Sunday, September 6, 2020

இலக்கியமும், சினிமா பாடல்களும்

இலக்கியமும், சினிமா பாடல்களும்


ஏதோ அந்தக் காலத்தில் தான் உயர்ந்த பாடல்கள் எழுதப்பட்டன, இப்போதெல்லாம் அப்படி தரமான பாடல்கள் எழுத ஆள் இல்லை என்று நாம் நினைக்கலாம்.

பல சினிமா பாடல்களை கேட்கும் போது, அட, என்ன ஒரு அருமையான வரி என்று நான் பல முறை வியந்திருக்கிறேன். இந்த சினிமா பாடல் வரிகள் இலக்கியத்தில் இருந்து வந்ததா, அல்லது இலக்கியம் இந்த வரிகளுக்கு ஒரு தூண்டுகோலாக இருந்ததா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

மனித மனதின் உணர்வுகளை, உறவின் பிரிவை, பரிவை,  அதில் எழும் சிக்கல்களை அன்றும் பாடி இருக்கிறார்கள், இன்றும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் ஒன்று போலவே இருக்கிறது.

அன்று பாடியவை கொஞ்சம் கடினமான தமிழாக இருக்கிறது. காரணம், அதில் உள்ள பல தமிழ் வார்த்தைகள் இன்று பழக்கத்தில் இல்லை. மேலும், நாம் நமது மொழிப் புலமையை வளர்த்துக் கொள்வது இல்லை. எத்தனை பேர் தமிழ் அகராதி பார்த்து இருப்பீர்கள்?

வாலி இறந்து கிடக்கிறான்.  தாரை அவன் மேல் விழுந்து அழுது புலம்புகிறாள்.

"நீயும் நானும் ஒருவர் உள்ளத்தில் மற்றவர் இருப்பதாக சொல்லிக் கொண்டு எவ்வளவு அன்போடு இருந்தோம். நான் உன் என் நெஞ்சில் இருப்பதாக இருந்தால், இராமன் விட்ட அம்பு என் மேல் குத்தி இருக்க வேண்டும். நீ என் நெஞ்சில் இருப்பதாக இருந்தால் , இப்படி இறந்து கிடக்க மாட்டாய். நாம் ஒருவர் மனதில் இன்னொருவர் இருந்தோம் என்று சொன்னது எல்லாம் பொய் தானா? " என்று புலம்புகிறாள்

பாடல்

செரு ஆர் தோள! நின்
      சிந்தை உளேன் எனின்,
மருவார் வெஞ் சரம்
      எனையும் வவ்வுமால்;
ஒருவேனுள் உளை
      ஆகின், உய்தியால்;
இருவே முள்
      இருவேம் இருந்திலேம்.

பொருள்

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_6.html

செரு ஆர் = போர் செய்ய சிறந்த

தோள!  = தோள்களை உடையவனே

நின் = உன்னுடைய

சிந்தை உளேன் எனின், = மனதில் நான் உள்ளேன் என்றால்

மருவார்  = பகைவரது (இராமனின்)

வெஞ் சரம் = கொடிய அம்பு

எனையும் வவ்வுமால்; = என்னையும் கொன்றிருக்க வேண்டும்

ஒருவேனுள் = தனியான என்

உளை ஆகின், =  (நீ ) உள்ளாய் என்றால். அதாவது, என் மனதில் நீ இருந்தால்

உய்தியால்; = நீ தப்பித்து இருப்பாய்

இருவே முள் = இருவருக்குள்

இருவேம் = இருவரும்

இருந்திலேம். = இருக்க வில்லை

இன்று வருவோம்.

முதல்வன் படப் பாடல்.

காதலி பாடுகிறாள்.

உன் உயிருக்கு ஒரு ஆபத்தும் வராது. ஏன் என்றால், உன் உயிர் எனக்குள் இருக்கிறது. என் உயிர்  உனக்குள் இருக்கிறது. 

உன்னை கொல்ல வந்த கூற்றுவன், உன் உயிர் உன் உடம்பில் இல்லாததை கண்டு  குழம்பிப் போய் விடுவான்.  உன் உயிரை எடுக்க வேண்டும் என்றால் என்னைக் கொல்ல வேண்டும். என்னை கொல்ல வேண்டும் என்றால் என் உயிர் உனக்குள் இருக்கிறது. பாவம், எமன் என்ன செய்வான் என்று தன் காதலை வெளிப்படுத்துகிறாள்.


(உன்) உசிா் என்னோட இருக்கையிலே
நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சீவனே நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா


(முழுப் பாடலையும் தரவில்லை. பல முறை கேட்ட பாடல் தான்).

youtube link கீழே இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=gYD0jmmZtJU&ab_channel=TamilFilmSongs

கம்ப இராமாயணமாக இருந்தால் என்ன,  சினிமா பாடலாக இருந்தால் என்ன,  அன்பு வெளிப்படும் விதம் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறது.

திறந்த மனதோடு எல்லாவற்றையும் அணுகுவோம், இரசிப்போம்.




Saturday, September 5, 2020

நாலடியார் - குழவி யிடத்தே துறந்தார்

நாலடியார் - குழவி யிடத்தே துறந்தார்


நம்மிடம் பணம் இருந்தால் என்ன செய்யலாம்?

பணத்தை நாம் விரும்பிய விதத்தில் செலவழித்து இன்பம் அடையலாம். நல்ல உடை வாங்கலாம், சிறப்பான உணவை உண்டு மகிழலாம்,  சினிமா, ட்ராமா, உல்லாச பயணம் என்று செலவழிக்கலாம்.

அல்லது

அதை சேமித்து வைக்கலாம், கார், வீடு, நிலம், நகை என்று முதலீடு செய்யலாம்.

அவரவர் விருப்பம்.

பணம் மட்டும் அல்ல, நம் நேரமும் அப்படியே. நம்மிடம் இருக்கும் நேரத்தை எப்படி செலவழிக்கலாம் என்று நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

whatsapp , facebook , டிவி, அரட்டை என்று செலவழிக்கலாம்.

அல்லது,

அறிவை வளர்க்க, உடல் ஆரோக்கியத்தை வளர்க்க , நமக்கும் , பிறருக்கும் பயன்படும் வகையில் செலவழிக்கலாம்.

இது  நமக்குத் தெரியும். இருந்தும், நல்ல பெரிய விஷயங்களை செய்யாமல் சில்லறை  விஷயங்களில் நம் நேரத்தை செலவழிக்கிறோம்.

ஏன்?

அப்புறம் செய்து கொள்ளலாம். என்ன அவசரம். இப்ப தலைக்கு மேல வேற விஷயங்கள் இருக்கின்றன.  நல்லதை எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் கொள்ளலாம்  என்று நினைக்கிறோம்.

அந்த "அப்புறம்" என்பது வருவதே இல்லை.

நேரம் ஓடி விடுகிறது.  ஐயோ, நேரத்தை வீணடித்து விட்டேனே என்று நாம் வருந்த நேரலாம்.

பாடல்


நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார் ; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.


பொருள்

(click below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_5.html



நரைவரும் என்றெண்ணி  = நரை வரும் என்று எண்ணி. அதாவது முதுமை வரும் என்று நினைத்து

நல்லறி வாளர் = நல்ல அறிவு உள்ளவர்கள்

குழவி யிடத்தே = சிறு வயதிலேயே

துறந்தார் = பயன் தராதவற்றை துறந்தார்

புரைதீரா = குற்றம் அற்ற

மன்னா = மன்னவனே

இளமை மகிழ்ந்தாரே = இளமை காலத்தில், மகிழ்ந்து , காலத்தை வீணே போக்கியவர்கள்

கோல் ஊன்றி = கோல் ஊன்றி

இன்னாங் கெழுந்திருப் பார். = துன்பத்தில் இருந்து எழுந்திருப்பார்


இளமையும், ஆரோக்கியமும் எப்போதும் இருக்காது. இருக்கும் போதே அதை நல்ல வழியில் செலவழிக்க வேண்டும்.




Friday, September 4, 2020

திருவாசகம் - கையில் வாங்கவும் நீங்கி

திருவாசகம் - கையில் வாங்கவும் நீங்கி 


சிவ பெருமான் நேரில் வந்து, மாணிக்க வாசகருக்கு உபதேசம் தருகிறேன் என்றார்.

மாணிக்க வாசகருக்கு ஆயிரம் வேலை.  முதன் மந்திரி வேலையில் இருந்தார். எனவே, இறைவன் வந்ததையும், அருள் தர இருந்ததையும் தெரியாமல் கை நழுவ விட்டு விட்டார்.

பின் அதை நினைத்து நினைத்து புலம்பிய புலம்பலின் தொகுப்பு தான் திருவாசகம்.

உருகி உருகி பாடியிருக்கார்.

நீத்தல் விண்ணப்பம் என்ற அந்தாதியில் இருந்து ஒரு பாடல்


பாடல்

வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி, இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்? வெண் மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
தெளிகின்ற பொன்னும், மின்னும், அன்ன தோற்றச் செழும் சுடரே.

பொருள்

( click the following link to continue reading )

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_4.html



வளர்கின்ற = எப்போதும் வளர்ந்து கொண்டு இருக்கின்ற

நின் கருணைக் கையில் = உன் கருணை நிறைந்த கைகளால்

வாங்கவும் = என்னை வாங்கி, அருள் தர நினைத்தாய். ஆனால் நானோ

நீங்கி = உன்னை விட்டு நீங்கி

இப்பால் = இந்த உலக வாழ்க்கையில்

மிளிர்கின்ற = கிடந்து வாழ்கின்ற

என்னை  = என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வெண் மதிக் கொழுந்து ஒன்று = பிறை நிலவு ஒன்று

ஒளிர்கின்ற = ஒளி வீசும்

 நீள் முடி = நீண்ட சடை முடியை உடைய

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

தெளிகின்ற பொன்னும் = தெளிவான சிறந்த பொன் போலவும்

மின்னும் = மின்னல் போலவும்

அன்ன = போன்ற

தோற்றச் செழும் சுடரே. = தோன்றுகின்ற செழுமையான சுடரே

இதில் என்ன இருக்கிறது.  மாணிக்க வாசகருக்கு இறைவன் அருள் செய்த நினைத்தான்.  அவர் மறுத்து விட்டார். அதனால் புலம்புகிறார். அதனால் நமக்கு என்ன?

இதை நாம் ஏன் உட்கார்ந்து படிக்க வேண்டும். இதில் நமக்கு என்ன பயன்?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் எவ்வளவு படிக்கிறோம்.   திருக்குறள், கம்ப இராமாயணம், ஆத்திச் சூடி,  கொன்றை வேந்தன்,  கீதை, மற்ற எத்தனையோ நல்ல நல்ல புத்தகங்கள் எல்லாம் படிக்கிறோம்.

படித்து விட்டு என்ன செய்கிறோம்?

செல் போனில் என்ன செய்தி வந்து இருக்கிறது,  என்ன ஜோக் வந்து இருக்கிறது என்று  பார்ப்போம் , இன்னைக்கு என்ன சமையல், அந்த fixed deposit  போடணும், அந்த பில் கட்டணும், அலுவலக வேலை, என்று நம்ம வேலையை பார்க்கப் போய் விடுகிறோம்.

ஒரு புத்தகம் நம் வாழ்க்கையை மாற்றக் கூடும். படித்துத் தள்ள வேண்டியது. ஒரு சதவீதம் கூட  அது நம்மை பாதிக்காமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வது.

மாணிக்க வாசகருக்கு இறைவன் அருள் செய்ய வந்தும், அவர் அதை கண்டு கொள்ளாமல்  குதிரை வாங்கப் போய்விட்டார்.

இத்தனை புத்தகங்களும் அருள் தர வரிசையில்  நின்று கொண்டு இருக்கின்றன.

எல்லாவற்றையும் எட்டி எட்டி பார்த்து விட்டு நாம் நம் குதிரைகளை பார்க்கப் போய் விடுகிறோம்.

மணி வாசகரை இறைவன் விடவில்லை. துரத்தி துரத்தி வந்து அருள் செய்தார்.

ஆனால், அதற்கு முன்னால் சிறைத் தண்டனை, சுடு மணலில் நிற்க வைத்தல் என்று  அத்தனை துன்பமும் பட்டார்.

தேவையா? 

முதலிலேயே கேட்டிருந்தால் இத்தனை துன்பம் வந்திருக்குமா?

அது இருக்கட்டும், ஏதோ மெசேஜ் வந்த மாதிரி இருக்கே, என்னனு பார்ப்போம்.



Tuesday, September 1, 2020

கம்ப இராமாயணம் - வளைத் தோள் வளவி உண்டவன்

கம்ப இராமாயணம் - வளைத் தோள் வளவி உண்டவன் 


கடவுள் போல் ஆக வேண்டும் என்று யாராவது விரும்புவார்களா?

மாட்டார்கள்.

ஏன் என்றால், கடவுள் போல் நம்மால் ஆக முடியாது. எதுக்கு வீணா நேரத்தை வீணாக்குவானானேன் என்று இருந்து விடுவார்கள்.

இராமன் கடவுள் என்று சொன்னால், "அப்படியா, அப்படி என்றால் இராமன் செய்தை எல்லாம் நம்மால் செய்ய முடியாது.  கடவுள் எல்லாம் செய்வார். நம்மால் ஆகாது. நம்ம வேலையை பார்ப்போம்" என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.

இராமன் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்றால், இராமனும் நம்மைப் போல ஒரு மானிடனாக இருக்க வேண்டும். அதற்காகவே இராமனில் பல மனித குணங்களை ஏற்றிக் காட்டுகிறார்கள். "பார்த்தாயா, அவனும் உன்னைப் போலத்தான்" என்று காட்டுவது, அவனை கீழே இறக்க அல்ல, நம்மை மேலே ஏற்ற. உன்னைப் போன்ற ஒருவன் அப்படி இருக்க முடியும் என்றால், நீயும் அப்படி இருக்கலாம் என்று நம்மை அந்த உயரத்துக்கு கொண்டு செல்லவும் தான்.

அப்படி காட்டும் இடங்களில் இராமன், சீதையை பிரிந்து வாடுவதாக வரும் இடங்கள்.

தவிக்கிறான். ஒரு சாதாரண மானிடன் இப்படி துணையை பிரிந்து தவிப்பானோ, அப்படி தவிக்கிறான்.


வாலி வதம் முடிந்து விட்டது. சீதையைத் தேட வேண்டிய கார் காலம் வந்து விட்டது. சுக்ரீவன் வந்த பாடில்லை. கார்காலம் (மழைக் காலம்) பெரும் தவம் செய்த முனிவர்களையே வாட்டும் என்றால், இராமன் பாடு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ என்கிறான் கம்பன்.


பாடல்

அளவு இல் கார் எனும் அப்பெரும்
    பருவம் வந்து அணைந்தால்
தளர்வர் என்பது தவம் புரிவோருக்கும்
    தகுமால்;
கிளவி தேனினும் அமிழ்தினும்
    குழைத்தவள் வளைத் தோள்
வளவி உண்டவன் வருந்தும் என்றால்
    அது வருத்தோ?


பொருள்

(pl click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post.html

அளவு இல் = நீண்ட

கார் எனும்  = கார் காலம் என்று சொல்லப் படும்

அப்பெரும் பருவம் = அந்த பெரிய பருவ நிலை

வந்து = வந்து

அணைந்தால் = சேர்ந்து கொண்டால்

தளர்வர் என்பது = தளர்ந்து போவார்கள் என்பது

தவம் புரிவோருக்கும் = தவம் புரியும் முனிவர்களுக்கும்

தகுமால்; = ஏற்படும் என்றால்

கிளவி = மொழி, சொல், குரல்

தேனினும் அமிழ்தினும் = தேனையும், அமுதத்தையும் விட

குழைத்தவள் = குழைத்து தந்ததைப் போல உள்ள

வளைத் தோள் = மூங்கில் போன்ற நீண்ட தோள்கள்

வளவி = தழுவி

உண்டவன் = இன்பம் அனுபவித்தவன்

வருந்தும் என்றால் = (அவளைப் பிரிந்து ) வருந்துகிறான் என்றால்

அது வருத்தோ? =  அது என்ன சாதாரண வருத்தமா?


பெண்களின் குரல் தேனையும், அமுதத்தையும் கலந்த மாதிரி இனிமையாக இருந்ததாம்.  அந்தக் காலத்தில்.

அகத்தில் இருப்பது, புறத்தில் வரும்.

மனம் இனிமையாக இருந்தால், குரல் இனிமையாக இருக்கும்.

அன்பும், கருணையும், பாசம், காதலும் இருந்தால் குரலில் அது வெளிப்படும்.

இப்போதெல்லாம்  அப்படி எதிர் பார்க்க முடியாது.  ஆணும் பெண்ணும் சமம். ஆணின் முரட்டுக் குரல்தான் பெண்ணுக்கும் வரும். குரல் மட்டும் வேறாக ஏன் இருக்க வேண்டும்?


அது ஒரு புறம் இருக்கட்டும்.


"கார் எனும் பெரும் பருவம்" என்கிறார் கம்பர்.

சீதையை பிரிந்து இருப்பதால், ஒவ்வொரு நொடியும் நீண்டு இருப்பதைப் போல இராமனுக்குத் தெரிகிறது. அந்த கார் காலமே நீண்டு இருப்பதாகப் படுகிறது.



"வளைத் தோள் வளவி உண்டவன் வருந்தும்"

வளவி உண்டவன் என்றால் இன்பம் துய்த்தவன் என்று ஒரு பொருள்.

அவள் கைகளால் உணவு ஊட்ட உண்டவன் என்று பொருள்.

வருத்தம் இருக்காதா?






Thursday, August 27, 2020

தேவாரம் - சுருதி சிர உரையினால்

தேவாரம் - சுருதி சிர உரையினால் 


திரு ஞான சம்பந்தர் பாடிய தேவாரம். சீர்காழி என்ற தலத்தில் பாடியது.

சுரருலகு நரர்கள்பயி றரணிதல முரணழிய வரணமதின்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுய ரரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே.

(click the following link to continue reading) 

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_27.html

படிக்க கொஞ்ச கடினம் தான். சீர் பிரித்தால் எளிதில் விளங்கும்.

சீர் பிரித்த பின்

சுரர் உலகு  நரர்கள் பயில் தரணி தலம் முரண் அழிய  அரண் மதில்
முப்புரம் எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய  பரமன் இடமாம்
வரம் அருள  வரன் முறையில் நிறை கொள் வரு சுருதி சிர உரையினால்
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே.


பொருள்


சுரர் = தேவர்கள். தேவர்கள் அல்லாதவர்கள் அ -சுரர்

உலகு = (வாழும்) உலகு. தேவ லோகம்

நரர்கள் = மனிதர்கள்

பயில் = வாழும்

தரணி தலம் = உலகம் முழுவதும்

முரண் = வலிமை

அழிய = அழிய

அரண் = கோட்டை

மதில்  = சுவர்

முப்புரம் எரிய = மூன்று புரங்களும் எரிய

விரவு = விரைவாக

வகை = வழி செய்த

சர = அம்பு விட்ட

விசை கொள்= செய்யும்

கரம் உடைய = திருக்கரத்தை உடைய

பரமன் இடமாம்  = பரமன் இடத்தில்

வரம் அருள = வரம் வேண்டி

வரன் முறையில் = வரை முறையில்

நிறை கொள் = நிறைந்த

வரு சுருதி = வேதங்கள்

சிர = அதன் உச்சியில், வேதத்தின் அந்தம், வேதாந்தம்

உரையினால்  = உரையினால்

பிரமன் உயர் = உயர்ந்த பிரம்மன்

அரன்  = சிவன்

எழில் கொள் = அழகிய

சரண இணை = சரணம் அடையும் இரண்டு திருப் பாதங்கள்

பரவ = போற்ற

வளர் பிரமபுரமே. = எப்போதும் வளரும் பிரம புரமே (சீர்காழியே )

பிரம்மன் துதித்தால் அது ப்ரம்ம புரம் என்றும்   அழைக்கப்படும்.

சின்ன பாலகன். ஞான சம்பந்தர் பாடியது. நம்மால் வாசிக்கக் கூட முடியவில்லை.





Monday, August 24, 2020

திருக்குறள் - உள்ளக் கெடும்

திருக்குறள் - உள்ளக் கெடும் 


ஒருவர் நமக்கு எவ்வளவோ அன்பா, நட்பா, உறவா இருப்பார். ஏதோ ஒரு  சமயத்தில், தெரிந்தோ தெரியாமலோ நமக்கு ஒரு தீமை செய்து விடுகிறார். அது நம் மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும் அல்லவா? நம்மால் அதை சீரணிக்க முடியாது அல்லவா?

ஏன், நீட்டி வளர்ப்பானேன், கணவன் மனைவி உறவை எடுத்துக் கொள்வோம்.

ஏதோ ஒரு சண்டை, சச்சரவு, உணர்ச்சி வேகத்தில் வார்த்தை வந்து விழுந்து விடுகிறது.

சூடு போட்ட மாதிரி அது அப்படியே நிற்கிறது அல்லவா? என்ன இருந்தாலும், அவ/ அவர் அப்படி சொல்லி இருக்கக் கூடாது என்று மனம் கிடந்து பொருமுகிறது அல்லவா?  திருப்பி திருப்பி வந்து வருத்துகிறது அல்லவா?

அதை எப்படி மறப்பது? எப்படி முன்பு போல அன்பாக, அன்யோன்யமாக எப்படி இருப்பது? விரிசல் விழுந்தா , விழுந்தது தானா? நடுவில் விழுந்த விரிசலை மறக்க முடியாதா?


முன்பு ஒரு குறளில்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று 

என்று பார்த்தோம்.

ஒருவர் நமக்கு செய்த நன்றியை மறக்காமல் இருக்கச் சொன்னால், சரி. மறக்காமல் இருக்கலாம். எங்காவது எழுதி வைத்துக் கொள்ளலாம்.

நமக்கு கெடுதல் செய்ததை எப்படி மறப்பது? மறப்பது என்பது நம் கையிலா இருக்கு? ஒன்றை மறக்க வேண்டும் என்று நினைத்து மறக்க முடியுமா?

இப்படி முடியாத ஒன்றை வள்ளுவர் சொல்லுவாரா?

அல்லது, மறப்பது நல்லது என்று சும்மா உபசாரத்துக்கு சொல்லி இருப்பாரோ ?

இல்லை. அவர் உண்மையாகத்தான் சொல்கிறார். அதற்கு வழியும் சொல்கிறார்.

முதலில் இந்தக் குறளை பார்ப்போம் .

பாடல்

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

பொருள்

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_24.html

கொன்றன்ன = கொல்வதற்கு ஒப்பான

இன்னா = கெடுதல், தீமை

செயினும் = ஒருவர் செய்தாலும்

அவர்செய்த = அவர் முன்பு செய்த

ஒன்று நன்று = நல்லது ஒன்றை

உள்ளக் கெடும் = மனதில் நினைக்க, அந்த தீமை கெடும்.

அதாவது, நமக்கு ஒருவர் தீமை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதுவும் எப்படி பட்ட தீமை, நம்மை கொல்வதற்கு ஒப்பான தீமை. நம்மை கொல்வதை விட பெரிய தீமை என்ன இருக்க முடியும்?  அப்படிப் பட்ட ஒரு தீமையை  நமக்கு ஒருவர் செய்தால் கூட, அவர் நமக்கு முன் செய்த நன்மையை  மனதில் நினைக்க,  அந்த தீமை கெடும் என்கிறார்.

அது எப்படி முடியும் என்ற கேள்வி எழலாம்.

ஞாபகம் இருக்கிறதா - தினைத்துணை, பனைத்துணை ?

ஒருவர் நமக்கு ஒரு சின்ன உதவி செய்து இருந்தால், அதை பனை அளவாக நினைத்தால், அவர் இப்போது செய்த தீமை சிறிதாகி மறந்து போகும்.

"நமக்கு எவ்வளவோ பெரிய உதவி எல்லாம் செய்து இருக்கிறார். ஏதோ ஒரு சின்ன  தவறு நிகழ்ந்து விட்டது. அவர் செஞ்ச உதவிக்கு முன்னால், இது ஒரு துரும்பு"  என்று நினைக்க முடியும்.

வாழ்க்கை என்பதே இரு கோடுகள் தானே.

மனைவி / கணவன் ஏதோ சொல்லிவிட்டாள். அதனால் என்ன? எனக்காக அவள்  எவ்வளவு செய்து இருக்கிறாள். எவ்வளவு தியாகம் பண்ணி இருக்கிறாள். எவ்வளவோ உதவி செய்து இருக்கிறாள், எனக்கும், என் குடும்பத்துக்கும்....பரவாயில்லை, ஏதோ கோபம்,  வாய் தவறி வந்து விட்டது....என்று அன்போடு   அதை மன்னிக்க முடிவது மட்டும் அல்ல, அதை எளிதாக மறக்கவும்  முடியும்.

அதே போல் தான் மனைவிக்கும். இந்த மனுஷன் எனக்கும், இந்த குடும்பத்துக்கும்  எவ்வளவு பாடு படுகிறார். போயிட்டு போகுது, ஏதோ தவறுதலா சொல்லி இருப்பார் என்று நினைக்கவும், மறக்கவும் முடியும்.

பெற்ற உதவிகளை பெரிதாக நின்னைத்தால்,  செய்த தீமையின் அளவு சிறிதாகி முக்கியத்துவம் இல்லாமல் போகும்.

வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி இது.

சிந்திப்போம்.






Sunday, August 23, 2020

திருக்குறள் - பயன் தெரிவார்

திருக்குறள் -  பயன் தெரிவார் 


சில பேர் இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களிடம் ஏதோ ஒரு உதவியை பெற்று இருப்பார்கள். அதைப் பற்றி கேட்டால் "என்ன சார் பெரிய உதவி செஞ்சுட்டான்...அவனுக்கு இருக்கிற செல்வத்துக்கு இன்னும் எவ்வளவோ செய்யலாம்...இத்துனூண்டு செஞ்சான் " என்று பெற்ற உதவியை சிறுமை படுத்திச் சொல்வார்கள். சிறியர்.

உதவி என்பது செய்த உதவியின் அளவு அல்ல. அந்த உதவியினால் விளையும் பயனை பொறுத்தது.

உதாரணமாக, ஒரு மாணவன் பள்ளிக் கூடத்தில் கட்ட வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கிறான். குறித்த நேரத்தில் கட்டணம் செலுத்தா விட்டால்,  பள்ளியில் இருந்து வெளியே தள்ளி விடுவார்கள். எங்கெங்கோ கேட்டு கடைசியில் ஒரு நல்லவர் உதவி செய்ய அந்த கட்டணத்தை கட்டி விடுகிறான். பின் படித்து, பெரிய ஆளாகி விடுகிறான்.

இப்போது, அந்த நல்லவர் செய்த உதவியின் அளவு என்ன? அவர் கட்டிய கட்டணத்தின் மதிப்பு அல்ல. அது என்ன ஒரு ஆயிரம், இரண்டாயிரம் இருக்கும். ஆனால், அன்று அவர் அந்த பணம் கொடுத்து உதவி செய்ததால், இன்று அவன் இலட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கிறான். இன்னுமும் சம்பாதிப்பான்.

அது மட்டும் அல்ல, அவன் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க முடியும். அந்த பிள்ளைகள் சம்பாதிப்பார்கள். அதன் பின் பேர ப் பிள்ளைகள் என்று தொடரும்.

அது மட்டும் அல்ல, அவன் நன்கு படித்ததால் நல்ல பெண்ணை திருமணம் முடித்தான்.  அவள் கொண்டு வரும் செல்வம். அவள் உருவாக்கும் செல்வம். அவளின்  அன்பு, அரவணைப்பு.

அது மட்டும் அல்ல, கையில் செல்வம் இருப்பதால், அவனுடைய பெற்றோருக்கு  அவன் நல்ல மருத்துவ வசதி செய்து தந்து அவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக   இருக்க வைக்க முடியும்.

இப்படி, அந்த ஒரு சிறு உதவியின் பலன் விரிந்து கொண்டே போகிறது அல்லவா?

இன்னும் கூட விரித்துச் சொல்லலாம். நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

உதவியின் அளவு, அதன் பண மதிப்பை வைத்து அளப்பது அல்ல. அதனால் விளையும் பயன்களை பொறுத்தது.

என்றோ நமக்கு, நமது ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த உதவி நாம் வாழ்வில் இவ்வளவு சிறப்பாக   இருக்க முடிகிறது.

அவ்வளவு ஏன்,  சாலையில் ஒருவர் விபத்தில் சிக்கி அடிபட்டு கிடக்கிறார். அவ்வழியே போன ஒரு நல்லவர்,  அடிபட்ட அநத நபரை ஒரு வண்டியில் ஏற்றி  மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு போகிறார். அவர் அந்த வண்டிக்குக் கொடுத்த   வாடகை ஒரு நூறு ரூபாய் இருக்கும். நேரத்தில்  அந்த  விபத்தில் சிக்கியவரின் உயிர் காப்பாற்றப் பட்டது. அந்த உதவியின் அளவு நூறு ரூபாய் மட்டும் தானா?

ஒரு சின்ன உதவி செய்தால் கூட,  அதை மிகப் பெரிதாக கொள்வார்கள், அந்த உதவியின் பலன் / பயன் அறிந்தவர்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_23.html

பொருள்


தினைத்துணை = தினை அளவுக்கு சிறிய

நன்றி செயினும் = நல்லது செய்தாலும்

பனைத்துணையாக் = பனை அளவாக

கொள்வர் = எடுத்துக் கொள்வார்கள், கருதுவார்கள்

பயன்தெரி வார் = அந்த உதவியின் பயனை அறிந்தவர்கள்

தினை எவ்வளவு சிறிய ஒன்று. பனை எவ்வளவு பெரிய அளவு.

ஒரு சின்ன உதவி செய்தால் கூட, அதை மிகப் பெரிதாக நினைப்பார்கள் அந்த   உதவியின் பயன் தெரிந்தவர்கள்.

எனவே, நாம் பெறும் ஒவ்வொரு உதவியின் பயனை நினைத்து நாம் அதை போற்ற வேண்டும்.