Saturday, September 14, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பிழையெனக் கருதி னாயேல்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பிழையெனக் கருதி னாயேல்


இந்த உடம்பு நோய்க்கு இடமான ஒன்று. நோய் உள்ளே இருந்து கொண்டே இருக்கிறது. சமயம் பார்த்து வெளியே வருகிறது.

நோய்கள் நிறைந்த இந்த உடலை மெய் என்று கருதி, அதற்கு சோப்பு, எண்ணெய் , வாசனை திரவியங்கள் என்று போட்டு அழகு பார்க்கிறோம்.

அத்தனையும் பொய்.

உடம்பாவாவது ஏதோ நமக்கு உதவி செய்கிறது. வேலை செய்கிறது. புலன் இன்பங்களைத் தருகிறது.

ஆனால், இந்த தீயவர் சகவாசம் இருக்கிறதே, அதனால் என்ன பயன்? அத்தனையும் தீமையே. ஆனால், அதைத்தான் நாம் நாள் தோறும் கேட்கிறோம். தீயவர்கள் என்றால் ஏதோ கொலை களவு செய்பவர்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம்.

திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்

"பேயர்தாம் பேசும் அந்த பேச்சு" என்று.

அது என்ன பேயர் தாம் பேசும் பேச்சு?

பேயின் குணங்கள் என்ன ?

இருட்டில் மறைந்து இருக்கும். தன்னை வெளிப்படுத்தாது.

பிடித்தவர்களை விடாது.

தான் வெளிப்படாமல் மற்றவரின் உடம்பில் இருந்து கொண்டு அவர்கள் மூலம்  செயல்படும்.

அப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள் பேயர்கள் .

நான் சொல்கிறேன் என்று சொல்ல மாட்டார்கள். அவர் சொன்னார் , இவர் சொன்னார் என்று  யாருக்கு பினாலாவது மறைந்து கொள்வார்கள். அது மட்டும் அல்ல,  தாங்கள் கண்டதே காட்சி , கொண்டதே கோலம் என்று சாதிப்பார்கள்.  எதையும் ஆராயும் அறிவு கிடையாது.

"நோய்க்கு இடமான இந்த உடலையும், பேயர்களின் பேச்சையும் நீ பிழை என்று கருதினால், அவற்றை விட்டு விட்டு, திரு வல்லவாழ் என்ற திருத்தலத்தில் உள்ள பெருமான் பெயரைக் கூறி, அவனோடு சேர்ந்து கொள் "

என்பது பாசுரம்.



பாடல்

நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா
பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ பிழையெனக் கருதி னாயேல்,
தீயலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல்வா னாகி நின்ற
மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.


பொருள்

நோயெலாம்  = ஒண்ணு இரண்டு இல்லை, எல்லா நோயையையும்

பெய்ததோர் = சேர்த்த ஒரு

ஆக்கையை = உடலை

மெய்யெனக் = உண்மை என்று

கொண்டு = மனதில் நினைத்து

வாளா = ஒன்றும் செய்யாமல்

பேயர்தாம் = பேயர்களின்

பேசுமப் = பேசும் அந்தப்

பேச்சை = பேச்சை

நீ = நீ

பிழையெனக் = பிழை என்று

கருதி னாயேல், = நினைத்தால்

தீயலா  = தீ உலா

வெங்கதிர்த் = சிவந்த கதிர்களை உடைய  (சூரியனாய்)

திங்களாய் = குளிர் நிலவாய்

மங்குல்  = மேகம் நிரம்பிய

வா னாகி நின்ற = வானமாகி விரிந்து நின்ற

மாயனார் = மாயனார்

வல்லவாழ் = திருவல்லவாழ்

சொல்லுமா = சொல்லுகின்ற

வல்லையாய் = வலிமை உடையவனாய்

மருவு நெஞ்சே. = சேர்ந்து கொள் நெஞ்சே


இறைவனுடன் சேர என்ன பயம்? வலிமை உடையாய் என்று ஏன் கூறுகிறார்?


உடல் பற்று இருக்கிறது.

உறவின் மேல் பற்று இருக்கிறது.

இவற்றை எல்லாம் விட பயமாக இருக்கிறது. எனக்கு ஏதாவது ஆகிவிட்டால்,இந்த உறவை எல்லாம் விட்டு விட்டு போக வேண்டுமே, இந்த சுகத்தையெல்லாம்  விட வேண்டி இருக்குமே என்ற பயம்.

மற்றவர்களுக்கு எதுவும் ஆகி விட்டால், அவர்களோடு உள்ள உறவு விட்டுப் போய் விடுமே.  கணவன், மனைவி, பிள்ளைகள்...எப்படி விட முடியும்?

இறுக பற்றிக் கொண்டு இருக்கிறோம்.

"பயப்படாமல் விட்டு விட்டு வா...விடுகின்ற வலிமை உனக்கு இருக்கிறது....அந்த வலிமை வர வேண்டும் என்றால்  ஒன்றே ஒன்று தான் வேண்டும்,  இவை எல்லாம் பிழை என்று உணர வேண்டும்"

என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

முதல் படி

உடல் பற்றை விடுவது

இரண்டாவது படி

உறவுகள் பிழை என்று அறிதல்

மூன்றாவது

அவன் பெயரைச் சொல்லுதல்

என்கிறார்.


ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற 
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே

என்பார் பட்டினத்தார்.

இது காலாகாலத்தில் புரிந்தால் நல்லா இருக்கும்...


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_14.html

Friday, September 13, 2019

திருக்குறள் - பொறுமை - மறப்போம், மன்னிப்போம்

திருக்குறள் - பொறுமை - மறப்போம், மன்னிப்போம் 


முந்தைய குறள் பற்றி சில வாசகர்கள் தங்கள் எண்ணத்தை பகிர்ந்து இருந்தார்கள்.

ஒரு முக்கிய குறிப்பு.

இங்கே பொறுமை என்பது, பொறுமையாக ஒரு வேலையைச் செய்வதை குறிப்பது அல்ல. பொறுமையாக சாலையை கடப்பது, பொறுமையாக ஒரு காரியத்தை செய்வது, மரம் வளர்ந்து கனி கொடுக்கும் வரை பொறுமையாக இருப்பது...அந்தப் பொறுமையைப் பற்றி திருவள்ளுவர் கூறவில்லை.

இங்கே பொறுமை என்பது , பொறுத்துக் கொல்வதைப் பற்றியதாகும்.  நமக்கு தீமை செய்தவர்களை பொறுத்துக் கொள்ளுதல் பொறுமை என்ற அர்த்தத்தில் பார்க்க வேண்டும்.

அடுத்த குறளுக்குப் போவோம்.

சிலர், தங்களுக்கு கெடுதல் செய்தவர்களை பொறுத்துக் கொள்ளுவார்கள் ஆனால், "அவனுக்கு ஆண்டவன் கொடுப்பான், எனக்கு கெடுதல் செய்தவன் நல்லா இருக்க மாட்டான்" என்று மனதுக்குள் கிடந்து புளுங்குவார்கள். தாங்களே சென்று கெடுதல் செய்யாமல் பொறுத்துக் கொண்டாலும், தங்களுக்கு கெடுதல் செய்தவர்களுக்கு கேடு வரவேண்டும் என்று மனதில் விரும்புவார்கள்.

அப்படி அவர்களுக்கு கேடு வந்து விட்டால், "பத்தியா , நான் நினச்சேன், எனக்கு  கேடு செய்தவனுக்கு ஆண்டவனே பார்த்து கொடுத்தான் " என்று மனதுக்குள்  மகிழ்ச்சி அடைவார்கள்.

வள்ளுவர் சொல்கிறார்,

"நமக்கு தீமை செய்தவர்களை பொறுத்துக் கொள்ளுதல் நல்லது தான். ஆனால், அந்த தீமையை மறந்து விடுவது அதைவிட நல்லது"

என்று.

பாடல்


பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனின்று நன்று


பொருள்

பொறுத்தல் = பொறுத்துக் கொள்ளுதல்

இறப்பினை  = மிகையான தீய செயல்களை

என்றும் = எப்போதும்

அதனை = அந்த தீய செயல்களை

மறத்தல் = மறந்து விடுதல்

அதனின்று = அதை விட

நன்று = நல்லது

மனதுக்குள் வைத்து பொறுமிக் கொண்டே இருந்தால், அது நமக்குத்தான் கேடு விளைவிக்கும்.

"சரி கழுத , விட்டுத் தள்ளு" என்று உதறி விட்டு மேலே செல்ல வேண்டும்.

மாறாக, "இப்படி செய்து விட்டானே, இப்படி செய்து விட்டானே" என்று மனதுக்குள் வைத்து  பொருமிக் கொண்டு இருந்தால், அது நம் உடல் மற்றும் மன நிலையை பாதிக்கும்.

மறந்து விடுதல் , நல்லது என்கிறார்.

"ஆமா, இப்படி நமக்கு தீமை செய்தவனை எல்லாம் மன்னித்தும், மறந்தும் இருந்தால், எல்லோரும் நம் தலையில் மிளகாய் அரைத்து விட்டுப் போய் விடுவார்கள். நாம் சரியான இளிச்ச வாயர்களாக இருக்க வேண்டியதுதான்...இதெல்லாம்  சொல்ல/கேட்க நல்லா இருக்கும், நடை முறைக்கு  சரி வருமா "

என்று உங்கள் சார்பாக வள்ளுவரிடம் கேட்டேன்.

அதுக்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_13.html





Thursday, September 12, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மருவு நெஞ்சே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மருவு நெஞ்சே 


நமக்கு உறவுகள் மேல் ஒரு பிடித்தம் உண்டு. தாய், தந்தை, தமக்கை, தமையன், நண்பர், உற்றார், உறவு என்று பெரிய கூட்டமே வைத்து இருக்கிறோம்.

இதில் யாருக்காவது ஏதாவது என்றால் நமக்கு துன்பமாக இருக்கிறது.

"என் தாய்/தந்தை இறந்த துக்கத்தை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை" என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் உண்டு.

தமிழில் உள்ள வார்த்தைகளை உற்று நோக்கினால் ஒன்று தெரியும்.

தந்தையார், தாயார், தமக்கையார், தமையனார் என்ற சொற்களை உற்று நோக்குங்கள்.

தந்தை + யார்

தாய் + யார்

தமக்கை + யார்

தமையன் + யார்

என்று ஒரு கேள்வி அதில் தொக்கி நிற்கும்.

இந்த உடலுக்கு இவர் தந்தை, தாய், தமையன், தமக்கை...அவ்வளவுதான்.

இதற்கு முன் எத்தனை உடலோ? எத்தனை தாயோ, எத்தனை தந்தையோ...

யாரை தந்தை என்று சொல்லுவது ? யாரை தாய் என்று சொல்லுவது?

முப்பது நாப்பது வருட தொடர்பு...அவ்வளவுதான்.

திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்,

வாழ்வில் ஒரு கட்டம் வரும். இந்த தந்தை, தாய், சுற்றம் எல்லாம் வியர்த்தம் என்று நொந்து கொள்ளும் நாளும் வரும். இந்த பந்தங்கள் பெரிய சுமை என்று மனதில் தோன்றும். அப்படித் தோன்றும் பொழுது, இந்த உலகில் எனக்கென்று யார் இருக்கிறார்கள் என்ற ஆயாசம் தோன்றும். ஒரு மாபெரும் தனிமை தோன்றும். அப்போதாவது, வல்லை வாழ் அந்தப் பெருமாளின் பெயரைச் சொல்ல இசைவாய் நெஞ்சே என்று தன் மனத்திடம் கூறுகிறார்.

பாடல்

தந்தைதாய் மக்களே சுற்றமென் றுற்றுவர் பற்றி நின்ற 
பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ  பழியெனக் கருதி னாயேல் 
அந்தமா யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆய னாய 
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா  வல்லையாய் மருவு நெஞ்சே


பொருள்


தந்தை = தந்தை

தாய் = தாய்

மக்களே = பிள்ளைகள்

சுற்றம் = சுற்றம்

மென் = என்

உறுற்றுவர் = உறவினர்

பற்றி நின்ற  = என்று இந்த பந்த பாசங்களை பற்றி நின்று

பந்தமார் = பந்தங்கள் நிறைந்த

வாழ்க்கையை = இந்த வாழ்க்கையை

நொந்து = வருந்தி

நீ  = நீ

பழியெனக் கருதி னாயேல்  = பழி, குற்றம் என்று கருதினால்

அந்தமாய் = முடிவாய்

ஆதியாய் = தொடக்கமாக

ஆதிக்கும் ஆதியாய் = தொடக்கத்திற்கு முன்னால் உள்ள தொடக்கமாய்

ஆய னாய = ஆயர் குலத்தில் தோன்றியவனான

மைந்தனார் = மைந்தன்

வல்லவாழ் = திரு வல்லவாழ் என்ற திருப்பதியை

சொல்லும் ஆ  = வாயால் சொல்லினால்

வல்லையாய் = வலிமை உடையவனாவாய்

மருவு நெஞ்சே = ஏற்றுக் கொள் நெஞ்சே. ஒன்றாகிவிடு நெஞ்சே

இந்த உறவு பிடிப்பு தளரும். உறவுகளின் உண்மை ஒரு நாள் புரியும்.

எல்லாம் விட்டு தனித்து நிற்பாய்.

அப்போது, உன் சக்தியெலாம் கூட்டி, அவன் பெயரைச் சொல்லு

"பற்றி நின்ற பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ  பழியெனக் கருதி னாயேல் "

பந்தம் நிறைந்த வாழ்க்கையை நொந்து, வருந்தி, பழி என்று கருதினாயேல்

உங்களின் உறவுப்  பிடிப்புகளை கொஞ்சம் தளர விடுங்கள்.

நம் வாழ்கை மிக மிக சிறிது காலம்தான்.

அதிலும் இந்த உறவுகள் வருவதும் போவதும் அதிலும் சிறிய காலம் தான்.

20 அல்லது 25 வயதுக்கு மேல் கணவன்/ மனைவி வருகிறார்கள் நம் வாழ்வில்.  எத்தனை நாள் நம்மோடு இருப்பார்களோ. நாம் அவர்களோடு இருப்போமோ?

அப்புறம் பிள்ளைகள் வருகிறார்கள். கொஞ்சம் காலம். அவர்கள் திருமணம் ஆன பின்  பிரிந்து போய் விடுகிறார்கள்.

இந்த உறவுகளுக்கா இத்தனை சிரமம்?

நொந்து கொள்ளும் நாள் வரும் முன் யோசனை செய்யுங்கள்.

வெள்ளம் வந்த பின்பா கரை கட்டுவது?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_12.html


Wednesday, September 11, 2019

திருக்குறள் - பொறுமை - அகழ்வாரை

திருக்குறள் - பொறுமை - அகழ்வாரை 


முந்தைய சில நாட்களில், பயனில் சொல்லாமை பற்றி சிந்தித்தோம்.

அடுத்தது பொறுமை பற்றி வள்ளுவப் பேராசான் என்ன கூறுகிறார் என்று சிந்திப்போம்.

பொறுமை என்ற குணம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறதோ என்ற ஐயம் எனக்கு உண்டு.

யாரிடமும், யாருக்கும் பொறுமை இல்லை.

கணவன் மனைவி உறவில் பொறுமை இல்லை. வார்த்தைகள் வந்து விழுகிறது. கோபம் தெறிக்கிறது. உறவில் விரிசல் ஏற்படுகிறது.

பெற்றோர் பிள்ளைகள் உறவில் பொறுமை இல்லை. சகிப்பு தன்மை இல்லை.

தெருவில் வண்டி ஒட்டிக் கொண்டு போகிறவர்கள் மீது கோபம். பொறுமை இல்லாமல் வண்டி ஒட்டுகிறோம்.

பொறுமை என்பது தலையாய குணம் என்கிறார் வள்ளுவர்.

நமக்கு கெடுதல் செய்தவர்கள், நம்மைப் பற்றி தவறாக சொன்னவர்கள் மீது பொறுமையாக இருக்க வேண்டும் என்கிறார்.

பாடல்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

பொருள்


அகழ்வாரைத் = தோண்டுபவரை, பள்ளம் பறிப்பவர்களை

தாங்கும் = தாங்குகின்ற

நிலம்போலத் = நிலத்தைப் போல

தம்மை = தம்மை

இகழ்வார்ப் = இகழ்பவர்களை

பொறுத்தல் = பொறுத்துக் கொள்ளுதல்

தலை = தலை சிறந்த அறம்


"நான் அவனுக்கு எவ்வளவோ செய்தேன், எனக்கு எதிராக, என்னைப் பற்றி இழிவாக பேசிவிட்டானே " என்று குமுறுபவர்கள் ஒரு வகை.

"என் உப்பை தின்றுவிட்டு எனக்கு துரோகம் செய்து விட்டானே" என்று வருந்துதல் இன்னொரு வகை.

ஒன்று சொல், இன்னொன்று செயல்.

வள்ளுவர் இரண்டையும் எப்படி சேர்கிறார் என்று பாருங்கள்.

"இகழ்வார் பொறுத்தல்" என்ற போது இகழ்ச்சியாக பேசியதை குறிப்பிடுகிறார்.

"அகழ்வாரை தாங்கும் நிலம் போல " என்று சொல்லும் போது தவறான செயல்களை செய்வதை குறிப்பிடுகிறார்.

நிலமானது நமக்கு இருக்க இடம், நாம் உண்ண காய் கனிகள் வளர தோட்டம், என்று எல்லாம் தருகிறது.

அதை கடப்பாரை கொண்டு குத்தினாலோ, மண்வெட்டி கொண்டு வெட்டினாலோ, குண்டு வைத்து தகர்த்தாலோ, அப்படி செய்பவர்களைக் கூட அது தண்டிப்பதில்லை. மாறாக அவர்களை தாங்குகிறது.

நம்மை பற்றி தவறாக , இழிவாக பேசுபவர்களை, செய்பவர்களை பொறுத்தால் மட்டும் போதாது  அவர்களுக்கு தீங்கு வராமல் தாங்க வேண்டும்.  தீங்கு செய்பவர்களை தாங்கும் நிலம் போல.



தன்னை காட்டுக்கு அனுப்பிய கைகேயியை மன்னித்து விடும்படி தயரதனிடம் , இராமன் வேண்டினான்.

அது பொறுமை.

அந்த அளவுக்கு நம்மால் போக முடியாவிட்டாலும்,  பொறுமை பற்றி சிந்தியுங்கள்.

எதற்கும் உடனடியாக சுவற்றில் எறிந்த பந்து போல பதில் சொல்ல முயலாதீர்கள்.  ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு ஒன்று சொன்னால், அதற்கு பதில் மேலும் உணர்ச்சியை காட்டுவது அல்ல.

பொறுமையை கடை பிடியுங்கள்.

இதுவரை எப்படியோ. இன்றில் இருந்து பொறுமையாக இருக்கப் பழகுங்கள்.
தீமை செய்தவர்களுக்கு தீமை செய்ய வேண்டும் என்று எண்ணாதீர்கள்.

இதெல்லலம் நம்மால் முடியாது என்ற பழைய பல்லவியையே பாடாமல், பொறுமை பற்றி மேலும் சிந்தியுங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_11.html

Monday, September 9, 2019

சகலகலாவல்லி மாலை - சொல்லும், பொருளும், பயனும்

சகலகலாவல்லி மாலை - சொல்லும், பொருளும், பயனும் 


கடந்த சில நாட்களாக பயனில் சொல்லாமை அதிகாரத்தில் உள்ள குறள்களை பற்றி சிந்தித்தோம்.

சொல்லுக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம். சும்மா பேசிவிட்டுப் போக வேண்டியதுதானே என்று நாம் நினைக்கலாம். ஆனால், சொல்லின் பெருமை தெரியாமல் நாம் அதை விரயப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சிறு பிள்ளைக்கு வைரக் கல்லுக்கும், கூழாங்கல்லுக்கும் வித்தியாசம் தெரியாதது போல.

சொல் என்பது பல பரிமாணங்களை கொண்டது.

முதல் பரிமாணம், அதன் வரி வடிவம். ஒரு சொல் இந்த வடிவில் இருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. சொல்லின் வரி வடிவம் மாறிக் கொண்டே இருந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் இருந்த தமிழின் வரி வடிவம் வேறு, இப்போது இருக்கும் தமிழின் வரி வடிவம் வேறு.

இப்போது வள்ளுவர் வந்தால், அவரால் நமது திருக்குறளை வாசிக்க முடியாது. வரி வடிவம் மாறி விட்டது.

அடுத்த பரிமாணம், அதன் ஒலி வடிவம். ஓசை வடிவம். ஒரு சொல்லை சொல்லும்போது உண்டாகும் ஓசை. தமிழைப் பொறுத்தவரை அது நிறைய மாறவில்லை.

மூன்றாவது பரிமாணம், அந்த ஒலி குறிப்பிடும் பொருள். ஒவ்வொரு சொல்லும் ஏதோ ஒரு பொருள் பற்றியே  பிறக்கிறது.

நான்காவது பரிமாணம், அந்த ஒலியின் உணர்ச்சி வடிவம்.

உதாரணமாக, "அம்மா" என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.

அதன் வரி வடிவம், நாம் எழுதுவது.

அதன் ஒலி வடிவம், அது எழுப்பும் சப்தம்.

அதன் பொருள் வடிவம், அம்மா என்ற அந்தப் பெண்.

நான்காவதாக, அம்மா என்று சொல்லும் போது ஏற்படும் உணர்ச்சி.

ஒலி வந்து விட்டால், வரி வடிவத்தை விட்டு விடலாம்.

பொருள் வந்து விட்டால், ஒலியை விட்டு விடலாம்.

உணர்வு வந்துவிட்டால், பொருளை விட்டுவிடலாம்.

நாம் சொல்லும் சொற்கள் பொருள் உணர்த்தி நிற்கின்றன. உணர்வுகளை கொண்டு வரலாம்.

ஆனால், அதற்கும் ஒரு படி மேலே போய், சொன்னால் சொன்ன படி நடக்கும் சக்தி சொல்லுக்கு உண்டு.

மந்திரம் என்பது என்ன?

மனதில் நினைப்பதை ஸ்திரமாக நமக்குத் தருவது மந்திரம்.

மந்திரங்களுக்கு அந்த வலிமை உண்டு.

உயர்ந்தவர்கள், சான்றோர்கள், கற்புடைய பெண்களுக்கு அந்த ஆற்றல் உண்டு.

நளாயினி, "சூரியனே உதிக்காதே" என்றாள். உதிக்கின்ற சூரியன் நின்றது என்று வரலாறு சொல்கிறது.

கம்ப இராமாயணத்தில், சீதை கூறுவாள்,  "இந்த உலகம் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுடுவேன்" என்று.

அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ 
எல்லை நீத்த இவ்வுலகம் யாவையும் என் 
சொல்லினால் சுடுவேன் அது தூயவன் 
வில்லின் ஆற்றலுக்கு மாசென்று வீசினேன் என்றாள் 

சொல்லுக்கு அவ்வளவு வலிமை. சொல்லினால் இல்லை இல்லாத இந்த உலகம் அனைத்தையும்  சுட்டு பொசுக்கி விடுவேன் என்கிறாள்.

விவிலியம் (பைபிள்) சொல்கிறது

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று;  (யோவான் 1:1-18)

என்று.

முதலில் வார்த்தை இருந்தது. அதில் இருந்துதான் அனைத்தும் உண்டானது என்கிறது.

ஓம்
நாராயணாய நம
நமச்சிவாய நம

என்று மந்திரங்களை உச்சாடனம் செய்து பலன் பெற்றவர்கள் பலர்.


சகலகலாவல்லி மாலையில் , குமர குருபரர் சொல்லுவார்

"பாட்டும், பொருளும், அது பொருந்தும் பயனும் எனக்கு வரும்படி உன் கடைக்கண்ணால் அருள் செய்வாய் " என்று.


பாடல்


பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் 
பயனுமென்பாற் 
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டு
தொண்டர் 
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்
வண்ணம் 
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகலகலா
வல்லியே. 



பொருள்


பாட்டும் = பாட்டு (ஒலி வடிவம்)

பொருளும் = பொருளும்

பொருளாற்  = அந்தப் பொருளுக்கு

பொருந்தும்  = பொருத்தமாய் இருக்கும்

பயனுமென்பாற்  = பயனும் என் பால்

கூட்டும் படி = சேரும்படி

நின் கடைக்கணல் = உன்னுடைய கடைக் கண்ணால்

காயுளங் கொண்டு = தாய் உள்ளம் கொண்டு

 தொண்டர்  = தொண்டர்கள்

தீட்டுங் = இயற்றும்

கலைத் = கலை நிறைந்த

தமிழ்த் = தமிழ்

தீம்பா லமுதந் தெளிக்கும் = சுவையான பால் அமுதம் தெளிக்கும்

வண்ணம்  =படி

காட்டும் = காட்டுகின்ற

வெள் ளோதிமப் பேடே = வெள்ளை நிறத்தில் உள்ள அன்னம் போன்றவளே

சகலகலா வல்லியே. = சகலகலா வல்லியே

பயன் தரும் சொல்லை சொல்ல எனக்கு அருள் புரிவாய்  என்கிறார்.


இறைவன் நாத வடிவானவன் என்று நம் இலக்கியம் பேசும்.

இது பற்றி மேலும் சிந்திப்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_92.html

திருக்குறள் - சொற்குற்றம் - சொல்லுக, சொல்லற்க

திருக்குறள் - சொற்குற்றம் - சொல்லுக, சொல்லற்க 




எதைச் சொல்லணும், எதைச் சொல்லக் கூடாதுனு எல்லாம் சொல்லிட்டு தலைவர் கடைசியா ஒரு குறள் சொல்றார்.

எதைச் சொல்லணும் - பயனுள்ள சொல்லை

எதைச் சொல்லக் கூடாது - பயனற்ற சொல்லை

அவ்வளவுதாங்க.

பாடல்


சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்

பொருள்

சொல்லுக  = சொல்லுங்கள் என்று  ஒரு கட்டளையே போடுகிறார்.

சொல்லின் = சொற்களில்

பயனுடைய = பயனுள்ளவற்றை

சொல்லற்க = சொல்லாதீர்க்கள்

சொல்லின் = சொற்களில்

பயனிலாச் சொல் = பயனில்லாத சொற்களை


பேசப் போகிறோம் என்று முடிவு செய்துவிட்டால், நாம் பேசுவதால் மற்றவர்களுக்கு என்ன பயன் என்று அறிந்து கொண்டு பேச வேண்டும். பயன் இல்லை என்றால் பேசக் கூடாது. மௌனம் சிறந்தது.

நம்ம எல்லாம் பேசவே முடியாது  போல இருக்கே.....

ஏன் சொல்லுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள்.

காசா பணமா, சும்மா பேசி விட்டுப் போக வேண்டியதுதானே...என்று நாம் நினைப்போம்.

ஏன் என்றால்  நமக்கு சொற்களின் வலிமை புரிவது இல்லை.

ஒரு கழுதையின் கழுத்தில் வைர மாலையை கட்டிவிட்டால், அதற்குத் தெரியுமா  அந்த மாலையின் மதிப்பும், பெருமையும்?

அது பாட்டுக்கு அலைந்து கொண்டிருக்கும்.

வள்ளுவருக்குத் தெரிந்திருக்கிறது அது வைரம் என்றும்.

எனவே இவ்வளவு மெனக்கிடுகிறார்.

அப்படி சொல்லில் என்னதான் இருக்கிறது?

நாளை சிந்திப்போமா?


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_9.html

Sunday, September 8, 2019

திருக்குறள் - சொற்குற்றம் - பொச்சாந்தும் சொல்லார்

திருக்குறள்  - சொற்குற்றம் - பொச்சாந்தும் சொல்லார் 


பயனுள்ள சொல்லை சொல்ல  வேண்டும்.அதுவும் இனிமையாகச் சொல்ல வேண்டும். அப்படி சொல்லாவிட்டால் எல்லோரும் நகைக்கும்படி ஆகிவிடும் என்றெல்லாம் பார்த்தோம்.

அதெல்லாம் சரிங்க, இந்த பயனுள்ள சொற்களை எப்படி பேசுவது? அதுக்குன்னு ஏதாவது கோர்ஸ் இருக்கா. புத்தகம் ஏதாவது இருக்கா படிக்க? அப்படியே வள்ளுவர் சில புத்தகங்களை சொல்லி இருந்தாலும், அது இந்தக் காலத்துக்கு பொருந்தி வருமா ? என்றெல்லாம் கேள்வி வரும் அல்லவா?

அனைத்து காலத்துக்கும் பொருந்தும்படி அறிவுரை சொல்ல வேண்டும்.

எப்படி சொல்லுவது ?

"மயக்கம் இல்லாத குற்றமற்ற அறிவுடையவர்கள் மறந்தும் கூட பயன் இல்லாத சொற்களை பேச மாட்டார்கள்"

என்கிறார்.

புரியலையே....அது என்ன மயக்கம் இல்லாத குற்ற்றமற்ற அறிவு ?

முதலில் பாடலைப் பார்ப்போம்

பாடல்


பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்


பொருள்

பொருள் = பயன்,

தீர்ந்த = இல்லாத

பொச்சாந்தும்  = மறந்தும்

சொல்லார் = சொல்ல மாட்டார்

மருள்தீர்ந்த = மயக்கம் இல்லாத

மாசறு = குற்றமற்ற

காட்சி யவர் = காட்சி உடையவர்



மறந்தும் சொல்ல மாட்டார்

சில சமயம் நமக்கு கோபம் வரும் போது ஏதாவது தவறான வார்த்தைகளை பேசி விடுவோம் . சில சமயத்தில்  பயத்தில்,சில சமயம் இலயிப்பில் ஏதாவது மறந்து பேசி விடுவோம்.

இவற்றிற்கு காரணம் என்ன ?

மனதில் எங்கோ ஒரு மூலையில் அழுக்கு, (மாசு) இருக்கிறது. அது நம்மை அறியாமல்  சில நேரங்களில் வெளிப்பட்டு விடுகிறது.

மனதில் குற்றமே இல்லை என்றால், ஒரு போதும் தவறான வார்த்தைகள் வராது அல்லவா ? மனதில் இருந்தால் தானே வாயில் வரும்.

மருள் தீர்ந்த

மயக்கம் இல்லாத என்று பொருள். மயக்கம் என்றால் என்ன ? தண்ணி அடித்துவிட்டு  மயங்கி ,  போதையில் ஏதாவது சொல்லிவிடுவதா என்றால் இல்லை.

நமக்கு உலகில் ஒன்றை அறிந்து கொள்ள முற்படும் போது இரண்டு விதமான  சிக்கலைகள் எழும்.

ஐயம் திரிபு என்ற இரண்டு சிக்கல்கள்.

ஐயம் என்றால் சந்தேகம். எது உண்மை, எது பொய் என்று அறியாமல் கலங்குவது.

திரிபு என்றால் ஒன்றை மற்றொன்றாக திடமாக நம்புவது.

கயிறை பாம்பென்று நம்புவது.

செய்தித் தாளில், டிவியில் வருவது எல்லாம் உண்மை என்று நம்புவது.

முன்னோர்கள் சொன்னது எல்லாம் சரி என்று ஏற்றுக் கொள்ளுவது.

சந்தேகமே கிடையாது . நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்று சொல்லுவாது.

இது திரிபு.

வாழ்வு நிரந்தரம் என்று நினைப்பது.

செல்வம் எப்போதும் நம்மிடம் இருக்கும் என்று நம்புவது.

கட்டுக் கதைகளை அப்படியே நம்புவது.

இவை எல்லாமே திரிபு.

ஐயமும் திரிபும் சேர்ந்தது மருள் அல்லது மயக்கம்.

உண்மை அறியாமல் இருப்பது.

அந்த மயக்கம் போனால்தான் பொருள் அற்றவற்றை பேசாமல் இருக்க முடியும்.

இல்லை என்றால் லொட லொட என்று எதையாவது பேசிக் கொண்டே இருக்கச்  சொல்லும்.

எனவே அறிவு சரியாக இருக்க வேண்டும். மருள் நீக்கம் பெற வேண்டும்.

மருள் நீங்கினால் மட்டும் போதாது.

அறிவு நன்றாக இருந்தாலும், சில சமயம் அது குறுக்கு சால் ஓட்டும். குயுக்தியாக சிந்திக்கும்.

எனவே மனமும் நன்றாக இருக்க வேண்டும்.

மனதில் குற்றம் இருக்கக் கூடாது.

கோபம், பொறாமை, மதம், மாச்சரியம், காமம், லோபம் போன்றவை இருக்கக் கூடாது.

அறிவும் மனமும் நன்றாக இருந்தால், மறந்தும் பொருள் அற்ற சொற்கள் வாயில் இருந்து வராது.

சிலருக்கு மனம் நன்றாக இருக்கும். அன்பு இருக்கும். காதல் இருக்கும். நல்லது செய்ய வேண்டும் என்ற நினைப்பு இருக்கும். ஆனால் எப்படி செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது.

சிலருக்கு அறிவு தெளிவாக இருக்கும்.அனுபவம் இருக்கும். இருந்தும் மனம் குறுகிக் கிடக்கும்.

இரண்டும் ஒன்று பட்டவர்கள் பயனற்ற சொற்களை பேச மாட்டார்கள்.

அப்படிப் பட்ட ஆள்களை தேடிக் கண்டு பிடித்து அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.

நாமும் , நம்மை அப்படி ஒருவராக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

அப்படி ஆகச் சொல்லவில்லை, முயற்சி செய்யச் சொல்கிறேன்.

முயற்சிதானே, செஞ்சுட்டு போறது...


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post.html