Saturday, November 9, 2013

இராமாயணம் - இறத்தலும் பிறத்தலும்

இராமாயணம் - இறத்தலும் பிறத்தலும் 


நாம் அன்பு கொண்டவர்களின் மரணம் மிகப் பெரிய துக்கம். நம் மரணம் துக்கம் அல்ல பயம்.

நிலையாமை பற்றி எவ்வளவுதான் தெரிந்து இருந்தாலும் நம் நெருங்கியவர்களின் மரணம் உலுக்கித்தான் போடுகிறது.

தசரதன் இறந்து போனான் என்ற செய்தியை கேட்டவுடன் இராமன் மயங்கி விழுந்தான். அரசு போனதற்கு கலங்கவில்லை. காடு போ என்று சொன்னபோதும் கலக்கம் இல்லை. ஆனால் , தந்தை இறந்தான் என்ற செய்தி கேட்ட போது இராமனுக்கு துக்கம் தாளவில்லை.

பாசம் அந்த பரமனையும் விடவில்லை.

கலங்கிய இராமனுக்கு வசிட்டன் வாழ்வின் நிலையாமை பற்றி கூறுகிறான்.

நம் வாழ்விலும் பிரிவுகள் நிகழலாம். அந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள நம்மை தயார் படுத்திக் கொள்ள இந்த மாதிரி ஞானிகளின் வாசகங்கள் உதவலாம்.

மிக மிக ஆழமான, சிந்திக்க வேண்டிய பாடல்கள்...அதில் ஒன்று


பாடல்

துறத்தலும் நல் அறத்
     துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை,
     பொருந்தும் மன்னுயிர்க்கு;
“இறத்தலும் பிறத்தலும்
     இயற்கை” என்பதை
மறத்தியோ, மறைகளின்

     வரம்பு கண்ட நீ?

பொருள்

"துறவறமும் இல்லறமும் அல்லது உயிர்களுக்கு வேறு வழி இல்லை. இறப்பும் பிறப்பும்  இயற்கை என்பதை எல்லாம் அறிந்த நீ எப்படி மறந்தாய் "

மேலோட்டமாய் பார்த்தால் இவ்வளவுதான்  அர்த்தம்.

கொஞ்சம் ஆழமாக சிந்திப்போம்.

நாம் வாழ்கையை ஒரே கோணத்தில் சிந்திக்கிறோம்.

பிறப்பு , வளர்தல், மூப்பு, பின் இறப்பு....இந்த கோணத்தில் நாம்  பார்க்கிறோம். இறப்போடு  எல்லாம் முடிந்து விடுகிறது.

வசிட்டர் கொஞ்சம் வேறு விதமாக சொல்கிறார்.

"இறத்தலும் பிறத்தலும் இயற்கை " முதலில் இறப்பு, பின் பிறப்பு இதுதான் இயற்கை  என்கிறார்.

தசரதன் இறந்து போனான். "இதை முடிவு என்று நினைக்காதே , இறந்தது பிறக்கும் " என்று இராமனுக்கு அறிவுறுத்துகிறான்.

பிறந்தது இறக்கும் என்பது கண்  கூடு.

இறந்தது பிறக்குமா  என்பது தெரியாது. சந்தேகம்  இருக்கிறது அதில்.

பிறத்தலும் இறத்தலும் இயற்கை என்று சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.

வாழ்கை ஒரு முடிவற்ற நதிபோல் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதே போல் , இல்லறம் , அது முடிந்து துறவறம். அது தான் நாம் அறிந்த முறை.

வசிட்டன் அதையும் மாற்றிப் போடுகிறான்.

"துறத்தலும் நல் அறத் துறையும் அல்லது" முதலில் துறவறம் சொல்லி அப்புறம் நல்  அறம் அதாவது இல் அறம் (இல்லறம்) பற்றி கூறுகிறான்.

இது வசிட்டன் சொன்னான் என்றால் ஏதோ தனக்கு ஆறுதல் சொல்வதற்காக அப்படி சொல்கிறான் என்று   இராமன் நினைக்கலாம். நாமும் அப்படித்தான் நினைப்போம்.

எனவே வசிட்டன் சொல்கிறான் "மறத்தியோ, மறைகளின் வரம்பு கண்ட நீ"


மறைகள் (வேதம் முதலியவை ) அப்படித்தான் சொல்கின்றன. நீ அதைப் படித்து இருகிறாய். மறந்து விட்டாயா என்று அவனுக்கு ஞாபகப் படுத்துகிறான்.

இராமன் ஏதோ மறைகளை கடமைக்கு படித்தவன் அல்லன். அவற்றின் எல்லைகளை   கண்டவன்.அவற்றின் முடிவை  அறிந்தவன். அவை சொல்வதின்  அர்த்தம் முழுதும் அறிந்தவன்.

தசரதன் இறந்தான் என்று வருந்தாதே, தசரதன் மீண்டும் பிறந்தான் என்று எண்ணிக் கொள். துக்கம் எங்கே வரும் ?

இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே    
யொழுக்க முடையார்வாய்ச் சொல்


வாழ்வில் இழுக்கம் வரும்போது உயர்ந்தவர்களின் சொற்கள் வழுக்கும் நிலத்தில் ஊன்று கோல் போல உதவும் என்பது வள்ளுவம்.

வசிட்டனின் வார்த்தைகளை இன்னும் எடுத்துச் சொல்வேன்


Friday, November 8, 2013

திருக்கோயில் திருவெண்பா - மருந்து வேண்டாம்

திருக்கோயில் திருவெண்பா - மருந்து வேண்டாம் 



கிழம் இப்படித்தான் படுத்துது என்று மகளோ மருமகளோ அலுத்துக் கொள்வது அவர் காதில் விழாமல் இல்லை.

அவர் காதில் விழுவது பற்றி அவர்களும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

இன்னும் எத்தனை நாள் என்று தாத்தாவும் மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருக்கிறார்...கண்ணோரம் ஈரம்...

பக்கத்து மேஜையில் மருந்துகள் குமிந்து கிடக்கின்றன.....சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது என்று தாத்தா தலையை திருப்பிக் கொள்கிறார்

பாடல்


உய்யும் மருந்திதனை உண்மின் எனஉற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.

சீர் பிரித்த பின்

உய்யும் மருந்தினை உண்மின் என உற்றார்
கையைப் பிடித்து எதிரே காட்டிய கால் - பைய
எழுந்து இருமி யான் வேண்டேன் என்னா முன் நெஞ்சே
செழுந் திரு மயானமே சேர்


பொருள் வேண்டுமா என்ன ?


Thursday, November 7, 2013

மங்கையராகப் பிறப்பதற்கே - கவிமணி பாடல்

மங்கையராகப் பிறப்பதற்கே - கவிமணி பாடல் 




 மங்கையா ராகப் பிறப்பதற்கே - நல்ல
     மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்
     பாரில் அறங்கள் வளரும், அம்மா!


முதல் இரண்டு வரி எல்லோருக்கும் தெரியும்....

அடுத்த இரண்டு வரி மிக மிக இனிமையான வரிகள் ....

பெண்கள் கை பார்த்துதான் இந்த உலகில் அறங்கள்  வளர்கின்றன.பெண் இல்லாவிட்டால் அறம் எங்கே வளரப் போகிறது ? அவள் பால் நினைத்து ஊட்டும் தாய். 


பெண்மையின் சிறப்பை கவி மணி மிக அழகாகப் பாடி  இருக்கிறார்.படித்து இன்புறுங்கள்.


741 அல்லும் பகலும் உழைப்பவர் ஆர்? - உள்ளத்து
     அன்பு ததும்பி யெழுபவர் ஆர்?
கல்லும் கனியக் கசிந்துருகித் - தெய்வ
     கற்பனை வேண்டித் தொழுவர் ஆர்?

742 ஊக்கம் உடைந்தழும் ஏழைகளைக் காணில்
     உள்ளம் உருகித் துடிப்பவர் ஆர்?
காக்கவே நோயாளி யண்டையிலே - இரு
     கண்ணிமை கொட்டா திருப்பவர் ஆர்?

743 சிந்திய கண்ணீர் துடைப்பவர் ஆர்? - பயம்
     சிந்தை யகன்றிடச் செய்பவர் ஆர்?
முந்து கவலை பறந்திடவே - ஒரு
     முத்தம் அளிக்க வருபவர் ஆர்?

உள்ளந் தளர்வுறும் நேரத்திலே - உயிர்
     ஊட்டும் உரைகள் உரைப்பவர் ஆர்?
அள்ளியெடுத்து மடியிருத்தி - மக்கள்
     அன்பைப் பெருக்கி வளர்பவர் ஆர்?

745 நீதி நெறிநில்லா வம்பருமே - நல்ல
     நேர்வழி வந்திடச் செய்பவர் ஆர்?
ஓதிய மானம் இழந்தவரை - உயர்
     உத்தமர் ஆக்க முயல்பவர் ஆர்?

746 ஆவி பிரியும்அவ் வேளையில் - பக்கத்து
     அன்போ டகலா திருப்பவர் ஆர்?
பாவி யமனும் வருந்திடாமல் - ஈசன்
     பாதம் நினைந்திடச் செய்பவர் ஆர்?

747 ஏங்கிப் புருஷனைத் தேடியழும் - அந்த
     ஏழைக் கிதஞ்சொல்லி வாழ்பவர் ஆர்?
தாங்கிய தந்தை யிழந்தவரைத் - தினம்
     சந்தோஷ மூட்டி வளரப்பவர் ஆர்?

748 சின்னஞ் சிறிய வயதினிலே - ஈசன்
     சேவடிக் கன்பெழச் செய்பவர் ஆர்?
உன்னம் இளமைப் பருவமெலாம் - களிப்பு
     உள்ளம் பெருகிடச் செய்பவர் ஆர்?

749 மண்ணக வாழ்வினை விட்டெழுந்து - மனம்
     மாசிலா மாணிக்க மாயொளிர்ந்து
விண்ணக வாழ்வை விரும்பிடவே - நிதம்
     வேண்டிய போதனை செய்பவர் ஆர்?

750 அன்பினுக் காகவே வாழ்பவர் ஆர்? - அன்பின்
     ஆவியும் போக்கத் துணிபவர் ஆர்?
இன்ப உரைகள் தருபவர் ஆர்? - வீட்டை
     இன்னகை யாலொளி செய்பவர் ஆர்?

751 இப்பெரு நற்கரு மக்களெல்லாம் - உமக்கு
     ஈசன் அளித்த உரிமைகளாம்
மெய்ப்பணி வேறும் உலகில் உண்டோ? - இன்னும்
     வேண்டிப் பெரும்வரம் ஒன்றுளதோ?

Tuesday, November 5, 2013

கந்தர் அநுபூதி - இன்னும் ஒருவற்கு இசைவிப்பதுவோ?

கந்தர் அநுபூதி - இன்னும் ஒருவற்கு இசைவிப்பதுவோ?


மனைவியுடனோ, காதலியிடமோ பத்து பேர் முன்னிலையில் இருந்து பேசினால் இனிமை இருக்குமா ? தனிமையில் அவளோடு பேசினால் இனிமை இருக்குமா ? 

தனிமையில் பேசுவதில் தான்  சுகம்.

மனைவி மற்றும் காதலிக்கே அப்படி என்றால் இறைவனுக்கு எப்படி ?

இலட்சம் பேருக்கு நடுவில், கோவிலில், கும்பலுக்கு , கோஷத்துக்கு நடுவில் இறைவனோடு ஒன்ற முடியுமா ?

தனிமையில் இருந்து சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அது என்ன என்று தெரிய வரும். நண்பர்களிடம் விவாதித்து அறிய முடியாது. 

இறை அனுபவம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். 

பாடல் 

தன்னந் தனிநின் றதுதா னறிய
இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே

சீர் பிரித்த பின் 

தன்னந் தனி நின்று  அது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.

பொருள் 

தன்னந் தனி நின்று = தனியாக நின்று, தனியாக இருந்து 

அது = அதனை 

தான் அறிய = தான் அறிந்து கொள்ள, அறிந்து கொண்டதை  

இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ? = மற்றவர்களிடம் சொல்லித் தெரிய வைக்க முடியுமா 

மின்னும் கதிர் வேல் = மின்னல் ஒளி வீசும் 

விகிர்தா =  உருவம் மாறுபவன்  

நினைவார் = நினைப்பவர்கள் 

கின்னம் = இன்னல்கள் 

களையும் = களையும் 

க்ருபை = அன்பு 

சூழ் சுடரே = சூழும் சுடரே 




Monday, November 4, 2013

கந்தர் அநுபூதி - அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ ?

கந்தர் அநுபூதி -  அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ ?


எல்லாவற்றையும் அறிவால் அறிந்து  கொள்ள முடியுமா ? எல்லாம் தர்க்கத்தில் அடங்குமா ? அறிவால் அறிய முடியாதது என்று ஒன்று இருக்குமா ? அப்படி ஒன்று இருக்கும் என்பதை அறிவு அறியுமா ?

அதை அறிந்து கொள்ள முடியும் என்றால் அப்படி அறிவது எது ? அறிவா ?

வெறும் அறிவை மட்டும் கொண்டு அறியமுடியாது அது. அவன் அருள் இன்றி அவனை அறிய முடியாது என்கிறார்  அருணகிரி நாதர்.

பாடல்

முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே. 13

சீர் பிரித்த பின்

முருகன், தனிவேல் முனி, நம் குரு .. என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,

இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.


பொருள்

முருகன் = முருகன்

தனிவேல் முனி = தனித்துவமான வேலைக் கொண்ட முனிவன்

நம் குரு = அவன் நமது குரு. நமக்குத் சொல்லித் தரும் யாருமே குரு தான். என்னை கேட்டால் google  ம், விக்கி பீடியாவும் நமக்கு குருதான். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பார் அருணகிரி. குருவாய் வந்து ஆண்டு கொண்டார் மணிவாசகரை.

என்று = என்று


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ = அருளின் மூலமே அறிந்து கொள்ள முடியும். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர்

மிகச் சிறிய பொருள்களை சாதாரண கண்ணால் காண முடியாது. நுண்ணோக்கி (microscope ) வேண்டும். தூரத்தில் உள்ள பொருள்களை அறிய தொலை நோக்கி வேண்டும். அவனை அறிய அவன் அருள் வேண்டும். அததை அறிய அதற்குரிய உபகரணங்கள் வேண்டும்.


உரு அன்று = அது உருவம் உள்ளது அன்று. அப்படி என்றால் படங்களும், சிலைகளும் காண்பிப்பது அவன் உருவை அன்று. அவனுக்கு உருவம் இல்லை.

அரு அன்று = உருவம் இல்லாதது அருவம். அது அருவமும் அன்று.

உளது அன்று = உள்ளது அன்று

இலது அன்று = இல்லாததும் அன்று



இருள் அன்று, ஒளி அன்று = இருளும் அன்று, ஒளியும் அன்று

என நின்றதுவே = என நின்றது.

அது என்ன உரு அன்று, அரு அன்று, ஒளி அன்று, இருள் அன்று ...ஒரே குழப்பமாக  இருக்கறதே...

ஒரு குழப்பமும் இல்லை...ரொம்ப எளிதானது....

நம் உடலில் இடம் வலம் என்று இரண்டு பகுதிகள் இருக்கிறது அல்லவா ? அதில் குழப்பம் இல்லையே .

வலது எங்கே முடிகிறது ? இடது எங்கே ஆரம்பிக்கிறது ?

கை எங்கே முடிகிறது , விரல் எங்கே ஆரம்பிக்கிறது ?

நம்மால் சொல்ல முடியாது.

பகல் எந்த நொடியில் முடிந்து இரவு எந்த நொடியில் ஆரம்பிக்கிறது ?

சொல்ல முடியாது.

ஏன் சொல்ல முடியாது ?

வாழ்வில் நாம் காணும் பிரிவுகள் எல்லாம் பிரிவுகளே அல்ல. முழுமையான ஒன்றின் தொடர்ச்சிதான். நம் வசதிக்கு நாம் ஒன்றிற்கு வலது என்றும் மற்றதற்கு  இடது என்றும் பெயர் இட்டிருக்கிறோம். உடல் ஒன்று தான்.

நீங்கள் வலதும் இல்லை, இடதும் இல்லை. முன்னும் இல்லை பின்னும் இல்லை. நீங்கள் ஒன்றுதான்.

அருவமும், உருவமும் ஏதோ ஒன்றின் இரண்டு  முனைகள்.ஒரு முனை அருவம். ஒரு முனை உருவம்.

இரண்டும் இல்லை. இரண்டும் தான்.

உருவமும், அருவமும் ஏதோ ஒன்றின் வெளிப்பாடு.

அது வரை புரிகிறது.

அதற்கு மேல் புரிய அவன் அருள் வேண்டும் என்கிறார் அருணகிரி....


என்ன செய்யலாம் ?




பெரிய புராணம் - இறைவனைக் காண எத்தனை காலம் ஆகும்

பெரிய புராணம்  - இறைவனைக் காண எத்தனை காலம் ஆகும் 


இறைவன் இருக்கிறானா இல்லையா என்று வாதித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு புறம் இருக்கட்டும்.

இறைவன் இருக்கிறான் என்று வைத்துக் கொண்டால் அவனை காண எத்தனை ஆகும் ?

ஒரு பிறவி ? பல பிறவி ?

அவனைக் காண என்ன என்ன செய்ய வேண்டும் ?

ஞானம் வளர்க்க வேண்டும் ? தான தருமங்கள் செய்ய வேண்டும் ? பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும் ? தவம் செய்ய வேண்டும் ?


அவ்வளவு எல்லாம் வேண்டாம்...

ஆறே நாள்...தொடங்கிய ஆறே நாளில் இறைவனை கண்டார் கண்ணப்ப நாயனார்.

பெரிய ஞானி இல்லை. தானமும் தவமும் செய்யவில்லை. படிப்பறிவு கிடையாது.

புலால் உண்பார்.

உயர் குலப் பிறப்பு கிடையாது.

நாவுகரசருக்கும், மணிவாசகருக்கும் நாள் ஆனது.

கண்ணப்ப நாயனார் ஆறே நாளில் இறைவனை அடைந்தார்.

அவர் இறைவனை அடைந்தார் என்பதை விட இறைவன் அவரை வந்து அடைந்தார்.

கண்ணப்ப நாயனார் வாழ்க்கையைப் பற்றி தெய்வப் புலவர் சேக்கிழார் சொல்கிறார். அதில் இருந்து சில பாடல்கள்.

கண்ணப்ப நாயனாரின் பெட்ரோர் பற்றிய பாடல்

பாடல்


பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
 குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான் 
 வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான்

 மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள்

பொருள் உரை

தவம் முற்பிறப்பில் செய்தவனாயினும் (கண்ணப்ப நாயனாரின் தந்தை நாகன்), இந்தப் பிறவியின் சார்பால் குற்றம் செய்வதையே குணமாகக் கொண்டு வாழ்ந்தான். சிங்கம் போல கோபம் உள்ளவன். விற் தொழிலில் வல்லவன். அவன் மனைவி தத்தை என்பவள்.

பொருள்


பெற்றியால் = தன்மையால்

தவமுன் செய்தான் ஆயினும் = முற் பிறப்பில் தவம் செய்தவனாயினும். ஏன் முற்பிறப்பில் தவம் செய்தான் என்று கூறுகிறார் ? இந்தப் பிறவியில் ஒன்றும் செய்ய வில்லை என்று தெரிகிறது. ஆனால், கண்ணப்ப நாயனார் போன்ற சிறந்த மகனை பெற்று எடுத்ததால் அவன் முற்பிறப்பில் தவம் செய்திருக்க வேண்டும் என்று கொள்கிறார் சேக்கிழார்.

பேற்றைத் தவம் சற்றும் செய்யாத என்னை, பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா  என்பார் அருணகிரி


பிறப்பின் சார்பால் = (வேடுவர் குலத்தில் வந்து பிறந்த ) பிறப்பின் சார்பால்


குற்றமே குணமா வாழ்வான் = குற்றங்கள் செய்வதையே குணமாகக் கொண்டு வாழ்வான். உயிர் கொலை புரிவது குற்றம்.

கொடுமையே தலை நின்றுள்ளான் = கொடுமை செய்வதில் சிறந்து விளங்கினான்

வில் தொழில் விறலின் மிக்கான் = வில் தொழில் சிறந்து வெற்றி பெற்று நின்றான்

வெஞ்சின = வெம்மையான சினம் கொண்ட 

மடங்கல் = சிங்கம்

போல்வான் = போன்றவன்


மற்றவன் = அவனுடைய

குறிச்சி = குறிஞ்சி

வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் = வாழ்க்கை மனைவியும் தத்தை என்று சொல்பவள்.





Saturday, November 2, 2013

பெரிய புராணம் - நா அடங்கா முன்னம்

பெரிய புராணம்  - நா அடங்கா முன்னம் 



தாத்தா படுக்கையில் படுத்திருக்கிறார்.  ரொம்ப முடியவில்லை. தாகமாக இருக்கிறது. பசிக்கிறது. வயதாகி விட்டது என்பதற்காக பசியும் தாகமும் போயா விடுகிறது.

கொஞ்சம் கஞ்சி கொடு, தவிக்கிறது கொஞ்சம் தண்ணி தா என்று கேட்க்க நினைக்கிறார்...நாக்கு நடுங்குகிறது. பேச்சு வரவில்லை. எப்படி சொல்லி, என்ன கேட்பார். கேட்டால் கிடைக்கும். கேட்க முடியவில்லை.

பேசிய நாக்குதான்...இன்று பேச்சு வரவில்லை....

அப்படி ஒரு நாள் வருவதற்கு முன், அவன் பெயரை சொல்லிக் கொண்டிரு. பின்னாளில் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்தால் தண்ணி கேட்க்கக் கூட நாக்கு உதவாமல் போகலாம்...அவன் பெயரை எங்கே சொல்வது....

 அப்போதைக்கு இப்போதே சொல்லி வையுங்கள்

பாடல்

கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்றுநடுநடுத்து நாவடங்கா முன்னம் - பொடியடுத்தபாழ்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.

பொருள்

கடுவடுத்த நீர்கொடுவா = கடுக்காய் என்று ஒரு காய் உண்டு. அதை தண்ணீரில் போட்டு வைப்பார்கள். அதற்க்கு சில மருத்துவ குணங்கள் உண்டு. அந்தத் தண்ணீரை கொண்டு வா

 காடி தா = காடி என்றால் புளித்த கஞ்சி. அதை கொண்டு வா 

என்று = என்று

நடுநடுத்து நாவடங்கா முன்னம் = சொல்லுவதற்குள், நாக்கு நடுங்கி சொல்ல முடியாமல் போவதற்கு முன்


பொடியடுத்த = பொடி என்றால் சாம்பல். சாம்பல் நிறைந்த

பாழ் கோட்டஞ் = பாழடைந்த கோட்டை (இடு காடு )

சேரா முன் = சேர்வதற்கு முன்னால்

பன் மாடத் = பல மாடங்கள் கொண்ட

 தென் குடந்தைக் = குடந்தைக்கு தென் புறம் உள்ள

கீழ்க்கோட்டஞ் = கீழ் கோட்டம் என்ற ஊரில் உள்ள அவன் பெயரை 

செப்பிக் கிட = சொல்லிக் கொண்டிரு

என்னடா இவன், நாளும் கிழமையுமாய் இந்த மாதிரி பாடலை எழுதுகிறானே என்று நினைப்பவர்களுக்கு ....

பயத்தில் பெரிய பயம் மரண பயம்.

அந்த பயத்தை வென்று விட்டால் வாழ்வில் வேறு எந்த பயமும் வராது.

பயப்படும் விஷயத்தை கண்டு ஓடினால் பயம் மேலும் அதிகம் ஆகும்.

இந்த நன் நாளில், எல்லா பயன்களும் உங்களை விட்டு ஓட, இந்த பாடல் அடிகோலட்டும்

"நாமங்கள் நவின்றேலோர் எம்பாவாய்"