Monday, July 22, 2019

கம்ப இராமாயணம் - தோள் நிமிர்த்த வலியோனே

கம்ப இராமாயணம் - தோள் நிமிர்த்த வலியோனே


காதும், மூக்கும், முலைகளும் , இலக்குவனால் அறுபட்ட சூர்ப்பனகை அவளுடைய அண்ணனான இராவணனை கூப்பிட்டு முறை இடுகிறாள்.

சூர்ப்பனகை சொல்கிறாள்

"உருவம் பொடி பொடியான மன்மதனை ஒத்து இருக்கின்றனர். இருந்தாலும், அவர்கள் உன் செருப்பில் ஒட்டியுள்ள துகளுக்கு இணையாவார்களா? மாட்டார்கள். அப்படிப்பட்ட மனிதர்களை நீ கோபிக்க மாட்டாயா. எட்டு திக்கு யானைகளின் தந்தம் ஒடிய, இமய மலை இடிய , தோள் நிமிர்த்த வலியோனே"

பாடல்

உருப் பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும், உன்
செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரைச் சீறுதியோ?
நெருப்பு அடியில் பொடி சிதற, நிறைந்த மதத் திசை யானை
மருப்பு ஒடிய, பொருப்பு இடிய, தோள் நிமிர்த்த வலியோனே! 

பொருள்

உருப்  = உருவம்

பொடியா = பொடிப் பொடியான

மன்மதனை = மன்மதனை

ஒத்துளரே ஆயினும் = ஒத்து இருந்தாலும்

உன் = உன்னுடைய

செருப்பு = செருப்பின்

அடியின்  = அடியில் ஒட்டி இருக்கும்

பொடி = தூசிக்கு

ஒவ்வா = இணையாகாத

மானிடரைச்  = மானிடர்களை

சீறுதியோ? = கோபம் கொள்ள மாட்டாயா

நெருப்பு அடியில் = காலின் கீழே நெருப்பு

பொடி சிதற = பொடி பொடியாக சிதற

நிறைந்த = பெரிய

மதத் = மதம் கொண்ட

திசை யானை = எட்டு திக்கு யானைகளின்

மருப்பு ஒடிய = தந்தம் ஒடிய

பொருப்பு = மலை, இமய மலை

இடிய = இடியும்படி

தோள் நிமிர்த்த வலியோனே!  = தோள்கள் நிமிர்த்த வலைமையானவனே

வலிமை இருந்தால் அதை சரியான இடத்தில், தேவையான அளவு பயன் படுத்த வேண்டும்.

இராவணனுக்கு அளவு கடந்த ஆற்றல் இருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை.

சிவன் இருக்கும் கைலாய மலையை தூக்கிக் கொண்டு போனால் என்ன என்று நினைத்தான். நினைத்தது மட்டும் அல்ல, அந்த மலையை தூக்கினான். சிவன், தன் கால் கட்டை விரலால் அழுத்தவே, அதன் கீழே மாட்டிக் கொண்டு திணறினான். கொழுப்பு.

அது மட்டும் அல்ல,

யாரிடம் சண்டை போடுவது என்று அலைந்தான். அவனை எதிர்க்க யாருமே இல்லை. பார்த்தான், அட்ட திக்கு யானைகளிடம் சண்டைக்குப் போனான். அந்த யானைகள் அவன் மார்பில் தங்களுடைய தந்தத்தினால் முட்டின . தந்தங்கள் அவன் மார்பை துளைத்து  உள்ளே சென்றன. வெளியே எடுக்க முடியவில்லை. அப்படியே உடைத்தான். அந்த தந்தங்கள் அவன் மார்பில் துளைத்து நின்று விட்டன.

தேவையா ?

அபரிமிதமான செல்வமும், வலிமையையும் இருந்தால் மனம் சும்மா இருக்காது போல. அதை வைத்துக் கொண்டு என்னடா செய்யலாம் என்று அலையுமோ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_22.html


Sunday, July 21, 2019

நள வெண்பா - பெண்ணிடம் பணியாதார் யார்?

நள வெண்பா - பெண்ணிடம் பணியாதார் யார்?


பெண்ணின் கை தீண்டலுக்கு பணியாதவர் யார் இருக்கிறார்கள் என்று கேட்கிறார் நளவெண்பா எழுதிய புகழேந்தி.

பெண் தொட்டால் போதும், அந்த தொடுகைக்கு அவ்வளவு சக்தி உண்டு. அது தொடுபவரை, அந்த அன்பில், கருணையில் பணிய வைக்கும்.

அதுதான் பெண்ணின் சக்தி. பெருமை.

அது பெண், பெண்ணாக இருக்கும் வரை. ஆனால், கால மாற்றத்தில் பெண்கள், நாங்களும் ஆண்கள் போல ஆக வேண்டும் என்று மாறி வருகிறார்கள்.

நாங்களும் குஸ்தி போடுவோம், கமாண்டோ படையில் சேர்வோம், என்று ஆணுக்கு நிகராக, ஆணாகவே ஆக விரும்புகிறார்கள்.

அப்படித்தான் வேண்டும் என்றால், இயற்கை ஏன் ஆண் , பெண் என்று இரண்டு இனத்தைப் படைக்க வேண்டும்?  எல்லாம் ஆணாகவே படைத்து விட்டுப் போய் விடலாமே.

ஆண் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், பல சாலியாக இருந்தாலும், பெண்ணின் கை பட்ட மாத்திரத்தில் அவள் காலில் விழுவான் என்கிறார்.

அது படைப்பின் நோக்கம்.

வலிமையான ஆணை, மென்மையான பெண்ணின் முன் மண்டியிட வைத்தது இயற்கையின் பேராற்றல்.

இதை அறிந்து கொள்ளாமல், பெண்கள் அந்த பேராற்றலை விட தங்களுக்கு நிறைய தெரியும் என்று ஏதேதோ செய்து வருகிறார்கள்.


சரியா தவறா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

நளனும் தமயந்தியும் தேரில் வந்து கொண்டு இருக்கிறார்கள். வரும் வழியில் உள்ள சோலைகளில், பெண்கள் பூ பறித்துக் கொண்டிருக்கிறார்கள். கிளையின் மேலே உள்ள பூக்களைப் பறிக்க அவர்கள் அந்த கொம்பை சற்றே இழுத்து வளைக்கிறார்கள். அதை கண்ட புலவனின் மனதில் கற்பனை பிறக்கிறது.

பெண்களின் கை பட்டதால், அந்த மரமே தாழ்ந்து அவர்களின் காலில் விழுந்த மாதிரி இருந்தது என்கிறான். பெண்ணின் கை பட்டால் யார் தான் பணிய மாட்டார்கள், இந்த பூ மரம் மட்டும் என்ன விதி விலக்கா என்று கேட்கிறான்.

பாடல்

‘பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரே?
பூவையர்கை தீண்டலும்ப் பூங்கொம்பு – மேவியவர்
பொன்னடியில் தாழ்ந்தனவே பூங்குழலாய்!காண்! என்றான்
மின்னெடுவேற் கையான் விரைந்து.


பொருள்

‘பாவையர்கை = பெண்களின் கை

தீண்டப் = தீண்டினால்

பணியாதார் யாவரே? = அதற்கு பணியாதவர் யார்? (ஒருவரும் இல்லை)

பூவையர்கை = பெண்களின் கை

தீண்டலும்ப் = தீண்டப் பட்டவுடன்

பூங்கொம்பு  = மரத்தில் உள்ள பூங்கொம்பு

மேவியவர் = அந்த பெண்களின்

பொன்னடியில் = பொன் போன்ற அடிகளில்

தாழ்ந்தனவே = தாழ்ந்து வந்தது

பூங்குழலாய்!காண்!  = பூங்குழலாய் (தமயந்தியே ) கான்

என்றான் = என்று கூறினான் (நளன் )

மின்னெடு = மின்னல் போன்ற

வேற் கையான் = வேலை கையில் கொண்டவன்

விரைந்து. = வேகமாக

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_21.html

Saturday, July 20, 2019

நாலடியார் - யானும் அதனை அது

நாலடியார் - யானும் அதனை அது 



செல்வத்தை சேர்க்கத் தெரிய வேண்டும், அனுபவிக்கத் தெரிய வேண்டும், சேமிக்கத் தெரிய வேண்டும்.

இந்த மூன்றும் தெரிந்தவர் உலகில் மிகச் சிலரே.

சிலர் நன்றாக சம்பாதிப்பார்கள். ஆனால், சம்பாதித்த செல்வத்தை அனுபவிக்கத் தெரியாமல் இருப்பார்கள்.

சிலர் தாட் பூட் என்று செலவழித்து அனுபவிப்பார்கள், செல்வத்தை சம்பாதிக்கத் தெரியாது. கடனை உடனை வாங்கி ஆடம்பரமாக வாழ்வார்கள்.

சம்பாதித்தாலும், செலவழித்தாலும், பிற் காலத்துக்கு வேண்டுமே என்று சரியான வழியில் அதை முதலீடு செய்யத் தெரிந்தவர்கள் மிகச் சிலரே.

சாலையில் ஒரு ஏழை போய்க் கொண்டிருந்தான். அந்த சாலையில் ஒரு பெரிய பணக்காரன் வீடு இருந்தது. அந்த வீட்டில், அந்த வீட்டின் உரிமையாளனான பணக்காரன் தோட்டத்தில் அமர்ந்திருந்தான்.

அவனைப் பார்த்த அந்த ஏழைப் பிச்சைக்காரன் சொன்னான்

"நானும் அவனும் ஒன்று" என்று.

"அது எப்படி நீயும் அவனும் ஒன்றாக முடியும். அவனோ பத்து தலைமுறைக்கு  சொத்து சேர்த்து வைத்திருக்கிறான். உன்னிடமோ அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லை.  நீங்கள் இரண்டு பேரும் எப்படி ஒன்றாக முடியும்" என்று கேட்டார்கள்.

பிச்சைக்காரன், "அந்தப் பணக்காரன் அவன் வைத்திருக்கும் பொருளை என்னுடையது என்னுடையது என்று சொல்லிக் கொண்டு திரிகிறான். நானும் எனது பொருளை எனது எனது என்று சொல்லித் திரிகிறேன்.  அவனிடம் உள்ளை செல்வத்தை அவன் யாருக்கும் வழங்குவது இல்லை. நானும் என்னிடம் உள்ள செல்வத்தை யாருக்கும் கொடுப்பது இல்லை. அவன் தன்னுடைய செல்வத்தை அனுபவிக்காமல் இருக்கிறான். நானும், என் செல்வத்தை அனுபவிக்காமல் இருக்கிறேன். எங்களுக்குள் என்ன பெரிய வேறுபாடு ?"

என்கிறான்.

நகைச்சுவையான அந்தப் பாடல்

எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை
எனதென தென்றிருப்பன் யானும்;- தனதாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்;
யானும் அதனை அது.


பொருள்


எனதென தென்றிருக்கும் = எனது எனது என்று இருக்கும்

ஏழை = ஏழை

பொருளை = பொருளை

எனதென தென்றிருப்பன் யானும்; = எனது எனது என்று இருப்பேன் நானும்

தனதாயின் = அவனுடையது என்றால்

தானும் அதனை வழங்கான்  = அவன் அதை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டான்

பயன்துவ்வான்; = அந்த செல்வத்தின் பயனை அவனும் அனுபவிக்க மாட்டான்

யானும் = நானும்

அதனை = அதே போல்

அது. = அதைச் செய்கிறேன்.

பணக்காரனிடம், பணம் இருக்கிறது.

நல்ல பெரிய கார் வாங்கலாம் - வாங்கவில்லை, ஆட்டோவில் போய் வந்து கொண்டிருக்கிறான் என்று   வைத்துக் கொள்வோம். அவனுக்கும், அதே போல்  ஆட்டோவில் போய் வந்து கொண்டிருக்கும் ஏழைக்கும் (பிச்சை காரனாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை )  என்ன வித்தியாசம்.

ஏழை மற்றவர்களுக்கு தானம் செய்ய முடியாது.  அவனிடம் போதிய பணம் இல்லை.

பணக்காரன் தானம் செய்ய மாட்டான். இருவருக்கும் என்ன வித்தியாசம்.

பணம் இருந்தால் அனுபவிக்க வேண்டும். மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும்.

இரண்டும் இல்லை என்றால், அந்த பணம் இருந்தும் ஒன்று தான், இல்லாததும் ஒன்றுதான்.

அனுபவிக்கவும், தானம் செய்யவும் தெரியாத பணக்காரன் , ஏழைக்கு சமம் என்கிறது  இந்த நாலடியார்.

பணம் இருந்தால், அனுபவியுங்கள், முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_20.html


Thursday, July 18, 2019

திருவாசகம் - பால் நினைந்து ஊட்டும்

திருவாசகம்  - பால் நினைந்து ஊட்டும்



சில நாட்களுக்கு முன்னால், "பால் நினைந்து ஊட்டும்" என்ற திருவாசக பாடல் பற்றி ஒரு பிளாக் எழுதி இருந்தேன்.

அதன் இணைப்பு கீழே.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_16.html

இதைப் படித்துவிட்டு ஒரு நண்பர் எழுதி இருந்தார், "இராம கிருஷ்ண பரமஹம்சராக இருந்தாலும் சரி அது யாராக இருந்தாலும் சரி, ஆண்களுக்கு மார்பில் பால் சுரக்க வழி இல்லை" என்று.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம் உண்டு.

ஆண்களுக்கு ஏன், பெண்களுக்கு இருப்பது போல் மார்பில் காம்புகள் இருக்கின்றன. அந்த கரிய இரண்டு, ஐம்பது பைசா நாணயம் போல, மார்புகள் ஏன் இருக்கின்றன என்று.

ஆண்கள், குழந்தைகளுக்கு பால் தரவில்லை என்றால், பின் மார்பகங்களுக்கு எதற்கு ?

நம்முடைய வளர்ச்சியில், ஒரு காலகட்டத்தில் ஆண் பெண் இருவரும் குழந்தைகளுக்கு பால் தந்திருக்க வேண்டும். நாளடைவில், ஆண்கள் வேட்டையாட வெளியே நிறைய  சுத்த வேண்டி இருந்ததால், அதன் தேவை சுருங்கி சுருங்கி  வெறும் தடயம் மட்டுமே இருக்கிறது இப்போது என்று
பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் கூறிய சார்லஸ் டார்வின் கூறுகிறார்.

https://en.wikipedia.org/wiki/Male_lactation



Darwin later considered the nearly perfect function of male nipples in contrast to greatly reduced structures such as the vesicula prostatica, speculating that both sexes may have nursed young in early mammalian ancestors, and subsequently mammals evolved to inactivate them in males at an early age


While male mammals could, in theory, improve offspring's survival rate through the additional nourishment provided by lactation, most have developed other strategies to increase the number of surviving offspring, such as mating with additional partners. 


ரொம்ப நாள் பட்டினி கிடந்த பின், உணவு உண்ண ஆரம்பித்தால், ஆண்களுக்கும் பால் சுரக்கும்  என்கிறது மேலே சொன்ன விக்கிபீடியா கட்டுரை.

Male lactation has also been seen during recovery from starvation. This may be because glands that produce hormones recover faster than the liver, which absorbs hormones, leading to high hormone levels.

சில குறிப்பிட சமயங்களில் ஆண்களுக்கும் பால் சுரக்கும். Stress அதிகமானால் பால் சுரக்குமாம். பக்தி பற்றி இந்த கட்டுரை ஒன்றும் சொல்லவில்லை. ஒரு வேளை ஆராய்ச்சி செய்திருந்தால் ஏதாவது தெரிந்திருக்குமோ என்னவோ. 


Male mammals of many species have been observed to lactate under unusual or pathogenic conditions such as extreme stress, castration and exposure to phytoestrogens, or pituitary tumors

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_14.html



குசேலோபாக்கியானம் - கை விரித்து கவித்தரோ

குசேலோபாக்கியானம் - கை விரித்து கவித்தரோ 




நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

உயர்ந்த நூல்களை படிக்கும் போதெல்லாம் எப்படி அதன் உன்னதம், மகிமை, சிறப்பு நமக்குப் புரிகிறதோ அது போல நல்ல பண்பு உள்ளவர்களின் நட்பு ஒவ்வொரு முறை அவர்களோடு தொடர்பு கொள்ளும் போதும் நமக்கு ஒரு புது உற்சாகத்தை, மகிழ்ச்சியைத் தரும். 

தமிழில் அது போன்ற உயர்ந்த இலக்கியங்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அதில் இருந்து புது புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். படிப்பவரின் மன நிலையை பொறுத்து அதில் அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். 

சில பல நாட்களுக்கு முன் குசேலோபாக்கியானத்தில் இருந்து ஒரு பாடலுக்கு பிளாக் எழுதி இருந்தேன் 

அதாவது, கண்ணனைப் பார்க்கப் போகும் போது, வழியில் உள்ள ஈ எறும்புகளுக்கு தன்னால் துன்பம் வந்து விடக் கூடாதே என்று அவை நடக்கும் மர நிழலைத் தவிர்த்து, வெயிலில், தலைக்கு மேல் கையை வைத்துக் கொண்டு நடந்து போனாராம் குசேலர். 



சீத நீழற் செலிற்சிற் றுயிர்தொகை
போதச் சாம்பும்மென் றெண்ணிய புந்தியான்
ஆத வந்தவழ் ஆறு நடந்திடுங்
காத லங்கை விரித்துக் கவித்தரோ.

பொருள்

சீத = குளிர்ந்த

நீழற் = நிழல்

செலிற் = செல்லும்

சிற் றுயிர் = சின்ன உயிர். ஈ எறும்பு போன்றவை

தொகை = கூட்டம்

போதச்  = அறிவு. இங்கே அறிந்து அல்லது எண்ணி என்று கொள்ளலாம்

 சாம்பும் = வருந்தும்

மென் றெண்ணிய = என்று எண்ணிய

புந்தியான் = புத்தி உள்ளவன்

ஆத வந்தவழ் = ஆதவன் + தவழ் = சூரியன் தவழும்

ஆறு = வழி

நடந்திடுங் காதல்  = நடக்க விரும்பி

அங்கை = அவருடைய கையை

விரித்துக் = விரித்து

கவித்தரோ. = குடை போல கவிழ்த்துக் கொண்டார்


அன்று தோன்றியது, "அடடா எவ்வளவு பெரிய கருணை உள்ளம். ஜீவ காருண்யம்" என்று. 

மீண்டும் ஒரு முறை அந்தப் பாடலை நினைத்துப் பார்க்கிறேன். 


இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் நித்தமும் இறைவனிடம் பக்தர்கள்  வேண்டுகிறார்கள். 

இறைவன் அவர்கள் வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பானா? எப்படி இறைவனின் கருணையை பெறுவது?

முதலில் நாம் கருணை செலுத்த பழக வேண்டும். 

கோவிலுக்கு போகும் வழியில் உள்ள பிச்சைக்காரனை கண்டால் அவன் மேல்  வெறுப்பும், கோபமும் வருகிறது. "வந்துட்டானுக ...நிம்மதியா சாமி கும்பிட  முடியுதா..." என்று எரிச்சல் வருகிறது. 

உள்ளே போய் "ஆண்டவா, எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு " என்று பிச்சை  எடுத்தால் ஆண்டவன் என்ன நினைப்பான். "நிம்மதியா இருக்க விடுறானுகளா ...வந்துட்டானுக காலங் காத்தால ...கைலாயம் கொடு, பாற்கடல் கொடு, சொர்ககம் கொடுனு ...பிச்சைக்கார பசங்க" என்று தானே ஆண்டவனும்  நினைப்பான். 

வீட்டில் வேலை செய்பவர்களிடம் நாம் எவ்வளவு அன்போடு இருக்கிறோம்? நமக்கு கீழே வேலை செய்பவர்களிடம் எவ்வளவு கருணை இருக்கிறது நம்மிடம்.  

வயதான காலத்தில், சாலையை மெதுவாக கடக்கும் முதியவர் மீது எவ்வளவு கோபம்  வருகிறது. 

அவ்வளவு ஏன், வயதான பெற்றோர், தாத்தா பாட்டி மேல் எவ்வளவு பேர் அன்போடு இருக்கிறார்கள்? "கிழத்துக்கு காதும் கேக்காது, கண்ணும் தெரியாது ...நம்ம உயிரை வாங்குது" 

எங்கிருந்து இறை அன்பு கிடைக்கும். 

கண்ணனின் அருள் வேண்டி சென்ற குசேலர், ஈ எறும்புகளின் மேல் அன்பு செலுத்தினார். அவற்றின் மேல் கருணை கொண்டார். தான் துன்பப் பட்டாலும் பரவாயில்லை, அந்த சிறிய உயிர்கள் துன்புறக் கூடாது என்று நிழலை தவிர்த்து  வேகாத வெயிலில் நடந்தார்.

அவருக்கு கண்ணனின் அன்பு முழுவதும் கிடைத்தது. 

இறைவன் ஒரு படி மேலே. 

கொஞ்சம் கீழே வருவோம். 

"என் மேல் யாருக்கும் அன்பு இல்லை. யாரும் என்னை நேசிக்க மாட்டேன் என்கிறார்கள். உண்மையான காதல் என்பதை நான் சினிமாவிலும் புத்தகங்களிலும் தான்  படித்து இருக்கிறேன். அனுபவித்தது இல்லை. " 

என்று பலர் ஏங்குவார்கள். 

என் உதவி வேண்டும். ஆனால், என் மேல் அன்பு செலுத்துவோர் யாரும் இல்லை  என்று தனிமையாக உணர்வார்கள். 

அவர்களுக்கும் இது ஒரு பாடம். 

நீங்கள் முதலில் அன்பை செலுத்தப் படியுங்கள். உங்களுக்கு அன்பு வந்து சேரும். 

ஒரு பலனும் எதிர் பார்க்காமல், கன்னுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் மேல்  அன்பு  செலுத்தினார் குசேலர்.

பலன் கருதாமல் எத்தனை பேர் மேல் நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள்?

மற்றவர்களிடம் இருந்து அன்பும், காதலும், இறைவனிடம் இருந்து கருணையும் வேண்டுமா?  முதலில் நீங்கள் மற்ற உயிர்கள் மேல் அன்பு செலுத்தப் படியுங்கள். 

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும்  என்று வேண்டிய வள்ளலார், முதலில் வேண்டியது "ஆருயிர்க்கெலாம் நான் அன்பு செய்ய வேண்டும்" என்று. 


அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.


அன்பை அள்ளி அள்ளி கொடுங்கள். 

அது திரும்பி வரும்.


Tuesday, July 16, 2019

திருவாசகம் - பால் நினைந்து ஊட்டும்

திருவாசகம்  - பால் நினைந்து ஊட்டும் 


பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, 
பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, 
உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; 
எங்கு எழுந்தருளுவது, இனியே?

முன்பு எப்போதோ எழுதிய ப்ளாக் லிங்க் கீழே உள்ளது.


http://interestingtamilpoems.blogspot.com/2014/07/blog-post_9060.html

இப்போது எழுத நினைத்தது வேறு.

பால் நினைந்து ஊட்டும்.

குழந்தைக்கு பசிக்குமே என்று, குழந்தை அழு முன் அவளுக்கு பால் தரும் தாய் என்று ஒரு பொருள்.

பால் தர வேண்டுமே தர வேண்டுமே நினைப்பால் அவளுக்கு பால் சுரக்கிறது.

இன்றைய கால நெருக்கடியில் பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் பால் தருவதற்கு போதிய காலம் விடுப்பு கிடைப்பதில்லை. அவளின் நினைப்பு எல்லாம், "இன்னும் இரண்டு அல்லது மூணு மாதத்தில்  வேலைக்குப் போக வேண்டும். விடுமுறை தீர்ந்து விடும். அதற்கு முன்பே பிள்ளைக்கு  புட்டி பாலை பழக்க படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் பின்னால்  பிள்ளை ரொம்ப சிரமப் படுவான்/ள்" என்று எண்ணம் எல்லாம்  புட்டி பாலின் மேலேயே இருக்கிறது.  எவ்வளவு சீக்கிரம் புட்டி பாலுக்கு மாற்ற முடியுமோ  அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்று நினைக்கிறாள்.

எங்கிருந்து பால் சுரக்கும்?

அது ஒருபுறம் இருக்க, சில பெண்கள், சிறுபான்மை பெண்கள், பால் கொடுத்தால்  அழகு கெட்டு விடும் என்று நினைக்கிறார்கள். அதனால், எப்படி கொடுப்பதை  குறைக்கலாம், எவ்வளவு சீக்கிரம் நிறுத்தலாம், என்றே எண்ணம்  ஓடுகிறது.

எங்கிருந்து பால் சுரக்கும்?

"பால் நினைந்து" என்றார் மணிவாசகர்.

புட்டியை நினைந்து என்றோ, அழகை நினைந்து என்றோ சொல்லவில்லை.

காலத்தின் கட்டாயம் தாய்மையின் இயற்கை உணர்வும் தடம் மாறிப் போய் கொண்டிருக்கிறது.

நான் சொல்ல வந்தது அது அல்ல.

பால் தர வேண்டும் என்று நினைத்தால் பால் சுரக்கும்.

இராம கிருஷ்ண பரமஹம்சர், கல்கத்தா காளியை நினைத்து உருகுவாராம். அப்போது அவருக்கு பால் சுரக்குமாம்.


மனதில் என்ன நினைக்கிறோமோ அது நடக்கும்.

நடந்தே தீரும்.

ஒன்று நடக்க வேண்டும் என்றால், அதை மனதில் தீவிரமாக நினைக்க வேண்டும்.

மனதில் நினைப்பது மாதிரி உடல் மாறும். உடல் என்றால் உடல் மட்டும் அல்ல, நம் அறிவும், ஆற்றலும், திறமையும் எல்லாம் மாறும்.

இலக்குவன்  கானகம் போக விடை கேட்டு நிற்கிறான். "இராமன் திரும்பி வந்தால்  அவனுடன் வா. இல்லையேல், அவனுக்கு முன் நீ முடி" என்று விடை கொடுத்து  அனுப்புகிறாள்.

அவள் தாய்மை பொங்கி வருகிறது. அந்த நிலையில் அவளுக்கு பால் சுரந்தது  என்கிறான் கம்பன்.


பின்னும் பகர்வாள், ‘மகனே!
    இவன் பின் செல்; தம்பி
என்னும்படி அன்று; அடியாரினில்
    ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின்
    வா; அது அன்றேல்
முன்னம் முடி; ‘ என்றனள்
    பால் முலை சோர நின்றாள்.


அத்தனை வயதில் பால் சுரக்க வாய்ப்பில்லை. இருந்தும், மனதில் பிறந்த  மகன் மேல் உள்ள காதலால் பால் சுரந்தது. 

நாம் எதை நினைக்கிறோமோ, அதை முடித்துக் கொடுக்கும் வன்மை நம் மனதுக்கு உண்டு. 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் 
திண்ணியர் ஆகப் பெறின் 

நினைத்தது, நினைத்தபடியே நடக்கும் என்று வள்ளுவர் உறுதி கூறுகிறார். 

வெள்ளத்து அணையது மலர் நீட்டம் மாந்தர் தம் 
உள்ளத்து அணையது உயர்வு 

என்பதும் அவர் வாக்கே. 

"நினைவு நல்லது வேண்டும் " என்பான் பாரதி. 

எவ்வளவு பெரிய ஆளாக வேண்டும் ? பணம், செல்வாக்கு, புகழ், முக்தி என்று என்று எது வேண்டுமோ....அதை கேளுங்கள். 

கேளுங்கள் கொடுக்கப்படும் என்றார் இயேசு பிரான். 

தெளிவாக கேளுங்கள். என்ன வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று கேளுங்கள். நம்பிக்கையோடு கேளுங்கள். 

"திண்ணியராகப் பெறின்" என்பதுதான் இங்கே முக்கியம். 

நம்பிக்கை. உறுதி. 

எதை நினைக்கிறோம், அது நடந்தே தீரும். 

"பால் நினைந்து" ஊட்டும்.

மணிவாசகரின் இரண்டு வார்த்தைக்குள் எவ்வளவு பெரிய பேருண்மை புதைந்து  கிடக்கிறது. 

திருவாசகம் முழுவதும் படித்தால்?.....

படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_16.html

Thursday, July 11, 2019

கம்ப இராமாயணம் - மானுடவர்க்கு ஆற்றாது மாற்றினையோ?

கம்ப இராமாயணம்  -  மானுடவர்க்கு ஆற்றாது மாற்றினையோ?


இலக்குவனால் மூக்கும், காதும், முலையும் வெட்டுப்பட்ட சூர்ப்பனகை வலியில் தன் அண்ணனான இராவணனை அழைக்கிறாள்.

"இராவணா, நீ தேவர்களையெல்லாம் வென்று அவர்களை அடிமைப் படுத்தி வேலை வாங்கினாய். அப்படிப்பட்ட நீ, இந்த மானிடர்களுக்கு முன் வலிமையை காட்டாமல் மாற்றி வைத்து விட்டாயா? இதற்காகவா உன் கையில் சிவன் தந்த வாள் இருக்கிறது?"

என்று அழுது புலம்புகிறாள்.

பாடல்


காற்றினையும், புனலினையும்,
    கனலினையும், கடுங் காலக்
கூற்றினையும், விண்ணினையும்,
    கோளினையும், பணி கோடற்கு
ஆற்றினை நீ, ஈண்டு இருவர்
    மானுடவர்க்கு ஆற்றாது
மாற்றினையோ? உன் வலத்தைச்
    சிவன் தடக்கை வாள் கொண்டாய்!

பொருள்


காற்றினையும் = வாயு பகவானையும்

புனலினையும் = வருண பகவானையும்

கனலினையும் = அக்கினி பகவானையும்

கடுங் காலக் கூற்றினையும் = எமனையும் (கூற்றுவன் , உடலையும், உயிரையும் கூறு போட்டு பிரிப்பவன்)

விண்ணினையும் = ஆகாயத்தையும்

கோளினையும் = நவ கோள்களையும்

பணி  = வேலை

கோடற்கு = செய்வதற்கு

ஆற்றினை நீ = செய்செய்வித்தாய் நீ

ஈண்டு = இன்று

இருவர் = இருவர்

மானுடவர்க்கு = மானிடற்கு

ஆற்றாது = போருக்க முடியாமல்

மாற்றினையோ? = மாற்றி வைத்து விட்டாயா ? (எதை மாற்றி வைத்து விட்டான்)

உன் வலத்தைச் = உன் வலக்கையில்

சிவன் = சிவன்

தடக்கை = பெரிய கை, பெருமை வாய்ந்த கை

வாள் கொண்டாய்! = வாள் கொண்டாய் (வாளை மறைத்து வைத்து விட்டாயா என்று கேட்கிறாள்)

இந்தப் பாடலில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? இதைத் தெரிந்து நமக்கு என்ன  பலன்.  இதைப் போய் வேலை மெனக்கெட்டு எதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டும்?

 நாம், நாம் இருக்கும் இடத்தில் இருந்து மற்றவற்றை எடை போடுகிறோம். மற்றவர்களை , நம் கோணத்திலேயே புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.

என்னுடைய நிலை தாழ்வாக இருந்தால், என் உயரத்துக்கு எது தெரியுமோ, அதுதான்  உண்மை என்று நாம் நினைக்கிறோம்.

அது மட்டும் அல்ல, அதற்கு மேலாக எதுவும் இருந்தால், அவற்றை என்னுடைய  அளவுக்கு கீழே இரக்க முயற்சி செய்வேன். என்னை விட, என் அறிவின்  வீச்சை விட பெரியது என்ன இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

நான், இவற்றை நேரில் கண்டிருக்கிறேன்.

"தீயவர்களோடு சேராதே" என்று திருக்குறள் சொல்கிறது என்று சொன்னால், "அப்படி என்றால் அந்த தீயவர்களை எப்படித்தான் திருத்துவது? நாம் அவர்களோடு  சேர்ந்து பழகி அவர்களை திருத்த வேண்டாமா" என்று கேட்பவர்களை  நான் பார்த்து இருக்கிறேன்.

அதாவது, திருக்குறள் என்ன பெரிய புத்தகமா? நான் அதை விட பெரிய ஆள் என்று  அவர்களுக்கு நினைப்பு.

சூர்ப்பனகை நினைக்கிறாள் இராம இலக்குவனர்களை மானிடர்கள் என்று. அவள்  அறிவுக்கு எட்டியது அவ்வளவு தூரம் தான்.

கண்ணனை இடையன் என்று சொல்லிக் கெட்டான், துரியோதனன் என்ற மடையன்.

முருகனை சிறு பாலகன் என்று சொல்லிக் கெட்டான் சூரபத்மன் என்ற  மூடன்.

இராமனை மானிடன் என்று சொல்லிக் கெட்டான் இராவணனும் (இங்கு சூர்பனகையும்).

சில விடயங்கள் நம் அறிவுக்கு அப்பால் இருக்கின்றன. அவற்றை அறிவு கொண்டு  சிந்தித்து அறிந்து விட முடியாது.

"சித்தமும் செல்லா சேச்சியான் காண்க"

என்பார் மணிவாசகர்.

நம் அறிவு அங்கே போகாது. அறிவினால் அதை அறிய முடியாது.

அன்பினால் அறியலாம். அருளினால் அறியலாம்.

இராமனை தூரத்தில் கண்ட போதே அனுமன் சொல்கிறான்

"இவர்கள் மேல் உள்ள அன்பினால் என் எலும்பு உருகுகிறது" என்று.

குகனுக்கு, அனுமனுக்கு, வீடணனுக்கு, பரம் பொருளாக தெரிந்த இராமன்  சூர்பனகைக்கு  மானிடர்களாகத் தெரிகிறான்.

அவரவர் உயரம்.

உயர்ந்த நூல்களை,  உயர்ந்த விடயங்களை, அறிவில் பெரியவர்கள் சொல்லியதை கேட்கும் போது , நாம் நம்மை அந்த உயரத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டுமே அல்லாது அவற்றை நம் உயரத்துக்கு கீழே  கொண்டு வர  முயற்சி செய்யக் கூடாது.

செய்கிறார்கள். அரக்கர்கள்.

கம்ப இராமாயணத்தை, வைணவ நூல் என்று ஒதுக்கி வைத்த ஆட்கள் உண்டு.

கம்ப இராமாயணம் மூட நம்பிக்கைகளை வளர்க்கிறது என்று கூறிய ஆட்கள் உண்டு.

கம்ப இராமாயணம் பால் உணர்ச்சியை தூண்டும் நூல் என்று கூறிய ஆட்களும் உண்டு.

அவரவர் உயரம்.

மேலிருந்து ஒருவன் நம்மை கை தூக்கி விட முயற்சி செய்தால், மேலே செல்ல முயல வேண்டுமே அல்லாமல் அவனை  நாம் இருக்கும் இடத்துக்கு கீழே இழுத்து  விட முயலக் கூடாது.


நல்ல விடயங்களை உள் வாங்கிக் கொள்ளுங்கள். மருந்து குடிக்க அடம் பிடிக்கும் குழந்தை  போல் அடம் பிடிக்காதீர்கள்.

மருந்து கசக்கும் என்று தெரிந்துதான், அதன் மேல் சர்க்கரை தடவி தருவார்கள்.

கடினமான செய்திகளை இராமனின் வாழ்க்கைக்  கதை என்ற சர்க்கரை தடவித் தருகிறார்  கம்பர்.

சர்க்கரை அல்ல முக்கியம். மருந்து தான் முக்கியம்.

நாளும் நம்மை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

அதற்கு இது போன்ற காப்பியங்கள் நமக்கு உதவி செய்யும்.

நேற்றை விட இன்று ஒரு படி மேலே.

இன்றை விட நாளை ஒரு படி மேலே என்று முன்னேறுவோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_11.html