Sunday, October 31, 2021

நான்மணிக்கடிகை - கெட்டறிப கேளிரான் ஆய பயன்

நான்மணிக்கடிகை - கெட்டறிப கேளிரான் ஆய பயன்


யார் உறவு, யார் உறவு அல்லாதார் என்று நமக்கு ஒரு துன்பம் வரும் போதுதான் தெரியும். 


நன்றாக இருக்கும் காலத்தில் எல்லோரும் நட்பாக உறவாக இருப்பார்கள். துன்பம் வந்தால், எங்கே நம்மிடம் ஏதாவது கேட்டு விடுவானோ என்று எண்ணி மெதுவாக நகன்று விடுவார்கள். 


அதிலும் ஒரு நன்மை இருக்கிறது. உண்மையான உறவும் நட்பும் அப்போதுதான் தெரியும். 


உலகில் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. 


நவமணிகளின் தரம் அறிய அவற்றை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஒரு குதிரை எப்படி இருக்கிறது என்று அறிய அதன் மேல் சேணம் அமைத்து, ஓட்டிப் பார்த்து அறியலாம். பொன் எவ்வளவு உயர்ந்தது என்று அறிய அதை உருக்கிப் பார்க்க வேண்டும். உறவினர்களின் தரம் நாம் துன்பத்தில் இருக்கும் போது தெரியும். 


பாடல் 


மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து

எறிய பின்னறிப மாநலம் மாசறச்

சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப

கேளிரான் ஆய பயன்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_31.html


(Please click the above link to continue reading)



மண்ணி யறிப மணிநலம்  = கழுவி சுத்தம் செய்து அறிக நவமணிகளின் தரத்தை 


பண்ணமைத்து = சேணம் கடிவாளம் இவற்றை அமைத்து 

எறிய = ஏறி அமர்ந்த 


பின்னறிப = பின்னால் அறிக 


மாநலம் = குதிரையின் தரம் 


மாசறச் = குற்றமற்ற 


சுட்டறிப = உருக்கி அறிக 


பொன்னின் நலங்காண்பார் = தங்கத்தின் தன்மை அறிய வேண்டுபவர் 


கெட்டறிப = கெட்ட பின், அதாவது துன்பம் வந்த காலத்து அறிக 


கேளிரான் ஆய பயன் = உறவினர்களால் உண்டாகும் பயன். 



நல்ல நாளில் நமக்கும் உறவின் அருமை தெரியாது. 


உடம்புக்கு முடியவில்லை என்று படுத்துக் கொண்டால் கணவன் அல்லது மனைவியின் அருமை அப்போது தான் தெரியும். மத்த நாளில் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். உடம்புக்கு முடியவில்லை என்றால் தான் ஒருவரின் அருமை மற்றவருக்குத் தெரியும். 


அது  இரண்டு விதத்திலும் தெரியும். 


உருக்கமாக கவனித்துக் கொண்டால் அருமை தெரியும். 


கண்டு கொள்ளாமல் இருந்தால்,அது அவ்வளவுதான் என்று தெரியும். 


எப்படி என்றாலும் உறவின் தரம் துன்பத்தில் தெரியும். 


இதையே வள்ளுவரும்,


"கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்" என்றார். 


கெடுதலிலும் ஒரு நன்மை இருக்கிறது. அது உறவினர்களை அளக்கும் ஒரு அளவு கோல் என்றார். 



1 comment:

  1. "Fair-weather friends" என்ற ஆங்கில வழக்கு நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete