Monday, September 30, 2013

அபிராமி அந்தாதி - செஞ்சேவகன் மெய்யடைய

அபிராமி அந்தாதி - செஞ்சேவகன் மெய்யடைய

யார் பெரியவர் ? 

சிவனா ? அபிராமியா ?

முப்புரங்களை எரிக்க தங்கத்தால் ஆன மேரு மலையை வில்லாகக் கொண்டு சண்டை போட்டு வென்றவரா அல்லது அப்பேர்பட்ட சிவனின் உடலில் பாதியை தன்னுடைய மார்பகத்தால் வென்ற அபிராமியா ?


தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.

பொருள்

தங்கச் சிலை கொண்டு = தங்கத்தால் ஆன மேரு மலையை வில்லாகக் கொண்டு 
தானவர் முப்புரம் சாய்த்து = அசுரர்களின் முப்புரங்களை சாய்த்து 

மத = மதம் கொண்ட 

வெங் கண் = சிவந்த கண்களை கொண்ட 
கரி = யானையின் 
உரி = தோலை உரித்து 
போர்த்த = மேலே போர்த்திக் கொண்ட 
செஞ்சேவகன் = சிவந்த மேனியை கொண்ட சேவகன் 
மெய்யடையக் = உடலில் பாதியை அடைய 

கொங்கைக் குரும்பைக் = குரும்பை போன்ற   கொங்களை 
குறியிட்ட நாயகி = குறியாகக் கொண்ட நாயகி 
கோகனகச் = பெரிய தங்கம் போன்ற 

செங் கைக் கரும்பும் = சிவந்த கையில் கரும்பும் 
மலரும் = மலரும் 
எப்போதும் என் சிந்தையதே. = எப்போதும் என் சிந்தையுள்ளே 

ஆண், வெளியே எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் , பெண்ணின் அழகின் முன்னால் அவன் தோற்றுத் தான் ஆக வேண்டும்.

அது பெண்ணுக்கு கிடைக்கும் மரியாதை 
ஆணுக்கு கிடைக்கும் கம்பீரம் 

மேருவை வில்லாக வளைத்த சிவனின் கதி அது என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம் ...



 

Sunday, September 29, 2013

குறுந்தொகை - மணந்த மார்பே

குறுந்தொகை - மணந்த மார்பே 


குறுந்தொகை போன்ற பாடல்களை படிக்கும் போது அவை எழுதப் பட்ட காலத்தையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாத காலம். சின்ன கிராமங்கள். விவசாயம் மட்டுமே பிரதானமாய் இருந்த காலம். ஊரை அடுத்து காடு இருக்கும். சில சமயம் காட்டில் இருந்து விலங்குகள் ஊருக்குள் வருவதும் உண்டு. 

அது ஒரு குளிர் காலம். முன் பனிக் காலம். பின்னிரவு நேரம். நிலவொளியில் ஊரே குளித்துக் கொண்டிருக்கிறது. குளிர் காற்று உயிரையும் சேர்த்து வருடிச் செல்லும் காலம். 
குளிர் மனிதர்களுக்கு மட்டும் அல்லவே. காட்டில் உள்ள மான்களையும் அது சென்று காதோரம் காதல் பேசி விட்டு செல்கிறது. குளிர் தாங்காமல் அவை மெல்ல மெல்ல அந்த கிராமத்துக்கு வருகின்றன. அங்குள்ள வயல்களில் உளுந்து விளைந்திருக்கிறது. அவற்றை அவை உண்ண நினைக்கின்றன. உணவு உண்டால் கொஞ்சம் உடல் சூடு பிறக்கும். இந்த குளிரை தாங்க முடியும் என்று அவை நினைகின்றன. 

அந்த ஊரில் உள்ள தலைவிக்கும் தூக்கம் வரவில்லை. ஜன்னலோரம் அமர்ந்து நிலவொளியில் வயல் வரப்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறாள். மான்கள் மெல்ல மெல்ல வருவது தெரிகிறது. 

ஹ்ம்ம்ம் என்ற பெரு மூச்சு வருகிறது...அவன் அருகில் இருந்தால் இந்த குளிருக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறாள். அவன் மார்பில் சாய்ந்து இந்த குளிர் தரும் துன்பத்தை போக்கிக் கொள்ளலாமே என்று நினைக்கிறாள். 

பாடல் 

பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்
அரும்பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிதில்லை அவர் மணந்த மார்பே.

பொருள்

பூழ்க்கால் = காடை என்ற பறவையின் காலைப் 

அன்ன = போல 
செங்கால் = சிவந்த கால்களை உடைய 
உழுந்தின் = உளுந்து செடியின் 

ஊழ்ப்படு = காலத்தால் 
முதுகாய் = முற்றிய காய்களை 
உழையினங் கவரும் = மான் இனம் கவரும். உண்பதற்கு வரும் 
அரும்பனி = கடுமையான பனி
அற்சிரம் = அந்த சிரமத்தை  
தீர்க்கும் = போக்கும் 
மருந்து பிறிதில்லை = மருந்து பிறிது இல்லை 
அவர் மணந்த மார்பே = அவரோடு நான் இணைந்திருந்த அவரின் மார்பை தவிர 

யோசித்துப் பார்த்தேன்....எதுக்கு இந்த மான், உளுந்து எல்லாம் இந்த பாடலில். பேசாமல் குளிர் வேதனை போக்க மருந்து அவன் மார்பு என்று சொல்லி விட்டுப் போய் விடலாமே ?

சொல்லலாம். 

மான்கள் வருவது ஒரு சாதாரண நிகழ்ச்சியாக இருக்கும் அந்த ஊரின் தன்மை, உளுந்து விளையும் மண்ணின் தன்மை, குறைந்த மழை பெய்யும் அடி வருடும் வறட்சி, பயிர்களை உண்ணத் தலைப்படும் மான்களின் பசி, அது இரவு நேரமாக இருக்கும் என்ற யூகத்திற்கு இடம் தருவதும், (பகலில் வந்தால் விரட்டி விடுவார்களே), தூக்கம் வராதா தலைவி அதை பார்த்துக் கொண்டிருப்பதும், தலைவனை நினைத்து ஏங்குவதும் ... 

யோசித்துப் பாருங்கள்...எவ்வளவு அழகான பாடல் 
 

 


Saturday, September 28, 2013

இராமாயணம் - குகன் அறிமுகம்

இராமாயணம் - குகன் அறிமுகம் 


குகன், இராமன் இருக்கும் இடம் வருகிறான். வாசலில் காவல் நிற்கும் இலக்குவன் கேட்டான் "நீ யார்" என்று. 

குகன் என்ன சொன்னான் என்பது  ஒரு புறம் இருக்கட்டும். 

நம்மை யாராவது "நீங்கள் யார் " என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ? 

நம் படிப்பு, வேலை, திறமை , சொத்து என்று நம் பெருமைகளை சொல்லுவோம். 

குகன் கங்கை கரை நாட்டுக்கு அரசன், ஆயிரம் படகுகளுக்குச் சொந்தக்காரன், எவ்வளவு பணிவாய் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான் பாருங்கள்.....

பாடல் 

கூவா முன்னம், இளையோன் குறுகி, 'நீ
ஆவான் யார்?' என, அன்பின் இறைஞ்சினான்;
'தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்' என்றான்.

பொருள்

கூவா முன்னம் = குகன் அழைப்பதற்கு முன்னே 

இளையோன் குறுகி = இளையவனான இலக்குவன் அவனை சென்று அடைந்து 

'நீ ஆவான் யார்?' என = நீ  யார் என 

அன்பின் இறைஞ்சினான் = அன்போடு கெஞ்சிக் கேட்டான். இறைஞ்சினான் என்கிறான் கம்பன். 

'தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென் = தேவா, உன் திருவடிகளைச் வணங்குவதற்கு வந்தேன் என்றான்.  குகன் இதுவரை இராமனைப் பார்த்தது கிடையாது. இலக்குவனைப் பார்த்து அவன் தான் இராமன் என்று நினைத்த்துக் கொண்டான். உன்னை சேவிக்க வந்தேன் என்றான். உண்மையில் அவன் சேவிக்க வந்தது இராமனை 

நாவாய் வேட்டுவன் = படகுகள் ஓட்டும்  ஒரு வேடன் 

நாய் அடியேன்' என்றான் = நாய் போல அடிமையானவன் என்கிறான். 

என்ன ஒரு பணிவு. 

அடக்கம் அமரருள் உய்கும் என்றான் வள்ளுவன். தன்னை இவ்வளவு பணிவாக அறிமுக படுத்திக் கொண்டவன் யாரும் இல்லை இந்த உலகில். 

பெரியவர்களிடம் இந்த அடக்கம் எப்போதும் நிறைந்து கிடக்கிறது. 

மாணிக்க வாசகரிடம் இருந்தது - நம்மையும் ஓர் பொருளாக்கி நாய் சிவிகை ஏற்று வித்து என்பார். 
அபிராமி பட்டரிடம் இந்த அடக்கம் இருந்தது - அடியேனுடைய நாய்த் தலையே என்பார். 

குகனிடம் அவ்வளவு அன்பு.. அவ்வளவு அடக்கம். 


மூதுரை - தீயார் உறவு

மூதுரை - தீயார் உறவு 


தீயவர்களைக் காண்பதும் தீதே - பார்த்தால் என்ன ஆகும் ? அட, இவன் இவ்வளவு தப்பு செய்கிறான், சட்டத்தை மீறுகிறான், அயோக்கியத்தனம் பண்ணுகிறான் இருந்தும் நல்லாதான் இருக்கான், ஒழுங்கா நேர்மையா இருந்து நாம என்னத கண்டோம், நல்லதுக்கு காலம் இல்லை...நாமும் கொஞ்சம் அப்படி செய்தால் என்ன என்று தோன்றும். கொஞ்சம் செய்வோம். மாட்டிக் கொள்ளவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் செய்யத் தோன்றும். இப்படிப்  போய் கடைசியில் பெரிதாக ஏதாவது செய்து மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே, தீயவர்களை காணாமல் இருப்பதே நல்லது.

அவர்களை கண்டு, அவர்களோடு பழகி அவர்களை திருத்த்துகிறேன் என்று நினைக்கலாமா ?

தீயார் சொல்லை கேட்பதும் தீதே....தீயதைக் கூட நல்லது மாதிரி சொல்லி நம்மை தீய வழியில் செலுத்தி விடுவார்கள். ஒரு தடவைதானே சும்மா முயற்சி செய்து பாருங்கள், பிடிக்கலேனா விட்டுருங்க என்று கேட்ட பழங்கங்களை நமக்கு அறிமுக படுத்தி விடுவார்கள்.

அவர்களை கண்டு, அவர்களோடு பழகி அவர்களை திருத்த்துகிறேன் என்று நினைக்கலாமா ?

தீயார் குணங்களை ஊரைப்பதும் தீதே ...தீயவர்களின் குணங்களைப் பற்றி பேசக் கூட கூடாது. இன்றைய தினம் தொலைக் காட்சிகளிலும், தினசரி இதழ்களிலும் கொலை செய்தவன், கொள்ளை அடித்தவன், கற்பழித்தவன் , வெடி குண்டு வைத்தவன் ....இவர்கள் பற்றிய செய்திகள்தான் அதிகம் வருகிறது. அது கூடாது என்கிறார் அவ்வையார்

அவரோடு இணங்கி இருப்பதும் தீதே .... அவர்களோடு ஒன்றாக இருப்பதும் தீதே

அவர்களை கண்டு, அவர்களோடு பழகி அவர்களை திருத்த்துகிறேன் என்று நினைக்கலாமா ?

பாடல்

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

Friday, September 27, 2013

மூதுரை - பிளவு

மூதுரை - பிளவு 


உங்களுக்கு யாராவது தீமை செய்து இருக்கிறார்களா ? அவர்கள் மேல் உங்களுக்கு கோபம் வந்ததா ? வந்த கோபம் இன்னும் இருக்கிறதா ? அப்படி யாராவது இருக்கிறார்களா உங்கள் பட்டியலில் ? உங்களுக்கு முன்பு தீமை செய்தவர்கள், உங்களை ஏமாற்றியவர்கள், என்று யாராவது இருக்கிறார்களா ? யோசித்துப் பாருங்கள்....

அந்த பட்டியல் அப்படி ஒரு புறம் இருக்கட்டும்....

இந்த கல்லு இருக்கிறதே அது ஒரு முறை உடைந்து விட்டால் பின் ஒட்டவே ஒட்டாது. என்ன தான் செய்தாலும் விரிசல் இருந்து கொண்டேதான் இருக்கும். 

பொன் இருக்கிறதே, அதில் கொஞ்சம் பிளவு வந்து விட்டால் உருக்கி ஒட்ட வைத்து விடலாம். ஒட்டும் ஆனால் கொஞ்சம் மெனக்கிடணும்

இந்த தண்ணீரின் மேல் அம்பை விட்டால், நீர் பிளக்கும் ஆனால் நொடிப் பொழுதில் மீண்டும் சேர்ந்து கொள்ளும். அம்பு பட்ட தடம் கூட இருக்காது. 

கயவர்களுக்கு நாம் ஒரு தீங்கு செய்தால் வாழ் நாள் பூராவும் மறக்க மாட்டார்கள். நமக்கு எப்படி மறு தீங்கு செய்யலாம் என்று இருப்பார்கள். இராமனுக்கு கூனி செய்தது போல - கல்லின் மேல் பிளவு போல 

நல்லவர்களுக்கு நாம் ஒரு தவறு செய்துவிட்டால், கொஞ்ச நாள் மனதில் வைத்து இருப்பார்கள்....பின் மறந்து விடுவார்கள் - பொன் மேல் பிளவு போல 

ஆன்றோர் அல்லது பெரியோர் இருக்கிறார்களே, அவர்களுக்கு நாம் ஏதாவது  தீமை செய்து விட்டால் உடனடியாக மறந்து மன்னித்து விடுவார்கள்....நீர் மேல் பிளவு போல 

பாடல் 

கற்பிளவோ ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்

பொருள்

Wednesday, September 25, 2013

இராமாயணம் - பொருக்கென எழுந்து

இராமாயணம் - பொருக்கென எழுந்து


இராமனுக்கு முடி சூட்டுவது என்று மந்திரிகள் சபையில் முடிவு செய்து ஆகி விட்டது. இராமனை அழைத்த்து வரும்படி சுமந்திரினிடம் தசரதன் சொல்லி அனுப்புகிறான். 

இங்கே கொஞ்சம் நிறுத்துவோம். 

அரச முறைப் படி, இராமன் தான் அரசு ஆள வேண்டும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. தசரதன் சொன்னால் போதும். யாரும் அதை மறுத்து இருக்க மாட்டார்கள். இருந்தாலும், தசரதன் மந்திரிகள் சபையைக் கூட்டி ஆலோசிக்கிறான். அவர்கள் கருத்தைக் கேட்கிறான். கம்பனின் நிர்வாக இயல் என்று தனியாக எழுதலாம்.

சுமந்திரன் போய் இராமனை அழைக்கிறான் "அரசன் உங்களை அழைத்து வரும்படி சொன்னான் " என்று சொன்னவுடன் "பொருக்கென" வந்தானாம் இராமன். கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன், கொஞ்சம் ட்ரெஸ் பண்ணிக் கொண்டு வருகிறேன், என்று எல்லாம் சொல்லவில்லை. உடனே வந்தானாம். 

எவ்வளவு நல்ல பிள்ளை. 

பெரியவர்கள் சொல்வதை அப்படியே கேட்பதில் இராமனுக்கு நிகர் இராமனே.

பாடல் 

கண்டு, கைதொழுது, 'ஐய, இக் கடலிடைக் கிழவோன்,
"உண்டு ஒர் காரியம்; வருக!" என, உரைத்தனன்' எனலும்,
புண்டரீகக் கண் புரவலன் பொருக்கென எழுந்து, ஓர்
கொண்டல்போல் அவன், கொடி நெடுந் தேர்மிசைக் கொண்டான்

பொருள் 

Sunday, September 22, 2013

தேவாரம் - யாதும் ஓர் குறைவில்லை

தேவாரம் - யாதும் ஓர் குறைவில்லை 


குறை இல்லாத மனிதன் யார் ? எல்லோருக்கும் ஏதோ  ஒன்று இல்லை. இது இருந்தால் அது இல்லை, அது இருந்தால் இது இல்லை.

கல்யாணம் ஆகாதவனுக்கு திருமணம் ஆகவில்லையே என்று குறை.

ஆனவனுக்கு பிள்ளை இல்லை என்று குறை.

பிள்ளை இருப்பவனுக்கு அது  சரியாகப் படிக்கவில்லையே என்று குறை.

பணம் இல்லாக் குறை, ஆரோக்கியம் இல்லாக் குறை...இப்படி குறை இல்லா மனிதன் யாரும் இல்லை.

ஞான சம்பந்தர் பாடுகிறார்....குறையை மட்டுமே ஏன் எப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் ? எவ்வளவு நல்லது எல்லாம் இருக்கிறது ?

இந்த பூமி, இந்த இந்திய நாடு எவ்வளவு நல்ல நாடு...இங்கு நல்லபடி வாழலாம், நல்ல கதி அடைய ஒரு குறையும் இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக, இவற்றை அளிக்க கழு மலம் என்ற ஊரில் நல்ல பெண்ணோடு (பார்வதியுடன்) சிவன் இருக்கிறான் என்கிறார்.

பாடல்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே



 பொருள்