Friday, September 16, 2016

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த - பாகம் 2

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த  - பாகம் 2


செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.

இந்தப் பாடலின் முன்னுரையை ஏற்கனவே பார்த்து விட்டதால் நேரடியாக பொருளுக்குப் போவோம்

முதல் பாகம் படிக்க

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/1.html

கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

செழும் கமல  திரள் அன நின் சேவடி சேர்ந்து அமைந்த 
பழுத்த மனத்து அடியார்களுடன் போயினர் யான்  பாவியேன்
புழுக் கண் உடை புன்குரம்பைப் பொல்லாக் கல்வி ஞானம் இல்லா 

அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன்  அடைக்கலமே.


பொருள்


செழும் = செழுமையான, சிவப்பான 

கமல  திரள் அன = தாமரை மலர்களின் தொகுப்பு 

நின் = உன்னுடைய 

சேவடி = சிவந்த திருவடிகள்  

சேர்ந்து = சென்று சேர்ந்து 

அமைந்த = அமைதி அடைந்த 

பழுத்த மனத்து = பழுத்த மனத்து 

அடியார்களுடன் = அடியவர்களுடன் 

போயினர் = போனவர்கள் 

யான் = நான் 

பாவியேன் = பாவியேன் 


புழுக் கண் உடை = புழுக்கள் உடமையாகக் கொண்ட இந்த  

புன்குரம்பைப் = கீழான இந்த உடலை 

பொல்லாக் = தீயன  

கல்வி = கல்வி 

ஞானம் இல்லா = ஞானம் இல்லா  

அழுக்கு மனத்து அடியேன் = அழுக்குகள் கொண்ட மனத்தை உடையவன் 

உடையாய் = உடையவனே 

உன்  அடைக்கலமே = உன் அடைக்கலமே 

எனக்கு ஒன்றும் தெரியாது. உன்னிடம் அடைக்கலமாக வந்து விட்டேன்.  இனி என்னை சரி ஆக்குவது உன் பாடு என்கிறார். 

வீடு பேறு , முக்தி இவற்றை அடைய மூன்று வழிகளை சொல்கிறார்கள். 

கர்ம யோகம் 

ஞான யோகம் 

பக்தி யோகம் 

மணிவாசகர் பாண்டிய நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். ஒரு அரசனின் கீழ் அமைச்சராக இருப்பது எளிதான காரியம் இல்லை. அவ்வளவு கடினமான வேலையைச் செய்த மணி வாசகருக்கு கர்ம யோகம் கடினமாக இருக்கிறது. 

சிலர் உன் அடியார்களுடன் சேர்ந்து , மனதை பக்குவப் படுத்தி உன் திருவடிகளை அடைந்தார்கள். என்னால் முடியவில்லை என்கிறார். 

சேர்ந்து அமைந்த பழுத்த மனத்து

முதலில் சென்று சேர வேண்டும். பின் அவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும் (அமைய). பின் மனம் பக்குவப் படவேண்டும்.இவ்வளவு வேலை இருக்கிறது. 

என்னால் முடியவில்லை என்கிறார் மணிவாசகர். நான் இந்த புழுக்களுக்கு இடமான உடலோடு இருக்கிறேன் என்கிறார். 

மணிவாசகர் பெரிய அறிவாளி. 

 திருவாசகம், திருக்கோவையார் எழுதியவர்.  

இருந்தும், ஞான யோகத்தில் அவரால் செல்ல முடியவில்லை. 

கற்பனவும் இனி அமையும் என்றார். படித்தது எல்லாம் போதும் என்ற  நிலைக்கு வந்தார். 

கல்வி எனும் பல் கடல் பிழைத்தும் என்றார். கல்வி என்பது பெரிய கடல். அதில் இருந்து தப்பித்தால் தான் இறைவனை அடைய முடியும்  என்கிறார். 

ல்வி ஞானம் இல்லா 

கல்வி  அறிவும்,அதில் இருந்து பிறக்கும் ஞானமும் தனக்கு இல்லை என்கிறார். 

மணிவாசகருக்கே அப்படி என்றால், நம் நிலை என்ன. நம் அறிவும் , ஞானமும் எவ்வளவு இருக்கும் ?


சரி, கர்ம யோகமும் சரிப் பட்டு வரவில்லை. ஞான யோகமும் சரிப் பட்டு வரவில்லை. 

பக்தி யோகம் தான் தனக்கு உகந்தது என்று அறிந்தார். 

பக்தி செய்யக் கூட தெரியாது. 

நான் உன் அடைக்கலம் என்று அவனிடம் அடைக்கலம் அடைந்து விட்டார். 

ஒரு வேளை பக்தி மார்க்கம் எளிமையாக இருக்குமோ ?

உங்கள் மார்க்கம் எது என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/2_16.html

Thursday, September 15, 2016

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த - பாகம் 1

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த  - பாகம் 1


நம்பிக்கை.

நம்பிக்கை என்பது எவ்வளவு பெரிய விஷயம். நம்மால் எதையாவது முழுவதுமாக நம்ப முடிகிறதா ?

வைகுண்டம் வேண்டும், கைலாயம் வேண்டும் , இறைவன் திருவடி நிழல் வேண்டும் என்று நம்பிக்கையோடு தொழுபவர்கள் கூட, இறைவனே நேரில் வந்து "பக்தா உன் பக்திக்கு மெச்சினோம்...வா பரலோகம் போகலாம் " என்று கூறினால் , எத்தனை பேர் உடனே கிளம்புவார்கள் ?

இது ஒரு வேளை கடவுள் இல்லையோ ? பரலோகம் கூட்டிப் போகிறேன் என்று வேறு எங்காவது கூட்டிக் கொண்டு போய் விட்டால் ? போட்டது போட்ட படி இருக்கிறது. பிள்ளையின் படிப்பு, அவர்களின் திருமணம், அவர்களின் பிள்ளைகள், சொத்து விவகாரம் என்று ஆயிரம் விஷயங்கள் கிடக்கிறது. அத்தனையும் விட்டு விட்டு எப்படி போவது என்று தயங்குவார்கள்.

கடவுள் தானே கூப்பிடுகிறார். அவர் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எத்தனை பேருக்கு இருக்கும் ?

நான் எல்லா விட்டால் இந்த குடும்பம் என்ன ஆகும் என்று நினைப்பவர்களே அதிகம் இருப்பார்கள்.

சரி , அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இறைவன் தான் அனைத்தையும் செய்கிறான் என்றால், நமக்கு வரும் துன்பங்களும் அவன் செய்வது தானே. அதற்காக ஏன் வருந்த வேண்டும். நமக்கு என்ன வேண்டும் , எவ்வளவு வேண்டும், எப்போது  வேண்டும் என்று அவனுக்குத் தெரியாதா ?

புலம்புவது ஏன் ?

நம்பிக்கை இன்மை.

நமது சமயமும், இலக்கியமும் சரணாகதி, அடைக்கலம் என்பதைப் பற்றி உயர்வாகப் பேசுகின்றன.

நம்மை, நம் வாழ்க்கையை இன்னொருவரிடம் ஒப்படைப்பது என்பது பெரிய விஷயம்.

வைணவம் சரணாகதி பற்றி பேசுகிறது.

சைவம் அடைக்கலம் என்று கூறுகிறது.

எல்லாம் ஒன்று தான். ஒருவரிடம் நம்மை முழுவதுமாக கொடுத்து விடுவது.

இதில் மூன்று நிலை இருக்கிறது.

கையடைப் படுத்துவது. இடைக்கலம் . அடைக்கலம்.

கையடை என்றால் ஒருவரை இன்னொருவரிடம் "இனி இவன்/இவள் உன் பொறுப்பு " என்று ஒப்படைப்பது.

பெற்றோர் , ஆசிரியரிடம் பிள்ளையை விட்டு "இனி இவன் உங்கள் பொறுப்பு...அவனை / அவளை படித்து நல்ல குடிமகனாக ஆக்குவது உங்கள்  பொறுப்பு " என்று விடுவது கையடை.

இதில், கையடையாக போபவரின் சம்மதம் இருக்காது. குழந்தையின் சம்மதம் கேட்டு ஆசிரியரிடம் விடுவது கிடையாது.

இராமாயணத்தில் , தீ வளர்த்து, சீதையை இராமனிடம் "இவன் இனி உன் கையடை " என்று சனகன் கொடுத்தான்.

'நெய் அடை தீ எதிர் நிறுவி, ''நிற்கு இவள்
கையடை'' என்ற அச் சனகன் கட்டுரை
பொய் அடை ஆக்கிய பொறி இலேனோடு,
மெய் அடையாது; இனி, விளிதல் நன்றுஅரோ.


அடுத்தது, இடைக்கலம். இது ஒருவர் தன்னைத் தானே மற்றோரிடம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்புக்  கொடுப்பது.

படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென்
நாவிற்கொண்டேன்

இடைக்கல மல்லே னெழுபிறப் பும்முனக்
காட்செய்கின்றேன்

துடைக்கினும் போகேன் றொழுது வணங்கித்
தூநீறணிந்துன்

அடைக்கலங் கண்டா யணிதில்லைச் சிற்றம்
பலத்தரனே.

இடைக்கலம் அல்லேன் என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள் .


அடைக்கலம் என்பது, தன்னை முழுமையாக ஒருவரிடம் ஒப்புக் கொடுப்பது.

விபீஷணன் அடைக்கலமாக வந்தான். சரணாகதி என்பது.

‘இடைந்தவர்க்கு “அபயம் யாம் “ என்று
    இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி ஆலம்
    உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின்,
    உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின்,
    அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்?

அப்படி வந்த விபீடணனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த அறம் என்ன ஆண்மை என்ன என்று கேட்கிறான் இராமன்.

திருவாசகத்தில், மாணிக்க வாசகர் அடைக்கலப் பத்து என்று பத்து பாடல்கள் பாடி இருக்கிறார்.

தன்னை எப்படி ஆண்டவனிடம் அடைக்கலமாகத் தருகிறார் என்பது பற்றி.

முதல் பாடல்


செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.

பொருள்

அடுத்த பிளாகில் பார்ப்போம்

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/1.html

Tuesday, September 13, 2016

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு 


சாப விமோச்சனம் பெற்று விண்ணுலகம் போகும் முன், இராமனைத் தொழுது விராதன் சில சொல்லுகிறான்.

ஆன்மீகத்தின் சாரம் அந்தப்  பாடல்கள்.

பாடல்

துறப்பதே தொழில் ஆகத் தோன்றினோர்
    தோன்றியக்கால்,
மறப்பரோ தம்மை? அது அன்றாகில்,
    மற்றவர்போல்
பிறப்பரோ? எவர்க்கும் தாம் பெற்ற
    பதம் பெறல் அரிதோ?
இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு
    இனிது உகந்தோய்!

பொருள்

துறப்பதே = துறப்பதையே

தொழில் ஆகத் = தமது கடமை என்று

தோன்றினோர் = தோன்றியவர்கள்

தோன்றியக்கால் = தோன்றினால்

மறப்பரோ தம்மை?  = தங்களை மறப்பார்களா ?

அது அன்றாகில்  =  அது அப்படி இல்லை என்றால்

மற்றவர்போல் = மற்றவர்களை போல

பிறப்பரோ? = பிறப்பார்களா ?

எவர்க்கும் = அவர்களுக்கும்

தாம் பெற்ற பதம் பெறல் அரிதோ? = எஅவர்கள் பெற்ற நிலை அறியதானதே

இறப்பதே = இறப்பதே

பிறப்பதே = பிறப்பதே

எனும் விளையாட்டு = எனும் விளையாட்டு

இனிது உகந்தோய்! = இனிமையாகக் கொண்டவனே

நாம் மிக மிக பயப்படுவது எதைக் கண்டு ?

மரணத்தைக் கண்டு தான்.

பயங்களுக்குள் பெரிய பயம் மரண பயம்.

ஆனால், அந்த மரணம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அதைக் கண்டு இவ்வளவு பயப்படத் தேவை இல்லை என்று தான் நம் இலக்கியம் சொல்லி வந்திருக்கிறது.

பயமான விஷயத்தை விடுவோம்.

எது சுகமான விஷயம் ? தூங்குவது சுகமான விஷயம்தானே.

ஆடி, ஓடி களைத்த பின் அப்பாட என்று கிடந்து உறங்குவது ஒரு சுகம்தான்.

இந்த மரணம் கூட தூக்கம் போல சுகமானதுதான் என்கிறார் வள்ளுவர்.

தூங்குவது போலும் சாக்காடு தூங்கி விழிப்பது போலும் பிறப்பு.

அவ்வளவுதான் வாழ்க்கை.

தினம் தினம் தூங்கி தூங்கி எழுந்திரிக்கிறோம். ஐயோ, தூக்கம் வரப் போகிறதே என்று யாராவது பயப்படுவார்களா ? எப்படா படுக்கலாம் என்று தான்  நினைப்போம்.அது போல , இறப்பும் ஒரு குட்டித் தூக்கம் போலத் தான்.

இதை , விராதனும் சொல்லுகிறான்.

மரணம் இனிமையாக இருக்கும் எப்போது என்றால், வாழும் போது எனக்கு எனக்கு  என்று சேர்த்து வைத்துக் கொள்ளாமல், பற்று அற்று இருந்தால்  , இந்த மரணம் கூட ஒரு விளையாட்டு தான்.


துறப்பதே தொழில் ஆகத் தோன்றினோர்

எது கிடைத்தாலும் அதை துறப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள். அப்படியும் சிலர் இருந்திருக்கிறார்கள். இந்த சொத்து, சுகம், பட்டம் , பதவி எல்லாம் வேண்டாம் என்று வைத்தவர்கள் இருக்கிறார்கள்.

எட்டு கோடி பொன்னை (அந்தக் காலத்தில்) வேண்டாம் என்று ஒரு கோவணத்துடன் தெருவில் இறங்கினார் பட்டினத்தடிகள். முடியுமா ?

அகண்ட இராஜ்யத்தை வேண்டாம் என்று இரவோடு இரவாக  இறங்கினான்  சித்தார்த்தன். நினைத்துப் பார்க்க முடியுமா ?

நாடு இல்லை, காட்டுக்குப் போ என்றவுடன் சிரித்துக் கொண்டே போனான் இராமன். சிந்தித்துக் கூட பார்க்க முடியுமா நம்மால்.

அப்படி துறப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள்.


தோன்றியக்கால்,

அப்படிப்பட்டவர்கள், மீண்டும் மீண்டும் பிறக்க மாட்டார்கள்.


'அவா' என்ப-'எல்லா உயிர்க்கும், எஞ் ஞான்றும்,
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து'.

என்பார் வள்ளுவர். ஆசை என்பது பிறவிக்கு வித்து என்பது வள்ளுவம். "பிறப்பு ஈனும் வித்து".

தோன்ற மாட்டார்கள்.

ஒரு வேளை தோன்றினால் ?


மறப்பரோ தம்மை?

அவர்கள் தாங்கள் யார் என்று மறக்க மாட்டார்கள். அதாவது , ஒரு பிறவியில் துறவறம் மேற் கொண்டால், பின் பிறவி என்பது இல்லை. அப்படியே பிறந்தாலும், அவர்கள் தங்கள் முப்பிறவியில் செய்ததை இந்தப் பிறவியிலும் மறக்காமல் தொடர்வார்கள்.

இது உண்மையா ? கற்பனையா என்று தெரியாது.

இருந்தாலும், ஒரு வசீகரமான  கருத்து. நம்புபவர்கள் அதிகமாக இரசிக்க முடியும்.




அது அன்றாகில், மற்றவர்போல் பிறப்பரோ?

அப்படி இல்லை என்றால் மற்றவர்கள் மாதிரி பிறப்பார்களா ? மாட்டார்கள். அதாவது, ஒரு பிறவியில் துறவு மேற்கொண்டவர்கள், மறு பிறவி எடுத்தாலும் அது மற்றவர்கள் மாதிரி இருக்காது.



எவர்க்கும் தாம் பெற்ற பதம் பெறல் அரிதோ?

துறவு அடைந்தவர்கள் அடைகின்ற நன்மை இருக்கிறதே, அது அரிதிலும் அரிதானது.


இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு
    இனிது உகந்தோய்!

இந்த இறப்பும் , பிறப்புமாய் நடக்கும் இந்த வாழ்க்கையை ஒரு விளையாட்டு போல மகிழ்ச்சியாக செய்பவனே (இராமா).


அலகிலா விளையாட்டு உடையவன் அவன் என்று முதலிலேயே கம்பர் சொல்லி இருக்கிறார். 


 உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.


விளையாடுத்தான் வாழ்க்கை.

பிறப்பும், இறப்பும், இருப்பும் எல்லாமே ஒரு விளையாட்டுதான்.

ரொம்ப serious ஆக வாழ்க்கையை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

எதற்கெடுத்தாலும், ஒரு கோபம், சிடுசிடுப்பு, எல்லோர் மேலும் ஒரு வெறுப்பு என்று வாழ்க்கையை சிக்கலாக்காதீர்கள்.

சிரியுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.

இது வரை எப்படியோ, இன்று முதல் மகிழ்ச்சியாக இருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_13.html



Sunday, September 11, 2016

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - அறம் காக்க - பாகம் 2

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - அறம் காக்க  - பாகம் 2


விராதன் என்ற கந்தர்வன் , ஒரு சாபத்தால் , அரக்கனாக இருந்தான். இராமனிடம் போரிட்டு, மாண்டு சாப விமோசனம் பெற்றான். அவன் விண்ணுலகம் போவதற்கு முன் சில சொல்லிச் செல்கிறான்.

அகத்தையும், புறத்தையும் கண்டு, எப்போதும் அருள் நோக்கோடு,  காற்று போல தன்னந் தனியாக சுற்றி  சுற்றி வந்து அறத்தை காக்கிறாய் என்கிறான் அடுத்தப் பாடலில்.


பாடல் 

புறம் காண அகம் காணப் பொது முகத்தின்
     அருள் நோக்கம்
இறங்காத தாமரைக் கண் எம்பெருமாஅன்!
     இயம்புதியால்;
அறம் காத்தற்கு, உனக்கு ஒருவர் ஆரும் ஒரு
     துணை இன்றி,
கறங்கு ஆகும் எனத் திரிய,
     நீயேயோ கடவாய்தான்?

பொருள்

புறம் காண = வெளிப் புறத்தைக் காண

அகம் காணப் = உள் புறத்தைக் காண

பொது முகத்தின் = பொதுவாக

அருள் நோக்கம் = அருள் பார்வை

இறங்காத = தாழாத

தாமரைக் கண் = தாமரை போன்ற கண்களை உடைய

எம்பெருமாஅன்! = எங்கள் பெருமானே

இயம்புதியால்; = எங்களுக்குச் சொல்

அறம் காத்தற்கு, = அறத்தை காப்பதற்கு

உனக்கு = உனக்கு

ஒருவர் ஆரும் = வேறு ஒருவர் யாரும்

ஒரு துணை இன்றி = ஒரு துணையும் இன்றி

கறங்கு ஆகும் = காற்றுப் போல

எனத் திரிய = எங்கும் திரிந்து

நீயேயோ கடவாய்தான்? = நீ உன் கடமையைச் செய்கிறாய்


இறங்காத தாமரைக் கண் எம்பெருமாஅன்

என்ற வரியில், ஏன் தாமரையை உதாரணமாகச் சொல்ல வேண்டும்  என்ற கேள்வியோடு போன blog  ஐ முடித்திருந்தோம்.

மல்லிகை, முல்லை போல தாமரைக்கு ஒரு மணம் கிடையாது. தாழம்பூ மாதிரி நீண்ட நாள் வாடாமலும் இருக்காது. பின் ஏன் தாமரை ?

ஒரு இனிமையான பாடலை கேட்கிறோம். சிறப்பான ஒரு இராகத்தில் அமைந்த  பாடல். நல்ல தாள இலயம் . கேட்டு சொக்கிப் போகிறோம். 

இராகம் என்பது என்ன ? காற்றுதான், ஒலி தான் இருந்தும் அதில் உள்ள  இராகத்தை எல்லோரும் அறிவது இல்லை. இசையின்  நுணுக்கம் தெரிந்தவர்கள் அதை அறிந்து இரசிப்பார்கள். எல்லோர் காதிலும் தான் விழுகிறது. நல்ல இசை அறிஞரின்  காதில் அதில் உள்ள இராகம், அதன் தாளம், சுருதி  எல்லாம் தெளிவாகக் கேட்கும். நமக்கு ஏதோ பாட்டு கேட்கும். 

திருஞான சம்பந்தர் சிறு பிள்ளை. அவர் பாடல் பாடும் போது தாளம் போடுவார். அவருக்கு கை வலிக்குமே என்று இறைவன் பொன்னால் ஆன ஒரு தாளத்தை கொடுத்தார். விண்கலத்தில் ஓசை வரும். பொன்னில் ஓசை வராது. பின் ஏன் பொற்தாளத்தை கொடுத்தார் ? 

பொன்னில் ஓசை வரும்.மிக நுட்பமான ஓசை. காதை கூர்மை படுத்தினால் அந்த ஓசை கேட்கும். 

தாமரை மலரில் ஒரு வாசம் உண்டு. எல்லோருக்கும் தெரியாது. மிக நுட்பமான வாசம் அது. புகையிலும், தூசியிலும்  கிடந்து பழக்கப் பட்ட நம் மூக்குக்கு அந்த வாசம் தெரியாது. 

புலன்களை கூர்மை படுத்த கூர்மை படுத்த பொருள்களின் நுட்பம் தெரியும். 

ஒலிக்கு பின்னால் உள்ள பாடல் தெரியும். பாடலுக்கு பின்னால் உள்ள   இராகம் தெரியும். இராகத்தை தழுவிய தாளம் தெரியும். இரண்டையும் இணைக்கும் ஸ்ருதி தெரியும். 

புலன்களை கூர்மை படுத்த , கூர்மை படுத்த இந்த உலகம், அதன்  பின்னால் உள்ள உண்மைகள் புரியும். 

  உலகம், அதில் உள்ள மக்கள் வரை புரிகிறது.  

அதற்கு பின்னால் உள்ளது என்ன ? உயிரா ? ஆத்மாவா ? இறைவனா ? 

அது நேரடியாகத் தெரியாது. பயிற்சி வேண்டும். புலன்கள் தெளிவு பெற வேண்டும். 

எப்போது மனதில் சலனம் இல்லையோ, அப்போது புலன்கள் தெளிவு பெறும் . 

தெளிவு பெற்ற புலன்கள் உண்மையைக் காணும். 

அடுத்த முறை தாமரை மலர் கிடைத்தால் , முகர்ந்து பாருங்கள். 

அதன் நுண்ணிய வாசம் புரியும். 

அட, இத்தனை நாள் என் கண் முன்னே இருந்தது. இந்த வாசனை  தெரியாமல் இருந்து விட்டேனே என்று ஆச்சரியப் படுவீர்கள். 

அப்படித்தான், பல உண்மைகள் கண் முன்னே கிடக்கிறது . நாம் சரியாக பார்ப்பது இல்லை. 

பாருங்கள். தெரியும். 

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/2.html


Saturday, September 10, 2016

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - அறம் காக்க

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - அறம் காக்க 


விராதன் என்ற கந்தர்வன் , ஒரு சாபத்தால் , அரக்கனாக இருந்தான். இராமனிடம் போரிட்டு, மாண்டு சாப விமோசனம் பெற்றான். அவன் விண்ணுலகம் போவதற்கு முன் சில சொல்லிச் செல்கிறான்.

அகத்தையும், புறத்தையும் கண்டு, எப்போதும் அருள் நோக்கோடு,  காற்று போல தன்னந் தனியாக சுற்றி  சுற்றி வந்து அறத்தை காக்கிறாய் என்கிறான் அடுத்தப் பாடலில்.


பாடல்

புறம் காண அகம் காணப் பொது முகத்தின்
     அருள் நோக்கம்
இறங்காத தாமரைக் கண் எம்பெருமாஅன்!
     இயம்புதியால்;
அறம் காத்தற்கு, உனக்கு ஒருவர் ஆரும் ஒரு
     துணை இன்றி,
கறங்கு ஆகும் எனத் திரிய,
     நீயேயோ கடவாய்தான்?

பொருள்

புறம் காண = வெளிப் புறத்தைக் காண

அகம் காணப் = உள் புறத்தைக் காண

பொது முகத்தின் = பொதுவாக

அருள் நோக்கம் = அருள் பார்வை

இறங்காத = தாழாத

தாமரைக் கண் = தாமரை போன்ற கண்களை உடைய

எம்பெருமாஅன்! = எங்கள் பெருமானே

இயம்புதியால்; = எங்களுக்குச் சொல்

அறம் காத்தற்கு, = அறத்தை காப்பதற்கு

உனக்கு = உனக்கு

ஒருவர் ஆரும் = வேறு ஒருவர் யாரும்

ஒரு துணை இன்றி = ஒரு துணையும் இன்றி

கறங்கு ஆகும் = காற்றுப் போல

எனத் திரிய = எங்கும் திரிந்து

நீயேயோ கடவாய்தான்? = நீ உன் கடமையைச் செய்கிறாய்


மேலோட்டமாக பார்த்தால் எளிமையான பாடல்  தான்.


புறம் காண அகம் காணப்

நமக்கு ஒருவரின் வெளித்  தோற்றம் மட்டும் தான் தெரியும். அவர்கள்  உடுத்தும் உடை, பேசும் பேச்சு, நடை , பாவனை  என்று இவை மட்டும்  தான் தெரியும்.

அவனுக்கு உள்ளும் புறமும் தெரியும்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று  வேண்டினார் வள்ளலார்.

உள்ளே என்ன இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்...

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே


என்பார் நாவுக்கரசர். வெளி உலகுக்கு பக்தனைப் போல நடித்தாலும், உள்ளுக்குள் பக்தி இல்லை , எப்படி கள்ளனைப் போல வேடம் போடுகிறேன் என்று தன்னை தானே நினைத்து சிரிக்கிறார் நாவுக்கரசர்.

அவர் நிலை அப்படி என்றால் நம் நிலை எப்படியோ ?

பொது முகத்தின் அருள் நோக்கம்


அவனுக்கு உயர்ந்தவன், தாழ்ந்தவன், படித்தவன், படிக்காதவன், செல்வந்தன், ஏழை என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. எல்லோருக்கும்  பொதுவானவன்.

எல்லாருக்கும் பொதுவில் நடம் இடும் சிவமே என்பார் வள்ளலார்.


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.  


அடுத்ததாக 

அருள் நோக்கம் இறங்காத தாமரைக் கண்

நமக்கு ஒரு நாள் நல்ல மன நிலை இருந்தால் உதவி தேடி வந்தவர்களுக்கு உதவி  செய்வோம்.இன்னோர் நாள் ஏதோ கோபத்திலோ, சோகத்திலோ இருந்தால் , அநத நேரத்தில் யாராவது உதவி என்று வந்தால் எரிந்து விழுவோம். குறைந்த பட்சம் அப்பறம் வாங்க என்று அனுப்பி விடுவோம். 

ஆண்டவனுக்கு அப்படி எல்லாம் இல்லை. அவன் அருள் நோக்கம் ஒரு போதும்  குறையாது. 



தாமரைக் கண்..

அது என்ன அடிக்கடி தாமரை பூவே உதாரணம் சொல்கிறார்கள். இலட்சுமி தாமரை பூவில் இருக்கிறாள், சரஸ்வதி தாமரை பூவில் இருக்கிறாள். அன்றலர்ந்த செந்தாமரையை ஒத்தது என்கிறார் கம்பர் இராமனைப் பற்றி கூறும் போது . இங்கும் தாமரைக் கண் என்கிறார். 

தாமரையில் என்ன விசேஷம் இருக்கிறது ?

இறைவனை எப்படி அறிவது ? இறைவன் என்பது ஒரு ஆளா ? ஒரு வடிவமா ? ஒரு தத்துவமா ? ஒரு சித்தாந்தமா ? ஒரு உணர்வா ? அது என்ன ?

அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். அதை எப்படி அறிவது ? இந்த புலன்களுக்கு புலப் படுமா ? கண்ணால் காண முடியுமா ? காதால் கேட்க முடியுமா ? தொட்டு உணர முடியுமா ?

முடியும். 

முடிந்திருக்கிறது. பார்த்தவர்கள், பார்த்தேன் என்று சொல்லி  இருக்கிறார்கள்.


திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று

என்று ஒன்றுக்கு ஐந்து முறை பேயாழவார் சாதிக்கிறார். 

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்

கண்டு அறியாதன கண்டேன் என்கிறார் திருநாவுக்கரசர்.

கணக்கிலலாத வடிவங்களை காட்டினாய்  கழுக் குன்றிலே என்பார் மணிவாசகர் 

பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்உன் நாமங்கள் பேசுவார்க்
கிணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 

பார்த்திருக்கிறார்கள். பார்க்காமலா , பார்த்தேன் என்று பாட்டு எழுதுவார்கள் ?

கண்ணால் கண்டிருக்கிறார்கள். 

எப்படி முடிந்தது ? அதே கண்கள்தான் நமக்கும் இருக்கிறது. நம்மால் ஏன் காண முடியவில்லை ?

சரி, அதுக்கும் இந்த தாமரை மலருக்கும் என்ன சம்பந்தம் ?

சிந்திப்போம்.

Friday, September 9, 2016

இராமாயணம் - விராதன் வதை - அடுத்த பெருந் தனி மூலத்து அரும் பரமே

இராமாயணம் - விராதன் வதை - அடுத்த பெருந் தனி மூலத்து அரும் பரமே


இராமனால் கொல்லப்பட்ட விராதன் என்ற கந்தர்வன், சாப விமோசனம் பெற்று, விண்ணுலகம் போவதற்கு முன், இராமன்தான் பரம்பொருள் என்று உணர்ந்து சில சொல்லுகிறான்.

அத்தனையும் தேனாக இனிக்கும் பாடல்கள்.


பாடல்

‘கடுத்த கராம் கதுவ நிமிர் கை
     எடுத்து மெய்கலங்கி
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி
     கொள்ள உறு துயரால்
"அடுத்த பெருந் தனி மூலத்து அரும் பரமே!
     பரமே!" என்று
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று
     "ஏன்?" என்றாய்?


பொருள்

‘கடுத்த = கோபம் கொண்ட

கராம் = முதலை

கதுவ =  பற்றிக் கொள்ள

நிமிர் கை = நிமிர்ந்த கை ,தும்பிக்கை

எடுத்து = உயர்த்தி

மெய்கலங்கி = உடல் கலங்கி

உடுத்த திசை அனைத்தினும் = அனைத்து திசைகளிலும்

சென்று ஒலி கொள்ள = செல்லுமாறு குரல் எழுப்பி

உறு துயரால் = பெரிய துயரத்தால்

"அடுத்த = சேர்ந்த

பெருந் = பெரிய

தனி = உவமை இல்லாத

மூலத்து = மூலமான மூலமான

அரும் பரமே! = அருமையான , உயர்வானவனே

பரமே!" என்று = உயர்வே என்று

எடுத்து ஒரு வாரணம் அழைப்ப = யானை அழைக்க

நீயோ = நீயே

அன்று = அன்று

 "ஏன்?" என்றாய்? = ஏன் என்று கேட்டாய்

அன்று ஒரு நாள் ஒரு யானையின் காலை ஒரு முதலை பற்றிக் கொள்ள, அந்த யானை ஆதி மூலமே என்று அலறிய போது ஏன் என்று ஓடி வந்தாய்.

பாடல் இவ்வளவுதான்.

இந்த யானை கூப்பிட்டதும், அவன் வந்ததும் ஆன அந்த கதையை ஆழ்வார்கள் அப்படி கொண்டாடுகிறார்கள். 


பேயாழவார் , மூன்றாம் திருவந்தாந்தியில் 

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயக்கரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துள்
கோள்முதலை துஞ்சக்  குறியெறிந்த  சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு’

என்று சாதிக்கிறார்.


பூதத்தாழ்வாரும்

அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,
பெருக முயல்வாரைப் பெற்றால், - கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து. 


தொடரெடுத்த மால்யானை சூழ்கயம் புக்கஞ்சிப்
படரெடுத்த பைங்கமலம்  கொண்டு,அன்றிடரடுக்க
ஆழியான் பாதம் பணிந்தன்றே* வானவர்கோன்
பாழிதா னெய்திற்றுப் பண்டு. 

என்று அருளிச் செய்கிறார்


நம்மாழ்வார்...

மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

என்று  திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமானை  பாடுகிறார்


மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற,
கைம்மா வுக்கருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,
எம்மா னைச்சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும்துள் ளாதார்,
தம்மால் கருமமென் சொல்லீர் தண்கடல் வட்டத்துள் ளீரே. 

என்பதும் நம்மாழ்வார் பாசுரமே

சரி , ஏதோ ஒரு யானை கூப்பிட்டது, பெருமாள் வந்து அருள் புரிந்தார்,  இதில் என்ன அப்படி ஒரு விசேஷம் ?

யானைக்கு உயிர் போகும் ஆபத்து. அந்த நேரத்தில் என்ன செய்வோம் என்று தெரியாமல் அது அலறியது. யானைக்கு அருள் புரிந்தவன் நமக்கும் அருள் புரிவான் என்ற நம்பிக்கையை விதைப்பது இந்த பாடல்கள்.

இந்த உலகத்தை நாம் கட்டுப் படுத்தி விட முடியும். இந்த உலகம் நம்  சௌகரியத்திற்கு இருக்க வேண்டும். நமக்கு ஒரு துன்பமும் வரக் கூடாது.  நாம் வெளியே போகும் போது மழை வந்தால், நாம் சலித்துக்   கொள்கிறோம். இரண்டு மாதம் வெயில் அடித்தால் நாம் வெறுப்படைகிறோம். ஏதோ இந்த உலகம் நமக்கு சாதகமாக இல்லை என்று  அலுத்துக் கொள்கிறோம்.

போராடுகிறோம். இதை ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறோம். அறிவினால் எதையும் வென்று விடலாம் என்று நினைக்கிறோம்.

அது ஒரு வழி. அப்படியும் போகலாம். வாழ்நாள் பூராவும் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டே இருக்கலாம்.

பக்தி உள்ளவர்கள், சரணாகதி அடைந்து விடுகிறார்கள். "எல்லாம் நீ பார்த்துக் கொள்...எனக்கு என்ன" என்று.

யானை , முதலையோடு போராடவில்லை. அல்லது, நமக்கு விதித்த விதி இதுதான் என்று சோர்ந்தும் விடவில்லை. "ஆதி மூலமே" என்று அவனிடம்  சரண் அடைந்தது.  முதலையிடம் இருந்து மட்டும் அல்ல, இந்த பிறவிப் பெருங்கடலில் இருந்தும் மீண்டது.

யானைக்கு , கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவர் இன்ன பெயரில் இருக்கிறார். இடத்தில் இருக்கிறார். இந்த வண்ணத்தில் இருக்கிறார் என்று தெரியாது. ஒன்று மட்டும் அது உணர்ந்து இருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் வேண்டும். இந்த உலகம் அத்தனையும் ஒரு மூலத்தில் இருந்து தொடங்கி இருக்க வேண்டும். அதன் பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.  அந்த ஆதி மூலத்தை , ஆதிமூலம் என்றே அழைத்தது  அந்த யானை.

ஒரு பெரிய கூட்டம். அதில் உங்கள் நண்பர் இருக்கிறார். எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. ஒவ்வொருவராக பார்த்து பார்த்து கண்டு தெளிய முடியாது. நீங்கள் அவசரமாக அவரைப் பார்க்க வேண்டும்.

என்ன செய்வீர்கள். ஒலி  பெருக்கியில், அவர் பெயரைச் சொல்லி, இன்னார் எங்கிருந்தாலும் இந்த இடத்துக்கு வரவும் என்று அறிவிப்பு செய்வீர்கள் அல்லவா. அதை கேட்டதும், அந்த பெயர் உள்ள உங்கள் நண்பர் அங்கே வருவார்.

அவர் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியாது.

பெயரைச் சொல்லி அறிவிப்பு செய்தவுடன் அவர் வருகிறார்.

அது போல, ஆதி மூலமே என்று திசைகள் அனைத்தும் கேட்கும்படி அந்த யானை அறிவிப்பு செய்தது.

"ஏன் , என்னை கூப்பிட்டாயா" என்று கேட்டுக் கொண்டே அவன் வந்தான்.

அது மட்டும் அல்ல, அப்படி வந்த பரம்பொருள் இராமன் தான் என்று உலகுக்குச் சொல்லிப் போகிறான் விராதன்.

நம்புங்கள். நம்பி கூப்பிடுங்கள்.

யானைக்கு செவி சாய்த்தவன் , உங்களுக்கு குரலுக்கு செவி சாய்க்க மாட்டானா ?

சாய்பான்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_9.html

Thursday, September 8, 2016

நற்றிணை - வினை முடித்தன்ன இனியோள்

நற்றிணை - வினை முடித்தன்ன இனியோள் 


அது ஒரு பழங்கால தமிழ் நாட்டின் ஒரு கிராமம். ஊரில் ஒரு வேப்ப மரம் இருக்கிறது. அந்த வேப்ப மரத்தில் ஒரு பருந்து கூடு கட்டி வசிக்கிறது. அப்போதுதான் முட்டை போட்டு இருக்கிறது. அந்த வேப்ப மரத்தின் நிழலில் கொஞ்சம் சிறுவர்கள் நெல்லிக் காயை வைத்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். மாலை வந்து விட்டது. உழவர்களும் , பயிற்சிக்கு சென்ற வீரர்களும் வீடு  திரும்புகிறார்கள். வீட்டில் , இனிமையான அவள் விளக்கு ஏற்றுகிறாள். இரவு நீள்கிறது.

இதை விவரிக்கும் பாடல்

ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ்சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே.


ஈன் பருந்து = ஈன்ற பருந்து. முட்டை இட்ட பருந்து

உயவும் = வருந்தவும்

வான் பொரு = வானளாவிய

நெடுஞ் = நீண்ட

சினைப் = கிளைகளைக் கொண்ட

பொரி = கடினமான

அரை வேம்பின் = வேப்ப மரத்தின் கிளையின்

புள்ளி நீழல் = புள்ளி புள்ளியாக இருக்கும் நிழல்

கட்டளை அன்ன இட்டு  = கட்டளை இட்டது போல

அரங்கு இழைத்து = விளையாடும் இடம் செய்து

கல்லாச் சிறாஅர் = கற்காத சிறுவர்கள்

நெல்லி வட்டு ஆடும் = நெல்லிக் கனியை விளையாடும் காயாகக் கொண்டு ஆடும்

வில் = வில்

ஏர் உழவர் = கலப்பையை கொண்ட உழவர்

வெம் முனைச் சீறூர்ச் = கூரிய முனையைக் கொண்ட சின்ன ஊர்

சுரன் முதல் வந்த = புஞ்சை நிலத்தில் முதலில் வந்த

உரன் மாய் = வலியைக் குறைக்கும்

மாலை = மாலைப் பொழுது

உள்ளினென் = நினைத்தேன்

அல்லெனோ = ஒரு வேளை நினைக்க வில்லையோ

யானே = நானே

உள்ளிய = நினைத்த

வினை முடித்தன்ன இனியோள் = வேலை செய்து முடித்ததை போன்ற இனிமையானவள்

மனை = இல்லத்தில்

மாண் = மாண்பொடு

சுடரொடு = விளக்கு ஏற்றி வைத்து

படர் பொழுது எனவே.= நீளும் பொழுதைப் போல

என்ன ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத வரிகளாக இருக்கிறதா ?

முட்டை போட்ட பருந்து, வேப்ப மர நிழல், விளையாடும் சிறுவர்கள், வீடு  திரும்பும் ஆண்கள். விளக்கு ஏற்றும் நேரம்.

இதில்  என்ன கவிதை இருக்கிறது என்று நினைக்கத் தோன்றும்.

கொஞ்சம் கரடு முரடான தமிழ்தான்.

 சிந்திப்போம்.

இந்த பாடலை எழுதியது யாராக இருக்கும்.

வீட்டில் இருக்கும் பெண்ணைப் பற்றி எழுதியதால் எழுதியது ஒரு ஆண் என்று புரிகிறது.

எந்த மனநிலையில் இருந்து எழுதி இருக்கிறான் ?

பிரிவின் சோகத்தில் இருந்து  எழுதுகிறான்.

எப்படி என்று  பார்ப்போம்.

முதலில், பருந்து முட்டை இட்டு வலியில் இருக்கிறது.  ஆனால்,அது அந்த மரத்தின்  அடியில் விளையாடும் சிறுவர்களுக்குத்  தெரியாது.அவர்கள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது, கல்லாச் சிறார் என்றதால், அந்த காலத்தில் எல்லா பிள்ளைகளும் பள்ளிக் கூடம் போய் படிக்கவில்லை என்று தெரிகிறது.  படிப்பறிவு இல்லாத சிறுவர்கள். அவர்கள் எப்படி பருந்தின் வலியை உணர மாட்டார்களோ, அப்படி நானும் அவளின் சோகத்தை அறியாமல் பொருள் தேடி வெளியூர் போகிறேன் என்பது சொல்லாமல் சொன்ன கதை.

மூன்றாவது, மாலை நேரத்தில் வேலைக்குப் போன ஆண்கள் எல்லோரும் வீடு திரும்புகிறார்கள். உழவர்கள், வீரர்கள் எல்லோரும் வீடு திரும்பும் நேரம். தான் மட்டும் வீடு திரும்பாமல் எங்கோ தனிமையில் தவிக்கும் நிலை புரிகிறது அவனுக்கு.

நான்காவது, தனிமையில், அவள் விளக்கு ஏற்றி வைத்து காத்திருக்கும் சோகம் நம் மீதும் படர்கிறது.

 ஐந்தாவது, அவள் மிக மிக இனிமையானவள். அவளின் இனிமைக்கு ஒரு உதாரணம் கண்டு பிடித்த இந்த கவிஞனுக்கு ஒரு கோவில்  கட்டி கும்பிடலாம்.

" உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்"

நினைத்த வேலையை நல்ல படியாக முடித்தால் வரும் இன்பம் வருமே, அந்த இன்பத்தைப் போன்றவள் அவள் என்கிறான்.

ஒரு வீட்டை நன்றாக கட்டி, பால் காய்ச்சி குடி போகும் போது வரும்  இன்பம்,  பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடித்து அவர்கள்  மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்க்கும் போது வரும் இன்பம், இப்படி ஒரு பெரிய வேலையை நன்றாக முடித்த பின் வரும்  இன்பம் போன்றவள் அவள்.

அதிலும் குறிப்பாக "உள்ளிய வினை" அதாவது நினைத்த வேலை. யாரோ சொன்ன வேலை. நாம் நினைத்து செய்த வேலை.

அடடா, என்ன ஒரு உதாரணம்.

தமிழனாகப் பிறந்ததற்கு இன்னுமொருமுறை கர்வப் பட்டுக் கொள்ளலாம்.


ஆறாவதாக, வெளியூரில் இருக்கும் அவன் வேலை மும்முரத்தில் சில சமயம் அவளை நினைப்பதைக் கூட மறந்து விடுகிறான். அப்படி நினைக்காதது அவனுக்கு ஒரு குற்ற உணர்வை தருகிறது. எனக்காவது வேலை இருக்கிறது. அவள் பாவம் தனியாக இருப்பாளே என்று தவிக்கிறான்.


"உள்ளினென் அல்லெனோ"

முதலில் நினைத்தேன் என்கிறான். உடனே குற்ற உணர்வு வருகிறது. "அல்லெனோ' , நினைக்கவில்லையோ என்று தவிக்கிறான்.

ஏழாவதாக, பகல் எல்லாம் எப்படியோ போய் விடும். இந்த மாலைதான் படுத்தும்.  வலிமையை குன்றச் செய்யும் மாலை என்கிறான்.

உரன் மாய் மாலை


வலிமையை மாய்க்கும் (அழிக்கும்) மாலை.

கடைசியாக, இந்த மாலையும் அதை தொடர்ந்து வரும் இரவும் இருக்கிறதே, அது சட்டென்று முடியாமல் நீண்டு கொண்டே  போகிறதாம்.

"படர் பொழுது"

விளக்கு ஏற்றி வைக்கிறாள். விளக்கின் ஒளியில் நடக்கும் போது நிழல் எப்படி  நீண்டு தெரியுமோ அப்படி இந்த மாலையும் இரவும் நீண்டு கொண்டே போகிறது. உருவம் என்னவோ சின்னது தான், ஆனால், இந்த நிழல் மட்டும் நீண்டு கிடக்கும் . அது போல,  எப்போதும்  சின்னதாக இருக்கும் மாலை இப்போது நீண்டு கிடக்கிறது.

வரிக்கு வரி பிரிவின் சோகம் நிழலாடும் பாடல்.

எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்து வந்து, ஏதோ ஒரு பெயர் தெரியாத கிராமத்தை, பெயர் தெரியாத ஒரு ஆணையும்,பெண்ணையும், அவர்களின் பிரிவுத் துயரையும் நம் கண்   முன் கொண்டு வந்து நிறுத்துகிறதல்லவா இந்தப் பாடல்.

இன்னொரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.

அந்த  கிராமமும்,அந்த அந்தி  நேரமும், விளக்கேற்றிய அந்த வீடும், அதில்  பிரிவின் சோகத்தில் இருக்கும் அந்த பெண்ணும் உங்களுக்குத்   தெரிவார்கள்.


http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_8.html


Wednesday, September 7, 2016

இராமாயணம் - விராதன் வதைப் படலம்

இராமாயணம் - விராதன் வதைப் படலம்


இராமாயணத்தில் அதிகம் பேசப் படாத பாத்திரங்களில் ஒன்று விராதன்.

அவன் ஒரு கந்தர்வன். ஒரு சாபத்தால் அரக்கனாக வந்து பிறந்தான்.

அவனையும் ஆட்டி வைத்தது காமம். அது பற்றி பின் ஒரு நாள் சிந்திப்போம்.

அரக்கனாக பிறந்த அவன், சீதையை கவர முயல்கிறான். இராமனோடு சண்டை இட்டு , சாப விமோச்சனம் பெற்று மேலுலகம் அடைகிறான்.

போவதற்கு முன் கொஞ்சம் பேசுகிறான்.

அத்தனையும் வேதாந்த சாரம். தேனாய் தித்திக்கும் தமிழ் பாடல்கள்.

கல்லும் கரையும் தமிழ். ஒவ்வொரு பாடலையும் படித்து முடித்தவுடன் , அப்படியே கண் மூடி கரைந்து போக வைக்கும் பாடல்கள்.


அதிலிருந்து சில பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

ஒரு மாட்டுத் தொழுவத்தில் நிறைய பசு மாடுகள் கட்டி இருக்கின்றன. அங்கே சில கன்றுகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. பசி வந்தால், அந்த கன்றுகள் , சரியாக தன் தாய் பசுவை சென்று அடையும். அது போல, தாய் பசுவுக்கும் தன் கன்று எது என்று தெரியும்.

இறைவா, நீ தான் இந்த உயிர்களை எல்லாம் படைத்தாய்.உனக்கு இந்த உயிர்களை எல்லாம் தெரியும். ஆனால், இந்த உயிர்களுக்குத் தான் உன்னைத் தெரியவில்லை.

இது என்ன மாயை என்று வினவுகிறான் விராதன்.

மாயைப் பற்றி ஆயிரம் சர்ச்சைகள் இருக்கின்றன. பெரிய பெரிய  மேதாவிகள், பண்டிதர்கள் எல்லாம் மாயை  என்றால் என்ன என்று  பக்கம் பக்கமாய் விளக்கி இருக்கிறார்கள். இருந்தும் நமக்கு அது சரியாக புரிவது  இல்லை.

மூலம் எது என்று தெரியாதது தான் மாயை.

நான்  யார், எங்கிருந்து வந்தேன், என்பது புரியாமல் குழம்புவது தான் மாயை  என்று நாலு வரியில் சொல்லிப் போகிறான் விராதன்.

பாடல்


தாய்தன்னை அறியாத கன்று
     இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின் தாய்
     ஆகின், ஐய!
நீ அறிதி எப் பொருளும்; அவை உன்னை
     நிலை அறியா;
மாயை இது என்கொலோ?-
     வாராதே வரவல்லாய்!


பொருள்


தாய்தன்னை = தாயை

அறியாத கன்று இல்லை; = அறியாத கன்று இல்லை

தன் கன்றை = தன்னுடைய கன்றை

ஆயும் அறியும்; = தாய் பசுவும் அறியும்

உலகின் தாய் ஆகின், = நீ உலகின் தாய் போன்றவன்

ஐய! = ஐயா

நீ அறிதி எப் பொருளும்; = நீ அனைத்தும் அறிவாய்

அவை உன்னை நிலை அறியா = அவை உன் உண்மை நிலையை அறியா

மாயை இது என்கொலோ?- = இது என்ன மாயை

வாராதே வரவல்லாய்! = வாராதே வர வல்லாய்

அறிவு சேர சேர குழப்பம் அதிகமாகும். சந்தேகங்கள் அதிகம் ஆகும்.

இதை அறிந்துதான் மணிவாசகரும்

கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா ! உன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே என்றார்.

கன்றை ஈன்ற பசுவின் மனம் போல கசிந்து உருக வேண்டுகிறார் மணிவாசகர்.

பிள்ளையைப் பெற்ற ஒரு பெண்ணைப் போல என்று ஏன் சொல்லவில்லை. பசுவிடம் அறிவின் தாக்கம் குறைவு, உணர்வின் தாக்கம்  அதிகம்.

"கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும் " என்பார் அவர்.

ஆதி மூலமே என்று அன்று ஒரு யானை தன் மூலத்தை அறிந்து கூப்பிட்டு , அவனை அடைந்தது.

வாதாடி, போராடி தோற்று "கோவிந்தா" என்று கை உயர்த்தி அவனைக் கண்டாள் பாஞ்சாலி.

மூலத்தை அறிய விடாமல் தடுப்பது மாயை.

மாயை விலக வேண்டும்.

தண்ணீர் மேல் படிந்திருக்கும் பாசி போல. பாசி விலகினால் நீரின்  தன்மை புரியும்.

ஆசைக் கடலில் அகப்பட்டு   அருளற்ற அந்தகன் கை
"பாசத்திடை" அல்லல் பட இருந்தேனை உன் பாதம் எனும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்வேன் ஈசர் பாகத்து நேரிழையே

என்பார் அபிராமி பட்டர்.


பாசம் என்ற திரை மறைக்கும், வழுக்கும்.


வாராதே வரவல்லாய்!

சரி, நமக்குத் தான் இறைவனைத் தெரியவில்லை. அவனுக்குத் தான் நம்மைத்  தெரியுமே. அவன் நேரில் வந்து தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள  வேண்டியது தானே. 

அவன் வரவில்லை என்று யார் சொன்னது. நாம் அறியவில்லை. அவ்வளவுதான்.  வராமலே வரும் ஆற்றல் உள்ளவன் அவன். 

‘வருவாய் போல வாராதாய்! வந்தாய் என்று மனம் களிப்ப,
வெருவாதிருந்தே  நீ  இடையே  துன்பம்  விளைக்க,
                                   மெலிகின்றோம்;
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே! நீயே இதனைக்
                                      காவாயேல்,
திரு வாழ் மார்ப! நின் மாயை எம்மால் தீர்க்கத் தீருமோ?’

என்பது நம்மாழ்வார் வாகு.

வருவது போல வராமல் இருப்பாய்.  உன் மாயையை எங்களால் அறிந்து கொள்ள  முடியுமா என்கிறார் நம்மாழ்வார்.

சிந்திப்போம். மாயை என்ற திரை விலகும். உண்மையின் தரிசனம் கிடைக்கட்டும் .

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_7.html



Tuesday, September 6, 2016

திருக்குறள் - தடையும் , விடா முயற்சியும்

திருக்குறள் - தடையும் , விடா முயற்சியும் 


வாழ்வில் எத்தனையோ தடைகள் வரும்.

நினைத்தது  நடக்காது. தோல்விகள் வரும். எதிர்பாராத சறுக்கல்கள் இருக்கும்.

எல்லாம் சரியாக, நாம் நினைத்தது படி நடந்து கொண்டிருந்தால் நல்லதுதான்.

நாம் எதிர்பார்த்ததற்கு எதிராக ஏதாவது நடந்தால் என்ன செய்வது ?

போரில், யானை மேல் அம்புகள் பாயும். ஆனால், அந்த யானை அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய கம்பீரம் குறையாமல் போரில் மேல் செல்லும். அது போல ஊக்கம் உடையவர்கள் , என்ன துன்பம் வந்தாலும், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் மேலே செல்வார்கள்.

பாடல்

சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற் 
பட்டுப்பா டூன்றுங் களிறு.

சீர் பிரித்த பின்

சிதை இடத்து ஓல்கார் உரவோர் புதை அம்பில் பட்டு பாடு ஊன்றும் களிறு 

பொருள்

சிதை இடத்து =  சிதைவு வந்த இடத்தில். துன்பம் வந்த போது


ஓல்கார் = தளர்ந்து பின் வாங்க மாட்டார்

உரவோர் = வலிமை உடையோர்

புதை அம்பில் பட்டு  = புதைக்கின்ற அம்பினால் பட்டு

பாடு = கடமை, வேலை

ஊன்றும்பா = நிலை நிறுத்தும்

களிறு = யானை

அம்பு பட்ட யானை போல தளராது வேலை செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர்.


இது ஒரு பெரிய கருத்தா ? இதை யார் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம்.  வள்ளுவர் சொல்லும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது ?

பார்ப்போம்

துன்பம் இயற்கையாக வரலாம். அல்லது நமக்கு வேண்டாதவர்கள் மூலம் வரலாம்.

போரில் உள்ள யானைக்கு வந்த துன்பம் எதிரிகள் மூலம் வந்த துன்பம். அதிலும் ஒரு ஆள் செய்த துன்பம் இல்லை. பல எதிரிகள் எய்த  அம்பு.

அது போல வாழ்வில் எதிரிகளை கண்டு கலங்கி விடக் கூடாது. உடலால், மனதால், பொருளாதாரத்தால் நமக்கு துன்பம் விளைவிப்பவர்கள்  நிறைய பேர் இருக்கலாம். வாங்கிய கடனை திருப்பித்  தராதவர்கள், பணத்தை வாங்கி கொண்டு அதற்குரிய பொருளை, சேவையைத் தராமல் ஏமாற்றுபவர்கள், நம் பொருளை , உழைப்பை கவர்ந்து கொள்பவர்கள், நம்மை பற்றி மற்றவர்களிடம்  தவறாக பேசுபவர்கள், நமக்கு வர வேண்டிய நன்மையை தடுத்து நிறுத்துபவர்கள்  என்று பல வித எதிரிகள் இருக்கலாம்.

போரில், ஒவ்வொரு எதிரியாக வந்து அம்பு போடமாட்டான். எல்லோரும் ஒன்றாக அம்பு எய்வார்கள். அது போல நமக்கும் துன்பம்  வரும் போது , ஒன்றாக வரும். ஒவ்வொன்றாக வராது.

புதை அம்பு என்றார் வள்ளுவர். ஏதோ மேலே பட்டு குத்தி விட்டு கீழே விழுந்து விடும் அம்பு அல்ல. உடம்பில் குத்தி உள்ளே சென்று , இரத்தம் வெளி வர , வலி உண்டாக்கும் அம்புகள்.

ஒரு அம்பு குத்தியவுடன், "ஐயோ, வலிக்கிறதே , இதை வெளியில் எடுத்து, கட்டு போட்டு , குணமானபின் வந்து சண்டை போடலாம் " என்று  சொல்ல முடியாது. ஒரு அம்பு பாய்ந்து , இரத்தம் வந்து கொண்டிருக்கும் போது , இன்னொரு அம்பு பாயும். நின்று யோசிக்க நேரம் இல்லை. களைப்பாற நேரம் இல்லை. காயத்துக்கு கட்டுப் போட நேரம் இல்லை.

அது போல, ஒரு துன்பம் வந்தால், தளர்ந்து இருந்து விடக் கூடாது. இன்னும் வரும், அதையும் சேர்த்து தாங்குவேன் என்று உறுதியாக இருக்க வேண்டும்.

ஒரு அம்புக்கே தளர்ந்து விட்டால், பின் பத்து அம்பை எப்படி தங்குவது.



உரவோர் - வலிமை மிக்கவர் என்று பொருள். 

உரம் என்ற சொல்லில் இருந்து  வந்தது. உரம் என்பது மற்றவற்றை நன்கு வளர உதவி செய்வது.  அது போல, வலிமையானவர்கள், தான் வலிமையாக இருப்பதோடு தன்னை சார்ந்தவர்களையும் வலிமை உள்ளவர்களாக  ஆக்குவார்கள். 

யானைப் படை முன்னால் அடித்து துவம்சம் செய்து கொண்டு போகும். அதன் பின்னால் மற்ற படைகள் முன்னேறும். எதிரியின் அரண்களை  தன் வலிமையால் தகர்த்து மேலே செல்லும். அதன் வழியை பின்  பற்றி மற்ற படைகள் முன்னேறும். 

அது போல, நாம் வரும் துன்பங்களை ஏற்றுக் கொண்டு மேலே சென்றால் , நம் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் நம் பின்னால் வருவார்கள். 

யானை வலிக்கு பயந்து புறமுதுகு கொண்டு ஓடினால் , தன்னுடைய படைக்கே  அது எமனாக மாறிவிடும். எதிரியை கொல்வதற்கு பதில், தான் படைக்கே அது சேதம் விளைவித்து விடும். 

அது போல, நாம் துன்பத்தை கண்டு தளர்ந்து விட்டால், அது நம் குடும்பத்தில் உள்ளவர்களை  அதிகமாக பாதிக்கும். எனவே, வலியைம் அவமானத்தையும்  பொறுத்துக் கொண்டு மேலே செல்ல வேண்டும். 

மேலும், யானை தன் மேல் பட்ட அம்புகளை தாங்கி கொண்டு மேலே செல்லும்போதும் அதன் கம்பீரம் குறையாது. அது கூனி குறுகிச் செல்லாது. 

துன்பத்தை கண்டு நாம் தயங்கி விடக் கூடாது. கம்பீரமாக மேலே செல்ல வேண்டும். 

அப்படிச் செல்ல என்ன வேண்டும் ?

ஊக்கம் வேண்டும். 


அப்படி செய்வது, "கடமை" என்கிறார் வள்ளுவர். அது ஏதோ விரும்பி செய்வது அல்ல. அது ஒரு கடமையும் கூட. 


இதைத்தான் அவ்வையாரும் ஒரே வரியில் சொல்லி விட்டுப் போனார் 

"ஊக்கமது கைவிடேல் " என்று. 

ஊக்கத்தை கை விடாதீர்கள்.

எத்தனை தடையும் வந்தாலும் , வெல்ல முடியும். 

வெல்வீர்கள். 

Monday, September 5, 2016

திரு இரட்டை மணிமாலை - ஆழாமை காப்பானை

திரு இரட்டை மணிமாலை - ஆழாமை காப்பானை 


காரைக்கால் அம்மையார் அருளிச் செய்தது.

சங்கரனை, சடை முடி கொண்டவனை, அந்த சடையில் பாம்பை அணிந்தவனை, நாம் ஆழ்ந்து விடாமல் காப்பவனை , நெஞ்சே, எப்போதும் வணங்கு என்பது பாடல்.

பாடல்

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை. 

பொருள்

சங்கரனைத் = இன்பம் தருபவனை

தாழ்ந்த சடையானை = பரந்து  விரிந்து கிடைக்கும் சடை முடியினைக் கொண்டவனை

அச்சடைமேற் = அந்த சடையின் மேல்

பொங்கரவம் = பொங்கு + அரவம் = சீறும் பாம்பினை

வைத்துகந்த = வைத்து + உகந்த = வைத்து மகிழ்ந்தவனை

புண்ணியனை = புண்ணியம் நிறைந்தவனை

அங்கொருநாள் = அங்கு ஒரு நாள்

ஆவாஎன்று = ஆ ஆ என்று

ஆழாமைக் = மூழ்கி விடாமல்

காப்பானை = காப்பவனை

எப்பொழுதும் = எப்பொழுதும்

ஓவாது = இடைவிடாமல்

நெஞ்சே உரை = மனமே சொல்

இவ்வளவுதானா ? இதில் என்ன பெரிய சிறப்பு இருக்கிறது ?


"அங்கொருநாள்" - அது எந்த நாள் ?  கடைசி நாள், உயிர் உடலை விட்டு பிரியும் நாள். புலன்கள் தள்ளாடி, அறிவு மயங்கும் அந்த நாள்.

வாழ் நாள் எல்லாம், எப்போதும் ஒரு அவசரகதியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

நல்ல விஷயங்களை எல்லாம் அப்புறம் அப்புறம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி  வைக்கிறோம்.

பின்னாள் , எந்நாளோ ? அந்த நாள் வரும் போது எப்படி இருப்போமோ.

அன்று என்று எண்ணாது அறம் செய்க என்றார்  வள்ளுவர்.



"ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை"


பிறவியை பெரிய கடலுக்கு ஒப்பிட்டு சொன்னார்கள் நம் முன்னவர்கள்.

ஏன் ?

ஏன் ஒரு பெரிய நில பரப்புக்கு ஒப்பிட்டுச் சொல்லவில்லை ?

நிலத்தில் வழித் தடம் போட்டு விடலாம். ஒரு சாலை அமைத்து விடலாம்.  போகும் இடத்துக்கு ஒரு வழி அமைத்து, சாலையின் இருமருங்கிலும்  வழி காட்டி பலகைகள் வைத்து விடலாம்.

கடலில் அது முடியாது.

இப்படித்தான் போக வேண்டும் என்று சொல்ல முடியாது.

இறைவனை அடையும் வழி என்று ஒன்று இல்லை.

இருந்திருந்தால் இந்நேரம் எல்லோரும் அந்த வழியில் போய் இறைவனை  அடைந்திருக்க மாட்டோமா ?

உண்மை என்பது ஒவ்வொருவரும் , தனக்குத் தானே கண்டு கொள்ள  வேண்டிய ஒன்று.

மற்றவர் போன பாதையில் நாம் போக முடியாது.

பூஜைகளும், புனஸ்காரங்களும் , புத்தகங்களும், பிரசங்ககளும் வழி காட்ட  முடியாது. 

நம் வழியை நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும். 

கடலில் வழி கிடையாது. 

நீங்கள் போய் அடைந்தாலும், உங்கள் வழியை இன்னொருவர் உபயோகப் படுத்த  முடியாது. 

இரண்டாவது, தரையில் நடந்தால், கால் வலித்தால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்  கொள்ளலாம். கடலில் ஓய்வு எடுக்க முடியாது.   நீந்துவதை  நிறுத்தினால் மூழ்க வேண்டியதுதான். 

பிறவி பெருங்கடல் நீந்துவர், நீந்தாதார் இறைவனடி சேராதார் என்பார் வள்ளுவர். 

கால் சலித்து, கை சலித்து ஓயும் போது , அந்த சமயத்தில், நாம் மூழ்கி விடாமல் காப்பவன் இறைவன் என்கிறார்  அம்மையார். 

"ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை"

ஆழ்ந்து விடாமல் காப்பவன் இறைவன். 

பிறவி என்னும் பெருங்கடலில் நாம் தனியாக நீந்தவில்லை. 

கல்லை கட்டிக் கொண்டு நீந்துகிறோம். 

குடும்ப பாரம், சமுதாய பாரம், பயம், கோபம், காமம்  போன்ற பாரங்களை சேர்த்து கட்டிக் கொண்டு நீந்துகிறோம். 

நாவுக்கரசர் சொன்னார் 

"கற்றுணை பூட்டி ஒரு கடலுள் பாய்ச்சினும் 
நற்றுணை ஆவது நமச்சிவாயவே " 

என்று.

ஒரு கல்லா, இரண்டு கல்லா...ஆயிரம் கல்லை கட்டிக் கொண்டு நீந்துகிறோம்.


மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.

 என்பதும்,நாவுக்கரசர் வாக்கே. 

 சிந்திப்போம்.