Saturday, October 28, 2017

பழமொழி - தமக்கு மருத்துவர் தாம்

பழமொழி - தமக்கு மருத்துவர் தாம் 


நவீன மருத்துவத்தில் பல சிக்கல்கள் உள்ளன.

ஒரு நோய்க்கு ஒரு மருந்துதான். காய்ச்சல் உங்களுக்கு வந்தாலும் சரி, எனக்கு வந்தாலும் சரி, யாருக்கு வந்தாலும் ஒரே மருந்துதான். இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்று வைத்திருக்கிறார்கள்.  நீங்களும் நானும் ஒன்றா ? என் உடல், என் உணவு, என் சூழ்நிலை, என் வேலை,  என்று எல்லாமே உங்களில் இருந்து மாறுபட்டது. எப்படி இரண்டு பேருக்கும் ஒரே மருந்து சரி வரும்.

இரண்டாவது, நவீன மருத்துவம் , நோய்களுக்குக் காரணம் நுண் கிருமிகள் (germs ) என்று நம்புகிறது. Germ Theory.  பாக்டீரியா, வைரஸ் போன்றவை நோய்களை உண்டாக்குகின்றன என்பது நவீன மருத்துவத்தின் கோட்பாடு. அப்படி என்றால், அந்த கிருமிகள் தாக்கும் எல்லோருக்கும் அந்த நோய் வர வேண்டுமே ? வருவது இல்லை. நோய்க்குக் காரணம் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே.  இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நவீன மருத்துவத்தில் வழி இல்லை. அதாவது, நோய் எதிர்ப்பு இருந்தால் நோயே வராது. ஆரோக்கியமாக இருக்கலாம்.  நவீன மருத்துவம் என்பது நோயை சரிப் படுத்துமே தவிர, நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாது.

மூன்றாவது, நோய் தடுப்பூசி என்று போடுகிறார்கள். அவை முதலில் நோயை உண்டுபண்ணும். அந்த நோயை நமது உடல் போராடி வென்றெடுக்கும். அப்படி நோய் எதிர்ப்பு தன்மையை உண்டாக்குகிறார்கள். நோய் தடுப்பு என்பது , நோயை உண்டாக்குவது. இந்த தடுப்பூசிகளால் பல சிக்கல்கள் வருகின்றன  என்று மேல் நாடுகளில் சொல்கிறார்கள்.

நான்காவது, நவீன மருத்துவத்தில் , நோய்க்கு தரும் ஒவ்வொரு மருந்தும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். Side effects என்று சொல்வார்கள். அதாவது , ஒரு நோயை குணப்படுத்த வேண்டும் என்றால், வேறு பல உபாதைகளுக்கு, நோய்களுக்கு உள்ளாக வேண்டும். பக்க விளைவுகள் இல்லாத மருந்தே கிடையாது.  தலை வலி போய் திருகு வலி வருவதுதான் மிச்சம்.

ஐந்தாவது, ஒரு நோய்க்கு ஒரு மருந்து உண்டு. ஒருவருக்கு , ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் இருந்தால் , அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள் தருவார்கள். இந்த மருந்துகள் உள்ளே சென்று அவை ஒன்றோடு ஒன்று கலந்து என்னென்ன செய்யும் என்று எளிதாக அறிய முடியாது. நோய் சரியாகவில்லை என்றால், மருந்தை மாத்தி கொடுப்பார்கள். அல்லது மருந்தின் அளவை கூட்டி  குறைத்து கொடுப்பார்கள். ஒரு ஊகம் தான்.

ஆறாவது , இன்று எல்லாமே இலாப நோக்கில் செல்வதால், தேவை இல்லாத சோதனைகள் (test ), தேவை இல்லாத அறுவை சிகிச்சை என்று நிகழ்கிறது. இவற்றினால் பணமும், உடல் நலக் குறைவும் உண்டாகிறது.


இப்படி , நவீன மருத்துவத்தில் பல குறைபாடுகள் உண்டு. நிறைகளும் உண்டு. இல்லை என்று சொல்வதற்கு இல்லை.

இருப்பினும், பல சமயங்களில் நாம் மருத்துவர்களை முழுவதுமாக நம்பிக் கொண்டிருக்காமல், நம் உடல் ஆரோக்கியத்தை பற்றி நாம் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். எது சரி, எது தவறு என்று சிந்திக்க வேண்டும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது, எவ்வளவு சாப்பிடலாம், எப்போது சாப்பிடலாம்  என்று நம் உடல் நிலையை உன்னிப்பாக கவனித்து நமக்கு நாமே சரியான கட்டுப்பாடுகள், வரைமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.

நோய் வந்தால் இருக்கவே இருக்கிறார் டாக்டர், ஒரு ஊசி போட்டால் சரியாகி விடும் என்று இருக்கக் கூடாது.

நம் ஆரோக்கியத்திற்கு நாம் தான் பொறுப்பு.

சரியான உணவு, சரியான உடற் பயிற்சி, ஓய்வு, தூக்கம், நல்ல மன ஆரோக்கியம் என்று நம் உடலை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேறு யாரும் நமக்கு உதவி செய்வார்கள் என்று நினைக்கக் கூடாது.

பாடல்

‘எமக்குத் துணையாவார் யாவர்?’ என்று எண்ணி,
தமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா;
பிறர்க்குப் பிறர் செய்வது ஒன்று உண்டோ? இல்லை;-
தமக்கு மருத்துவர் தாம்.

பொருள்

‘எமக்குத் = எனக்கு

துணையாவார் = துணை செய்பவர்

யாவர்?’  = யார்

என்று எண்ணி = என்று நினைத்துக் கொண்டு

தமக்குத்  = நமக்கு

துணையாவார்த் = துணை செய்பவர்களை

தாம் = நாம்

தெரிதல் வேண்டா = தேடிக் கொண்டிருக்கக் கூடாது

பிறர்க்குப் = மற்றவர்களுக்கு

பிறர் = ஒருவர்

செய்வது ஒன்று உண்டோ? = உதவி செய்வது என்று ஒன்று உண்டோ ?

இல்லை;- = இல்லை

தமக்கு மருத்துவர் தாம் = நமக்கு மருத்துவர் நாம் தான்

நீங்கள் மட்டுமே உங்களுக்கு உதவி செய்யக் கூடியவர். வேறு யாரையும் நம்பாதீர்கள் என்கிறது இந்தப் பாடல்.





Monday, October 23, 2017

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - சிறை அன்னம் அனையாள்

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - சிறை அன்னம் அனையாள் 


இராமனும், இலக்குவனும் , சீதையும் கானகத்தில் செல்கின்ற போது , விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிக் கொண்டு சென்று விட்டான். இராமனும் இலக்குவனும் , அந்த அரக்கனை மறித்து அவனோடு போர் புரியத் தொடங்கினர்.

விராதன் , மாயம் செய்து, அவர்களை தூக்கிக் கொண்டு வானத்தில் சென்றான்.

சீதை பரிதவிக்கிறாள். சீதையின் அவலத்தை கம்பன் காட்டுகிறான்.

ஒரு குளத்தில் ஆண் அன்னமும், பெண் அன்னமும் இணையாக இன்பமாக இருந்து வந்தன. ஒரு நாள் வேடர்கள் வந்து வலை வைத்து பிடித்ததில் ஆண் அன்னம் சிக்கிக் கொண்டது. ஆண் அன்னத்தை அந்த வேடர்கள் தூக்கிக் கொண்டு போகிறார்கள். அதைக் கண்டு அந்தப் பெண் அன்னம் எப்படி துடிக்குமோ, அப்படி துடித்தாள் சீதை.

பாடல்

மா தயா உடைய தன் கணவன்,
     வஞ்சன் வலியின்
போதலோடும் அலமந் தனள்;
     புலர்ந்து, பொடியில்,
கோதையோடும் ஓசி கொம்பு என,
     விழுந்தனள் குலச்
சீதை, சேவல் பிடியுண்ட சிறை
     அன்னம் அனையாள்.

பொருள்

மா = பெரிய

தயா = தயை, கருணை

உடைய = உடைய

தன் கணவன் = தன் கணவன், இராமன்

வஞ்சன் = வஞ்சகனான விராதன்

வலியின் = வலிமையால்

போதலோடும் = போனதால்

அலமந் தனள் = வருந்தினாள், கவலைப்பட்டாள்

புலர்ந்து = வாடிய

பொடியில் = புழுதியில்

கோதையோடும் =  மலர் மாலையோடும் அல்லது மலர் மாலை போன்ற

ஓசி கொம்பு என = ஒடிந்து விழுந்த கொம்பு போல

விழுந்தனள் = விழுந்தால்

குலச் சீதை = உயர் குலத்தில் பிறந்த சீதை

சேவல் பிடியுண்ட  = ஆண் அன்னம் பிடிபட்ட பின்

சிறை  = மென்மையான சிறகுகள் உடையாய்  (பெண் அன்னம்)

அன்னம் = அன்னம்

அனையாள் = போன்ற (சீதை)


ஜனகனின் மகள். தயரதனின் மருமகள், இராமனின் மனைவி - பட்ட துன்பம் இது.

கணவனையும், கணவனின் தம்பியையும் அரக்கன் தூக்கிக் கொண்டு போகிறான்.

நம்மை காக்க வந்ததால் தானே அவர்களுக்கு இந்த கதி என்று நினைத்து  வருந்துகிறாள்.

கணவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், மனைவிக்கு பயம் போகாது. அவனுக்கு  ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்று.


இராமனின் மனைவியின் நிலை இது என்றால்.....

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_23.html

Friday, October 20, 2017

திருவாசகம் - சிவமாக்கி என்னை ஆண்ட

திருவாசகம் - சிவமாக்கி என்னை ஆண்ட 


நாம் யார் ?

நம் உண்மை நிலையை பலப் பல போர்வைகள் போத்தி மூடி மறைத்து இருக்கின்றன.

பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள்,டிவி, செய்தித் தாள்கள், நாம் வாசிக்கும் புத்தகங்கள், என்று ஒன்றின் மேல் ஒன்றாக சேர்ந்து நமது உண்மையான நிலையை அறிய விடாமல் தடுக்கின்றன.

இதை புரிந்து கொள்வது சற்று கடினம்.

என்னை நான் அறிய மாட்டேனா ? என்னைப் பற்றி எனக்குத் தெரியாவிட்டால் வேறு யாருக்குத் தெரியும் என்று நாம் நினைப்போம்.

சிந்திப்போம்.

நாம் சிலவற்றை சரி என்று , மற்றவற்றை தவறென்றும் நினைக்கிறோம். இந்த நினைப்பை எங்கிருந்து வந்தது ? யாரோ சொன்னது, எங்கேயோ படித்தது....

நாம் சிலவற்றை நம்புகிறோம், சிலவற்றை நம்புவதில்லை. ஏன் ?

சில விஷயங்கள் நமக்கு பிடிக்கிறது. சில பிடிப்பதில்லை. ஏன் ?

நாம் சிலவற்றை நியாயம் என்று நினைக்கிறோம். சிலவற்றை அநியாயம்  என்று  நினைக்கிறோம். ஏன் ?

எப்போதோ யாரோ சொன்னது. எங்கேயோ படித்தது. அது தான் உண்மை என்று நினைக்கிறோம்.

அது தான் உண்மையா ?

நாம் பின்பற்றும் மதம் மட்டும்தான் சரியா ? மற்ற மதங்கள் சொல்வதெல்லாம் தவறா ?

சரி, அதுவும் சரியான மதம் என்று ஒத்துக்கொண்டாலும் , இரண்டு மதங்களுக்கும் இடையில் வேறுபாடு இருந்தால் என்ன செய்வது ? இரண்டும் எப்படி  சரியாக இருக்க முடியும் ?

அதையெல்லாம் விட்டு விடுவோம்....

இறைவன் இருக்கிறானா ? இருந்தால் எப்படி இருப்பான் ?

இறைவனைப் பற்றி நமக்கு ஒரு அபிப்பிராயம் இருக்கிறது அல்லவா ? அந்த அபிப்ராயம்  எங்கிருந்து வந்தது ?

படித்தது, கேட்டது ...அவ்வளவுதானே ? வேறு விதமாக படித்து இருந்தால், வேறு விதமாக கேட்டிருந்தால் நம் அபிப்ராயம் மாறி இருக்கும் அல்லவா ? அப்படி என்றால் எதுதான் இறைவன் ?

நம் மனதை பல மாசுகள், குற்றங்கள், குழப்பங்கள் சூழ்ந்து நிற்கின்றன. அவற்றை நீக்கினால் உண்மை தெரியும்.

சிவன் என்பது வேறு எங்கோ இல்லை. ஏதோ இமய மலையில், பனியில் , உட்கார்ந்து இருக்கும் ஆள்  இல்லை. நீங்கள்தான் சிவன்.

"ஹா..நான் எப்படி சிவனாக முடியும் " என்று கேட்பீர்கள்.

நான் சொல்லவில்லை, மணிவாசகர் சொல்கிறார்.

"சித்த மலம் தெளிவித்து சிவமாக்கி" என்கிறார்.

என்னுடைய சித்தத்தில் உள்ள குழப்பங்களை எல்லாம் தெளியவைத்து என்னை சிவமாக்கி விட்டாய் என்கிறார்.

சித்தத்தில் உள்ள குழப்பங்கள் தெளிந்து விட்டால் சீவன் சிவமாகிவிடும்.

சீவன் வேறு சிவன் வேறு அல்ல. ஆனால் இந்த சீவன் தான் வேறு சீவன் வேறு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறது. காரணம், குப்பைகளை தனது சித்தத்தில் அது அடைத்து வைத்துக் கொண்டு இருக்கிறது.

அந்த குப்பைகளுக்கு உள்ளே எங்கோ ஒரு மாணிக்கம் இருக்கிறது. அந்த மாணிக்கம் , தான் ஒரு குப்பை என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. குப்பையை விலக்கினால் ,ஒளி விடும் மாணிக்கம் வெளிப்படும்.

பாடல்

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


பாடல்

முத்தி நெறி = முக்தி அடையும் வழியை

 அறியாத = அறியாத

மூர்க்கரொடு = மூர்க்கர்களோடு

முயல்வேனைப் = சேர்ந்து இருப்பேனை

பத்திநெறி = பக்தி வழியை

அறிவித்துப் = அறியும்படி செய்து

பழவினைகள் = பழைய வினைகள்

பாறும்வண்ணஞ் = அற்றுப் போகும் படி செய்து

சித்தமலம் = சித்தத்தில் உள்ள குற்றங்களை, மாசுகளை, குறைகளை

அறுவித்துச் = விலக்கி

சிவமாக்கி  = என்னையும் சிவமாகச் செய்து

எனையாண்ட = என்னை ஆண்டு கொண்ட

அத்தனெனக் = அத்தனாகிய நீ எனக்கு

அருளியவாறு = அருள் செய்தவாறு

யார்  பெறுவார் = யாரால் அடைய முடியும்

அச்சோவே = அச்சோ (வியப்பு குறி )


சித்தமலம் தெளிவித்து சிவமாகச் செய்ய என்ன செய்ய வேண்டும் ?

இறைவன் நமக்கு ஏன் அந்த மாதிரி செய்ய மாட்டேன் என்கிறார் ? மணிவாசகருக்கு  மட்டும் அருள் செய்தாரே ?

மணிவாசகரே சொல்கிறார் - "யார் பெறுவார் ". யாரால் பெற முடியும் என்று கேட்கிறார். 

பெறுவதற்கு வழியும் சொல்கிறார். 

"முத்தி நெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனை "

முக்தி நெறி அறியாத மூர்கள் நட்பை விட வேண்டும். மூர்க்கர்கள் என்றால் யார் ?

பிடிவாதம் பிடிப்பவர்கள். அடம் பிடிப்பவர்கள். தான் சொல்வதே சரி என்று சாதிப்பவர்கள். அவர்களை மூர்க்கர்கள் என்று சொல்லுவார்கள். 

எதிலும் திறந்த மனம் வேண்டும். உண்மையை தேடுகின்ற தாகம் வேண்டும். ஆராய்கின்ற மன பக்குவம் வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும், நான் சொல்வதே உண்மை, நான் அறிந்ததே சத்யம் என்ற அடம் பிடிக்கக் கூடாது. 

"நெஞ்சக் கல்லு நெகிழ வேண்டும்"

"பக்தி நெறி அறிவித்து"

மூர்க்கர்களை விட்டு விலகிய பின், பக்தி நெறியில் செல்ல வேண்டும். 

மூர்க்கர்களை விட்டு விட்டு, நல்லவர்களை பின் பற்ற வேண்டும். 

அப்படி செய்தால் , பழைய வினைகள் நம்மை விட்டு விலகும். 

அது விலகும் போது சித்த மலம் விலகும். 

சித்த மலம் விலகினால், சிவமாவோம். 

திருத் தொண்டர் தொகை பாடிய சுந்தரர் , அந்த பட்டியலில் மணி வாசகரை சேர்க்கவில்லை. 

ஏன் ? மணிவாசகர் திருத்தொண்டர் இல்லையா ?

இல்லை. 

அவர் சிவமாகவே மாறி விட்டார். அவர் தொண்டர் இல்லை. 

"சிவமாக்கி எனை ஆண்ட" என்கிறார் மணிவாசகர்.

உரையை விட்டு விடுங்கள். பாடலை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். 

நேரே உங்கள் மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும். 




Wednesday, October 18, 2017

திருக்குறள் - பயனில சொல்லாமை

திருக்குறள் - பயனில சொல்லாமை 


நல்ல பேர் வாங்குவது, செல்வம் சேர்ப்பது என்பதெல்லாம் மிக கடினமான செயல்.

ரொம்ப உழைக்க  வேண்டும்.  கடுமையாக உழைத்தால்தான் நல்ல பெயரும், புகழும், செல்வமும் கிடைக்கும். அதுவும் ஏதோ ஒரு சில நாளிலோ அல்லது மாதத்திலோ வந்து விடாது. ஆண்டு பல ஆகும்.

அப்படி சேர்த்த  பெயரையும்,புகழையும் கட்டி  காப்பது அதை விட கடினம்.

ஒரு நொடியில் புகழ் போய்விடும், ஒரு தவறான முடிவில் செல்வம் போய் விடும்.

நல்லவர்கள், பண்புள்ளவர்கள், இனியவர்கள் தாங்கள் சிரமப் பட்டு சேர்த்த பேரையும் , செல்வத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஒன்றே ஒன்று நிச்சயமாக செய்யக் கூடாது

அது என்ன ?

பயன் இல்லாத சொற்களை ஒரு போதும் பேசக் கூடாது

பயனில்லாத சொற்களை பேசினால் சீர்மையும் சிறப்பும் போய் விடும் என்கிறார்  வள்ளுவர் ...

பாடல்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்


பொருள்

சீர்மை = புகழ், நல்ல பெயர்

சிறப்பொடு = பெற்ற சிறப்புகள் (பட்டம், பதவி, செல்வம், )

நீங்கும் = ஒருவனை விட்டு நீங்கும்

பயன்இல = பயன் இல்லாத

நீர்மை = நீர் போல

உடையார் = உயர்ந்த குணம் உடையவர்கள்

சொலின் = சொன்னால்

எனவே, நீங்க சேர்த்து வைத்த நல்ல பெயர், புகழ், செல்வம் , பட்டம் , பதவி , செல்வாக்கு இவற்றை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால், பயன் இல்லாத சொற்களை சொல்லாமல் இருங்கள்.

பயன் இல்லாத சொல் என்றால் என்ன ?

மற்றவர்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பயன் இல்லாத சொல் என்று உரை எழுதுகிறார்  பரிமேலழகர்.


நாம் எதையாவது சொல்ல வேண்டும் என்றால், அது கேட்பவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில்   பயன் உள்ளதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பேசாமல் இருப்பது நல்லது.

யோசித்துப் பார்ப்போம்.

நாம் பேசுவதில் எத்தனை மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது என்று ?

அரட்டை, chat , "சும்மா தான் கூப்பிட்டேன்", whatsapp , facebook comments இதெல்லாம் மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் நன்மை பயக்கிறது என்று சிந்திப்போம்.

அதே போல, மற்றவர்கள் நம்மிடம் பேசும் போது , இந்த பேச்சை கேட்பதால் நமக்கு என்ன பலன் என்று யோசிக்க வேண்டும்.

டிவி சீரியல்கள், விவாத மேடைகள், பட்டி மன்றங்கள், போன்றவற்றை கேட்கும் போது , சிந்திக்க வேண்டும்  இதனால் பயன் உண்டா என்று.

பயனுள்ளவற்றை பேச வேண்டும் என்றால் அப்படிப்பட்ட விஷயங்களை நாம் முதலில்  அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா ? அதற்கு நிறைய படிக்க வேண்டும், படித்தவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவற்றை நம் அனுபவத்தோடு சேர்த்து பார்க்க வேண்டும்.

அப்போது நமது அறிவின் எல்லை விரியும். விரிந்த அறிவு பயன் உள்ள சொற்களை தரும்.

பேச்சை குறைப்போம்.

தேவை இல்லாதவற்றை கேட்பதை தவிர்ப்போம்.

நல்லதை படிப்போம், கேட்போம்.

நல்லவற்றை பேசுவோம்.

இது நண்பர்கள் மத்தியில் மட்டும் அல்ல. வீட்டில், மற்ற உறவுகளின் மத்தியில், அலுவலகத்தில், எல்லா இடத்திலும் கடை பிடிக்க வேண்டிய ஒன்று.

ஏழு வார்த்தையில் எவ்வளவு  விஷயம்.

சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_18.html

Monday, October 16, 2017

திருக்குறள் - கூடா நட்பு

திருக்குறள் - கூடா நட்பு 


உலகிலேயே சிறந்த உறவு நட்புதான்.

அது எவ்வளவு சிறந்ததோ அவ்வளவு ஆபாத்தானதும் கூட.

சரியான நண்பர்கள் நமது வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டு செல்ல உதவுவார்கள்.

நண்பர்களை தவறாக தேர்ந்தெடுத்து விட்டால், அது போன்ற ஆபத்தும் இல்லை.

அதை வள்ளுவர் கூடா நட்பு என்கிறார். அதற்கு 10 பாடல் எழுதி இருக்கிறார் என்றால் அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள  முடியும்.

தவறான நண்பர்கள், நம்மை தீய வழியில் கொண்டு சென்று தாங்க முடியாத துன்பத்தில் அழுத்தி விடுவார்கள்.

"நீங்க பணத்தை மட்டும் போடுங்கள், உழைப்பு என்னது. உங்களுக்கு இலாபத்தில் பங்கு " என்று ஆசை காட்டி நம் பணத்தை கவர்ந்து கொள்வார்கள்.

"இதுல போடுங்க, உங்க பணம் ஒண்ணுக்கு இரண்டாகும் " என்று தேவையில்லாத இடங்களில் நமது பணத்தை முதலீடு செய்ய வைத்து நம்மை நட்டத்தில் கொண்டு செலுத்தி விடுவார்கள்.

இவர்கள் எல்லாம் பார்க்க நல்லவர்கள் போலவும், நண்பர்கள் போலவும்  இருப்பார்கள்.

நம்ம நல்லதுக்குத்தானே சொல்கிறார்கள் என்று நாம் நினைப்போம்.

அந்த மாதிரி ஆள்களை "பட்டடை" போன்றவர்கள் என்கிறார் வள்ளுவர்.

பட்டடை என்றால் என்ன தெரியுமா ?

இரும்பை சூடாக்கி அடிக்க அந்த சூடான இரும்பின் கீழ் ஒரு இரும்பு பலகையை வைத்து இருப்பார்கள். அதன் மேல் வைத்துதான் இரும்பை அடிப்பார்கள். அந்த அடிப் பலகைக்கு பெயர் பட்டடை.

அந்த பட்டடை இருக்கிறதே, வெளியே இருந்து பார்க்க அது ஏதோ அந்த சூடான இரும்பை தங்குவது போல இருக்கும். ஆனால், உண்மையில், அந்த இரும்புப் பலகையால் தான் , அந்த சூடான இரும்புக்கு எல்லா அடியும்  விழுகிறது. அந்த பட்டடை இல்லாவிட்டால், சூடான இரும்பு துண்டுக்கு ஒரு அடியும் விழுந்திருக்காது.

அது போல சில பேர் நம் வாழ்வில் நமக்கு நல்லது செய்பவர்கள் போல இருப்பார்கள். ஆனால், அவர்களால்தான் நமக்கு அனைத்து துன்பங்களும்  வரும்.

பாடல்

சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை 
நேரா நிரந்தவர் நட்பு.

பொருள்

சீரிடங் காணின் = சரியான இடம் வரும்போது.

எறிதற்குப் = விலக்குவதற்கு

பட்டடை = பட்டடை  போல

நேரா = மனதோடு ஒன்றாதவர்

நிரந்தவர் நட்பு = கூடியவர்கள் நட்பு.


அந்த மாதிரி ஆட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதவி செய்கிறேன் பேர்வழி  இல்லாத துன்பத்தில் எல்லாம் நம்மை ஆழ்த்தி விடுவார்கள். 

சிந்தித்துப் பாருங்கள். உங்கள் துன்பங்கள் எங்கிருந்து வந்தன என்று. 

உங்கள் வாழ்வில் யாரேனும் அது போன்ற நண்பர்கள் இருந்தால், அவர்களை  விட்டு விலகிச் செல்லுங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_16.html


Wednesday, October 11, 2017

ஒளவையார் பாடல் - மரம் போல் பொறுமை

ஒளவையார் பாடல் - மரம் போல் பொறுமை 


ஒரு வீட்டில் , சில சமயம் ஒரு நபர் ஏதோ ஒரு வழியில் தவறாகப் போய் விடலாம்.

வீட்டுக்கு அடங்காத பிள்ளை.

எடுத்தெறிந்து பேசும் மருமகள்.

மரியாதை இல்லாத மருமகன்.

ஒட்டாத சம்பந்தி.

கொடுமைக்கார மாமியார்.

பொறுப்பிலாத கணவன்.

ஊதாரி மனைவி

என்று யாரோ , எங்கேயோ தடம் பிரண்டு போய் விடலாம்.

அவர்களை என்ன செய்வது ? முடிந்தால் திருத்தலாம்.

இல்லை என்றால் ?

கை கழுவி விடலாமா ?

கூடாது என்கிறார் ஒளவையார்.

சகித்துத் தான் போக வேண்டும்.

எத்தனை காலம் என்று கேட்டால், ஆயுள் காலம் முழுவதும் சகிக்கக்தான் வேண்டும்.

வீட்டில் ஒருவர் சரியில்லை என்றால், வெளியில் சொல்லக் கூடாது. தாங்கிக் கொள்ளத்தான்  வேண்டும்.

விடாது தீமை செய்தாலும், அப்படி தீமை செய்பவர்களை கடைசிவரை வெறுக்காமல் காப்பார்கள் ஆன்றோர். தன்னை வெட்டுபவனுக்கும் கடைசிவரை நிழல் தரும் மரத்தைப் போல.

பாடல்

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்


பொருள்

சாந்தனையும் = சாகும் வரை

தீயனவே  = தீமைகளையே

செய்திடினும் = செய்தாலும்

தாம் = பெரியவர்கள்

அவரை = அந்த தீமை செய்பவர்களை

ஆந்தனையும் = ஆகும் வரை, அதாவது முடிந்தவரை ,

காப்பர்  = காவல் செய்வார்கள்

அறிவுடையோர் = அறிவுடையவர்கள்

மாந்தர் = மக்கள்

குறைக்கும் = தன்னை குறை செய்யும் (வெட்டும்)

தனையும் = செய்தாலும்

குளிர் = குளிர்ச்சியான

நிழலைத் தந்து = நிழலை தந்து

மறைக்குமாம் = வெயிலில் இருந்து மறைக்கும்

கண்டீர் = கண்டு கொள்ளுங்கள்

மரம் = மரம்

துன்பம் செய்தாலும், தவறு செய்தாலும்,  சொன்ன பேச்சு கேட்கா விட்டாலும், ஒத்துப் போக வில்லை என்றாலும்....சகித்து, அவர்களுக்கும் நல்லதே செய்யுங்கள்.

குடும்பம் நன்றாக இருக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_56.html



Tuesday, October 10, 2017

சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்து

சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்து 


எப்போதுமே நல்லதையே பேச வேண்டும். மங்களகரமான சொற்களையே பயன் படுத்த வேண்டும் என்று நம் முன்னவர்கள் ஒரு விதியாகவே செய்து வைத்து இருந்தார்கள்.

அமங்கல சொற்களை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்கள்.

சொற்களுக்கு வலிமை உண்டு. அவை சொன்னது போல பலித்து விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

இந்த நம்பிக்கை நமது இலக்கியங்களில் பரவிக் கிடக்கிறது.

சிலப்பதிகாரத்தில், கோவலனுக்கும், கண்ணகிக்கும் திருமணம் நடக்கிறது. ஊரே திரண்டு வந்திருக்கிறது. எல்லோரும் மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

பாடல்


விரையினர், மலரினர், விளங்கு மேனியர், 
உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர்,
சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,
ஏந்துஇள முலையினர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை
முளைக் குடம் நிரையினர், முகிழ்த்த மூரலர்,
போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார், 
‘காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்,
தீது அறுக!’ என ஏத்தி, சில் மலர் கொடு தூவி,
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்-’


பொருள்

விரையினர் = மணம் பொருந்திய பெண்கள். பெண்ணுக்கு ஒரு மணம் உண்டு.

இறைவன் திருவடிக்கு மணம் உண்டு என்கிறார் மணிவாசகர்

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே.


மலரினர் = மலரினை கையில் கொண்டவர்கள்

விளங்கு மேனியர் = விளக்கு போல ஒளி விடும் மேனி உடைய பெண்கள்

உரையினர் = நன்கு தெளிவாக பேசுபவர்கள்

பாட்டினர் = இனிமையாக பாடுபவர்கள்

ஒசிந்த நோக்கினர் = சாய்ந்த கண்ணால் பார்ப்பவர்கள்

(சைட் அடிப்பவர்கள் என்று நாசூக்காக சொல்கிறார் இளங்கோ அடிகள்)

சாந்தினர் = சந்தனம் போன்ற சாந்தினை பூசியவர்கள்

புகையினர் = சாம்பிராணி போன்ற நறுமண புகை போட்டு கூந்தலையும், உடலையும்  மணமாக வைத்து இருப்பவர்கள்

தயங்கு கோதையர் = தயங்கி தயங்கி மென்மையாக நடக்கும் பெண்கள்

ஏந்துஇள முலையினர் = உயர்ந்து நிற்கும் இளமையான மார்பகங்களை உடையவர்கள்

இடித்த சுண்ணத்தர் = பௌடர் பூசி இருப்பவர்கள். சுண்ணம் என்றால் பொடி. வாசனைப் பொடி போட்டு இருப்பார்கள். அதைத்தான் நான் பௌடர் என்று சொன்னேன்.

திருப்பொற்சுண்ணம் என்று பத்து பாதல் எழுதி இருக்கிறார் மணிவாசகர்.

பொடி இடிக்கும் போது இறைவன் நாமத்தை சொல்லிக் கொண்டே பெண்கள் இடிப்பார்களாம்.

முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமக ளோடுபல் லாண்டி சைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.

என்பது திருவாசகம்


சுண்ணம் இடிப்பார் தம் சுவை மிகுந்த பண்களிலும் மனதை பறி கொடுத்தேன் பாவியேன் என்பார் பாரதியார்


ஏற்றநீர் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்
பொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒளியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம் சுவை மிகுந்த பண்களிலும்
பண்ணை மடலார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்’’

என்பது  பாரதி பாடிய குயில் பாட்டு


விளக்கினர் = மங்கள விளக்கை கையில் ஏந்திய பெண்கள்

கலத்தினர் = பால், நெய் , அரிசி போன்ற மங்கள பொருள்களை குடத்தில் ஏந்தி வரும் பெண்கள்

விரிந்த பாலிகை முளைக் குடம் நிரையினர் = முளை குடம் கையில் ஏந்திய பெண்கள்

முகிழ்த்த மூரலர் = புன்முறுவல் பூத்த பெண்கள்

போதொடு = மலரோடு

விரி கூந்தல் = விரித்த கூந்தலை உடைய பெண்கள்

 பொலன் நறுங் கொடி அன்னார் = அழகிய பொன்னால் செய்த கொடியை போன்ற பெண்கள் வாழ்த்துகிறார்கள். எப்படி ?

‘காதலற் பிரியாமல் = காதலர்கள் பிரியாமல்

கவவுக் கை ஞெகிழாமல் = பிடித்த கை விட்டு விடாமல்

தீது அறுக!’ = தீமை ஏதும் இன்றி

என ஏத்தி = என புகழ்ந்து, வாழ்த்தி

சில் மலர் கொடு தூவி = சிறந்த மலர்களைத் தூவி

அம் கண் உலகின் = அந்த உலகில் (வானுலகில்)

அருந்ததி அன்னாளை = அருந்ததி போன்று

மங்கல நல் அமளி ஏற்றினார்- = மங்கலமான ஆரவாரமான திருமணச் சடங்கை செய்து முடித்தனர்.

திருமண வீட்டை கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் இளங்கோ அடிகள்.

ஆனால், கூர்ந்து கவனித்தால் தெரியும், எவ்வளவு அமங்கலமான வாழ்த்து இது என்று.  நினைத்து எழுதவில்லை. வந்து விழுகிறது வார்த்தை.

என்ன அமங்கலம் ?

‘காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்’ 

இது என்ன வாழ்த்து ?

நீங்கள் ஒன்றாக இருங்கள் என்று சொல்லலாம். "பிரியாமல் இருங்கள்" என்று வாழ்த்தினார்கள். பிரிவு என்ற சொல் வந்து விழுகிறது.

"பிடித்த கை நெகிழ்ந்து விடாமல்" ...பின்னால் கோவலன் கண்ணகியை விட்டு விட்டு மாதவியிடம் போகப் போகிறான் என்று கட்டியம் கூறுவதைப் போல , ஒரு எச்சரிக்கை போல அமைகிறது இந்த வாழ்த்து.

", தீது அறுக!"


தீமை இல்லாமல்  இருங்கள் என்று வாழ்த்தினார்கள். நல்லா இருங்கள் என்று சொல்வது  ஒரு வழி. தீமை இல்லாமல் இருங்கள் என்று சொல்வது இன்னொரு வழி.

இது எப்படி இருக்கிறது என்றால்

"மண மக்களாகிய நீங்கள் வண்டியில் அடி படாமல், கை கால் உடைத்துக் கொள்ளாமல்,  எய்ட்ஸ் போன்ற நோய் வராமல்,  கடன் வாங்கி அல்லல் படாமல் , அற்ப ஆயுளில் மண்டையைப் போடாமல் " வாழுங்கள் என்று வாழ்த்துவது போல இருக்கிறது.

அர்த்தம் என்னவோ நல்லதுதான். இருந்தும் வார்த்தைகள் மங்கல வார்த்தைகள் இல்லை.

கோவலன் கண்ணகி வாழ்க்கை எப்படி இருந்தது என்று தெரியும் தானே.

எனவே எப்போதும் நல்ல, உயர்ந்த சொற்களையே பேசி பழக வேண்டும். பிள்ளைகளுக்கும்  சொல்லித் தாருங்கள்.

கோபத்தில் திட்டினாலும் அமங்கல சொற்களை சொல்லவே கூடாது.

பல திருமண அழைப்பிதழ்களில் , தேவாரத்தில் இருந்து ஒரு பாடல் எடுத்து போடுவார்கள். அதை கூட தவறு என்று சொல்லும் பெரியவர்களும் இருக்கிறார்கள்.  அதில் ஒரு அமங்கல சொல் இருக்கிறது என்று அதை தவிர்க்கும் படி கூறுவார்கள்.

அது என்ன பாடல் தெரியுமா ?


http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_10.html