Friday, September 11, 2020

பெரிய புராணம் - நம்பர் அருளாமை யினால்

பெரிய புராணம் - நம்பர் அருளாமை யினால்


நம்மை அறியாமலேயே நாம் பல தவறுகளை செய்து விடுகிறோம்.

செய்யும் போது அது தவறு என்று தெரிவதில்லை.

பின்னாளில், ஐயோ, இப்படி தவறு நிகழ்ந்து விட்டதே என்று நினைந்து வருந்தி இருக்கிறோம்.

இப்போது நாம் செய்து கொண்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் சரியானவைதானா? நாளை, இன்று நாம் செய்கின்ற காரியங்கள் தவறானது என்று நினைத்து வருந்த மாட்டோம் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது.

பின், எப்படித்தான் சரியான பாதையை தேர்ந்து எடுத்து அதில் செல்வது?

இந்தக் குழப்பம் நமக்கு மட்டும் அல்ல...மிகப் பெரியவர்கள் வாழ்விலும் நிகழ்ந்து இருக்கிறது.

திருநாவுக்கரசர், இளம் வயதில், சைவ சமயத்தை துறந்து, சமண சமயத்தில் சேர்ந்தார். சேர்ந்தது மட்டும் அல்ல, சைவ நிந்தனை, சிவ நிந்தனை போன்றவற்றையும் செய்தார்.

ஏன்? ஏன் அப்படி ஒரு தவறான பாதையில் போனார்?

சேக்கிழார் பெருமான் சொல்கிறார்

"இறைவன் அருள் இன்மையால்"

இறைவன் அருள் இல்லாததால், நல்ல பாதையை விட்டு தவறான பாதையில் சென்றார் என்று.

பாடல்

நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்று அறத் துறந்து சமயங்கள் ஆன வற்றின்
நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமை யினால்
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்.


பொருள்


நில்லாத = நிலை இல்லாத

உலகு = உலகின்

இயல்பு கண்டு = இயல்பினை உணர்ந்து

நிலையா = நிலையற்ற

வாழ்க்கை = வாழ்க்கையை

அல்லேன் என்று = பற்றி வாழ்தல் சரி அல்ல என்று

அறத் துறந்து = முற்றுமாக  துறந்து

சமயங்கள் ஆன வற்றின் = உள்ள சமயங்களில்

நல் ஆறு தெரிந்து = சரியான வழி தெரிந்து

உணர = உணர்ந்து கொள்ள

நம்பர் அருளாமை யினால்  = இறைவன் அருளாமையால்

கொல்லாமை = கொல்லாமை

மறைந்து  உறையும் = அதன் பின் மறைந்து வாழும்

அமண் சமயம் குறுகுவார். = சமண சமயத்தை சென்று அடைந்தார் (நாவுக்கரசர்)

சில பேரிடம் ஒரு சில நல்ல குணங்கள் இருக்கும். நாம் அவற்றால் கவரப் பட்டு  அவர்கள்பால் ஈர்க்கப் படுவோம். அவர்களோடு பழகிய பின்னால் தான் தெரியும் அவர்களிடம் உள்ள மற்ற தீய குணங்கள் என்னென்ன என்று.

வேறு வழி இல்லாமல் அவர்களிடம் மாட்டிக் கொள்வோம்.

அது போல சமண சமயம், கொல்லாமை என்ற ஒரு நல்ல குணத்தின் பின்னால் பல  தீய செயல்களை செய்து வந்தது. ஆனால், வெளியில் இருந்து பார்பவர்களுக்குத் தெரியாது.  நாவுக்கரசரும், அது தெரியாமல் அந்த சமயத்தில் சென்று  சேர்ந்தார்.

சொல்ல வந்த செய்தி இதுதான்...

இறைவன் அருள் இல்லாவிட்டால், எவ்வளவு அறிவு இருந்தாலும் வழி தவறிச் செல்ல  வாய்ப்பு இருக்கிறது.

நாவுக்கு அரசர், அவ்வளவு படித்தவர். தடம் மாறிப் போனார். காரணம், இறை அருள் இன்மை.

எவ்வளவோ படித்தவர்கள், அறிவாளிகள் பெரிய பெரிய தவறு செய்கிறார்கள். காரணம் இறை அருள் இன்மை என்கிறார் சேக்கிழார்.




2 comments:

  1. இறை அருள் இருக்க வேண்டியதின் அவசியத்தை நல்ல உதாரணத்துடன் எடுத்து கூறினீர்கள்.நன்றி

    ReplyDelete
  2. "சமண சமயம், கொல்லாமை என்ற ஒரு நல்ல குணத்தின் பின்னால் பல தீய செயல்களை செய்து வந்தது" - Really???

    ReplyDelete