது. தன் பிள்ளையை போல் மற்ற பிள்ளைகள் மேலும் அன்பு பிறக்கும். அடுத்த வீட்டுக் காரன், அயல் வீட்டுக் காரன், நட்பு, சுற்றம் என்று அன்பு மேலும் விரிகிறது. 


பிள்ளை வந்த பின் தான் அன்பு என்றால் என்ன என்றே ஒருவனுக்கு புலப்படுகிறது.  அந்த அன்பு சமுதாயத்தின் மேலும் விரியும். 


எனவே அடுத்த அதிகாரம் 


"அன்புடைமை"


அன்பு அருளாக வேண்டும். 


தொடர்புடையார் மாட்டு செய்வது அன்பு. 


தொடர்பிலார் மாட்டும் செய்வது அருள். 


அன்பு அருளாக வேண்டும். 


இனி, அன்புடைமை பற்றி காண இருக்கிறோம். 



Wednesday, October 13, 2021

திருவருட்பா - நான் ஏன் பிறந்தேன் ?

திருவருட்பா - நான் ஏன் பிறந்தேன் ?


சின்னக் கேள்வி. விடை தெரியுமா?


ஏன் பிறந்தோம், எதற்குப் பிறந்தோம், என்ன சாதிக்கப் பிறந்தோம், பிறந்ததின் நோக்கம் என்ன? 


தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசை இல்லை. 


வள்ளலார், விடை காணாமால் தவிக்கிறார். 


எல்லாம் வல்ல இறைவன், ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் என்னைப் படைத்து இருக்க வேண்டும். காரணம் இல்லாமல் அவன் எதையும் செய்ய மாட்டான். அப்படியானால், என்னை ஏன் படைத்தான் என்று விடை காணாமல் தவிக்கிறார். 


"ஒரு சின்னக் குழந்தை. நடக்கும் பருவம் வரவில்லை. தவழும். திடீரென்று மின்சாரம் போய் விடுகிறது. அருகில் யாரும் இல்லை. அந்தக் குழந்தை என்ன செய்யும். பயத்தில் அழும். வேறு என்ன செய்ய முடியும்? 


அந்தக் குழந்தையை விட சிறியவனாக இருக்கிறேன். இந்த அஞ்ஞான இருளில் கிடந்து தவிக்கிறேன். இருள் மட்டும் அல்ல, கரை காண முடியாத கடலில் கிடந்து தவிக்கிறேன். ஏதோ இப்ப கப்பல் உடைந்து கடலில் விழவில்லை. பல காலமாய் இந்தக் கடலில் கிடக்கிறேன். கடலில் தவிக்கும் திரும்பு போல கிடக்கிறேன். எத்தனையோ கொடுமைகள் எல்லாம் செய்து விட்டேன். நான் எதற்காகப் பிறந்தேன் என்று சொல்வாய்" என்று இறைவனை நோக்கிப் பிரார்த்திக்கிறார். 


பாடல் 


 விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது

விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்

அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்

அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்

கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்

கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்

களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ

கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_13.html


(Click the above link to continue reading)



விளக்கறியா = விளக்கு எங்கு இருக்கிறது, சுவிச் எங்கு இருக்கிறது என்று அறியாத 


இருட்டறையில் = இருண்ட அறையில் 


கவிழ்ந்துகிடந் தழுது விம்முகின்ற = கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற 


 குழவியினும் = குழந்தையை விட 


மிகப்பெரிதும் சிறியேன் = ரொம்ப ரொம்ப சிறியவன் 


அளக்கறியாத் = அளவிட முடியாத 


துயர்க்கடலில் = துயரம் என்ற கடலில் 


விழுந்துநெடுங் காலம்  = விழுந்து, நெடுங் காலம் 


அலைந்தலைந்து = அலைந்து அலைந்து 


மெலிந்த = மெலிந்த 


துரும் பதனின் = துரும்பை விட 


மிகத் துரும்பேன் = கீழான துரும்பானேன் 


கிளக்கறியாக்  = சொல்ல முடியாத 


கொடுமை எலாம் = கொடுமைகள் எல்லாம் 


கிளைத்த = விளைந்த 


பழு மரத்தேன் = பழுத்த மரம் போன்றவன் 


கெடுமதியேன் = கெட்ட மதி கொண்டவன் 


கடுமையினேன் = கடுமையானவன் 


கிறிபேசும் = பொய் பேசும் 


வெறியேன் = வெறி கொண்டவன் 


களக்கறியாப் = குற்றம் அற்ற 


புவியிடை = பூமியில் 


நான் ஏன் பிறந்தேன்  = நான் ஏன் பிறந்தேன் 


அந்தோ = ஐயோ 


கருணை = கருணை உள்ள 


நடத் தரசே = நடனத்துக்கு அரசனே (நடராஜன்) 


நின் கருத்தைஅறி யேனே. = உன் கருத்தை நான் அறிய மாட்டேனே 



ஒரு வரி பட்டினத்தாரை மாற்றியது.


ஒரே ஒரு கேள்வி போதும், வாழ்கையின் திசையை மாற்ற.