Thursday, January 31, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - நான் பெற்ற செல்வம்



இராமானுஜர் நூற்றந்தாதி -  நான் பெற்ற செல்வம் 


இறைவன் பெரியவனா அடியார்கள் பெரியவர்களா என்றால் எல்லா மதமும் அடியவர்கள் தான் என்று கூறும் 


பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்  என்பார் அபிராமி பட்டர்.

போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ... என்பார் நாவுக்கரசர். மலரோடு நீர் சுமந்து போவார்கள், அவர்கள் பின் நான் செல்லும் சுவடே தெரியாமல் நானும் செல்வேன் என்கிறார் நாவுக்கரசர். 

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே

மற்ற மதங்களை காட்டிலும் வைணவம் ஒரு படி மேலே. அடியவர்களையும் ஆசாரியர்களையும் அது மிகவும் கொண்டாடுகிறது. 

அமுதனார் கூறுகிறார், இராமானுஜர் எனக்கு கிடைத்த செல்வம். எனக்குத் தெரியும், ஆண்டவனை விட்டு விட்டு இப்படி இந்த இராமானுஜர் பின்னாலேயே நான் சென்று அவரே கதி என்று கிடப்பதால், அவரைப் பற்றிய  இந்த அந்தாதியை கூட இந்த உலகத்தவர்கள் குறை சொல்லக் கூடும். அந்த குறை கூட எனக்கு புகழ் தான், சந்தோஷம் தான்...ஏன் என்றால் குறை எல்லாம் ஆண்டவனை விடுத்து இராமானுஜரை புகழ்வதை பற்றித்தான் ...இது ஒரு குறையா ? இதை விட எனக்கு வேறு என்ன பாராட்டு இருக்க முடியும் ....உண்மையான பக்தர்களுக்கு என் பாடல் புரியும்..அவர்கள் இதில் குற்றம் காண மாட்டார்கள்....
பாடல் 

எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.

பொருள் 

Wednesday, January 30, 2013

இராமாயணம் - இராமாயாணத்தில் பிழை செய்தவர்கள்


இராமாயணம் - இராமாயாணத்தில் பிழை செய்தவர்கள்


நண்பர்களின் பிள்ளைகளிடம் நாம் எவ்வளவு தூரம் உரிமை எதுத்துக் கொள்ள முடியும் ?

அதிகமாக இருமை எடுத்துக் கொண்டால் முதலில் நண்பர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா ? அடுத்து அவர்களின் பிள்ளைகள் ஏற்றுக் கொள்வார்களா ?

நண்பர்களின் பிள்ளைகளை நம் பிள்ளைகள் போல் நினைத்து அவர்களை திருத்தவோ, பாராட்டவோ செய்வது என்றால் நண்பர்களுக்கு இடையே முதலில் அன்யோன்யம் வேண்டும். 

தசரதனின் நண்பன் ஜடாயு. 

சீதைக்காக, தசரதனின் மருமகளுக்காக சண்டையிட்டு உயிர் விடும் தருணத்தில் இருக்கிறான். 

இராமனும் லக்ஷ்மணனும் ஜடாயுவைப் பார்க்கிறார்கள். ஜடாயுவை தாக்கிய இராவணன் மீது இராமனுக்கு கோவம் வருகிறது. 

அப்போது ஜடாயு சொல்லுவான்....

"...ஏண்டா இராமா, ஒரு பெண்ணை தனியாக காட்டில் வைத்து விட்டு மானைப் பிடிக்கிறேன் என்று இரண்டு  பேரும் கிளம்பி விட்டீர்கள்...அப்படி ஒரு பெண்ணை தனியாக விட்டு விட்டுச் செல்வது எவ்வளவு பெரிய பிழை ? தப்பு எல்லாம் உங்க பேர்ல ... நீங்க என்னடாவென்றால் மற்றவர்கள் மேல் பிழை காண்கிறீர்கள் .."

என்று அவர்கள் மேல் உரிமையுடன் கோவித்துக் கொள்கிறான்.

இராமன் பிழை செய்தான் என்று சொல்லவும் ஒரு உரிமை வேண்டுமே ?

பாடல் 


வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக,
கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டீர்;
அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை,
உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ?

பொருள் 

திருவாசகம் - சாமாறே விரைகின்றேன்


திருவாசகம் - சாமாறே விரைகின்றேன்  


நாம் பிறந்தது முதல் இறப்பது வரை நடப்பதை எல்லாம் ஒரு மூவி கேமராவில் பதிவு செய்து அதை fast forward இல் ஒரு பதினைந்து நிமிடத்திற்கு வரும் படி எடிட் பண்ணி போட்டு பார்த்தால் எப்படி இருக்கும்? 

ஏதோ பிறந்த குழந்தை கிடு கிடு என்று வளர்ந்து, அங்க இங்க ஓடி கடைசியில் சுடுகாட்டில் குழிக்குள் செல்வது போல இருக்கும். 

இன்னும் கொஞ்சம் fast forward பண்ணினால் பிறந்தவுடன் நேரே ஓடிப் போய் இடு காட்டு குழிக்குள் இறங்குவது போல இருக்கும்.

மாணிக்க வாசகர் இந்த உலக வாழ்க்கையை சற்று தள்ளி நின்று பார்க்கிறார். 

எதுக்கு எந்த ஓட்டம் ? 

இடு காட்டுக்கு போக ஏன் இத்தனை பரபரப்பு ?

கருவறை தொடங்கி கல்லறை வரை ஒரே ஓட்டம் தான். "சாமாறே விரைகின்றேன்" என்றார். சாவதற்காக இவ்வளவு விரைவாக சென்று கொண்டு இருக்கின்றேன் என்று தன்னை சொல்லிக் கொள்கிறார்.
 
 
இந்த இடைப்பட்ட நேரத்தில் இறைவனை பற்றி சிந்திக்காமல் வாழ்க்கையை வீணாக்கி கொண்டு இருக்கிறோமே என்று வருத்தப் படுகிறார்...
 
ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன்
பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர்
கோமான்நின் திருக்கோயில் தூகேன்மெழுகேன் கூத்தாடேன்
சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே.

 
பொருள் 

புறப் பொருள் வெண்பா மாலை - பெண்ணின் காதல் படிகள்


புறப் பொருள் வெண்பா மாலை - பெண்ணின் காதல் படிகள் 


காதல் பெண்ணையும் விடுவது இல்லை.

பெண்ணின் காதல் எப்படி எல்லாம் உருப்பெறுகிறது என்று பார்ப்போம்.

பாடல்

காண்டல் , நயத்தல் , உட்கோள் , மெலிதல்,
மெலிவொடு வைகல் , காண்டல் வலித்தல்,
பகல் முனிவு உரைத்தல் , இரவு நீடு பருவரல்,
கனவின் அரற்றல் , நெஞ்சொடு மெலிதல்,
பெண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்.

பொருள்


Tuesday, January 29, 2013

புறப்பொருள் வெண்பா மாலை - ஆணின் காதல் படிகள்


புறப்பொருள் வெண்பா மாலை - ஆணின் காதல் படிகள் 

அந்த காலத்தில் (இப்ப மட்டும் என்ன வாழுகிறதாம்) ஒரு காதலன் அவனுடைய காதலியின் மேல் கொண்ட காதல் எப்படி படிப் படியாக வளருகிறது என்று காட்டுகிறது புறப் பொருள் வெண்பா மாலை. 

முதலில் பாடல்...பின்னால் பொருளை பார்ப்போம் 

காட்சி , ஐயம் , துணிவே, உட்கோள்,
பயந்தோர்ப் பழிச்சல் , நலம் பாராட்டல்,
நயப்பு உற்று இரங்கல் , புணரா இரக்கம் ,
வெளிப்பட இரத்தல் ,என இவ் ஒன்பதும்
ஆண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்.

பொருள் 

நளவெண்பா - மை புகுந்த கண்ணீர்


நளவெண்பா - மை புகுந்த கண்ணீர் 


நளனும் தமயந்தியும் காட்டு வழி செல்கின்றார்கள். நாடிழந்து, செல்வம் எல்லாம் இழந்து செல்கின்றார்கள். 

இரவு வந்து விட்டது. இருவரும் ஒரு பாழடைந்த மண்டபத்தில் தூங்குகிறார்கள். 

தூக்கம் வரவில்லை. முதலில் நளன் எழுந்திரிக்கிறான். தமயந்தி உறங்குவது போல் பாவனை செய்கிறாள். நளன் அவளைப் பார்த்து வருத்தம் அடைகிறான். பின் அவன் படுத்துக் கொள்கிறான். தமயந்தி எழுதிரிக்கிறாள். நளன் உறங்குவததைப் பார்க்கிறாள். 

எவ்வளவு பெரிய சக்ரவர்த்தி. எப்படி அம்ச துளிகா மஞ்சத்தில் படுத்து உறங்க வேண்டியவர்...இப்படி வெறும் தரையில் படுத்து உறங்குகிறாரே என்று வருந்துகிறாள். ...அவர் தலைக்கு வைத்து படுக்க என் முந்தானை கூட இல்லை என்று கவலை பட்டு தன் கையையை அவனின் தலைக்கு  கீழே வைக்கிறாள்...கொஞ்ச நேரத்தில் அதுவும் அவனுக்கு சுகமாய் இல்லை என்று உணர்ந்து அவன் தலையயை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொள்கிறாள்...அவனின் துன்பத்தைப் பார்த்து அவள் கண்ணில் நீர் வழிகிறது....

தன் துன்பத்தைக் கூட பார்க்காமல், அவனின் துன்பத்தை கண்டு அவள் கவலைப் படுகிறாள்....

மனதை உருக்கும் புகழேந்தியின் பாடல் ....

முன்றில்தனில் மேற்படுக்க முன்தா னையுமின்றி
இன்று துயில இறைவனுக்கே - என்றனது
கைபுகுந்த தென்னுடைய கால்புகுந்த தென்றழுதாள்
மைபுகுந்த கண்ணீர் வர.

பொருள் 

திருமந்திரம் - உடம்பைத் தழுவி



திருமந்திரம் - உடம்பைத் தழுவி 

சைவ மற்றும் வைணவ மதங்களுக்கு மடங்கள் உண்டு. 

ஸ்ரீ மடம், காஞ்சி மடம், திருவாவடுதுறை மடம், திருப்பனந்தாள் மடம் என்று நிறைய மடங்கள் உண்டு. 

இந்த மடங்களில் பொதுவாக சமயம் கோவில் நிர்வாகம், வரவு செலவு, சமய சொற்பொழிவுகள் முதலியவை நடக்கும். 

இங்கு மிகப் பெரிய நூலகங்கள் உண்டு. சமய சம்பந்தப் அறிய நூல்கள் இருக்கும். 

இந்த மடத்திற்குள் ஒரு நாய் புகுந்தால்  என்ன செய்யும்? 

நேரே நூலகத்திற்குப் போகும். படிக்கவா செய்யும்....அங்கும் இங்கும் சுத்தும்...முடிந்தால் இரண்டு குரை குரைக்கும்.

பின் அங்கிருந்து கணக்கு எழுதும் இடத்திற்கு போகும்...அங்கும் ஒரு குரை ..

இப்படி அங்கும் இங்கும் அலைந்த பின் வெளியே போகவும் வழி தெரியாமல்  அலைந்து கொண்டு இருக்கும்.

சிரிப்பாய் இருக்கிறது அல்லவா ? 

நீங்கள் மட்டும் என்ன ஒழுங்கு என்கிறார் திருமூலர், திரு மந்திரத்தில்

பிறக்கிறீர்கள், ஏதோ பள்ளிக் கூடம், கல்லூரி, வேலை, திருமணம், பிள்ளைகள், அது இது என்று திக்கு தெரியாமல் ஓடி கொண்டே இருக்கிறீர்கள்....

சாமாறே விரைகின்றேன் என்பார் மணிவாசகர் 

சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து,
ஏமாறிக் கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை?,
ஆமாறொன் றறியேன்நான் அரவணையாய். அம்மானே,
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.

என்பது பிரபந்தம். 

வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன ? எதற்கு வந்தோம் ? என்ன செய்கிறோம் ? என்று ஒன்றும் தெரியாமல் மடம் புகுந்த நாய் போல் அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருக்கிறோம். 

பாடல்:

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய் போல் மயங்குகிறாரே

பொருள் 


உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி = உடம்பும் உடம்பும் ஒன்றை ஒன்று தழுவி 

உடம்பிடை நின்ற உயிரை அறியார் = அந்த உடம்புகளுக்குள் இருக்கும் உயிரை யாரும் அறிய மாட்டார்கள்

உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார் = உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை அறியாதவர்கள்

மடம்புகு நாய் போல் மயங்குகிறாரே = மடத்திற்குள் புகுந்த நாய் போல அங்கும் இங்கும் நோக்கம் போல மயங்கி உழலுவார்கள்