Wednesday, August 24, 2016

பிரபந்தம் - வினைக்கு நஞ்சு

பிரபந்தம் - வினைக்கு நஞ்சு 


நம் வீட்டில் எலித் தொல்லை, கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால், நாம் என்ன செய்வோம்.

அவை அண்டாமல் இருக்க எலி பாஷாணம், அல்லது கரப்பான் பூச்சி மருந்து வைப்போம். அவை ஓடி விடும், அல்லது அந்த விஷத்தை தின்று உயிர் விடும்.

நம் தொல்லை தீரும்.

இந்த எலி, கரப்பான் போல நமக்கு ஓயாத தொல்லை தருவது நாம் செய்த பழைய வினைகள்.

அந்த வினைகளை எப்படி விரட்டுவது அல்லது இல்லாமல் ஆக்குவது ? அதற்கு என்று ஏதாவது நஞ்சு இருக்கிறதா என்றால் இருக்கிறது என்கிறது பிரபந்தம்.

"நாராயணா " என்ற நாமமே நம் வல் வினைகளுக்கு எல்லாம் நஞ்சு போன்றது.

வல் வினைகள் நம்மை அண்ட விடாது, அண்டிய வல் வினைகளை களைந்து அவற்றின் மூலம் வரும் துன்பங்களில் இருந்து நமக்கு விடுதலை தரும்.

பாடல்


மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர் மங்கையார்வாள் கலிகன்றி,

செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,

துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,

நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணாவென்னும் நாமம்.

சீர் பிரித்த பின்

மஞ்சு உலாவும் சோலை வண்டு அறையும் மா நீர் மங்கையார் வாள்  கலிகன்றி 

செஞ் சொல்லால் எடுத்த தெய்வ நன் மாலை இவை கொண்டு 
சிக்கெனத் தொண்டீர் 

துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயரிலீர் சொல்லலிலும் நன்றாம் 

நஞ்சுதான் கண்டீர் நம் உடை வினைக்கு நாராயாணா எனும் நாமம்


பொருள்

மஞ்சு = மேகங்கள்

உலாவும் = உலவுகின்ற

சோலை = சோலை

வண்டு அறையும் = வண்டுகள் ரீங்காரமிடும்

மா நீர் = சிறந்த நீர்

மங்கையார் = திருமங்கை ஆழ்வார்

வாள் = வாளை கையில் கொண்ட

கலிகன்றி = திருமங்கை ஆழ்வார்

செஞ் சொல்லால் = சிறந்த சொற்களால்

எடுத்த = செய்த

தெய்வ = தெய்வத்திற்கு சாத்திய

நன் மாலை = நல்ல மாலை

இவை கொண்டு  = இவை கொண்டு

சிக்கெனத் தொண்டீர் = இறுக்கமாக பற்றிக் கொண்டு

துஞ்சும் போது அழைமின் = இறப்பு வரும்போது அழையுங்கள்

துயர் வரில் நினைமின் = துன்பம் வரும்போது நினையுங்கள்

துயரிலீர் சொல்லலிலும் நன்றாம்  = துன்பம் வராதபோதும் சொன்னால் நல்லதாம்

நஞ்சுதான் கண்டீர் = விஷம் தான் அறிந்து கொள்ளுங்கள்

நம் உடை வினைக்கு = நம்மை பற்றிக் கொண்டு இருக்கும்

நாராயாணா எனும் நாமம்  = நாராயாணா என்ற நாமம்


கொஞ்சம் ஆழ்ந்து சிந்திப்போம்.

சிக்கெனைப் தொண்டீர் ....இறுக்கி பிடித்துக் கொள்ள வேண்டுமாம். கைகளால் அல்ல. நாராயணா என்ற நாமம் நமது நாவை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.  

சொல்லு நா நமச்சிவாயவே என்று சுந்தரர் சொன்ன மாதிரி நாவில் அந்த நாமம்  பற்றிக் கொள்ள வேண்டும். 

பெற்ற தாய்தனை மகமறந் தாலும் 
          பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் 
     உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் 
          உயிரை மேவிய உடல்மறந் தாலும் 
     கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும் 
          கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் 
     நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் 
          நமச்சி வாயத்தை நான்மற வேனே. 

என்று வள்ளலார் கூறியது போல , நா , நாராயணா என்ற நாமத்தை மறக்கக் கூடாது. 

அது என்ன சிக்கெனைப் பிடித்தல் ?

அந்த காலத்தில் புத்தகங்கள் படிக்க X போல ஒரு மரத்தில் செய்த பலகை இருக்கும். அதன் நடுவில் புத்தகத்தை வைத்துப் படிப்பார்கள். அந்த பலகைக்குப் பெயர் சிக்கு பலகை. புத்தகத்தை எடுத்து விட்டு மூடினால், அது ஒன்றுக்குள் ஒன்று புதைந்து ஒரே கட்டை போல ஆகிவிடும். அப்படி , நாராயாணா என்ற நாமமும், நாவும் ஒன்றோடு ஒன்று  பிணைந்து ஒன்றாக ஆகி விடவேண்டும். 

சிக்கெனைப் பிடித்தேன் என்பார் மணிவாசகர் 

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய

ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய

தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

எப்போதெல்லாம் நினைக்க வேண்டும் , சொல்ல வேண்டும் ?

சாகும் தருவாயில் சொல்ல வேண்டும், துன்பம் வரும் போது சொல்ல வேண்டும்,  துன்பம் வராத போதும் சொல்ல வேண்டும்.

என்ன இது ஒண்ணும் புரியலையே. சாகும் போது சொல்வது, துன்பம் வரும்போது சொல்வது , துன்பம் வராத போது சொல்வது என்றால் என்ன ?


பாடலின் வரிகளை கொஞ்சம் இடம் மாற்றி பொருள் கொள்ள வேண்டும்.


எப்போதும் அந்த நாமத்தை சொல்ல வேண்டும்.

முடியவில்லையா, சரி பரவாயில்லை, துன்பம் வரும்போதாவது சொல்லுங்கள்.

அப்போதும் சொல்லவில்லையா, இறக்கும் தருவாயிலாவது சொல்லுங்கள்.

போகும் இடத்துக்கு புண்ணியம் கிடைக்கும்.

தீய வினைகளுக்கு அது விஷம் போன்றது. இறக்கும் தருவாயில் சொன்னால் கூட, அது வாழ்நாளில் செய்த அத்தனை வினைகளும் அழிந்து போகும்.

சாவு எப்போது வரும், எப்படி வரும், அந்த நேரத்தில் நினைவு இருக்குமா ? தெரியாது. எனவே துன்பம் வராமல் சுகமாக இருக்கும் போதே சொல்லி வையுங்கள். அது உங்கள் நாவில் ஏறி அமர்ந்து கொள்ளும்.

வல் வினைகள் ஓயட்டும்.

வாழ்வில் ஒளி தீபம் வீசட்டும்.

நாராயாணா எனும் நாமம் உங்கள் வாழ்விலும் வசந்தத்தை கொண்டு தரட்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_68.html


இராமாயணம் - வாலி வதை - வாலியின் கேள்விகள்

இராமாயணம் - வாலி வதை - வாலியின் கேள்விகள் 


இராமன் எய்த அம்பை வாலினாலும் கைகளினாலும் பிடித்து இழுத்த வாலி, அதில் இராமனின் பெயர் இருக்கக் கண்டான்.

இல்லறத்தை துறந்த இராமன், எங்களுக்காக தன் வில்லறத்தையும் துறந்தான். வேதத்தில் சொல்லப்பட்டவைகளை யும் , தொன்று தொட்டு வரும் நல்ல அறங்களையும் ஏன் அவன் துறந்தான்  என்று கேள்வி கேட்டு, வெட்கம் வர அவன் நகைத்தான்.

பாடல்

‘இல் அறம் துறந்த நம்பி,
    எம்மனோர்க்கு ஆகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன்,
    தோன்றலால், வேத நூலில்
சொல் அறம் துறந்திலாத
    சூரியன் மரபும், தொல்லை
நல் அறம் துறந்தது ‘என்னா,
    நகை வர, நாண் உள் கொண்டான்.

பொருள்

‘இல் அறம் = இல்லறமாகிய அறத்தை

துறந்த நம்பி, = துறந்த நம்பி

எம்மனோர்க்கு ஆகத் = எங்களுக்காக

தங்கள் வில் அறம் துறந்த வீரன் = தன்னுடைய வில்லறத்தை துறந்த வீரன்

தோன்றலால்,= தோன்றி

வேத நூலில் = வேத நூல்களில்  சொல்லப் பட்ட

சொல் அறம் துறந்திலாத = சொல் அறங்களை துறந்திலாத

சூரியன் மரபும் = சூரிய மரபில்

தொல்லை நல் அறம் துறந்தது = பழமையான நல்ல அறங்களை  துறந்து, கைவிட்டு

‘என்னா, நகை வர, நாண் உள் கொண்டான். = என்று நினைத்து அதனால்  சிரிப்பு வர, நாணம் அடைந்தான்.


தனக்கு வந்த துன்பம் இராமனால் வந்தது என்று அறிந்து கொண்டான்.

மனைவியோடு வாழும் இல்லறம் துறந்தான்.

மறைந்து நின்று அம்பு எய்து வில்லறம் துறந்தான்.

வேத நூல் சொன்ன  சொல்லறம் துறந்தான்.

பழமையான நடைமுறை அறங்களையும் துறந்தான்.

என்று இராமன் மேல் குற்றச் சாட்டுகளை அடுக்குகிறான் வாலி.

நமக்கு ஒரு துன்பம் வரும்போது நாம் என்ன நினைப்போம்.

கடவுள் ஒன்று ஒருவர் இருக்கிறாரா ? நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன் ? பெரியவர்களை மதிக்கிறேன். கோவிலுக்குப் போகிறேன். புத்தகங்களில் உள்ள முறைப்படி பூஜை , விரதம் எல்லாம் இருக்கிறேன். முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவுகிறேன்.

இருந்தும் எனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் வந்தது.

என்னென்னமோ தவறுகள் செய்தவன் எல்லாம் நிம்மதியாக  மகிழ்ச்சியாக இருக்கிறான்.  நான் மட்டும் ஏன் கிடந்து இப்படி துன்பப்  படுகிறேன் என்று நமக்கு ஒரு மன உழைச்சல் ஏற்படுவது இயற்கை.

கடவுள் என்று ஒன்று இல்லை. இந்த வேதம், புராணம், இதிகாசம் எல்லாம் பொய்.  நாட்டில் நீதி நேர்மை என்பதே இல்லை. நல்லது காலம் இல்லை என்று தானே புலம்புவோம்.

அதையே தான் வாலியும் செய்கிறான்.

நீ எல்லாம் ஒரு மனுஷனா என்று கேட்காத குறையாக   .கேட்கிறான்.


இங்கு சற்று நிதானிப்போம்.

இது வரை இராமனை பட்டு கேள்விப் பட்டிருக்கிறான்.

தாரை கூட சொல்லி இருக்கிறாள். சொல்லக் கேள்வி.

அடுத்த கட்டம், இராம நாமத்தை காண்கிறான். அந்த நாமத்தின் மகிமை அவனுக்குப் புரிகிறது. "தெரியக் கண்டான் " என்று சொல்லுகிறான் கம்பன்.

மந்திரத்தின் மகிமை புரிகிறது.

ஆனாலும், அஞ்ஞானம் தடுக்கிறது.

அறிவு குழப்புகிறது. தடுமாற வைக்கிறது.

இறைவன் நல்லவன், உயர்ந்தவன் என்றால் ஏன் வாழ்வில் இத்தனை துன்பங்கள் என்ற விடை தெரியாத கேள்வி வாலியின் மனத்திலும் ஓடுகிறது.

முதலில் இராமனைப் பற்றி கேள்விப் பட்டான்.

அடுத்து அவன் நாமத்தை நேரில் கண்டான்.

அடுத்து...?


http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_24.html

Monday, August 22, 2016

இராமாயணம் - வாலி வதை - மூல மந்திரத்தை

இராமாயணம் - வாலி வதை - மூல மந்திரத்தை 


வாலி வதத்தின் மிக மிக முக்கியமான பாடல்.

தன் மார்பில் பாய்ந்த அம்பை பற்றி இழுத்து , அதில் யார் பெயரை எழுதி இருக்கிறது என்று பார்த்தான்.

கம்பனின் உச்ச பச்ச பாடல்.

என் போன்ற சாமானியர்களால் இந்த பாடலுக்கு ஒரு விளக்கமும் தர முடியாது. தராமல் இருப்பது நலம்.

இருந்தும், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றார் போல, நான் அடைந்த இன்பத்தைப் பற்றி சொல்கிறேன்.

ஆழ்ந்து ஆராய்ந்து மேலும் அறிந்து கொள்க.

அந்த அம்பில் என்ன எழுதி இருந்தது ?


மூன்று உலகுக்கும் மூலமான மந்திரத்தை, முழுவதும் தன்னையே தன் அடியவர்களுக்கு அருளும் சொல்லை, பிறவி பிணிக்கு மருந்தை, இராமன் என்ற நாமத்தைக் கண்டான்.

பாடல்

மும்மை சால் உலகுக்கு எல்லாம்
    மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
    தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
    மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்
    கண்களின் தெரியக்  கண்டான்.

பொருள்


மும்மை சால் உலகுக்கு  = மூன்று என்று சொல்லப் படும் உலகுக்கு


எல்லாம் = அனைத்திற்கும்

மூல மந்திரத்தை = மூலமான மந்திரத்தை

முற்றும் = முழுவதும்

தம்மையே= தன்னையே

தமர்க்கு = அடியவர்களுக்கு

நல்கும் = கொடுக்கும்

தனிப் பெரும் பதத்தை = தனிச் சிறப்பான உயர்ந்த சொல்லை

தானே = அவனே

இம்மையே எழுமை நோய்க்கும் = இந்தப் பிறவிக்கும், ஏழேழு பிறவிக்கும்

மருந்தினை = மருந்தினை

இராமன்  = இராமன்

என்னும் = என்னும்

செம்மை = சிறப்பு

சேர் = சேர்க்கும்

நாமம் தன்னைக் = நாமத்தை

கண்களின் தெரியக்  கண்டான். = கண்களில் தெரியக் கண்டான்


ஆழ்ந்து அறிய வேண்டிய பாடல்.

பாடலின் பொருளை அறியும் முன்,   இப்படி இராமன் என்ற நாமத்தைப் பார்த்தவன் யார் ? வாலி ? வாலியின் பார்வையில் இருந்து  இந்தப் பாடலின் பொருளை நோக்கினால், பாடலின் ஆழமான அர்த்தம் விளங்கும். 


மும்மை சால் உலகுக்கு எல்லாம் ...மேல், நடு , கீழ் என்று சொல்லப் படும்  மூன்று உலகங்கள். சொர்கம், நரகம், பூமி என்று சொல்லப் படும் மூன்று  உலகங்கள். இருந்தது, இருப்பது, இனி வர போகும் என்ற மூன்று  உலகங்கள் என்று எப்படி பிரித்தாலும் அந்த அனைத்து உலகங்களுக்கும் மூலமான மந்திரம்  இராம நாமம். 

முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும்....தன்னுடைய அடியவர்களுக்கு தன்னை  அப்படியே முழுமையாக தந்து விடுவானாம் இராமன். ஏதோ  கொஞ்சம் உனக்கு என்று மிச்சம் வைக்காமல் முழுவதும் தந்து விடுவான். பக்தன் இறைவனிடம் சரணாகதி அடைவது இருக்கட்டும். ஆண்டவனே தன்னை முழுவதும் பக்தனிடம் தந்து விடுகிறான். "கேட்டாய் அல்லவா , எடுத்துக் கொள் " என்று சொல்லுவது போல.


இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை .... தமிழிலே நோய் , பிணி என்று இரண்டு சொல் உண்டு. நோய் என்றால் மருந்து தந்தால் போய் விடும்.  பிணி போகவே போகாது.

பசிப் பிணி என்று சொல்லுவார்கள். பசி வந்தால் நோய் வந்தது மாதிரி  உடல் அல்லல் படும். உணவு உண்டால் பசி போய் விடும். ஆனால்,  சில மணி நேரங்களில் மீண்டும் வந்து விடும். எவ்வளவு சாப்பிட்டாலும்,  எல்லாம் சில மணி நேரம் தான். மீண்டும் பசிக்கும். பசி பிணிக்கு நிரந்தர மருந்து இல்லை.

அதே போலத்தான் பிறவிப் பிணியும். அதற்கு மருந்து இருக்கிறதா ? இது வரை இல்லை. இப்போது இருக்கிறது.

ஏழு பிறப்புக்கும் மருந்தினை என்கிறார் கம்பர். இந்த மருந்தை உட்கொண்டால், ஏழேழு பிறவி என்ற நோய் தீர்ந்து போய் விடும்.

தீராத பிறவி பிணியை தீர்க்கும் அருமருந்து.


செம்மை சேர் நாமம் ...இதற்கு பல பொருள்.

ஒன்று, சிவப்பு சேர்ந்த நாமம். மார்பில் பாய்ந்து , வாலியின் இரத்தத்தில் தோய்ந்ததால் சிவந்த நாமம். சிவப்பு சேர்ந்த நாமம். செம்மை சேர் நாமம்.


இரண்டாவது, செம்மையான நாமம்.  சிறப்பு சேர்ந்த நாமம். செம்மை சேர் நாமம்.


மூன்றாவது, செம்மையான இடத்தில் கொண்டு சேர்க்கும் நாமம். செம்மை சேர் நாமம்.

நான்காவது, வினைத் தொகையாக செம்மையான இடத்தில் முன்பு இருந்தவர்களை சேர்த்த நாமம், இப்போது இருப்பவர்களை சேர்க்கும் நாமம், இனி வரும் காலத்தில் வர இருப்பவர்களையும் சேர்க்கும் நாமம்.


கண்களின் தெரியக்  கண்டான்....அது என்ன கண்களின் தெரியக் கண்டான்.

கண்டான் என்று சொன்னால் போதாதா ? கண்களால் தான் காண முடியும். எதற்காக கண்களின் தெரியக் கண்டான் என்று தேவை இல்லாமல்  இரண்டு வார்த்தைகளை போடவேண்டும் ?

காணுதல் வேறு ,  தெரிதல் வேறு.

இயற்பியலில் ஒரு சிக்கலான விதியை எழுதி என்னிடம் காண்பித்தால் என்னால் அதை காண முடியும். ஆனால், அது என்ன என்று  தெரிந்து கொள்ள முடியாது.

காதலியின் கண்கள் சொல்லும் காதலை அவளுடைய காதலனைத் தவிர வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது.

செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கும் 
உறாஅர்போன் றூற்றார் குறிப்பு.

ஒண்ணும் தெரியாத மாதிரி பார்க்கும் பார்வையில் பொதிந்து கிடைக்கும் ஆயிரம் காதலை அவன் மட்டுமே அறிய முடியும்.

அது போல,  தெரிவது வேறு, காண்பது வேறு.

வாலி, இத்தனை சிறப்பு மிக்க நாமத்தை கண்டது மட்டும் அல்ல, தெரிந்தும் கொண்டான்.

காண்பது, தெரிவது என்று இரண்டு இருந்தாலும், கண் ஒன்றுதானே ?

இல்லை.

அகக்கண், புறக்கண் என இரண்டு உண்டு.

அம்பில் உள்ள நாமத்தை அகக் கண்ணால் கண்டான். அதன் சிறப்பை மனதில் 'தெரிந்து' கொண்டான்.

ஒரு மனிதன் ஆன்மீக வளர்ச்சியின் இரண்டாம் படி.

வாலி என்ற மனிதன் (அல்லது குரங்கு) எப்படி ஒரு ஆன்மீக வளர்ச்சி அடைந்தான் என்று கம்பன் காட்டுகிறான்.

குரங்குக்குச் சொன்னால் என்ன, நமக்குச் சொன்னால் என்ன.


அது என்ன ஆன்மீக வளர்ச்சி...அதற்கும் இந்த மறைந்து இருந்து அம்பு எய்வதற்கும் என்ன சம்பந்தம் ?

(வளரும்)

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/blog-post_22.html


Sunday, August 21, 2016

இராமாயணம் - வாலி வதம் - பொறித்த நாமத்தை

இராமாயணம் - வாலி வதம்  - பொறித்த நாமத்தை 


Self Realization என்பது பெரிய விஷயம்.

உன்னையே நீ அறிவாய் என்றார் சாக்கரடீஸ்.

தன்னைத் தான் அறிவது என்பதுதான் வாழ்க்கையின் நோக்கமாகக் கூட இருக்குமோ ?

வாழ்க்கை தூண்டிக் கொண்டே இருக்கிறது. அறிந்து கொள் , அறிந்து கொள் என்று. நாம் தான் அறிய மாட்டேன் என்று அடம் பிடிக்கிறோம்.

ஒவ்வொரு முறை நாம் கற்றுக் கொள்ளத் தவறும் போதும் வாழ்க்கை இன்னும் அதிக அழுத்தமாக சொல்லித் தர முயல்கிறது.

சில பேர் சீக்கிரம் அதை பற்றிக் கொள்கிறார்கள்.

சிலருக்கு நேரம் ஆகிறது.

வாலி, தான் வலிமை, திறமை, பூஜை, புனஸ்காரம் என்று இருந்து கொண்டிருந்தான்.

தன்னை வெல்ல யாரும் இல்லை என்று நினைத்திருந்தான்.

இராமன் மறைந்து இருந்து ஏவிய அம்பு அவன் மார்பில் பாய்ந்தது.

மிகப் பெரிய அடி. நினைத்துப் பார்க்க முடியாத அடி . வலி.

திகைத்துப் போனான் வாலி.

அவன் மார்பில் தைத்த அம்பை வாலினாலும் கையினாலும் பிடித்து இழுத்து அதில் யார் பெயர் எழுதி இருக்கிறது என்று பார்க்க எத்தனிக்கிறான்.

பாடல்

பறித்த வாளியைப் பரு வலித்
    தடக்கையால் பற்றி,
‘இறுப்பென் ‘என்று கொண்டு எழுந்தனன்,
    மேருவை இறுப்போன்;
‘முறிப்பென் என்னினும் முறிவது
    அன்றாம் ‘என மொழியாப்,
பொறித்த நாமத்தை அறிகுவான்
    நோக்கினன், புகழோன்.


பொருள் 

பறித்த வாளியைப் = மாரிபில் இருந்து பிடுங்கிய அம்பை

 பரு = பருத்த, பெரிய

வலித் = வலிமையான

தடக்கையால் = பெரிய கைகளால்

 பற்றி = இறுகப் பிடித்து


‘இறுப்பென் ‘ = உடைப்பேன்

என்று  = என்று

கொண்டு எழுந்தனன் = எழுந்தான்.

மேருவை = மேரு மலையை

இறுப்போன் = உடைப்பவன், முறிப்பவன்

‘முறிப்பென் என்னினும் = அந்த அம்பை முறித்துப் போடுவேன் என்று நினைத்தாலும்

முறிவது அன்றாம் ‘ = முறிக்க முடியாதது

என மொழியாப் = என்று சொல்லும் படி

பொறித்த = அதில் எழுதி உள்ள

நாமத்தை = நாமத்தை, பெயரை

அறிகுவான் நோக்கினன் = அறியவேண்டி நோக்கினான்

புகழோன் = புகழ் உடைய வாலி

நமக்கு வாழ்வில் வரும் துன்பங்கள் நம்மிடம் சொல்லி விட்டா வருகின்றன ? இன்ன தேதியில், இன்னார் மூலம், இப்படி இப்படி வரும் என்று  சொல்லி விட்டா வருகின்றன.

வாலி மேல் இராமன் மறைந்து இருந்து அம்பு எய்தான் என்பது ஒரு குறியீடு.

துன்பம் வரும் வழி நாம் அறிவதே இல்லை.

துன்பத்தை இறைவன் நமக்குத் தருகிறான் என்றால் , சொல்லி விட்டுத் தருவதில்லை.

இராமன் நேரில் வந்து வாலியிடம் சொல்லி இருந்தால் , ஒரு வேளை வாலி இராமன் சொல்வதைக் கேட்டு அரசை சுக்ரீவனிடம் கொடுத்து விட்டு இராமன் பின்னால் கிளம்பி இருப்பான்.

 ஆனால், வாலி தன்னைத் தான் அறிந்திருக்க மாட்டான்.

இராமனே தான் தான் பரம் பொருள் என்று சொல்லி இருந்தாலும், முதலில் நம்பி  இருந்தாலும், பின்னால் சந்தேகப் பட்டிருப்பான் .  "பரம் பொருள்னு சொல்றான்...கட்டிய மனைவியை பறி கொடுத்து விட்டு காடு மேடெல்லாம் அலைகிறானே ...ஒரு வேளை உண்மையிலேயே இவன் பரம் பொருள் இல்லையோ " என்ற சந்தேகம் வந்திருக்கலாம்.

துன்பம் வரும் போதுதான் நாம் சிந்திக்கத் தொடங்குகிறோம்.

பற்றை விட்டால் தான், பரமனை அறிய முடியும்.

வாலியோ ஒவ்வொரு நாளும் மற்றவர்களிடம் உள்ள வலிமை எல்லாம் தனக்கு வேண்டும் என்று மேலும் மேலும் சேர்த்துக் கொண்டிருக்கிறான்.

என்று இவன் பற்றை விடுவது, என்று இவன் உண்மையை அறிவது ?

அம்பைப் பறித்த வாலி கண்டது என்ன ?


http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_21.html



Saturday, August 20, 2016

திருக்குறள் - தோல்வியும் வெற்றிதான்

திருக்குறள் - தோல்வியும் வெற்றிதான் 


அவன் ஒரு பெரிய வீரன். அவன் பேரை கேட்டாலே எதிரிகள் நடுங்குவார்கள். பேர கேட்டாலே ச்சும்மா அதிருதுல என்பது மாதிரி.

அப்படிப் பட்ட வீரன், அவனுடைய காதலியை காணச் செல்கிறான். அவளுடைய நெற்றியை பார்க்கிறான். அவனுடைய வீரம் எல்லாம் எங்கோ போய் விட்டது. அவள் அழகின் முன், அவன் வீரம் மண்டியிட்டது.

பாடல்

ஒள்நுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு.

பொருள்

ஒள்நுதற் கோஒ = ஒள் + நுதலுக்கோ = ஒளி பொருந்திய நெற்றிக்கோ

உடைந்ததே = உடைந்ததே

ஞாட்பினுள் = போர் களத்தில்

நண்ணாரும் = பகைவர்களும்

உட்கும் = அச்சம் கொள்ளும்

என்  பீடு = என் பெருமை, அல்லது வலிமை

பாட்டும் பொருளும் நல்லாத்தான் இருக்கு.

பாட்டிலில் உள்ள சில வார்த்தைத் தெரிவுகளை பார்ப்போம்.

ஏன் நெற்றியைப் பார்த்து அவன் வீரம் உடைய வேண்டும் ?

கண்ணைப் பார்த்து என்று சொல்லி இருக்கலாம் ...

அல்லது சிறுத்த இடையைப் பார்த்து என்று சொல்லி இருக்கலாம்...

அல்லது சிவந்த பாதங்களை பார்த்து என்று சொல்லி இருக்கலாம்

அல்லது பெண்ணுக்கே உரிய வேறு பல சிறந்த அங்கங்களை காட்டிச் சொல்லி இருக்கலாம்...

நெற்றியை ஏன் சொல்ல வேண்டும் ?

காரணம் இருக்கிறது.

பெண்களுக்கு கருணை அதிகம்.

கருணை கண்ணில் இருந்து வெளிப்படும்.

கருணை அதிகமாக அதிகமாக கண்ணின் விசாலம் அதிகமாகும்.

அவளுக்கு விசாலாக்ஷி என்றும் பெயர்.

கண் பெரிதாகும் போது நெற்றி சுருங்கும்.

சின்னப் பெண் தான். இருந்தும் அவளின் மனதில் ஊற்றெடுக்கும் அந்த அன்பு, கருணை , பாசம் ...அவளது சின்ன நெற்றியில் தெரிகிறது.

அவனது வீரம் , மற்றவர்களை பயப்பட வைக்கும். எதிரிகளை கொல்லும் .

ஆனால், இவளது கருணை மிகுந்த பார்வையும், அதனால் சிறுத்த நெற்றியும்  உயிர்களை வாழ வைக்கும்.

அதை நினைத்து அவன் வெட்கப் பட்டு, அதனால், அவன் பெருமை உடைந்தது.

மற்றவர்களை கொல்லுவது , அவர்கள் நம்மைக் கண்டால் மிரளும் படி முரட்டுத் தனமாய் இருப்பது எல்லாம் ஒரு பெரிய விஷயமா...இல்லவே இல்லை என்று அவன் உணர்ந்த தருணம். முரடனையும் , மென்மையானவனாய் மாற்றும் பெண்ணின் கருணை.


இந் நன்னுதல் அவள் நின் கேள் என்று சீதையை அறிமுகம் செய்வான் குகனிடம் இராமன்.

இந்த அழகிய நெற்றியை உடைய பெண் உன்னுடைய உறவினள் என்று கூறுகிறான். அங்கும் நெற்றியை குறித்து கம்பன் பேசுகிறான்.


"ஒள்நுதற் கோஒ" என்று ஒரு 'ஓ" வை ஏன் வள்ளுவர் போடுகிறார் ? அந்த அளபெடை எதற்கு ?

"ஓ" என்பது ஒரு ஆச்சரியக் குறி. அடடா, கருணையும் மக்களை அடிமை கொள்ளுமா ?  இந்த சின்ன நெற்றிக்கு இவ்வளவு வலிமையா என்ற ஆச்சரியம். அதை எப்படி சொல்லுவது ? ஒரே ஒரு எழுத்தில் காட்டி விட்டுப் போகிறார் வள்ளுவர். 

ஆச்சரியம், திகைப்பு எல்லாம் அந்த ஒரு 'ஓ' வில் இருக்கிறது. 

ஒரு முறை சொல்லிப் பாருங்கள் , புரியும். 

அது என்ன "நண்ணார் ".கேள்விப் படாத பெயராக இருக்கிறதே.

நண்ணுதல் என்றால் நெருங்கி வருதல் நண்பர் என்பது அதில் இருந்து வந்தது. 

நண்ணார் என்றால் நெருங்காதவர். தள்ளியே இருப்பவர். பகைவர். 

ஒன்றே முக்கால் அடி தான். ஏழே ஏழு வார்த்தை தான். 

எவ்வளவு அர்த்தம்.

இப்படி 1330 பாடல் பாடி வைத்திருக்கிறார்.

நேரம் இருப்பின், படித்துப் பாருங்கள். 

கொட்டிக் கிடக்குது பொக்கிஷம். 




Friday, August 19, 2016

இராமாயணம் - வாலி வதம் - வார்த்தையின் வலிமை - பாகம் 2.3

இராமாயணம் - வாலி வதம்  - வார்த்தையின் வலிமை  - பாகம் 2.3




நமக்குத் துன்பம் வரும் போது , யாரால் இந்த துன்பம் வந்தது, நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றெல்லாம் நாம் நொந்து கொள்கிறோம். ஏதோ எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போலவும், நாம் மட்டும் தான் துன்பத்தில் வாடுவது போலவும் நாம் நினைத்து வருந்துவோம்.

அது மட்டும் அல்ல, நமக்கு ஏன் துன்பம் வரக் கூடாது ? எல்லோருக்கும் வருகிறது. அது போல நமக்கும் இன்பமும் துன்பமும் வருகிறது.

துன்பம் யார் தந்தோ வருவது இல்லை. நாமே தேடிக் கொள்வதுதான். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு துன்பத்திற்கு பின்னாலும் ஏதோ ஒரு வகையில் நாம் செய்த அறம் அல்லாத காரியம் இருந்திருக்கும்.

வாலியின் மார்பில் இராமன் விட்ட அம்பு பாய்ந்தது.

வாலி அதை தன் கைகளாலும், வாலினாலும் பிடித்து நிறுத்தி விட்டான். இராம பாணத்தை தடுத்து நிறுத்திய ஆற்றல் அவன் ஒருவனுக்கு மட்டும் தான் இருந்தது.

இவ்வளவு வலிமை வாய்ந்த என் மார்பில் அம்பை ஒரு வில்லின் மூலம் எய்ய முடியாது. அவ்வளவு ஆற்றல் உள்ள ஒருவன் இருக்க முடியாது. இது ஏதோ ஒரு தவ முனிவரின் சாபத்தால் (சொல்லினால்) வந்ததாகத் தான்  இருக்க முடியும் என்று நினைத்து, பல்கலைக் கடித்துக் கொண்டு அந்த அம்பை கொஞ்சம் வெளியே இழுத்துப் பார்த்தான்.



பாடல்

‘வில்லினால் துரப்ப அரிது, இவ் வெம்
    சரம்! ‘என வியக்கும்;
‘சொல்லினால் நெடு முனிவரோ
    தூண்டினார்? ‘என்னும்;
பல்லினால் கடிப்புறும் பல
    காலும்; தன் உரத்தைக்
கல்லி, ஆர்ப்பொடும் பறிக்கும் அப்
    பகழியைக் கண்டான்.

பொருள்

‘வில்லினால் = வில்லில் இருந்து

துரப்ப அரிது = எய்ய முடியாது

இவ் வெம் சரம்! = இந்த கொடிய அம்பை

‘என வியக்கும்; = என்று வியந்து

‘சொல்லினால் = சாபத்தால்

நெடு முனிவரோ தூண்டினார்? ‘என்னும்; = உயர்ந்த முனிவர் எவரோ அனுப்பி இருப்பாரோ என்று எண்ணினான்

பல்லினால் கடிப்புறும் = பல்லை கடித்துக் கொண்டு

பல காலும்; = நீண்ட நேரம்

தன் உரத்தைக் கல்லி, = மார்பை பிளந்து

ஆர்ப்பொடும் பறிக்கும் = மிகுந்த ஒலியோடு பறித்தான்

 அப் பகழியைக் கண்டான். = அந்த "அம்பைக்" கண்டான்


வார்த்தைகளுக்கு உள்ள மகத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இராம பாணத்தை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட வாலி சொல்கிறான், இப்படி பட்ட அம்பை வில்லின் மூலம் யாரும் எய்திருக்க முடியாது, முனிவரின் சொல் தான் இவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கும் என்று.

சொல்லுக்கு அவ்வளவு வலிமை உண்டு.

அசோக வனத்தில் சிறை இருக்கும் சீதை சொல்லுவாள்


"அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ 
எல்லை நீத்த இவ் உலகம் யாவதையும் என் 
சொல்லினால் சுடுவேன் அது தூயவன் 
வில்லின் ஆற்றலுக்கு மாசென்று வீசினேன் என்றாள்"

ஒரு வார்த்தையில் அனைத்து உலகையும் பொசுக்கி விடுவேன் என்றாள்

அப்படி என்றால் வார்த்தைக்கு, சொல்லுக்கு எவ்வளவு வலிமை இருக்க வேண்டும்.

இராமன் மறைந்து நின்று கொன்றது சரியா தவறா என்ற ஆராய்ச்சி ஒரு புறம்  இருக்கட்டும்.

வாரத்தைகளின் மகத்துவம் அறிவோம்.

அவ்வளவு சக்தி வாய்ந்த வார்த்தைகளை எவ்வளவு மோசமாக நாம் உபயோகிக்கிறோம்.

அர்த்தம் அற்ற பேச்சுக்கள். வம்பு. புரணி . கோள் சொல்லுதல். என்று எத்தனை வகைகளில் வார்த்தைகளை வீணடிக்கிறோம்.

ஆராய்ந்து பேசுவோம். அர்த்தமுடன் பேசுவோம்.

மந்திரங்கள் என்பது என்ன ? வார்த்தைகளின் தொகுப்பு தானே.

வார்த்தைகளுக்கு வலிமை இருக்கும் என்றால் மந்திரங்களுக்கும் வலிமை இருக்கும் தானே ?

சிந்திப்போம்....

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/23.html





Thursday, August 18, 2016

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.2

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.2


தன்னை யாராலும் வெல்ல முடியாது, நீ பயப்படாதே என்று மனைவிக்கு தேறுதல் சொல்லிவிட்டு வாலி போருக்கு புறப்படுகிறான்.

சுக்ரீவனோடு சண்டை போடுகிறான்.

சுக்ரீவனை தலைக்கு மேல் தூக்கி நிற்கும் போது இராமன் , இராமன் வலியின் மேல் அம்பு எய்துகிறான்.

மிக மிக வலிமை மிக்கவன் வாலி.

இருந்தும் அவன் மார்பில், கனிந்த வாழைப் பழத்தில் ஊசி ஏறுவது போல இராமனின் அம்பு நுழைகிறது.

பாடல்

காரும் வார் சுவைக் கதலியின்
    கனியினைக் கழியச்
சேரும் ஊசியிற் சென்றது
    நின்றது என் செப்ப?
நீரும், நீர்தரு நெருப்பும், வன்
    காற்றும், கீழ் நிமிர்ந்த
பாரும் சார் வலி படைத்தவன்
    உரத்தை அப் பகழி.

பொருள்

காரும் வார் சுவைக் கதலியின் = கனிந்த சுவையான வாழைப் பழத்தில்

கனியினைக் = பழத்தினை

கழியச் சேரும் = விரைந்து செல்லும்

ஊசியிற் சென்றது = ஊசி போல சென்றது

நின்றது = நின்றது

என் செப்ப? = என்ன சொல்ல

நீரும் = நீரும்

நீர்தரு நெருப்பும் = நீரைத் தரும் நெருப்பும்

வன் காற்றும் = ஆற்றல் மிகுந்த காற்றும்

கீழ் நிமிர்ந்த பாரும் = இவற்றிற்கு கீழே உள்ள நிலமும்

சார் வலி படைத்தவன் = மிகுந்த வலிமை கொண்டவனான

உரத்தை அப் பகழி = வலிமையை அந்த அம்பு



ஒரு பரு வெடிப்பில் (Big Bang ) இருந்து இந்த உலகம் வந்தது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. ஒரு நெருப்புக் கோளம் வெடித்து சிதறியதில் இருந்து உலகம் அனைத்தும் வந்தது என்று அறிவியல் கூறுகிறது.

கம்பன் கூறுகிறான், ஆதியில் நெருப்பு இருந்தது என்றும், அதில் இருந்து நீர்  வந்தது என்றும், அதில் இருந்து காற்றும் நிலமும் வந்தது என்றும்.

வன் காற்று என்று ஏன் கூறுகிறான் ?

வேன் நெருப்பு என்றோ, வன் நீர் என்றோ கூறி இருக்கலாம் அல்லவா ?

காற்றுக்குத்தான் வலிமை அதிகம்.

இராமாயணத்திலும் சரி, பாரதத்திலும் சரி,  மிக்க உடல் வலிமை மிக்கவர்கள்  வாயு புத்திரர்களே.

இராமாயணத்தில் அனுமன்

பாரதத்தில் பீமன்.

என்ன காரணம் ?

மூச்சை அடக்கினால் வலிமை வரும்.

நாடியில் இருக்கிறது அத்தனை வலிமையையும்.


சரி, வாலியின் பலத்தை எடுத்தது யார் ? இராமனா ?

கம்பன் கூறுகிறான் , வாலியின் பலத்தை எடுத்தது இராமன் அல்ல, அவன்  எய்த அம்பு என்று.

இது என்ன புதுக் கதை ? அம்பு தானாகவா தாக்கியது ?


இராமன் தானே எய்தான் ?

எய்தது இராமன் தான். அதில் சந்தேகம் இல்லை.

"    உரத்தை அப் பகழி."

வாலியின் வலிமையை அந்த "அம்பு"  கொண்டு சென்றது என்கிறான்.

அதற்கு என்ன காரணம் ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/22.html


Wednesday, August 17, 2016

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.1

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.1


வாலி வதம் , இராமாயணத்தில் ஜீரணிக்க முடியாத ஒரு பகுதி. எத்தனை ஆயிரம் சமாதானம் சொன்னாலும், இராமன் மறைந்து இருந்து அம்பு எய்ததை , அவனுடைய பக்தர்களே கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் இடம் அது.

ஏன் அது நடந்தது ? இராமன் குழம்பிப் போனானா ? மனைவியைப் பிரிந்ததால் அவன் முடிவு எடுப்பதில் தடுமாறினானா ? அப்படி என்றால் அவனை நம்பி ஒரு பெரிய அரசை எப்படி ஒப்படைப்பது ?

வால்மீகிக்கும், கம்பனுக்கும் இது தெரியாதா ? ஏன் வேலை மெனக்கெட்டு அதை பாட வேண்டும். விட்டு விட்டுப் போகவேண்டியது தானே ? இராமன் போன்ற உயர்ந்த பாத்திரத்தை ஏன் அதன் மதிப்பில் இருந்து நழுவி விழச் செய்தார்கள்.

ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா ?

அது என்ன காரணம் ?

சிந்திப்போம்.

மனிதனின் அறிவை அழிப்பது அவனுடைய ஆணவம். தான் என்ற ஆணவம் வரும்போது மனிதன் வீழ்ச்சியின் முதல் படியில் காலை வைக்கிறான்.

ஆணவம் அறிவுக்குப் போடும் திரை. அது உண்மையை மறைக்கும்.

ஆணவ மலம் ஆதி மலம் என்று சொல்லுவார்கள்.

வாலி, சுக்ரீவனோடு போர் செய்யப் புறப்படுகிறான்.

வாலிலியின் மனைவி தாரை தடுக்கிறாள். இத்தனை நாள் இல்லாத வீரம் சுக்ரீவனுக்கு எப்படி வந்தது ? என்று பலவும் சொல்லி வாலியை தடுத்து நிறுத்த முயல்கிறாள்.

வாலி ஆணவத்தின் உச்சியில் இருந்து பேசுகிறான் .

"இந்த மூன்று உலகமும் என் எதிரில் வந்தாலும், அவை என் முன்னால் நிற்காமல் தோற்று ஓடும் " என்று கூறுகிறான்.

பாடல்

மூன்று என முற்றிய
    முடிவு இல் பேர் உலகு
ஏன்று உடன் உற்றன
    எனக்கு நேர் எனத்
தோன்றினும், தோற்று அவை
    தொலையும் என்றலின்
சான்று உள; அன்னவை
    தையல் கேட்டியால். ‘


பொருள்

‘மூன்று என முற்றிய = மேல் , நடு , கீழ் என்று கூறப் படும் அந்த

முடிவு இல் பேர் உலகு = எல்லை அற்ற இந்த பெரிய உலகம் யாவும்

ஏன்று உடன் உற்றன = ஒன்று திரண்டு

எனக்கு நேர் எனத் தோன்றினும், = எனக்கு முன்னே தோன்றினாலும்

 தோற்று அவை  தொலையும் என்றலின் = அவை யாவும் தோற்று ஓடும்

சான்று உள; =அதற்கு சான்று உள்ளது

அன்னவை = அவற்றை

தையல் கேட்டியால். ‘ = பெண்ணே நீ கேட்டுக் கொள்

தன்னை மிஞ்ச இந்த மூன்று உலகிலும் யாரும் இல்லை என்கிறான்.

தனித் தனியாக கூட இல்லை, இந்த மூன்று உலகங்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்கிறான்.

அது ஆணவத்தின் உச்சம்.

எவ்வளவுக்கு எவ்வளவு ஆணவம் கெட்டிப் பட்டிருக்கிறதோ , அவ்வளவுக்கு அவ்வளவு உண்மை நம் கண்களுக்குத் தெரியாது.



Tuesday, August 16, 2016

பிரபந்தம் - இதெல்லாம் ஒரு பெருமையா Boss ?

பிரபந்தம் - இதெல்லாம் ஒரு பெருமையா Boss ?




முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ 
முகவரிகள் தொலைந்ததனால் அழுதிடுமோ அது மழையோ 

என்ற சினிமா பாடல் வரிகளை கேட்ட உடன் சொக்கிப் போகிறோம். அட டா என்ன ஒரு கற்பனை என்று.

அந்தக் காலத்திலேயே ,  இந்த கற்பனையெல்லாம் தூக்கி அடிக்கும்படி ஆண்டாள் எழுதி இருக்கிறாள்.

மேகங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. அது வானம் என்ற பெண்ணுக்கு போட்ட மேலாக்கு மாதிரி இருக்கிறது. காற்றில் அது அங்கும் இங்கும் அலைவது , வான மகளின் மேலாடை அசைவது போல இருக்கிறது.

அந்த மேகங்களிடம் ஆண்டாள் கேட்கிறாள்...."என் ஆள், மதுசூதனன் அங்க இருக்கானா " என்று.

மேகங்கள் பதில் சொல்ல மாட்டேன் என்கின்றன.

அதனால், ஆண்டாளுக்கு இன்னும் துக்கம் அதிகம் ஆகிறது. இங்கும் இல்லை. அங்கும் இல்லை என்றால் எங்கு தான் போனான் இந்த மாயக் கண்ணன் என்று.

அவள் கண்ணில் இருந்து நீர் வழிகிறது.

அது வழிந்து கன்னத்தில் இருந்து நேரே சொட்டு சொட்டாக அவள் மார்பில் விழுகிறது. அவளுடைய மார்பும் கண்ணீரால் நனைகிறது.


பாடல்

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே?

பொருள்

விண்ணீல = விண் + நீல = நீல நிறமான வானத்தில்

மேலாப்பு = தாவணி, அல்லது சேலை

விரித்தாற்போல் = அணிந்திருப்பதைப் போல

மேகங்காள் = மேகங்களே


தெண்ணீர்பாய் = தெளிந்த நீர் பாயும்

வேங்கடத்தென் = திரு வேங்கடத்தில் உள்ள என்

திருமாலும் =திருமாலும்

போந்தானே = அங்கு வந்தானா ?

கண்ணீர்கள் = இரண்டு கண்ணில் இருந்தும் வழியும் கண்ணீர்

முலைக்குவட்டில் = முலையின் நுனியில்

துளிசோரச் = துளி துளியாக வடிய

சோர்வேனை = சோர்ந்து இருக்கும் என்னை

பெண்ணீர்மை யீடழிக்கும் =பெண்ணின் குணங்களான நாணம் போன்றவற்றை அழிக்கும்

இதுதமக்கோர் பெருமையே? = இது அவனுக்கு ஒரு பெருமையா

என்னதான் ஆனாலும் பெண் வாய் விட்டு தன் காமத்தை வெளியே சொல்ல மாட்டாள். தன் ஆசையை வெளிப் படுத்த மாட்டாள். ஆனால், வேறு வழி இல்லாமல், தாங்க முடியாமல் கண்ணீர் வந்து விடுகிறது. துக்கம் ஒரு புறம். இப்படி , தன்னை கட்டுப் படுத்த முடியாமல் எல்லோரிடமும் தன் காதல் இப்படி ஒரு வெட்கம் இல்லாமல்  வெளிப் பட்டுவிட்டதே என்ற சங்கடம் ஒரு புறம்.

படிக்கும் எந்த பெண்ணுக்கும் ஆண்டாளின் அவஸ்தை புரியும்.

காதலித்திருந்தால் , ஆணுக்கும் புரியும் அந்த அவஸ்தை.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/boss.html

Monday, August 15, 2016

இராமாயணம் - வாலி வதம் - காரணம் யார் ?

இராமாயணம் - வாலி வதம் - காரணம் யார் ?


வாலி வதை என்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. இராமன் என்ற அவதார புருஷன் இப்படி ஒரு தவறு செய்யலாமா என்று அவனின் பக்தர்களே ஜீரணிக்க முடியாமல் திணறும் ஒரு இடம் வாலி வதம் .

இராமன் தவறு செய்தான் என்று வைத்துக் கொண்டாள் , ஏன் அந்தத் தவற்றை செய்தான் ? அதற்கு காரணம் என்ன ? காரணம் இருந்தாலும், செய்தது சரிதானா  என்ற கேள்விகள் காலம் காலமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இராமன் , ஆராயாமல் எடுத்த முடிவுக்குக் காரணம் அனுமன்.

மனைவியைப் பிரிந்து, சோகத்தில் இருக்கும் இராமனை தூண்டி விட்டு , அவனை உணர்ச்சி வசப்படச் செய்து தன் காரியத்தை முடித்துக் கொண்டது அனுமனின் சாமர்த்தியம்.

"சுக்ரீவனனின் மனைவியையும் எடுத்துக் கொண்டான்" என்று சொல்கிறான் அனுமன். அப்படி என்றால் என்ன ? சுக்ரீவனனின் அரசையும் எடுத்துக் கொண்டான் என்று பொருள் பட பேசுகிறான்.

வாலி மூத்தவன். அரசு அவனுக்குத் தான் சொந்தம். அப்படி இருக்க , சுக்ரீவனின் அரசை அவன் எடுத்துக் கொண்டான் என்று சொல்வது எப்படி சரியாகும்.

அது மட்டும் அல்ல.

வாலி , சுக்ரீவனின் மனைவியை கவர்ந்து கொண்டான் என்று ஒரு இடத்தில் கூட கம்பன் பதிவு செய்யவில்லை.

இறைவனின் மேல் விழுந்து அழும் மண்டோதரி சொல்கிறாள் "சானகியை மனச் சிறையில் கரந்த காதல் உள் இருக்கும் என நாடி தடவியதோ ஒருவன் வாளி " என்று.

வாலியின் மேல் விழுந்து புலம்பும் தாரை அப்படி ஒரு வரிகூட சொல்ல வில்லை.

வாலியின் மேல் வீண் பழியை சுமத்தியது அனுமன். இராமனை தூண்டி அவனிடம் வாலியை கொல்லுவேன் என்று சத்யம் வாங்கியது அனுமனின் பேச்சுத் திறம்.

பாடல்

உருமை என்று இவர்க்கு உரிய தாரமாம் 
அருமருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்
கருமம் இங்கு இது எம் கடவுள் என்றனன்.

பொருள்

உருமை = சுக்ரீவனின் மனைவியின் பெயர் ருமை . அது உருமை என்று வந்தது.

என்று = என்று

இவர்க்கு = சுக்ரீவனுக்கு

உரிய தாரமாம் = உரிமை உள்ள தாரமாம்

அருமருந்தையும் = அறிய மருந்தையும். இங்கு அவன் கூறும் அந்த 'ம்' காவியத்தின் போக்கை மாற்றுகிறது.

அவன் = வாலி

விரும்பினான் = விரும்பினான்

இருமையும் = தாரத்தையும், அரசையும்

துறந்து = துறந்து

இவன்= சுக்ரீவன்

இருந்தனன் = இருந்தான்

கருமம் இங்கு இது = இங்கு நடந்தது இதுதான்

எம் கடவுள் = எமக்கு கடவுள் போன்றவனே

என்றனன் = என்று அனுமன் கூறினான்

அனுமன் , சொற்களை மிக மிக தேர்ந்தெடுத்துப் போடுகிறான்.

வாலி , சுக்ரீவனின் மனைவியை கவர்ந்து கொண்டான் என்று சொல்ல வில்லை. "விரும்பினான்" என்று கூறுகிறான்.

பின், சுக்ரீவன் "இருமையும் இழந்தான்" என்று கூறுகிறான்.

மனைவியைப் பிரிந்த சோகத்தில் இருந்த இராமன், எல்லாவற்றையும்  தானே முடிச்சுப் போட்டுக் கொண்டு "சுக்ரீவனுக்கு உரிய  தாரத்தையும், அரசையும் வாலி கவர்ந்து கொண்டான் " என்ற முடிவுக்கு வருகிறான்.

பாடம் நடத்துகிறான் கம்பன்.

1. உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. அறிவு பூர்வமாக, சிந்தித்து, ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுத்தால்  கால காலத்துக்கும் துன்பம் தான்.

2. மனைவி என்பவள் மருந்தைப் போன்றவள் என்கிறான் கம்பன். இங்கு மட்டும் அல்ல, பல இடங்களில் இது போல கூறுகிறான். துன்பத்தை போக்குவது  மருந்து. வலியை குறைப்பது, நீக்குவது மருந்து. கணவனுக்கு வரும் துன்பத்தை போக்குபவளாக மனைவி இருக்க வேண்டும்.  துன்பத்தை கொண்டு வந்து தருபவளாக அல்ல.

3. எப்படி பேசுவது என்று தெரிந்தால், எவ்வளவு பெரிய காரியத்தையும்  நடத்தி விடலாம். யாருடைய உதவியையும் பெற்றுக்  கொள்ள முடியும். பேசிப் பழக வேண்டும். வார்த்தைகளை கையாள்வதில்  திறமை வேண்டும். வெற்றிக்கு அது முதல் படி.

இராமன் செய்தது சரியா தவறா என்ற வாதம் ஒரு புறம் இருக்கட்டும்.

அதில் இருந்து நமக்கு என்ன பாடம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

அறிவோம். உயர்வோம்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_15.html


Saturday, August 13, 2016

பிரபந்தம் - மறக்க நினைத்தாலும் முடியாது

பிரபந்தம் - மறக்க நினைத்தாலும் முடியாது 


குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை , அவர்கள் பெரியவர்கள் ஆவதற்கு முன்பே சொல்லித் தந்து விட வேண்டும்.

கொஞ்சம் வளரட்டும் , பின்னால் சொல்லித் தரலாம் என்று இருந்தால் , நடக்காது.

ஏன் ?

தர்க்க மூளை வளர்ந்து விட்டால், எதை சொன்னாலும் ஏன் அப்படி என்று கேள்வி கேட்பார்கள். எதற்கும் ஒரு எதிர்மறை எண்ணம் அவர்களிடம் இருக்கும். அதை குறை என்று சொல்ல முடியாது. அது வளர்ச்சியின் ஒரு படி. எதையும் எதிர்ப்பது, எதையும் கேள்வி கேட்பது அறிவு வளர்ச்சியின் அறிகுறி.

சிக்கல் என்ன என்றால், நல்லதைச் சொன்னால் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

புகை பிடிப்பது கெடுதல் என்று சொன்னால், "குடித்தவர்கள் எல்லாம் என்ன கெட்டா போய் விட்டார்கள்" என்ற கேள்வி வரும். சிகரெட் பெட்டியின் மேல் "புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு" என்று எழுதி வைத்தாலும் , அதை வாங்கி குடிக்கிறார்கள்.

ஏன் ? தெரியாமலா ?

இல்லை தெரியும்.

மனம் ஏதேதோ சமாதானம் சொல்லி அவர்களை குடிக்க தூண்டுகிறது.

புகை பிடிப்பது கெடுதல் என்ற எண்ணம் சிறு வயதில் ஆழமாக விழுந்து விட்டால்  , பின்னாளில் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட வராது.

ஆண்டாளுக்கு, சிறு வயதிலேயே பெருமாள் மேல் பற்று. காதல்.

கொஞ்சம் வயதான பின், அறிவு நினைக்கிறது. அரக்கனாவது , பூமியை பாயாக சுற்றிக் கொண்டு கடலுக்குள் போவதாவது...இதெல்லாம் சும்மா கதை...என்று அறிவு சொல்கிறது.   அந்த  கதை எல்லாம் மனதில் இருந்து தூக்கி எறிந்து விடலாம் என்று நினைத்தாலும் அவளால் முடியவில்லை.

ஏன் ஆண்டாள் அதை தன் மனதில் இருந்து வெளியேற்ற முயன்றாள் ?

யாருக்குத் தெரியும். அருகில் உள்ளவர்கள் ஏதேதோ சொல்லி இருக்கலாம். அது சரி இல்லை, இது இப்படி இருக்காது என்றெல்லலாம் சொல்லி அவள் மனதை மாற்ற முயன்றிருக்கலாம்.

இருந்தும் அவளால் முடியவில்லை.

ஆழ் மனதில் படிந்து விட்டது.

பாடல்

பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்குபண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே


சீர் பிரித்த பின்

பாசி தூர்ந்து கிடந்த பார் மகட்க்கு பண்டு ஒரு நாள்
மாசு உடம்பில் நீர் வார மானம் இல்லா பன்றியாம்
தேசு உடைய தேவர் திருவரங்க செல்வனார்
பேசி இருபனகள் பேர்கவும் பேராவே

பொருள்

பாசி  = பாசி படர்ந்து

தூர்ந்து = கேட்பாரற்று தூர்ந்து

கிடந்த - கிடந்த

பார் மகட்க்கு = நில மகளுக்கு

பண்டு = முன்பு

ஒரு நாள் = ஒரு நாள்

மாசு = அழுக்கு

உடம்பில் = உடலில்

நீர் வார = நீர் வழிய

மானம் இல்லா பன்றியாம் = மானம் இல்லாத பன்றியாக

தேசு = தேஜஸ். ஒரு கம்பீரம், ஒரு அமைதி, அந்த கூரிய பற்கள்...நீர் சொட்ட சொட்ட நிற்கும் அந்த தோரணை...அவளுக்குள் ஒரு சிலிர்ப்பை உண்டாக்குகிறது.

உடைய = உடைய

தேவர் = தேவனான

திருவரங்க செல்வனார் = திருவரங்கத்தில் உள்ள செல்வமான பெருமாள்

பேசி இருபனகள் = அவரைப் பற்றி பேசிய பேச்சுக்களை

பேர்கவும் பேராவே  = மனதை விட்டு விலக்க முயன்றாலும் முடியவில்லை

வெள்ளம் வருவதற்கு முன் அணை கட்டி விட வேண்டும். வெள்ளம் வந்த பின்  பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால் வெள்ளம் , அணையையும் சேர்த்து அடித்துக் கொண்டு போய் விடும்.

அறத்தை, நல்லதை , பிஞ்சு மனங்களில் படித்து விட வேண்டும்.

தடுப்பூசி போடுவது போல. முதலில் அதைப் போட்டு விட்டால், பின் எத்தனை நுண் கிருமிகள் தாக்கினாலும் ஒரு நோயும் வராது.

குழந்தைகளுக்கு நல்லது இளமையிலேயே சொல்லி வையுங்கள்.

வருங்காலத்திற்கான தடுப்பூசி அது.

பிள்ளைகளுக்கு சொல்லித் தராவிட்டாலும் பரவாயில்லை, பேரக் குழந்தைகளுக்கு  சொல்லித் தாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_13.html




வில்லி பாரதம் - சாதி கடந்த இடம்

வில்லி பாரதம் - சாதி கடந்த இடம் 


நல்ல விஷயங்களை சொல்லவே அத்தனை இலக்கியங்களும் படைக்கப் பட்டன. நல்ல விஷயங்களை , நல்ல கதா பாத்திரங்கள் தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. எதிர் மறை குணம் கொண்ட பாத்திரங்கள் மூலமும் நல்லதை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். 

கம்ப இராமாயணத்தில் கூனி அறம் சொல்லுவாள், கும்பகர்ணன் சொல்லுவான். 

பாரதத்தில் சில இடங்களில் துரியோயாதான் நல்ல விஷயங்களைப் பேசுவான். 

அர்ஜுனனோடு வில் வித்தைக்கு கர்ணன் களத்தில் இறங்குகிறான். 

இது அரசர்களுக்கு உண்டான போட்டி. நீ யார், உன் குலம் என்ன என்று அங்கிருந்த பெரியவர்கள் வினவுகிறார்கள். 

துரியோதனன் சொல்கிறான்...."கற்றவர்களுக்கு, அழகான பெண்களுக்கும், தானம் செய்பவர்களுக்கும், வீரர்களுக்கும், அரசர்களுக்கும், ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும் சாதி என்பது கிடையாது" என்று. 

பாடல் 

கற்றவர்க்குநலனிறைந்த கன்னியர்க்கும்வண்மைகை
உற்றவர்க்கும்வீரரென்றுயர்ந்தவர்க்கும்வாழ்வுடைக்
கொற்றவர்க்குமுண்மையான கோதின்ஞானசரிதராம்
நற்றவர்க்குமொன்றுசாதி நன்மைதீமையில்லையால்.


பொருள் 


கற்றவர்க்கு = கல்வி கற்றவர்களுக்கு 

நலனிறைந்த = நலம் நிறைந்த (அழகு, அறிவு, பண்பு) நிறைந்த 

கன்னியர்க்கும் = கன்னிப் பெண்களுக்கும் 

வண்மை கை உற்றவர்க்கும் = கொடை வழங்கும் கைகளை கொண்டவர்களுக்கும் 

வீரரென்றுயர்ந்தவர்க்கும் = வீரரென்று உயர்ந்தவர்க்கும் 

வாழ்வுடைக் கொற்றவர்க்கும் = உயர்ந்த வாழ்வை உடைய அரசர்களுக்கும் 


உ ண்மையான = உண்மையான 

கோதின்ஞானசரிதராம் = குற்றமற்ற ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும் 

நற்றவர்க்குமொன்று சாதி = நல்ல தவம் செய்தவர்களுக்கும் சாதி ஒன்று தான் 

நன்மைதீமையில்லையால் = அதில் உயர்வு தாழ்வு இல்லை 


வெள்ளத்தில் மாட்டிக் கொண்டால், வேறு ஜாதிக் கார இராணுவ வீரர் காப்பாற்றினால், மாட்டோம் என்போமா ?

பசியில், வறுமையில் தவிக்கும் ஒருவன், வேறு ஜாதிக் காரன் தரும் உதவியை வேண்டாம் என்பானா ?

மாற்று ஜாதிக் காரன் என்பதால், ஒரு அரசன் சொல்வதை கேட்காமல் இருக்க முடியுமா ?

அழகான பெண், மாற்று மதத்தவள் என்பதால் அவளின் அழகு குறைந்து விடுமா ?

உண்மையான துறவிகள் எந்த மதத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் வாயை அடைப்பதற்காக கூட அவன் சொல்லி இருக்கலாம். இருந்தாலும், அவன் மூலம் ஒரு உண்மையை எடுத்துச் சொல்கிறார் வில்லிபுத்தூரார். 

அறிவோம். 

சாதி போன்ற பிரிவுகளை கடந்து மேலே செல்வோம். 

அறிவோம். உயர்வோம். 

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post.html

Wednesday, August 3, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - சிறிது இது என்று இகழல்

இராமாயணம் - சுந்தர காண்டம் - சிறிது இது என்று இகழல்


நமக்கு ஏன் ஏமாற்றங்கள் வருகின்றன ?

எவ்வளவோ முயற்சி செய்தேன், கடைசியில் கை நழுவித் போய் விட்டது என்று வருந்தியர்கள் எத்தனை பேர்.

காரணம் என்ன ?

எவ்வளவு முயற்சி வேண்டும் எந்தப்பதில் தப்பு கணக்கு போட்டு, கடைசியில் ஏமாந்து போனவர்கள் ஏராளம்.

எந்த ஒரு வேலையை செய்வதானாலும் , அந்த வேலையை செய்து முடிக்க எவ்வளவு முயற்சி தேவை என்று தெளிவாக ஆராய்ந்து பின் செயலில் இறங்க விடும். இல்லை என்றால் ஏமாற்றமும் விரக்தியும் தான் மிஞ்சும்.

அவன் செய்தான், இவன் செய்தான் என்று நாமும் இறங்கி விடக் கூடாது.

நமது திறமை என்ன, நமது வலிமை என்ன, நம்மால் என்ன ஆகும் என்று அறிந்து பின் செயலின் இறங்க வேண்டும்.

ஆழம் தெரியாமல் காலை விட்டுக் கொண்டு அவதிப் படக் கூடாது.

நிறைய பேர் தெரியாமல் தொழில் தொடங்கி நட்டப் பட்டிருக்கிறார்கள். தெரியாமல் ஏதாவது ஒரு துறையில் இறங்கி, கல்லூரியில் படிக்க முடியாமல் திணறியவர்கள் ஏராளம்.

அனுமன் கடலை தாண்ட தாவிக் குதிக்கிறான்.

ஒரு காலத்தில் அகத்திய மா முனிவர் இந்த கடல் அனைத்தையும் தன்  வயிற்றுக்குள் அடக்கி பின் உமிழ்ந்தவர். அனுமனை பார்த்து தேவர்கள்  கூறினார்கள், "அகத்தியர் உண்டு உமிழ்ந்த கடல் தானே, சின்னாதாக இருக்கும் என்று எண்ணாதே" என்று அறிவுரை பகர்ந்தார். நல்லது என்று அனுமனும் கேட்டுக் கொண்டான்.


பாடல்

‘குறு முனி குடித்த வேலை
    குப்புறும் கொள்கைத்து ஆதல்
வெறுவிது, விசயம் வைகும்
    விலங்கல் தோள் அலங்கல் வீர!
சிறிது இது என்று இகழல் பாலை
    அல்லை; நீ சேறி! ‘என்னா
உறுவலித் துணைவர் சொன்னார்;
    ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான்.


பொருள் 

‘குறு முனி =  உயரம் குறைந்த முனிவரான அகத்தியர்

குடித்த வேலை = குடித்த கடல்

குப்புறும் கொள்கைத்து ஆதல் = பாய்ந்து கடக்க வேண்டி இருத்தல்

வெறுவிது = சிறியது, மதிக்கதாகதது

விசயம் வைகும் = வெற்றி கொண்ட

விலங்கல் = மலை போன்ற

தோள் = தோள்களில்

அலங்கல் = மாலை அனிதா

வீர! = வீரனே

சிறிது இது என்று = சின்னது இது என்று

இகழல் பாலையல்லை  = அற்பமாக நினைக்காதே

நீ சேறி! = நீ விரைந்து செல்க

 ‘என்னா = என்று

உறுவலித்  = வலிமை உடைய

துணைவர் சொன்னார் = நண்பர்கள் சொன்னார்கள்

ஒருப்பட்டான் = ஏற்றுக் கொண்டான்

பொருப்பை = மலையை

ஒப்பான்  = போன்ற உடல் உடைய அனுமன்


எந்த வேலையையும் அற்பமாக நினைக்காமல், அதற்கு வேண்டிய முயற்சி யை அளித்து அந்த செயலில் வெற்றி பெற வேண்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_3.html


Monday, August 1, 2016

குறுந்தொகை - கை இல்லாத இதயம்

குறுந்தொகை - கை இல்லாத இதயம் 




அவர்களால் சந்திக்க முடியவில்லை. தங்கள் காதலை whatsapp லும் ,  குறுஞ் செய்திகள் (S M S ) மூலமும் பரிமாறிக் கொள்கிறார்கள். என்ன இருந்தாலும் ,நேரில் சென்று அவள் கை பிடிப்பது போல வருமா ? கட்டி அணைக்கும் சுகம் கை பேசி தகவல் பரிமாற்றத்தில் வருமா.

வராது.

இதயம் , நினைத்த மாத்திரத்தில் அவளிடம் போய் விடுகிறது. போய் என்ன செய்ய ? கை கோர்க்க, கட்டி அணைக்க கை வேண்டாமா ? அது தெரியாமல் இந்த இதயம் ஊருக்கு முந்தி அவளிடம் சென்று விடுகிறது.

இது இன்றைய நிலை. குறுந்தொகை காலத்திலும் இதே கதை தான்.

பொருள் தேடி காதலன்  வெளி நாடு சென்று திரும்பி வருகிறான்.  அவளை பார்க்கப் போகிறோம் என்ற ஆவல். எத்தனை வருடம் ? அவன்  போவதற்குள் அவன் இதயம் அவளிடம் ஓடிப் போய் விட்டது.

காதலன் , தன்னுடைய தேர் பாகனிடம் சொல்கிறான்....

"நாம் நம் தலைவியின் இருப்பிடம் நோக்கிச் செல்கிறோம். போகிற வழியோ ஆபத்து நிறைந்தது. புலிகள் நிறைந்த காட்டுப் பாதை. கடல் ஆரவாரித்து எழுவது போல அந்த கொலை நோக்கம் கொண்ட புலிகள் பாய்ந்து வரும். இடைப்பட்ட தூரமோ அதிகம். என் இதயம் இருக்கிறதே , அது என்னை கேட்காமல் அவளைக் காண ஓடி விட்டது. போய் என்ன செய்யப் போகிறது ? அவளை கட்டி பிடிக்க முடியுமா அதனால் ? நான் எதை நினைத்து வருந்துவேன் " என்று மயங்குகிறான் காதலன்.

காதலியைத் தேடும் அவன் ஆர்வத்தை, அவனுக்கு முன்னால் சென்ற அவன் இதயத்தை, புலி நிறைந்த கானகத்தின் சாலைகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் பாடல்....

பாடல்


அஞ்சுவ தறியா தமர்துணைதழீஇய 

நெஞ்சுநப் பிரிந்தன் றாயினு மெஞ்சிய 
   
கைபிணி நெகிழினஃ தெவனோ நன்றும் 
    
சேய வம்ம விருமா மிடையே 

மாக்கடற் றிரையின் முழங்கி வலனேர்பு  
    
கோட்புலி வழங்குஞ் சோலை 
    
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே.

பொருள் 


அஞ்சுவ தறியா = அஞ்சுவது அறியாமல்

தமர்துணைதழீஇய = நாம் விரும்பும் தலைவியை தழுவும் பொருட்டு

நெஞ்சு = என் நெஞ்சானது

நப் பிரிந்தன் றாயினு = என்னை பிரிந்து அவளை காண சென்றாலும்

எஞ்சிய = மீதியுள்ள
 
கைபிணி = கையால் பிணித்தல் (கட்டித்த தழுவுதல்)

நெகிழினஃ தெவனோ = நெகிழ்ந்து விடுமாயின் , தவறி விட்டால். நெஞ்சத்தால் எப்படி கட்டி தழுவ முடியும் ?

நன்றும் சேய  = சேய்மை என்றால் தூரம். மிக தொலைவில்

அம்ம விருமா மிடையே = எங்களுக்கு இடையில் உள்ள தூரம்

மாக்கடற் றிரையின் = மா + கடல் + திரையின் = பெரிய கடலின் அலை போல

முழங்கி = சப்த்தம் செய்து

வலனேர்பு  =வலமாக எழுந்து
 
கோட்புலி = கொலை நோக்கம் கொண்ட புலி

வழங்குஞ் சோலை =  இருக்கின்ற சோலைகள்
 
எனைத்தென் றெண்ணுகோ = எத்தனை என்று எண்ணுவேன் ?

முயக்கிடை = அவளை கட்டி அணைக்க

மலைவே = தடைகள்

காலங்கள் மாறலாம். மனித உணர்ச்சிகள் அப்படியேதான் இருக்கின்றன.

காலங்கள் கடந்தாலும் காதல் தாகம் தீர்ந்தபாடில்லை.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_99.html





இராமாயணம் - சுந்தர காண்டம் - தொடங்குங்கள், உலகம் உங்கள் பின்னால்

இராமாயணம் - சுந்தர காண்டம் - தொடங்குங்கள், உலகம் உங்கள் பின்னால் 


“Until one is committed, there is hesitancy, the chance to draw back, always ineffectiveness. Concerning all acts of initiative (and creation), there is one elementary truth that ignorance of which kills countless ideas and splendid plans: that the moment one definitely commits oneself, then Providence moves too. All sorts of things occur to help one that would never otherwise have occurred. A whole stream of events issues from the decision, raising in one's favor all manner of unforeseen incidents and meetings and material assistance, which no man could have dreamed would have come his way. Whatever you can do, or dream you can do, begin it. Boldness has genius, power, and magic in it. Begin it now.”


― William Hutchison Murray

எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் ஒரு உறுதி வேண்டும். Committment .

உடற் பயிற்சி செய்யப் போகிறேன், உணவு கட்டுப்பாட்டுடன் இருக்கப் போகிறேன்....இந்த Course படிக்கப் போகிறேன், என்று எதை எடுத்தாலும் ஒரு உறுதி வேண்டும்.

உறுதியோடு ஆரம்பித்தால் , உலகம் உங்கள் பின்னால் நிற்கும்.


நீங்கள் எதிர் பார்க்காத இடத்தில் இருந்து உதவி தானே வரும்.

அனுமன் இலங்கை நோக்கி செல்லத் தொடங்குகிறான்.

வானவர்களும், தேவர்களும் மற்றையவர்களும் வந்து நின்று அவன் மேல் பூ மாறி பொழிந்து "வென்று வருக" என்று வாழ்த்துச் சொன்னார்கள்.

நீங்கள் ஒரு நல்ல காரியத்தை , உறுதியோடு ஆரம்பியுங்கள். மூவரும், தேவரும் உங்கள் பின்னால் இருப்பார்கள்.

நம்புங்கள்.

இராம காதை தரும் நம்பிக்கை இது.

யார் நமக்கு உதவுவார்கள் என்று சோர்ந்து இருக்காதீர்கள்.

எழுந்து சுறு சுறுப்பாக காரியத்தில் இறங்குங்கள். உதவி வரும்.

அனுமன் தேவர்களின் உதவியைக் கேட்கவில்லை. அவர்களே வந்து வாழ்த்துச் சொன்னார்கள்.

அப்படி , உயர்ந்த ஆசீர்வாதம் உங்களுக்கும் கிடைக்கும்.

பாடல்

இத் திறம் நிகழும் வேலை,
    இமையவர், முனிவர், மற்றும்
முத்திறத்து உலகத்தாரும்,
    முறைமுறை விசும்பின் மொய்த்தார்,
கொத்து உறு மலரும், சாந்தும்,
    சுண்ணமும், மணியும், தூவி,
‘வித்தக! சேறி ‘என்றார்;
    வீரனும் விரைவது ஆனான்.



பொருள்

இத் திறம் = இப்படியாக

நிகழும் வேலை = நிகழும் நேரத்தில்

இமையவர் = தேவர்கள்

முனிவர் = முனிவர்கள்

மற்றும் = மேலும்

முத்திறத்து உலகத்தாரும் = மூன்று உலகில் உள்ள அனைவரும்

முறைமுறை = வரிசை வரிசையாக

விசும்பின் = மலையின் கண்

மொய்த்தார், = வந்து சேர்ந்தனர்

கொத்து உறு மலரும் =  கொத்து கொத்தான மலர்களையும்

சாந்தும், = சந்தனமும்

சுண்ணமும் = வாசனைப் பொடிகளையும்

மணியும் = மணிகளையும்

தூவி = தூவி

‘வித்தக! = அறிஞனே

சேறி ‘என்றார்; = சென்று வா என்றார்கள்

வீரனும் விரைவது ஆனான் = அனுமனும் விரைந்தான்

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/blog-post_1.html

Friday, July 29, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - செயலின் தொடக்கம்

இராமாயணம் - சுந்தர காண்டம் - செயலின் தொடக்கம் 


ஏதோ ஒரு காரணத்தால் நமக்கு  சில துன்பங்கள் வந்து சேர்ந்து விடுகின்றன.   நாமும் சோர்ந்து போய்  விடுகிறோம். என்ன செய்வது, யாரிடம் போய் உதவி கேட்பது , என்று குழம்பிப் போய் நின்றிருப்போம்.

கடைசியில் ஏதோ ஒரு வழி  தோன்றும். அது சரியா தவறா என்று கூடத் தெரியாது.

எப்போது ஒரு வழி சரி என்று தெரிந்து விட்டதோ, அப்போது அதில் முழு மூச்சுடன் செல்ல வேண்டும்.

அனுமன் இலங்கையை கண்ட பின் , ஆரவாரத்துடன் கிளப்புகிறான்...

எப்படி என்றால் ....

பாடல்


வன் தந்த வரிகொள் நாகம்
    வயங்கு அழல் உமிழும் வாய
பொன் தந்த முழைகள் தோறும்
    புறத்து உராய்ப் புரண்டு பேர்வ,
நின்று, அந்தம் இல்லான், ஊன்ற,
    நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப்
    பிதுங்கின குடர்கள் மான.


பொருள் 

வன் = வன்மையான

தந்த = தந்தம் போன்ற வலிமையான

வரிகொள் நாகம் = பற்களை கொண்ட நாகங்கள்

வயங்கு = விளங்கும்

அழல் உமிழும் வாய = தீயைக் காக்கும் வாயை கொண்டு

பொன் தந்த = பொன் முதலிய திரவியங்களை கொண்ட

முழைகள் தோறும் = குகைகள் எல்லாம்

புறத்து = வெளியே

உராய்ப் புரண்டு = புரண்டு உராய்ந்து

பேர்வ = வெளியே வந்து

நின்று = அனுமன் நின்று

அந்தம் இல்லான் = முடிவு இல்லாதவன்

ஊன்ற = அழுந்தி எழ

நெரிந்து =நசுங்கி

கீழ் = கீழே

அழுந்தும் = அழுந்தும்

நீலக் குன்றம் = நீல நிறமான மலை

தன் வயிறு கீறிப் = தன் வயிற்றை பிளந்து

பிதுங்கின குடர்கள் மான. = பிதுங்கி வெளியே வந்த குடல் போல இருந்தது.

அனுமன் தன் காலை அழுத்தி ஊன்றி மேலே கிளம்பிய போது , அந்த நீல நிற மலையில் உள்ள குகைகளில் இருந்த பாம்புகள் நெருப்பைக்  கக்கிக் கொண்டு வெளியே  வந்தன.அது , ஏதோ அந்த மலையின் வயிறு பிளந்து அதன் குடல் வெளியே வந்தது மாதிரி இருந்தது.

எந்த வேலையையும் , தொடங்கும்போது உங்கள் அனைத்து ஆற்றலையும்  சேர்த்து தொடங்குங்கள்.

A thing well begun is half finished என்று சொல்லுவது போல.


அது வெற்றியின் முதல் படி.


http://interestingtamilpoems.blogspot.in/2016/07/blog-post_29.html



Thursday, July 28, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - தெளிவு

இராமாயணம் - சுந்தர காண்டம் - தெளிவு 


சந்தேகம் மற்றும் தயக்கத்தால் பல வெற்றிகளை, இன்பங்களை இழந்து விடுகிறோம்.


ஆழ்ந்து சிந்தித்து, அலசி ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

அப்படி எடுத்த பின், அதில் முழு மகிழ்ச்சியோடு ஈடு பட வேண்டும்.

வேலையை தொடங்கிய பின், இது சரியா, ஒரு வேளை இது இல்லாமல் மத்தது எதையாவது எடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் எடுத்த வேலை சிறக்காது.

எதில் தான் தயக்கமும் குழப்பமும் இல்லை ?

கல்லூரியில் ஏதாவது ஒரு பாட திட்டத்தை எடுத்த பின், ஒரு வேளை வணிகம் படிக்காமல் பொறியியல் படித்தால் நன்றாக இருக்குமோ என்ற குழப்பம்.


திருமணம் முடிந்த பின்னும், அந்த பெண் இவளை விட நன்றாக இருந்திருப்பாளோ என்ற சந்தேகம்.

வேலையில் சேர்ந்த பின்னால், அந்த நிறுவனம் இதை விட சிறப்பாக இருக்குமோ என்ற சந்தேகம்.

சேலையை வாங்கிய பின்னால், ஒரு வேளை அந்தக் கடையில் முதலில் பார்த்த சேலை இதை விட நன்றாக இருந்ததோ என்ற சந்தேகம்.

கார் வாங்கினாலும், வீடு வாங்கினாலும், எது செய்தாலும் ஓயாத குழப்பம். தயக்கம்.

இப்படி தொடங்கிய எதிலும் ஒரு உற்சாகத்துடன் செல்லாமல் இது சரியா தவறா என்று யோசித்துக் கொண்டே , சந்தேகப் பட்டுக் கொண்டே இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

எண்ணித் துணிக கர்மம், துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பார் வள்ளுவர்.


எடுத்த எந்த முடிவிலும்  முழு உற்சாகத்துடன், சந்தோஷத்துடன் செயல் பட்டால்  வெற்றி நிச்சயம்.

சுந்தர காண்டத்தில், இலங்கைக்கு போக வேண்டும் என்று அனுமன் நினைத்து விட்டான். விஸ்வரூபம் எடுத்து நாலா புறமும் தேடுகிறான். தேவர் உலகைப் பார்த்து, இதுவா இலங்கை என்று சந்தேகம் கொண்டான். பின் தெளிந்தான்.

இலங்கை இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டான்.

அவ்வளவுதான்.

அவனுடைய உற்சாகத்தைப் பாருங்கள்.

பாடல்


பாடல்

‘கண்டனென் இலங்கைமூதூர்!
    கடிபொழில், கனக நாஞ்சில்,
மண்டல மதிலும், கொற்ற
    வாயிலும், மணியில் செய்த
வெண் தளக் களப மாட
    வீதியும், பிறவும்! ‘என்னா,
அண்டமும் திசைகள் எட்டும்
    அதிரத் தோள் கொட்டி ஆர்த்தான்.

பொருள்


‘கண்டனென் = கண்டான்

இலங்கைமூதூர்! = இலங்கை என்ற பழைய ஊரை

கடிபொழில் = காவல் நிறைந்த சோலைகளை உடைய

கனக நாஞ்சில், = பொன்னால் செய்யப்பட்ட குருவி தலை போன்ற கைப்பிடி

மண்டல மதிலும் = வட்டமான சுவர்

கொற்ற வாயிலும் = அரச வாயிலும்

மணியில் செய்த = மணிகளால் செய்யப்பட்ட

வெண் தளக் = வெண்மையான

களப = சுண்ணாம்பு பூசப்பட்ட

 மாட வீதியும் = பெரிய வீதிகளையும்

பிறவும்! ‘என்னா = மற்றவற்றையும்

அண்டமும் = உலகம் எங்கும்

 திசைகள் எட்டும் = திசைகள் எட்டும்

அதிரத் = அதிரும்படி

தோள் கொட்டி ஆர்த்தான்.= தோள் கொட்டி ஆர்த்தான்

ஒன்றும் ஆகி விடவில்லை. இலங்கையைப் பார்த்தான். அவ்வளவுதான். அதுக்கு உலகம் பூரா கேட்கும் படி மகிழ்ச்சி ஆராவாரம்.

ஒரு வேலையை தொடங்கும் போது மிகுந்த உற்சாகம் வேண்டும்.

ஒரு ஆகாய விமானத்திற்கு எப்போது அதிக பட்ச சக்தி வேண்டும் என்றால் அது   தரையில் ஓடி விண்ணில் தாவும் அந்த நேரத்தில் தான்.

அதே போல நமக்கு எப்போது அதிக பட்ச சக்தியும், உற்சாகமும் வேண்டும் என்றால் ஒரு வேலையை தொடங்கும்போது.

மகிழ்ச்சியாக, உற்சாகமாக தொடங்கிவிட்டால் அதுவே பாதி வெற்றி பெற்ற மாதிரிதான்.

எனவே,

எதை ஆரம்பித்தாலும்,  சந்தோஷமாக, உற்சாகமாக, மிகுந்த உத்வேகத்துடன்  ஆரம்பியுங்கள். சோர்ந்து, தளர்ந்து, சந்தேகத்துடன் ஆரம்பிக்காதீர்கள்.

அந்த உற்சாகம், உந்துதல் மட்டுமே கூட அந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க உதவும். உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.


இன்னும் அடுத்து வரும் சில பாடல்களில் அனுமனின் உற்சாகத்தை,  மகிழ்ச்சியை நாம் காணலாம்.

எப்போதெல்லாம் சோர்வு வருகிறதோ, தளர்ச்சி வருகிறதோ...சுந்தர காண்டம் படியுங்கள்.

அனுமனின் உற்சாகம் உங்களையும் பற்றிக் கொள்ளும்.

பற்றட்டும் !

http://interestingtamilpoems.blogspot.in/2016/07/blog-post_28.html



Monday, July 18, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - சந்தேகம்

இராமாயணம் - சுந்தர காண்டம் - சந்தேகம் 



துன்பம் வந்தால் சுந்தர காண்டம் படியுங்கள் என்று சொல்கிறார்கள். அழகான காண்டம் (சுந்தரம்) என்றால் அதில் ரசிக்க ஏதாவது இருக்க வேண்டும். அழகிய பூஞ்சோலைகள், அருவிகள், பச்சை பசேல் என்ற வயல் வெளி, அங்கு வரும் பறவைகள், மகிழ்ச்சியான ஆடி பாடும் மக்கள் என்று ஏதாவது இருக்க வேண்டும்.

சுந்தர காண்டத்தின் தொடக்கம் சீதையைப் பிரிந்த இராமன். ஒரே புலம்பல் இரண்டு பேரும் . அனுமன் கடல் தாண்டி போகிறான். உப்புக் கடலில் இரசிக்க என்ன இருக்கிறது. பாத்தா குறைக்கு போகின்ற வழியில் இடைஞ்சல்கள் வேறு. இலங்கைக்குப் போன பின்னால், சீதை தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறாள். அனுமன் இலங்கைக்கு தீ வைக்கிறான். கணையாழியோடு திரும்பி வந்து சேர்கிறான்.

இதில் என்ன சுந்தரம் இருக்கிறது ?

அது மட்டும் அல்ல, நாமே ஒரு துன்பம் என்று போனால், கதையில் அதை விட பெரிய துன்பமாக இருக்கிறது. மனதுக்கு ஆறுதலாக ஒன்றும் இல்லை.


பின் ஏன் துன்பம் வந்த நேரத்தில் சுந்தர காண்டம் படி என்று சொன்னார்கள் ?

காரணம் இருக்கிறது.

எந்த ஒரு துன்பத்தையும், சிக்கலையும் எப்படி சரி செய்து , அதில் இருந்து மீள்வது  என்று காட்டுகிறது சுந்தரகாண்டம்.

துன்பத்தில் இருந்து மீண்டால் மகிழ்ச்சி தானே ?

அந்த மகிழ்ச்சிக்கு வழி காட்டுவது சுந்தர காண்டம்.

எப்படி என்று பார்ப்போம்.

அனுமன் சீதையைத் தேடி புறப்படுகிறான். மகேந்திர மலையின் மேல் ஏறி , தனது விஸ்வரூபத்தை எடுத்து நாலா புறமும் பார்க்கிறான்.இலங்கை எங்கே என்று தெரியாது. முன்ன பின்ன போனது கிடையாது. வரைபடம் கிடையாது. போக வேண்டிய இடம் தெரியும். எப்படி போவது என்று தெரியாது. இலங்கை எப்படி இருக்கும் என்றும் தெரியாது.

நம் வாழ்விலும் அப்படி எத்தனையோ குழப்பங்கள் வருவது உண்டு இல்லையா. என்ன வேண்டும் என்று தெரியும். ஆனால் அதை எப்படி அடைவது என்று தெரியாது.

பாடல்

ஆண் தகை ஆண்டு அவ் வானோர்
    துறக்கம் நாடு அருகில் கண்டான்;
ஈண்டது தான்கொல் வேலை
    இலங்கை என்று ஐயம் எய்தா,
வேண் தரு விண்ணாடு என்னும்
    மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான்;
‘காண் தகு கொள்கை உம்பர்
    இல் ‘எனக் கருத்துள் கொண்டான்.


பொருள்

ஆண் தகை = ஆண்களில் உயர்ந்த அனுமன்

ஆண்டு = அப்போது (விஸ்வரூபம் எடுத்த அப்போது)

அவ் வானோர் = வானவர்கள், தேவர்கள்

துறக்கம் நாடு  = தேவர்களின் நாட்டை

அருகில் கண்டான்; = அருகில் கண்டான்

ஈண்டது தான்கொல் = இப்போது அது தான்

வேலை = கடல்

இலங்கை என்று = (சூழ்ந்த) இலங்கை என்று

ஐயம் எய்தா = சந்தேகம் கொண்டான்

வேண் தரு = வேண்டியதைத் தரும்

விண்ணாடு என்னும் = விண்ணவர்களின் நாடு

மெய்ம்மை கண்டு = என்ற உண்மையை அறிந்து

உள்ளம் மீட்டான்; = உள்ளம் மீண்டான்

‘காண் தகு கொள்கை = காணாத தகுந்த கொள்கை (சீதையை காண வேண்டும் என்ற கொள்கை )

உம்பர்  இல் ‘ = இங்கே இல்லை

எனக் கருத்துள் கொண்டான். = என மனதில் கொண்டான்

இதில் இரண்டு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒன்று, நமது குறிக்கோள் என்ன என்பதை ஒரு போதும் மறக்கக் கூடாது.

இரண்டாவது, குறிக்கோளை அடையும் வழியில் பல சலனங்கள், சபலங்கள் வரும். அவற்றைக் கண்டு , அதில் மயங்கி நின்று விடக் கூடாது.  அல்லது குறிக்கோளை விட்டு வேறு வழியில் போகக் கூடாது.

அனுமனுக்கு தேவர்களின் உலகம் கண்ணில் பட்டது. அப்படியே ஒரு சுற்று சுற்றிவிட்டு   வரலாமே என்று நினைத்திருக்கலாம். அழகான பெண்கள்,  கற்பக மரம், இனிமையான இசை, நல்ல கட்டிடங்கள், மனதை மயக்கும் நறுமணம் என்று எல்லாமே இருந்திருக்கும்.

அதில் எல்லாம் மனதைச் செலுத்தாமல், தனது குறிக்கோள் என்ன என்பதில்  கவனமாக இருந்தான்.

துன்பத்தை வெல்ல முதல் படி, குறிக்கோளில் தெளிவாக இருக்க வேண்டும்.

எடையை குறைக்க வேண்டும் என்பது குறிக்கோள். உணவை கட்டுப் படுத்த வேண்டும் என்று தெரியும். நல்ல ice cream ஐ பார்த்தால் உடனே  குறிக்கோள் மறந்து போய் விடுகிறது.

படிக்க வேண்டும் , நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்பது குறிக்கோள்.தொலைக்காட்சியில் cricket வந்தால்,  பெரிய நடிகரின் படம் திரைப்படத்தில் வந்தால் குறிக்கோள் மறந்து போய் விடுகிறது.

சலனத்திற்கு ஆட்படாமல், குறிக்கோளில் குறியாக இருக்க வேண்டும்.

துன்பம் ஓடிப் போய்விடும்.

போகட்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/07/blog-post.html




Monday, July 11, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - முன்னுரை - பாகம் 2

இராமாயணம் - சுந்தர காண்டம் - முன்னுரை - பாகம் 2

துன்பம் வந்து விட்டால் ஏதோ  நமக்கு மட்டும் வந்து விட்டது போல துவண்டு போகிறோம். நமக்கு துன்பமே வரக்கூடாது, எப்படியோ வந்து விட்டது என்று அங்கலாய்கிறோம்.

அது உண்மையா ?

சாம்ராஜ்யத்துக்கு முடி சூட்ட இருந்த இராமனை காட்டுக்கு 14 வருஷம் போ என்று விரட்டி விட்டாள் கைகேயி. அதை விட பெரிய துன்பம் நமக்கு வந்து விடுமா ?

நாடு, நகரம், சொந்தம் , பந்தம், சொத்து , சுகம், பெருமை, புகழ் அனைத்தும் ஓர் இரவில் இழந்து, உடுக்க நல்ல துணி கூட இல்லாமல் கானகம் போன இராமனின் துன்பத்தை விட உங்கள் நட்டம் , உங்கள் அவமானம், உங்கள் இழப்பு பெரிய இழப்பா ?

சரி, அதுவாவது போகட்டும். 

இராமன் வலிமையான ஆடவன். அவனால் துன்பத்தை தாங்கிக் கொள்ள முடியும். 

சீதை, செல்லமாக வளர்ந்த பெண்.

காடு என்றால் என்ன என்றே தெரியாமல் வளர்ந்த பெண். அவளை காட்டுக்குப் போ என்று யாரும் சொல்லாவிட்டாலும் அவளும் கிளம்பி விட்டாள் . 

அதை விட நம் துயரம் பெரிய துயரமா ?

பெண்ணை கட்டி கொடுத்து விட்டு, "ஐயோ அவள் அங்கே என்ன கஷ்டப் படுகிறாளோ " என்று மனம் சோரும் பெண்களுக்கு சீதையின்  வாழ்க்கை   ஒரு ஆறுதலைத் தரும். 

சரி கானகம் போனார்கள்...போன இடத்திலாவது நிம்மதியாக இருக்க முடிந்ததா ?

இராவணன் , சீதையை தூக்கிக் கொண்டு போய் விட்டான்.

யார் தூக்கிப் போனார்கள் என்று கூடத் தெரியாது. 

கட்டிய மனைவியை காணவில்லை. 

இராஜ்யத்தை சக்கரவர்த்திக்கு கட்டிய மனைவியை பாதுக்காகத் தெரியவில்லை என்ற பழிச் சொல் வேறு.

அரக்கனின் சிறையில் ஜானகி.

மனைவியின் போன இடம் தெரியாத இராமன்.

நினைத்துப் பார்த்து இருப்பார்களா வாழ்க்கை இப்படி தலை கீழாக மாறும் என்று ?  

நம் துன்பங்கள் அதை விட மோசமானதா ?


இராமன் யார் ? அவன் ஒரு அவதாரம். சக்ரவர்த்தி திருமகன். அவனுக்கே இந்த கதி என்றால், நாம் எம்மாத்திரம் ?

துன்பம் வரும். அது இயற்கை. துன்பம் வந்த போது ஐயோ எனக்கு இப்படி வந்து  விட்டதே என்று துவண்டு போய் விடக்  கூடாது.

போராடி வெல்ல வேண்டும் என்று சொல்ல வந்தது சுந்தர காண்டம். 

எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் அதை வெல்ல முடியும் என்று தைரியம் சொல்வது சுந்தர காண்டம்.

துன்பத்தில் துவண்டு விடலாம், தோள் தந்து நம்மை தூக்கி நிறுத்துவது  சுந்தர காண்டம். 

சுந்தர காண்டத்தை படிக்க படிக்க மனதில் ஒரு உற்சாகமும், உத்வேகமும் வரும்.

முடியும். என்னால் முடியும். என்னால் இந்த துன்பத்தை வெற்றி காண முடியும் என்று தன்னம்பிக்கை தருவது சுந்தர காண்டம்.

மனம் சோர்வடையும் போதெல்லாம் சுந்தர காண்டம் படியுங்கள்.

அது ஆயிரம் "Self Help " புத்தகங்களுக்கு சமம். 

மேலும் சிந்திப்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/07/2.html


Friday, July 8, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - முன்னுரை

இராமாயணம் - சுந்தர காண்டம் - முன்னுரை 



வாழ்க்கையில் துன்பம் அனுபவிக்காதவர் யார் ?

துன்பம் வரும் போது ...எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ? நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன்...எல்லாருக்கும் நல்லது தான் செய்கிறேன். யாருக்கும் ஒரு கெடுதலும் நினைப்பது இல்லை. முடிந்தவரை எல்லோருக்கும் உதவி செய்கிறேன். கடவுள் பக்தி உண்டு. பாவ புண்ணியத்திற்கு பயப்படுகிறேன். பூஜை புனஸ்காரங்களை ஒழுக்காகச் செய்கிறேன்....

இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று அலுத்துக் கொள்ளாதவர் யார் ?

ஏன் என் பிள்ளை இப்படி படிக்காமல் இருக்கிறான், ஏன் என் பெண்ணின் மாமியார் இப்படி இருக்கிறார், ஏன் என் கணவனோ மனைவியோ இப்படி இருக்கிறார்கள், எனக்கென்று ஏன் இப்படி ஒரு மானேஜர் அலுவலத்தில், ஏன் எனக்கு தொழிலில் நட்டம் வருகிறது என்று நொந்து கொள்ளாத யாராவது இருக்கிறார்களா ?

சரி, அப்படியே ஒரு துன்பம் வந்து விட்டாலும், நாம் மலை போல நம்பி இருந்தவர்கள்  நம்மை கை விட்டு விடுவதும் நிகழ்வது  சாதாரணமாக  எல்லோர் வாழ்விலும் நிகழ்வது தானே.

அவனுக்கு அல்லது அவளுக்கு எவ்வளவு எல்லாம் செய்தேன்...எனக்கு ஒரு  தேவை , அவசரம் என்று வந்த போது உதவி செய்ய யாரும் இல்லையே , இந்த உலகமே நன்றி கெட்ட உலகம் என்று வருந்தாதார் யார் ?

துன்பம் நமக்கு மட்டுமா வருகிறது ?

நம்பியவர்கள் கை விட்டு விடுவது நமக்கு மட்டுமா நிகழ்கிறது ?


சரி, அதற்கும் இந்த சுந்தர காண்டத்திற்கும் என்ன தொடர்பு ?

கம்ப இராமாயணம் எங்கே , அல்லாடும் தள்ளாடும் என் வாழ்க்கை எங்கே...இரண்டுக்கும் என்ன சம்பந்தம் ?

சம்பந்தம் இருக்கிறது...அது என்ன என்று வரும் நாட்களில் சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/07/blog-post_8.html



Tuesday, June 7, 2016

முத்தொள்ளாயிரம் - பழி ஒரு இடம், பாவம் ஒரு இடம்

முத்தொள்ளாயிரம் - பழி ஒரு இடம், பாவம் ஒரு இடம்



ஊரில் விவசாயம் செய்வார்கள். நிலத்தை உழுது, அதில் உளுத்தம் செடியை பயிரிடுவார்கள். அந்த ஊரில் சில ஊர் கன்றுகள் திரியும். யாருக்கும் சொந்தம் இல்லாத கன்றுகள். கோவில் காளை மாதிரி திரிந்து கொண்டு இருக்கும். அந்த ஊர் கன்றுகள்  , இரவில் வயலில் நுழைந்து அங்கு வளர்ந்து இருக்கும் உழுதஞ் செடிகளை மேய்ந்து விடும். காலையில் வயலுக்கு வரும் உழவன், பயிர்கள் நாசமானதைக் கண்டு, கோபம் கொண்டு, இந்த கழுதை தான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும் என்று நினைத்து, அதன் காதை அறுத்து விடுவான்.

தவறு செய்தது என்னவோ ஊர் கன்று. தண்டனை பெற்றது கழுதை.

அது போல,

தலைவி , தலைவனை கண்டு காதல் கொள்கிறாள். அவர்களுக்குள் பிரிவு நிகழ்கிறது. பிரிவினால் அவள் தோள் மெலிகிறது. காதல் கொண்டது கண்கள், மெலிவதோ தோள்கள்.

பாடல்

உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
கழுதை செவி அரிந்தற்றால் - வழுதியைக்
கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்
கொண்டன மன்னோ பசப்பு

பொருள்

உழுத = உழப்பட்ட

உழுத்தஞ்செய் = உளுந்து வளர்ந்த நிலத்தில்

ஊர்க்கன்று மேயக் = ஊரில் உடையவன் இல்லாத கன்று மேய

கழுதை செவி  = கழுதையின் காதை

அரிந்தற்றால் = அறுத்தது போல

வழுதியைக் = தலைவனை

கண்ட நம் கண்கள் இருப்பப் = கண்டு காதல் கொண்ட என்னுடைய கண்கள் இருக்க

பெரும் பணைத்தோள் = நீண்ட , பனை மரம் போன்ற தோள்கள்

கொண்டன மன்னோ பசப்பு = பசலை நிறம் படர்ந்தது

சரி, இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது. இந்த கண்கள் காதல் கொள்வதும் , இடை மெலிவதும் , வளை நெகிழ்வதும் எப்போதும் கவிஞர்கள் சொல்லுவதுதானே. இதில் என்ன இருக்கிறது ?

பேரின்பம், சொர்க்கம், கைலாயம், வைகுண்டம், இறைவன் திருவடி நீழல் என்று மனிதன் தேடிக் கொண்டு இருக்கிறான். எங்கெங்கோ  தேடுகிறான்.தவம் இருக்கிறான்.

ஒரு வேளை அந்த பேரின்பம் கிடைத்துவிட்டால், இது தான் அவன் தேடிய  பேரின்பம் என்று அவனுக்கு எப்படித் தெரியும் ? இதற்கு முன்னால் அனுபவித்து இருந்தால், தெரியும். ஆனால், அப்படி ஒரு இன்பத்தை அனுபவித்ததே கிடையாது. பேரின்பம் கிடைத்தால் கூட அது பேரின்பம் என்று அறிய முடியாது.

அறிவு என்பது தெரிந்ததில் இருந்து தெரியாதை அறிந்து கொள்வது.

புலி எப்படி இருக்கும் என்றால், பூனை மாதிரி இருக்கும் என்று சொல்வதைப் போல.

சிற்றின்பத்தை அறிந்தால் தான், பேரின்பம் என்பது என்ன என்று அறிய முடியும்.

அது தான் வாசல்.

அதன் வழியாகத்தான் போக வேண்டும் .

இதை அறிந்துதான் நம் முன்னவர்கள் சிற்றின்பத்தை தள்ளி வைக்காமல் அதை இலக்கியத்தோடு, பக்தியோடு இணைத்தார்கள்.

நாயக நாயகி பாவம் என்பது சிற்றின்பத்தை தொட்டுக் காட்டி, அதில் இருந்து பேரின்பம் எப்படி இருக்கும் என்று அறிய வைக்கும் ஒரு உத்தி.

கோவில் சிற்பங்களிலும், கதைகளிலும், காவியங்களிலும், பக்தியிலும் சிற்றின்பத்தை வைத்தார்கள்.

அறம்  - பொருள்  - இன்பம் - வீடு என்று வைத்தார்கள்.

காமமும் காதலும் தவறு என்றால், அறம் பொருள் வீடு என்று வைத்திருக்கலாம் தானே ?

பின்னாளில், ஏதோ சிற்றின்பம் என்றால் வெறுக்கத்தக்கது என்ற ஒரு மனோபாவம் வந்து விட்டது.

சிற்றின்பம் என்பது உடல் சார்ந்தது மட்டும் அல்ல.

காதல், கனிவு, அன்பு, பாசம், கருணை, தன்னை மறப்பது, தன்னில் தான் கரைவது, நெகிழ்வது என்று அத்தனையும்  உண்டு.

இந்தப் படியில் கால் வைக்காமல் அடுத்த படிக்கு போக முடியாது.

சிற்றின்பத்தை அனுபவியுங்கள். ஒரு நாள் அது உங்களை பேரின்பத்திற்கு இட்டுச் செல்லும்.

(மேலும் படிக்க

http://interestingtamilpoems.blogspot.in/2016/06/blog-post.html

)

Tuesday, May 31, 2016

திருக்குறள் - வருமுன்னர் காவாதான் வாழ்க்கை

திருக்குறள் - வருமுன்னர் காவாதான் வாழ்க்கை 



பாடல்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும். 

பொருள்

வருமுன்னர்க் = வருவதற்கு முன்

காவாதான் = காத்துக் கொள்ளாதவன்

வாழ்க்கை = வாழ்கை

எரி = தீயின்

முன்னர்  = முன்னால்

வைத்தூறு = வைத்த வைக்கோல்

போலக் கெடும் = போலக் கெடும்


தீயின் முன்னால் வைத்த வைக்கோல் எப்படி எரிந்து சாம்பலாகுமோ அது போல  வருவதற்கு முன்னால்  காத்துக் கொள்ளாதவன் வாழ்கையும் ஆகும்.

ரொம்ப சிரமப் பட வைக்காத குறள். நேரடியான அர்த்தம் தரும் குறள் .

சற்று உள்ளே இறங்கி ஆராய்வோம்.

முதலாவது, தீயின் பக்கத்தில் வைக்கோலை வைத்தால், ஒரு காற்று அடித்தால், ஒரு வைக்கோல் பிரண்டு தீயின் மேல் விழுந்தால் அந்த வைக்கோல் போர் முழுவதும் பற்றி எரிந்து விடும். யாரும் வந்து அந்த தீயை எடுத்து வைக்கோல் போரின் மேல் போட வேண்டாம். தானாகவே பற்றி எரிந்து சாம்பாலகிப் போய் விடும்.

அது போல, தவறுகளும், குற்றங்களும் செய்தால் அதன் விளைவுகள் வாழ்க்கையையே நாசமாக்கி விடும். யாரும் வந்து செய்ய வேண்டாம்.

படிக்கிற காலத்தில் படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டு இருந்தால், அதன் விளைவு  பின்னாளில்  வாழ்வே நாசமாகி விடும்.


இரண்டாவது, வைக்கோலில் தீ பிடித்துக் கொண்டால் அது மட்டும் எரியாது. அக்கம் பக்கத்தில் உள்ளதையும் சேர்த்து எரிக்கும். அது போல, ஒருவன் தவறு செய்தால் அதன் விளைவு அவனுக்கு மட்டும் அல்ல, அவனை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும்.

சில உதாரணங்கள் பார்ப்போம்.

ஒரு குடும்பத் தலைவன் ஏதோ ஒரு தவறு செய்கிறான்...அலுவலகத்தில் பணத்தை தவறான வழியில் எடுத்து விடுகிறான், அல்லது வேறு ஏதோ தவறு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை வேலையில் இருந்து அனுப்பி விடுகிறார்கள். அது அவனை மட்டும் பாதிக்காது. அவனை நம்பி உள்ள அவன் குடும்பத்தையும் பாதிக்கும் அல்லவா ?

ஒரு வீட்டில் கணவனோ மனைவியோ தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்தாமல் கண்டதையும் கண்ட நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தால், பிற்காலத்தில் அவர்கள் நோய் வாய்ப்படும்போது அது அவர்களை மட்டும் பாதிக்காது...அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கும் அல்லவா.

இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

கவனிக்க வேண்டியது என்ன என்றால், செய்யும் தவற்றின் விளைவுகள் செய்பவனை மட்டும் பாதிப்பது இல்லை , அவனை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கிறது.

மூன்றாவது, நெருப்பு சிறு பொறி தான். வைக்கோல் போர் மிகப் பெரியதுதான். இருந்தாலும், சின்ன நெருப்பு பெரிய வைக்கோல் போரை எரித்து சாம்பாலாக்கி விடும். அது போல தவறும் குற்றமும் சின்னதாக இருக்கலாம். ஆனால், அது ஒருவனின் பெரிய செல்வத்தையும், வாழ் நாள் எல்லாம் கட்டிக் காத்த புகழையும் ஒரே நொடியில் அழித்து விடும் ஆற்றல் வாய்ந்தது. என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. தவறு செய்து மாட்டிக் கொண்டாலும் பணத்தைக் கொண்டு வெளியே வந்து விடுவேன் என்று நினைக்கக் கூடாது. அத்தனை செல்வத்தையும் அடித்துக் கொண்டு போய் விடும்.

நான்காவது, மரக் கட்டையில் தீ பிடித்தால் போராடி அனைத்து விடலாம். அணைத்த பின் மீதி உள்ள கட்டை பயன்படும். வைக்கோல் போரில் தீ பிடித்தால், அணைப்பதற்குள் எல்லாம் எரிந்து சாம்பலாகி விடும். மேலும், எரியாத வைக்கோல் நீரில் நனைந்து , புகை சுற்றி கருகிய வாடை அடிக்கும். அதை மாடு கூட தின்னாது. ஒன்றுக்கும் பயன்படாது. எவ்வளவுதான் சொந்தம் பந்தம், பெரிய இடத்து நட்பு என்று இருந்தாலும், குற்றங்களும் தவறுகளும் மனிதனின் வாழ்க்கையை சில நொடிகளில் சின்னா பின்னாமாக்கி விடும். அதில் இருந்து தப்பி வந்தாலும், அந்த வாழ்க்கை இனிமையானதாக இருக்காது. ஒரு பயனுள்ள வாழ்க்கையாக இருக்காது.

ஐந்தாவது, வள்ளுவர், வைக்கோல் போரின் மேல் வைத்த தீ என்று என்று சொல்லவில்லை. தீயின் முன்னால் வைத்த வைக்கோல் போர் என்றார். நீங்கள் தவறு செய்ய வேண்டும் என்று இல்லை. தவறு செய்யும் இடத்தில் நீங்கள் இருந்தாலும் போதும், தவறு செய்பவர்களோடு  சகவாசம் வைத்துக் கொண்டிருந்தாலும் போதும் அது உங்கள் வாழ்வை  நாசமாக்கி விடும். "இவனும் அவனும் கூட்டு களவாணி தான் " என்று தான் உலகம் சொல்லும்.  குற்றங்களுக்குப் பக்கமே போகக் கூடாது.

ஆறாவது, பெரிய வைக்கோல் போரை எரிக்க பெரிய தீ பந்தம் வேண்டாம். ஒரு சிறு நெருப்பு பொறி போதும். உங்கள் வாழ்வை நாசமாக்க பெரிய தவறுகள் வேண்டாம். சின்ன சின்ன தவறுகள் போதும். எப்பவாவது தண்ணி அடிப்பது, அலுவலகத்தில் இருந்து எப்பவாவது பென்சில் , பேனா போன்றவற்றை வீட்டுக்கு கொண்டு வருவது போன்ற சின்ன தவறுகள் போதும். என்றேனும் காற்று அடித்து அந்த சிறு தவறுகள் பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும்.

சின்ன தவறுகள், சின்ன குற்றங்கள், சின்ன எதிரிகள் எல்லாம் சின்ன நெருப்பு பொறி மாதிரி.

குற்றங்களும், தவறுகளும் நிகழா வண்ணம் உங்களை காத்துக் கொள்ளுங்கள். வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது மதியீனம்.

அடுத்த முறை ஜிலேபி போன்ற இனிப்புகளை தொடுமுன், பெப்சி போன்ற குளிர் பானங்களை தொடுமுன்,  படிக்காமல் தொலை காட்சி பார்க்குமுன், உடற் பயிற்சி செய்யாமல் போர்வையை இழுத்து போர்த்தி தூங்கப் போகுமுன்.....  வைக்கோல் போர் ஞாபகம் வர வேண்டும்.

வரும்.

(மேலும் படிக்க

http://interestingtamilpoems.blogspot.com/2016/05/blog-post_31.html

)





Friday, May 13, 2016

ஔவையார் தனிப்பாடல் - எது அழகு ?

ஔவையார் தனிப்பாடல் - எது அழகு ?


எது அழகு என்று கேட்டால் நாம் என்ன சொல்லுவோம் ?

காதலியின் முகம் அழகு, அவளின் வெட்கம் அழகு, குழந்தையின் முகம் அழகு, அப்போது பூத்த பூ அழகு, மழை அழகு, கடல் அழகு என்று அடுக்குவோம்.

ஔவை வேறு ஒரு பட்டியல் தருகிறாள்.

வறுமை அழகு, சாப்பிடாமல் இளைத்த தேகம் அழகு, ஏன் மரணம் கூட அழகு என்கிறாள் கிழவி.

நம்ப முடிகிறதா ?


உலகிலேயே மிக அழகானது, முதல் இரவு முடிந்து வெளியில் வரும் பெண்ணின் முகம் மிக அழகானது என்கிறாள்.

அடுத்து, விரதம் இருந்து இளைத்த ஞானியாரின் மேனி அழகு. காய்ச்சல் வந்து, உடல் நிலை சரியில்லாமல் இளைத்த மேனி அல்ல, ஞானம் வேண்டி ,ஊண் உறக்கம் இன்றி தவத்தால் விரதத்தால் இளைத்த மேனி அழகு. யோசித்துப் பார்ப்போம். அளவுக்கு அதிகம் தின்று தொந்தியும் தொப்பையும் உள்ள உடல் அழகா, விரதத்தால் இளைத்த மேனி அழகா ?


அடுத்து, கொடுத்து இளைத்த ஒருவனின் வறுமையும் கூட அழகு என்கிறாள் அவ்வை. ஒரு காலத்தில் பெரிய தனவந்தனாக இருந்து , எல்லோருக்கும் உதவி செய்து அதனால் வறுமையின் வாய்ப்பட்டாலும் , அந்த வறுமை கூட அழகுதான் என்கிறாள்.


இது எல்லாவற்றையும் விட அழகு, நாட்டுக்காக சண்டையிட்டு, அதில் மார்பில் புண் ஏற்று இறந்த வீரனின் சமாதியின் மேல் இருக்கும் அந்த கல் அழகு என்கிறாள்.


பாடல்


சுரதம் தனிவிளைந்த தோகை சுகிர்த
விரதம் தனிவிளைந்த மேனி – நிரதம்
கொடுத்திளைத்த தாதா கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல்லபிர மம்


பொருள்

சுரதம் = கூடல் , புணர்ச்சி

தனி = தனிமையில்

விளைந்த = சுகித்த, தோய்ந்த

தோகை = இளம் பெண்

சுகிர்த = ஞானம் (வேண்டி, தேடி)

விரதம் = விரதம் இருந்து

தனி விளைந்த மேனி = இளைத்த மேனி

நிரதம் = நித்தம்

கொடுத்திளைத்த தாதா =கொடுத்து இளைத்த செல்வந்தன்

கொடுஞ்சமரிற் = கொடும் + சமரில் = கொடிய சண்டையில்

பட்ட = இறந்து பட்ட

வடுத்துளைத்த = வடு துளைத்த = விழுப் புண் ஏற்ற

கல்லபிர மம் = கல் + அபிரமம் = அந்த நடு கல் அழகானது.

அபிரமம் என்றால் அழகானது என்று அர்த்தம். அபிராமி என்றால் அழகானவள் என்று பொருள்.


அழகு என்பது வேறு உடல் வனப்பில் மட்டும் அல்ல.


என்ன ஒரு அருமையான பாடல்.

கிழவி பெரிய ஆள் தான்.

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/05/blog-post_13.html )



Thursday, May 12, 2016

ஔவையார் தனிப்பாடல் - இனியது கேட்கின்

ஔவையார் தனிப்பாடல் - இனியது கேட்கின் 


இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்

கனவிலும் நனவிலும் காண்பது தானே

நாம் பலமுறை கேட்ட பாடல் தான். திருவிளையாடல் படத்தில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

 இதில் என்ன புதுமை இருக்கிறது தெரிந்து கொள்ள ?

நம்மிடம் இனிது எது என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?

-நல்ல சுவையான உணவு
- காதுக்கு இனிய இசை
- நல்ல சினிமா, நாடகம், தொலைகாட் சி தொடர்
- கணவன்/மனைவியோடு இருப்பது, நண்பர்களோடு அரட்டை அடிப்பது

இப்படி அடுக்கிக் கொண்டே போவோம்.

இனிமையை விட்டு விட்டு, ரொம்ப துன்பமானது, கடினமானது எது என்று கேட்டால்  தனிமை கொடுமை என்று சொல்லுவோம்.

அது கொடுமை என்பதால் தானே சிறையில் போடுகிறார்கள். ரொம்ப பெரிய  தவறு செய்தால் தனிமைச் சிறை என்றே இருக்கிறது. அதில் போட்டு விடுவார்கள்.

அவ்வை சொல்கிறாள்

"இனிது இனிது ஏகாந்தம் இனிது" 

ஏகாந்தம் என்றால் என்ன ?

ஏக + அந்தம்.

அந்தம் என்றால் முடிவு. ஏகம் என்றால் ஒன்று. ஒன்றான முடிவு. அல்லது ஒன்றில் முடிவது. ஒன்றில் இலயித்து விடுவது. அதில் கரைந்து போவது.

வாழ்க்கையின் பல சிக்கலகளுக்கு காரணம் மனம் ஒன்றாதது தான். ஒன்றிருக்கும் போது இன்னொன்றுக்குத் தாவுவது.

படிக்கும் போது தொலைக் காட்சி
அலுவலத்தில் இருந்தால் வீட்டின் எண்ணம்.
வீட்டில் இருந்தால் அலுவகலத்தின் எண்ணம்
இப்படி மனம் எதிலும் ஒன்றாமல் அலை பாய்ந்து கிடப்பதால் எதிலும்  நாம் சாதிக்க முடிவதில்லை.

ஏகாந்தம் இனிது.

சரி, அது தான் இனிமையா ? அதை விட இனிமையானது ஏதாவது இருக்கிறதா என்றால் ,

அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்

என்றார்.

கடவுளைத் தொழுதால் என்று சொல்லவில்லை. கடவுள் என்று சொன்னால் , உடனே எந்தக் கடவுள் என்று கேட்போம். அந்த சிக்கலைத் தவிர்த்து  அவ்வையார் "ஆதியைத் தொழுதல்" என்றார். 

எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆதி என்று ஒன்றும் கிடையாது. அப்படியே இருந்தாலும் அதை ஏன் தொழ வேண்டும்  ? அதை விட இனியது வேறு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால், 


"அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்"

ஆதியைத் தொழுவதை விட இனியது அறிவுடயவர்களைச் சேர்வது.


இதைப் புரிந்து கொள்வது சற்று கடினம். அறிவுடையவர்களை சேர்வது என்ன அவ்வளவு இனிமையான செயலா என்றால் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் இனிமை தெரியும்.

அறிவுடையவர்கள் நம் வாழ்க்கையின் போக்கை மாற்றும் வல்லமை கொண்டவர்கள். நம்மை மிக மிக உயரத்தில் கொண்டு சேர்க்கும் வலிமை பெற்றவர்கள். நமது பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு சொல்பவர்கள். அவர்களோடு சில நேரம் இருந்து விட்டு வந்தாலே, நமக்கு ஒரு புத்துணர்ச்சியும், ஒரு உற்சாகமும், வாழ்வில் ஏதாவது  சாதிக்க வேண்டும் என்ற உத்வேகமும் தோன்றும்.

சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் எத்தனை அறிவுடையவர்களோடு தொடர்பு வைத்து இருக்கிறீர்கள் என்று. இல்லை என்றால், இன்றிலிருந்து தொடங்குங்கள். தேடிப்  பிடியுங்கள். அப்புறம் பாருங்கள்  உங்கள் வாழ்வின் திசை போகும் போக்கை. எங்கோ உயரத்திற்கு போய் விடுவீர்கள்.

சரி, அதை விட உயர்ந்தது ஏதாவது இருக்கிறதா ?


அதனினும் இனிது அறிவுள் ளாரைக்

கனவிலும் நனவிலும் காண்பது தானே


நான் எங்கே இருக்கிறேன் , இந்த அறிவில் சிறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள். அவர்களோடு நான் எப்படி சேர்வது ? அவர்கள் என்னை தங்களோடு சேர்த்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் இருக்கிறதா ?

நீங்கள் சேரக் கூட வேண்டாம் ...அறிவுள்ளவர்களை பார்த்தால் கூட போதும். நேரில் கூட பார்க்க வேண்டாம், கனவில் கண்டால் கூடப் போதும்...

பெருமாளை எப்போதும் நினைத்துக் கொண்டே இருந்தாள் ஆண்டாள். அவள் கனவிலும் அவன் வந்தான். 

"கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான் " என்றாள் . 

கனவு கண்டவள் , நிஜமாகவே கைப் பிடித்தாள் என்று புராணங்கள் கூறுகின்றன. 

கனவு காணுங்கள். கனவு மெய்படும்.

சரி, இந்தப் பாடலை சற்று வேறு விதமாகப்  பார்ப்போம். 

பாடலை அடியில் இருந்து மேல் நோக்கிப் படிப்போம். 

முதலில் அறிவுடயவர்களை கனவில் காணுதல், பின் அவர்களை நேரில் காணுதல், பின் அவர்களோடு சேர்தல், சேர்ந்த பின் ஆதியைத் தொழுதல் , அதையும் கடந்து பின் ஏகாந்தமாய் இருத்தல்.

ஆதியோடு ஒன்றாகி விடுதல். ஏக அந்தம்.  முடிவில் எல்லாம் ஒன்றாக இருத்தல். 

ஏக போகமாய், நீயும் நானுமாய் , இறுகும் வகை பரம சுகம் அதனை அருள் என்று அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகிறார். 


இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில்
ஏகநாயகா”
(திருவிடைமருதூர்த் திருப்புகழ்)

அறிவுடையவர்களை தேடிக் கண்டு பிடியுங்கள். 

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 


(மேலும் வாசிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/05/blog-post.html )