Tuesday, May 11, 2021

திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 3

  

திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 3 


நீத்தார் பெருமை சொல்லிக் கொண்டு வந்த வள்ளுவர், நீத்தார் செயற்கரிய செய்வார் என்றும் மற்றவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றும் கூறுகிறார். 


பாடல் 


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/3.html


(please click the above link to continue reading)


செயற்கரிய = செய்வதற்கு கடினமான 


செய்வார் = (செயல்களை) செய்வார் 


பெரியர் = பெரியவர்கள் 


சிறியர் = சிறியர் 


செயற்கரிய = செய்வதற்கு கடினமான செயல்களை 


செய்கலா தார் = செய்ய மாட்டார்கள் 


அரிய செயல்கள் என்று பரிமேலழகர் கூறுவது "இயமம், நியமம் முதலிய எண்வகை யோக உறுப்புகளை "


இதில் 


இயமம்

நியமம் 

ஆசனம் 

பிரணாயாமம் 


என்ற நான்கையும் நேற்று சிந்தித்தோம். 


இனி வரும் நான்கும் தான் உண்மையிலேயே யோக முயற்சிகள்.  முதல் நான்கும் யோகத்திர்கான முன்னேற்பாடுகள்.


அடுத்த நான்கு  அங்கங்கள் 


பிரத்தியாகாரம் 

தாரண

தியானம் 

சமாதி 


நம் மனம் எப்போதும் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஒன்றில் இருந்து மற்றதற்கு தாவிக் கொண்டே இருக்கும். இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால், நல்லதும் கெட்டதும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். 


ஒருவருக்கு எப்போதும் நல்ல எண்ணங்களே தோன்றும் என்று கூற முடியாது. அதே போல் ஒருவருக்கு எப்போதும் தீய எண்ணங்களே தோன்றும் என்றும் கூற முடியாது. 


ஆனால், ஒரு எண்ணமும் இல்லாமல் மனம் இருக்காது. 


எனவே, பதஞ்சலி கூறுகிறார்,  ஒரு கெட்ட எண்ணம் வந்தால், உடனே ஒரு நல்ல எண்ணத்தை கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் மனம் அந்த கெட்ட எண்ணத்தின் பின்னேயே போய் கொண்டிருக்கும். 


யார் மேலாவது கோபம் அல்லது பொறாமை வந்தால், அவரின் நல்ல குணங்களை பற்றி சிந்திக்க வேண்டும், அவர் நமக்கு செய்த நன்மைகளை சிந்திக்க வேண்டும். அது முடியாவிட்டால், வேறு யாராவது நமக்கு செய்த நன்மைகளை சிந்திக்க வேண்டும். எவ்வளவோ பேர் நமக்கு நல்லது செய்திருக்கிறார்கள். இவன் ஒருவன் நமக்கு ஒரு தீங்கு செய்கிறான், சரி விடு நல்லதை நினைப்போம் என்று மனதை தீய எண்ணங்களில் இருந்து நல்லவற்றிற்கு மாற்ற வேண்டும். 


அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும். கணவன் மனைவி சண்டையில், ஏதோ ஒரு காரணமாக பேச்சு முத்தி, சண்டை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். "இவள் எனக்காக எவ்வளவு செய்திருக்கிறாள்...பாவம் என்னை நம்பி வந்தவள்" என்று நினைக்கும் போது கோபம் தணியும். அதே போல், "...பாவம் இந்த முனுஷன் இந்த குடும்பத்துக்காகா எவ்வளவு தியாகம் செய்கிறார்" என்று அவர் செய்யும் நல்லவற்றை நினைக்க வேண்டும். 


இதற்கு பிரத்தியாகாரம் என்று பெயர். 


அடுத்தது, தாரணை.  


இப்படி கெட்ட எண்ணங்களை நல்ல எண்ணங்களுக்கு மாற்றிக் கொண்டே இருந்தால், நாளடைவில் மனம் நல்லவற்றையே சிந்திக்கத் தலைப்படும். மனைவி மேல் கோபம் வந்தவுடன், உடனேயே அவளின் நல்ல குணங்கள் பற்றி சிந்திக்கப் பழகி விட்டால், எப்போதும் அவள் நல்ல குணங்களே தோன்றிக் கொண்டு இருக்கும்.  இது அனைத்து விதமான கெட்ட / நல்ல எண்ணங்களுக்கும் பொருந்தும். 


ஆனால், இப்படி நல்லது கெட்டது என்று மாறி மாறி போகும் மனதை நல்லதில் மட்டுமே இலயிக்க விடுவது தாரணை என்று பெயர். தாரணை என்றால் ஒழுக்கு. ஒரு பாத்தரத்தில் நீரை வைத்து அதில் ஒரு ஓட்டை போட்டு விட்டால் எப்படி நீர் கீழே வருமோ, அதற்கு தாரணை என்று பெயர். இன்னும் சொல்லப் போனால், நீர் கூட கொஞ்சம் சிதறும். எண்ணெய் உள்ள பாத்திரம் என்று சொல்லுவார்கள். ஒரே மாதிரி, சிந்தாமல் சிதறாமல் வரும். தாரை தாரையாக ஒழுகுகிறது என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா. 


இப்படி, நல்ல எண்ணங்களின் மேலேயே மனதை ஓடவிட்டாலும், ஒரு நல்ல எண்ணத்தில் இருந்து இன்னொரு நல்ல எண்ணத்திற்கு மனம் தாவும்.  ஒருவர் மேல் உள்ள நல்ல எண்ணத்தில் இருந்து இன்னொருவர் மேல் உள்ள நல்ல எண்ணமாக மாறும். அதுவும் மனச் சலனம் தான்.  


இப்படி பலவிதமான நல்ல எண்ணங்களில் இருந்து மன தை ஒன்றே ஒன்றின் மேல் செலுத்துவது தியானம் என்று பெயர். ஒன்றையே பற்றிக் கொள்ளுவது.  விடாமல் ஒன்றை மட்டுமே சிந்திப்பது. 


தியானம் கடந்து அடுத்து வருவது சமாதி. ஆதி + சமம். 


மனம் தொடக்கத்தில் எப்படி சலனம் அற்று இருந்ததோ அந்த நிலைக்கு செல்வது. சமாதி என்றால் ஏதோ இறந்த பின் புதைக்கும் இடம் அல்ல. ஆதி நிலைக்கு சமமமாக மனதை கொண்டு செல்வது. 


எனவே எண்வகை உறுப்புகள் என்பன

1.  இயமம்

2. நியமம்

3. ஆசனம் 

4. பிரணாயாமம் 

5. பிரத்தியாகாரம் 

6. தாரணை 

7. தியானம் 

8.  சமாதி 


இங்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 


நான் மேலே சொன்னது மிக மிக எளிமையான, புரிந்து கொள்ள வேண்டி சொன்னது.  யோகம் என்பது மிக மிக ஆழமான விடயம். நீங்கள் வலை தளத்தில் தேடினால் கோடிக் கணக்கான இணைய தளங்கள் கிடைக்கும். 


படித்துப் பாருங்கள்.   


இது ஒரு எளிய முன்னோட்டம். அவ்வளவே. 


இதில், ஒவ்வொன்றிலும் பலப் பல பிரிவுகள் உண்டு. ஆசனம் என்றால் அதில் பலவிதமான ஆசனம்.  தாரணை, தியானம் என்று ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள் உண்டு. 


யோக சாத்திரம் என்பது கடல் போன்றது.  பல வருடங்கள் பயில வேண்டிய ஒன்று. 


ஒரு ப்ளாகில் அடங்கும் விடயம் அல்ல. 


இதை ஒரு எளிய முன்னுரையாகக் கொண்டு, ஆர்வம் இருப்பின், மேலே தொடருங்கள். 


குருவருள் இருப்பின், யோக சித்திகள் கை கூடும். 


இந்த யோக பயிற்சி செய்து வீடு பேறு அடைவதை செயற்கரிய செயல் என்று வள்ளுவர் கூறுவதாக பரிமேலழகர் கூறுகிறார். 


ஐயன் ஒரு வரியில் கூறி விட்டுப் போய் விட்டார். அதை முழுவதுமாக தெரிந்து கொள்ள ஒரு ஆயுட்காலம் ஆகும். 


செயற்கரிய செயல் தான். 






இந்த நான்கையும் பற்றி நாளை சிந்திப்போம்.





இதன் முதல் பகுதியை கீழே காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_9.html



இதன் இரண்டாம்  பகுதியை கீழே காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_10.html


Monday, May 10, 2021

நல்வழி - இரை தேடும் போது இறையும் தேடு

நல்வழி  - இரை தேடும் போது இறையும் தேடு 


அரிதற்கு அரிதான இந்த மானிடப் பிறவியை பெற்றும், அதை நல்ல வழியில் பயன் படுத்தாமல் செல்வம் சேர்பதிலேயே செலவிடுகிறோம். கடைசியில் சேர்த்த செல்வம் அனைத்தையும் அனுபவிப்பதும் கிடையாது. ஏதோ வங்கியில், ஏதோ ஒரு நிறுவனத்தின் பங்குகளில், ஏதோ வங்கி லாக்கரில் கிடக்கும். அருமையான வாழ்வை இதற்காகவா செலவிடுவது என்று கேட்கிறாள் ஔவை. 


பாடல் 


 சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும்

    பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்

    பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

    நாழி அரிசிக்கே நாம்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_10.html


(please click the above link to continue reading)


சேவித்துஞ்  = கும்பிடு போட்டு 

சென்றிரந்துந் = சென்று பிச்சை பெற்று.  பிச்சை என்றால் தெருவில்தான் எடுக்க வேண்டும் என்று அல்ல. பதவி உயர்வு வேண்டி, சம்பள உயர்வு வேண்டி நிற்பதும் பிச்சை தான். 


தெண்ணீர்க் கடல்கடந்தும் = நாடு விட்டு நாடு சென்றும் 


பாவித்தும் = ஒன்றும் இல்லாதவனை பெரிய ஆள் என பாவித்தும் 


பாராண்டும் = நாட்டை / நிறுவனத்தை  ஆண்டும் 


பாட்டிசைத்தும் = செல்வர்களை, உயர் அதிகாரிகளை புகழ்ந்து பாடியும் (இன்றைய மொழியில் சொல்வது என்றால் ஜால்ரா போட்டும்) 


போவிப்பம் = செலவழிக்கின்றோம் 


பாழின் உடம்பை = அழியும் இந்த உடம்பை 


வயிற்றின் கொடுமையால் = பசியின் கொடுமையால் 


நாழி அரிசிக்கே நாம் = ஒரு நாழி அரிசிக்கே நாம் 


அரிசி என்றால் அரிசியோடு முடிவது அல்ல. 


அரிசி, காய் கறி, பழம், பால் தயிர், மோர், அதை வைக்கும் பாத்திரம், அதை  வைக்கும் வீடு, வேண்டும் போது அவற்றை வாங்க செல்வம் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். வெண்பாவில் எல்லாவற்றையும் சொல்ல முடியாது. 


சாப்பாடு, பொருள் தேடல் இது மட்டும்தானா வாழ்க்கை. 


விலங்குகள் கூடத்தான் இரை தேடுகின்றன, கூடு கட்டிக் கொள்கின்றன, இன விருத்தி செய்கின்றன, எதிர் காலத்துக்கு சேமித்து வைக்கின்றன. 


இரையோடு கொஞ்சம் இறையும் தேடுவோம். 




திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 2

 

திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 2


நீத்தார் பெருமை சொல்லிக் கொண்டு வந்த வள்ளுவர், நீத்தார் செயற்கரிய செய்வார் என்றும் மற்றவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றும் கூறுகிறார். 


பாடல் 


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_10.html


(please click the above link to continue reading)


செயற்கரிய = செய்வதற்கு கடினமான 


செய்வார் = (செயல்களை) செய்வார் 


பெரியர் = பெரியவர்கள் 


சிறியர் = சிறியர் 


செயற்கரிய = செய்வதற்கு கடினமான செயல்களை 


செய்கலா தார் = செய்ய மாட்டார்கள் 


அரிய செயல்கள் என்று பரிமேலழகர் கூறுவது "இயமம், நியமம் முதலிய எண்வகை யோக உறுப்புகளை "


யோகம் என்றால் என்ன ? அது என்ன எண்வகை ?


யோகம் என்றால் இணைப்பது. 


எதோடு எதை இணைப்பது ? மனதையும், உடலையும் இணைப்பது.  அதை ஏன் இணைக்க வேண்டும்? இணைப்பதால் என்ன பலன்? இணைக்காவிட்டால் என்ன நிகழும் என்பது பற்றி அறிய யோக சூத்திரம் முழுவதும் படிக்க வேண்டும். 


இங்கு எட்டு யோக உறுப்புகளை பார்ப்போம். 


பதஞ்சலி எழுதிய யோக சூத்திரத்தில் யோகத்தை எட்டு அங்கங்களாக பிரிக்கிறார். 


முதல் நாலு பிரிவுகள் யோகம் செய்வதிற்கான ஆயத்த நிலைகள். இரண்டாவது நாலு பிரிவுகள் தான் யோகம் பற்றியவை. 


இவற்றைப் பார்ப்பதற்கு முன்னால், யோகம் பற்றிய சில சிந்தனைகளை நாம் சரி செய்து கொள்ள வேண்டும். 


யோகம் என்பது ஏதோ உடற் பயிற்சி அல்ல. இன்று யோகா என்பது ஏதோ உடல் பயிற்சி என்று ஆகிவிட்டது. அந்த யோகா, இந்த யோகா  என்று பலவிதமான யோகா நிலையங்கள் வந்து விட்டன. டிவி யிலும் பல யோகா பயிற்சிகள் சொல்லித் தருகிறார்கள். 


இது எல்லாம் ஆசனம் என்ற ஒரு பகுதி மட்டும் தான்.  மிஞ்சி மிஞ்சி போனால் பிரணாயாமம் கூட சேரலாம். அது இரண்டு மட்டுமே யோகம் அல்ல. 


அஷ்டாங்க யோகம் பற்றி சிந்திப்போம். 


முதல் நான்கு அங்கங்கள்:


இயமம்

நியமம் 

ஆசனம் 

பிரணாயாமம் 


இயமம் என்றால் விலக்கியன ஒழிதல். அதாவது எந்த தீய ஒழுக்கங்களை விலக்க வேண்டும் என்று உயர்ந்தவர்களும், உயர்ந்த நூல்களும் கூறுகின்றனவோ அவற்றை விலக்க வேண்டும். 


உதாரணமாக புகை பிடிப்பது, மது அருந்துவது, கொலை, களவு, போன்றவை.   யோகாசனம் ஒரு மணி நேரம் செய்து விட்டு பின் வெளியே வந்து புகை பிடிப்பது சரி அல்ல. 


யோகாசானத்தின் முதல் அங்கம், தீயவற்றை விட்டு விலகுவது. அதிகம் உண்பது, போதை தரும் பொருள்களை விடுவது,  சோம்பேறித்தனம், பொறாமை,கோபம் போன்றவற்றை விடுவது. இதற்கே ஒரு வாழ்நாள் போய்விடும் போல் இருக்கிறது. 


நியமம் என்பது நல்ல நூல்களில், உயர்ந்தவர்கள் கூறியவற்றை கடைபிடிப்பது. முதலில் தீயவற்றை விலக்குவது. பின் நல்லவற்றை கடைபிடிப்பது. தீய பழக்கங்களை விடாமல் நல்ல பழக்கங்களை கைக் கொள்ள முடியாது. 


மூன்றாவது, ஆசனம்.  ஆசனம் என்பது உடலை சம நிலைப் படுத்துவது. எந்த வேலை  செய்ய வேண்டும் என்றாலும், உடல் ஒத்துழைக்க வேண்டும். உடல் களைத்தால், வேலை நின்று விடும். யோக முயற்சி என்பது நீண்ட கால முயற்சி. அதற்கு உடல் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அதற்கு ஆசனம் பழக வேண்டும். 


நான்காவது, பிராணாயாமம். உடல் சம நிலை பட்டுவிட்டால், அடுத்து மூச்சு சமநிலை படவேண்டும்.  மூச்சு நிதானமானால், மன நிலை சமப்படும். 


மனதை கட்டுப் படுத்த வேண்டும் என்றால், மூச்சு சமப் படவேண்டும். மூச்சு சமப் பட வேண்டும் என்றால், உடல் சமப் படவேண்டும். அதற்கு நியமும், இயமும் வேண்டும். 


இந்த நான்கு அங்கங்களையும் கடந்த பின்னால்தான் உண்மையான யோக முயற்சிகள் தொடரும். 


அடுத்த நான்கு  அங்கங்கள் 


பிரத்தியாகாரம் 

தாரண

தியானம் 

சமாதி 


இந்த நான்கையும் பற்றி நாளை சிந்திப்போம்.





இதன் முதல் பகுதியை கீழே காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_9.html


Sunday, May 9, 2021

திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 1

திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 1 


நீத்தார் பெருமை சொல்லிக் கொண்டு வந்த வள்ளுவர், நீத்தார் செயற்கரிய செய்வார் என்றும் மற்றவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றும் கூறுகிறார். 


பாடல் 


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_9.html


(please click the above link to continue reading)


செயற்கரிய = செய்வதற்கு கடினமான 


செய்வார் = (செயல்களை) செய்வார் 


பெரியர் = பெரியவர்கள் 


சிறியர் = சிறியர் 


செயற்கரிய = செய்வதற்கு கடினமான செயல்களை 


செய்கலா தார் = செய்ய மாட்டார்கள் 


இதில் செயற்கரிய செயல், அது அல்லாத செயல் என்ன என்று வள்ளுவர் சொல்லவில்லை.  யாரிடம் போய் கேட்பது? எப்படி அறிந்து கொள்வது?


இமயமலை மேல் ஏறுவது செயற்கரிய செயல்தான். எல்லோராலும் முடியாது. அதற்காக அங்கு ஏறியவர்கள் எல்லோரும் பெரியர் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?



பல கோடி சொத்து சேர்ப்பது,  பந்தயங்களில் தங்கப் பதக்கம் வாங்குவது எல்லாம் அரிய செயல் தான்.  பணக்கார்கள் எல்லோரும் பெரியவர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?



வீட்டு வேலை செய்வது,  பிள்ளைகளை பார்த்துக் கொள்வது எல்லோரும் செய்வதுதான். அதற்காக அதை செய்பவர்களை சிறியர் என்று கூற முடியுமா? 



சிக்கல்தானே. 


பரிமேலழகர் இல்லை என்றால் இந்த சிக்கலை நம்மால் விடுவிக்கவே முடியாது. 


அவர் உரையில், 


"செயற்கு அரிய ஆவன, இயமம்,நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள். 


செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. "


என்று குறிப்பிடுகிறார். 


அதாவது யோகம் செய்வது அரிய செயல் என்றும், புலன்களை பொறிகள் செல்லும் வழியில் செல்ல விடுதலும் சிறியர் செய்யும் செயல் என்கிறார். 


சிறியர் செயல் நமக்குப் புரிகிறது. 


சாப்பிடவேண்டும் என்று நினைத்தால் சாப்பிடுவது.  முன்பு எப்போது உண்டோம், எவ்வளவு உண்டோம், அது ஜீரணம் ஆகி இருக்குமா என்றெல்லாம் யோசிப்பது கிடையாது.  உணவைப் பார்த்தவுடன் ஒரு ஆசை. நாக்கில் எச்சில் ஊறுகிறது. உண்ணத் தலைப்படுகிறோம்.  


ஒவ்வொரு ஆசையும் அப்படியே யோசித்துக் கொள்ளுங்கள். 


அது என்ன இயமம், நியமம் என்ற  எண்வகை யோக உறுப்புகள் ? அவற்றை செய்வது அவ்வளவு கடினமா? அவற்றை செய்தால் என்ன கிடைக்கும்  ? 


எண்வகை யோக உறுப்புகளை நாளை சிந்திப்போம். அது சற்றே பெரிய தலைப்பு என்பதால், அதற்கென்று ஒரு ப்ளாக் இருப்பது நலம். 

Saturday, May 8, 2021

நல்வழி - இட்டு உண்டு இரும்

நல்வழி - இட்டு உண்டு இரும் 


கோவிட் வைரஸ் நாளும் வேகமாக பரவிக் கொண்டே இருக்கிறது.  இறப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. 


அங்கொன்றும் இங்கொன்றுமாக யாரோ இறந்தார்கள் என்று கேள்விப் பட்டது போக, அந்த துக்கச் செய்தி நமக்கு அருகில் வந்து கொண்டே இருக்கிறது. அங்கே ஒரு நண்பர், இங்கே ஒரு உறவினர் என்று நமக்கு அருகில் வருகிறது. 


நம்மைச் சார்ந்தவர்கள் நம்மை விட்டுப் போகும் போது, அது செய்தி அல்ல. துக்கம் நெஞ்சை அறுக்கிறது. 


என்ன ஆறுதல் சொல்ல முடியும்?  ஈடு செய்ய முடியாத இழப்புகள் அல்லவா அவை. 


உடல் தளர்ந்து, மனம் தளர்ந்து போய் இருக்கும் அந்த சமயத்தில் ஔவை வாழ்வின் உண்மையை சொல்லிவிட்டுப் போகிறாள். 


உண்மை மட்டும் தான் நம்மை துக்கத்தில் இருந்து காக்கும். 


சத்தியத்திற்கு ஒரு பலம் இருக்கிறது. 


"எத்தனை வருடம் அழுது புரண்டாலும், இறந்து போனவர்கள் திரும்பி வரப் போவது இல்லை.  நாம் துக்கப் படுவது, அழுவதும் ஏதோ நமக்கு அது வராது என்ற நினைப்பில். நமக்கும் அதே வழிதான்.  இருக்கும் வரை, இதுக்கும் நமக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை பசித்தவருக்கு கொஞ்சம் உணவு அளித்து, நீங்களும் உண்டு, அமைதியாக இருங்கள்"


என்கிறாள். 


பாடல் 




ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்

    மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா

    நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்

    எமக்கென்னென் றிட்டுண் டிரும்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_56.html


(please click the above link to continue reading)


ஆண்டாண்டு தோறும்  = பலப் பல ஆண்டுகளாக 

அழுது புரண்டாலும் = அழுது புரண்டாலும் 

மாண்டார் = இறந்தவர்கள் 

வருவரோ = திரும்பி உயிரோடு வருவார்களா?  மாட்டார்கள் 

மாநிலத்தீர் = இந்த பெரிய உலகில் உள்ளவர்களே 

வேண்டா = அழ வேண்டாம் 

நமக்கும் = நமக்கும் 

அதுவழியே = அது தான் வழி 

நாம்போம் அளவும் = நாம் போகிற வரை 


எமக்கென்னென் றிட்டுண் டிரும். = எமக்கு என்ன என்று இட்டு உண்டு இரும்.


நம்மால் ஆவது என்ன ? ஒன்றும் இல்லை என்று உணர்ந்து, நாலு பேருக்கு பசிக்கு அன்னம் இட்டு, நீங்களும் உண்டு, பேசாமல் அமைதியாக இருங்கள் என்கிறாள். 


துக்கத்தை போக்க, அதையே நினைத்துக் கொண்டு இருக்காமல், மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்கிறாள் ஔவை. 


இது என்ன புதுசா இருக்கே. நாமே துக்கத்தில் இருக்கிறோம். நாம் எங்கிருந்து மற்றவர்களுக்கு  உதவி செய்வது? என்று நம் மனதில் கேள்வி எழலாம். 


நாம் துக்கத்தில் இருக்கும் போது, நம்மை விட பெரிய துக்கத்தில் இருப்பவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்வதன் மூலம், நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு தைரியம் பிறக்கும். நம்மால் இந்த நிலையில் கூட மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்ற தைரியமும் தன்னம்பிக்கையும் துக்கத்தை விரட்டி அடிக்கும். 


மேலும், துக்கம் யாருக்குத்தான் இல்லை. எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் துக்கம் இருக்கிறது என்ற யதார்த்தம் மனதில் படும். ஏதோ நமக்கு மட்டும் வந்து விடவில்லை ...இது எல்லோருக்கும் வரும் ஒன்று தான் என்ற எண்ணம் மனதை கொஞ்சம் மென்மை படுத்தும். 


கிழவி சொல்கிறாள். தப்பாவா இருக்கும்?




திருக்குறள் - நீத்தார் பெருமை - இந்திரனே சாலும் கரி

 திருக்குறள் - நீத்தார் பெருமை - இந்திரனே சாலும் கரி 


ஐந்து பபுலன்களின் வழி செல்லும் ஆசைகளை நீத்தவனின் பெருமைக்கு இந்திரனே சாட்சி என்கிறார் வள்ளுவர். 


குறளுக்குள் போவதற்கு முன், ஒரு சில விடயங்களை புரிந்து கொள்வது நலம். 


இந்து சமயத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு கடவுள் உண்டு என்று வைத்து இருக்கிறோம்.  காற்று என்றால் அதற்கு ஒரு கடவுள் (வாயு பகவான்); தீ என்றால் அதற்கு ஒரு கடவுள் (அக்னி பகவான்) என்று எல்லாவற்றிற்கும் ஒரு கடவுள். அதே போல் சந்திரன் என்றால் ஒரு கடவுள், சூரியன் என்றால் ஒரு கடவுள். 



இது என்ன ஒரு அறிவு சார்ந்த விடயமாகத் தெரியவில்லையே. ஏதோ அறிவு குறைந்த அந்த நாட்களில் எழுதி இருப்பார்களோ? அதையே இன்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களோ? 



இன்று சந்திரனுக்கு ராக்கெட் எல்லாம் அனுப்பி, ஆட்கள் அங்கே இறங்கி விட்டார்கள். இன்னும், அதை ஒரு சந்திர பகவான் என்று சொல்லுவது சரியா?



நம்மவர்கள் எந்த ஒரு பொருளுக்கும் இரண்டு வடிவம் உண்டு என்று நம்பினார்கள். ஒன்று தூல வடிவம். இன்னொன்று சூக்கும வடிவம். வடிவம் என்றால் ஒரு குறியீடு. 



நான் ஐந்து வயதாக இருக்கும் போது ஒரு மாதிரி இருந்தேன். ஐம்பது வயதில் வேறு மாதிரி இருக்கிறேன். ஆனால் இரண்டும் நான் தான். எப்படி? என் புகைப் படத்தை பார்த்தால் எனக்கே சந்தேகம் வருகிறது அது நான் தானா என்று.  



தூல வடிவம் மாறிக் கொண்டே வருகிறது. உயரம் கூடும், முகம் மாறும், முடி நரைக்கும், பல் விழும், தோல் சுருங்கும், குரல் மாறும். ஆனாலும், இவற்றிற்கு எல்லாம் அடிப்படையில் மாறாத "நான்" என்று ஒன்று இருக்கிறது அல்லவா? அது சூக்கும வடிவம். அது கண்ணுக்குப் புலப்படாத வடிவம். 



அந்த சூக்கும வடிவத்தைத் தான் நம்மவர்கள் தேவர்கள்/கடவுள்கள் என்று வழிப்பட்டார்கள். 



இன்றும் கூட, கடவுள் கோட்பாட்டை நம்பாதவர்கள் கூட தங்கள் முன்னவர்களின் சமாதியில் சென்று வழி படுகிறார்கள், பூ தூவுகிறார்கள். காரணம் என்ன? அந்த சமாதியின் சிமெண்டும், கல்லும், ஜல்லியும், வணக்கத்துக்கு உரியன என்பதலா? இல்லை. சமாதி தூல வடிவம். உள்ளே இருப்பதாக நம்பும் முன்னோர் சூக்கும வடிவம்.  சமாதியை வழிபடுவது அல்ல.



போட்டோ தூல வடிவம். அதில் உள்ளவர் சூக்கும வடிவம். 


அதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 


இப்படி பல தேவுக்கள் இருக்கிறார்கள். வருணன், அக்னி, வாயு என்று. இவர்களுக்கு எல்லாம் தலைவன் இந்திரன். 


சாதாரண மானிடர்கள் இந்த தேவுக்களை வழிபாடு செய்வார்கள். அக்னி வழிபாடு, சூரிய நமஸ்காரம் என்று. 


நாம் இவர்களை வழிபடுகிறோம். அவர்கள் இந்திரனை வழி படுகிறார்கள். அப்பேற்பட்ட இந்திரன் ஐந்து புலன்களையும் வென்ற ஒரு முனிவனிடம் சாபம் பெற்று நின்றான் என்றால் அந்த புலன்களை வென்ற முனிவர்களின் சக்திக்கு அவனே தான் சான்று?


அகலிகை என்ற முனி பத்தினியை இந்திரன் விரும்ப, அவளை தகாத முறையில் அடைய முயற்சி செய்கிறான். அவன் கபட நாடகத்தை அறிந்த கௌதமர், இந்திரனை சபித்து விடுகிறார். அது கதை. புராணம். 


புலனடக்கம் இல்லாததால் இந்திரன் சாபம் பெற்றான். 


புலனடக்கம் இருந்ததால் அந்த முனிவர் இந்திரனுக்கே சாபம் கொடுத்தார்.


எனவே, புலன் அடக்கத்தின் பெருமைக்கு இந்திரனே சாட்சி என்கிறார். 


இனி, குறளைப் பார்ப்போம். 


பாடல் 


ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_8.html


(please click the above link to continue reading)


ஐந்தவித்தான் = ஐந்து புலன்கள் வழி செல்லும் ஆசைகளை அறுத்தவன் 


ஆற்றல் = அவனுடைய ஆற்றல் 


அகல்விசும்பு ளார் = பெரிய வானத்தில் இருக்கும் தேவர்களின் 


கோமான் = அரசன் 


இந்திரனே = இந்திரனே 


சாலுங் கரி = அமையும் சான்று. கரி என்றால் சான்று. நிரூபணம். 




Friday, May 7, 2021

நல்வழி - துஞ்சுவதே மாந்தர் தொழில்

 நல்வழி - துஞ்சுவதே மாந்தர் தொழில்


சில சமயம் நாம் எவ்வளவோ முயன்றாலும் நம் முயற்சி பயனற்று போய் விடுவது உண்டு. அதே சமயம் சிலபேரை பார்க்கிறோம். அவன் என்ன செய்தாலும் அதில் வெற்றி வருகிறது. 


குருட்டாம்போக்கில் ஏதோ செய்வான், பணம் அள்ளிக் கொண்டு வரும். ரொம்ப முயற்சி செய்யாமலேயே நல்ல இடத்தில் பிள்ளைகளுக்கு வரன் அமையும், வேலையில் பணி உயர்வு கிடைக்கும், நல்ல மதிப்பும் மரியாதையும் அவனுக்கு கிடைக்கும் .


நமக்கோ, கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் கூட ஏதோ ஒரு வழியில் தேவை இல்லாமல் விரயம் ஆகும். பிள்ளைக்கு ஒரு மதிப்பெண்ணில் நல்ல ஒரு கல்லூரியில் இடம் கிடைக்காமல் போய் விடும். 


இதற்கு என்ன செய்வது?


இதை எப்படி புரிந்து கொள்வது. 


நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போனது ஒரு பக்கம். தகுதி இல்லாதவனுக்கு எல்லாம் கிடைப்பது மறு பக்கம். 


கோபமும், எரிச்சலும், பொறாமையும், வெறுப்பும் வரும் அல்லவா?


இது என்ன வாழ்க்கை? இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் என்ற சலிப்பு வரும் அல்லவா?


இதுவரை இந்த பிரச்னைக்கு ஒரு தெளிவான, அறிவியல் பூர்வமான தீர்வு இல்லை. 


ஔவை, தன் அனுபவத்தில் கூறுகிறாள். 


"என்ன தான் வருந்தி முயற்சி செய்தாலும், எது நமக்கு இல்லையோ அது நம்மிடம் வராது. சரி, வேண்டாம், போதும், போ என்று சொன்னாலும் சில சமயம் போகாது. இது எல்லாம் விதிப்படி நடக்கும். அதை நம்பாமல் இவற்றை எல்லாம் நெடுக நினைத்து நெஞ்சம் புண்ணாகி இறுதியில் வருத்தத்தில் இறந்து போவதே இந்த மக்களின் தொழிலாக இருக்கிறது"


பாடல் 


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி

நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_7.html

(please click the above link to continue reading)


வருந்தி = கஷ்டப்பட்டு 


அழைத்தாலும் = கூப்பிட்டாலும் 


வாராத = எது நமக்கென்று இல்லையோ 


வாரா = அவை நம்மிடம் வராது 


பொருந்துவன = எது நமக்கென்று விதித்து இருக்கிறதோ 


போமினென்றாற் = அவற்றை போ என்று சொன்னாலும் 


போகா = போகாது 


இருந்தேங்கி = இருந்து ஏங்கி 


நெஞ்சம் = நெஞ்சம் 


புண்ணாக  = புண் ஆகும் படி 


நெடுந்தூரந் தாம் நினைந்து = நீண்ட நாட்களாக அவற்றை எண்ணி 


துஞ்சுவதே = பின் அந்த வருத்தத்திலேயே இறந்து போவது தான் 


மாந்தர் தொழில். = மனிதர்களின் வேலையாக இருக்கிறது 


நல்லதோ, கெட்டதோ - நமக்கு எது விதித்து இருக்கிறதோ அது நம்மை வந்து அடைந்தே சேரும். எது நமக்கு இல்லையோ அவை என்ன பாடு பட்டாலும் நம்மை வந்து சேராது. 


சரியான துணை அமையவில்லை. விட்டு விடலாம் என்றாலும் முடியாது. போ என்றால் போகாது. நோய் வந்து விட்டது.  மருந்து மாத்திரை என்று என்ன செய்தாலும், போகின்ற காலம் அல்லது போகாது. இருந்து படுத்திவிட்டுத் தான் போகும். 


இனிமேலாவது நல்லது வேண்டும், துன்பம் வேண்டாம் என்றால், நல்லது செய்ய வேண்டும். 


விதைப்பதைத் தானே அறுக்க முடியும். 


வெண்டை விதைத்து விட்டு கத்தரி அறுக்க நினைக்கலாமா?