Saturday, January 17, 2015

நந்திக் கலம்பகம் - ஆண்களோடு பகை

நந்திக் கலம்பகம் - ஆண்களோடு பகை 


இந்த பெண் இவ்வளவு அழகாக இருக்கிறாள். இவளை இப்படி தெருவில் நடமாட விட்டிருக்கிறார்களே இது எவ்வளவு பெரிய ஆபத்து. 

இவளுடைய பெற்றோருக்கு ஆண்கள் மேல் என்ன பகையோ. இவள் இப்படி தெருவில் திரிந்தால் ஆண் பிள்ளைகளின் மனம் என்ன பாடு படும். இவளை அடைய எல்லோரும் முயல்வார்கள். எல்லோருக்குமா அவள் கிடைத்து விடுவாள் ? கிடைக்காதவர்கள் என்ன ஆவார்கள்....

சரி, பெற்றோர் தான் போகட்டும்...இந்த நந்தி வர்மன் இருக்கிறானே....குடிகளை காக்க வேண்டியது அவன் கடமை அல்லவா ? இவள் இப்படி ஊரில் திரிந்தால் ஆண்கள் பாதிக்கப் படுவார்களே. அவர்களை காக்கவேண்டியது மன்னனாகிய நந்தியின் கடமை அல்லவா ? இப்படி கடமை தவறிய மன்னனாக இருக்கிறானே என்று அந்த பெண்ணைப் பார்த்து அவள் அழகில் மனதை பறிகொடுத்த கவிஞன் பாடுகிறான் 

பாடல் 


அரிபயில் நெடுநாட்டத் தஞ்சனம் முழுதூட்டிப்
 புரிகுழல் மடமானைப் போதர விட்டாரால்
 நரபதி எனும்நந்தி நன்மயி லாபுரியில்

 உருவுடை இவள்தாயர்க் குலகொடு பகை உண்டோ?

பொருள் 

அரிபயில் = அறிவு முற்றாத (இளைஞர்கள்) மத்தியில் 

நெடுநாட்டத் தஞ்சனம் = நீண்ட கண்களில் மையை 

முழுதூட்டிப் = முழுவதுமாக தீட்டி 

புரிகுழல் = முடியை சரி செய்து 

மடமானைப் = பேதை போன்ற இந்தப் பெண்ணை 

போதர விட்டாரால் = வெளியில் விட்டதால் 

நரபதி எனும் = மக்களின் தலைவன் என்ற 

நந்தி = நந்தி வர்மனின் 

நன்மயி லாபுரியில் = நல்ல நாட்டில் 


உருவுடை= அழகான 

இவள் தாயர்க் = இவளின் தாயார் 

குலகொடு பகை உண்டோ? = ஆண் குலத்தோடு பகை கொண்டவளோ ?



Friday, January 16, 2015

திருக்குறள் - அடக்கம் அமரருள் உய்க்கும் - பாகம் 2

திருக்குறள் - அடக்கம் அமரருள் உய்க்கும்  - பாகம் 2


அடக்கம் என்பதை ஒரு ஒழுக்கமாக நம் முன்னவர்கள் கருதி இருக்கிறார்கள்.

அடக்கம் என்பது ஒரு நல்ல குணமா ? அதை நம் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டுமா ?

அடக்கம் என்பது ஒரு தாழ்வு மனப்பான்மையை  வளர்த்து விடாதா ? அடக்கமாக இருப்பவர்களை உலகம் எப்படி இனம் கண்டு கொள்ளும் ? நம்மை நாம் எடுத்து சொல்லாவிட்டால் எப்படி நாம் முன்னேற முடியும் ?

எனவே அடக்கம் ஒரு தேவையற்ற குணம் என்று வாதிப்பவர்களும் உண்டு.

வள்ளுவர் சொல்கிறார்....அடக்கம் ஒருவனை தேவர்களிடையே சென்று சேர்த்து விடும். அடங்காமை பெரிய இருளில் தள்ளி விடும் என்று.


பாடல்

அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.

சீர் பிரித்த பின்

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும்.

பொருள்

அடக்கம்  = அடக்கமான குணமானது

அமரருள் உய்க்கும் = ஒருவனை தேவர்களிடம் சேர்த்து விடும்

அடங்காமை = அடங்காமை என்ற குணம்

ஆர் இருள் = அடர்ந்த இருளில்

உய்த்து விடும்.= சேர்த்து விடும்

மேலோட்டமாக பார்த்தால் பொருள் அவ்வளவுதான்.

சற்று ஆராய்ச்சி செய்வோம்.

எப்படி, அடக்கம் ஒருவனை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் ?

அந்த கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னால், அடக்கம் என்றால் என்ன என்று ஆராய்வோம்.

எதில் அடக்கம் வேண்டும் ?

மன, மொழி, மெய்களில் அடக்கம் வேண்டும்.

மன அடக்கம்.

பேச்சில் அடக்கம்.

புலனடக்கம்.


மனம் அடங்கினால் சிந்தனை ஒன்று படும். சிதறாத சிந்தனை அறிவை வளர்க்க உதவி செய்யும். அலை பாயாத மனம் இருந்தால் ஆசை தறி கெட்டு ஓடாது.

மொழி அல்லது பேச்சில் அடக்கம். தேவையற்ற பேச்சுக்கள் , புரணி,  புரட்டு,பொய்,  என்று சொற்குற்றங்கள் விலகிப் போகும் பேச்சில் அடக்கம் இருந்தால்.

புலன் அடக்கம்  - கட்டுப்பாடு அற்று ஓடும் புலன்களை அடக்கினால் வாழ்வில்  பல சிக்கல்கள் தவிர்க்கப்படும். அளவுக்கு அதிகமான தீனி, கட்டுபாடற்ற பெண்ணாசை இவை எல்லாம் மனிதனை வீழ்த்தும். புலன் அடக்கம் இருந்தால் வாழ்வில் வெற்றிகள் வந்து சேரும். சேர்ந்த வெற்றிகள் நிலைக்கும்.

இந்த மூன்றையும் அடக்கினால் வாழ்வு சிறக்குமா இல்லையா ?

இந்த குறளை பற்றி மேலும் சிந்திப்போம்.

 
------------------------------------------------- பாகம் 2 ----------------------------------------------------------

சரி, அது என்ன "அமருருள் உய்க்கும்"

உய்க்கும் என்றால் கொண்டு சேர்க்கும் என்று பொருள்.

ஓடுகின்ற ஆற்றில் மரக்கட்டையை போட்டால் அந்த ஆறு கட்டையை கடலில்  கொண்டு சேர்த்து விடும். கட்டை ஒண்ணும் செய்ய வேண்டாம். சும்மா அந்த  ஆற்றில் கிடந்தால் போதும்.

மிகுந்த கூட்ட நெரிசல் உள்ள ஒரு புகை வண்டி  நிலையத்தில், வண்டியை விட்டு இறங்கினால், அந்த கூட்டமே நம்மை வாசல் வரை கொண்டு சேர்த்து விடும்.

ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போக வேண்டும் என்றால், சரியான வண்டியில்   ஏறி அமர்ந்து விட்டால் போதும், அந்த வண்டி நம்மை சேர வேண்டிய இடத்தில்   சேர்த்து விடும்.

அதற்கு உய்க்கும் என்று பெயர்.

அடக்கம் என்ற ஒரு குணம் அமைந்து விட்டால், அது உங்களை அமரர்   இருக்கும் இடமான தேவ லோகத்தில் கொண்டு சேர்த்து விடும்.

சரி, அடக்கம் இல்லை என்றால் என்ன ஆகும் ?

"ஆரிருள் உய்த்து விடும் "

அது என்ன ஆரிருள் ?

மிகுந்த இருள் . அடர்ந்த இருள்.

ஏன் ஆரிருள் என்று சொன்னார் ?

இருட்டில் இருப்பவனுக்கு  பக்கத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது.

அடக்கம் இல்லாதவன், புலன்கள் போன வழியில் போவான். அவனிடம் என்ன  இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாது.

அழகான மனைவி, அன்பான பிள்ளைகள், சொத்து சுகம் இவற்றை எல்லாம்  கவனிக்காமல் , வேறொன்றின் பின் செல்வான். அருகில் உள்ளது தெரியாது.

அவனுக்கு எங்கே போகிறோம் என்று தெரியாது. இருட்டு.

புலன் அடக்கம்   இல்லாதவன் கண்டதின் பின் சென்று உடல் நலத்தையும் அழித்து,  சொத்தையும் அழித்து, சுற்றத்தையும் இழப்பான்.

அடக்கம் இன்மை  இருட்டுக்குள் தள்ளி விடும்.

எங்கே இருக்கிறோம் என்று தெரியாது, என்ன இருக்கிறது என்று தெரியாது, எங்கே போகிறோம்  என்று தெரியாது. கண் தெரியாத இருட்டு.

புலன் அடக்கம் இல்லாதவனைப் பார்த்தால்  தெரியும் , ஏதோ குருடன் போல தவறான  பாதையில் செல்வது தெரியும்.

மருத்துவர் சொல்லி இருப்பார் புகை பிடிக்கக் கூடாது,  மது அருந்தக் கூடாது என்று,  ஆனால், கேட்க்காமல் நேரே அந்த கடைக்குத்தான் செல்வான்.

எனவே,

சிந்தித்துப் பாருங்கள்,  அடக்கம் எவ்வளவு உயர்ந்தது என்று. அடக்கம் இன்மை  எத்தனை துன்பங்களுக்கு காரணம்  என்று.

சாதாரண குறள் இல்லை. நீள யோசிக்க வேண்டிய குறள். வாழ்வில் கடை பிடிக்க வேண்டிய   குறள் .

Thursday, January 15, 2015

திருக்குறள் - அடக்கம் அமரருள் உய்க்கும்

திருக்குறள் - அடக்கம் அமரருள் உய்க்கும் 


அடக்கம் என்பதை ஒரு ஒழுக்கமாக நம் முன்னவர்கள் கருதி இருக்கிறார்கள்.

அடக்கம் என்பது ஒரு நல்ல குணமா ? அதை நம் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டுமா ?

அடக்கம் என்பது ஒரு தாழ்வு மனப்பான்மையை  வளர்த்து விடாதா ? அடக்கமாக இருப்பவர்களை உலகம் எப்படி இனம் கண்டு கொள்ளும் ? நம்மை நாம் எடுத்து சொல்லாவிட்டால் எப்படி நாம் முன்னேற முடியும் ?

எனவே அடக்கம் ஒரு தேவையற்ற குணம் என்று வாதிப்பவர்களும் உண்டு.

வள்ளுவர் சொல்கிறார்....அடக்கம் ஒருவனை தேவர்களிடையே சென்று சேர்த்து விடும். அடங்காமை பெரிய இருளில் தள்ளி விடும் என்று.


பாடல்

அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.

சீர் பிரித்த பின்

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும்.

பொருள்

அடக்கம்  = அடக்கமான குணமானது

அமரருள் உய்க்கும் = ஒருவனை தேவர்களிடம் சேர்த்து விடும்

அடங்காமை = அடங்காமை என்ற குணம்

ஆர் இருள் = அடர்ந்த இருளில்

உய்த்து விடும்.= சேர்த்து விடும்

மேலோட்டமாக பார்த்தால் பொருள் அவ்வளவுதான்.

சற்று ஆராய்ச்சி செய்வோம்.

எப்படி, அடக்கம் ஒருவனை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் ?

அந்த கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னால், அடக்கம் என்றால் என்ன என்று ஆராய்வோம்.

எதில் அடக்கம் வேண்டும் ?

மன, மொழி, மெய்களில் அடக்கம் வேண்டும்.

மன அடக்கம்.

பேச்சில் அடக்கம்.

புலனடக்கம்.


மனம் அடங்கினால் சிந்தனை ஒன்று படும். சிதறாத சிந்தனை அறிவை வளர்க்க உதவி செய்யும். அலை பாயாத மனம் இருந்தால் ஆசை தறி கெட்டு ஓடாது.

மொழி அல்லது பேச்சில் அடக்கம். தேவையற்ற பேச்சுக்கள் , புரணி,  புரட்டு,பொய்,  என்று சொற்குற்றங்கள் விலகிப் போகும் பேச்சில் அடக்கம் இருந்தால்.

புலன் அடக்கம்  - கட்டுப்பாடு அற்று ஓடும் புலன்களை அடக்கினால் வாழ்வில்  பல சிக்கல்கள் தவிர்க்கப்படும். அளவுக்கு அதிகமான தீனி, கட்டுபாடற்ற பெண்ணாசை இவை எல்லாம் மனிதனை வீழ்த்தும். புலன் அடக்கம் இருந்தால் வாழ்வில் வெற்றிகள் வந்து சேரும். சேர்ந்த வெற்றிகள் நிலைக்கும்.

இந்த மூன்றையும் அடக்கினால் வாழ்வு சிறக்குமா இல்லையா ?

இந்த குறளை பற்றி மேலும் சிந்திப்போம்.

  


Monday, January 12, 2015

திருவாசகம் - ஆனந்த பரவசம் - என் நான் செய்கேன், பேசாயே

திருவாசகம் - ஆனந்த பரவசம் - என் நான் செய்கேன், பேசாயே 


அச்சம். பயம்.

நல்லது செய்யவும் அச்சம். தீயதை விட்டு விலக அச்சம். உண்மையைத் தேட அச்சம்.

நாம் அச்சப் படாத ஒன்று உண்டா இந்த உலகில்.

அஞ்சி அஞ்சி சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை  என்றான் பாரதி. 

புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ள அச்சம். பழைய கருத்துகளை விட்டு விட அச்சம்.

இந்த பிறவியைக் கண்டு அச்சம். பிணி, மூப்பு, மரணம் இவற்றைக் கண்டு அச்சம்.

அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் என்கிறார் மணிவாசகர்.

மேலும்  சொல்கிறார்.

நம்மிடம் இருந்து பொய் முதலில் சிறிதாகத் தோன்றும். நாளடைவில் அதுவே வளர்ந்து பெரிய மரமாகி விடும். விதை போல இருந்த ஒன்று மரம் போல மாறி விடும்.

பொய்யே வாழ்க்கையாகிப் போகிறது. இப்படி இருந்தால் உண்மையை எப்படி கண்டு உணர்வது ? பயப்படுகிறார் மணிவாசகர். 

என்ன செய்வது என்று தெரியாமல் , இறைவனை கேட்கிறார். இறைவனோ பேசாமல் இருக்கிறான். "நீயும் பேசாவிட்டால் நான் என்ன செய்வேன் " என்று வருந்துகிறார் இறைவனிடம். 

பாடல்

விச்சுக் கேடு பொய்க்காகா தென்றிங் கெனைவைத்தாய்
இச்சைக் கானார் எல்லோரும் வந்துன் தாள்சேர்ந்தார்
அச்சத் தாலே ஆழ்ந்திடு கின்றேன் ஆரூர்எம்
பிச்சைத் தேவா என்நான் செய்கேன் பேசாயே.

பொருள்

விச்சுக் = வித்து என்பது விச்சு என்று ஆனது. வித்து என்றால் விதை

கேடு = அழிந்து.

பொய்க்காகா தென்றிங் கெனைவைத்தாய் = பொய்க்கு ஆகாதென்று இங்கு எனை வைத்தாய். அதாவது, பொய் என்பது இந்த உலகத்தில் மறைந்து போய் விடக் கூடாது என்பதற்காக என்னை  அந்த பொய்யின் விதையாக வைத்து இருக்கிறாயா என்று கேட்கிறார்.  அதாவது, எல்லோரும் நல்லவர்களாகி விட்டார்கள். அதனால் இந்த உலகில் பொய் என்பது இல்லாமல் போய் விட்டது. நான் ஒருவன் மட்டும் அதன் விதை போல பொய்யை மீண்டும் மீண்டும்  தோற்றி வைத்துக் கொண்டு இருக்கிறேன் என்கிறார்.

தன்னைத் தவிர மற்ற எல்லோரும் நல்லவர்கள் என்கிறார். என்ன ஒரு பணிவு.

இச்சைக் கானார் = உன்மீது ஆசைப் பட்டோர்

எல்லோரும் = எல்லோரும்

வந்துன் தாள்சேர்ந்தார் = வந்து உன் திருவடிகளை அடைந்து விட்டனர்

அச்சத் தாலே = பயத்தால்

ஆழ்ந்திடு கின்றேன் = மூழ்குகின்றேன்

ஆரூர் = திரு ஆரூர்

எம் = எம்முடைய

பிச்சைத் தேவா = மண்டை ஓட்டில் பிச்சை ஏற்கும் தலைவனே

என்நான் செய்கேன் = நான் என்ன செய்வேன்

பேசாயே. = நீ ஏதாவது பேசு

பொய்யை விடுத்து இறைவன் மேல் அன்பு கொள்ள வேண்டும்.


Sunday, January 11, 2015

குறுந்தொகை - அருளும் அன்பும் நீங்கி

குறுந்தொகை - அருளும் அன்பும் நீங்கி 


நாலு வரிக்குள் காதலின் பிரிவை, தவிப்பை, ஏக்கத்தை பிரதிபலிக்கும் பாடல் இது.

தலைவன் , பொருள் தேடி தலைவியை விட்டு பிரிந்து சென்று விட்டான். அவனை எல்லோரும் பெருமையாக  பேசுகிறார்கள்.வலியவன், அறிவாளி என்று. இப்படி கட்டிய மனைவியை விட்டு பிரிந்து செல்பவன் பெரிய அறிவாளி என்றால், அவனை விட்டு பிரிய முடியாமல் தவிக்கும் நாம் முட்டாளாகவே இருந்து விட்டு போவோம் என்று அலுத்து சலித்துக்  கொள்கிறாள்.

பாடல்

அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து  
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்  
உரவோ ருரவோ ராக  
மடவ மாக மடந்தை நாமே. 

சீர் பிரித்த பின்

அருளும் அன்பும்  நீக்கித் துணை துறந்து  
பொருள் வயிற் பிரிவோர் உரவோராயின்   
உரவோர்  உரவோர் ஆக  
மடவம ஆக மடந்தை நாமே. 

பொருள்

அருளும் = அருளும்

அன்பும் = அன்பும்

 நீக்கித் = நீங்கி

துணை துறந்து = துணையான என்னை துறந்து
 
பொருள் வயிற் = பொருள் வேண்டி

பிரிவோர் = பிரிந்து சென்றவர்

உரவோராயின் = பெரிய அறிவுடையவராயின்
 
உரவோர்  உரவோர் ஆக = அவர் பெரிய அறிவாளியாகவே இருந்து விட்டுப் போகட்டும்
 
மடவம்  ஆக மடந்தை நாமே.= அறிவற்ற மடந்தையரான நாம் மடந்தையாரகவே இருந்து விட்டு போவோம்

சற்று ஆழமாக சிந்தித்தால் மேலும் சில அர்த்தம் தோன்றும்.  இரசிக்கலாம்.

அன்பு என்பது நம்முடன் தொடர்புள்ளவர்களிடம்  வருவது.

அருள் என்பது தொடர்பு இல்லாதவர்களிடம் கூட வருவது.

நான் ஒரு பெண் என் மேல் அருள் கொண்டு  இருக்கலாம்.

அவரது மனைவி என்று என் மேல் அன்பு கொண்டு இருக்கலாம். 

இரண்டும் இல்லாமல் என்னை விட்டு விட்டு சென்று விட்டார்.

எதற்கு ?

பொருள் சேர்க்க.

குடும்பத்தை விட, பொருள் பெரிதாகப் போய் விட்டது அவருக்கு. 

அவரைப் போய் இந்த உலகம்   நல்லவன்,வல்லவன் என்று சொல்கிறது. 

அப்படிப்பட்ட உலகம் , அவரை போக வேண்டாம் என்று சொன்ன என்னை என்ன சொல்லும் ?

முட்டாள் என்று தானே சொல்லும். 

சொல்லி விட்டு போகட்டும். நான் முட்டாளாகவே இருந்து விட்டு போகிறேன் என்று நொந்து கூறுகிறாள் அவள். 

அவனும்  புரிந்து கொள்ளப்  போவதில்லை. அவனைப் பற்றி யாரிடமாவது சொல்லலாம் என்றால் அவர்களும் அவனுக்கு பரிந்து கொண்டுதான்  பேசுவார்கள். எனக்கு என்று பேசுவதற்கு யாரும் இல்லை என்று அவள் தனிமையில்   புலம்புகிறாள்.

காலம் கடந்தும் அவள் சோகம் இன்றும் நம் மனதை ஏதோ செய்கிறது. 




Thursday, January 8, 2015

பெரிய புராணம் - அலகில் சோதியன்

பெரிய புராணம் - அலகில் சோதியன் 


இறைவன் இருக்கிறானா என்ற சர்ச்சை இருந்து கொண்டே  இருக்கிறது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இறைவன் இருக்கிறான் என்று நம்பிய பெரியவர்கள் அவனை சொல்லுவதற்கு படாத பாடு படுகிறார்கள்.

நாம் அறிவியல் படிக்கும் போது எதை ஒன்றை அறிந்து கொள்ள வேண்டுமென்றாலும் அதற்கு ஒரு அளவு வேண்டும். அளவை கண்டு கொள்ள ஒரு அலகு (unit ) வேண்டும்.

நேரம் என்றால் நொடி, வினாடி,  நிமிடம்,மணி
தூரம் என்றால் மில்லி மீட்டர், மீட்டர், கிலோ மீட்டர்
எடை என்றால் கிராம், கிலோ கிராம்

இப்படி எதை எடுத்தாலும் அதற்கு என்று ஒரு அலகு உண்டு.

இறைவனை எப்படி அளந்து சொல்லுவது ?

இவ்வளவு உயரம், இவ்வளவு எடை, இன்ன நிறம், என்று ஒன்று இருந்தால் சொல்லி விடலாம்.

மனிதனின் அளவுக்குள் அடங்குபவனா அவன் ?

எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை...

தெய்வப் புலவர் சேக்கிழார் சொல்லுகிறார்

"அலகில் சோதியன்" அலகு என்று ஒன்று இல்லாதவன். அவனை எந்த விதத்திலும் அளந்து சொல்ல முடியாது.


பாடல்

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

அலகில்லாத ஒன்றை உங்களால் சிந்திக்க முடியுமா ?

எதை அளக்க முடியுமோ  அது இறை அல்ல.

சிலை, படம், இவை எல்லாம் அளந்து செய்தது.

அவன் அலகில் சோதியன்


Wednesday, January 7, 2015

சிவபுராணம் - சிரம் குவிவார் ஓங்குவிக்கும்

சிவபுராணம் - சிரம் குவிவார் ஓங்குவிக்கும் 




வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க 
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க 
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க 
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க 

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

கிரிகெட் விளையாட்டைப் பார்த்து இருக்கிறீர்களா ? ஒருவன் அவுட் ஆனவுடன் அவனுக்கு பந்தைப் போட்டவன் என்னவெல்லாம் கோஷ்டி காண்பிப்பான் ? கையை மடக்குவதும், கத்துவதும் என்று ஏறக்குறைய எல்லோருமே அப்படித்தான் செய்கிறார்கள்.

கால்பந்து விளையாட்டில் கோல் அடித்தவன் செய்யும் அங்க சேஷ்டைகளும் ஏறக்குறைய ஒரே மாதிரித்தான் இருக்கும்.

ஏன் அந்த மாதிரி செய்கிறார்கள் ?

வெற்றி அடையும் போது  உடல் அதை வெளிப் படுத்துகிறது.

கோபம் வந்தால் பல்லைக் கடிக்கிறோம்.

பயம் வந்தால் சுருண்டு கொள்கிறோம்.

மன நிலைக்கு தங்குந்தவாறு உடல் நிலை மாறு படுகிறது.

சந்தோஷமாக இருப்பவனையும்,  சோகமாக இருப்பவனையும் அவன் நடக்கும்  விதம், உட்காரும் விதம், அவன் பேசும் பேச்சு இவற்றைக் கொண்டு நாம்  தெரிந்து கொள்ள முடியும்.

யோக சாஸ்திரம் கண்டு சொன்ன மகத்தான உண்மை என்னவென்றால் எப்படி மன நிலை உடலை பாதிக்கிறதோ, அதே போல உடல் நிலை மனதைப் பாதிக்கும் என்று.

உதாரணமாக,

நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நம் முதுகு நேராக இருக்கும், நம் மூச்சு வேகமாக இருக்கும்...

நாம் சோகமாக இருந்தால், முதுகு கூன் போடும், மூச்சு நீண்டதாக இருக்கும்.

இப்போது சற்று மாற்றிப் பார்ப்போம்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது சற்று கூன் போட்டு அமருங்கள், நீண்ட மூச்சு விட்டுப்  பாருங்கள்.....சிறிது நேரத்தில் உங்கள் மகிழ்ச்சி பறந்து போய்விடும்....சோகம் வந்து ஒட்டிக் கொள்ளும்.

அதே போல் சோகமாக இருக்கும் போது நேராக அமர்ந்து, வேக வேக மாக மூச்சு விட்டுப் பாருங்கள் ... சோகமாக இருக்க முடியாது.

ஒவ்வொரு மன நிலையம், ஒரு உடலின் நிலையைப் பொறுத்து அமைகிறது.

ஒவ்வொரு உடல் நிலையும், ஒரு மன நிலையைப் பொறுத்து அமைகிறது.

உடலும் மனமும்  ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

மனதை மாற்ற வேண்டுமா ? எப்போதும் மிகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா ? உடல்  நிலையை மாற்றுங்கள்...நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது எப்படி இருக்கிறீர்கள்  என்று கவனித்துப் பாருங்கள். அப்படி செய்தால் நீங்கள் தானகவே  மகழ்ச்சி அடைவீர்கள்.

யோகம் சொல்வது இதைத்தான்.

உடலையும், உள்ளத்தையும் இணைப்பது யோகம். இவற்றை ஒன்று படுத்துவது  யோகம்.

சரி , அதற்கும் இந்த சிவ புராண பாடலுக்கும் என்ன சம்பந்தம் ?