Thursday, June 20, 2019

சிலப்பதிகாரம் - ஒசிந்த நோக்கினர்

சிலப்பதிகாரம் - ஒசிந்த நோக்கினர் 


இந்த கல்யாண வீட்டுல பார்த்தா, பெண்கள் தான் பெரிய முக்கியத்துவம் பெறுகிறார்கள். இருக்குறதுக்குள்ள நல்ல பட்டா எடுத்து கட்டிக்கிட்டு, வீட்ல இருக்குற நகையெல்லாம் அள்ளி மேல போட்டுக்கிட்டு, beauty பார்லர் ல போய் முகத்தை எப்படியெல்லாம் மெருகேற்ற முடியுமோ அப்படி எல்லாம் மெருகேற்றிக் கொண்டு கல்யாண வீட்டுக்கு  வந்து விடுவார்கள்.

வந்த பின், சும்மா நின்னால் யாராவது ஏதாவது சொல்லுவார்களோ என்ற பயத்தில் எதையாவது கையில் எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஒரு தட்டில் பூ, ஒரு குடத்தில் தண்ணீர், ஒரு கும்பாவில் சந்தனம், ஏதாவது சாமி படம் என்று எதையாவது கையில் வைத்துக் கொள்ளுவார்கள்.

சரி, கையில் வைத்துக் கொண்டு சும்மா நின்னா எப்படி, வேலை செய்வது மாதிரி காட்ட வேண்டுமே...அதற்காக, அங்கும் இங்கும் பரபரப்பாக நடப்பார்கள்....ஏதோ மூன்றாம் உலக யுத்தம் வரப்போவது மாதிரியும், இவர்கள் தான் அதை போய் தடுக்கப் போவது மாதிரியும் அப்படி ஒரு பரபரப்பு. "அந்த கல்கண்டை பாத்தியா, பால் வந்ததா, பூக் காரன் வந்தானா, வீடியோ ஆள் இன்னும் வரலியா ...." என்று தானும் டென்ஷன் ஆகி, இருக்கிற ஆளுகளையும் டென்ஷன் பண்ணிக் கொண்டு இருப்பார்கள். வேலை செய்கிறார்களாமாம்...

அங்கு உள்ள ஆம்பிளைங்க எல்லாம் பேசாம நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்த தையா தக்கா ஆட்டத்தை இரசித்துக் கொண்டு இருப்பார்கள்.

இது இன்று நேற்று நடப்பது அல்ல....சிலப்பதிகார காலம் தொட்டு நடக்கிறது.

இளங்கோ அடிகள் சொல்கிறார்

அந்தக் காலத்தில் புகைப் பட வசதி இல்லை. கண்ணகியின் திருமண நிகழ்ச்சியை ஒரு   வீடியோ, அல்லது குரூப் போட்டோ எடுத்தால் எப்படி இருக்கும் , அதை அப்படியே கண் முன் கொண்டு வந்து காட்டுகிறார் அடிகளார்....

பாடல்


விரையினர், மலரினர், விளங்கு மேனியர், 
உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர்,
சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,
ஏந்துஇள முலையினர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை
முளைக் குடம் நிரையினர், முகிழ்த்த மூரலர்,
போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார், 


பொருள்

விரையினர் = நறுமண பொருள்களை கொண்டு நடப்பவர்கள். சந்தனம், அகில் போன்றவை.

மலரினர் = தட்டில் பூக்களை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைபவர்கள்

விளங்கு மேனியர் = அழகான வடிவம் உள்ளவர்கள் ("figure")

உரையினர் = எதையாவது பேசிக் கொண்டே இருப்பவர்கள்

பாட்டினர் = பாட்டு பாடுபவர்கள்

ஒசிந்த நோக்கினர் = ஓரக் கண்ணால் பார்ப்பவர்கள் (சைட் அடிப்பவர்கள்)

சாந்தினர் = மேலே பூசிக் கொள்ளும் சந்தனம், குங்குமம் போன்றவற்றை கொண்டு நடப்பவர்கள்

புகையினர் = சாம்பிராணி, ஊதுபத்தி போன்ற நறுமண புகை தரும் பொருள்களை கொண்டு நடப்பவர்கள்

தயங்கு கோதையர் = மெல்லமாக, தயங்கி தயங்கி நடக்கும் பெண்கள்

ஏந்துஇள முலையினர் = எடுப்பான, இளமையான மார்பகத்தை கொண்டவர்கள்  (இளங்கோ அடிகள் சொல்கிறார்)

இடித்த சுண்ணத்தர் = பொடிகளை இடித்து வைத்திருப்பவர்கள்

விளக்கினர் = கையில் விளக்கை ஏந்தியவர்கள்

 கலத்தினர் = நீர் குடம், பால் குடம் போன்ற குடங்களை ஏந்தியவர்கள்

விரிந்த பாலிகை முளைக் குடம் நிரையினர்  = முளைப் பாலிகை குடத்தை கையில் ஏந்தியவர்கள்


முகிழ்த்த மூரலர் = புன்னகை மலர்ந்த முகத்தினர்

போதொடு  = மலரோடு

விரி கூந்தல் = விரித்த கூந்தல் (ஷாம்பூ போட்டு குளித்து, hair straighten பண்ணி வந்தவர்கள்)

பொலன் நறுங் கொடி அன்னார்,  = அழகிய பொற் கொடி போன்றவர்கள்

ஆண்பிள்ளைகளை மருந்துக்கும் காட்டவில்லை  இளங்கோ அடிகள்.

எல்லாம் அவங்க நாட்டாமை.

"போதொடு விரி கூந்தல்"

போது என்றால் அன்று அலர்ந்த மலர் என்று அர்த்தம்.


"போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார், அவர் பின் புகுவேன் " என்பார் நாவுக்கரசர்.

பக்தர்கள், பூவும் நீரும் கொண்டு கோவிலுக்கு செல்வார்கள், அவர்கள் பின்னேயே நானும் சென்று விடுவேன் என்கிறார். அவ்வளவு பணிவு.

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் #களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.

இத்தனை பேரும் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தை கற்பனை செய்து பாருங்கள்.

வீடியோ, புகைப்படம் இல்லாத குறை தீர்ந்ததா?

அதுதான் இலக்கியம். அதுதான் கவிதை.

தொன்று தொட்டு வரும் பாரம்பரியத்தை படம் பிடிக்கும் காலக் கண்ணாடி.

கல்யாண வீட்டில் வேறு என்ன என்ன நிகழ்ந்தது என்று பார்ப்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_20.html


Wednesday, June 19, 2019

கம்ப இராமாயணம் - தலைவர் அவர்

கம்ப இராமாயணம் - தலைவர் அவர் 


சில பாடல்களை படிக்க படிக்க புதுப் புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றது.

இராமாயணத்தில், முதல் பாடல், கடவுள் வாழ்த்துப் பாடல். எத்தனையோ தரம் படித்து, கேட்டு, மனப்பாடம் ஆன வரிகள்தான். இதில், இனிமேல் என்ன இருக்கிறது மேலும் அறிய என்று நினைத்துக் கொண்டிருருந்தேன்.


முதலில் பாடலைப் பார்த்து விடுவோம்

பாடல்


உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

பொருள்


உலகம் யாவையும் = உலகம் அனைத்தையும்

தாம் உள = தம் மனதில் நினைத்த படி

ஆக்கலும் = படைக்கவும்

நிலை பெறுத்தலும் = நிலைபெறும்படி காக்கவும்

நீக்கலும் = பின் அவற்றை அழிக்கவும்

நீங்கலா = முடிவில்லா

அலகு இலா = அளவற்ற

விளையாட்டு உடையார் = அதை விளையாட்டாகச் செய்பவர்

அவர் = அவர்

தலைவர் = தலைவர்

அன்னவர்க்கே = அவருக்கே

சரண் நாங்களே = நாங்கள் சரணம் அடைகிறோம்

சொல்லுக்கு, அர்த்தம் என்னவோ அவ்வளவுதான்.

இதில் புதிதாக என்ன இருக்கிறது?

உலகை படைத்து, காத்து, அழிக்கும் அந்தக் கடவுளை நாங்கள் சரண் அடைகிறோம் என்கிறார்.

யோசித்துப் பார்க்கிறேன்.

நான் பிறந்தது என் விருப்பப் படி அல்ல.


இந்த நாட்டில், இந்த ஊரில், இந்த பெற்றோருக்கு இந்த வடிவில் பிறக்க வேண்டும் என்று  நான் விரும்பவில்லை. என் விருப்பம் இல்லாமல் என் பிறப்பு நிகழ்ந்தது.

சரி போகட்டும், என் விருப்பப்படி நான் வாழ முடிகிறதா?

என்ன பெரிய விருப்பப்படி வாழ்வது...நான் நினைத்தபடி காலையில் எழுந்திரிக்க முடியவில்லை. இத்தனைக்கும் அலாரம் வைத்து விட்டு படுக்கிறேன். இரவு படுக்கப் போகும்போது காலையில் ஐந்து மணிக்கு எழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டு படுக்கிறேன். எல்லா நாளும் முடிவதில்லையே.  மனைவி/கணவன், பிள்ளைகள், நம் படிப்பு, வேலை, மேலதிகாரிகள்  என்று ஆயிரம் விஷயங்கள் என்னை மீறி நடந்து கொண்டே இருக்கிறது.

சரி, வாழ்வும் என் கையில் இல்லை.

சாவாவது என் கையில் இருக்கிறதா?

அது என்று தேதியும் தெரியாது, இடமும் தெரியாது.

எவ்வளவோ பேர், எவ்வளவோ துன்பத்தில் தவிக்கிறார்கள். சாவு வராதா  என்று ஏங்குகிறார்கள். அவர்கள் விருப்பப்படி அது வருவது இல்லை.

சரி, வேண்டாம் என்றால் வராமல் இருக்கிறதா? கல்யாணம் முடித்து, புது மனைவியோடு  தேனிலவு போன இடத்தில் விபத்தில் சிக்கி இறந்தவர்கள் எத்தனை பேர்.

வேண்டும் என்பவர்களுக்கு வருவது இல்லை.

வேண்டாம் என்பவர்களிடம் வந்து நிற்கிறது.

எனவே முடிவும் என் கையில் இல்லை.

நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், என் வாழ்க்கையை நான் முடிவு செய்கிறேன் என்று. எது என் கையில் இருக்கிறது?

இப்படி தொடக்கம், நடு , முடிவு என்று எதுவமே என் கையில் இல்லை.

என் கையில் இல்லை என்றால் வேறு யார் கையில் இருக்கிறது?

யார் இதை எல்லாம் செய்கிறார்கள் ?

நான் செய்யவில்லை.

ஒன்று அது தானாக நிகழ வேண்டும், அல்லது யாராவது செய்ய வேண்டும்.

கம்பர் நினைக்கிறார், கம்பரைப் போல படித்த பெரும் புலவர்கள் நினைத்தார்கள்,  இவற்றைச் செய்வபன் ஒருவன் இருக்கிறான்.

அவன் தான் தலைவன்.

"அவர் தலைவர்"

அவர் கடவுள் என்று சொல்லவிலை.

அவர் பெருமாள், சிவன், பிரம்மா , இயேசு, அல்லா என்று எந்த கடவுள் பெயரையும் அவர் சொல்லவில்லை.

இன்னும் போனால், "அவர் கடவுள்" என்று கூட சொல்லவில்லை.

"அவர் தலைவர்", என்று சொல்கிறார்.

"அன்னவர்க்கே சரண் நாங்களே"

அந்தத் தலைவருக்கு, நாங்கள் சரண் என்கிறார்.

இவற்றைஎல்லாம் செய்வது இயற்கை என்று சொல்கிறீர்களா? அந்த இயற்கை தான்  தலைவர். அந்த இயற்கையிடம்  நாங்கள் சரண் அடைகிறோம் என்கிறார்.

அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.  அதனிடம் ஏன் சரண் அடைய வேண்டும்?  அது ஒரு பக்கம் இருந்து விட்டுப் போகட்டுமே.

அதனிடம், அல்லது அந்தத் தலைவரிடம் ஏன் போய் சரண் அடைய வேண்டும்?

அதைச் சொல்லப் புகுந்தால், blog நீண்டு விடும்.

அதை, இன்னொரு நாள் சிந்திப்போமா...


https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_32.html

சிலப்பதிகாரம் - காண்பார் கண் நோன்பு என்னை

சிலப்பதிகாரம் - காண்பார் கண் நோன்பு என்னை


கண்ணகியையும், கோவலனையும் அறிமுகம் செய்தபின், இளங்கோ அடிகள் நேரடியாக அவர்கள் திருமணத்துக்கு வந்து விடுகிறார். கதை எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர்கிறது.  ஊரு, அங்கு உள்ள நில புலன்கள், மக்கள் நிலை என்றெல்லாம் இளங்கோ மெனக்கடவில்லை.

யாருக்கு பொறுமை இருக்கிறது? யாரிடம் நேரம் இருக்கிறது ? Blog கொஞ்சம் நீண்டு விட்டாலே "...நல்லாத்தான் இருக்கு ஆனால் கொஞ்சம் நீளமா இருக்கு " என்று சொல்லும் காலத்தில் இருக்கிறோம் நாம். பார்த்தார் அடிகளார்.

ஒரு திரைக்கதை சொல்லுவது மாதிரி, கதையை எடிட் பண்ணி வேகமாக நகர்த்துகிறார். இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது.

கோவலன் கண்ணகி திருமணக் காட்சி.

பாடல்


முரசு இயம்பின; முருடு அதிர்ந்தன;
முரை எழுந்தன பணிலம்; வெண்குடை
அரசு எழுந்ததொர்படி எழுந்தன;
அகலுள் மங்கல அணி எழுந்தது.
மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண் அகத்து, 
நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தர்க் கீழ்,
வான் ஊர் மதியம் சகடு அணைய, வானத்துச் 
சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்,
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட,
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!


பொருள்

முரசு இயம்பின = முரசு அடித்து சப்தம் உண்டாக்கி

முருடு அதிர்ந்தன = முருடு அதிர்ந்தது


முரை எழுந்தன = முறையாக அனைத்து மங்கல வாத்தியங்களும் எழுந்து ஒலி எழுப்பின

பணிலம் = சங்கு

வெண்குடை = வெண் குடை

அரசு  = அரசன்

எழுந்ததொர்படி = எழுந்து வரும் போது எப்படி வருமோ அப்படி

எழுந்தன = எழுந்தன

அகலுள் = ஊரில்

மங்கல அணி = மங்கல அணி, திருமாங்கல்யம்

எழுந்தது = வலம் வரச் செய்தனர்

மாலை தாழ்  = மாலைகள் கட்டிய

சென்னி = பெரிய தலையை உடைய

வயிர மணித் தூண் அகத்து = வைரம் போன்ற தூண்களில்

நீல விதானத்து = நீல நிற பட்டினாலான மேற் கூரையில்

நித்திலப் = முத்து

பூம் பந்தர்க் கீழ் = பூக்கள் செறிந்த பந்தலின் கீழ்

வான் ஊர்  = வானில் செல்லும்

மதியம் = நிலவு

சகடு = ரோகிணி நட்சத்திரம்

அணைய = சேர. அதாவது, நிலவு ரோகிணி நடச்சத்திர கூட்டத்தில் இருக்கும் போது

வானத்துச்  = வானில் உள்ள

சாலி ஒரு மீன் தகையாளைக் = ஒரு வகை விண் மீன் போன்றவளை (அருந்ததி போன்ற கற்பு உடையவளை என்று அர்த்தம் கொள்க)

 கோவலன், = கோவலன்

மா முது பார்ப்பான் = சிறந்த, வயதில் முதிர்ந்த பார்ப்பனர்

மறை வழி காட்டிட, = வேத வழி காட்டிட

தீ வலம் செய்வது = தீயை வலம் வந்து

காண்பார் கண் நோன்பு என்னை! = அந்தக் காட்சியை காண்பவர் கண்கள் என்ன தவம் செய்தனவோ

இலக்கியம் என்பது ஒரு காலக் கண்ணாடி. இலக்கியம் நடந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்  என்பதை நமக்குச் சொல்பவை இலக்கியங்கள்.

நம் முன்னவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்கள் பின் பற்றிய நடை முறைகள் என்ன, எப்படி பல்வேறு சடங்குளை செய்தார்கள் என்றெல்லாம் நமக்கு அறியத் தருபவை இலக்கியங்கள்.

இலக்கியங்கள் சொல்பவை மட்டும் அல்ல, அவை சொல்லாமல் விட்டவையும் நமக்கு  பல உண்மைகளை புலப் படுத்தும்.

எப்படி என்று பார்ப்போம்.

இப்போதெல்லாம், திருமண சடங்கின் போது திருமாங்கல்யத்தை ஒரு தட்டில் வைத்து, கொஞ்சம் மஞ்சள் கலந்த அரிசியை வைத்து திருமணம் நடக்கும் மண்டபத்தில் உள்ள  பெரியவர்கள் அனைவரிடமும் ஆசி வாங்குவார்கள்.

இந்த முறை கோவலன் கண்ணகி காலத்திலும் இருந்திருக்கிறது.

அந்தக் காலத்தில், அல்லது கோவலன் கண்ணகி போன்ற பெரிய இடத்து திருமணங்களில் , மங்கல அணியை , ஊரில் அனைவரிடமும் ஆசி வாங்கி இருக்கிறார்கள்.

"அகலுள் மங்கல அணி எழுந்தது."

என்கிறார் இளங்கோ.

இந்த தாலி கட்டுவது என்பது எப்போது வந்தது என்று தெரியவில்லை.

கம்ப இராமாயணத்தில், சீதைக்கு இராமன் தாலி கட்டியதாக கம்பன் சொல்லவில்லை.

கனா கண்டேன் தோழி நான் என்று பாடிய ஆண்டாளும், மைத்துனன் நம்பி, மதுசூதனன் வந்து என்  கழுத்தில் மாங்கல்யம் பூட்ட கனா கண்டேன் என்று சொல்லவில்லை.  தீ வலம் வந்தாள் , மாலை அணிந்தாள் , மஞ்சள் நீராடினாள்  ஆனால் மாங்கல்யம் அணிந்ததாக சொல்லவில்லை.


அடுத்ததாக, அந்தக் காலத்தில் என்னென்ன வாத்திய கருவிகள் இருந்தன என்று  காட்டுகிறார் அடிகளார்.

மேலும், மண்டபத்தை எப்படி அழகு படுத்தினார்கள் என்று காட்டுகிறார். அந்தக் காலத்திலும் திருமண மண்டபங்கள் இருந்திருக்கின்றன. அதை decorate  செய்திருக்கினார்கள். மேலே பார்த்தால் வானம் போல இருக்க வேண்டும் என்பதற்காக  நீல நிற பட்டில் மேற்கூரையை அலங்கரித்து இருக்கிறார்கள். நட்சத்திரம் மாதிரி தெரிய வேண்டும் என்பதற்காக அதில் சில  முத்துக்களை பதித்து இருக்கிறார்கள்.

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். கதை நகர வேண்டுமே என்று அடிகளார்  "அடடா...அந்தத் திருமணத்தை பார்ப்பவர்கள் கண்கள் என்ன தவம்  செய்ததோ " என்று சொல்லிவிட்டு மேலே நகர்கிறார்.

தாலி கட்டியாகி விட்டது.

அடுத்து என்னவாக இருக்கும் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_19.html


Tuesday, June 18, 2019

சிலப்பதிகாரம் - மண் தேய்த்த புகழினான்

சிலப்பதிகாரம் - மண் தேய்த்த புகழினான் 


கதாநாயகியான கண்ணகியை அறிமுகம் செய்த பின், அடுத்ததாக கதாநாயகனான கோவலனை அறிமுகம் செய்கிறார் இளங்கோ அடிகள்.

எப்படி கண்ணகியின் குலப் பெருமை சொல்லி அவளை அறிமுகம் செய்தாரோ, அதே போல் கோவலனின் குலப் பெருமை சொல்லி அவனையும் அறிமுகம் செய்கிறார்.

"பெரிய நிலம் முழுவதையும் ஆளும் அரசனை தலைமகனாக கொண்டு தனித்து உயர்ந்த குடிகளோடு உயர்ந்த செல்வந்தன், தனக்கு வரும் வருமானத்தை பிறர்க்கு அளிக்கும் மாசாத்துவான் என்பவன், அவனுடைய மகன், 18 வயதுடையவன், கோவலன் என்று அவன் பெயர்.

அந்த கோவலன் பெரும் புகழ் படைத்தவன். மன்மதன் போல் அழகானவன் "

என்று கோவலனை நமக்கு அறிமுகம் செய்கிறார் அடிகளார்.

பாடல்

ஆங்கு, 
பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த 
ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்;
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்;
இரு நிதிக் கிழவன் மகன் ஈர்-எட்டு ஆண்டு அகவையான்;
அவனும்-தான்,  
மண் தேய்த்த புகழினான்;மதி முக மடவார் தம் 
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டி,
‘கண்டு ஏத்தும் செவ்வேள்’ என்று இசை போக்கி, காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான்; கோவலன் என்பான் மன்னோ. 


பொருள்

ஆங்கு = அங்கே, புகார் நகரில், கண்ணகி இருந்த புகார் நகரில்

பெரு நிலம் = பெரிய நிலம்

முழுது ஆளும் = முழுவதையும் ஆளும்

பெருமகன் = மூத்தவன், தலைவன், அரசன்

தலைவைத்த = அவனை தலை மகனாகக் கொண்டு

ஒரு தனிக் குடிகளோடு = அவனோடு நெருங்கி வாழும் மிகச் சில குடி மக்களோடு

உயர்ந்து ஓங்கு செல்வத்தான் = நிறைந்த செல்வம் கொண்டவன்

வரு நிதி = வரு நிதி வினைத்தொகை. வந்த நிதி, வருகின்ற நிதி, வரப் போகும் நிதி

பிறர்க்கு = மற்றவர்களுக்கு

ஆர்த்தும் = கொடுத்தும்

மாசாத்துவான் என்பான் = மாசாத்துவான் என்பவன்

இரு நிதிக் கிழவன் = இரண்டு நிதிகளுக்கு தலைவன்

மகன் = அவனுடைய மகன்

ஈர்-எட்டு ஆண்டு அகவையான் = இரண்டு எட்டு, அதாவது 16 வயது

அவனும்-தான்,   = அவனும் தான்

மண் தேய்த்த புகழினான் = அவனுடைய புகழின் முன்னால் இந்த பூமி சிறிதாகத் தோன்றும்.

மதி = நிலவு

முக = முகம் . நிலவு போன்ற முகம்

மடவார் தம் = பெண்கள் தம்

பண் = இசை

தேய்த்த = தோற்கும் படி பேசும்

மொழியினார் = குரலைக் கொண்ட பெண்கள்

ஆயத்துப் = ஆராய்ந்து

பாராட்டி = பாராட்டி

கண்டு ஏத்தும் செவ்வேள்’ = கண்டு போற்றும் முருகன்

என்று = என்று

இசை போக்கி = புகழ் பெற்று

காதலால் = காதலால்

கொண்டு ஏத்தும் கிழமையான் = போற்றப் படும் தலைவன்

கோவலன் என்பான் மன்னோ.  = கோவலன் என்பார்கள்.


ஒரு சில சொற்களுக்கு கொஞ்சம் விரிவான பொருள் காண்போம்.

முதலில் கிழவன் என்ற சொல் இரண்டு இடத்தில் வருகிறது.


"இரு நிதிக் கிழவன்"

"காதலால் கொண்டு ஏத்தும் கிழமையான்"

ஒளவையையும் நாம் தமிழ் கிழவி என்கிறோம். அது மரியாதையா? அவ்வளவு  அறிவு கொண்ட ஒரு பெண்ணை, கிழவி என்று அவள் வயதை வைத்தா குறிப்பிடுவது?

கிழவன், கிழவி என்றால் உரிமை உள்ளவன், தலைவன் என்று பொருள்.

முருகனுக்கு குறிஞ்சிக் கிழவன் என்று பெயர்.  முருகன் கிழவனா? குறிஞ்சி நிலத்துக்கு  உரிமையானவன், தலைவன் என்று பொருள்.

அவ்வளவு ஏன் போக வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமை

திங்கள் கிழமை

செவ்வாய் கிழமை

என்று சொல்கிறோமே, கிழமை என்றால் என்ன அர்த்தம்?

ஞாயிற்றுக்கு (சூரியனுக்கு) உரிய நாள்

திங்களுக்கு (நிலா) உரிய நாள்

என்று அர்த்தம்.

கோவலனுக்கு 18 வயசு. அவனைப் போய் கிழவன் என்று சொல்ல முடியுமா?

சரி, அடுத்தது,

"இரு நிதி"

அது என்ன இரு நிதி?

நிதியில் மொத்தம் 9 வகையான நிதிகள் இருக்கின்றன என்று சொல்லுகிறார்கள்.

நவ நிதிகள்.

மற்றவற்றை விட்டு விடுவோம். இரு நிதி என்றால் சங்க நிதி, பதும நிதி என்ற இரண்டைக் குறிக்கும்.

இந்த இரண்டு நிதிகளும் குபேரனின் வசம் உள்ளவை. சங்க, பதும என்பவை குபேரனின் இரண்டு மனைவிகளை குறிக்கும் என்று சொல்பவர்களும் உண்டு.

குபேரன் இந்த இரண்டு செல்வத்தையும் தன்னுடைய இரண்டு மனைவிகளிடம் கொடுத்து  வைத்து இருக்கிறாராம்.

இதில் பதும நிதி என்றால் அறிவு, ஞானம்.

சங்க நிதி என்றால் பொருள் செல்வத்தையும் குறிக்கும்.

அறிவும், பொருள் செல்வமும் கோவலனின் தந்தையான மாசாத்துவானிடம் இருந்தது.

நாவுக்கரசர் தேவாரத்தில் சொல்லுவார்

"சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து , இந்த மண்ணுலகையும், விண்ணுலகையும் ஆளும் அரச பதவி தந்தாலும், அதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல, சிவனடியார்களோடு  சேர்ந்து இருப்பதே எங்களுக்கு வேண்டியது"

என்கிறார்.


சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் மல்லோம்
மாதேவர்க் கேகாந்தர் அல்லா ராகில்
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.


பசு மாட்டின் தோலை உரித்து, அந்த மாமிசம் சாப்பிடுபவன், சிவனடியாராக இருந்தால், அவன் தான் எனக்கு கடவுள் என்கிறார்.

நாவுக்கரசர் பெரிய  புரட்சியாளர். ஒரு கீழ் சாதிக்காரனை, தொடுவது இருக்கட்டும், அவனோடு பேசுவது இருக்கட்டும், அவனை கடவுள் என்கிறார் . அவர்   இருந்த காலத்தில் ஜாதி கட்டுப்பாடுகள் எவ்வளவு இருந்திருக்கும்?


பாடலுக்கு மீண்டும் வருவோம்.

கோவலனின் புகழுக்கு முன்னால், இந்த பூமியே தேய்ந்து சிறிதாக தோன்றுமாம். அவ்வளவு புகழ்.

பெண்கள் எல்லாம் ஜொள்ளு விடும் அளவுக்கு அழகன்.

பெரிய செல்வந்தன்.

இராசாவுக்கு நெருங்கிய குடும்பம்.

16 வயசு.

கதாநாயகனையும் அறிமுகம் செய்தாயிற்று.

அடுத்து என்ன?

திருமணம்தான்.

16 வயது பையனுக்கும், 12 வயது பெண்ணுக்கும் திருமணம்.

அது எப்படி நடந்தது என்று பார்ப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_18.html

Monday, June 17, 2019

சிலப்பதிகாரம் - மாதரார் தொழுது ஏத்த

சிலப்பதிகாரம் - மாதரார் தொழுது ஏத்த 


இயற்கையை போற்றிய பின், ஊர் சிறப்பு சொல்லிய பின், இளங்கோ அடுத்து என்ன சொல்லப் போகிறார்.

நாம் நினைப்போம், அரசனைப் பற்றி, அவன் ஆட்சி பற்றி, அங்குள்ள மக்கள் நலம் பற்றி சொல்லப் போகிறார் என்று.

இளங்கோ அடிகள் அதையெல்லாம் விட்டு விடுகிறார்.

கதாநாயகனை கூட அறிமுகப் படுத்தவில்லை. நேரே கதாநாயகியை அறிமுகப் படுத்துகிறார்.

என்னைக் கேட்டால், இது ஒரு பெரும் புரட்சி. பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில் கதாநாயகியை அறிமுகப் படுத்துகிறார்.

கதாநாயகியை வர்ணிப்பது என்றால் ரொம்ப மெனக்கெட வேண்டும். மிகச் சிறப்பான உவமைகளை தேட வேண்டும்.

இளங்கோ அடிகள் கண்ணகியை அறிமுகப் படுத்தும் விதமும் மிகப் புரட்சிகரமானது.

நமக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. சினிமாவில், சிலை வடிவில் கண்ணகியை பெரிய ஒரு பெண்மணியாக நாம் பார்த்து இருக்கிறோம். கிட்டத்தட்ட ஆறடி உயரம், தலை விரி கோலம், கையில் ஒரு சிலம்பு, நிமிர்ந்த ஒரு கோப பார்வை..இதுதான் நமக்கு கண்ணகி என்றால் நினைவுக்கு வரும்.

ஏதோ கண்ணகி பிறக்கும் போதே அப்படியே பிறந்த மாதிரி.

நீங்கள் சிலப்பதிகாரத்தை இரசிக்க வேண்டும் என்றால், கண்ணகியின் அந்த பிம்பத்தை அழித்து விடுங்கள்.

இளங்கோ காட்டும் கண்ணகி மிக இனிமையானவள். மென்மையானவள். சாந்தமானவள். பயந்த சுபாவம் உடையவள். கடைசியில் கோபம் கொண்டாள் . அதற்காக அவள் எந்நேரமும் அப்படியே இருந்தாள் என்று நினைப்பது தவறு.

இளங்கோ எப்படி அறிமுகப் படுத்துகிறார் தெரியுமா ?

"அவளுக்கு பன்னிரண்டு வயது. பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண். மிக அழகாக இருப்பாள். பெண்களே , பொறாமை படும் அளவு அல்ல, கை எடுத்து கும்பிடும் அளவு நல்ல குணங்கள் அமைந்தவள். ரொம்ப அன்புடையவள். அவள் பெயர் கண்ணகி "

என்று அவளை அறிமுகப் படுத்துகிறார்.

பாடல்


மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக் கொம்பர்; 
ஈகை வான் கொடி அன்னாள்; ஈர்-ஆறு ஆண்டு அகவையாள்;
அவளும்-தான்,
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்,
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ.

பொருள்

மாக வான் = கரிய வானம்

நிகர் = போல

வண் கை = சக்தி வாய்ந்த கை

மாநாய்கன் = மாநாய்கன் என்ற

குலக் = குலத்தில்  பிறந்த

கொம்பர் =  கொம்பு

ஈகை = தானம் செய்வதில்

வான் கொடி அன்னாள் = வானத்தில் தோன்றும் வானவில் போன்றவள்

ஈர்-ஆறு ஆண்டு அகவையாள் = இரண்டு ஆறு, அதாவது பன்னிரண்டு வயதுடையவள்

அவளும்-தான் = அவளும் தான்

போதில் = தாமரை மலரில்

ஆர் = இருக்கும்

திருவினாள் = இலக்குமி போன்றவள்

புகழ் உடை வடிவு என்றும் = புகழ் உடைய வடிவத்தை உடையவள்

தீது இலா = தீமை இல்லாத

வடமீனின்  = அருந்ததி நட்சத்திரம் (மீன் = விண்மீன்)

திறம் இவள் திறம் என்றும் = போன்ற கற்பு இவளுடைய கற்பு என்றும்

மாதரார் = பெண்கள்

தொழுது ஏத்த = தொழுது போற்றும் படி

வயங்கிய =விளங்கிய

பெரும் குணத்துக்  = சிறந்த குணங்களை கொண்டவள்

காதலாள் = அன்பு நிறைந்தவள்

பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ. = பெயர் கண்ணகி என்று சொல்லுவார்கள்



மாக வான் = கரிய வானம்

பிரபந்தத்தில் ஒரு பாசுரம்.

"ஓ  மேகங்களே, உங்களுக்கு எப்படி அந்த நாராயணின் நிறம் வந்தது? சரி தான்,  கடலில் சென்று நீரை கொண்டு வந்து மழையாக பெய்து உயிர்களை எல்லாம்  காப்பாற்றுகிறீர்கள் அல்லவா, அந்த நாராயணனைப் போல, அதனால் தான்  உங்களுக்கும் அவன் நிறம் வந்திருக்கிறது போலும் "

மேகங்களோ உரையீர் திருமால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுங்களுக் கெவ்வாறு பெற்றீர், உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்து நன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்தும் தவமாம் அருள்பெற்றதே? (2509, நான்காம் திருமொழி)


"குலக் கொம்பர்; "

குலத்தில் பிறந்த கொம்பு. கொடி பற்றி வளர உதவும் கொம்பு போல, குலம் தழைக்க வந்த கொம்பு.

கொம்பு இல்லாத கொடி போல தவித்தேன் என்பார் மணிவாசகர்.

கொம்பர் இல்லாக் கொடிபோல், அலமந்தனன்; கோமளமே,
வெம்புகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணவர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அம்பரமே, நிலனே, அனல், காலொடு, அப்பு, ஆனவனே.


(நீத்தல் விண்ணப்பம்)

கண்ணகிக்கு 12 வயது.

பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண்.

அழகானவள்.

கற்புடையவள்.

இதெல்லாம் சரி.  வேறு என்ன சிறப்பு என்றால், வான் மழை போல அவளே தானம்  செய்வாளாம்.

இன்றும் கூட, சம்பாதிக்கும் பெண்கள் கூட, யாருக்கும் ஏதாவது தானம் , உதவி செய்வதானால் கூட , கணவனை, பெற்றோரை கேட்டுவிட்டுத்தான் செய்வார்கள், பெரும்பாலும்.

கண்ணகி, வேண்டியவர்களுக்கு, அவளே தானம் செய்தாள் என்ற அவள் இளகிய மனதை  காட்டுகிறார் இளங்கோ.

உலகிலேயே கடினமான விஷயம் ஒரு பெண் இன்னொரு பெண்ணை பாராட்டுவதுதான்.

"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இதெல்லாம் நீங்களே இட்டு கட்டிச் சொல்வது. நான் எல்லாம் எத்தனை பெண்களை பாராட்டுகிறேன் தெரியுமா " என்று சில பெண்மணிகள் கோபிக்கலாம்.

சரி. பாராட்டுகிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம்.

வணங்குவீர்களா? ஒரு பெண்ணின் திறமையை, அவளின் அழகை, அவளின் நல்ல குணங்களை கண்டு  தலை மேல் கை வைத்து வணங்குவீர்களா? முடியுமா ?

கண்ணகியின் சிறந்த குண நலன்களை கண்டு பெண்கள் வணங்கினார்கள், போற்றினார்கள் என்கிறார் அடிகளார்.

"மாதரார் தொழுது ஏத்த"

சின்ன பொண்ணு.  12 வயசு. முடியுமா ?

இறைவனை விட்டு விட்டு , இயற்கையை வாழ்த்தி, முதல் சிக்ஸர் அடித்தார்.

வயக்காட்டில் மீன் விளையாட்டும், வறுமையே இல்லை என்று எல்லோரும் எப்போதும் சொல்லும்  ஊர் சிறப்பை விட்டு விட்டு, "பதி எழு அறியா பழங்குடி " என்று இரண்டாவது சிக்ஸர் அடித்தார்.

கதாநாயகனை விட்டு விட்டு, முதலாவதாக கதாநாயகியை அறிமுகப் படுத்தி  மூன்றாவது சிக்ஸர்.

படிக்க படிக்க மேலும் ஆர்வத்தை தூண்டும் காப்பியம்.

சரி தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_17.html


Sunday, June 16, 2019

சிலப்பதிகாரம் - பதி எழு அறியா பழங்குடி

சிலப்பதிகாரம் - பதி எழு அறியா பழங்குடி 


இயற்கையை போற்றிய பின், இளங்கோ கதை தொடங்கும் புகார் நகரின் சிறப்பைப் பற்றி கூற வருகிறார்.

ஒரு நாடு சிறந்த நாடு என்பதை எதை வைத்து வரையறுக்கலாம்?

வள்ளுவர், சிறந்த நாடு எது என்று 10 குறள் எழுதி இருக்கிறார்.  அதில் ஒன்று

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 
சேராது இயல்வது நாடு.

பெரிய பசியும், தீரா பிணியும், பகைமையும் இல்லாமல் இருப்பது நல்ல நாடு என்று கூறுகிறார்.


அயோத்தியின் சிறப்பைப் பற்றி கூற வந்த கம்பர் இவ்வாறு கூறுகிறார்.

வரம்பு எலாம் முத்தம்; தத்தும்
    மடை எலாம் பணிலம்; மாநீர்க்
குரம்பு எலாம் செம்பொன்; மேதிக்
    குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப்
    பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரம்பு எலாம் செந்தேன்; சந்தக்
    கா எலாம் களி வண்டு ஈட்டம்.

இப்படி ஒரு நாட்டின் சிறப்பை பல விதங்களில் வர்ணிக்கலாம்.

எல்லோரையும் தூக்கிச் சாப்பிடும் படி இளங்கோ அடிகள் புகார் நகரை வர்ணிக்கிறார்.

அவர் வர்ணிப்பது ஒரு புறம் இருக்கட்டும்.

இதை வாசிக்கும் பலர், சொந்த நாட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொந்த  மாநிலத்தை விட்டு வேறு இடத்தில் வசிக்கலாம் .

ஏன், உங்கள் சொந்த இடத்தை விட்டு விட்டு வந்தீர்கள்?

நல்ல வேலை வாய்ப்பு, உயர்ந்த சம்பளம்,  வாழ்க்கைத் தரம், அமைதியான சூழ்நிலை, குறைந்த வருமான வரி,  குழந்தைகளின் மேல் படிப்பு, இனிய தட்பவெப்பம்,  என்று பல காரணம்  சொல்லலாம்.

இவை எல்லாம் இல்லாததால் தானே பிறந்து வளர்ந்து மண்ணை விட்டு வெளியேறினீர்கள். இவை அனைத்தும் சொந்த ஊரிலேயே இருந்திருந்தால் , நீங்கள் அங்கேயே  இருந்திருப்பீர்கள் அல்லவா? அப்படி இல்லாத ஊர் நல்ல ஊர் இல்லைதானே.

"என் ஊரைப் போல வருமா ?" என்று வெளி மாநிலத்தில், வெளி நாட்டில் போய் இருந்து  கொண்டு பேசுவது ஒரு ஏமாற்று வேலைதானே. நல்ல ஊர் என்றால் அதை ஏன் விட்டு விட்டு, அந்த அளவுக்கு நல்லா இல்லாத ஊருக்குப் போக வேண்டும்?

இளங்கோ அடிகள் சொல்கிறார்

"பதி எழு அறியா பழங்குடி" என்று.

அந்த ஊரில் (பூம்புகாரில்) உள்ள மக்கள் அந்த ஊரை விட்டு வெளியே போனதே கிடையாதாம்.   இப்ப மட்டும் அல்ல, காலம் காலமாக அங்கேயே இருக்கிறார்களாம்.

ஏன் என்றால்,  அந்த ஊரில் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. எதற்கு இன்னொரு ஊருக்குப் போக வேண்டும் ?

இப்போது சொல்லுங்கள், இதை விட ஒரு ஊரை சிறப்பாக வர்ணிக்க முடியுமா?


பாடல்

ஆங்கு, 
பொதியில் ஆயினும், இமயம் ஆயினும், 
பதி எழு அறியாப் பழங் குடி கெழீஇய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்,
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின் 
முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே.
அதனால்,
நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு
போகம், நீள் புகழ் மன்னும் புகார்-நகர் அது-தன்னில்,


பொருள்


ஆங்கு,  = அங்கே

பொதியில் ஆயினும் = பொதிய மலை ஆயினும்

இமயம் ஆயினும், = இமய மலை ஆயினும்

பதி  = இருக்கின்ற இடம்.  (பதி  என்றால் இடம். உயர்ந்த இடம், திருப்பதி)

எழு = எழுதல், எழுந்து வெளியே எங்கும் போவது

அறியாப் = அறியாத

பழங் குடி = பழைய குடி மக்கள்

கெழீஇய = நட்புடன்

பொது அறு = பொதுமை இல்லாத

சிறப்பின் = சிறப்பின். அந்த நாட்டுக்கு என்று சில சிறப்புகள் உண்டு.  பொதுவாக உள்ள சிறப்புகள் இல்லை, speical

புகாரே ஆயினும், = புகார் நகரே ஆயினும்

நடுக்கு இன்றி = நடுக்கம் இன்றி

நிலைஇய = நிலைத்து நிற்கும்

என்பது அல்லதை = என்பது தவிர வேறு எதையும்

ஒடுக்கம் கூறார் = அவற்றிற்கு முடிவு உண்டு என்று

உயர்ந்தோர் = உயர்ந்தவர்கள்

உண்மையின் = உண்மையின்

முடித்த கேள்வி = அனைத்து கேள்விகளுக்கும் விடையை

முழுது உணர்ந்தோரே. = முழுவதும் உணர்ந்தவர்கள்

அதனால், = அதனால்

நாக நீள் நகரொடு = நாகர் உலகுடனும்

நாக நாடு-அதனொடு = சுவர்க்கம் என்ற அதனுடனும்

போகம் = போகம்

நீள் புகழ் மன்னும் = நீண்ட புகழ் நிலைத்து நிற்கும்

புகார்-நகர் அது-தன்னில், = புகார் நகரத்தில்

எப்படி இருக்கு ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_16.html

Saturday, June 15, 2019

திருக்குறள் - எது வலிமை, எது இல்லாமை?

திருக்குறள் - எது வலிமை, எது இல்லாமை? 


மிகவும் கடினமான செயல் என்றால் எதைச் சொல்வோம் ?

பளு தூக்குவது, மலை ஏறுவது, கடினமான பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது, பிள்ளை பெறுவது, என்று நமக்குத் தெரிந்த கடினமான வேலைகளை சொல்லுவோம்.

இதெல்லாம் பெரிய கடினமான வேலை இல்லை என்று வள்ளுவர் சொல்கிறார்.

உலகிலேயே மிகவும் கடினமான வேலை, முட்டாள்களின் செயலை பொறுத்துக் கொல்வதுதான் என்கிறார்.

யோசித்துப் பாருங்கள்....

அரைகுறையாக படித்து விட்டு, எல்லாம் படித்த மேதாவி போல் உளறும் முட்டாள்கள் சொல்வதை கேட்பது எவ்வளவு கடினமான செயல் என்று.

அரசியல்வாதிகளின் பிதற்றல், டிவி யில் நிபுணர்கள் போல வந்து எல்லா சப்ஜெக்ட்க்கும் ஒரு ஒப்பீனியன் தருவது, அரை வேக்காட்டு நண்பர்களின் மேதாவிலாசம், என்று இவற்றை பொறுத்துக் கொள்வது எவ்வளவு கடினமான செயல்.

அது போல, உள்ளத்துக்குள்ளேயே பெரிய இல்லாமை எது தெரியுமா ?

அறிவு இல்லாமை, புகழ் இல்லாமை,  பிள்ளை இல்லாமை, உறவுகள் இல்லாமை ..என்று நாம் நினைப்போம்.

அது எல்லாம் இல்லாமை தான். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.

ஆனால் அது எல்லாவற்றையும் விட பெரிய இல்லாமை, எது தெரியுமா ?


ஐயோ, கையில் காசு இல்லையே. இப்போ ஏதாவது விருந்தினர் வந்து விட்டால் என்ன செய்வது என்று  ஒருவன் பதறுவானேயானால், அது தான் பெரிய இல்லாமை என்கிறார்.

விருந்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது நம் தமிழ் பாரம்பரியம்.

பாடல்

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

பொருள்

இன்மையுள் இன்மை = இல்லாமையை பெரிய இல்லாமை

விருந்தொரால் = விருந்தை உபசரிக்க முடியாமல் போதல்

வன்மையுள் = கடினமானவற்றுள்

வன்மை = கடினமானது

மடவார்ப் பொறை = மடையர்களை பொறுத்துக் கொள்வது


எத்தனை மடையர்கள், எவ்வளவு பொறுமை வேண்டி இருக்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_22.html