Sunday, November 4, 2018

நளவெண்பா - இதெல்லாம் ஒரு பெரிய துன்பமா ?

நளவெண்பா - இதெல்லாம் ஒரு பெரிய துன்பமா ?


நாம் நினைக்கிறோம், நமக்கு வந்த துன்பங்கள்தான் உலகிலேயே பெரிய துன்பம் என்று. வேறு யாருக்கும் இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்தது இல்லை என்று நாம் நினைக்கிறோம்.

அப்படி அல்ல. நம்மை விட பலப் பல மடங்கு துன்பப் பட்டவர்கள், படுகிறவர்கள் இருக்கிறார்கள் இந்த உலகில். அதை எல்லாம் நினைத்துப் பார்த்தால் , நம் துன்பம் ஒன்றும் பெரிதல்ல என்று நமக்கு விளங்கும்.

அப்படி மற்றவர்கள் துன்பத்தை அறியும் போது, "வாழ்வில் துன்பம் என்பது ஒரு பகுதி. இது எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் வரத்தான் செய்கிறது" என்ற எண்ணமும் , அதனால் துன்பத்தை ஏற்றுக் கொள்ளும் ஒரு பக்குவமும் வந்து சேரும்.

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய துன்பம் என்று தருமன் , வேத வியாசரை கேட்டான்.

அதற்கு வியாசர் "நீ நினைக்கிறாய் ஏதோ உனக்குத்தான் பெரிய துன்பம் வந்து விட்டது என்று. உன்னை விட அதிகம் துன்பப் பட்டவர்கள் இருக்கிறார்கள். நள மன்னன் என்று ஒருவன் இருந்தான். அவன் கதையை சொல்கிறேன் கேள்" என்று நள மன்னனின் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.


பாடல்

சேமவேல் மன்னனுக்கச் செப்புவான் செந்தனிக்கோல்
நாமவேல் காளை நளனென்பான் - யாமத்
தொலியாழி வையம் ஒருங்கிழப்பப் பண்டு
கலியான் விளைந்த கதை.


பொருள்

சேம = சேமம், நல்லது , இதம்

வேல் = வேல். மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஏந்திய வேல்

மன்னனுக்கச் = மன்னனுக்கு (தருமனுக்கு)

செப்புவான் = சொல்லுவான்

செந்தனிக்கோல் = செம்மையான, தனிச் சிறப்பு வாய்ந்த

நாமவேல் = நாமத்தைக் கொண்ட

காளை = காளை போல பலம் கொண்ட

நளனென்பான் = நளன் என்ற ஒருவன்

யாமத் = நள்ளிரவிலும்

தொலி = ஒலி எழுப்பும்

யாழி = கடல் சூழ்ந்த

வையம் = உலகம்

ஒருங்கிழப்பப் = ஒன்றாக இழந்து

பண்டு = முன்பு

கலியான் = சனி பகவானால்

விளைந்த கதை = நிகழ்ந்த கதை

உலகம் அனைத்தையும், கடல் சூழ்ந்த இந்த உலகம் அனைத்தையும் , அதோடு கூடிய மற்றைய செல்வங்களையும் (அதிகாரம், புகழ் ) ஒரே சமயத்தில் இழந்தான் நளன்.

நளன் கதையை கேட்டால் நமக்கே கண்ணீர் வரும்.

நளனின் கதையை சொல்லத் தொடங்குகிறார் வியாசர்.

கேட்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_85.html

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம் ?

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம் ?


நமக்கு ஒரு சின்ன துன்பம் வந்து விட்டால் கூட, "ஐயோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது. நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன் ...அந்த கடவுளுக்கு கண் இல்லையா .." என்று புலம்புவோம்.


நமக்கு வந்தது அவ்வளவு பெரிய கவலையா ?


பல இலக்கியங்களைப் படிக்கும் போது, அந்தக் கதைகளில் வரும் மாந்தர்களை விட நமக்கு ஒன்றும் பெரிய கவலை இல்லை என்று தோன்றும். அந்த எண்ணமே கவலையை குறைக்கும்.


இலக்கியம் படிப்பதால் கிடைக்கும் இன்னொரு பலன் - மன ஆறுதல்.


நளவெண்பாவில், தருமன் சூதாடி நாடிழந்து , காட்டில் வந்து தனித்து இருக்கிறான். அர்ஜுனன் , தவம் செய்து பாசுபத அஸ்திரம் பெற்றுவர புறப்பட்டுப் போய்விட்டான். தனித்து இருந்த தருமன் கவலைப் படுகிறான்.


அப்போது அங்கு வந்த வியாசர், "தருமா ஏன் கவலையாக இருக்கிறாய் " என்று கேட்கிறார்.


அதற்கு தர்மன் சொல்கிறான் "கண் மூடித்தனமாக சூதாடி, நாட்டை இழந்து, காட்டை அடைந்து இப்படி துன்பப் படுகிறேன். இந்த உலகில் என்னைப் போல துன்பப் படுபவர்கள் யார் இருக்கிறார்கள் " என்று புலம்புகிறான்.


பாடல்


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்.


பொருள்


கண்ணிழந்து = கண்மூடித் தனமாக


மாயக் கவறாடிக் = வஞ்சகமான சூதாட்டத்தில் விளையாடி


காவலர்தாம் = காவல் காக்க வேண்டிய


மண்ணிழந்து = நாட்டை இழந்து


போந்து =போய்


வனம்நண்ணி = காட்டை அடைந்து


விண்ணிழந்த = விண்ணை விட்டு மண் நோக்கி வரும்


மின்போலும் = மின்னலைப் போல உள்ள


நூல்மார்ப = நூலை அணிந்த மார்பை உடையவனே (வியாசனே)


மேதினியில் = இந்த உலகில்


வேறுண்டோ = வேறு எவரும் உண்டோ


என்போல் = என்னைப் போல



உழந்தார் இடர் = துன்பத்தில் வருந்துபவர்கள்


சரி தானே. தர்மனின் நிலையை நினைத்துப் பார்போம். ஒரே நாளில் பெரிய சாம்ராஜ்யத்தை இழந்து, காட்டில் வந்து தனித்து இருக்க வேண்டும் என்றால் எப்படி இருக்கும். நம்மால் முடியுமா ? ஒரு நாள் வீட்டை விட்டு காட்டில் போய் இரு என்றால் முடியுமா ? ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே விட்டு விட்டு ஒரு நாள் , இரண்டு நாள் அல்ல பன்னிரண்டு வருடம் காட்டில் இருக்க வேண்டும்.


நம் துன்பம் அதை விட பெரிய துன்பமா ?


இப்படி ஒரு பெரிய துன்பத்தில் இருக்கும் தருமனுக்கு வியாசர் என்ன தான் ஆறுதல் சொல்லி விட முடியும் ?


நாளை அது பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_4.html

Thursday, November 1, 2018

வில்லி பாரதம் - மும்மூர்த்திகள்

வில்லி பாரதம் - மும்மூர்த்திகள் 


படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களை செய்வது மூன்று மூர்த்திகள் என்று நாம் அறிவோம். பிரமன்,  திருமால்,அரன் என்று சொல்ல கேட்டிருக்கிறோம்.

இந்த மூன்று பேருக்கும் மேலே ஒரு கடவுள் இருக்கிறான் என்று நம் இலக்கியங்கள் பேசுகின்றன.

யார் அது ?

திருப்பள்ளி எழுச்சியில் மணிவாசகர் சொல்வார் ,

"மூவரும் அறிகிலர் யாவர் மாற்று அறிவார்"

அந்த பரம்பொருளை அந்த மும்மூர்த்திகளும் அறிய மாட்டார்கள் என்றால் பின் வேறு யார் தான் அறிவார்கள் என்கிறார்.

மும்மூர்த்திகளுக்கும் எட்டாத ஒருவன் அவன்.

முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.

வில்லி புத்தூர் ஆழ்வார் சொல்கிறார்


"பிரமன் படைக்கிறான், திருமால் காக்கிறான், அரன் அழிக்கிறான். அப்படி அழித்த பின், மீண்டும் அனைத்தையும் எவன் உண்டாக்குகிறானோ அவன் பொன்னடி போற்றி" என்கிறார்.

அதாவது, இந்த மூவர் அல்லாத இன்னொருவரும் இருக்கிறார் என்கிறார். அவன் தான் முதல்வன் என்கிறார்.

பாடல்


ஆக்கு மாறய னாமுத லாக்கிய வுலகம்
காக்கு மாறுசெங் கண்ணிறை கருணையங் கடலாம்
வீக்கு மாறர னாமவை வீந்தநாண் மீளப்
பூக்கு மாமுத லெவனவன் பொன்னடி போற்றி.

சீர் பிரித்த பின்

ஆக்குமாறு அயன் முதல் ஆக்கிய உலகம் 
காக்குமாறு செங் கண் நிறை கருணை அம் கடலாம் 
வீக்குமாறு அரன் அவை வீந்த நாள் மீளப் 
பூக்குமா(று ) முதல்வன் எவன் பொன்னடி போற்றி 



பொருள்


ஆக்குமாறு அயன் = படைத்தல் செய்பவன் பிரமன்

முதல் = முதலில்

ஆக்கிய உலகம்  = படைத்த உலகத்தை

காக்குமாறு = காக்கும் தொழிலை செய்பவன்

செங் கண் = சிவந்த கண்களை உடைய

நிறை கருணை = கருணை நிறைந்த

அம் கடலாம் = கடல் போன்ற  (கடல் போன்ற கருணை நிறைந்த)

வீக்குமாறு = வீழுமாறு

அரன் = அரன்

அவை வீந்த நாள் = அவை அவ்வாறு வீழ்ந்த இந்த

மீளப் = மீண்டும்

பூக்குமா(று ) = தோன்றும்படி

முதல்வன் = செய்யும் முதல்வன்

எவன் = யார் ?

பொன்னடி போற்றி  = அவன் பொன்னடி போற்றி

இவைகளை கடந்து செல்ல வேண்டும். உருவம், அந்த உருவங்கள் செய்யும் தொழில் , இதில் யார் பெரியவர் என்ற சண்டைகள் என்று இவற்றை எல்லாம் கடந்து செல்ல வேண்டும்.

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post.html

Tuesday, October 30, 2018

தேவாரம் - பெறலாகா அருள் பெற்றேன்

தேவாரம் - பெறலாகா அருள் பெற்றேன் 


தெரு நாய் பார்த்து இருக்கிறீர்களா? யாரவது காரில் போனால், அந்த காரை துரத்தும். குலைக்கும். எங்கோ வேறு ஒரு தெருவில் ஒரு நாய் குரைத்தால், இந்த நாயும் குரைக்கும். காரணம் இல்லாமல் மற்ற நாய்களோடு சண்டை போடும். இங்கிருந்து அங்கு ஓடும். பின் அங்கிருந்து இங்கு ஓடி வரும். நாள் பூராவும் ஏதோ சுறு சுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கும்.

இரவில் களைத்துப் போய் விடும்.

சரி, உருப்படியாக என்ன செய்தாய் என்று கேட்டால் அதற்கு ஒன்றும் தெரியாது. ஓடினேன், வந்தேன், குறைத்தேன், கார்களை துரத்தினேன் என்று சொல்லும்.


அந்த நாய்க்கு அவ்வளவுதான் அறிவு.

நமக்கு ?

இத்தனை வயது வரை என்ன செய்தோம்?

25 வயது வரை ஏதேதோ படித்தோம். படித்ததில் ஏதாவது நினைவில் இருக்கிறதா ? அது வாழ்க்கைக்கு எங்காவது உதவுகிறதா ?

சரி, வேலைக்குப் போனோம். சாதித்தது என்ன?  யாருக்கோ பணம் போனது. யாருக்கோ நன்மை கிடைத்தது. நாம் சாதித்தது என்ன.

திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகள் பெற்றோம். அதனால் கிடைத்த பலன் என்ன?

 இப்படி ஒரு குறிக்கோள் இல்லாமல் அந்தத் தெரு நாய் போல அலைந்து கொண்டிருக்கிறோம்.

இந்த நாய் போலத்தான் பேயும். ஒரு குறிக்கோள் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும்.

சுந்தரர் சொல்கிறார் ...

"நாய் போன்ற நான் ஒரு குறிக்கோள் இன்றி பேய் போலத் திரிந்தேன். எப்படியோ பெற  முடியாத உன் அருளைப் பெற்றேன். இனி உனக்கு அடிமை ஆகிவிட்டேன். இனி, நான் என்று ஒன்று இல்லை "

பாடல்

நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் 
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெறலாகாவருள் பெற்றேன் 
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்  நல்லூரருட் டுறையுள் 
ஆயாஉனக் காளாய்இனி அல்லேன் என லாமே.

பொருள்

நாயேன் = நாய் போன்றவனான நான்

பல நாளும் = பல நாட்கள்

நினைப் பின்றி = என்ன செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என்ற நினவு இல்லாமல்

மனத் துன்னைப் = மனதில் உன்னை

பேயாய்த்திரிந் தெய்த்தேன் = பேய் போல திரிந்தும் உன்னை அடையவில்லை

பெறலாகாவருள் பெற்றேன் =  பெற முடியாத அருளைப் பெற்றேன்

வேயார் = மூங்கில் காடுகள் நிறைந்த

பெண்ணைத் = பெண்ணை ஆற்றின் கரையில்

தென்பால் = தெற்கு பக்கம் உள்ள

வெண்ணெய் = திருவெண்ணெய்

நல்லூரருட் டுறையுள் = நல்லூர் என்ற அருள் தலத்தில்

ஆயா = தலைவனே

உனக் காளாய் = உனக்கு எற்றவனானேன்

இனி அல்லேன் என லாமே. = இனி நான் என்று ஒன்றும் இல்லை என்று ஆகி விட்டேன்

வாழ்வின் குறிக்கோள் என்ன என்று அறிந்து பின் செல்லுங்கள். அங்காடி நாய் போல் அலைந்தனையே மனமே என்பார் பட்டினத்து அடிகள்.

இனிமையான பாடல்.

இன்னொரு முறை வாசித்துப் பாருங்கள். உண்மை புலப்படும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_30.html



Monday, October 29, 2018

108 திவ்ய தேசம் - திருவாலி - பாகம் 2

108 திவ்ய தேசம் - திருவாலி - பாகம் 2 



 ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களை கேட்டால் சொல்லுவார்கள், "நான் இறைவனை நம்புகிறேன். இறைவனிடம் போய் சேர முயல்கிறேன். இறைவன் சொர்க்கத்தில்  இருக்கிறான்  வைகுந்தத்தில் இருக்கிறான் அல்லது கைலாயத்தில் இருக்கிறான் .." என்றது சொல்லுவார்கள். 

இறைவனை தேடுவது என்றால் என்ன  அர்த்தம். எதையோ தொலைத்து விட்டு , பின் தேடினால் அர்த்தம்  இருக்கும். நாம் இறைவனை தொலைத்து விட்டோமா ? இதற்கு முன் அவர் நம்மிடம் இருந்தாரா ? இல்லையே. பின் எப்படி தேட முடியும் ?

 என் கார் சாவி என்னிடம் இருந்தது. எங்கேயோ வைத்து விட்டேன். அதைத் தேடி கண்டு பிடிக்கலாம். அந்த சாவி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். 

இறைவன் எப்படி இருப்பான் என்று நமக்குத் தெரியுமா ? தெரியாத ஒன்றை எப்படி தேடுவது ? 

ஒரு நாள் என் வீட்டில் , இரவில் மருந்து சாப்பிட மாத்திரையை எடுத்தேன். கை தவறி கீழே விழுந்து விட்டது. எடுக்கக் குனியும் நேரத்தில் மின்சாரம் போய் விட்டது. ஒரே இருட்டு. ஒன்றும் தெரியவில்லை. 

என்ன செய்வது. வெளியே பார்த்தேன். தெரு விளக்கில் வெளிச்சம் இருந்தது.  சரி, அங்கே போய் தேடலாம் என்று போனால் அது எவ்வளவு பைத்தியகாரத்தனம் ?

அந்த அளவு பைத்தியகாரத் தனம் இறைவனை தேடுவது. எங்கே தொலைத்தோமோ அங்கு தானே தேட முடியும்? தொலைத்த இடம் எது ? கோவிலில் தொலைத்தோமா ? தினமும் அங்கே போய் தேடுகிறார்கள். 

இறைவன் யார், எப்படி இருப்பான், எங்கே இருப்பான், அவன் கருப்பா சிவப்பா, உயரமா குள்ளம்மா, ஆணா பெண்ணா என்று எதுவும் நமக்குத் தெரியாது. தெரியாத ஒன்றை எப்படித் தேடுவது ?

இங்குதான் இந்த பாசுரம் வருகிறது. 

நமக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் யாராவது இருப்பார்கள் அல்லவா ? அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 

ஒரு புதிய ஊருக்குப் போகிறோம். விலாசம் தொலைந்து போய் விட்டது. போய் சேரும் இடம் பற்றி கொஞ்சம் தெரியும். ஆனால் எந்த இடம், எந்தத் தெரு என்பதெல்லாம் தெரியாது. 

என்ன செய்யலாம் ?

அந்த ஊரைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 

நம் சமயங்கள் , அதிலும் குறிப்பாக வைணவ சமயம், ஆசாரியர்களை கொண்டாடுகிறது. அவர்களை , இறைவனுக்கும் ஒரு படி மேலே வைத்து கொண்டாடுகிறார்கள். ஆசாரியன் தான் நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறார்கள். 

மாதா பிதா குரு தெய்வம். 

அம்மா தான் அப்பா யார் என்று அடையாளம் காட்டுகிறாள். 

அப்பா தான் குரு யார் என்று அடையாளம் காட்டுகிறார். 

குரு தான் இறைவனை நமக்கு அடையாளம் காட்ட முடியும். 

எனவேதான் அந்த வரிசை. மாதா, பிதா, குரு , தெய்வம். 

இங்கே வண்டு என்று அவர் கூறுவது, ஆசாரியனை. ஆசாரியனுக்கு ஒரு உவமானம். "நான் அவனை அடைய விரும்புகிறேன். ஆனால், எப்படி என்று தெரியவில்லை. நீ போய் சொல்லி அவனை வரச் சொல்" என்று வண்டை தூது விடுவதாக உள்ள இந்த பாசுரம் சொல்லுவது, "ஆசாரியனே, நீ என்னை அந்த  வரிவில் கொண்ட இலக்குமி கேள்வனோடு சேர்த்து விடு " என்று கூறுவதாக உள்ளது. 

சைவ சமயமும் குருவை பிரதானமாக ஏற்றுக் கொண்டுள்ளது. 

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" 

என்று இறைவனே குரு வடிவில் வருவதாக நம்பியது. 

இன்னொன்றையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். 

ஆழ்வார் "என்னை அங்கே கூட்டிப் போ " என்று வண்டிடம் (ஆசாரியனிடம்) கூறவில்லை. என் நிலைமையை அவனிடம் கூறு என்று தான் வேண்டுகிறார். 

அவன் இருக்கும் இடம் தெரிந்தாலும் நம்மால் அங்கே போக முடியாது. அவன் வந்து கூட்டிக் கொண்டு போனால் தான் உண்டு. 

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர். 

பாலைக் கொடுத்து ஆட்கொண்டான் திரு ஞான சம்பந்தரை 

ஓலை கொடுத்து ஆட்கொண்டான் சுந்தர மூர்த்தி நாயனாரை 

காலை காட்டி ஆண்டு கொண்டான் மணிவாசகரை 

அவன் வந்து ஆட் கொண்டால் தான் உண்டு. 

சிந்திப்போம் 



------------------------------------ பாகம் 1 --------------------------------------------------------------------


ஆணின் உலகம் கரடு முரடானது. போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு, நம்பிக்கை துரோகம் போன்றவற்றால் நிறைந்தது. ஆணின் உலகம் போராட்டம் நிறைந்தது.

ஏதோ ஒரு சிக்கலில் மாட்டி, சிக்கி சின்னா பின்னாமாகி வீட்டுக்கு வருவான். கோபம், ஏக்கம், வலி இவற்றோடு வருவான். வந்தவுடன் , அவன் முகத்தைப் பார்த்தவுடன் அவன் மனைவிக்குத் தெரியும். இன்னிக்கு என்னமோ நடந்திருக்கு என்று புரிந்து கொள்வாள்.

அவளால் முடிந்தவரை அவன் வலியை நீக்கி, அவனை சாந்தப் படுத்த முயல்வாள்.

"சரி விடுங்க...இது போனா இன்னொன்னு. இன்னிக்கு இல்லேனா நாளைக்கு கிடைத்து விட்டுப் போகிறது. எதுக்கு போட்டு மனச குழப்பிக்கிறீங்க " என்று ஆறுதல் சொல்லி அவனுக்கு அமைதி தர முயல்வாள்.

பெண்ணின் அருகாமை ஆணை அமைதிப் படுத்தும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்த அரக்கர்கள் இருக்கிறார்களே சரியான முட்டாள்கள். மரணம் என்பதை வெல்லவே முடியாது என்று தெரிந்தும், எத்தனையோ விதங்களில் மரணத்தை வெல்ல வரம் வாங்குவார்கள். பின், அந்த வரங்களை எல்லாம் மீறி அவர்கள் கொல்லப் படுவார்கள்.

இரணியன் என்று ஒரு அரக்கன் இருந்தான். அவன் மிக மிக கடினமான வரம் வாங்கினான். நமக்கெல்லாம் தெரிந்த கதைதான்.

பெருமாள், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை கொன்றார்.

கொன்ற பின்னும், நரசிம்மத்தின் கோபம் அடங்கவில்லை. அந்தக் கோபம் அடங்காவிட்டால் உலகமே அழிந்து விடும் என்று பயந்த தேவர்கள், நேராக இலக்குமியிடம் சென்று "தாயே, நீ தான் பெருமாளின் கோபத்தை தணித்து இந்த உலகை  காக்க வேண்டும் " என்று வேண்டினார்கள்.

பெண்ணின் அன்பில் உருகாத மனமும் உண்டோ ?

இலக்குமி ஒன்றுமே செய்யவில்லை. நேராக சென்று அந்த நரசிம்மத்தின் மடியில் அமர்ந்து விட்டாள்.. அவ்வளவுதான்.

அப்படி மடியில் அமர்ந்த இலக்குமியை , பெருமாள் ஆலிங்கனம் செய்து கொண்டார் (கட்டிப் பிடித்துக் கொண்டார்). அப்படி கட்டிப் பிடித்தவுடன் அவரின் கோபம் எல்லாம்  மறைந்தே போய் விட்டது. அமைதி ஆனார்.

அப்படி அவர் இலக்குமியை ஆலிங்கனம் செய்து கொண்ட தலம் திரு ஆலி அல்லது திருவாலி என்று அழைக்கப் படுகிறது.

சீர்காழிக்கு பக்கத்தில் இருக்கிறது. மூணு கிலோமீட்டர் தூரம்தான்.

மூலவர் இலட்சுமி நரசிம்மன். அமர்ந்த திருக்கோலம்.

திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திருத்தலம்.


"மலரின் மெல்லிய இதழ்களை பிரித்து அதில் உள்ள தேனை , உன் துணையோடு அருந்தும் வண்டே,  மறையவர்கள் ஓமம் வளர்த்து வேதங்களை ஓதும் புகழ் கொண்ட திருவாலி நகரில் உள்ள அந்த பெருமாளிடம் என் நிலைமையை சென்று சொல்லாயோ "

என்று வண்டை தூது விடுகிறார்.



பாடல்

தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே
 பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே
 தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாழி
 ஏவரி வெஞ்சிலையானுக் கென்னிலைமை யுரையாயே - (1198)
                     
பெரியதிருமொழி 3-6-1


பொருள்

தூவிரிய = சிறகுகள் விரிய

மலருழக்கித்  = மலரின் உள்ளே சென்று

துணையோடும் = உன் துணையோடு

பிரியாதே = எப்போதும் பிரியாமல்

பூவிரிய = மலர் விரிந்து

மதுநுகரும் = அதில் உள்ள தேனை அருந்தும்

பொறிவரிய = புள்ளிகளும், கோடுகளும் கொண்ட

சிறுவண்டே = சிறு வண்டே

தீவிரிய = தீ வளர்த்து

மறைவளர்க்கும் = வேதங்களை போற்றும்

புகழாளர் = புகழ் படைத்தவர்கள்

திருவாழி = திருவாலி என்ற திருத்தலத்தில்

ஏவரி = சிறந்த , கட்டுக் கோப்பான

வெஞ்சிலையானுக் = வலிமை வாய்ந்த வில்லை கையில் கொண்ட அவனிடம்

கென்னிலைமை யுரையாயே  = என் நிலைமையை சொல்ல மாட்டாயா

மேலோட்டமாக பார்த்தால் ஏதோ நாயகன் நாயகி பாவத்தில் , காதல் வயப்பட்ட தலைவி , வண்டை தலைவனிடம் தூது விடும் பாடல் மாதிரி தெரியும்.

உண்மை அது அல்ல. மிக ஆழமான அர்த்தம் கொண்ட பாசுரம்.

அது என்ன அர்த்தம் ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/108.html




Sunday, October 28, 2018

108 திவ்ய தேசம் - திருவாலி

108 திவ்ய தேசம் - திருவாலி 


ஆணின் உலகம் கரடு முரடானது. போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு, நம்பிக்கை துரோகம் போன்றவற்றால் நிறைந்தது. ஆணின் உலகம் போராட்டம் நிறைந்தது.

ஏதோ ஒரு சிக்கலில் மாட்டி, சிக்கி சின்னா பின்னாமாகி வீட்டுக்கு வருவான். கோபம், ஏக்கம், வலி இவற்றோடு வருவான். வந்தவுடன் , அவன் முகத்தைப் பார்த்தவுடன் அவன் மனைவிக்குத் தெரியும். இன்னிக்கு என்னமோ நடந்திருக்கு என்று புரிந்து கொள்வாள்.

அவளால் முடிந்தவரை அவன் வலியை நீக்கி, அவனை சாந்தப் படுத்த முயல்வாள்.

"சரி விடுங்க...இது போனா இன்னொன்னு. இன்னிக்கு இல்லேனா நாளைக்கு கிடைத்து விட்டுப் போகிறது. எதுக்கு போட்டு மனச குழப்பிக்கிறீங்க " என்று ஆறுதல் சொல்லி அவனுக்கு அமைதி தர முயல்வாள்.

பெண்ணின் அருகாமை ஆணை அமைதிப் படுத்தும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்த அரக்கர்கள் இருக்கிறார்களே சரியான முட்டாள்கள். மரணம் என்பதை வெல்லவே முடியாது என்று தெரிந்தும், எத்தனையோ விதங்களில் மரணத்தை வெல்ல வரம் வாங்குவார்கள். பின், அந்த வரங்களை எல்லாம் மீறி அவர்கள் கொல்லப் படுவார்கள்.

இரணியன் என்று ஒரு அரக்கன் இருந்தான். அவன் மிக மிக கடினமான வரம் வாங்கினான். நமக்கெல்லாம் தெரிந்த கதைதான்.

பெருமாள், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை கொன்றார்.

கொன்ற பின்னும், நரசிம்மத்தின் கோபம் அடங்கவில்லை. அந்தக் கோபம் அடங்காவிட்டால் உலகமே அழிந்து விடும் என்று பயந்த தேவர்கள், நேராக இலக்குமியிடம் சென்று "தாயே, நீ தான் பெருமாளின் கோபத்தை தணித்து இந்த உலகை  காக்க வேண்டும் " என்று வேண்டினார்கள்.

பெண்ணின் அன்பில் உருகாத மனமும் உண்டோ ?

இலக்குமி ஒன்றுமே செய்யவில்லை. நேராக சென்று அந்த நரசிம்மத்தின் மடியில் அமர்ந்து விட்டாள்.. அவ்வளவுதான்.

அப்படி மடியில் அமர்ந்த இலக்குமியை , பெருமாள் ஆலிங்கனம் செய்து கொண்டார் (கட்டிப் பிடித்துக் கொண்டார்). அப்படி கட்டிப் பிடித்தவுடன் அவரின் கோபம் எல்லாம்  மறைந்தே போய் விட்டது. அமைதி ஆனார்.

அப்படி அவர் இலக்குமியை ஆலிங்கனம் செய்து கொண்ட தலம் திரு ஆலி அல்லது திருவாலி என்று அழைக்கப் படுகிறது.

சீர்காழிக்கு பக்கத்தில் இருக்கிறது. மூணு கிலோமீட்டர் தூரம்தான்.

மூலவர் இலட்சுமி நரசிம்மன். அமர்ந்த திருக்கோலம்.

திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திருத்தலம்.


"மலரின் மெல்லிய இதழ்களை பிரித்து அதில் உள்ள தேனை , உன் துணையோடு அருந்தும் வண்டே,  மறையவர்கள் ஓமம் வளர்த்து வேதங்களை ஓதும் புகழ் கொண்ட திருவாலி நகரில் உள்ள அந்த பெருமாளிடம் என் நிலைமையை சென்று சொல்லாயோ "

என்று வண்டை தூது விடுகிறார்.



பாடல்

தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே
 பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே
 தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாழி
 ஏவரி வெஞ்சிலையானுக் கென்னிலைமை யுரையாயே - (1198)
                       
பெரியதிருமொழி 3-6-1


பொருள்

தூவிரிய = சிறகுகள் விரிய

மலருழக்கித்  = மலரின் உள்ளே சென்று

துணையோடும் = உன் துணையோடு

பிரியாதே = எப்போதும் பிரியாமல்

பூவிரிய = மலர் விரிந்து

மதுநுகரும் = அதில் உள்ள தேனை அருந்தும்

பொறிவரிய = புள்ளிகளும், கோடுகளும் கொண்ட

சிறுவண்டே = சிறு வண்டே

தீவிரிய = தீ வளர்த்து

மறைவளர்க்கும் = வேதங்களை போற்றும்

புகழாளர் = புகழ் படைத்தவர்கள்

திருவாழி = திருவாலி என்ற திருத்தலத்தில்

ஏவரி = சிறந்த , கட்டுக் கோப்பான

வெஞ்சிலையானுக் = வலிமை வாய்ந்த வில்லை கையில் கொண்ட அவனிடம்

கென்னிலைமை யுரையாயே  = என் நிலைமையை சொல்ல மாட்டாயா

மேலோட்டமாக பார்த்தால் ஏதோ நாயகன் நாயகி பாவத்தில் , காதல் வயப்பட்ட தலைவி , வண்டை தலைவனிடம் தூது விடும் பாடல் மாதிரி தெரியும்.

உண்மை அது அல்ல. மிக ஆழமான அர்த்தம் கொண்ட பாசுரம்.

அது என்ன அர்த்தம் ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/108.html





Saturday, October 27, 2018

இராமானுஜர் நூற்றந்தாதி - கள்ளம் கழற்றி

இராமானுஜர் நூற்றந்தாதி - கள்ளம் கழற்றி 



உடம்பு சரி இல்லை என்றால் மருத்துவரிடம் செல்வோம். அவர் ஸ்கேன், X Ray , blood test எல்லாம் எடுத்து பார்த்து விட்டு, சாதாரண வியாதி என்றால் மருந்து மாத்திரை தருவார்.


அதுவே கொஞ்சம் சிக்கலான வியாதி என்றால், "இதற்கு அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் " என்று சொல்லி அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி விடுவார்.


அறுவை சிகிச்சை என்றால் என்ன சும்மாவா ?


இரத்த அழுத்தம் பார்க்க வேண்டும், சர்க்கரை அளவு பார்க்க வேண்டும் , எல்லாம் சரியாக இருந்தால் தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை செய்யும் போது வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து தருவார்கள். சிகிச்சை முடிந்து உடம்பு பழைய படி வர அதற்கு வேண்டிய மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.


உடம்பில் ஒரு உபாதை என்றாலே இந்தப் பாடு.


மனதில் சிக்கல் என்றால் என்ன செய்வது?


மனதுக்கு எவ்வளவு வியாதி வருகிறது - கோபம், தாபம், பொறாமை, பயம், காமம், என்று ஆயிரம் வியாதி வருகிறது. மனதுக்குள் போய் இவற்றை அறுவை சிகிச்சை செய்து அறுத்து அகற்ற வேண்டும். அதுவும் வலி இல்லாமல்.  யார் செய்வது ? எப்படி செய்வது ?


அது மட்டும் அல்ல, நமக்கு அப்படி ஒரு மனோ வியாதி இருக்கிறது என்றே நமக்குத் தெரியாது. உடம்பில் நோய் என்றால் தெரியும். வலிக்கும். சோதனை செய்து கண்டு பிடித்து விடலாம். மனதில் ஒரு வியாதி வந்தால் தெரியக் கூட செய்யாது.


அது மட்டும் அல்ல, ஒரு முறை சரி செய்தால் மீண்டும் அந்த வியாதி வரக் கூடாது. அப்படி ஒரு மருத்துவம் செய்ய வேண்டும்.


யார் செய்வார்கள் ? எப்படி செய்வார்கள் ?


ஒரு நல்ல ஆசிரியன், ஆசாரியன் தான் நம்மை அறிந்து, நம் மனதில் உள்ள குற்றங்களை களைந்து, நம்மை கொண்டு போய் இறைவனிடம் சேர்ப்பிக்க முடியும்.


எங்கு போய் அப்படி ஒரு ஆச்சரியனை நாம் தேடி கண்டு பிடிப்பது? தேவையே இல்லை. நாம் தயாராக இருந்தால், ஆசாரியன் நம்மைத் தேடி வருவான்.


திருவரங்கத்தமுதனார் சொல்கிறார்


"இராமானுஜரே , நீர் என் மனதுக்குள் நான் அறியாமல் புகுந்து, என் மனதில் உள்ள குற்றங்களை எல்லாம் நீக்கி விட்டீர். அது மட்டும் அல்ல, இனி அக்குற்றங்கள் என்னிடம் வரமால் செய்து விட்டீர். மேலும், என்னை அந்த திருமகள் துணைவனிடம் கொண்டு சேர்த்தும் விட்டீர் "


என்ன உன் கருணை என்று உருகுகிறார்.


பாடல்


கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தி னால்மிக வஞ்சித்து நீயிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்
பொருத்தப் படாது, எம் இராமா னுச! மற்றோர் பொய்ப் பொருளே.

பொருள்


கருத்திற் புகுந்து = என் மனதினில் புகுந்து

உள்ளிற் = உள்ளத்தில் உள்ள

கள்ளம் கழற்றிக் = கள்ளம் (குற்றம்) நீக்கி

கருதரிய = நினைத்தும் பார்க்க முடியாத

வருத்தத்தி னால் = சிரமப் பட்டு

மிக வஞ்சித்து = என்னை ஏமாற்றி

நீயிந்த = நீ இந்த

மண்ணகத்தே = மண்ணுலகில்

திருத்தித் = என்னை திருத்தி

திருமகள் = இலக்குமி தேவியின்

ள்வனுக் காக்கிய பின் = துணைவனுக்கு என்று என்னை ஆக்கிய பின்

என் நெஞ்சில் = என் நெஞ்சில்

பொருத்தப் படாது = பொருந்தாது

எம் இராமா னுச! = எம் இராமானுச

மற்றோர்  = வேறு ஒரு

பொய்ப் பொருளே.= பொய் பொருளே

ஒருவரின் மனதால், அவரே அறியாமல் போய் அதில் உள்ள குற்றங்களை களைவது என்றால்  எளிதான காரியம் அல்ல. இராமானுசர் அப்படி , திருவரங்கத்து அமுதனார்  மனதில், அவரே அறியாமல் கள்ளத்தனமாக புகுந்து, அவர் மனதில் உள்ள குற்றங்களை நீக்கினாராம். அது மட்டும் அல்ல, குற்றங்களை நீக்கி  அவரை கொண்டு போய் இறைவனிடம் சேர்ப்பித்தும் விட்டார்.


"என் உள்ளம் கவர் கள்வன் " என்பார் திரு ஞான சம்பந்தர். இறைவனோ, ஆச்சாரியனோ , நம்மை கேட்டு நமக்கு நல்லது செய்வது இல்லை. நமக்குத் தெரியாமலேயே பல நன்மைகளை செய்து விடுகிறார்கள்.


வீட்டுக்கு வரும் திருடன் , நம்மை கேட்டு விட்டா வருகிறான். நமக்குத் தெரியாமல் நம் வீட்டுக்குள் புகுந்து நல்லதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விடுகிறான்.


இங்கே, ஆசாரியன் , வஞ்சககமாக நம் மனதில் நுழைந்து, நம் மனதில் உள்ள  வேண்டாத விஷயங்களை எடுத்துக் கொண்டு போய் விடுகிறான்.


"பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி " என்பார் மணிவாசகர்.


நல்லது எது கெட்டது எது என்று நமக்கு எங்கே தெரிகிறது?


நல்ல ஆசாரியன், குரு நமக்கு எது நல்லதோ அதைச் செய்வான், அதுவும் நாம் அறியாமலேயே.


எல்லாம் குருவருள்.


ஆச்சரியனின் அருள் எப்படி எல்லாம் நமக்கு உதவுகிறது என்று இராமானுச நூற்றந்தாதியில்  திருவரங்கத்து அமுதனார் உருகி உருகி நூறு பாடல்கள் பாடி இருக்கிறார். வாசித்துப் பாருங்கள்.


குருவருள் சேரட்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_27.html