Monday, February 18, 2019

குறுந்தொகை - இனியவோ ?

குறுந்தொகை - இனியவோ ?


காரிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போகலாம். ஆனால், ஒரு காலத்தில் இருந்து இன்னொரு காலத்துக்குப் போக முடியுமா ? ஆயிரம் ஆண்டுகள் முன்னோ பின்னோ போக முடியுமா ? அப்படி போக இதில் ஏறிப் போக வேண்டும்? அதற்கு ஒரு வாகனம் இருக்கிறதா என்ன?

இருக்கிறது. அதன் பெயர் இலக்கியம்.

இலக்கியம் படைக்க மட்டும் அல்ல, படிக்கவும் நிறைய கற்பனை வளம் வேண்டும்.  இலக்கியங்கள் காலத்தால் மிக முந்தியவை. அதிலும் குறிப்பாக தமிழ் இலக்கியம் காலத்தால் மிக முந்தியது. இலக்கியங்கள் நம்மை வேறு ஒரு கால கட்டத்திற்கு மிக எளிதாக கொண்டு செல்லும் வல்லமை வாய்ந்தவை. நாமும் கொஞ்சம் ஒத்துழைத்தால். அந்த வண்டியில் போக கற்பனை என்ற டிக்கெட் வாங்க வேண்டும். அவ்வளவுதான்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

என்றாவது சாப்பாட்டில் உப்பு இல்லாமலோ, அல்லது மிகக் குறைவாகவோ போட்டு சாப்பிட்டு இருக்கிறீர்களா? எப்படி இருக்கும்? வாயில் வைக்க விளங்காதல்லவா? உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்று சொல்லுவார்கள்.

நமக்கு உப்பு மிக எளிமையாக கிடைத்து விடுகிறது.

ஆயிரம்    ஆண்டுகள் பின்னோக்கி போங்கள். பெட்ரோல் கிடையாது. டீசல் கிடையாது. லாரி , டெம்போ வேன் கிடையாது. மின்சாரம் கிடையாது. கம்ப்யூட்டர் கிடையாது. உப்பு எங்கோ ஒரு கடற்கரையில் உருவாகும். அது கடற்கரையை விட்டு தள்ளி இருக்கும் ஒரு ஊருக்கு எப்படி வரும்? யோசித்துப் பாருங்கள் ?

உப்பு விற்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்தது. அவர்களுக்கு உமணர்கள் என்று பெயர்.   அவர்கள், கடற்கரையில் இருந்து உப்பு வாங்கிக் கொண்டு ஊர் ஊராய் சென்று    விற்பார்கள்.

அப்படி போகும் வழியில், ஹோட்டல் எல்லாம் கிடையாது. அக்கம் பக்கம் ஊர் ஒன்றும் இருக்காது. ஊர் வேண்டும் என்றால், நீர் வேண்டும், விவசாயம் வேண்டும், அதெல்லாம் இருந்தால் தான் ஊரு உருவாகும். தண்ணி இல்லாத காட்டில்  ஊர் ஏது ? ஒரே வறண்ட நிலமாக இருக்கும்.

அவர்களே ஏதாவது பாழடைந்த ஒரு வீட்டின் நிழலிலோ அல்லது மரங்களின் நிழலிலோ தங்கி, கற்களை கூட்டி, அடுப்பு செய்து உணவு ஆக்கி உண்பார்கள். உண்ட பின், அவற்றை அப்படியே போட்டு விட்டுப் போய் விடுவார்கள். கருகிய விறகும், சாம்பலும், அந்த கூட்டு கற்களும் அங்கே கிடக்கும்.

அந்த வழியாக தலைவன் சென்று வேறு ஒரு ஊருக்குச் சென்று பொருள் தேடப் போகிறான். அவளும், அவன் கூட வருவேன் என்று மல்லுக்கு நிற்கிறாள். அவன் இதை எல்லாம் எடுத்துச் சொல்லி..."வேண்டாண்டா...உன்னால முடியாது. ரொம்ப கஷ்டம். நீ பேசாம, இராஜாத்தி மாதிரி இங்க இரு.  நான் போய் சம்பாதித்து பொருள் கொண்டு வருகிறேன் "  என்று எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான். அவள் சம்மதிக்கவில்லை.

அவளுடைய தோழியிடம் சென்று சொல்கிறாள் "என்ன விட்டு விட்டு அவன் மட்டும் தனியா போறேன்னு சொல்றான். நானும் கூடப் போறேன். அவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. சரியான மர மண்டையா இருக்கான்....நீயாவது அவனிடம் சொல்லேன் " என்று. தோழி "சரி...சரி..நீ அழாத, நான் பேசுறேன்" என்று சொல்லிவிட்டு, அவனிடம் சென்று பேசுகிறாள்

" நீ சொல்வதெல்லாம் சரி தான். ஆனா உனக்கு ஒண்ணு புரிய மாட்டேங்குது. அது தான் பெண்ணின் மனசு. நீ இல்லாமல் அவள் இங்கே சந்தோஷமா இருப்பான்னு நினைக்கிறியா  ?" என்று ஒரு போடு போடுகிறாள்.

பாடல்

உமணர் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா
டின்னா வென்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே

பொருள்

உமணர் = உப்பு விற்பவர்கள். உப்பு விற்பவர்கள் என்று குறிப்பாக சொன்னாலும், விற்பவர்கள், வியாபாரிகள் என்று பொதுவாக பொருள் கொள்வது நன்றாக இருக்கும்.

சேர்ந்து = ஒன்றாகச் சேர்ந்து

கழிந்த = விற்று முடித்தவுடன் விலகி சென்ற பின்

மருங்கின் = இடத்தின்

அகன்தலை = விலகிய இடத்தில்

ஊர் பாழ்த்தன்ன = பாழ் பட்ட, வெறிச்சோடிப் போன ஊர் போல

ஓமை = ஒரு விதமான மரம். (tooth brush tree என்று பொருள் சொல்கிறார்கள். ஒரு வேளை சவுக்கு மரமாக இருக்குமோ ?)

அம் பெருங்காடு = ஊருக்கு வெளியே உள்ள அந்த பெரிய காடு

இன்னா = கொடியது

என்றிர் ஆயின் = என்று நீ சொன்னால்

இனியவோ = இனிமையானதா ?

பெரும = பெரியவனே

தமியர்க்கு மனையே = தனித்து நிற்கும் எங்கள் வீடே

நீ இல்லாத வீடு வெறிச்சோடிப் போய் இருக்கும். தனியாக அவள் என்ன செய்யவாள். அதை எல்லாம் நீ சிந்தித்துப் பார்க்க வேண்டாமா என்று கூறுகிறாள்.

சொன்னது பாதி. சொல்லாமல் விட்டது மீதி.

ஒருவேளை அவர்களுக்கு சமீபத்தில் திருமணம் ஆகி இருக்கலாம். குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம். குழந்தைகள் இருந்தால் அவைகளையும் தூக்கிக் கொண்டு வருவேன் என்று சொல்லுவாளா?  கணவனும் இல்லை. பிள்ளைகளும் இல்லை என்றால், தனிமையில் அவள் என்ன செய்வாள்?

பெண்களின் சங்கடங்களை ஆண்கள் புரிந்து கொள்வதே இல்லை போலும், சங்ககாலம் தொட்டு.

கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள். காலம் கடந்து, இன்னொரு உலகத்துக்கு உங்களை இந்த இலக்கியங்கள் கொண்டு செல்லுவதை நீங்கள் உணரலாம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_18.html


Sunday, February 17, 2019

திருக்குறள் & ஆத்திச் சூடி - படிக்கணும்

திருக்குறள் & ஆத்திச் சூடி - படிக்கணும் 


இன்றைய சூழ்நிலையில், நிறைய இளம் பையன்களும் பெண்களும்  அயல் நாட்டுக்குப் போய் படிக்க வேண்டும். அயல் நாட்டுக்குப் போய் வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அமெரிக்கா. கனடா. ஐரோப்பா. ஆஸ்திரேலியா. என்று கண்டம் விட்டு கண்டம் சென்று படிக்க மற்றும் வேலை தேடி செல்கிறார்கள்.

நாளடைவில் அந்த நாட்டிலேயே குடியுரிமை பெற்று விடுகிறார்கள். அங்கேயே வீடு வாசல் வாங்கி, பிள்ளைகளை அங்கேயே படிக்க வைத்து மொத்தமாக குடி பெயர்ந்து விடுகிறார்கள்.

அது நல்லது தான்.

உயர்ந்த கல்வி. நிறைய சம்பளம். சிறப்பான சுற்றுப் புற சூழ்நிலை. எல்லாமே நல்லது தான்.

இப்படி பிறந்த நாட்டை விட்டு விட்டு, இன்னொரு நாட்டுக்குப் போகலாமா ? பிறந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? தாய் நாடு அல்லவா என்ற கேள்வி ஒரு புறம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. சில பெரியவர்கள், வயதானவர்கள் "ஆயிரம் தான் இருந்தாலும், நம்ம ஊரு போல வருமா " என்று அங்கலாய்ப்பார்கள். "உள்ளூரில் விலை போகாத மாடு தான் வெளி ஊரில் விலை போகும் " என்று குதர்க்கம் பேசுபவர்களும் உண்டு. "இங்க பத்து ரூபாய் இட்லி, அங்க நூறு ரூபாய். இங்க பத்து ஆயிரம் சம்பாதிப்பதும் ஒன்று தான் , அங்க போய் இலட்ச ரூபாய் சம்பாதிப்பதும் ஒன்று தான் " என்று கூறும் பொருளாதார மேதைகளும் உண்டு.

இதற்கு விடை யார் தருவது? வள்ளுவரிடமே கேட்போம்.

என்னது வள்ளுவரா ? அவருக்கு என்ன தெரியும் இந்த பாஸ்போர்ட், விசா, workpermit , immigration, citizenship பத்தி எல்லாம் என்று நினைக்கிறீர்களா?

அவரு பெரிய ஆளு.

போற போக்கில ஏழு வார்த்தைகளில்  நமக்கு விடை சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

பாடல்

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் 
சாந்துணையும் கல்லாத வாறு 


பொருள்


யாதானும் = எதானாலும் (எந்த இடம் ஆனாலும்)

நாடாமால் = நாடு ஆம்

ஊராமால் = ஊர் ஆம்

என்னொருவன்  = ஏன் ஒருவன்

சாந்துணையும் = சாகும் வரையில்

கல்லாத வாறு  = கல்வி கற்காமல் இருப்பது

அதாவது, படித்தவனுக்கு, எல்லா நாடும், எல்லா ஊரும் தன் நாடு, தன் ஊர் போலத்தான். அப்படி இருக்க, எவனாவது சாகும் வரையில் படிக்காமல் இருப்பானா என்று கேட்கிறார்.

மிக மிக ஆழமான பொருள் கொண்ட குறள் . ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

முதலாவது, படித்தவனுக்கு எல்லா ஊரும், தன் சொந்த ஊர் போல. எல்லா நாடும் தன் சொந்த நாட்டைப் போல. எனவே, எங்கு ஒரு வேறுபாடும் இல்லை. அவன் எங்கு வேண்டுமானாலும் போய் தங்கலாம், படிக்கலாம், வேலை செய்யலாம். வள்ளுவர் விசா தந்து விட்டார்.

இரண்டாவது,  ஒருவன் பிறந்த நாட்டில் அவனுக்கு குடி உரிமை இருக்கிறது.  படித்தவன்  எந்த நாட்டுக்கு சென்று அங்கு குடி உரிமை கேட்டாலும், அந்த நாடு அவனை தன் குடிமகனாக / மகளாக ஏற்றுக் கொண்டு குடி உரிமை வழங்கி விடும். எல்லா நாடும் அவனை தங்கள் நாட்டு குடிமகனாக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும். அவனுக்கு பிறந்த ஊரும் ஒன்றும் தான், மற்ற ஊரும் ஒன்று தான். ஒரு வேறுபாடும் இல்லை.

மூன்றாவது, அடடா, அந்தக் காலத்திலேயே யாரும் எனக்கு இதை சொல்லவே இல்லையே. சொல்லி இருந்தால் நானும் படித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று போய் செட்டில் ஆகியிருப்பேனே என்று நினைத்து வருந்த வேண்டாம். வள்ளுவர் சொல்கிறார், இன்னைக்கு ஆரம்பி. இன்றிலிருந்து படிக்கத் தொடங்கு. இளமையில் கல் என்று சொன்னது சரிதான். எப்போது நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. "சாம் துணையும்" . சாகும் வரை படிக்க வேண்டும் என்கிறார். இன்று ஆரம்பித்து , சாகும் வரை படித்துக் கொண்டே இருந்தால், எல்லா நாடும் நம் நாடு ஆகும்.  40 , 50, 60 வயதுக்கு மேல் படிக்கத் தொடங்கி சாதித்தவர்கள் இல்லையா ? இதுவரை படிக்காவிட்டாலும் பரவாயில்லை. இன்று நல்ல நாள் ஆரம்பிக்கலாம்.

நான்காவது, சரி வெளி நாட்டுக்குப் போய் , தத்தி முத்தி குடியுரிமை வாங்கியாச்சு. அப்புறம்  என்ன. ஜாலிதான். புத்தகத்தை எல்லாம் மூட்டை கட்டி போட்டுற வேண்டியதுதானா ? இல்லை. சாகும் வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.  புதிது புதிதாக ஏதாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

ஐந்தாவது, சில பேர் நினைப்பார்கள்...ஆமா இப்பவே இவ்வளவு வயாசாச்சு...இனிமேல் படிச்சு ...என்னத்த செய்ய ...என்று. அப்படி நினைக்கக் கூடாது. கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். சாகும் வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்..

ஆறாவது, வயதான காலத்தில் மிக பெரிய சிக்கல் எது என்றால் நோய் , உடல் வலிமை குன்றுவது, காது கேட்காமல் போவது, கண் சரியாக தெரியாமல் போவது போன்றவை அல்ல. தனிமை.  தனிமை தான் மிகப் பெரிய கொடுமை. சிறையில் போட்டது மாதிரி இருக்கும். பேசக் கூட யாரும் இருக்க மாட்டார்கள். பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் எல்லாம் அவர்கள் வாழ்வில் மும்மரமாக இருப்பார்கள். நம்மோடு இருந்து பேச அவர்களுக்கு நேரம் இருக்காது.  என்ன செய்வது ? சாகும்  வரை கற்றுக் கொண்டே இருந்தால், அந்தத் தனிமை தெரியாது.  கற்பது என்பது அவ்வளவு இனிமையான விஷயம்.  படுக்கையில் கிடந்து கடைசி மூச்சு வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

வள்ளுவராவது ஏழு வார்த்தை எடுத்துக் கொண்டார்.

நம்ம கிழவி, ஒளவை இரண்டே வார்த்தையில் சொல்லி விட்டுப் போய்விட்டாள்.

ஓதுவது ஒழியேல் 

படிப்பதை விட்டு விடாதே. ஓதுவது என்றால், படிப்பது, படித்தையே மீண்டும் மீண்டும் படிப்பது. நன்றாக மேடையில் ஏறும்வரை படிப்பது. ஓதுவார் என்று சொல்லுவார்கள். அவர் படித்து. படித்ததை பல முறை சொல்லிப் பார்த்து, மற்றவர்களுக்கும்  சொல்லுவார். அவர் சொல்லுவதை, பாடுவதை கேட்டு கேட்டு நமக்கு பாடம் ஆகி விடும். படி. திரும்பத் திரும்பப் படி. மனதில் தெளிவாகும் வரை படி. படித்ததை மற்றவர்களுக்கு சொல். இதை ஒரு நாளும் விட்டு விடாதே என்கிறாள் ஒளவை.

ஏதாவது சால்ஜாப்பு சொல்லாமல், படிக்கத் தொடங்குங்கள்.

என்ன படிக்கப் போகிறீர்கள்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_17.html

Saturday, February 16, 2019

குறுந்தொகை - நோமென் நெஞ்சே

குறுந்தொகை - நோமென் நெஞ்சே 


வீட்டில் பிள்ளைகள் சில சமயம் சொன்ன பேச்சு கேட்காமல் ஓடி ஆடி கீழே விழுந்து முட்டியை சிராய்த்துக் கொண்டு வந்து நிற்பார்கள். ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் "வேணும், சொன்னா கேட்டாத்தான...இப்படி ஒரு தடவை காயம் பட்டுக்கிட்டு வந்தா தான் உனக்கு புத்தி வரும் " என்று அவர்கள் மேல் நாம் கோபம் கொள்வதும் உண்டு.  என்ன தான் கோபம் வந்தாலும், பிள்ளை பாசம் போகுமா. "வா இங்க...எப்படி அடி பட்டுக்கிட்டு வந்திருக்க பாரு...பாத்து விளையாடக் கூடாதா" என்று ஆறுதலும் சொல்லுவம், அடி பட்ட இடத்துக்கு மருத்துவமும் செய்வோம்.

காதலன் அவளை விட்டு பிரிந்து விட்டான். ஒரேயடியாக இல்லை. என்னமோ கொஞ்ச நாளா பேச்சே இல்லை. அவளுக்கு வருத்தம் தாங்கவில்லை. அழுகிறாள். யாரிடம் சொல்ல முடியும் ?

அவள் நெஞ்சிடம் கூறுகிறாள்


"நல்லா அழு. இவ்வளவு கண்ணீர் விட்டு அழுதாலும் வராத காதலர் நமக்கு அமைந்திருக்கிறார். அதை நினைத்து நல்லா அழு. எனக்கென்ன " என்று தன் நெஞ்சோடு நொந்து கொள்கிறாள் அவள்.

பாடல்

நோமென்  னெஞ்சே  நோமென்  னெஞ்சே 
இமைதீய்ப்  பன்ன  கண்ணீர்  தாங்கி 
அமைதற்  கமைந்தநங்  காதலர் 
அமைவில  ராகுத  னாமென்  னெஞ்சே.


சீர் பிரித்த பின்


நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே

பொருள்


நோம் = நொந்து கொள்

என் நெஞ்சே = என் மனமே

நோம் = நொந்து கொள்

என் நெஞ்சே = என் மனமே

இமை = இமைகள்

தீய்ப்பு அன்ன = தீய்ந்து போகும் அளவுக்கு

கண்ணீர் தாங்கி = கண்ணீர் தாங்கி

அமைதற்கு அமைந்த = இருக்கும்படி நமக்கு கிடைத்த

நம் காதலர்  = நம்முடைய காதலர்

அமைவிலர் ஆகுதல் = நமக்கு சரியாகவில்லை என்றால்

நோம் என் நெஞ்சே  = நொந்துகொள் என் நெஞ்சே

சூடான கண்ணீர். அது கண்ணிலேயே தங்கி விட்டது. கண்ணீர் காயவே இல்லை. அந்த சூட்டில் கண் தீய்ந்து விடும் போல் இருக்கிறது.

என்ன அழுது என்ன பயன்? அவன் தான் வரவே மாட்டேன் என்கிறானே.

"நீ வருத்தப் பட்டுக் கொள் . வேறு என்ன செய்ய "

நம் முன்னவர்கள் உருகி உருகித்தான் காதலித்து இருக்கிறார்கள்.

அவர்களின் மரபணு நம்மிடமும் இருக்கும் அல்லவா. எங்கே போகும்?

அந்த காதல் என்ற  ஜீவ நதி அன்றில் இருந்து வரை , வற்றாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த மண், அதனால் தான் இன்னமும் ஈரமாகவே இருக்கிறது.

அவள் அன்று அழுத கண்ணீர் இன்னமும் காயவில்லை. இந்த பிளாகின் மூலம் இன்றும் கசிந்து கொண்டே இருக்கிறது.

தமிழ் நாட்டில், ஏதோ ஒரு கிராமத்தில், என்றோ அவள் அழுத கண்ணீர், காலம் பல கடந்து, இன்று இன்டர்நெட்டில் , கண்டம் விட்டு கண்டம் போய் கொண்டிருக்கிறது.

அவள் இல்லை.  அவன் இல்லை. அந்த கண்ணீர் மட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறது.


https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_16.html

Wednesday, February 13, 2019

புறநானுறு - நரை முடி இல்லாமல் இருக்க

புறநானுறு - நரை முடி இல்லாமல் இருக்க 


நரை வந்தால் யாருக்குத்தான் பிடிக்கும்? முதல் நரை கண்டவுடன் நமக்கெல்லாம் தலையில் இடி விழுந்த மாதிரி இருக்கும். அதை யாருக்கும் தெரியாமல் பறித்து எறிந்து விடுவோம். அப்புறமும் அது வந்து கொண்டேதான் இருக்கும். நமக்கு வயதாவதை கட்டியம் கூறும் அது.

கம்பர் நரை முடிக்கு ஒரு பாடலே எழுதி இருக்கிறார். தசரதன் காதின் ஓரம் ஒரு நரை முடி கண்டான். மறு வினாடி , நாட்டை இராமனுக்கு கொடுத்து விட்டு கானகம் போக முடிவு செய்தான். கொஞ்சம் வெட்டி விடுவோம். கொஞ்சம் டை அடித்துக் கொள்வோம் என்று நினைக்கவில்லை. வயதாவதை நாம் ஏற்றுக் கொள்ளுவது இல்லை.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

பிசிராந்தையார் என்று ஒரு புலவர் இருந்தார். அவருக்கு வயது ஆகிக் கொண்டே இருந்தது. இருந்தும், முடி நரைக்கவே இல்லை. அவரிடம் கேட்டார்கள், "எப்படி உங்களுக்கு மட்டும் முடி நரைக்கவே இல்லை" என்று.

அதற்கு அவர் சொன்னார் "என் மனைவியும் பிள்ளைகளும் மாண்பு உடையவர்களாக இருக்கிறார்கள். ஊரில் உள்ள மற்றவர்களும், அரசனும் அறம் பிறழாமல் வாழ்கிறார்கள். அறிவு நிறைந்த சான்றோர் அடக்கத்துடன் இருக்கிறார்கள் என் ஊரில். எனவே எனக்கு முடி நரைக்கவில்லை" என்றார்

பாடல்

யாண்டுபல  வாக  நரையில  வாகுதல்
யாங்கா  கியரென  வினவுதி  ராயின்
மாண்டவென்  மனைவியொடு  மக்களு  நிரம்பினர்
யாண்கண்  டனையரென்  னிளையரும்  வேந்தனும்
அல்லவை  செய்யான்  காக்கு  மதன்றலை
ஆன்றவிந்  தடங்கிய  கொள்கைச்
சான்றோர்  பலர்யான்  வாழு  மூரே.

கொஞ்சம் கடினமான பாடல் தான்.

சீர் பிரித்தால் எளிமையாக இருக்கும்.

ஆண்டு  பலவாக நரை இல  ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
யான் கண்ட அனையர் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்க அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.


பொருள்

ஆண்டு = வருடங்கள்

பலவாக = பல கழிந்தாலும்

நரை இல = நரை இல்லாமல்

 ஆகுதல் = இருப்பது

யாங்கு = எப்படி

ஆகியர் = ஆகினாய்

என  = என்று

வினவுதிர் = கேட்பீர்கள்

ஆயின் = ஆனால்

மாண்ட = மாட்சிமை பொருந்திய

என் மனைவியோடு = என் மனைவியோடு

மக்களும் = பிள்ளைகளும்

நிரம்பினர் = நிரம்பி இருந்தனர். மாட்சிமை பொருந்தி விளங்கினார்கள்

யான் கண்ட = நான் பார்த்த

அனையர்  = அனைவரும்

இளையரும் = இளையவர்களும்

வேந்தனும் = அரசனும்

அல்லவை = நல்லது அல்லாததை

செய்யான் = செய்யாமல்

காக்க = காப்பாற்றி வந்தார்கள்

அதன்தலை = அது மட்டும் அல்ல

ஆன்று  = நிறைந்து

அவிந்து = பணிவுடன்

அடங்கிய = அடக்கமான

கொள்கைச் = கொள்கையை கொண்ட

சான்றோர் = பெரியவர்கள்

பலர் = பலர்

யான் வாழும் ஊரே = நான் வாழும் ஊரில் இருக்கிறார்கள்

எனவே எனக்கு வயதே ஆகவில்லை என்கிறார்.

மனிதனுக்கு கவலையால் வயதாகிறது.

சிறந்த மனைவி. நல்ல பிள்ளைகள். செங்கோல் செலுத்தும் அரசன். அடாவடி பண்ணாத  ஊர் மக்கள். நல்லதை எடுத்துச் சொல்லும் பெரியவர்கள் இருந்தால் ஏன் கவலை வருகிறது. ஏன் முதுமை வருகிறது.

நமக்கு முதுமை வந்திருக்கலாம். நம்மால் மற்றவர்களுக்கு முதுமை வராமல் இருக்க  என்ன செய்ய முடியும் என்று சிந்திப்போம்.

சிறந்த மனைவியாக, கணவனாக இருக்க முடியுமா ?

நல்ல பிள்ளையாக இருக்கும் முடியுமா ?

நாம் செய்யும் வேலையை (அரசன்) திறம்பட செய்ய முடியுமா ?

நாளும் அறிவைப் பெருக்கி நமக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ள வாழ்வை வாழ முடியுமா ?

மண்டை கனம் இல்லாமல், அடக்கமாக இருக்க முடியுமா ?

என்று சிந்திப்போம்.

நல்லது தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_13.html


Tuesday, February 12, 2019

இராமாயணம் - பொருள் ஒன்று, சொல் இரண்டு

இராமாயணம் - பொருள் ஒன்று, சொல் இரண்டு 


சில சமயம் ஒரு பொருள், வேறு வேறு விதமான உணர்ச்சிகளை நமக்குத் தரும். பொருள் ஒன்று தான். அது இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து அதன் தன்மை மாறும்.

உதாரணமாக, பூ மாலையை எடுத்துக் கொள்வோம். அது கடவுள் சிலை மேல் இருந்தால் ஒரு அழகு. புது மண தம்பதிகள் மேல் இருந்தால் ஒரு அழகு. அதுவே ஒரு பிணத்தின் மேல் கிடந்தால் நமக்கு வேறு பல உணர்ச்சிகளைத் தரும். மாலை என்னவோ ஒன்றுதான். அது இருக்கும் இடத்தைப் பொறுத்து நமக்கு பல்வேறு உணர்ச்சிகளை தூண்டுகிறது.

மரங்கள் பல உண்டு. சில மரங்கள் வெட்டி வீழ்த்தப் பட்டாலும், அது மரம்தான். நல்ல தேக்கு மரத்தில் செய்த கதவு என்று தான் சொல்வோம். பனை மரத்தில் செய்த உத்திரம் என்று தான் சொல்லுவோம். ஆனால் சில மரங்கள் இருக்கின்றன. இருக்கும் வரை மரம், இறந்த பின் அது விறகு என்று அழைக்கப் படும். வீட்டில் அடுப்பு எரிக்கும் விறகு எந்த மரம் என்று யாருக்குத் தெரியும்.

பாரதியார் சொல்லுவார், கொடுங்கோல் மன்னன் ஜார்ஜ் இறந்த பின் அவன் கூட இருந்த ஆட்கள் எல்லாம் வீழ்ந்தார்கள். மரம் விழுந்து விறகானது போல என்பான்.

இமயமலை வீந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் 
ஜாரரசன் இவனைச் சூழ்ந்து 
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி 
அறங்கொன்று சதிகள் செய்த 
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார், 
புயற்காற்றுங் சூறை  தன்னில் 
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம் 
விறகான செய்தி போலே! 

மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போல...

இராமாயணத்தில், கைகேயிடம் கூனி சொல்கிறாள். "இரண்டு வரம் கேள். ஒன்றில் இராமனை காட்டுக்கு அனுப்பு. இன்னொன்றில் பரதனுக்கு அரசாட்சியைக் கேள். இதனால் 'செழு நிலம் எல்லாம்" உன் மகனுக்கு கிடைக்கும் என்கிறாள். 

கூனியின் நோக்கில் அது செழு நிலம். செழுமையான நிலம்.

'இரு வரத்தினில் , ஒன்றினால் அரசு கொண்டு , இராமன் 
பெரு வனம் அத்து இடை ஏழ் இரு பருவங்கள் பெயர்ந்து 
திரிதரச் செய்தி ஒன்றினால் ; செழும் நிலம் எல்லாம் 
ஒரு வழி படும் உன் மகற்கு ; உபாயம் ஈது ' என்றாள் 


அது கேட்ட கைகேயி மனம்  மாறுகிறாள்.

கூனியை அப்படியே கட்டிக் கொள்கிறாள். அவளுக்கு பரிசுகள் எல்லாம் தருகிறாள். இந்த உலகம் முழுவதையும் என் மகனுக்குத் தந்தாய். இந்தத் தரைக்கு நாயகனின் தாய் இனி நான்" என்கிறாள்.

அவளை அறியாமலேயே அவள் வாயில் இருந்து சொற்கள் வந்து விழுகின்றன. செழு நிலம், "தரை" என்று ஆகி விட்டது. செழுமையான நிலத்தில் எல்லாம் முளைக்கும். தரையில் என்ன என்ன விளையும்?

பாடல்

உரைத்த கூனியை உவந்தனள் , உயிர் உறத் தழுவி , 
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி , 
'இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் ! 
தரைக்கு நாயகன் தாய் இனி நீ ; எனத் தணியா . 


பொருள்

உரைத்த கூனியை = அவ்வாறு சொன்ன கூனியை

உவந்தனள் = உவகை கொண்டாள்

உயிர் உறத் தழுவி  = இறுக்க கட்டிப் பிடித்து

நிரைத்த மா மணி = பெரிய மணிகள் நிறைந்த

ஆரமும் = சங்கிலியும்

நிதியமும் = மற்ற செல்வங்களும்

 நீட்டி = கொடுத்து

'இரைத்த வேலை = எப்போதும் இரைந்து கொண்டே இருக்கும் கடல்

சூழ் = சூழ்ந்த

உலகம் = இந்த உலகை எல்லாம்

என் ஒரு மகற்கு ஈந்தாய் ! = என் ஒரு மகனுக்கு தந்தாய்

தரைக்கு = இந்த தரைக்கு

நாயகன் = தலைவனின்

தாய் இனி = தாய் இனிமேல் நான்

நீ ; எனத் தணியா . = நீ (மேலும் சொல்ல இருக்கிறாள் அடுத்து வரும் பாடல்களில்).

இது வரை இராமனும் தனக்கு மகன் என்று நினைத்துக் கொண்டிருந்த கைகேயி, இப்போது பரதன் மட்டும் தான் தனக்கு மகன் என்று நினைக்கத் தொடங்குகிறாள்

"என் ஒரு மகற்கு ஈந்தாய்" என்கிறாள்.

கம்பனின் சொல் நயம். நிலம் தரையானது. இராமன் இல்லாத அயோத்தி வெறும் கட்டாந்தரை தான் என்று சொல்லாமல் சொல்கிறான்.

ஒரு சொல்லுக்குள் காப்பியத்தின் போக்கை காட்டிவிட்டுப் போகிறான் கம்பன்.

இப்படி படித்து இரசிக்க நிறைய இருக்கிறது. ஒரு வாழ் நாள் போதாது. இருக்கிற கொஞ்ச நாளில் நல்லவற்றைப் படிப்போம். இரசிப்போம். 


Monday, February 11, 2019

ஒளவையார் - அரியது

ஒளவையார் - அரியது 


அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே

இந்தப் பாடல் பள்ளிக்கூடத்தில் படித்து இருப்பீர்கள். பெரிய சிக்கலான பாடல் ஒன்றும் இல்லை. சில சமயம், மிக எளிமையாக இருப்பதால் அதில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை நாம் அறியத் தவறி விடுகிறோம்.

இந்தப் பாடலில் அப்படி என்ன ஆழ்ந்த கருத்து இருக்கிறது என்று பார்ப்போம்.

மானிடராதல் அரிது - சரி தான். நாம் மானிடராகப் பிறப்பதற்கு நாம் என்ன செய்தோம்? ஒன்றும் செய்யவில்லை. பிறந்து விட்டோம். அவ்வளவுதான். நம் முயற்சி ஒன்றும் இல்லை.

பேடு நீங்கி பிறத்தல் அரிது - அதுவும் சரி தான். ஆனால், அதற்காக நாம் என்ன செய்ய முடியும். தாயின் கருவில் இருக்கும் போதே குருடு, செவிடு போன்ற குறைகளை நாம்  சரி செய்து கொள்ள முடியுமா ? முடியாது. ஏதோ, நம் நல்ல காலம் , குறை ஒன்றும் இல்லாமல் பிறந்து விட்டோம்.

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது....ஞானமும் கல்வியும் பெறுதல் அரிது என்று சொல்லவில்லை.  அடைதல் அரிது என்று சொல்லவில்லை. நயத்தல் அரிது  என்று சொல்கிறாள் ஒளவை.  நயத்தல் என்றால் விரும்புதல், இன்புறுதல், பாராட்டுதல், மகிழ்தல், சிறப்பித்தல் என்று பொருள். ஞானமும் கல்வியும்  எங்கு இருந்தாலும் அதை கண்டு முதலில் மகிழ வேண்டும், அதை அடையும் போது   மனதில் இன்பம் பிறக்க வேண்டும். "ஐயோ, இதை படிக்க வேண்டுமே " என்று மனம் நொந்து படிக்கக் கூடாது. "அடடா, எவ்வளவு நல்ல விஷயம்..இத்தனை நாளாய் இது தெரியாமல் இருந்து விட்டேனே ...நல்லது இப்பவாவது தெரிந்ததே " என்று மகிழ வேண்டும்.

ஞானம் வேறு, கல்வி வேறு. கல்வி கற்பதன் மூலம் வருவது. ஞானம் உள்ளிருந்து வருவது. உள்ளே செல்லும் கல்வி, உள்ளிருக்கும் ஞானத்தை வெளியே கொண்டு வர வேண்டும்.

"தானமும் தவமும் தான்செயல் அரிது"


படிப்பதாவது எப்படியாவது தத்தி முத்தி படித்து விடலாம்.  தானமும் தவமும்  செய்வது இருக்கிறதே  மிக மிக கடினமான செயல்.

இலட்சக் கணக்கில் செல்வம் இருந்தாலும், நூறு ரூபாய் தருமம் செய்ய மனம் வருமா ? தானம் கூட ஒரு வழியில் செய்து விடலாம். வெள்ள நிவாரண நிதி, முதியோர்  பாதுகாப்பு, பிள்ளைகள் பாதுகாப்பு நிதி என்று ஏதோ ஒன்றிற்கு நாம் தானம் கூட செய்து விடுவோம்.

தவம் ? தவம் செய்வது எளிதான செயலா ? யாராவது தவம் செய்வதைப் பற்றி நினைத்தாவது பார்த்தது உண்டா ? தவம் என்றால் ஏதோ காட்டுக்குப் போய் , மரத்தடியில் அன்ன ஆகாரம் இல்லாமல் இருப்பது என்று நினைக்கக் கூடாது. அது என்ன என்று  பின்னால் ஒரு blog இல் பார்க்க இருக்கிறோம்.

தானமும் தவமும் செய்து விட்டால், வானவர் நாடு வழி திறக்குமாம்.

சொர்கத்துப் போக வேண்டும், இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்று விரும்பாதவர் யார்.

சொர்கத்துப் போக என்ன வழி ? எப்படி போவது ?

ஔவை சொல்கிறாள் - தானமும் தவமும் செய்யுங்கள். சொர்கத்துக்கான வழி தானே திறக்கும் என்கிறாள்.

சம்பாதிப்பதை எல்லாம் வீடு வாசல், நகை, நட்டு , கார், shares , bonds என்று சேமித்து வைத்து விட்டு, சொர்கத்து எப்படி போவது ?

"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே " என்றார் பட்டினத்தார்.

தானமும் தவமும் எப்போது வரும் என்றால்,

ஞானத்தையும், கல்வியையும் நயத்தால் வரும். முதலில் கல்வி, அப்புறம் ஞானம். அது வந்தால், செல்வத்தின் நிலையாமை தெரியும். இளமையின் நிலையாமை தெரியும். அப்போது தானமும் தவமும் செய்யத் தோன்றும்.

ஞானத்தையும் கல்வியையும் எப்படி நயப்பது ?

கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்தால் , ஞானத்தையும், கல்வியையும் நயக்க முடியும்.

உங்களுக்கு கூன், குருடு, செவிடு போன்ற குறை ஒன்றும் இல்லையே ?

அப்படி என்றால், அடுத்த இரண்டையும் செய்யுங்கள், வானவர் நாடு வழி திறந்து  உங்களுக்காக காத்து நிற்கும்.

ஔவைப் பாட்டியின் ஞானத்தின் வீச்சு புரிகிறதா ?

எளிமையான பாடல் தான். எவ்வளவு ஆழம்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_11.html

Saturday, February 2, 2019

நாலடியார் - காக்கை கடிவதோர் கோல்

நாலடியார் - காக்கை கடிவதோர் கோல் 



பற்றிலேயே பெரிய பற்று இந்த உடல் மேல் கொண்ட பற்றுதான்.

இந்த உடம்புக்கு ஒரு சின்ன வலி, உபாதை என்றாலும் பதறிப் போகிறோம். "காலையில் இருந்து ஒரே தலைவலி ...சூடா காப்பி போட்டு குடிச்சேன், ரெண்டு ஸாரிடான் போட்டேன், தலைவலி தைலம் போட்டேன்...ஒண்ணுக்கும் அடங்க மாட்டேங்குது " என்று ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட நாம் இந்த உடம்புக்காக கவலைப் படுகிறோம்.

அது மட்டும் அல்ல, அதுக்கு வயதாகிக் கொண்டே போகிறேதே என்ற கவலை...முடி நரைத்ததால் கவலை, தோல் சுருங்கினால் கவலை, கண் பார்வை மங்கினால் கவலை, காது கொஞ்சம் கேட்காவிட்டால் கவலை...

வயதான படுத்திருவோமோ ? மறதி வந்திருமோ ? பிள்ளைகளுக்கு பாரமா போயிருவோமோ என்ற பயம்.

இந்த உடம்பை வைத்துக் கொண்டு நாம் எவ்வளவு அல்லாடுகிறோம்....

காரணம் என்ன ?

காரணம், நாம், இந்த உடம்புதான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த உடம்பு பெரிய விஷயம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படியா ? அது நிஜமா ?

ஒரு ஈ இருக்கிறதே, அதன் சிறகு இருக்கிறதே, அது எவ்வளவு சின்னது? அந்த அளவுக்கு ஒரு சின்ன கீறல் உடம்பில் விழுந்தால் கூட, அதில் இருந்து இரத்தம் வரும், சீழ் பிடிக்கும், அதில் ஈ மொய்க்கும், கொஞ்சம் விட்டால் அதை காக்காய் கூட கொத்தும். அந்த காகத்தை விரட்ட, ஒரு குச்சி வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு மோசமானது இந்த உடம்பு. அதுக்கு நாம் இந்தப் பாடு படுகிறோம்.

முடிக்கு டை அடிக்கிறோம், பவுடர், லிப் ஸ்டிக், ஷாம்பு, சோப்பு, எண்ணெய் , சென்ட், அது இது என்ன என்று கொட்டி முழக்குகிறோம்.

பாடல்

மாக்கேழ் மடநல்லாய் என்றரற்று சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.

பொருள்

மா = பெரிய, சிறந்த, அழகு உடைய

கேழ் = உறவு

மட = இளமையான

நல் = நல்ல

ஆய் = ஆராய்ந்து எடுக்கப்பட்ட அணிகலன்களை அணிந்த பெண்ணே

என்றரற்று = என்று அரற்றும்

சான்றவர் = பெரியவர்

நோக்கார்கொல் = பார்க்க மாட்டார்களா ? அறிய மாட்டார்களா ?

நொய்யதோர் = இழிவான

புக்கிலை  = இடம் இல்லை

யாக்கைக்கோர் = இந்த உடம்புக்கு

ஈச்சிற கன்னதோர் = ஈ + சிறகு + அன்னது ஓர் = ஈயின் சிறகைப் போல

தோல் = தோலில்

அறினும்  = சின்ன வெட்டு காயம் ஏற்பட்டாலும்

வேண்டுமே = வேண்டுமே

காக்கை  = காக்கையை

கடிவதோர் = விரட்ட  ஓர்

கோல் = கோல் , குச்சி

இளமை நிலையானது அல்ல.

சரி, அதுக்காக எப்ப பார்த்தாலும் வயதான பெரிசுக மாதிரி கவலைப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா ?

இல்லை. அது நிலையானது அல்ல என்று தெரிந்து கொண்டால் போதும்.

மரண பயம் போய் விடும். நம் மரணம் மட்டும் அல்ல, மற்றவர்களின் மரணமும்  நம்மை வருத்தாது.

"அதெல்லாம் சரி, இருந்தாலும் ...." என்று இழுப்பது கேட்கிறது...என்ன செய்ய...

மருந்தைக் கொடுக்கலாம்...யார் குடிப்பது?