Thursday, November 27, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இப்ப என்ன செய்வது ?

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இப்ப என்ன செய்வது ?


இராமனுக்குத் தந்த வாக்குறுதியை சுக்ரீவன் மறந்தான். அதனால் கோபம் கொண்ட இராமன், இலக்குவனை சுக்ரீவனிடம்  அனுப்பினான். இலக்குவனும் மிகுந்த சினத்துடன் வருகிறான்.

குரங்குகள் என்ன செய்வது என்று அறியாமல் தாரையிடம் சென்று யோசனை கேட்டன. தாரை அவர்களை பலவாறு ஏசுகிறாள்.

அந்த சமயத்தில் இலக்குவன் கோட்டையை நெருங்கி விட்டான். குரங்குகள் சென்று கோட்டை கதவை அடைத்தன . இலக்குவன் அதை எல்லாம் உடைத்து எறிந்து விட்டு வேகமாக வருகிறான்.

குரங்குகள் மீண்டும் தாரையிடம் ஓடி வருகின்றன..

"இப்ப என்ன செய்வது " என்று கேட்க்கின்றன ....

பாடல்


அன்ன காலையின் ஆண் தகை ஆளியும்
பொன்னின் நல்நகர் வீதியிற் புக்கனன்;
சொன்ன தாரையைச் சுற்றினர் நின்றவர்
“என்ன செய்குவது? எய்தினன் ” என்றனர்.

பொருள் 

அன்ன காலையின் = அந்த நேரத்தில் (காலத்தில் )

ஆண் தகை ஆளியும் = ஆண்களில் சிங்கம் போன்ற அவனும் 

பொன்னின் = பொன் போன்ற சிறந்த உயர்ந்த

நல்நகர் = அந்த நல்ல நகரின் (கிட்கிந்தையின் )

வீதியிற் புக்கனன்; = வீதியில் புகுந்தான்

சொன்ன தாரையைச்  = முன்னால் சொன்ன தாரையை

சுற்றினர் நின்றவர் = மீண்டும் வந்து சூழ்ந்து கொண்டனர்

“என்ன செய்குவது? எய்தினன் ” என்றனர். = என்ன செய்வது இப்போது என்று வந்தோம்  என்றனர்.



Tuesday, November 25, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 3 - கண்ணியர் காதல் நீர்

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 3 - கண்ணியர் காதல் நீர் 


தன் முன்னால் நிற்கும் குரங்குக் கூட்டத்தை பார்த்து மேலும் தாரை சொல்கிறாள்.

"மனைவியை பிரிந்த அந்த தேவர்களின் மேலோன், உயிர் பிரிந்த மாதிரி சோர்வடைவான். அதை நீங்கள் நினைத்துப் பார்க்காமல், கருங்குவளை மலர் போன்ற கண்களை கொண்ட உங்கள் மனைவியருடன் காதல் நீரைப் பருகிக் கொண்டு இருக்கிறீர்கள்"

பாடல்

தேவி நீங்க, அத் தேவரின் சீரியொன்
ஆவி நீங்கினன்போல் அயர்வான்; அது
பாவியாது, பருகுதிர் போலும், நும்

காவி நாள்மலர்க் கண்ணியர் காதல் நீர்.

பொருள்

தேவி நீங்க = சீதை நீங்க

அத் தேவரின் சீரியொன் = தேவர்களை விட சிறந்தவனான அவன்

ஆவி நீங்கினன்போல் = உயிர் பிரிந்ததைப் போல

அயர்வான் = சோர்வடைவான்

அது பாவியாது = அந்தி நினைத்துப் பார்க்காமல்

பருகுதிர் போலும் = சுவைப்பீர்கள் போலும்

நும் = உங்கள்

காவி நாள்மலர்க்  = அன்று பூத்த குவளை மலர் போன்ற

கண்ணியர் = கண்களை கொண்டவர்களின்

காதல் நீர் = காதல் நீர்

காதல் நீர் என்பதற்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்ற ஆராய்ச்சியை உங்களிடமே விட்டு விடுகிறேன்....:)

ஒரு பெண், முன்னால் நிற்கும் பெரிய ஆண்கள் கூட்டத்தைப் பார்த்து இவ்வளவு  உரிமையோடு கண்டித்து திட்டுகிறாள் என்றால் அவளின் ஆளுமை எந்த அளவுக்கு இருந்திருக்க வேண்டும்.

முன்ன பின்ன தெரியாத ஒரு கூட்டத்தைப் பார்த்து ஒரு பெண் இப்படி பேச முடியுமா .....

அது மட்டும் அல்ல, இந்தப் பகுதியை கம்பன் ஏன் வைத்து இருக்கிறான் ?

சுக்ரீவன் தண்ணி அடித்துவிட்டு சொன்ன வாக்கை மறந்து விட்டான். இலக்குவன்  கோபித்து வந்தான். தாரை சமாதானப் படுத்தினாள். எல்லாம் சரியாகி விட்டது.

இந்த பகுதி இல்லாவிட்டால் , காப்பியம் என்ன ஆகி இருக்கும் ? ஒன்றும் ஆகி இருக்காது.  கதையின் ஓட்டத்திற்கு இந்த பகுதி தேவை இல்லை தான்.

குறித்த காலத்தில் சுக்ரீவன் வந்தான் என்று ஒரு வரியில் சொல்லி விட்டுப் போயிருக்கலாம்.

மாறாக, இவ்வளவு நீட்டி கம்பன் சொல்லக் காரணம் என்ன....?

காரணம் இருக்கிறது.

முதலாவது, ஒரு தலைவன் ஒழுங்காக இல்லை என்றால் அவன் அமைச்சர்களும், குடிகளும் ஒழுங்காக இருக்க மாட்டார்கள்.  சுக்ரீவன் இன்பத்தில் மூழ்கி சொன்ன சொல்லை மறந்தான். அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி  என்று மற்றவர்களும் அப்படியே இருந்து விட்டார்கள்.

இது ஒரு முதல் பாடம் - தலைவன் ஒழுங்காக இல்லை என்றால் அவனுக்கு கீழே உள்ளவர்களும்  ஒழுங்காக இருக்க மாட்டார்கள்.

அதை விட முக்கியமான பாடம் என்ன என்றால், மனிதன் ஏன் கடமை தவறுகிறான் ?

முதல் காரணம் போதை. போதைக்கு அடிமையானதால் சுக்ரீவன் தன் நிலை மறந்தான்.

இரண்டாவது, காமம். கண்ணியர் காதல் நீர் பருகிக் கிடந்ததால் மற்றவர்களும் சொன்ன சொல்லை காக்கத் தவறினார்கள்.

மதுவும் மாதுவும் மனிதனை தடம் புரளச் செய்யும்.

மேலும் சிந்திப்போம்.



Monday, November 24, 2014

தேவாரம் - காக்கைக்கே இரை ஆகி கழிவரே

தேவாரம் - காக்கைக்கே இரை ஆகி கழிவரே


இத்தனை ஆட்டமும் பாட்டமும் ஓட்டமும் எதற்கு ?  எதை அடைய இத்தனை முயற்சிகள் ?

படித்து, மணம் முடித்து, பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, அவர்களை திருமணம் செய்து கொடுத்து....பின் என்ன ?

ஒன்றும் இல்லை ! ஒன்றும்  இல்லாமல் போவதற்கா இத்தனை பாடு ?

நாவுக்கரசர் சொல்கிறார்

"பூவைக் கையில் கொண்டு அவன் பொன் போன்ற அடிகளை போற்றுவதில்லை. நாக்கினால் அவன் நாமம் சொல்வதில்லை. இந்த உடம்புக்கே நாளும் இரை தேடி அலைந்து, முடிவில் காக்கைக்கு இரையாக இந்த உடலை விட்டு, வாழ்நாட்களை கழிப்பார்களே"

பாடல்

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.

பொருள்

பூக் = பூவைக்

கைக் கொண்டு = கையில் கொண்டு

அரன் = சிவனின்

பொன்னடி= பொன் போன்ற திருவடிகளை

போற்றிலார் = போற்ற மாட்டார்கள்

நாக்கைக் = நாக்கினைக்

கொண்டரன் = கொண்டு + அரன்

நாமம் நவில்கிலார் = பெயரைச் சொல்ல மாட்டார்கள்

ஆக்கைக் கேயிரை தேடி = ஆக்கைக்கே + இரை + தேடி = இந்த உடம்புக்கு தீனி தேடி

அலமந்து = அலமந்து (அலைந்து)

காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே = காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே

இந்த உடல் எப்படியும் மடிந்து போகப் போகிறது.  மடிந்த உடன் மக்கிப் போகும்.

அதற்கு முன் இந்த உடலை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிப்போம் ....

 காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே - மேவிழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலந் தானையே கூறு.

என்பார் பட்டினத்தார்.

கடைசி காலம் வருமுன்னே குற்றாலத்தானையே கூறு என்றார்.


Saturday, November 22, 2014

திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 2

திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 2




"வேறு வேறு விதமாக இருக்கும் உடம்பினுள் என்னால் இருக்க முடியாது. ஐயா ! அரனே ! என்று போற்றி புகழ்ந்து, பொய்யானவெல்லாம் கெட மெய்யானவற்றை அடைந்து , மீண்டும் இங்கு வந்து வினை சேரும் இந்த பிறவியை அடையாமல், வஞ்சனையைச் செய்யும் இந்த புலன்களிடம் கிடந்து அகப்படாமல் என்னை காப்பவனே; நள்ளிருளில் நடனம் ஆடுபவனே."

பாடல்

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே

பொருள்

வேற்று = வெவேறு விதமான

விகார = வடிவங்கள் கொண்ட

விடக்குடம்பி னுட்கிடப்ப = ஊனாலான இந்த உடம்பினுள் கிடக்க

ஆற்றேனெம் ஐயா = ஆற்றமாட்டேன் என் ஐயா

அரனேயோ என்றென்று = அரனே என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து = போற்றி புகழ்ந்திருந்து

பொய்கெட்டு மெய்யானார் = பொய்யை விடுத்து மெய்யை அடைந்தார்

மீட்டிங்கு வந்து = மீண்டும் வந்து இங்கு

வினைப்பிறவி சாராமே = வினைக்கொண்ட இந்த பிறவியை அடையாமல்

கள்ளப் புலக்குரம்பைக் = கள்ளம் செய்யும் இந்த புலன்களின்

கட்டழிக்க வல்லானே = கட்டை அழிக்க வல்லவனே

நள்ளிருளில் = நடு இரவில்

நட்டம் = நடனம்

பயின்றாடு நாதனே = பயின்று ஆடும் நாதனே !



போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

வாழ்க்கையில் பல துன்பங்களுக்குக் காரணம் மெய் எது பொய் எது என்று அறியாமல் குழம்புவதுதான்.

சரி எது, தவறு எது ?
நல்லது எது, கெட்டது எது ?
நல்லவர் யார் , கெட்டவர் யார் ?
எது சரியான பாதை, எது தவறான பாதை ?

என்று தெரியாமல் பல தவறான முடிவுகளை எடுத்து விட்டு தவிக்கிறோம்.

பொய்யானவற்றை விட்டு உண்மையானவற்றை அடைய வேண்டும்.


பொய் என்பது பொய் அறிவு, பொய் உணர்வு.
மெய் என்பது மெய் அறிவு, மெய் உணர்வு.


எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் , அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு  என்பார் வள்ளுவர்.

எப்பொருள் எத்தன்மையத் தாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு  என்பதும் அவர் வாக்கே.

இறைவனை அறியும் போது பொய் விலகும், உண்மை புரியும்.



Thursday, November 20, 2014

நந்திக் கலம்பகம் - பெண்ணில்லா ஊரில் பிறந்தார்

நந்திக் கலம்பகம் - பெண்ணில்லா ஊரில் பிறந்தார் 


பெண்மை, மென்மை படுத்துகிறது. தாய், சகோதரி, காதலி, மனைவி, நண்பி என்று பெண்கள் எங்கெங்கும் ஆண்களை மென்மை படுத்துகிறார்கள்.

பெண் தொடர்பு இல்லாதவர்கள் கொஞ்சம் ஈரம் குறைந்தவர்களாக இருப்பார்களோ என்னவோ.

"தாயினும் சாலப் பரிந்து " என்பார் மணிவாசகர்.

"தாயினும் நல்லான் " என்று குகனை சொல்வார்  கம்பர்.

நந்தியின் ஊரில் வாழும் ஒரு பெண். அவளுக்கு நந்திவர்மன் மேல் காதல். ஒரு தலைக் காதல்.

அவளுக்கு ஏதாவது ஒன்றின் மேல் பயம் என்றால், அது இந்த மாலைப் பொழுதின் மேல்தான்.

அது எப்ப வருமோ என்று பயந்து கொண்டே இருப்பாள்.

அவள் பயத்தை இன்னும் அதிகரிக்கும் படி, அந்த நிலவும், சீக்கிரம் சீக்கிரம் வந்து விடுகிறது.

கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல், வேகமாக வந்து விடுகிறது.

"பெண்கள் இல்லாத ஊரில் பிறந்தவர்கள் மாதிரி கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல்  இப்படி வருகிறாயே நிலவே " என்று அந்த நிலவின் மேல் கோபம் கொள்ளுகிறாள்.


பாடல்

மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்
                தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி நன்னாட்டில்
பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்
                வெண்ணிலாவே இந்த வேகம் உனக்காகாதே.



Wednesday, November 19, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இது உங்களுக்குச் சரிதானா ?

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இது உங்களுக்குச் சரிதானா ?


இராமனுக்கு தந்த வாக்குறுதியை மறந்ததால், சுக்ரீவன் மீது கோபம் கொண்டு இலக்குவன் அவனோடு சண்டை பிடிக்க மிகுந்த கோபத்தோடு வருகிறான்.

வானரங்கள் எல்லாம் தாரையிடம் வந்து அவளிடம் யோசனை கேட்டு நின்றன.

ஒரு பெண். ஒரு அரசை எப்படி செலுத்தி இருக்கிறாள் என்று கம்பன்  காட்டுகிறான்.

தன் முன்னால் பயந்து நடுங்கி நிற்கும் கூட்டத்தைப் பார்த்து தாரை சொல்லுகிறாள்

"வாலியின் உயிரை காலனுக்குக் கொடுத்து, வற்றாத செல்வத்தை உங்களுக்குக் கொடுத்த இராமனும் இலக்குவனும் ஊருக்கு வெளியே சும்மா உட்கார்ந்து இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தீர்களா ? இப்படி உதவி செய்தவர்களை புறக்கணிப்பது உங்களுக்கு தகுமா ?"

என்று அவர்களை கடிந்து கூறுகிறாள் .

பாடல்

'வாலி ஆர் உயிர் காலனும் வாங்க, விற்
கோலி, வாலிய செல்வம் கொடுத்தவர்
போலுமால், உம் புறத்து இருப்பார்! இது
சாலுமால், உங்கள் தன்மையினோர்க்கு எலாம்.

பொருள்

'வாலி ஆர் உயிர்  = வாலியின் உயிரை

காலனும் வாங்க = காலன் வாங்க

விற் கோலி = வில்லை வளைத்து 

வாலிய செல்வம் கொடுத்தவர் = வற்றாத செல்வம் கொடுத்தவர் (அல்லது வாலியின் அந்த செல்வத்தை கொடுத்தவர் )

போலுமால் = அவர்கள்

உம் புறத்து = உங்கள் ஊருக்கு வெளியே

இருப்பார்! = (சும்மா) இருப்பார்கள் என்று (நினைத்து அவர்களை புறக்கணிப்பது )

இது சாலுமால் = இது சரியா ?

உங்கள் தன்மையினோர்க்கு எலாம் =உங்களைப் போன்றோருக்கு எல்லாம்

நன்றி மறப்பது நன்றன்று என்பார் வள்ளுவர்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு என்பதும் அவர் வாக்கு.

நன்றி மறவாமையை அறமாகச் சொன்னவர்கள் நம் முன்னவர்கள்.

மேலும் சிந்திப்போம். 



திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 1

திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 1




"வேறு வேறு விதமாக இருக்கும் உடம்பினுள் என்னால் இருக்க முடியாது. ஐயா ! அரனே ! என்று போற்றி புகழ்ந்து, பொய்யானவெல்லாம் கெட மெய்யானவற்றை அடைந்து , மீண்டும் இங்கு வந்து வினை சேரும் இந்த பிறவியை அடையாமல், வஞ்சனையைச் செய்யும் இந்த புலன்களிடம் கிடந்து அகப்படாமல் என்னை காப்பவனே; நள்ளிருளில் நடனம் ஆடுபவனே."

பாடல்

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே

பொருள்

வேற்று = வெவேறு விதமான

விகார = வடிவங்கள் கொண்ட

விடக்குடம்பி னுட்கிடப்ப = ஊனாலான இந்த உடம்பினுள் கிடக்க

ஆற்றேனெம் ஐயா = ஆற்றமாட்டேன் என் ஐயா

அரனேயோ என்றென்று = அரனே என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து = போற்றி புகழ்ந்திருந்து

பொய்கெட்டு மெய்யானார் = பொய்யை விடுத்து மெய்யை அடைந்தார்

மீட்டிங்கு வந்து = மீண்டும் வந்து இங்கு

வினைப்பிறவி சாராமே = வினைக்கொண்ட இந்த பிறவியை அடையாமல்

கள்ளப் புலக்குரம்பைக் = கள்ளம் செய்யும் இந்த புலன்களின்

கட்டழிக்க வல்லானே = கட்டை அழிக்க வல்லவனே

நள்ளிருளில் = நடு இரவில்

நட்டம் = நடனம்

பயின்றாடு நாதனே = பயின்று ஆடும் நாதனே !


மிக மிக ஆழமான வரிகள்.

இதில் முதல் வரியைப் பார்ப்போம்.

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம்

"வெவ்வேறு விதமாக மாறும் இந்த உடம்பினுள் கிடக்க என்னால் முடியாது "

உங்கள் உடம்பைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன ?

உங்கள் உடம்பை உங்களுக்கு பிடிக்குமா ?

தங்கள் உடலை பிடிக்காதவர்கள் யார் இருப்பார்கள் ? அந்த உடலைத் தான் எப்படி எல்லாம் பாதுகாக்கிறோம் ?

சோப்பு, பவுடர், உதட்டுச் சாயம், முடி திருத்தம், உடற் பயிற்சி, என்று இந்த உடலை எப்படி எல்லாம் மெருகு ஏற்ற முடியுமோ அப்படியெல்லாம் அழகு படுத்துகிறோம்.

இந்த உடல் மூலம்தானே நாம் அத்தனை அனுபவங்களையும் பெறுகிறோம்.

புலன் இன்பங்களை அனுபவிக்கத்தானே இந்த பாடு படுகிறோம்.

ஆனால், சற்று ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் இந்த உடலால் சுகமா ? இந்த சுகம் நிரந்தரமா ? இன்பம் போல் தோன்றும் இந்த இந்த இன்பம் எவ்வளவு நாள் கூட வரும் ? இதன் முடிவு என்ன ?

வயதாகும். உடல் தளரும். நினைவு தப்பிப் போகும். இருமலும் சளியும் வந்து சேரும். கண் பார்வை மங்கும். தோல் சுருங்கும். எலும்பு வளையும். காது கேட்காது. படுக்கையை விட்டு எழுந்திருப்பதே பெரிய வேலையாகிப் போகும்.

மறதி வந்து, சேர்த்து வைத்த அனுபவம் எல்லாம் செல்லாக் காசாகிப் போகும்.

மனைவி யார், கணவன் யார், பிள்ளை யார், பெற்றோர் யார் என்று தெரியாமல் மலங்க மலங்க விழிக்க  வேண்டி இருக்கும்.

அருகில் நிற்பவர்கள் எல்லாம், "கால காலத்தில் போய் சேர்ந்தால் நல்லது ..." என்று சொல்லும் நாள் வரும்.

இந்த உடம்பு சுகமா ?

இந்த உடம்பு மாறிக் கொண்டே இருக்கிறது. குழந்தையாக, சிறுவன்/சிறுமியாக, குமரன்/குமரியாக, வயதாகி, கிழவன்/கிழவியாக....நாளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

இதற்கிடையில், நோய் நொடி வந்து படுத்து விடுகிறது.

நாளும் வயதாகிக் கொண்டே இருக்கும் இந்த உடலுக்கா இந்த பாடு ?

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேன்

வேறு வேறு விதமாக மாறிக் கொண்டே இருக்கும் இந்த உடம்பினுள் அடை பட்டு கிடக்க என்னால் முடியாது என்கிறார் மணிவாசகர். இந்த உடலை சிறையாக நினைக்கிறார். நம் உயிரை, எண்ணங்களை, நான் என்ற என்னை அடைத்து வைக்கும் சிறை இந்த உடல். நான் என்பது இந்த உடல் அல்ல என்று நினைத்தால் இந்த உடலின் பாரம் தெரியும் ?

"இங்கு யார் சுமந்து இருப்பார் இச்சரக்கை" என்பார் காளமேகம்.



முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன் ஒரு கோல் ஊன்றி
விதிர் விதிர்த்து கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி
இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசாமுன்
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே


முதுகைப் பிடித்துக் கொண்டு, கையால் தடவி தடவி , முன்னால் ஒரு கோலை ஊன்றிக் கொண்டு , உடல் நடுங்கி, கண் சுழன்று, இருமலோடு, இவர் எங்க அப்பா,  பெரிசு, என்று இளையவர் திட்டுமுன் , பத்ரிநாதனை வணங்குங்கள்  என்றார் ஆழ்வார். 

உடலினுள் அடை பட்டுக் கிடக்க முடியாது  என்கிறார்.

எது அடை பட்டுக் கிடக்கிறது ? உயிரா ? ஆன்மாவா ? நினைவுகளா ?

மாறும் உடலில் மாறாமால் இருக்கும் நான் யார் ?

சின்ன பிள்ளையாக இருக்கும் போதும் நான் என்று சொன்னேன்.

இளைஞனாக இருக்கும் போதும் நான் என்று சொன்னேன்.

கிழவனாக மாறும் போதும் நான் என்று சொல்வேன்.

உடல் மாறிக் கொண்டே இருக்கிறது...நான் என்பது எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது.

அது எது ?

உடலில் அடை பட்டு கிடைக்கவில்லை என்றால் அது எங்கு போகும் ?

அடைத்தது யார் ? விடுவிப்பது யார் ?

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம்