Saturday, August 31, 2019

கம்ப இராமாயணம் - மங்கையர் மனநிலை உணர வல்லரோ?

கம்ப இராமாயணம் - மங்கையர் மனநிலை உணர வல்லரோ?


என் மனைவிக்கு என்னதான் வேணும்னு தெரியல. எதைச் செய்தாலும், சொன்னாலும் திருப்தி அடைய மாட்டேங்கிறா...சரி என்னதான் வேணும்னு கேட்டா அதுவும் சொல்ல மாட்டேங்குறா...என்ன பண்றதுன்னே தெரியல என்று மண்டைய பிய்த்துக் கொள்ளாத கணவன்மார்கள் கிடையாது.

ஆண்கள், பெண்ணின் மனதை புரிந்து கொள்வது கடினம்.

என்னைக் கேட்டால் அவர்களுக்கே அவர்கள் மனம் என்ன என்று தெரியுமா என்பதே சந்தேகம் என்பேன்.

தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்தால்தானே மற்றவர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல முடியும்.

நம்மை விடுங்கள். சாதாரண மனிதர்கள்.

அசோகவனத்தில் இருந்து வந்த சீதையை , இராமன் இன்னதுதான் பேசுவது என்ற வரைமுறை இல்லாமல் எல்லோர் முன்னிலையிலும் பேசி விடுகிறான்.

அப்போது சீதை நினைக்கிறாள்,

"பிரம்மா , விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும், உள்ளங்கையில் உள்ள நெல்லிக் கனி போல் அனைத்தையும் பார்த்தாலும், பெண்ணின் மன நிலையை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள் "

என்று நொந்து கொள்கிறாள்.

இது தீக்குளிக்குமுன் அவள் நினைத்தது.....

பாடல்


‘பங்கயத்து ஒருவனும்,
    விடையின் பாகனும்,
சங்குகைத் தாங்கிய
    தரும மூர்த்தியும்
அங்கையின் நெல்லிபோல்
    அனைத்தும் நோக்கினும்,
மங்கையர் மனநிலை
    உணர வல்லரோ?


பொருள் 

‘பங்கயத்து ஒருவனும், = தாமரை மலரில் இருப்பவனும் (பிரம்மா )

விடையின் பாகனும், = எருதின் பாகனும் (சிவனும்)

சங்குகைத் தாங்கிய = சங்கை கையில் ஏந்திய

தரும மூர்த்தியும் = தர்ம மூர்த்தியான திருமாலும்

அங்கையின் =உள்ளங்கையில்

நெல்லிபோல்  = நெல்லிக்கனி போல்

அனைத்தும் நோக்கினும், = அனைத்தையும் பார்த்தாலும்

மங்கையர் மனநிலை = ஒரு பெண்ணின் மனதை

உணர வல்லரோ? = அறியும் ஆற்றல் படைத்தவர்களா ? (இல்லை)

என் மனம் என்ன என்று இராமானுக்குத் தெரியவில்லையே. அவனைத் தவிர வேறு ஒருவரை நான்  நினைத்துக் கூட பார்ப்பேன் என்று அவன் எப்படி நினைக்கலாம் ?

என்று நினைத்து வருந்துகிறாள்.

முமூர்த்திகளுக்கே பெண்ணின் மனம் புரியாதென்றால் நாம் எம்மாத்திரம்.

பெண்ணின் மனதை அறிந்து கொள்ள முயல்வது என்பது மும்மூர்த்திகளை விட நமக்கு  ஆற்றல் அதிகம் என்ற நினைப்பால்.

எனவே, அந்த முயற்சியை சாதாரண மானிடர்கள் கைவிடுவது நலம் என்பது கம்பன் காட்டும்  பாடம்.

அது ஒரு புறம் இருக்க, இவ்வளவு தீவிரமாக யோசித்தவள், தீக்குளித்த பின்  ஏதாவது  சொன்னாளா?

"பார்த்தாயா இராமா, என்னைப் போய் சந்தேகப் பட்டாயே ..." என்று ஒரு சில வாக்கியங்களாவது  பேசி இருக்க வேண்டும் தானே ?

"நீ காட்டுக்கு வர வேண்டாம்" என்று இராமன் சொன்ன போது ,

"நின் பிரிவினும் சுடுமோ அந்த வெங்கானகம் " என்று இராமனை எதிர்த்து பேசியவன் சீதை.

அதுக்கே அப்படி பேசினாள் என்றாள், இவ்வளவு பெரிய விஷயத்துக்கு சும்மாவா இருந்திருப்பாள்?

என்ன பேசி இருப்பாள்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_31.html



Friday, August 30, 2019

அபிராமி அந்தாதி - என் புந்தி எந்நாளும் பொருந்துகவே

அபிராமி அந்தாதி - என் புந்தி எந்நாளும் பொருந்துகவே 


கால வெள்ளம் அவர்களை ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்துச் சென்றது. அவளுக்கு திருமணம் ஆகி, குழந்தை குட்டி என்று அவள் ஒரு பக்கம். வேலை, குடும்பம் என்று இவன் ஒரு பக்கம் போய் விட்டார்கள்.

எப்போதாவது தனிமையில் இருக்கும் போது அவள் நினைவு வரும். "...ஹ்ம்...அவள் எப்படி இருக்கிறாளோ" என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வான். அவள் கணவன் எப்படி இருப்பான்? அவள் குணத்துக்கு நல்ல கணவன் தான் கிடைத்திருப்பான் அவளுக்கு என்று நினைத்துக் கொள்வான்.

நினைவு வரும்போதெல்லாம், "சே ...இத்தனை நாள் எப்படி அவளை மறந்து இருந்தேன் " என்று அவனுக்குள் ஒரு சின்ன வருத்தம் வரும். என் நினைவை விட்டுப் போனது அவ தப்புத்தான் என்று அவளை செல்லமாக கோபித்துக் கொள்வான்.

"நீயும், உன்  husband ம் ஒழுங்கா இனி மேல் என் நினைவில் இருக்க வேண்டும்" என்று அவளிடம் கண்டிப்பாக சொல்லிவிடுவான்....

அது ஒரு புறம் இருக்கட்டும் ....

பட்டர் சொல்லுகிறார்



"மனிதரும், தேவரும்,  முனிவரும்  வந்து உன் சிவந்த திருவடிகளில்  வணங்குகிறார்கள். சடை முடி மேல் நிலவையும், பாம்பையும், கங்கையையும் கொண்ட உன் கணவரோடு நீ என் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும் " என்று



பாடல்


மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி*
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார் சடைமேல்*
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த*
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!


பொருள்


மனிதரும் = மனிதர்களும்

தேவரும்  = தேவர்களும்

மாயா = இறப்பில்லாத

முனிவரும் = முனிவர்களும்

 வந்து = உன்னிடம் வந்து

சென்னி = தலை

குனிதரும் = வணக்கம் செய்யும்

சேவடிக்  = சிவந்த திருவடிகளை உடைய

கோமளமே! = கோமளமே

கொன்றைவார் = கொன்றை மலர் அணிந்த

சடைமேல் = சடையில்


பனிதரும் திங்களும் = பனி பொழியும் நிலவும்

பாம்பும் = பாம்பும்

பகீரதியும் = ஆகாய கங்கையும்

படைத்த  = கொண்ட

புனிதரும் = புனிதரான சிவனும்

நீயும் = நீயும்

என் = என்னுடைய

புந்தி = புத்தியில்

எந்நாளும் = எப்போதும்

பொருந்துகவே! = பொருந்தி இருக்க வேண்டும்.


ஒரு பட்டியல் சொல்லும் போது, ஒரு முறை இருக்கிறது.

முதலில் சிறந்ததைச் சொல்லி, பின் சிறப்பு குறைவானதைச் சொல்ல வேண்டும்.

ஆசிரியரும், மாணவர்களும் வந்தார்கள் என்று சொல்ல வேண்டும்.

மாணவர்களும், ஆசிரியரும் வந்தனர் என்று சொல்லக் கூடாது.

ஆசிரியர் உயர்ந்தவர்.

ஒரு மேடையில் வணக்கம் சொல்லும் போது , முதலில் தலைவர், பின் செயலாளர், பொருளாளர், பின் ஏனையோர் என்று ஒரு வரிசை வைத்துச் சொல்ல வேண்டும்.

முதலில் மைக் போட்டவரே , சீரியல் லைட் போட்டவரே , விழாவுக்கு வந்திருக்கும்  சிறுவர் சிறுமிகளே , தலைவர் அவர்களே என்று சொல்லக் கூடாது.

இங்கே பட்டர்,

மனிதரும், தேவரும், மாயா முனிவரும் என்று சொல்லுகிறார்.

மனிதர்களுக்கு என்ன அவ்வளவு சிறப்பு?

தேவர்களும், முனிவர்களும் இறைவனை வழிபடுவதையே தொழிலாக கொண்டவர்கள்.

மனிதர்களுக்கு ஆயிரம் வேலைகள். அதற்கு நடுவில் வழிபாடும் செய்கிறார்கள் என்றால்  அது சிறப்புத்தானே என்று அவர் நினைத்து இருக்கலாம்.

அபிராமியுடன் ஒரு அன்னியோன்னியம்...."நீ வந்துரு" என்று

.அவளுடய கணவரை பற்றி பேசும்போது "புனிதரும்" என்று அவருக்கு  மட்டும் மரியாதை சேர்த்துக் கொள்கிறார்.

"நீ வந்துரு. வரும் போது அவரையும் கூட்டிகிட்டு வா" என்று சொல்லுவது போல.

பட்டர் இப்படி எல்லாம் நினைத்தாரா என்றால்...பாட்டில் கரைந்து பாருங்கள்...புரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_73.html


கம்ப இராமாயணம் - யாண்டுக் கொண்டியோ ?

கம்ப இராமாயணம் - யாண்டுக் கொண்டியோ ?


இராமன் சந்தேகப்பட்டான். சீதை தீக்குளித்தாள். அவளின் கற்பின் சூடு தாங்க முடியாமல் அக்கினி தேவன் அவளை கொண்டு வந்து இராமனிடம் கொடுத்தான். "இவள் களங்கம் அற்றவள்" என்று சான்றிதழ் வேறு கொடுத்தான்.

அப்போது, இராமன் கேட்கிறான்.."நீ யார் என்று".

அதற்கு அவன் , "அக்கினி தேவன் " என்று பதில் சொல்லி விட்டு, அவன் இராமனைப் பார்த்து கேட்கிறான்.

இராம பக்தர்கள் எச்சில் விழுங்கும் இடம்.....

"தேவர்களும், முனிவர்களும் மற்றும் உயிர் உள்ள அனைத்தும், மூன்று உலகங்களும் கண்கள் மோதி நின்று "ஆ" என்று அதிர்ச்சியில் அலறியதை நீ கேட்க விலைலயா? அறத்தை நீக்கி வேறு ஏதோ ஒரு பொருளை நீ எவ்வாறு கடை பிடித்தாய் " என்று இராமனை அக்கினி தேவன் கேள்வி கேட்கிறான்.

பாடல்


'தேவரும் முனிவரும், திரிவ நிற்பவும், 
மூவகை உலகமும், கண்கள் மோதி நின்று, 
''ஆ!'' எனல் கேட்கிலை; அறத்தை நீக்கி, வேறு 
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டுக் கொண்டியோ? 


பொருள்

'தேவரும் = தேவர்களும்

முனிவரும் = முனிவர்களும்

 திரிவ = திரிகின்றவை உயிர் உள்ளவை)

நிற்பவும் = நிற்பவை (உயிர் அற்றவை)

மூவகை உலகமும் = மூன்று உலகங்களும்

கண்கள் மோதி நின்று,  = கண்கள் மோதி நின்று

''ஆ!'' எனல் கேட்கிலை = ஆ என்று அதிர்ச்சியில் அலறியதை நீ கேட்கவில்லையா ?

அறத்தை நீக்கி = அறத்தை விட்டு விட்டு

வேறு  = வேறு

ஏவம் என்று ஒரு பொருள் = ஏதோ ஒரு பொருளை

யாண்டுக் கொண்டியோ?  = எப்படி கொண்டாய்

சீதையின் கற்பை இராமன் சந்தேகம் கொண்டதை மூன்று உலகிலும் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தேவர்கள், முனிவர்கள் என்று சான்றோர் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அது அறம் அன்று தீக் கடவுள் கூறுகிறார்.

சீதை பேசாமல் நிற்கிறாள்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறாள்.

அவள் ஒன்றும் சாதாரணமானவள் அல்ல.

"எல்லை நீத்த இவ்வுலகம் யாவையும் என் சொல்லினால் சுடுவேன்"

என்றவள்.

பின் எப்போதுதான் பேசினாள் ? என்ன தான் பேசினாள் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_30.html


Thursday, August 29, 2019

கந்தரநுபூதி - ஆறாறையும் நீத்து

கந்தரநுபூதி - ஆறாறையும் நீத்து 


இந்த  உலகம் எப்படி வந்தது ? யார் இதைப் படைத்தது? உயிர்களை இறைவன் படைத்தானா? முக்தி என்றால் என்ன? ஏன் உயிர்கள் வினையில் சிக்கித்  தவிக்கின்றன?  இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?  உயிர்களைப் பற்றும் ஆணவம் , கன்மம், மாயை போன்ற மலங்கள் எப்படி உயிரைப் பற்றுகின்றன ?

ஒரு வினையில் இருந்து மற்றொரு வினை வருகிறது என்றால், முதல் வினை எங்கிருந்து வருகிறது?

இப்படி ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. இவற்றிற்கு எல்லாம் பதில் இருக்கிறதா என்றால் இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் இருக்கிறது.

அந்த பதில்கள் சைவ சித்தாந்தின் 36 தத்துவங்களுக்குள் அடங்கி இருக்கிறது.

எப்படி கேள்வியை மடக்கி மடக்கி கேட்டாலும், அதில் பதில் இருக்கிறது.

It is a manum opus. Great frame work of philosophy.

அதை விளக்குவது அல்ல இந்த ப்ளாக்கின் நோக்கம்.

அருணகிரிநாதர் சொல்கிறார், இந்த 36 தத்துவங்களையும் தாண்டி நான் செல்ல எனக்கு வழி சொல்ல மாட்டாயா என்று முருகளை வேண்டுகிறார்.

பாடல்


ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே!

சீர் பிரித்தபின்

ஆறு ஆறையும்  நீத்து அதன் மேல் நிலையை 
பேறா அடியேன் பெறுமாறு உளதோ 
சீறா வரு சூர் சிதைவித்து இமையோர் 
கூறா உலகம் குளிர் வித்தவனே 

பொருள்

ஆறு ஆறையும்  = 6 x 6 = 36 தத்துவங்கள்

 நீத்து = தாண்டி

அதன் = அந்த தத்துவங்களின்

மேல் நிலையை  = மேல் நிலையை

பேறா அடியேன் = பெறாத அடியேன்

பெறுமாறு உளதோ  = பெறுவதற்கு ஒரு வழி உள்ளதா

சீறா = சீறி

வரு = வரும்

சூர் = சூரர்களின் உடலை, உலகை

சிதைவித்து = அழித்து

இமையோர்  = வானவர்கள்

கூறா = முறையிட்டு, வேண்டி வந்த

உலகம் = உலகம்

குளிர் வித்தவனே  = குளிர்வித்தவனே

"முருகா , நீ எவ்வளவு பெரிய ஆளு. சூரபத்மனை அழித்து, அவனது படைகள், உலகங்கள் அனைத்தையும் அழித்து, தேவர்களுக்கு அவர்கள் உலகை தந்தவன். அவ்வளவு பெரிய ஆள். நான் ஒரு சின்ன ஆள். எனக்கு அந்த தத்துவங்களை தாண்டி  உள்ள இடத்துக்கு கொண்டு போவது உனக்கு என்ன பெரிய  காரியமா ? உன்னால் முடியும். "

என்கிறார்.

ஆர்வம் உள்ளவர்கள் 36 தத்துவங்களை தேடி கண்டு கொள்வார்களாக !

ஒன்றைப் படிக்கும் போது, அதில் இருந்து வேறு எதை அறிந்து கொள்ளலாம் என்று தேட  வேண்டும். 

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_29.html

Wednesday, August 28, 2019

கம்ப இராமாயணம் - இனிக் கழிப்பிலள்

கம்ப இராமாயணம் - இனிக் கழிப்பிலள் 


சீதை தீக்குளித்த பின் என்ன நடந்தது, எப்படி சீதை அதை ஏற்றுக் கொண்டாள் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

முந்தைய பிளாகில் "ஊடல் தீர்க்கும் வாயில்கள்" பற்றி பார்த்தோம்.

யார் என்ன சொன்னால் என்ன, சீதை என்ன சொன்னால், என்ன நினைத்தால் என்பதுதான் முக்கியம், அல்லவா?

சீதை தீயில் புகுந்த பின், அவளின் கற்பின் சூட்டை தாங்க மாட்டாமல், அக்கினி தேவன் , அவளை கையில் ஏந்தி வந்து இராமனிடம் தந்து, இவள் மாசு இல்லாதவள் , இவளை ஏற்றுக் கொள் என்கிறான்.

அப்போது இராமன் என்ன சொன்னான் தெரியுமா ?

"அக்கினி தேவனே, இந்த உலகில் அழிக்க முடியாத சான்று நீ. இவள் பழி இல்லாதவள் என்று நீ சொல்லி விட்டாய். எனவே, இவள் என்னால் இனி கழிக்க கூடாதவள்"

என்கிறான்.

பாடல்



‘அழிப்பு இல சான்றுநீ,
    உலகுக்கு; ஆதலால்,
இழிப்பு இல சொல்லி, நீ
    இவளை, “யாதும் ஓர்
பழிப்பு இலள் ‘‘ என்றனை;
    பழியும் இன்று; இனிக்
கழிப்பிலள் ‘என்றனன்
    கருணை உள்ளத்தான்.


பொருள் 

‘அழிப்பு இல = அழிக்க முடியாத

சான்றுநீ = சான்று நீ (நீ = அக்கினி தேவன்)

உலகுக்கு = இந்த  உலகுக்கு

ஆதலால், = எனவே


இழிப்பு இல சொல்லி = இகழ்ச்சிக்கு இடமில்லாத சொற்களை சொல்லி

நீ = நீ

இவளை = இவளை (இந்த சீதையை)

 “யாதும் ஓர் = எந்த ஒரு

பழிப்பு இலள் ‘‘ = பழியும் இல்லாதவள்

என்றனை; = என்று கூறினாய்

பழியும் இன்று; = பழி இல்லை

இனிக் கழிப்பிலள் = இனி கழிக்கக் கூடாதவள்

‘என்றனன் = என்று கூறினான்

கருணை உள்ளத்தான். = கருணை உள்ளம் கொண்ட இராமன்

இராமன் செய்ததை தவறு என்று கம்பன் ஏற்றுக் கொள்ளவில்லை. சீதையை அவன் ஏற்றுக் கொண்டதை  "கருணை உள்ளத்தால்" என்கிறான்.

இராமன் மேல் பழி சொல்வதற்காக சொல்லவில்லை.

இது ஒரு நெருடலான இடம்.

இராம பக்தர்கள் கூட விழுங்க முடியாமல் தவிக்கும் இது.

நமக்கு என்ன தவிப்பு என்றால், சீதை என்ன சொன்னாள் , நினைத்தாள் என்பதுதான்.

இந்த சம்பவம் ஒரு பெரிய விஷயம். சீதை அதை ஏதோ ஒன்றும் நடக்காதது போல  விட்டு விட்டு போய் இருக்க முடியாது.

ஏதாவது சொல்லி இருப்பாள் தானே.

குறைந்த பட்சம் மனதிற்குள்ளாவது நினைத்து இருப்பாள் தானே?

அது என்னவாக இருக்கும் ?


சீதை இதை ஏற்றுக் கொல்கிறாளா? தன் கற்பை சந்தேகித்த கணவனை ஒரு பெண்  எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? சீதை என்ன தான் செய்தாள் ?

Tuesday, August 27, 2019

அற்புதத் திருவந்தாதி - எவ்வுருவோ நின்னுருவம் ஏது

அற்புதத்  திருவந்தாதி - எவ்வுருவோ நின்னுருவம் ஏது


காரைக்கால் அம்மையார் எழுதியது அற்புதத் திருவந்தாதி.

உண்மையிலேயே அது ஒரு அற்புதத் திருவந்தாதிதான்.

பெண்கள் சுடுகாட்டுக்கு போவது கூடாது என்ற கட்டாய நெறிமுறை இன்றும் கடைபிடிக்கப் படுகிறது.

அந்தக் காலத்திலேயே, இறைவனை சுடுகாட்டில் சென்று வழிபட்டவர் அம்மையார்.

அறிவியலும், தத்துவமும் படிக்க படிக்க நம் மனமும் புத்தியும் எதையும் ஆராயச் சொல்கிறது. கேள்வி கேட்கச் சொல்கிறது. கேட்டதை சரி பார்க்கச் சொல்கிறது.

எதையும் அலசி ஆராயாமல் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

நம்பிக்கை என்பது குறைந்து கொண்டே வருகிறது. தாக்கம்தான் மேலோங்கி நிற்கிறது.

எதையும் அறிவுக் கண் கொண்டு பார்க்க புத்தி விளைகிறது.

அறிவுக்கு அப்பால் எதுவும் இருக்க முடியாது என்று மனம் திடமாக நம்புகிறது.

அம்மையாரிடம் ஒருவர் கேட்டார், "சிவன் சிவன் என்று சொல்கிறீர்களே, அவன் எப்படி இருப்பான்" என்று.

அம்மையார் சொல்கிறார்

"அவன் எப்படி இருப்பான் என்று தெரியாமலேயே  ஆட்பட்டேன். சரி அப்போதுதான்  திருவருள் கிடைக்கவில்லை. ஆட்பட்ட பின், அவன் அருள் கிடைத்தபின்  சிவன் எப்படி இருப்பான் என்றால், இப்போதும் தெரியவில்லை. அப்போதும் தெரியவில்லை. இப்போதும் தெரியவில்லை.  நீ எப்படி  இருப்பாய் என்று கேட்பவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன். உன் உருவம் தான்  என்ன " என்று சிவனையே கேட்கிறார் அம்மையார்.

பாடல்



அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது


பொருள்

அன்றும் = திருவருள் கிடைப்பதற்கு முன்பு

திருவுருவம் = உன் திருவுருவம்

காணாதே ஆட்பட்டேன் = காணாமலேயே ஆட்பட்டேன்

இன்றும் = திருவருள் கிடைத்த பின்பு இன்றும்

திருவுருவம் காண்கிலேன்  = உன் உருவத்தை நான் காண்கிலேன்

என்றும் = எப்போதும்

தான் = தான்

எவ்வுருவோன் =  எந்த உருவத்தவன்

 நும்பிரான் = உன் தலைவன்

என்பார்கட் = என்று என்னை கேட்பவர்களுக்கு

கென்னுரைக்கேன் = என்ன உரைப்பேன் ?

எவ்வுருவோ  = என்ன உருவமோ

நின்னுருவம் = உன் உருவம்

ஏது = எது நான் சொல்லுவேன்

உருவம் இல்லாத ஒன்றை நம்பித்தான் இருந்திருக்கிறார்கள்.

அவன் அநுபூதி பெற்றவர்களுக்கும் அவன் உருவம் தெரியாது.

நாவுக்கரசர் கூறுகிறார்....

“மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
    மயானத்தான் வார்சடையன் என்னின் அல்லால்
ஒப்புடையான் அல்லன் ஓருருவனல்லன்
    ஓரூரனல்லன் ஓர்உவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
    இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே”


அவன் இப்படி இருப்பான் என்று உதாரணம் கூற முடியாது
ஒரு உருவம் உடையவன் அல்லன்

ஒரு ஊர் காரன் இல்லை

உவமை இல்லாதவன்

ஒரு நிறம் இல்லாதவன்

இப்படியன் , இந் நிறைத்தன் , இவன் இறைவன் என்று வரைந்து காட்ட முடியாது என்கிறார்.

அப்படி என்றால், அது சிந்தனைக்கு அகப்படாதது.

"சித்தமும் காணா சேச்சியோன் காண்க" என்கிறார் மணிவாசகர்

உருவம் இல்லாத ஒன்றை எப்படி காண்பதாம்?

இது பற்றி சைவ சித்தாந்தம் மிக மிக ஆழமாக சிந்தித்து எழுதி வைத்திருக்கிறது.


விறகில் தீயினன், பாலில் படு நெய் போல் மறைய நின்றுளன் மாமணி சோதியன் 


என்பார் நாவுக்கரசர்.

இதை எப்படித்தான் விளக்குவது ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_27.html

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவுச் சிக்கல் - பாகம் 2

கம்ப இராமாயணம்  - கணவன் மனைவி உறவுச் சிக்கல் - பாகம் 2 


அசோகவனத்தில் இருந்து வந்த சீதையை மிக கொடுமையான வார்த்தைகளால் இராமன் பேசிவிடுகிறான். அது பொறுக்காமல், சீதை தீக்குளித்து தன் கற்பை நிலைநாட்டுகிறாள். 

அதற்குப் பின் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது கேள்வி. சீதையின் மனத்தில் அந்த சம்பவம் என்ன ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்? அவர்களுக்குள் தாம்பத்யம் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தோம். 

கணவன் மனைவி உறவில் ஏற்படும் சிக்கல்களை, விரிசல்களை எப்படி சரி செய்வது. 

இது இன்று நேற்று வந்தது அல்ல. சங்க காலம் தொட்டு இந்த உறவு ஒரு சிக்கலான ஒன்றாகத்தான் இருந்து இருக்கிறது.

அதற்கு அவர்கள் ஒரு வழி முறையும் கண்டு வைத்து இருந்தார்கள் என்றுஆள் நம்ம முடிகிறதா?

அதை ஒரு வாழ்க்கை நெறியாக, அகப்பொருள் என்ற இலக்கிய நூல் பேசுகிறது. 

"ஊடல் தீர்க்கும் வாயில்கள்" என்று அதற்குப் பெயர்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் உறவுச் சிக்கலை தீர்க்கும் வழி முறைக்கு  ஊடல் தீர்க்கும் வாயில் என்று பெயர். 

யார் இந்த ஊடலை தீர்ப்பவர்கள், அவர்கள் செய்யக் கூடிய வேலைகள் என்ன, அவர்கள் எப்படி ஊடலை தீர்ப்பார்கள் என்று வரையறை செய்கிறது நம் இலக்கியம். 

இவற்றை எல்லாம் விட்டு விட்டு, மேல் நாட்டு புத்தகங்களை படித்துக் கொண்டு வியந்து கொண்டிருக்கிறோம். 

நம்ம  ஆட்கள் இதை கரைத்து குடித்தவர்கள். 

பாடல் 

கொளைவல் பாணன் பாடினி கூத்தர் 
இளையர் கண்டோர் இருவகைப் பாங்கர் 
பாகன் பாங்கி செவிலி அறிவர்
காமக் கிழத்தி காதற் புதல்வன்
விருந்து ஆற்றாமை என்றுஇவை ஊடல் 
மருந்தாய்த் தீர்க்கும் வாயில்கள் ஆகும்

பொருள் 


கொளைவல்  = ஏவல் செய்யும் 

பாணன் = பாடல் இசைப்பவர் 

பாடினி  = பாணனின் மனைவி 

கூத்தர்  = கூத்தாடிகள் 

இளையர் = வீட்டு வேலைக்காரர்கள் 

 கண்டோர் = வழியில் தலைவனை கண்டவர்கள் 

இருவகைப் பாங்கர் = இரண்டு வகை நண்பர்கள் 
பாகன் = தேர்ப்பாகன் 

பாங்கி = தலைவியின் தோழி 

செவிலி = வளர்ப்புத் தாய் 

அறிவர் = அறிஞர்கள் 

காமக் கிழத்தி = காம கிழத்தி 

காதற் புதல்வன் = மகன் 

விருந்து = விருந்தினர் 

ஆற்றாமை   = தலைவியின் ஏக்கம் 

என்று = என்று 

இவை = இவை 

ஊடல் = ஊடல் என்ற நோயை 

மருந்தாய்த் =  மருந்து  போல 

தீர்க்கும் வாயில்கள் ஆகும் = தீர்க்கும் வழிகள் ஆகும் 

இந்தக் காலத்தில் பாணன், பானி , கூத்தன், எல்லாம் கிடையாது. அதற்கு பதில்  சினிமா, நாடகம், இசைக் கச்சேரிகள் உண்டு.

சற்று சிந்திப்போம். 

வீட்டில் கணவன் மனைவிக்கு இடையில் ஏதோ ஒரு சண்டை. ஒருவரோடு ஒருவர் சரியாக பேசிக் கொள்வது இல்லை. 

அப்போது வீட்டுக்கு ஒரு விருந்தினர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  இருவரும், அப்போதும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். 

"வாங்க வாங்க " என்று உபசரிப்பார். "என்ன இந்த பக்கம்...என்ன சாப்பிடுறீங்க"  என்று அவர்களை கவனித்துக் கொள்வார்கள். 

மனைவி, கணவனை தனியே அழைத்து, இதை வாங்கிட்டு வாங்க, அதை வாங்கிட்டு வாங்க " என்று சொல்லுவாள். ஒருவருக்கு ஒருவர் குசலம் விசாரிப்பார்கள். சண்டை மறந்து போகும். விருந்தினர் போன பின், சண்டையின்  உக்கிரம் குறைந்து இயல்பு நிலைமைக்கு திரும்பி விடுவார்கள். 

அதே போல், கணவன் மனைவி உம் என்று இருக்கிறார்கள். வெளியூரில் படிக்கப் போன பிள்ளை  விடுமுறையில் ஊருக்கு வருகிறான்/ள். பிள்ளையை போட்டி போட்டு கவனிப்பார்கள் இல்லையா? அதில் ஊடல் மறந்து போகும். 

நண்பர்கள் (பாங்கன் , பாங்கி) உறவின் விரிசலை சரி படுத்துவார்கள். 

"மச்சான், பொம்பளைங்கனா அப்படித்தான் இருப்பாங்க. பாவம்டா, எல்லாத்தையும் விட்டுட்டு  உனையே நம்பி வந்திருக்கா...நீ தான் கொஞ்சம் விட்டு கொடேன் ...யாருகிட்ட விட்டு குடுக்குற..உன் பொண்டாட்டி கிட்டதான...இதுல என்ன உனக்கு பெரிய கஷ்டம் " 

"சரிடி, தப்பு அவரு பேரிலேயே இருக்கட்டும். குடும்பம் நடக்கணும்ல....இப்படி  சண்டை போட்டுக்கிட்டு இருந்தா, அவரு என்ன செய்வாரு...வீட்டுக்கு வர பிடிக்குமா சொல்லு.  அங்க இங்கனு சுத்த ஆரம்பிம்பாரு...இதெல்லாம் குடுபத்துக்கு நல்லதா....கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போ "

என்று சொல்லி ஊடலை தீர்ப்பார்கள். 

இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். இந்த பாடலுக்கு தனியே ஒரு பிளாக் போடலாம். 

காம கிழத்தி யார் என்று சொன்னால், இன்றைய பெண்கள்  சண்டைக்கு வருவார்கள். ஆர்வம் உள்ளவர்கள் தனியே என்னிடம் கேளுங்கள் இல்லையேல்  தேடி கண்டு பிடியுங்கள்...

சரி, அதுக்கும் இராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்?

சீதைக்கு ஏற்பட்ட மன காயத்தை தீர்த்து வைத்தது யார் ?

யார் என்று நாளை சொல்வேன்  என்று கூறி விடை பெறுகிறேன்....

வர்ட்டா ...