Wednesday, August 25, 2021

கம்ப இராமாயணம் - ஆவியை உண்ணுதியோ

 கம்ப இராமாயணம் - ஆவியை உண்ணுதியோ 


அசோகவனத்தில் இருக்கும் சீதை இராமனை நினைத்து புலம்புகிறாள். 


"இராமா !, நீ காட்டுக்குப் போகப் போகிறேன் என்று சொன்ன போது நானும் வருகிறேன் என்று அடம் பிடித்தேன். நீ வர வேண்டாம், இங்கே நகரத்திலேயே இரு என்று சொன்னாய். நான்தான் கேட்கவில்லை. அதனால், இப்போது இந்த நகரத்தில் (இலங்கையில்) இருக்கட்டும் என்று என்னை விட்டுவிட்டாயா?  உன் அருளின் அளவு இவ்வளவுதானா? என் உயிரை வாங்குகிறாய் நீ" 


என்று புலம்புகிறாள். 


பாடல் 


தரு ஒன்றிய கான் அடைவாய், "தவிர் நீ;

வருவென சில நாளினில்; மா நகர்வாய்

இரு" என்றனை;இன் அருள்தான் இதுவோ ?

ஒருவென் தனிஆவியை உண்ணுதியோ ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_25.html


(Please click the above link to continue reading)


தரு ஒன்றிய = மரங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் அடர்ந்த 


கான் = கானகத்தை 


அடைவாய், = நீ அடைவாய் 


"தவிர் நீ; = நீ (சீதையாகிய நீ) அதை தவிர்ப்பாய் 


வருவென = நான் (இராமன்) வருவேன் 


சில நாளினில் = கொஞ்ச நாளில் 


மா நகர்வாய் = பெரிய நகரத்தில் 


இரு " = இரு 


என்றனை = என்னைச் (சீதையை) சொன்னாய் 


இன் அருள்தான் இதுவோ ? = நீ காட்டும் அருள் இது தானா? 


ஒருவென் தனி = தனி ஆளாக இருக்கும் 


ஆவியை உண்ணுதியோ ? = உயிரை எடுக்கிறாய் 


நான் காட்டில் கிடந்து துன்பப் படக் கூடாது என்று என்னை இந்த நாட்டில் தனியாக இருக்க வைத்து விட்டாயா? இவ்வளவுதானா  உன் அருள். உன் பிரிவு என் உயிரை உருக்குகிறது என்கிறாள். 


உயிரை, உணர்வைத் தொடும் கவிதை. 

Tuesday, August 24, 2021

ஏலாதி - நூல் வேண்டா விடும்

ஏலாதி - நூல் வேண்டா விடும் 


தமிழில் எத்தனை ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன? அவற்றை எல்லாம் படித்து, தெளிவாக அறிந்து, அதன் படி நடப்பது என்பது நடக்கிற காரியமா? 


திருக்குறள் ஒன்று படிக்கவே ஒரு வாழ்நாள் போதாது போல் இருக்கிறது. இதில் மற்றவற்றை எப்போது படிப்பது. 


தமிழ் மட்டுமா? சமஸ்க்ரிதம், ஆங்கிலம் என்று எத்தனை மொழிகள் இருக்கின்றன. அவற்றில் எத்தனை நல்ல புத்தகங்கள் இருக்கும். எல்லாவற்றையும் என்று படித்து தீர்வது?


பக்தி நூல்களைப் படித்தால் பாதிக்கு மேல் இறைவன் பற்றிய வர்ணனையாக இருக்கிறது. நீ அதைச் செய்தாய், நீ இதைச் செய்தாய், நீ அப்படி இருப்பாய், இப்படி இருப்பாய். அதைத் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? அவர் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். 


சரி, சங்க இலக்கியம் படிக்கலாம் என்றால், அந்தக் கால வாழ்க்கை வரலாறு தெரியும். தெரிந்து என்ன செய்ய? காலம் எவ்வளவோ மாறி விட்டது. கைப் பேசியும், கணணியும் உள்ள காலத்தில் வளையல் நெகிழ்ந்த கதைகள் பெரிதாக ஒரு தாக்கத்தை உண்டு பண்ணப் போவதில்லை. 


சரி, அதுவும் வேண்டாம், அற நூல்களைப் படிக்கலாம் என்றால், அவை நடை முறைக்கு சாத்தியமாகுமா என்று தெரியவில்லை. படிக்க நன்றாக இருக்கும். ஆனால் கடை பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் வருகிறது. 


பின் எதைத்தான் படிப்பது?


எப்படி நம்மை முன்னேற்றுவது?


எதை ஒன்றை அறிந்து கொண்டால், மற்றவை எல்லாம் தேவை இல்லையோ, அதை மட்டும் படித்தால் போதும் அல்லவா?


ஏலாதி அதற்கு ஒரு வழி சொல்கிறது. 


இதை மட்டும் தெரிந்து அதன் படி நடந்தால் வேறு எந்த நூலும் படிக்க வேண்டாம் என்கிறது. 


பாடல் 


இடர்தீர்த்த லெள்ளாமை கீழினஞ்சே ராமை

படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் - நடைதீர்த்தல்

கண்டவர் காமுறுஞ்சொற் காணிற் கலவியின்கண்

விண்டவர்நூல் வேண்டா விடும்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_24.html


(pl click the above link to continue reading)


இடர்தீர்த்தல் = பிறர்க்கு வந்த துன்பங்களைப் போக்குதல் 


எள்ளாமை = பிறரை பரிகாசம் செய்யாமல் இருத்தல். மற்றவர்களை கேலி பேசக் கூடாது 


கீழினஞ்சே ராமை = கயவர்களோடு சேராமல் இருத்தல் 


படர்தீர்த்தல் = பிறர் பசியைத் தீர்த்தல் 


யார்க்கும் = யாராய் இருந்தாலும் (இதை முந்தைய பசி தீர்த்தலோடு சேர்த்து, 

பசி என்று யார் வந்தாலும் அந்தப் பசியைப் போக்குதல்) 


பழிப்பின்  நடை  = பழி வரக் கூடிய செயல்களை 


தீர்த்தல் = செய்யாமல் இருத்தல் 


கண்டவர் = எதிரில் நம்மைக் கண்டவர்கள் 


காமுறுஞ்சொற் = விரும்பும் சொல்லைச் கூறுதல், 


காணிற் = ஒருவன் செய்வானானால் 


கலவியின்கண் = உலகப் பற்றில் இருந்து (இங்கே கலவி என்பது உலகத்தோடு கலந்து இருப்பது) 


விண்டவர் = விடுபட்டவர்கள் , துறவிகள், முனிவர்கள், சான்றோர் 


நூல் வேண்டா விடும். = அவர்கள் எழுதிய எந்த ஒரு நூலும் வேண்டாம் (படிக்க வேண்டாம்).



இது கடினமே இல்லை. 


துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். 


பசித்தவர்களுக்கு உணவு தர வேண்டும். 


தீயவர்களோடு பழகக் கூடாது 


எல்லோரிடத்தும் இனிமையாக பேச வேண்டும். 


உலகம் பழிக்கும் செயலகளைச் செய்யக் கூடாது.


அவ்வளவுதான். 


இவற்றை ஒருவன் செய்தால், அவன் வேறு ஒரு நூலையும் படிக்க வேண்டாம். 


அனைத்து நூல்களும் சொல்வது இதைத் தான். 


இதை செய்து பழகுவது கஷ்டமா? 


Monday, August 23, 2021

திருக்குறள் - சொர்கத்திலும் மதிப்பு பெறுவர்

 திருக்குறள் - சொர்கத்திலும் மதிப்பு பெறுவர் 



பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்


புத்தேளிர் வாழும் உலகு


இது ஒரு குழப்பமான குறள். இந்தக் குறளுக்கு பல பேர் பல விதங்களில் உரை எழுதி இருக்கிறார்கள். எதுவுமே முழுவதும் சரி என்று படவில்லை. ஏதோ குறை இருப்பது போலவே படுகிறது. 


ஏன் என்று பார்ப்போம்.


பாடல் 


பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_23.html


(Please click the above link to continue reading)


பெற்றார்ப்  = அடையப்  பெற்றவர்கள் 

பெறின் = பெற்றால் 

பெறுவர் = அடைவர் 

பெண்டிர் = பெண்கள் 

பெருஞ்சிறப்புப் = பெரிய சிறப்பு 

புத்தேளிர் = தேவர்கள் 

வாழும் உலகு = வாழும் உலகு 


பெற்றார் என்றால் யார் பெற்றார், எதைப் பெற்றார் என்ற கேள்வி வரும். 


பெறுவர் என்றால் யார் பெறுவார்கள்? 


அதிகாரம் "வாழ்க்கைத் துணை நலம்". எனவே இது மனைவியைப் பற்றியது என்று கொள்ளலாம். 


மனைவியைப் கணவன்  பெற்றால் என்று கொண்டால், "பெறுவர் பெண்டிர்" என்று மீண்டும் வருகிறது.  குழப்பமாக இருக்கிறது அல்லவா?


பரிமேலழகர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 

"பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்."


அதாவது,  தன்னைத் தொழுது எழும் மனைவியை ஒரு கணவன் பெற்றால், அவன் சொர்கத்திலும் பெரிய சிறப்பைப் பெறுவான் என்று பொருள் சொல்கிறார். 


இது ஒரு பெண்ணடிமைத் தனம் இல்லையா என்று கேள்வி கேட்கலாம். 


இதற்கு வேறு விதத்திலும் பொருள் சொல்கிறார்கள். 


ஒரு மனைவி, தன்னை மட்டுமே நேசிக்கும் கணவனைப் பெறுவாள் என்றால், அவள் சொர்கத்திலும் சிறந்த பேறு பெறுவாள் என்றும் பொருள் சொல்கிறார்கள். 


கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இயற்கைக்கு முரண்பாடாகத் தெரிகிறது. 


இந்த ஒரு பெண் (ஆண்)  மேல் மட்டும்தான் நீ அன்பு செலுத்த வேண்டும். வேறு யார் மேலும் அன்பு செலுத்தக் கூடாது என்று ஒருவரைக் கட்டுப் படுத்த முடியுமா? 


சட்டம் போடலாம். ஆனால், அதை அமல் படுத்துவது கடினம். 


"இது ஒரு சிறந்த உணவு. உடம்புக்கு நல்லது. எனவே, வாழ் நாள் பூராவும் இதை மட்டும் தான் மூன்றும் வேளையும் சாப்பிட வேண்டும்" என்று சொன்னால் நடக்குமா? 


சரி, அப்படியே ஒரு நெறிப் படுத்தினாலும், அதில் இன்பம் இருக்குமா? இங்கே இன்பம் இல்லை என்றால் பின் சொர்க்கத்தில் போய் என்ன இன்பம் வரப் போகிறது? 


மனைவி கற்புள்ளவளாக இருப்பது மாதிரி கணவனும் கற்புள்ளவனாக இருந்து விட்டால் இருவருக்கும் சொர்கத்திலும் சிறந்த பெருமை கிடைக்கும் என்று பொருள் கொள்ளலாம். அதில் எதிர் கருத்து ஒன்றும் இருக்காது. 


ஆனால், அதுதான் குறளின் கருத்தா என்று தெரியவில்லை. 


மேலும் உண்மை அறிய விருப்பம் உள்ளவர்கள் தேடிக் கண்டைவார்களாக.





Friday, August 20, 2021

கம்ப இராமாயணம் - ஆயிரம் கோடி துன்பத்தைத் தாங்குவேன்

 கம்ப இராமாயணம் - ஆயிரம் கோடி துன்பத்தைத் தாங்குவேன் 


அசோகவனத்தில் சீதை தனித்து இருக்கிறாள். இராமனை நினைத்து புலம்புகிறாள். 


"அவன் (இராமன்) வராமல் இருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் ஆயிரம் துன்பத்தை நான் தாங்குவேன். என் வலியை தீர்க்க மாட்டாயா. வீரனே. நாராயணனே. தனித்துவம் மிக்க நாயகனே"


என்று இராமனை நினைத்து புலம்புகிறாள். 


பாடல் 



வாராது ஒழியான் எனும் வன்மையினால்

ஓர் ஆயிரம் கோடி இடர்க்கு உடைவேன் :

தீரா ஒரு நாள் வலி; சேவகனே!

நாராயணனே! தனி நாயகனே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_20.html


(please click the above link to continue reading)


வாராது ஒழியான் = வராமல் இருக்க மாட்டான் 


எனும் வன்மையினால் = என்ற தைரியத்தில் 


ஓர் ஆயிரம் கோடி = ஒரு ஆயிரம் கோடி 


இடர்க்கு உடைவேன் : = துன்பங்களைத் தாங்குவேன் 


தீரா ஒரு நாள் வலி = என் வலியை ஒரு நாள் அல்லது மற்றொரு நாள் தீர்ப்பாய் 


சேவகனே! = வீரனே 


நாராயணனே! = நாராயணனே 


தனி நாயகனே! = சிறப்பு மிக்க தலைவனே 


ஓரிரண்டு செய்திகளை பார்ப்போம். 


அது என்ன திடீரென்று நாராயணனே என்று அழைக்கிறாள் என்று நமக்கு கொஞ்சம் தூக்கி வாரிப் போடத்தான் செய்கிறது. 


மும்மூர்த்திகளில் திருமாலின் தொழில் காத்தல். காத்தல் தொழிலை யார் செய்தாலும் அவர்கள் திருமாலின் தொழிலைச் செய்கிறார்கள். அவர்கள் திருமாலின் ஒரு அம்சமாகவே கருதப் படுவார்கள். 


அந்தக் காலத்தில் அரசர்களை "இறைவன்" என்றே குறிப்பிட்டார்கள். ஏன் என்றால் குடிகளை காப்பது அவன் கடமை. இறைமாட்சி என்ற ஒரு அதிகாரமே வைத்தார் வள்ளுவர். 


இராமன், ஒரு அரசன் என்பதால், அவனை நாராயணனே என்று அழைக்கிறாள். 


எவ்வளவு பெரிய துன்பம்! ஜனகனின் மகளாக பிறந்து, தசரதனின் மருமகளாக ஆகி, இராமனின் மனைவி என்று பட்டத்து இராணியாக வேண்டியவள், காடு மேடெலாம் திரிந்து, கடைசியில் யாரோ ஒரு அரக்கன் தூக்கிக் கொண்டு வந்து பலவந்தப் படுத்துகிறான். 


கணவன் எங்கே என்று கூடத் தெரியாது. 


ஆனால், அவளுக்கு ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் இருக்கிறது. இராமன் எப்படியும் வருவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கை இருப்பதால், ஆயிரம் கோடி துன்பம் வந்தாலும் தாங்குவேன் என்கிறாள். 


கணவன் , மனைவியின் மேலும். மனைவி, கணவனின் மேலும் கொண்ட காதல் தான் இல்லறத்தில் வரும் அத்தனை துன்பங்களையும், சவால்களையும் எதிர் கொள்ள உதவும். 


பணம் காசு இருந்தால் எந்த சிக்கலையும் சரி செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.  இராமனிடமும் , சீதையிடமும் இல்லாத செல்வமா. அந்த செல்வம் அவர்கள் துன்பத்தைத் தீர்கவில்லை. அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்புதான் அவர்கள் சந்தித்த துன்பங்களை தாங்கிக் கொள்ள உதவியது.


அதுதான் பாடம். 


படித்துக் கொள்வோம். 

Wednesday, August 18, 2021

திருக்குறள் - பெண்ணுக்குக் காவல்

 திருக்குறள் - பெண்ணுக்குக் காவல் 


கற்பு என்பதை உடல் சார்ந்த விடயமாகவே வைத்துக் கொண்டாலும், அது ஏன் பெண்ணுக்கு மட்டும் பெரிதாகச் சொல்லப் படுகிறது? ஆணுக்கு கற்பு வேண்டும் என்று எந்த இலக்கியமும் கூறவில்லை. 


கோவலன், மாதவியோடு சென்றான் என்றால் அவனை ஒரு கெட்டவனாக சிலப்பதிகாரம் சித்தரிக்கவில்லை. ஏன், அவன் மனைவியே கூட அவனை திட்டவில்லை. 


தசரதனுக்கு பதினாறாயிரம் மனைவிகள் என்றால் கேட்டுவிட்டு சிரித்து விட்டு நகர்ந்து விடுகிறோம். சீ என்று யாரும் சொல்லுவதில்லை. அவன் மகனா இராமன் என்று யாரும் இராமனை கேலி செய்யவில்லை. 


ஆயிரம் உதாரணம் சொல்லலாம். இந்து கடவுள்கள் கூட பலதாரம் மணம் செய்து கொள்கிறார்கள். கேட்டால் ஏதாவது ஒரு கதை சொல்கிறார்கள். ஒன்று இச்சா சக்தி, இன்னொன்று கிரியா சக்தி என்கிறார்கள். நாங்களும் அந்த இரண்டு சக்திகளை வைத்துக் கொள்கிறோம் என்று பக்த கோடிகள் ஆரம்பித்து விட்டால்?


பெண்ணுக்கு கற்பு ஏன் பெரிதாக கூறப்பட்டது என்றால், பெண் கற்பு நிலை பிறழ்ந்தால் குடும்பம் சிதைந்து விடும்.  குடும்பம் சிதைந்தால் சமுதாயமும், நாடும் சிதையும். 


எப்படி. 


ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்து கொள்கிறாள் அல்லது பல ஆண்களிடம் தொடர்பு வைத்து இருந்தால், அவளுக்கு பிறக்கும் பிள்ளைக்கு யார் தகப்பன் என்ற கேள்வி வரும். யாரும் பொறுப்பு எடுக்க மாட்டார்கள். அந்தப் பிள்ளைக்கு படிப்பு, உணவு, உடை, மருத்துவம், நல்லது கெட்டது சொல்வது என்று யாரும் பொறுப்பு எடுக்க மாட்டார்கள். அந்தப் பிள்ளை அனாதை போலத்தான் வளரும். இன்னும் சொல்லப் போனால், தகப்பன் பெயர் தெரியாதவன் என்று பழியோடு வளரும். 


அப்படி வளர்ந்தவன்தான் கர்ணன். அவன் எவ்வளவு சங்கடப்பட்டான் என்று பாரதம் கூறுகிறது. 


இப்படி நாடு பூராவும் தகப்பன் பெயர் தெரியாத பிள்ளைகள் இருந்தால் எப்படி இருக்கும். 


எனவே தான், அதில் ஆழமாகச் செல்லாமல், பெண்ணுக்கு கற்பை பெரிய விடயமாக சொன்னார்கள். 


சரி, பெண் வெளியில் சென்றால் தானே, நாலு பேரிடம் பழகினால் தானே அவள் மனம் சலனப் பட வாய்ப்பு இருக்கிறது? கற்பு நெறி பிறழ வாய்ப்பு இருக்கிறது? எனவே அவளை வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து பூட்டி வைத்து விட்டால் ஒரு குழப்பமும் வராது தானே என்று நினைத்து பெண்ணை பூட்டி வைக்க நினைப்பவர்களைப் பற்றி இங்கே கூறுகிறார். 


"ஒரு பெண், அவளே நினைத்தால் அல்லது அவளை கற்பு நெறியில் நிற்க வைக்க யாராலும் முடியாது. சிறை வைத்தாலும் நடக்காது" என்கிறார். 


பாடல் 


சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_18.html


(please click the above link to continue reading)


சிறைகாக்கும் = சிறையில் வைத்து காக்கும் 


காப்பு = காவல் 


எவன் செய்யும் = யாரால் செய்ய முடியும் 


மகளிர் = பெண்கள் 


நிறைகாக்கும் = கற்பு என்ற என்ற நெறியில் நின்று காக்கும் 


காப்பே தலை = காவலே தலை சிறந்தது 


பெண்கள் கற்பு நெறியில் நிற்க வேண்டும் என்றால் அது அவர்கள் மேல் செலுத்தும் அன்பால் தான் முடியும். மாறாக கணவன், அவனுடைய புகழ், செலவாக்கு, உடல் பலம், இவற்றைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் வள்ளுவர். 


இதுவும் கூட கொஞ்சம் நெருடலான குறள் தான். கற்பு என்று வந்து விட்டாலே கூடவே சச்சரவும் வரத்தான் செய்யும். 


தாண்டிப் போவோம். 


Tuesday, August 17, 2021

நாலடியார் - வருந்தியும் கேட்பர்

 நாலடியார் - வருந்தியும் கேட்பர் 


வீட்டிலோ, அலுவலகத்திலோ நமக்கு வேண்டிய ஒருவர் தவறாக ஒன்றைச் சொல்லி விட்டால் நாம் என்ன செய்வோம்?


உடனே, சுறுசுறுப்பாக அந்தத் தவற்றைச் சுட்டி காட்டுவோம். அப்படி காட்டினால் நமது புத்திசாலித்தனம் வெளிப்படும் என்று நாம் நினைக்கிறோம். 


"வள்ளுவர் சொன்னது தவறு" என்று சொல்லுவதன் மூலம், நாம் வள்ளுவரை விட பெரிய அறிஞர் என்று காட்டிக் கொள்ள முனைவோம். 


அது நாகரிகம் அல்ல. பண்பாடு அல்ல. 


ஒருவர் தவறாக ஒன்றைச் சொல்லி விட்டால், ஒரு சபையில் வைத்து அவனை திருத்தக் கூடாது. படித்தவர்கள், பெரியவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். தனியாக கூப்பிட்டு, அதை சுட்டிக் காட்டுவார்கள். 


"கற்றறிந்தோர் சபையில் ஒரு கல்லாதவன் ஏதாவது உளறினால், அங்குள்ள பெரியவர்கள், கஷ்டப்பட்டாவது அவன் சொல்வதைக் கேட்பார்கள். ஏன் என்றால், அவன் பிழையை சுட்டிக் காட்டினால் அவன் பல பேர் முன்னிலையில் வெட்கப் பட வேண்டி வரும் என்று நினைத்து "



பாடல் 


புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி

கல்லா வொருவ னுரைப்பவுங் - கண்ணோடி|

நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன்

பல்லாரு ணாணல் பரிந்து. 


பொருள் 



(please click the above link to continue reading)


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_17.html


புல்லா = பொருந்தாத, சரி இல்லாத 


வெழுத்திற் = எழுத்தை, 


பொருளில் = பொருள் இல்லாமல் 


வறுங் = வீணாகப் பேசி 


கோட்டி = கற்றறிந்தோர் சபையில் 


கல்லா = கல்வி அறிவு இல்லாத 


வொருவ னுரைப்பவுங்  = ஒருவன் உரைப்பவும் = ஒருவன் சொல்லக் கேட்டும் 


கண்ணோடி| = கருணையினால் 


நல்லார் = நல்லவர்கள் 


வருந்தியுங் கேட்பரே  = துன்பப் பட்டாவது கேட்பார்கள் 


மற்றவன் = அவன் 


பல்லாரு ணாணல் பரிந்து.  = பல பேர் முன் நாணப்படுதலை சிந்தித்து 


ஒருவன் தவறாக ஒன்றைச் சொல்லி விட்டால், சொல்லிவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட வேண்டும். 


முட்டாளோடு வாக்குவாதம் செய்து என்ன ஆகப் போகிறது. 


மேலும், அந்தக் கல்லாதவன் நமக்கு வேண்டியவனாகப் போய் விட்டால், அவனை திருத்தப் போய், அவன் உறவும் முறியும்.


அவன் பலரால் கேலி செய்யப் படுவானே என்று நினைந்து நல்லவவர்கள் வருந்தியும் கேட்பார்களாம். 


நாகரீகத்தின் உச்சம். 


"வருந்தியும் கேட்பர்"  என்ன ஒரு அழகான சொற் கையாளல். 




Monday, August 16, 2021

திருக்குறள் - மனைவி என்பவள் யார்?

 திருக்குறள் - மனைவி என்பவள் யார்? 


ஒரு பெண் திருமணம் செய்து கொண்டால் மனைவி ஆகி விடுவாளா?  இல்லை. 


பிள்ளை பெற்று விட்டால் தாயாகி விடுவாளா? இல்லை. 


மனைவி என்றால் யார் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார். 


அவர் யார் எங்களை சொல்ல என்று நினைப்பவர்கள் மேலே படிக்காமல் வேறு ஏதாவது உயர்ந்த விடயங்களை படிப்பது நல்லது.


"தன்னைக் காத்துக் கொண்டு, பின் தன்னை கொண்ட கணவனையும் காத்து, இருவரின் இல்லறம் பற்றி மற்றவர்கள் புகழ்ந்து பேசும்படி இறுதிவரை கடைப் பிடிப்பவளே பெண் (மனைவி)"


என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_16.html


(Please click the above link to continue reading)


தற்காத்துத் = தன்னை காத்துக் கொண்டு 

தற்கொண்டாற் = தன்னைக் கொண்ட கணவனை 

பேணித் = போற்றி, பாதுகாத்து 

தகைசான்ற = பெருமை அமைந்த 

சொற்காத்துச் = புகழைக் காத்து 

சோர்விலாள் பெண் = சோர்வு இல்லாதவள் பெண் (மனைவி)


கொஞ்சம் ஆழமாக சிந்திப்போம். 


தற்காத்துத் = முதலில் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். பரிமேலழகர் உரையில் "கற்பினின்று வழுவாமல் தன்னைக் காத்துக் கொண்டு" என்று குறிப்பிடுகிறார். சற்று விரிவாகப் பொருள் கொண்டால், தன்னை அனைத்து விதத்திலும் காத்துக் கொண்டு என்று கூறலாம். 


பட்டினி கிடந்து, சரியான உணவை, சரியான நேரத்தில் உண்ணாமல் தியாகச் சுடராக இருக்கச் சொல்லவில்லை. அவள் தன்னைக் காத்துக் கொண்டாள் தான் குடும்பத்தை காக்க முடியும் என்பதால், முதலில் அவள் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். 


அடுத்து, "தற்கொண்டான் பேணி". கணவனை பேண வேண்டும். "உணவு முதலியன கொடுத்து" என்கிறார் பரிமேலழகர். 


அடுத்து, "தகை சான்ற சொற் காத்து". இது மிக மிக முக்கியமான ஒன்று. அவர்கள் இல்லறத்தைப் பற்றி எல்லோரும் புகழ வேண்டும். கணவனோ மனைவியோ தங்களுக்குள் ஏற்படும் மன வேற்றுமைகளை வெளியே சொல்லக் கூடாது. சொன்னால், குடும்பத்தின் பெருமைக்கு கேடு வரும். சொல் என்பது இங்கே புகழ். மாமனார்,மாமியார், கணவன், என்று குடும்பத்தில் உள்ள நபர்களின் குறைகளை வெளியே சொன்னால், குடும்பத்தின் புகழ் குறையும்.


இதோடு நிறுத்தி இருந்தால், வள்ளுவர் பெரிய ஆள் இல்லை. 


அடுத்து ஒரு வார்த்தை சேர்கிறார். 


"சோர்விலாள்".  சோர்வு என்றால் மறதி என்கிறார் பரிமேலழகர்.  இடை விடாமல் கடை பிடிக்க வேண்டும். ஏதோ கொஞ்ச காலம் கடை பிடித்தோம் அப்புறம் விட்டு விட்டோம் என்று இருக்கக் கூடாது. வேலை செய்யும் வரை கணவனுக்கு மரியாதை இருக்கும்...அப்புறம் அவனை தூக்கி ஒரு மூலையில் வைத்து விடுவது என்பது "சோர்வில்" வரும். இறுதிவரை குடும்பத்தின் புகழை நிலை நிறுத்த வேண்டும். 


"அடடா, வீடு என்றால் அது, குடும்பம் என்றால் அது " என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும். 


அப்படி செய்பவள்தான் "பெண்" (மனைவி) என்கிறார். 


அதெல்லாம் இல்லை. எங்கள் மனதுக்குப் பட்டதை நாங்கள் சொல்லுவோம். குடும்ப மானத்தைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கணவனோ, மாமியாரோ யாராக இருந்தாலும், தவறு செய்தால் நாலு பேருக்குத் தெரியும் படி உரக்கச் சொல்வோம் என்று கொடி பிடிப்பவர்களுக்கு அல்ல இந்தக் குறள். 


வள்ளுவர் சொற்களை தேர்ந்து எடுத்துப் போடக் கூடியவர்.


"சோர்விலாள் மனைவி" என்று சொல்லி இருக்கலாம். "சோர்விலாள் பெண்" என்று கூறுகிறார். 


இந்தக் குணம் இல்லாதவளை அவர் பெண் என்ற பட்டியலிலேயே சேர்க்கத் தயாராக இல்லை. தற்கொண்டான் என்று வருவதால், இங்கே பெண் என்பதை மனைவி என்று நாம் புரிந்து கொள்கிறோம். 


இது ஒரு வழிகாட்டி. எங்களுக்கு ஒரு வழி காட்டியும் வேண்டாம், நாங்கள் மனம் போன படி போவோம் என்று செல்பவர்களுக்கு நாம் கை அசைத்து விடை தருவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?



 தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்