Thursday, July 23, 2015

அறநெறிச்சாரம் - அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்

அறநெறிச்சாரம் - அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் 


படிக்க வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.

எங்க நேரம் இருக்கு ? காலைல எந்துரிச்சா இராத்திரி படுக்க போற வரை நேரம் சரியா இருக்கு. இதுல நல்ல நூல்களை எங்க படிக்க நேரம் இருக்கு. எல்லாம் retire ஆனப்புறம் பாத்துக்கலாம் என்று தள்ளிப் போடாதீர்கள்.

யாருக்குத் தெரியும், கூற்றுவன் எப்போது ஓலை கொண்டு வருவான் என்று.

இப்பவே ஆரம்பித்து விடுங்கள். ஏற்கனவே ரொம்ப லேட்டு. இன்னும் காலம் தாழ்த்தாமல் , இன்றே தொடங்கிவிடுங்கள்.

பாடல்

மின்னு மிளமை உளதாம் எனமகிழ்ந்து
பின்னை யறிவெனென்றல் பேதைமை-தன்னைத்
துணித்தானும் தூங்கா தறஞ்செய்க கூற்றம்
அணித்தாய் வருதலு முண்டு.

சீர் பிரித்த பின்

மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து 
பின்னை அறிவன் என்றால் பேதைமை - தன்னைத் 
துணித்தானும் தூங்காது அறம் செய்க கூற்றம் 
அணித்தாய் வருந்தலும் உண்டு 

பொருள்

மின்னும் = மின்னலைப் போன்ற

இளமை = இளமை

உளதாம் = எப்போதும் உள்ளது

என மகிழ்ந்து = என்று மகிழ்ந்து

பின்னை அறிவன் என்றால் = பின்னால் அறிந்து கொள்ளலாம் என்றால்

பேதைமை = அது முட்டாள்தனம்

தன்னைத் = தன்னையே

துணித்தானும் = வெட்டினாலும். இங்கே, வருத்தினாலும் என்று பொருள் கொள்வது சரியாக  இருக்கும்.

தூங்காது அறம் செய்க = காலம் தாழ்த்தாமல் அறம் என்பது என்ன என்று அறிந்து அதன் வழி நிற்க

கூற்றம் = எமன்

அணித்தாய் = இளமை பருவத்திலும்

 வருந்தலும் உண்டு  = வருவது உண்டு. வயதான பின் தான் மரணம் வர வேண்டும் என்று ஒரு சட்டமும் இல்லை.  எப்போது வேண்டுமானாலும் வரலாம்.


மின்னும் இளமை....மின்னல் மிகப் பிரகாசமாக இருக்கும். கண் கூசும். மிக பலம் வாய்ந்தது. இருந்தாலும், மிக சொற்ப நேரமே இருக்கும். இளமையும் அப்படித்தான். ஆரவாரமாய் இருக்கும். சட்டென்று முடிந்து விடும். 

கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் 
வளரொளி மாயோன் மருவிய கோயில் 
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை 
தளர்விளராகில் சார்வது சதிரே.  என்பார் நம்மாழ்வார். 

கிளர்ந்து எழும் இளமை. எதுனாலும் நான் செய்கிறேன் என்று முன்னால் வந்து நிற்கும் இளமை. அது முடிவதற்குள் , தளர்ந்து போவதன் முன்னம் திருமாலிருஞ்சோலைக்கு வாருங்கள் என்கிறார். இளமை போன பின், முட்டு வலிக்கும், முதுகு வலிக்கும், மலை ஏற முடியாது. உடம்பு நம் சொற்படி கேட்கும்போதே  திருத் தலங்களுக்கு சென்று வந்து விடுங்கள். அப்புறம் ஒரு வேளை முடியாமல்  போனாலும் போகலாம். 

இளமையிலேயே நல்லவற்றை செய்து விடுங்கள். 


திருவருட்பா - கருணைக் கடலே

திருவருட்பா - கருணைக் கடலே 


வள்ளலாரின் பாடல்கள் மிக மிக எளிமையானவை. ஒரு தரம் வாசித்தால் மனதில் ஒட்டிக் கொள்ளும்.

அப்படி ஒரு பாடல்

மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் 
          மனந்தளர்ந் தழுங்கிநாள் தோறும் 
     எண்ணினுள் அடங்காத் துயரொடும் புலையர் 
          இல்லிடை மல்லிடு கின்றேன் 
     விண்ணினுள் இலங்கும் சுடர்நிகர் உனது 
          மெல்அடிக் கடிமைசெய் வேனோ 
     கண்ணினுள் மணியே ஒற்றியங் கனியே 
          கடவுளே கருணையங் கடலே. 


பொருள்

மண்ணினுள் மயங்கி = இந்த மண்ணுலகில் மயங்கி

வஞ்சக வினையால் = என் வஞ்சக வினையால்

மனந்தளர்ந் தழுங்கி  = மனம் தளர்ந்து அழுங்கி

நாள் தோறும்  = தினமும்

எண்ணினுள் = எண்ணில்லாத

அடங்காத் துயரொடும் = அளவற்ற துயரத்தோடு

புலையர் = புலையர்

இல்லிடை மல்லிடு கின்றேன் = இல்லத்தின் இடையில் சண்டை பிடிக்கிறேன்.

விண்ணினுள் இலங்கும் சுடர் நிகர் =  வானில் உள்ள சுடர் போன்ற

உனது = உனது

மெல்அடிக் கடிமைசெய் வேனோ = மெல் அடிகளுக்கு அடிமை செய்வேனோ

கண்ணினுள் மணியே = கண்ணில் உள்ள மணி போன்றவனே

ஒற்றியங் கனியே = திருவொற்றியூரில் உள்ள கனி போன்றவனே

கடவுளே கருணையங் கடலே. = கடவுளே, கருணைக் கடலே

சில சமயம் எளிமையாக இருக்கிறதே என்று நாம் அதில் உள்ள ஆழத்தை அறியாமல்  இருந்து விடுவோம்.

இந்தப் பாடலை பற்றி சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.


மண்ணினுள் மயங்கி = இந்த மண்ணுலகில் மயங்கி 

அது என்ன மயக்கம் ?  

நாம் எதில் தான் மயங்கவில்லை எங்கே. இந்த உடல் நமது என்று நினைக்கிறோம். என்றும் இளமையாக இருப்போம் என்று நினைக்கிறோம். என்றும்  நிலைத்து இருப்போம் என்று நினைக்கிறோம். இந்த மனைவி, மக்கள் எல்லாம்  நம் மேல் எப்போதும் நம் மீது அன்புடன் இருப்பார்கள் என்று நினைத்து  மயங்குகிறோம். இந்த சொத்து எப்போதும் நம்மோடு இருக்கும் என்று  நினைக்கிறோம். பணம் நம்மை அனைத்து துன்பத்தில் இருந்தும் காப்பாற்றி  விடும் என்று நினைக்கிறோம். எத்தனை மயக்கம். 

எது உண்மை, எது பொய், எது நிரந்தரம், யார் நட்பு, யார் பகை, எது சரி , எது தவறு என்று தெரியாமல் தடுமாறுகிறோம். 

தெரிவது போல இருக்கிறது. ஆனால் முழுவதும் தெரியவில்லை. எனவே "மயக்கம்" என்றார். 

வஞ்சக வினையால் = என் வஞ்சக வினையால் 

ஒரு வினை செய்யும் போது அதன் விளைவு தெரியவில்லை. முதலில் நல்லா இருப்பது போல  இருக்கும். பின்னால் சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற வினைகள் மட்டும் அல்ல,  அளவற்று  உண்பது, சோம்பேறித்தனம் போன்ற தீயவை போல தெரியாத வினைகள் கூட  பின்னாளில் தீமையாக முடியும். எனவே வஞ்சக வினை என்றார்.  பின்னாளில் தீமை வரும் என்றால் அது முதலிலேயே கடினமாய் இருந்து விட்டால்  நாம் செய்ய மாட்டோம். முதலில் சுகமாக இருக்கும், பின்னாளில் சிக்கலில் கொண்டு  போய் மாட்டி விடும். 



பொல்லா வினை உடையேன் புகழுமாறு ஒன்றறியேன் என்பார் மணிவாசகர். பொல்லாத வினை. 




மனந்தளர்ந் தழுங்கி  = மனம் தளர்ந்து அழுங்கி 

மனம் ஏன் தளர வேண்டும் ? நல்லது என்று ஒன்றை செய்கிறோம், அது வேறு விதமாக போய் முடிகிறது. எளிதாக கிடைக்கும் என்று நினைத்தது கை விட்டு நழுவிப் போகும், நமக்கு கிடைக்கும் என்று நினைத்தது வேறு யாருக்கோ கிடைத்து விடிகிறது.  வயதாக வயதாக உடல் நிலை மோசமாகும். இவற்றை எல்லாம் பார்க்கும் போது மனம் தளரும். 

"சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக் கொள்ளே" என்பார் மணிவாசகர். 

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட 
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் 
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே 
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 


மேலும் சிந்திப்போம்.


Saturday, July 18, 2015

பிரபந்தம் - நின்றதும், இருந்ததும், கிடந்ததும்

பிரபந்தம் - நின்றதும், இருந்ததும், கிடந்ததும் 


இறைவனை எங்கெல்லாமோ தேடி திரிகிறோம். அவன் இப்படி இருப்பானா, அப்படி இருப்பானா என்று படம் வரைந்து, சிலை வடித்து அழகு பார்க்கிறோம்.

நாம் இறைவனைப் பற்றி அறிந்தது எல்லாம் மற்றவர்கள் சொல்லக் கேட்டதுதான். சொல்ல, படிக்கக் கேட்டதுதான்.

எல்லாம் இரவல் ஞானம். நம் சொந்த அனுபவம் என்று ஒன்று இல்லை.

அவர் சொன்னார், இவர் சொன்னார், அதில் அப்படி சொல்லி இருக்கிறது, இதில் இப்படி சொல்லி இருக்கிறது என்று படித்ததை, கேட்டது கிளிப் பிள்ளை மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

நாம் பிறப்பதற்கு முன்னால் ஏதேதோ நடந்ததாகச் சொல்கிறார்கள். புராணங்கள், இதிகாசங்கள், எல்லாம் இறைவன் அதைச் செய்தான், இதைச் செய்தான் என்று சொல்கின்றன.

திருமழிசை ஆழ்வார் சொல்கிறார்.

"இறைவன் அங்கே நிற்கிறான், இங்கே இருக்கிறான், இங்கே கிடக்கிறான் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் நடந்தது நான் பிறப்பதற்கு முன்னால் . நான் பிறந்தபின் , அதாவது என் அனுபவத்தில், நான் அறிந்தது என்னவென்றால்  இறைவன் இருப்பது என் மனத்துள்ளே என்பதைத்தான்"

பாடல்

நின்றதெந்தை யூரகத்தி ருந்ததெந்தை பாடகத்து
அன்றுவெஃக ணைக்கிடந்த தென்னிலாத முன்னெலாம்
அன்றுநான்பி றந்திலேன்பி றந்தபின்ம றந்திலேன்
நின்றதும் மிருந்ததும்கி டந்ததும்மென் நெஞ்சுளே.

சீர் பிரித்த பின்னே

நின்றது என் தந்தை ஊரகத்தில் இருந்தது என் தந்தை பாடகத்து
அன்று வெஃக அணை கிடந்தது எண்ணிலாத  முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே 

பொருள்


நின்றது  = நின்ற திருக்கோலத்தில் சேவை சாதித்தது

என் தந்தை = என் தந்தை

ஊரகத்தில் = திருஊரகம் என்ற திருத் தலத்தில்

இருந்தது = அமர்ந்த கோலத்தில் சேவை சாதித்தது

என் தந்தை =என் தந்தை

பாடகத்து = பாடகம் என்ற திருத்தலத்தில்


அன்று = அன்று

வெஃக அணை கிடந்தது = திரு வெக்கா என்ற திருத்தலத்தில் சயன கோலத்தில் இருந்தது

எண்ணிலாத  முன்னெலாம் = எண்ணில் அடங்காத காலத்தின் முன்னம்

அன்று நான் பிறந்திலேன் = அன்று நான் பிறக்கவில்லை

பிறந்தபின் = பிறந்தபின்

மறந்திலேன் = மறந்து அறியேன்

நின்றதும் = நின்றதும்

இருந்ததும் = இருந்ததும்

கிடந்ததும் = கிடந்ததும்

என் நெஞ்சுளே = என் மனதிலே

மனதுக்குள் தேடுங்கள்.  அவன் அங்குதான் இருக்கிறான்.




Thursday, July 16, 2015

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 4 - முகம் வருடிய கதிரவன்

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 4 - முகம் வருடிய கதிரவன்


சீதையை சென்று அடைய வழி சொல்லுமாறு வருணனை வேண்டி இராமன் தவம் இருந்தான்.

இராமன் தர்ப்பைப் புல்லின் மேல் படுத்து வெயிலில் கிடக்கிறான். ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல ஏழு நாட்கள்.

சூரியன் இராமனை சுட்டு எரிக்கிறான்.

சற்று நேரம் சிந்தித்துப் பார்ப்போம்.

சரவர்த்தி மகன். பஞ்சணையில் , மாளிகையில் படுத்து உறங்க வேண்டியவன் இப்போது காட்டில் தரையில், தர்பை புல்லின் மேல் வெயிலில் கிடக்கிறான். பெற்றவள் பார்த்தாள் சகிப்பாளா ?

கம்பனுக்குத் தாங்க முடியவில்லை.  தவிக்கிறான். ஒவ்வொரு நாளும் ஒரு ஊழிக் காலம் போல செல்கிறது.

எப்படி அந்த காட்சியை எழுதுவது ? இராமனை சூரியன் சுட்டான் சுட்டான் என்று சொல்லக் கூட அவனால முடியவில்லை.

சூரியன், தன் கிரணங்களால் இராமனின் கன்னத்தை வருடினானனாம்.

பாடல்

பூழி சென்று தன் திரு உருப்
    பொருந்தவும், புரைதீர்
வாழி வெங்கதிர் மணிமுகம்
    வருடவும், வளர்ந்தான்;
ஊழி சென்றன ஒப்பு என,
    ஒரு பகல்; அவை ஓர்
ஏழு சென்றன; வந்திலன்,
    எறி கடற்கு இறைவன்.

பொருள் 


பூழி சென்று = புழுதி உள்ள கடற்கரையில்

"ஆழிசூழ் உலகெலாம் பரதனேயாள நீ போய்த் 
தாழிரும் சடைகள் தாங்கிப் 
பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகளாடி 
எழிரண்டாண்டின் வாவென்று இயம்பினன் அரசன் என்றான் '

என்றாள் கைகேயி.

அங்கே பூழி சூழ்ந்த காடு. இங்கே புழுதி சூழ்ந்த கடற்கரை.


தன் திரு உருப் = தன்னுடைய உருவம்

பொருந்தவும் = பொருந்தவும். புழுதி மேல் எல்லாம் படிந்து, புழுதியும் அவனும் ஒன்றாக இருந்தது. 


புரைதீர் = குற்றம் அற்ற

பொய்மையும் வாய்மை இடத்து புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்பார். குற்றமற்ற நன்மை தரும் என்றால் பொய்யும் கூட உண்மை தான்.


வாழி வெங்கதிர்  =  வெம்மையான கதிர்

மணிமுகம் = மணி போல் ஒளி விடும் முகத்தை (இராமனின்)

வருடவும் = வருடிக் கொடுக்கவும்

வளர்ந்தான் = கிடந்தான்

ஊழி சென்றன ஒப்பு என = ஒரு ஊழிக் காலம் சென்றது போல சென்றன

ஒரு பகல் = ஒரு பகல்

அவை ஓர் = அப்படி ஒரு

ஏழு சென்றன = ஏழு பகல்கள் சென்றன

வந்திலன் = வரவில்லை

எறி கடற்கு இறைவன் = கடலின் தலைவனான வருணன்

மனைவியின் மேல் எவ்வளவு காதல் இருந்தால், இத்தனை துன்பத்தை அவன் ஏற்றிருப்பான் ?

கடல் மணல் எவ்வளவு சுடும். அதில், ஏழு நாள் தர்ப்பைப் புல்லின் மேல் கிடந்தான்.

மனைவிக்கு ஒரு சின்ன உதவி செய்ய, கொஞ்சம் விட்டுக் கொடுக்க, யோசிக்கும் கணவர்கள் யோசிக்க ஒரு பாடல்.

Monday, July 13, 2015

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 3 - கடல் நோக்கிய கடல்

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 3 - கடல் நோக்கிய கடல் 



சீதையை அடைய ஒரு வழி தருமாறு கடலை நோக்கி தவம் செய்கிறான் இராமன்.

"இளமையான பெண்ணான சீதையை மீட்க ஒரு வழி தருக என்று, வேத முறைப்படி அடுக்கிய தருப்பை புல்லின் மேல் கிடந்து விதிப் படி வருண மந்திரத்தை மனதில் எண்ணினான்" இராமன்.

பாடல்


'தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக !'
என்னும்

பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்,
கருணைஅம் கடல் கிடந்தனன், கருங் கடல் நோக்கி;

வருண மந்திரம் எண்ணினன், விதி முறை வணங்கி.

பொருள்

'தருண மங்கையை = இளமையான பெண்ணை. தருணம் என்றால் நேரம். சரியான தருணத்தில் வந்தாய் என்று சொல்வதைப் போல. இந்த இடத்தில் காலம், இளமைக் காலம்.

மீட்பது = மீட்டுக் கொண்டு வர

ஓர் நெறி தருக ! = ஒரு வழி தருக

என்னும் = என்ற

பொருள் நயந்து, = பொருளை வேண்டி

நல் நூல்  நெறி = நல்ல நூல்களில் சொல்லப் பட்ட முறைப்படி

அடுக்கிய புல்லில் = அமைக்கப் பட்ட தருப்பை புல்லின் மேல்

கருணைஅம் கடல் கிடந்தனன் = கருணைக் கடலான இராமன் கிடந்தான்

கருங் கடல் நோக்கி = கருமையான கடலை நோக்கி. கருணைக் கடல் கருங் கடலை நோக்கி தவம் செய்தான்.


வருண மந்திரம் எண்ணினன் = வருண மந்திரத்தை மனதில் எண்ணினான்

விதி முறை வணங்கி = விதிப்படி வணங்கி


அது என்ன பொருள் நயந்து ? என்ன பொருளைக் கேட்டான் இராமன் ? "ஒரு வழி சொல்லு " என்று தானே கேட்டான். அது எப்படி பொருளாகும் ?

நமக்காக ஒருவர் தன்னுடைய நேரத்தை செலவழித்து நமக்கு உதவி செய்கிறார் என்றால்  அதுவும் ஒரு பொருள் போலத்தான்.  நமக்கு ஒரு சிக்கல். நண்பரிடம்  யோசனை கேட்கிறோம். அவரும், யோசித்து வழி சொல்கிறார். அவர் நமக்காக   யோசிக்க செலவழித்த நேரமும் அவருடைய பொருள் போலத்தான். நாம் அவருடைய பொருளை பெற்றுக் கொள்வது  போலத்தான்.

பிறருடைய பொருள் மேல் ஆசைக் கொள்ளக் கூடாது என்று நமக்குத் தெரியும். 

அவர்களுடைய நேரமும் அவர்களுடைய பொருள் போலத்தான். அதை கேட்பதும்  அவர்களிடம் பொருளை, பணத்தை கேட்பதும் ஒன்றுதான். 

நமக்காக ஒருவர் தன்னுடைய நேரத்தை செலவழிக்கிறார் என்றால் அவர் நமக்கு  பொருள் தருகிறார் என்று தான் அர்த்தம். 

என் வீட்டில் கல்யாணம் அதுக்கு வா, என் வீட்டில் க்ரஹப் பிரவேசம் அந்த விஷேத்துக்கு வா என்று நண்பரகளையும் உறவினர்களையும் அழைக்கிறோம். அவர்களும் இருக்கிற வேலையெல்லாம் விட்டு விட்டு நம் வீட்டு  விழாவுக்கு வருகிறார்கள். அதற்காக அவர்கள் செலவழித்த நேரம் அவர்கள் நமக்கு  தந்த பொருள் போல. 

பிறருடைய நேரத்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் பொருளை மதிப்பது போல. எப்படி மாற்றான் பொருளை விரும்ப மட்டாமோ அது போல மாற்றான் காலத்தையும் விரும்பக் கூடாது. 

அவர்களின் நேரத்தைக் கேட்பதற்கு அவர்களிடம் கை ஏந்தி பொருள் பெறுவது போல கூச வேண்டும். 

புரிகிறதா ? ஏன் வருணபடலம் என்று ஒன்றை கம்பர் வைத்தார் என்று ?






Sunday, July 12, 2015

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 2 - கரந்து நின்ற நின் தன்மை

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 2 - கரந்து நின்ற நின் தன்மை 



கடலைத் தாண்டி எப்படி இலங்கை செல்வது என்று கண்டுபிடி என்று இராமன் வீடணனிடம் கூறினான்.

அதற்கு வீடணனும்,

"மறைந்து நிற்கும் உன் தன்மையை அந்தக் கடல் அறியும். உன்னுடைய குல முதல்வர்களால் படைக்கப் பட்டது இந்தக் கடல். எனவே, தனித்து இருந்து, இந்தக்  கடலிடம் ,  அதைத் தாண்டி செல்லும் வழியை வேண்டி , யாசித்துப் பெறுவாயாக " என்றான்.

பாடல்

கரந்து நின்ற நின் தன்மையை, அது, செலக்
கருதும்;

பரந்தது, உன் திருக் குல முதல் தலைவரால்;
பரிவாய்

வரம் தரும், இந்த மாக் கடல்; படை செல, வழி

வேறு

இரந்து வேண்டுதி, எறி திரைப் பரவையை' என்றான்.

பொருள்

கரந்து நின்ற நின் தன்மையை = மறைந்து நின்ற உன் தன்மையை

அது = அந்தக் கடல்

செலக் கருதும் = முழுவதும் அறியும்

பரந்தது = விரிந்தது

உன் திருக் குல முதல் தலைவரால் = உன் உயர்ந்த குல முதல்வர்களால்

பரிவாய் = அன்புடன்

வரம் தரும் = வரம் தரும்

இந்த மாக் கடல் = இந்த பெரிய கடல்

படை செல = படைகள் செல்ல

வழி = வழி

வேறு = வேறு இடத்தில் இருந்து (தனிமையில் இருந்து )

இரந்து வேண்டுதி = யாசகம் கேட்டு வேண்டிக் கொள்வாயாக

எறி திரைப் பரவையை' = அலை அடிக்கும் இந்தக் கடலை

என்றான். = என்றான் வீடணன்

குரு குல முதல் தலைவர் சகரர்.

சகரர் தோண்டியது என்பதால் அது சாகரம் என்று பெயர் பெற்றது என்று ஒரு கதை உண்டு.

மறைந்து நின்ற நின் தன்மையை அந்தக் கடல் அறியும் என்கிறான் வீடணன். கடல் அறிந்ததோ  இல்லையோ, வீடணனுக்குத் தெரிந்து இருக்கிறது இராமன் என்பவன்  திருமாலின் அம்சம் என்று.   வீடணனுக்குத் தெரிந்தது இராவணனுக்குத் தெரியவில்லை.

ஏன் ?

வீடணன் கற்ற கல்வி அவனை இறைவனிடம் கொண்டு சேர்த்தது. இறைவனை கண்டு கொள்ள உதவியது.

இராவணன் கற்ற கல்வி பதவி, அதிகாரம், போகம், பேராசை என்று இட்டுச் சென்றது.

கல்வி என்ற நீர் பாய சரியான வாய்கால் செய்து வைக்க வேண்டும். இல்லை என்றால்  அது எங்கு பாயும் என்று தெரியாது.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்

என்று கேட்டார் வள்ளுவர் . கல்வியின் பயன் இறைவனை கண்டு அவனைத் தொழுவதுதான்  என்கிறார் வள்ளுவர்.

வீடணன் கண்டு கொண்டான். சரணடைந்தான்.

மேலும்,

இராமன், திருமாலின் அம்சம் என்று வீடனணுக்குத் தெரியும். இருந்தும், "நீ இந்தக்  கடலை இரந்து வேண்டுதி " என்றான்.

மனிதனாக அவதாரம் எடுத்து விட்டால் மனிதனைப் போல நடந்து வழி காட்ட வேண்டும்.  மகா பாரதத்தில் கண்ணன் போர் நடக்கும் போது தினமும் குதிரைகளுக்குத் கொள்ளும் நீரும் தருவானாம்.

தேரோட்டி என்றால் அதற்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும்.

மேலும்,

வேறு இடத்தில் சென்று பிரார்த்தனை செய் என்றான். வேறு இடம் என்றால் தனித்த இடம்.

வழிபாடு என்பது தனிமையில் நடக்க வேண்டிய ஒன்று. எல்லோரும் அறிய , பட்டைக் கட்டிக் கொண்டு, நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு, கோவிலுக்குப் போய்  கும்பிடுவது அல்ல பக்தி. பக்தி என்பது தனி மனித அனுபவம்.



மேலும் சிந்திப்போம். 

Saturday, July 11, 2015

இராமாயணம் - இராமன் சரணாகதி - பாகம் 1

இராமாயணம் - இராமன் சரணாகதி - பாகம் 1 


இறைவனிடம் பக்தர்கள் சரணாகதி அடைவது பற்றி நிறைய படித்து இருக்கிறோம்.  இறைவனே சரணாகதி செய்து கேட்டு இருக்கிறோமா ? அப்படி செய்தால் என்ன ஆகும் ?

இராமாயணத்தில் வரும் வரும் ஒரு சுவையான இடம்.

வானர சேனையோடு கடற்கரைக்கு வந்துவிட்டான் இராமன்.

கடலை கடக்க வேண்டும். எப்படி கடப்பது ?

யோசனை கேட்கிறான் - யாரிடம் ? வீடணனிடம்.

நேற்று வந்து சேர்ந்தவன் வீடணன். எதிரியின் தம்பி. அறிவில், ஆற்றலில் சிறந்த அனுமன் இருக்கிறான், அனுபவம் நிறைந்த ஜாம்பாவன் இருக்கிறான்.அவர்களை எல்லாம் விட்டு விட்டு வீடனணிடம் ஆலோசனை கேட்கிறான் இராமன்.

அபயம் என்று வந்தவனை ஏற்றுக் கொண்டபின் அவனை ஒரு துளியும் சந்தேகிக்கவில்லை இராமன்.


இந்தக்  கடல் நமக்கு கட்டுப்படுமானால் இந்த மூன்று உலகையும் அடக்கவும், அழிக்கவும் நம்மால் முடியும். எண்ணற்ற நூல்களை கற்ற வீடணனே ,இந்த கடலை கடக்கும் வழியை சிந்திப்பாய்  என்றான் இராமன்.

பாடல்

'தொடக்கும் என்னில் இவ் உலகு ஒரு மூன்றையும்
தோளால்

அடக்கும் வண்ணமும், அழித்தலும், ஒரு பொருள்  
அன்றால்;

கிடக்கும் வண்ண வெங் கடலினைக் கிளர் 
பெருஞ் சேனை

கடக்கும் வண்ணமும் எண்ணுதி-எண்ணு நூல்
கற்றாய்!'

பொருள்

'தொடக்கும் என்னில் = கட்டுப்படும் என்றால் (இந்த கடல்)

இவ் உலகு ஒரு மூன்றையும் = மூன்று உலகங்களையும்

தோளால் = என் தோள் வலிமையால்

அடக்கும் வண்ணமும் = அடக்கும் வழியும்

அழித்தலும் = அழிக்கும் வழியும்

ஒரு பொருள் அன்றால் = ஒரு பெரிய விஷயமே அல்ல

கிடக்கும் = பரந்து விரிந்து கிடக்கும்

வண்ண வெங் கடலினைக் = வண்ணமயமான வெம்மையான கடலினை

கிளர் பெருஞ் சேனை = ஆராவாரிக்கும் பெரிய சேனை

கடக்கும் வண்ணமும் எண்ணுதி = கடக்கும் வழியை சிந்திப்பாய்

எண்ணு நூல் கற்றாய்! = எண்ணற்ற நூல்களை கற்றவனே

இராமாயணத்தில் சில பகுதிகள் இல்லாவிட்டாலும் கதையின் போக்கு ஒன்றும் மாறி விடாது. இருந்தும், ஏன் அந்த பகுதிகளை வைத்து இருக்கிறார்கள் என்றால்  அதில் ஏதோ ஒரு செய்தி இருக்கிறது.

உதாரணமாக, குகப் படலம் இல்லை என்றால் இராமாயணம் என்ற காப்பியத்திற்கு என்ன  குறை வந்து விடும் ? ஒன்றும் இல்லை. இருந்தும் குகன் என்ற  பாத்திரத்தின் மூலம்  ஏதோ ஒரு செய்தி நமக்கு சொல்கிறார்கள்  வால்மீகியும், கம்பனும்.

அதே போல சபரி. 

அப்படி வந்த இன்னொரு பகுதி தான் இந்த கடல் காண் படலம். 

இந்த பகுதி இல்லாவிட்டாலும் இராமாயணம் என்ற காப்பியத்தின் சுவை குன்றி இருக்காது. 

இன்னும் சொல்லப் போனால், இது போன்ற பகுதிகள் கதையின் விறு விறுப்பை  கொஞ்சம்  தடை செய்கின்றன. 

இருந்தும், வேலை மெனக்கெட்டு சொல்கிறார்கள் என்றால் அதில் ஏதோ இருக்க வேண்டும். 

என்னதான் அப்படி இருக்கிறது என்று பார்ப்போம். 

இந்தப் பாடலில்,

- அபயம் என்று வந்தவனை ஏற்றுக் கொண்டபின் இராமன் அவனை சந்தேகிக்க வில்லை. சந்தேகம் இருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏற்றுக் கொண்டபின்  சந்தேகப் படக் கூடாது. 

எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பார் வள்ளுவர். 

- இரண்டாவது, எண்ணு நூல் கற்றாய் என்று வீடணனை குறிப்பிடுகிறான் இராமன்.   

இராவணனும் நிரம்பக் கற்றவன் தான்.  தவம், வீரம், கல்வி, செல்வம்  என்று அனைத்தும் அவனிடம் இருந்தது.  பின் ஏன் வீழ்ந்தான்? அவன் கற்ற கல்வி அவனுக்கு அறத்தை சொல்லித் தரவில்லை. அறம் இல்லாத கல்வி அழிவைத்தரும். இராவணனுக்கு தந்தது. 

- மூன்றாவது, மூன்று உலகையும் அழிக்கும் ஆற்றல் உள்ள அரசன் என்றாலும் மந்திரியின் சொல் கேட்டு நடக்க வேண்டும். 

இப்படி ஒவ்வொரு பாடலிலும் பலப் பல உண்மைகளை தருகிறார் கம்பர். 

மேலும் சிந்திப்போம்....