Tuesday, February 13, 2018

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர்


குழந்தை முதன் முதலாக எழுந்து நடை பயிலும் போது, தத்தி தடுமாறும். அருகில் தந்தை நிற்பார். இருந்தும் பிடிக்க மாட்டார். பிள்ளை தவிக்கும்.  அப்பா எங்கேயோ ரொம்ப தள்ளி இருப்பது போலத் தோன்றும். நான் இவ்வளவு துன்பப்         பிள்ளை சில சமயம் கீழே கூட விழும். கீழே விழுந்து தலை அடி போகிறது என்றால் தாவி வந்து தடுத்து விடுவார். குழந்தை நினைக்கும் , இந்த அப்பா இருந்து என்ன பிரயோஜனம், நான் இவ்வளவு துன்பப் படும்போது உதவி செய்யாமல் கல்லுளி மங்கன் மாதிரி நிற்கிறாரே. அவருக்கு என் மேல் பாசமே இல்லையா என்று?

தந்தைக்குத் தெரியும். குழந்தை தடுமாறுகிறது. தள்ளாடுகிறது என்று. எப்போதும் குழந்தையின் கையை பிடித்துக் கொண்டே இருந்தால் , ஒரு காலும் பிள்ளை சுயமாக நடக்காது. தன் காலில் ஒரு போதும் அது நிற்காது. தானே எழுந்து, தத்தி தடுமாறி விழுந்து எழுந்தரித்தால் , பின் அது தானே நடக்க ஆரம்பிக்கும். ஓடும், தாவும். விளையாடும்.

முதலில் அந்த கீழே விழுந்து சின்ன சின்ன அடி பட்டால்தான் , பின்னாளில் தைரியமாக , சொந்த காலில் நிற்க முடியும்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார் சொல்கிறார், நாம் துன்பப் படும் போது இறைவன் எங்கோ இருப்பது போலத் தோன்றும். இருந்தாலும், கடைசியில் நமக்கு பக்கத்தில் தான் இவ்வளவு நாளும் இருந்தான் என்று தோன்றும்.

பாடல்

அடியாராய்வாழ்மி னறிவிலாப்பேய்காள
செடியார்வினையனைத்துந்தீரு - முடிவிற்
செழுந்தூரத்தன்னெனினுஞ்செங்கண்மாலெங்க
ளழுந்தூரத்தன்னணியனாம்.


சீர் பிரித்த பின் 

அடியாராய் வாழ்மின் அறிவில்லா பேய்காள் 
செட்டியார் வினை அனைத்தும் தீரும் - முடிவில் 
செழுந் தூரத்தன் எனினும் செங்கண் மால் எங்கள் 
எழுந்தூரத்து அணியனாம் 

பொருள் 

அடியாராய் = அடியவராய் 

வாழ்மின் = வாழுங்கள் 

அறிவில்லா =  அறிவில்லா 

பேய்காள் = பேய் போன்றவர்களே 
செடியார் = செடி போன்ற 

வினை அனைத்தும் தீரும் = செய்த வினைகள் அனைத்தும் தீரும் 

முடிவில் = இறுதியில் 
செழுந் தூரத்தன்  = ரொம்ப தூரத்தில் 

எனினும் = இருந்தாலும் 

செங்கண் மால் = சிவந்த கண்களை உடைய திருமால் 

எங்கள் = எங்கள் 

எழுந்தூரத்து = திருவழுந்தூர்  (தேரழுந்தூர்)  என்ற இடத்தில் கோயில் கொண்டிருக்கும் அவன் 

அணியனாம் = அருகில் இருப்பவனாம் 

அவன் எங்கேயோ இல்லை. நமக்கு மிக அருகிலேயே இருக்கிறான். நாம் தான் , இருக்கும் இடத்தை விட்டு விட்டு  எங்கெல்லாமோ தேடி அலைகிறோம்.

 வினைகள் உங்களைப் படுத்துகிறதா ? வாழ்க்கை உங்களை வாட்டுகிறதா ? கவலைப் படாதீர்கள். எங்கேயோ இருப்பது போலத் தோன்றும் திருமால், எங்கேயோ, பாற்கடலில், வைகுந்தத்தில் இல்லை, உங்களுக்கு பக்கத்திலேயே இருக்கிறான்.  என்கிறான். 

இந்த தேரழுந்தூர் எங்கே இருக்கிறது ? அதன் பெயர் காரணம் என்ன? அதன் மற்ற சிறப்புகள் என்ன ?

நாளை பார்ப்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_13.html

Monday, February 12, 2018

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - ஐவாய் அரவம்

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - ஐவாய் அரவம் 


நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆசைகள் நம்மிடம் இருந்து எழுகின்றன. அவற்றை நாம் அடக்க வேண்டும். ஆசையை தவிர்க்க வேண்டும் என்று.

உண்மையில் அப்படியா நடக்கிறது ? நாம் பாட்டுக்கு சிவனேனு ஒரு ஓரத்தில் இருப்போம்.

டிவி இல் நல்ல கார் ஒன்றின் விளம்பரம் போகும். அடடா நமக்கு அந்த மாதிரி ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறோம். ஆசை எங்கிருந்து வந்தது ? டீ வி யில் இருந்து நமக்குள் வந்தது.

அந்த பொண்ணு கட்டி இருக்கிற புடவை மாதிரி, அந்த நகை மாதிரி, அந்த மாதிரி வீடு, அந்த மாதிரி உடல் அமைப்பு, என்று வெளி உலகம் நமக்குள் ஆசையை தூண்டுகின்றது. நம்மால் அவற்றை கட்டுப் படுத்த முடியுமா ? ஒவ்வொரு புலன்கள் வழியாகவும் , பாம்பு , அதன் புற்றினுள் நுழைவது மாதிரி சத்தம் இல்லாமல் நுழைந்து விடுகின்றன. நுழைந்த பாம்பு சும்மா இருக்குமா ? கடித்து விஷம் தலைக்கு ஏறி துன்பம் தரும் அல்லவா அது போல துன்பப் படுகிறேன் என்கிறார் மணிவாசகர். ஒரு தலை பாம்பு அல்ல, ஐந்து தலை பாம்பாம். ஐந்து புலன்கள் வழியாகவும் உள்ளே நுழைந்து விடுகின்றன என்கிறார்.

அந்த ஐந்து தலை நாகத்திடம் இருந்து என்னை காப்பாற்று. கை விட்டு விடாதே என்று கதறுகிறார். எனக்கு உன்னை வழிபாடு செய்யக் கூடத் தெரியாது என்கிறார்

பாடல்



பரம்பர னேநின் பழஅடி யாரொடும்
    என்படிறு
விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென்
    முயற்கறையின்
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவிஐ
    வாயரவம்
பொரும்பெ ருமான்வினை யேன்மனம் அஞ்சிப்
    பொதும்புறவே 

பொருள்


பரம்பரனே = பரம் என்றால் உயர்ந்த. பரம பதம். பரம்பரை. பரம் + பரம்பரனே. எல்லாவற்றிற்கு உயர்ந்தவனே

நின் = உன்னுடைய

பழஅடி யாரொடும் = பழைய அடியாரோடு கூட

என்படிறு = படிறு என்றால் குற்றம். என் குறையுள்ள, குற்றம் உள்ள பக்தியையும்

விரும்பும் = விரும்பி ஏற்றுக் கொள்ளும்

அரனே = பாம்பை அணிந்தவனே

விட் டிடுதிகண் டாய் = விட்டு விடாதே

முயற்கறையின் = முயலின் மேல் உள்ள கறை போல

அரும்பு = அரும்பு போன்ற பிறை நிலவையும்அ

அர  =  அரவம்

நேர்வைத் தணிந்தாய் = சமமாக பாவித்து அணிந்தாய்

 பிறவி = பிறவியில்

ஐவாயரவம் = ஐந்து வாயுள்ள அரவம்

பொரும்  - என்னோடு சண்டை செய்யும்

பெருமான் = பெருமானே

என் = என்னுடைய

மனம் = மனம்

அஞ்சி = அச்சம் கொண்டு

பொதும்புறவே = புகலிடம் தேடி அலைகிறதே


ஆசை, ஐந்து தலை நாகம் போல படம் எடுத்து வந்து ஆடுகிறது. பயமாக இருக்கிறது என்கிறார்.


உன்னை வேண்டினால் நீ ஏற்றுக் கொள்வாய். ஆனால், எனக்கோ எப்படி பக்தி செய்வது என்றே தெரியவில்லை.

இருந்தும், உன் பழைய அடியார்களின் பக்தியை நீ எப்படி ஏற்றுக் கொள்வாயோ அப்படியே என் பக்தியையும் ஏற்றுக் கொள் என்கிறார்.

நிலவில் கறை இருக்கும். பார்த்து இருப்பீர்கள். அது எப்படி இருக்கிறதாம் ? வெள்ளை வெளேர் என்று இருக்கும் முயலின் உடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக  சில அழுக்குகள் இருக்குமே அது போல இருக்கிறதாம்.


என்ன சொல்ல வருகிறார்.

கறை உள்ள சந்திரனை உன் தலை மேல் வைத்துக் கொண்டிருக்கிறாய். குறைகளை மன்னித்து  ஏற்றுக் கொள்வது உன் இயல்பு. என் குறையையும் மன்னித்து ஏற்றுக் கொள் என்று சொல்கிறார்.


ஆசை , பாம்பைப் போல வருகிறது. எனக்கு பயமாக இருக்கிறது.. ஆனால், நீதான்  பாம்பை கழுத்தில் சுத்தி வைத்திருக்கிறாயே. உனக்கு என்ன பயம். இந்த ஆசை என்ற பாம்பிடம் இருந்து என்னை காப்பாற்று என்கிறார்.

ஆசை வரும் போது பயப்பட வேண்டும்.

இது நம்மை பின்னாளில் என்னவெல்லாம் சிக்கலில் இழுத்து விடப் போகிறதோ என்று பதற வேண்டும்.

வீடு வேண்டும் என்று ஆசைப் பட்டால், எவ்வளவு துன்பங்களை சகிக்க வேண்டி இருக்கும் ?


ஆசையால் அழியாதவர் யார் இருக்கிறார்கள். ஆசை மனதில் எழும் போது , ஐந்து தலை நாகம் படம் எடுப்பதாக உணர்ந்தால் அந்த ஆசையை எப்படி கையாள வேண்டும் என்று நாம் அறிவோம்.

மணிவாசகம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_12.html






Friday, February 9, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - நஞ்சு நுகர்வாரை

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - நஞ்சு நுகர்வாரை 


உறவினர்கள் என்றால் ஏதோ கல்யாணம் , வீடு பால் காய்ச்சுவது, போன்ற விழாக்களுக்கு போவது, பரிசு கொடுப்பது, உண்பது, புகை படம் எடுத்துக் கொள்வது என்பதோடு நிற்கிறது.

இப்போது கொஞ்சம் மேலே போய் whatsapp , facebook என்று தொடர்பு கொள்கிறார்கள்.

உறவு, நட்பு என்பதெல்லாம் வேறு நிலையில் வைத்து பார்க்கப் பட வேண்டியவை.

இராவணன் தவறு செய்ய நினைக்கிறான் என்று அறிந்த மாரீசன், அவனுக்கு நல்ல அறிவுரைகள் கூறுகிறான். நமக்கு என்ன என்று இருந்து விடவில்லை.

அது ஒரு செய்தி.

இன்னோர் செய்தி என்ன என்றால், ஒருவன் தவறு செய்தால், அது அவனோடு முடியும் கதை அல்ல. அவன் குடும்பத்தையும், உறவினர்களையும் பாதிக்கும்.

இப்போது செய்திகளில் பார்க்கிரோம். ஒரு பெரிய நிலையில் உள்ள ஒருவர், தவறு செய்து விடுகிறார். அவரை கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். அவரின் மனைவி, பிள்ளைகள் எவ்வளவு துன்பப் படுவார்கள். அக்கம் பக்கம் பேச முடியுமா ? தலை காட்ட முடியுமா ? அவரின் பிள்ளைகள் பள்ளிக் கூடம் போனால், அவர்களின் நண்பர்கள் பரிகாசம் செய்ய மாட்டார்களா ?

"அவன் பிள்ளை தான நீ, அப்படித்தான் செய்வ " என்று செய்யாத தவறுக்கும் பழி ஏற்க வேண்டி இருக்கும்.

மாரீசன் சொல்கிறான்

"இராவணா , நீ மட்டும் அல்ல , உன் உறவினர்கள் எல்லோரும் அழிந்து போவார்கள். நீ சொல்வதைக் கேட்டு என் மனம் பட படக்கிறது . விஷத்தை ஒருவர் குடிக்கும் போது அருகில் நின்று, நல்லது தான் குடியுங்கள் என்று யாராவது சொல்வார்களா "

என்று சொல்கிறான்.

பாடல்

"உஞ்சு பிழையாய் உறவினோடும்" 
     என உன்னா, 
நெஞ்சு பறைபோதும்; அது 
     நீ நினையகில்லாய்; 
அஞ்சும் எனது ஆர் உயிர்; அறிந்து 
     அருகு நின்றார், 
நஞ்சு நுகர்வாரை, "இது நன்று" 
     எனலும் நன்றோ?

பொருள்

"உஞ்சு பிழையாய் = தப்பிப் பிழைக்க மாட்டாய். உய்தல் , உய்து என்பது உஞ்சு என்று ஆனது.

உறவினோடும் = நீ மட்டும் அல்ல, உன் உறவினர்களும்

என உன்னா = என்று நினைக்க மாட்டாய்

நெஞ்சு பறைபோதும் = என் மனம் பறை அடிப்பது போல அடித்துக் கொள்கிறது

அது நீ நினையகில்லாய் = அதைப் பற்றி நீ நினைக்க மாட்டேன் என்கிறாய்

அஞ்சும் எனது ஆர் உயிர் = என் உயிர் அஞ்சுகிறது

அறிந்து = அறிந்து கொண்ட பின்

அருகு நின்றார் =  அருகில் நிற்பவர்கள்

நஞ்சு நுகர்வாரை = நஞ்சை அருந்துபவர்களை

 "இது நன்று" = இது நல்லது என்று

  எனலும் நன்றோ? = என்று நினைப்பதும் சரி தானா ?

பிறர் பொருளை நஞ்சாக நினைக்க வேண்டும்.

ஊரை கொள்ளை அடிப்பவன், திருடுபவன், எல்லோரும் மற்றவர்கள் பொருளை அமுதாக அல்லவா  நினைக்கிறார்கள்.

அது நஞ்சு என்றால் தொடுவார்களா ?

தொட்டவன் இராவணன்.

இராமாயணம் கதை அல்ல. வாழ்க்கையை சொல்லித்தரும் அறம்.

 நான் அங்கங்கே சில பாடல்களை விட்டு விட்டுச் செல்கிறேன்.

நேரம் கிடைப்பின் அவற்றை எல்லாம் தேடிப் பிடித்து படியுங்கள்.

Thursday, February 8, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - நிருதர் தீவினை அது அன்றோ ?

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - நிருதர் தீவினை அது அன்றோ ?


நமக்கு துன்பம் வரும் போது, யாரை எல்லாமோ நொந்து கொள்கிறோம்.

அரசாங்கம் சரி இல்லை, மருத்துவர் சரி இல்லை, அலுவலக நிர்வாக முறை சரி இல்லை, மக்கள் யாரும் சரி இல்லை, ஒருத்தருக்கும் பொறுப்பு என்பதே இல்லை என்று யார் யாரையோ நொந்து கொள்கிறோம்.

ஒன்றும் கிடைக்காவிட்டால் ஆண்டவனை நொந்து கொள்கிறோம். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாயே, நீயெல்லாம் ஒரு கடவுளா என்று இறைவன் மேல் கோபம் கொள்கிறோம்.

நம் தவறு என்ன என்று யோசிப்பதே இல்லை.

நமது எல்லா துன்பங்களுக்கும் காரணம், எங்கோ எப்போதோ நாம் செய்த தவறு என்று உணரும் அறிவு வேண்டும்.

நம் சோம்பேறித்தனம், நம் அறிவீனம், நம் அறம் பிறழ்ந்த செயல்கள், நம் பொறாமை, கோபம், காமம் என்று எத்தனையோ குறைகள் , தவறுகள் நம்மிடம் இருக்கும். அதில் இருந்துதான் நமது ஒவ்வொரு பிரச்சனையும் பிறக்கின்றன.

மாரீசன் சொல்கிறான்

"உனக்கு சொந்த அறிவும் இல்லை. சொற் புத்தியும் இல்லை. இராமன் போருக்கு செல்ல மாலை எடுத்து அணியுமுன் அவன் எதிரிகள் இறந்து போவார்கள். இந்த சீதையை மானிடப் பெண் என்றா நினைக்கிறாய். அவள் அரக்கர்கள் செய்த பாவத்தின் வடிவம் "

பாடல்


'யாதும் அறியாய்; உரை கொளாய்; 
     இகல் இராமன்  
கோதை புனையாமுன், உயிர் 
     கொள்ளைபடும் அன்றே; 
பேதை மதியால், "இஃது ஓர் பெண் 
     உருவம்" என்றாய்; 
சீதை உருவோ? நிருதர் தீவினை 
     அது அன்றோ?

பொருள்


'யாதும் அறியாய் = நீ ஒன்றையும் அறிய மாட்டாய்

உரை கொளாய் = நல்லது சொன்னாலும் கேட்க மாட்டாய்

இகல் இராமன் = பகை கொண்ட இராமன்

கோதை = மாலை

புனையாமுன் = புனைவதற்கு முன் (போருக்கு போவதற்கு முன் மாலை அணிவது வழக்கம்)

உயிர் கொள்ளைபடும் அன்றே; = பகைவர்கள் உயிர் போய் விடும்

பேதை மதியால், = உன் அறிவீனத்தால்

 "இஃது ஓர் பெண் உருவம்" என்றாய்;  = சீதையை ஒரு பெண் உருவம் என்று சொல்கிறாய்

சீதை உருவோ? = சீதை ஒரு உருவமா ?

நிருதர் = அரக்கர்கள்

 தீவினை = செய்த தீவினை

அது அன்றோ? = அது அல்லவா ?

சிலர் செய்த பாவம், சாலை ஒர புளிய மரமாய் நிற்கும். காரில் வேகமாக சென்று அதில்   முட்டி சாவார்கள். அது புளிய மரம் இல்லை. அவன் செய்த வினை.

சிலருக்கு அலுவலக அதிகாரியாக, சிலருக்கு கொடுமைக்கார மாமியாராக,  சிலருக்கு ஆலை எரி போன்ற அயலானாக, சிலருக்கு படிக்காத பிள்ளையையாக , அடங்காத மனைவியாக, பொறுப்பற்ற கணவனாக எப்படி எப்படியோ வந்து நிற்கும்.

செய்த வினை.

இராவணனும் அரக்கர்களும் செய்த வினை, சீதை வடிவில் வந்து நின்றது.

துன்பம் வரும் போது மற்றவர்களை நோகாதீர்கள். செய்த வினை என்று நினையுங்கள்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா

நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், எனக்கு ஏன் இந்த சோதனை, துக்கம் என்று தோன்றும். நாம் யார் குடியை கெடுத்தோம், யாருக்கு மனசார தீங்கு செய்தோம்...என்ற எண்ணம் தோன்றும்.

பட்டினத்தார் சொல்கிறார்.

இந்த பிறவியில் செய்த தீங்கு என்று ஒன்றும் இல்லை. ஒரு வேளை முற்பிறவியில் செய்த தீவினை தான் இங்கே வந்து சேர்ந்ததா என்று நினைக்கிறார்.

என் செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே 
உன் செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த 
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு 
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே

நல்லதை நினையுங்கள். நல்லதை செய்யுங்கள்.

நல்லதே நடக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_8.html


Wednesday, February 7, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - தன்னையே கொல்லும் சினம்

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - தன்னையே கொல்லும் சினம் 


நாம் மற்றவர்கள் மேல் சினம் கொண்டால், அது மற்றவர்களை அழிக்கிறதோ இல்லையோ, நம்மை கட்டாயம் அழிக்கும்.

தன்னை தான் காக்க, சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்

என்பார் வள்ளுவர். சினம், தன்னை கொண்டவனை அழிக்கும். அவனை மட்டும் அல்ல, அவன் குலத்தையே அழிக்கும். சந்தேகம் இல்லை.

கோபம் கொண்டவன் என்ன செய்கிறோம் என்ற அறிவை இழக்கிறான். அவன் படித்த புத்தகங்கள், கேட்ட அறிவுரைகள், அறவுரைகள் எல்லாம் காற்றில் போகும். மூர்க்கத்தனமாக எதையேனும் செய்து தனக்கும், தன் குடும்பத்துக்கும், குலத்துக்கும் நாசம் தேடிக் கொள்வான்.

மாரீசன் எவ்வளவோ தடுத்து பார்க்கிறான். இராவணன் கேட்டான் இல்லை. மாரீசனிடம் கோபம் கொள்கிறான்.

இராவணனின் கோபம் கண்டு மாரீசன் பயம் கொள்ளவில்லை. மாறாக , மேலும் அறிவுரை கூறுகிறான்.

"நீ என் மேல் கோபம் கொள்ளவில்லை. உன் மேல் கோபம் கொண்டாய். உன் குலத்தின் மேல் கோபம் கொண்டாய்"

என்று மேலும் சொல்லத் தலைப்படுகிறான்.

பாடல்

தன்னை முனிவுற்ற 
     தறுகண் தகவிலோனை, 
பின்னை முனிவுற்றிடும் எனத் 
     தவிர்தல் பேணான் 
'உன்னை முனிவுற்று உன் 
     குலத்தை முனிவுற்றாய்; 
என்னை முனிவுற்றிலை; இது 
     என்?' என இசைத்தான்.


பொருள்


தன்னை முனிவுற்ற  = தன் மேல் (மாரீசன் மேல்) கோபம் கொண்ட

தறுகண் = வீரம் நிறைந்த

தகவிலோனை = பெருமை இல்லாதவனை

பின்னை =   பின்னால்

முனிவுற்றிடும் = கோபம் கொள்ளுவான்

எனத் = என்று

தவிர்தல்  = அவனை தவிர்த்து விட்டு போக

பேணான் = நினைக்க மாட்டான்

'உன்னை முனிவுற்று = உன்னுடனேயே நீ சினம் கொண்டு

உன் குலத்தை முனிவுற்றாய் = உன் குலத்தின் மேல் கோபம் கொண்டாய்

என்னை முனிவுற்றிலை = நீ என் மேல் கோபம் கொள்ளவில்லை

இது என்?' = இது எப்படி

 என இசைத்தான். = என்று நினைத்தான்

நம் பிள்ளைகளோ, நண்பர்களோ, கணவனோ/மனைவியோ ஒரு தவறு செய்தால், செய்ய முற்பட்டால், நாம் தடுத்துக் கூறுவோம். கேட்க்காவிட்டால்  , "நான் சொல்றதை சொல்லிட்டேன்...அப்புறம் உன் இஷ்டம் " என்று விட்டு விடுவோம்.

அப்படி விடக் கூடாது. அவர்கள் செய்ய நினைப்பது தவறு என்றால் , இறுதிவரை போராட வேண்டும்.

"ஆமா...ரொம்ப சொன்னா அவளுக்கு (அவருக்கு) கோபம் வரும். மூணு நாளா மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருப்பா (இருப்பார்) ..எக்கேடும் கெட்டு போகட்டும் "

என்று விடக் கூடாது.

இராவணன் தன் மேல் கோபம் கொள்வான் என்று மாரீசனுக்குத் தெரியும்.

இருந்தும் சொல்கிறான்.

நமக்கு யார் மேலாவது கோபம் வந்தால், நாம் யார் மேல் கோபம் கொண்டோமோ அவர்களுக்கு ஒரு பாதிப்பு இல்லை. இன்னும் சொல்லப் போனால், அவர்களுக்கு நாம் அவர்கள் மேல் கோபமாய் இருக்கிறோம் என்று கூடத் தெரியாது. ஆனால், கோபம் கொண்டவனின் இரத்த அழுத்தம் ஏறும்,    படபப்பு வரும்.

எனவே, கோபம் நமக்குத்தான் அதிகம் தீங்கு செய்யும்.

கோபம் கொண்டவன், மற்றவர்கள் மேல் கோபம் கொள்வது இல்லை. தன் மேலும் தன் குலத்தின் மேலும் கோபம் கொள்ளுகிறான்.


சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி, இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்

என்பார் வள்ளுவர்.

கோபத்தின் மூலம் நமக்கு நாமே அழிவைத் தேடிகே கொள்கிறோம்.

அதை தவிர்த்தல் நலம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_7.html






Tuesday, February 6, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - காமமும் கோபமும்

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - காமமும் கோபமும்


சீதையை சூழ்ச்சியால் கவர்வோம் என்ற இராவணன் சொல்ல, அது தவறு என்று மாரீசன் எவ்வளவோ எடுத்துச் சொல்கிறான். இதுவரை அதைப் பார்த்தோம்.

அதைக் கேட்ட இராவணன் என்ன செய்தான் ?

அறிவுரை கேட்டு, மனம் மாறினானா ?

இல்லை. அரக்க குணம். தான் கொண்டதே சரி என்ற மூர்க்க குணம். எத்தனை நீதி நூல்களைப் படித்தாலும், எத்தனை சொற் பொழிவுகள் கேட்டாலும், எருமை மாட்டின் மேல் மழை பொழிந்தாற் போல தன் போக்கிலே போகும் தமோ குணம்.

இராவணனும் அவ்வாறே செய்கிறான்.

அவன் மனதில் கோபமும் , சீதை மேல் கொண்ட காமமும் நிறைந்து கிடக்கிறது.

முதலில் கோபம்.

மாரீசன் மேல் கோபம் கொள்கிறான்.

"நான் யார். என் பெருமை என்ன. என் வலிமை என்ன. கங்கையை சடையில் வைத்த சிவன் வாழும் கையிலை மலையை என் கையால் எடுத்த என் தோள் வலிமையை ஒரு மனிதர்களின் வலிமைக்கு முன்னால் குறைவானது என்றா நினைத்தாய்" என்று கண்ணில் தீ எழ பார்க்கிறான்.

பாடல்

‘கங்கை சடை வைத்தவனொடும்
    கயிலைவெற்பு ஓர்
அங்கையின் எடுத்த எனது
    ஆடு எழில் மணித் தோள்,
இங்கு ஒர் மனிதற்கு எளிய
    என்றனை ‘எனத் தன்
வெம் கண் எரியப் புருவம்
    மீது உற விடைத்தான்.


பொருள்


‘கங்கை  = கங்கையை

சடை = சடையில்

வைத்தவனொடும் = வைத்த சிவனோடும்

கயிலைவெற்பு = கயிலை மலையை

ஓர் = ஒரு

அங்கையின்  = உள்ளங்ககையில்

எடுத்த எனது = எடுத்த எனது

ஆடு எழில் மணித் தோள் = ஆர்ப்பரித்து ஆடுகின்ற என் மணித் தோள்களை

இங்கு ஒர் மனிதற்கு = இங்கு ஒரு மனிதர்க்கு

எளிய என்றனை = எளிமையாக வெல்லப் படக்கூடியவை என்று நினைத்து விட்டாய்

‘எனத் = என்று

தன் = தன்

வெம் கண் = சிவந்த கண்கள்

எரியப் = தீ எழ

புருவம் மீது உற = புருவம் மேலே செல்ல

விடைத்தான் = கோபம் கொண்டான்


கோபம் கண்ணை மறைக்கிறது.

கோபம் வரும்போது உண்மை கண்ணுக்குத் தெரிவதில்லை.

கண்ணனை , இடையன் இடையன் என்று சொல்லிக் கெட்டான் துரியோதனன் .

முருகனை சிறு பிள்ளை , சிறு பிள்ளை என்று சொல்லிக் கெட்டான்  சூர பத்மன்.

இராமனை மனிதன் , மனிதன் என்று சொல்லிக் கெட்டான் இராவணன்.

ஆணவமும், கோபமும் உண்மையை மறைக்கும்.


உண்மையின்  தரிசனம் கிடைக்க வேண்டும் என்றால் , முதலில் கோபத்தை விட வேண்டும்.

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பார் வள்ளுவர்.

ஒரு பக்கம் ஆணவம் - கையிலை மலையை மட்டும் அவன் தூக்கவில்லையாம். அந்த மலையோடு, சிவனையும் சேர்த்து தூக்கினேன் என்கிறான்.

"கங்கை சடை வைத்தவனொடும்
    கயிலைவெற்பு"

கங்கை, தலையில் கொண்ட சிவன், அவன் இருக்கும் கைலை மலை எல்லாவற்றையும் சேர்த்து  தூக்கினேன் என்கிறான்.

என்னைப் பார்த்தா மனிதர்களிடம் தோற்றுப் போவேன் என்று சொல்கிறாய் என்று சினப்படுகிறான்.

அந்த ஆணவமும், கோபமும் இல்லாமல் இருந்திருந்தால் அழிவு வந்திருக்காது.

இராவணனுக்கே அந்தக் கதி என்றால்......


இந்த பிளாக்கை படிப்பது எதற்கு ? ஏதேனும் நல்லது இருக்குமா என்ற ஆர்வம் தானே ?

எத்தனை நல்லது , எவ்வளவு வாசித்தாலும், கேட்டாலும் ஆணவமும், கோபமும், காமும் இருந்தால் அந்த வாசிப்பும், கேள்வியும் ஒரு பலனும் தராது.

நல்ல பாலை கழுவாத பாத்திரத்தில் இட்டு வைத்தால் பாலும் கெட்டு போகும் அல்லவா ?

பாத்திரத்தை சுத்தப் படுத்தி வையுங்கள். அப்புறம் அதில் பாலை இட்டு நிரப்பலாம்.

என்ன சரி தானே ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_6.html






Monday, February 5, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - மெய்ம்மை உணர்ந்தாய்

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - மெய்ம்மை உணர்ந்தாய் 


சமீபத்தில் ஒரு பெரிய கல்வித் துறையின் தலைவர் கையூட்டு பெற்றதற்காக கைது செய்யப்பட்டதை செய்தித் தாள்களில் படித்து அறிகிறோம்.

ஒரு கல்வித் துறையின் தலைவர். அவருக்குத் தெரியாதா தான் செய்வது தவறு என்று. அவர் படிக்காத நூல்களா ? அவருக்குத் தெரியாததா ? பின் ஏன் இந்த தவறு நிகழ்ந்தது ? அவர் மட்டும் அல்ல. அவர் போல் வரலாறு எங்கும் பலரைக் காணலாம்.

ஏன் படித்தவர்கள் தவறு செய்கிறார்கள் ? அறியாதவன் தவறு செய்தால், அறியாமை என்று மன்னிக்கலாம்.

கற்றவர்கள், கற்றதன் வழி நிற்பதில்லை. "இதெல்லாம் கவைக்கு உதவாது , நடைமுறையில் சாத்தியம் இல்லை, இதெல்லாம் நமக்கு சொன்னது இல்லை " என்று படித்ததை புறம் தள்ளி விட்டு , மனம் போன படி வாழத் தலைப் படுகிறார்கள்.

எது சௌகரியமோ அதை மட்டும் வைத்துக் கொண்டு, அதற்கு ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு , தாங்களாகவே ஒரு வாழ்க்கை வாழத் தலைப் படுகிறார்கள்.

இதற்கு எதற்கு படிக்க வேண்டும்  ?

இராவணன் படிக்காத சாத்திரம் இல்லை. இருந்தும் அவன் புத்தி வேறு வழியில் போனது.

மாரீசன் தன் அறிவுரையை தொடர்கிறான்.

பாடல்

நின்றும் சென்றும் வாழ்வன யாவும்
    நிலையாவாய்ப்
பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய்!
    புலையாள் தற்கு
ஒன்றும் உன்னாய்; என் உரை கொள்ளாய்;
    உயர் செல்வத்து
‘என்றும் என்றும் வைகுதி; ஐயா!
    இனி ‘என்றான்.

பொருள்


நின்றும் = அசையாமல் ஒரே இடத்தில் நிற்கும் மரம், செடி , கொடிகளும்

சென்றும் = இடம் இடம் பெயரும் விலங்குகள், பறவைகள், மனிதர்கள் போன்றவைகளும்

வாழ்வன யாவும் = வாழ்கின்ற யாவும்

நிலையாவாய்ப் = நிலைத்து வாழ்வன அல்ல

பொன்றும் என்னும் = அழியும் ஏதேனும் ஒரு நாள்

மெய்ம்மை உணர்ந்தாய்! = என்ற உண்மையை அறிந்தாய்

புலையாள் தற்கு = தீமை செய்வதற்கு

ஒன்றும் உன்னாய் = எதையும் நினைக்கமாட்டாய்

என் உரை கொள்ளாய் = நான் சொல்வதை கேட்க மாட்டாய்

உயர் செல்வத்து = உயர்ந்த செல்வங்களுக்கு

‘என்றும் என்றும் வைகுதி; = என்றும், என்றும் வைத்து வாழ்வாய்

ஐயா! = ஐயனே

இனி ‘என்றான் = இனி என்றான்

இராவணன்  வேதங்களை கற்றறிந்தவன் . அவற்றிற்கு காவலாய் நின்றவன்.

இருந்தும், அவன் கற்ற நூல்கள் படி அவன் வாழவில்லை. அதனால் அழிந்தான்.

படித்தும், அதன் படி வாழாமல்  இருப்பது, அரக்க குணம்.

எத்தனை எத்தனை நூல்களை படித்து இருக்கிறீர்கள். எவ்வளவு அற உரை படித்து இருக்கிறீர்கள்.

அவற்றுள், எத்தனையை , "இதெல்லாம் நமக்கு ஒத்து வராது" என்று ஒதுக்கி  வைத்து இருக்கிறீர்கள்.


அப்படிச் செய்தவன் இராவணன். ஒரு அரக்கன்.


http://interestingtamilpoems.blogspot.com/2018/02/blog-post_5.html