Sunday, September 11, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 2

 

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 2 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



உலகில் நிரந்தரமானவை, தோற்றமும், அழிவும் இல்லாதவை மூன்று என்று பார்த்தோம்.  (https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html)


அவை பதி,பசு, பாசம் என்பன. 


பதி - இறைவன். 

பசு - உயிர்கள் 

பாசம் - கயிறு 


ஆச்சரியமான விடயம் என்ன என்றால், உயிர்களை இறைவன் படைக்கவில்லை என்பதுதான். இறைவன் என்று உண்டோ, உயிர்களும் அன்றே உண்டு. 


"என்று நீ அன்று நான்" என்பார் தாயுமானவர். 


உயிர்களை இறைவன் படைக்கவில்லை என்றால், பின் யார் படைத்தார்கள் என்றால், யாரும் படைக்கவில்லை என்பதுதான் பதில். அது என்றும் உள்ளது. சீரணிக்க சற்று கடினம்தான். இப்போதைக்கு அதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

(pl click the above link to continue reading)


இந்த மூன்றில் பதியும், பசுவும் அறிவு உள்ளவை. பாசம் அறிவு இல்லாதது. 


இறைவன் - பேரறிவாளன்

உயிர்கள் - சிற்றறிவு உள்ளவை 


இதுவரை விளங்கி விட்டது அல்லவா? 


இனி அடுத்த கட்டம் நோக்கி நகர்வோம். 


இந்த உயிர்கள், நியாமாகப் பார்த்தால், இறைவனை நோக்கித்தான் நகர வேண்டும். அறிவு, அறிவோடு சேர்வதுதானே இயற்கை. 


மாறாக, இந்த உயிர்கள் இறைவனை விடுத்து பாசத்தில் கட்டுண்டு விடுகின்றன. ஆணவம் என்ற பாசத்தில் கட்டுண்டு விடுகின்றன.நான், எனது என்ற ஆணவத்தில் உயிர்கள் சிக்கி விடுகின்றன. 


சிக்கிவிட்டால் அவற்றால் அதில் இருந்து வெளிவர முடிவதில்லை. அறியாமை என்ற இருளில் மூழ்கிப் போய், திக்கு திசை தெரியாமல் மாட்டிக் கொள்கின்றன. சுற்றிலும் இருட்டு. பாதை எது என்று தெரியவில்லை. எந்தப் பக்கம் அடுத்த அடியை எடுத்து வைப்பது என்று தெரியாமல் திகைத்து உறைந்து போய் நிற்கின்றன. 


இப்படி கொஞ்ச காலம் போன பின்னால், இந்த அறியாமை இருளில் இருந்து வெளிவர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. 


இந்த ஆசைதான் மூல கன்மம் (கர்மம்) என்கிறார்கள். 


கர்மா கொள்கையை படிப்பவர்கள், ஒவ்வொரு காரியமும் ஏதோ ஒரு காரணத்தால் தோன்றுகிறது என்றால் முதன் முதலில் தோன்றிய கர்மம் எதனால் தோன்றியது என்று கேட்பார்கள். அதற்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு, மூல கன்மம் என்பது உயிர்களின் ஆசை. அறியாமையில் இருந்து வெளிப்பட்டு அறிவை அடைய வேண்டும் என்ற ஆசை. அதில் இருந்து வந்ததுதான் எல்லாம். அது ஏன் வந்தது என்று பார்த்தோம். 


சரி, உயிர்களுக்கு ஆசை வந்துவிட்டது. ஆசை மட்டும் போதுமா? எப்படி அதை அடைவது?


அவை தானே வெளிவர முடியாது. 


உயிர்களின் துன்பத்தைக் கண்டு இறைவன் அவற்றின் மேல் இரக்கம் கொண்டு உதவி செய்ய நினைக்கறான். 


அவன் அப்படி செய்ய நினைத்த உதவியின் வெளிப்பாடுதான் இந்த 36 தத்துவங்களும். 


நான் முன்பே சொன்னது போல, இது எல்லாம் நான் அறிந்து, புரிந்து, அனுபவத்தில் தெளிந்து சொல்லவில்லை.இது என்ன என்ற ஆர்வத்தில், நான் வாசித்ததை, ,கேட்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான். இவை நான் கண்டு பிடித்ததோ அல்லது நான் புரிந்து கொண்டதோ அல்ல. 



உங்களுக்கு பல சந்தேகங்கள் வரலாம். உங்கள் தேடலை தொடங்குங்கள். அதுதான் உண்மையான ஞானத்தின் அடிப்படை. 


[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


]


Saturday, September 10, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - உய்த்துவிடும்

 

  திருக்குறள் - அழுக்காறாமை -   உய்த்துவிடும்  


என்ன முயற்சி செய்தாலும், பொறாமை வரத்தானே செய்கிறது. பொறாமை நம்மை கேட்டுக் கொண்டா வருகிறது? அதுபாட்டுக்கு வந்து உட்கார்ந்து கொள்கிறது. என்ன செய்வது? 


பொறாமை வந்து விட்டால் என்ன ஆகும்? அதனால் என்ன தீமை? பொறாமை பட்டு மற்றவர்களைப் போல நானும் முன்னேறுவேன், இல்லையெனில் பொறாமை பட்டுக் கொண்டே இருப்பேன். இதனால் யாருக்கு என்ன நட்டம்? 


வள்ளுவர் சொல்கிறார் 


"நீ பொறாமை கொண்டால் யாருக்கும் ஒரு தீமை விளையுமா இல்லையா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். உனக்கே பெரிய தீமை வருமே. அது பரவாயில்லையா? 


என்ன தீமை தெரியுமா?   


இந்தப் பிறவியில் உன்னிடம் உள்ள செல்வம் அனைத்தையும் அழித்து, பின் மறு பிறவியில் உன்னை நரகத்தில் கொண்டு போய் தள்ளிவிடும்...இம்மைக்கும் மறுமைக்கும் துன்பம் தரும் ஒன்று உனக்குத் தேவையா?" என்று வள்ளுவர் கேட்கிறார். 


பாடல் 


அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்துவிடும்


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_10.html


(Pl click the above link to continue reading) 


அழுக்காறு = பொறாமை 


எனஒரு = என்ற ஒரு 


பாவி = பாவி 


திருச்செற்றுத் = செல்வதை (திரு) அழித்து (செற்று )


தீயுழி = தீயில் 


உய்த்துவிடும் = தள்ளிவிடும் 


தீயில் தள்ளுவது என்றால் இந்தப் பிறவியில் ஏதோ தீயில் தள்ளுவது அல்ல. இறந்த பின், நரகத்தில் உள்ள தீயில் தள்ளிவிடும். 


அது எப்படி செல்வதை அழிக்கும், நரகத்தில் தள்ளும்?


என்னிடம் கொஞ்சம் செல்வம் இருக்கிறது. அதை நான் இன்பமாக அனுபவிக்க முடியும். ஆனால், அடுத்தவனிடம் என்னைவிட அதிகம் செல்வம் இருக்கிறதே என்ற பொறாமை வந்துவிட்டால் என்ன நிகழும்?


அவனை விட அதிகம் சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசை வரும். இருக்கிற பணத்தை செலவழிக்க மனம் வராது. நல்ல வீடு, கார், உடை, குடும்பத்தோடு பயணம், நல்ல உணவு என்று ஒன்றிலும் செலவு செய்ய மனம் வராது. பணம் இருந்தும், பணம் இல்லாத ஏழையைப் போல தரித்திரன் போல இருப்பான். 


இருக்கு,, ஆனால் இல்லை. 


இன்னும் சில பேர் என்ன செய்வார்கள் என்றால், மற்றவனுக்கு நான் ஒன்றும் குறைச்சல் இல்லை என்று காட்ட கடன் வாங்கி செலவழிக்க நினைப்பார்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்கி, பின் வட்டி கட்டியே இருக்கிற செல்வம் அழியும். 


வேறு சிலரோ, இப்படி வேலைக்கு போய் சம்பாதித்தால் காரியம் ஆகாது என்று குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பார்கள். இலஞ்சம் போன்றவற்றில் ஈடுபட்டு, மானம் போய், இருக்கிற வேலையும் போய், செல்வம் எல்லாம் கரைந்து அவதிப் படுவார்கள். 


வேறு சிலரோ, தொழில் தொடங்கினால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று தெரியாத தொழில் இறங்கி நட்டப்பட்டு முதல் இழப்பார்ர்கள். 


இன்னும் கொஞ்சம் பேர், இந்த மாதிரி வங்கிகளில் போட்டு வைத்தால் நிறைய வட்டி கிடைக்காது என்று அதிக வட்டி தரும் நிருவனங்களி ல் பணத்தைப் போட்டு முதல் இழப்பார்கள். 


காரணம் என்ன, மற்றவன் தன்னைவிட அதிகம் சேர்த்து விட்டானே என்ற பொறாமையால் வந்த பதற்றம். 


இருக்கிற பணமும் போகும். "திரு செற்று" 


இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், தவறான வழியில் சென்று பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். சட்டத்துக்கு, நீதிக்கு புறம்பான செயல்களை செய்து பணம் சம்பாதித்து விடலாம். அந்தப் பணத்தைக் கொண்டு தண்டனையில் இருந்தும் தப்பி விடலாம். 


நரகம் என்று  ஒன்று இருக்கிறது. இங்கே தப்பலாம். அங்கே முடியாது என்கிறார் வள்ளுவர். 


பொறாமையால் எவ்வளவு துன்பம். 


தேவையா? 


பொறாமை என்பது ஒரு குணம். ஆனால் வள்ளுவர் "அழுக்காறு எனஒரு பாவி" என்கிறார். பாவி என்றால் ஒரு ஆள். குணம் எப்படி ஆள் ஆக முடியும்?


ஒரு திருடன், கொள்ளைக்காரன், அயோக்கியன் நமக்கு என்னவெல்லாம் தீமை செய்யக் கூடுமோ, அதை எல்லாம் இந்த பொறாமை நமக்குச் செய்யும் என்பதால் பொறாமையை "பாவி" என்று உருவகம் செய்தார். 


ஒரு மோசமான கொள்ளைக்காரன் என்ன செய்வான்? 


நம்மை அடித்து, துன்புறுத்தி, நம் செல்வத்தை எல்லாம் பறித்துக் கொண்டு நம்மையும், நம் குடும்பத்தையும் நடுத் தெருவில் நிறுத்தி விடுவான் அல்லவா? அதையேதான் இந்த பொறாமையும் செய்யும் என்கிறார். 



(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 163: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_22.html


குறள்  எண் 164: அது சாலும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_26.html


குறள்  எண் 165: இன்றிக் கெடும்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_31.html


குறள்  எண் 166: காட்டி விடும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_24.html





)


Thursday, September 8, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நான்றில (3596)

  

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - நான்றில  (3596)


(வெற்றிப் பாசுரத்தின் முந்தைய பாசுரங்கள் பற்றிய பதிவுகள் இந்த பதிவின் முடிவில் இருக்கிறது. அதை வாசிக்க விரும்புபவர்கள் அந்த வலை தலங்களுக்கு சென்று அவற்றை வாசிக்கலாம்). 


எந்த வேலை செய்தாலும் ஏதாவது சப்தம் வரத்தானே செய்யும். நடந்தால் கூட கால் தரையில் பட்டு எழும் போது ஒரு சின்ன சப்தமாவது வரும். பெரிய வேலை என்றால் எவ்வளவு சத்தம் வரும்?


சின்ன பைக், ஸ்கூட்டர் ஓடுவதற்கும் ஒரு இரயில் வண்டி ஓடுவதற்கும் எவ்வளவு சத்தம், ஆட்டம், அதிர்வு எல்லாம் இருக்கிறது? 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


பிரளய காலத்தில், இந்த உலகம் அனைத்தும் நீரில் மூழ்கி விடுமாம். 


உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா என்று பாருங்கள். 


இந்த பூமியின் மேற் பரப்பு மட்டும் அல்ல,  மலைகள், கடல்கள் என்று அனைத்தும் நீரில் மூழ்கி விடுமாம். அப்படி மூழ்கிய இந்த பூமியை, திருமால் பன்றி உருவம் எடுத்து, தன் கோரைப் பற்களால் தூக்கி நிறுத்தினாராம். 


அவர் அப்படி தூக்கி நிறுத்தியது ஒன்றும் பெரிய காரியமாகப் படவில்லை நம்பாழ்வாருக்கு. 


அப்படி தூக்கி நிறுத்திய போது, மலைகளும், கடல்களும், இந்த பூமி பரப்பும் கொஞ்சம் கூட அசையவில்லையாம். அது மட்டும் அல்ல, ஒன்றும் கொஞ்சம் கூட இடம் மாறவில்லையாம். இருந்தது இருந்த படி, அப்படியே ஒரு மாற்றமும் இல்லாமல் கொண்டுவந்தாராம். 


எப்படி முடியும்?


உங்களை ஒரு சின்ன காகிதத்தை எடுத்து, பின் எடுத்த இடத்திலேயே வைக்கச் சொன்னால் எளிதாக செய்து விடுவீர்கள். ஒரு gas cylinder அல்லது grinder போன்ற கனமான சாமானை தூக்கி, பின் அதே இடத்தில் அப்படியே வைக்கச் சொன்னால் முடியுமா? முடியும் என்று ஒரு வாதத்துக்கு சொல்லலாம். எங்கே பீரோவை தூக்கி வையுங்கள், கட்டிலை தூக்கி வையுங்கள் என்றால் முடியுமா? 


சைக்கிளை தூக்கி வைக்க முடியும். காரை தூக்கி வைக்கச் சொன்னால் முடியுமா? 


இந்த பூமியை அப்படியே தூக்கி, கொஞ்சம் கூட ஒரு சின்ன அதிர்வு கூட இல்லாமல், ஆடாமல் அசையாமல் வைப்பது என்றால் எவ்வளவு பலம் வேண்டும்? சக்தி வேண்டும்?



பாடல் 


நான்றில வேழ்மண்ணும் தானத்த, வே,பின்னும்

நான்றில வேழ்மலை தானத்த வே,பின்னும்

நான்றில வேழ்கடல் தானத்த வே,அப்பன்

ஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


(pl click the above link to continue reading)


நான்றில = நகரவில்லை 


வேழ்மண்ணும் = ஏழ் உலகும் 


தானத்தவே, = தாங்கள் இருந்த இடத்தில் அப்படியே இருந்தன 


பின்னும் = மேலும் 


நான்றில = நகரவில்லை 


வேழ்மலை  = ஏழு மலைகளும் 


தானத்தவே = தாங்கள் இருந்த இடத்தில் அப்படியே இருந்தன 


பின்னும் = மேலும் 


நான்றில = நகரவில்லை 


வேழ்கடல் = ஏழு கடலும் 


தானத்தவே  = தாங்கள் இருந்த இடத்தில் அப்படியே இருந்தன 


அப்பன் = என் அப்பன் திருமால் 


ஊன்றி = காலை ஊன்றி 


யிடந் = கிண்டி எடுத்து 


தெயிற் றில் = பற்கள் மேல் 


கொண்ட நாளே. = தூக்கி வந்த அந்த நாளில் 


நாம் ஒரு வேலையை செய்ய எப்போது தயங்குவோம்? 


அந்த வேலையை நம்மால் செய்து முடிக்க முடியுமா என்ற சந்தேகம் வரும் போது. அந்த வேலையை செய்து முடிக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறதா என்ற சந்தேகம் வரும் போது. 


என் தந்தை எவ்வளவு பெரிய பலசாலி. அவர் பிள்ளை நான், அதில் கொஞ்சம் பலமாவது என்னிடம் இருக்காதா? ஒரு வேளை என்னால் முடியாவிட்டால், அவர் உதவி செய்ய மாட்டாரா? பிள்ளைக்காக இந்த பெற்றோர் உதவி செய்யாமல் இருப்பார்கள்?


எனவே, எந்த வேலையைக் கண்டும் மயங்க வேண்டாம். உங்களால் கண்டிப்பாக செய்து வெற்றி பெற முடியும் என்று உற்சாகம் தருகிறார் நம்மாழ்வார். 




(முந்தைய பதிவுகள்

பாசுரம் 1 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 2 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html



)


Wednesday, September 7, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 1

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 1 


நவீன அறிவியல் எது அனைத்துக்கும் அடிப்படை என்று தேடத் தொடங்கியது. பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது என்று கண்டு கொண்டது. அணுக்கள் எதனால் ஆனது என்று ஆராய்ந்தபோது அவை ப்ரோடான் , நியுட்ரான், எலெக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனது என்று அறிந்து கொண்டது. சரி, இந்த துகள்கள் எதனால் ஆனது என்று தேடிய போது பாசிட்றான், போசான், quark போன்ற துகள்களால் ஆனது என்று கண்டு கொண்டது. 


இப்போது நமக்கு இருக்கும் கருவிகளின் துணை கொண்டு இந்த அளவுக்குத்தான் போக முடிந்தது. இன்னும் பெரிய கருவிகள் வந்தால், இந்த தேடல் இன்னும் தொடரும். 


அறிவியல் எது அடிப்படை என்று ஆராய்ந்த போது, மெய்யியல் எது நிரந்தரமானது, அழிவற்றது என்று ஆராய முற்பட்டது. 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

(pl click the above link to continue reading)



பொருள்கள், உயிர்கள் எல்லாம் தோன்றுகின்றன, இருக்கின்றன, பின் மறைந்து விடுகின்றன.இப்படி அல்லாமல்,ஏதாவது ஒன்று தோன்றாமலும், அழியாமலும் இருக்குமா என்று கேள்வி கேட்டுக் கொண்டு அதைக் காண புறப்பட்டது. 


தோன்றியது எல்லாம் அழியும். அப்படி என்றால்,ஒன்று அழியாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் அது தோன்றவும் கூடாது. தோற்றம் இருந்தால் அழிவு இருக்கும். தோன்றாமல் எப்போதும் இருப்பது எது என்று ஆராய்ச்சியை தொடங்கியது. 


அப்படி ஆராய்ந்ததில் தோற்றம் இல்லாத பொருள்கள் மூன்று என்று கண்டு சொன்னது. 


அவற்றிற்கு தோற்றம் இல்லாததால், அவற்றிற்கு அழிவும் இல்லை என்று தெரிந்து கொண்டது. 


அவை எவை?


பதி, பசு, பாசம்.


இந்த மூன்றும் ஆதி அற்றவை.அ-ஆதி= அநாதி.


என்றும் உள்ள பொருள்கள் இந்த மூன்றும்.


அது என்ன பதி, பசு, பாசம் ? 


அவற்றிற்கு உள்ள தொடர்பு என்ன? இவை எப்படி செயல் படுகின்றன என்பதை எல்லாம் ஆராய்ந்து மொத்தம் 36 தத்துவங்களில் அவற்றை தொகுத்தார்கள். 


இதில் சிலவற்றை நாம் சோதித்து அறிந்து கொள்ள முடியும்.  சில தத்துவங்கள் சிந்தனைக்கும், சோதனைக்கும் அப்பாற்பட்டவை. 


இவை எல்லாம் சரி என்று நான் சொல்ல வரவில்லை. 


சரியோ, தவறோ, உண்மையோ, பொய்யோ, நம்புவதோ அல்லது நம்பாமல் விடுவதோ உங்கள் விருப்பம். 


அவை என்ன என்று சொல்லி விடுகிறேன்.  பின் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 


மேலும் 


இந்த மெய்யியல் என்பது மிக பரந்துபட்டது. ஒரு சில பதிவுகளில் அனைத்தையும் சொல்லி விட முடியாது. ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் தேடலை தொடரலாம்.


மூன்றாவது, இவற்றைச் சொல்வதன் மூலம், ஏதோ எனக்கு இதெல்லாம் தெரியும் என்று நான் சொல்லவரவில்லை. படித்ததை, கேட்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இவை நான் கண்டு பிடித்தவை அல்ல. எனக்கு இவை முழுவதுமாக புரியவும் இல்லை. 


ஒவ்வொரு தத்துவத்தையும் நீங்கள் வலை தளங்களில் மேலும் விரிவாக ஆராயலாம். படிக்கப் படிக்க விரிந்து கொண்டே போகும். அவ்வளவு ஆழமும், அகலும், நுண்மையும் கொண்டவை. 


இனி இந்த மெய்யியலின் ஒரு பகுதியான 3 6 தத்துவங்களுள் நுழைவோம். 



Sunday, September 4, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - காட்டி விடும்

  திருக்குறள் - அழுக்காறாமை -  காட்டி விடும் 



நம் வீட்டுக்கு ஒரு விருந்தினர் வந்து இருக்கிறார். சில நாள் தங்கிப் போகலாம் என்று வந்திருக்கிறார். வந்த புதிதில் நாமும் அவரோடு இன்பமாகத்தான் இருந்தோம். பின், நாம் அவரைக் கண்டு கொள்வதே இல்லை. அவரை மதிப்பதும் இல்லை. அப்படிச் செய்தால் அவருக்கு கோபம் வருமா ? வராதா? அவர் மேற்கொண்டு நம் வீட்டில் தங்குவாரா? வீட்டை விட்டு போவது மட்டும் அல்ல, திரும்பி வரவும் மாட்டார் அல்லவா? 


ஒரு சாதாரண மனித விருந்தினருக்கே அப்படி என்றால், திருமகள் நம் வீட்டில் வந்து இருக்கிறாள் என்றால் நாம் அவளை எப்படிக் கொண்டாட வேண்டும்? தினமும் அவளை கவனிக்க வேண்டும், அவள் இருப்பதால் நாம் மகிழ்வோடு இருக்கிறோம் என்று அவளுக்கு காட்ட வேண்டாமா? 


மாறாக, என்ன வந்தாலும் பத்தாது என்று மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டிருந்தால்? நமக்கு இருப்பதைவிட மற்றவனுக்கு நிறைய இருக்கிறதே என்று பொறாமைப் பட்டுக் கொண்டு இருந்தால் அவளுக்கு எப்படி இருக்கும்?


நாம் இருப்பதில் இவனுக்கு சந்தோஷம் இல்லை போல என்று நினைத்துக் கொண்டு, சரி நம்மை எங்கே வரவேற்கிரார்களோ அங்கே போவோம் என்று கிளம்பி விடுவாளாம். அது மட்டும் அல்ல, தன் அக்காவானா மூதேவியை கூப்பிட்டு "அக்கா நீ இருக்க வேன்ன்டிய இடம் இது" என்று அவளுக்கு அந்த வீட்டை காட்டி விட்டுப் போவாளாம். 


பாடல் 


அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_24.html



(Pl click the above link to continue reading)



அவ்வித்து = வஞ்சனையால், சூழ்ச்சியால் 


அழுக்காறு = பொறாமை 


உடையானைச் = உடையவனை 


செய்யவள் = திருமகள் 


தவ்வையைக் = தமக்கையை (மூதேவியை) 


காட்டி விடும் = இடம் காட்டிவிட்டு, தான் விலகிப் போய் விடுவாள் 


எனவே,


எவ்வளவு செல்வம் இருக்கிறதோ, அதை எண்ணி மகிழ வேண்டும் அதைப் போற்ற வேண்டும். அதை மற்றவர்களோடு முடிந்தவரை பகிர்ந்து கொள்ள வேண்டும். 


மாறாக, பத்தவில்லை, போதவில்லை, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும், அவனுக்கு கிடைத்துவிட்டது, எனக்கு கிடைக்கவில்லை என்று எந்நேரமும் கவலையும் பொறாமையும் இருந்தால், திருமகள் நாம் இருந்தும் ஒரு பயனும் இல்லை என்று கிளம்பி விடுவாள் 


என்கிறார் வள்ளுவர். 





(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 163: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_22.html


குறள்  எண் 164: அது சாலும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_26.html


குறள்  எண் 165: இன்றிக் கெடும்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_31.html



)


கந்தரனுபூதி - மெய்யியல்

        

 கந்தரனுபூதி -  மெய்யியல்


பக்தி இலக்கியம் என்றால் பொதுவாக இறை நம்பிக்கை, இறைவன் எப்படி இருப்பான், அவனுடைய தோற்றம் எப்படி இருக்கும், அவனுடைய ஆற்றல், அவன் செயல்பாடுகள், அவனை துதிப்பது, அவன் பக்தர்களோடு சேர்ந்து இருப்பது என்றுதான் பெரும்பாலும் அறியப் படுகிறது. 

இவற்றால் என்ன பயன்? கடவுள் என்ன மாதிரி உடை உடுப்பார், என்ன ஆயுதம் வைத்து இருப்பார், எதன் மேல் ஏறிப் போவார், அவரின் குடும்ப நிலை இதெல்லாம் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? அவை எல்லாம் முதலில் உண்மையா என்றே கூடத் தெரியாது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


இதைத் தவிர சமயத்தில், பக்தி இலக்கியத்தில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது. 



மெய்யியல் என்ற மிகப் பெரிய பிரிவு இருக்கிறது. 



நாம் இன்று படிக்கும் அறிவியலுக்கு முந்தைய நிலை அது. 



மெய்யியல் என்பது உண்மைகள் கண்டு அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படி விளக்கி , அதை நிரூபணம் செய்வது. 



இறைவன் யார், உயிர்கள் எப்படி வந்தன, இறைவனுக்கும் உயிர்களுக்கும் என்ன சம்பந்தம், இந்த உலகம் எப்படி வந்தது, அது எதனால் ஆனது, அதை யார் உருவாக்கினார்கள், எப்படி உருவாக்கினார்கள், ஏன் இத்தனை கடவுள்கள், இதில் யார் உயர்ந்தவர், வாழ்வின் நோக்கம் என்ன, அறிவு என்றால் என்ன, நாம் எப்படி சிந்திக்கிறோம், நான் என்றால் என்ன, என்பது பற்றி மிக மிக ஆழமாக விவரிக்கும் இயல், மெய்யியல்.



(Pl click the above link to continue reading) 





மெய்யியலின் வெளிப்பாடு தத்துவங்கள் எனப்படும். தத்துவங்கள்  எல்லோருக்கும் பொதுவானவை. எல்லா காலத்துக்கும் பொதுவானது. 


நம் பக்தி இலக்கியத்தின் அடிப்படை இந்த மெய்யியல். மெய்யியலைப் படித்தால் அதன் வெளிப்பாடு நம் பக்தி இலக்கியத்தில் இருப்பதைக் காணலாம். 


பாவம், புண்ணியம், மறு பிறவி, வீடு பேறு, முக்தி என்பதெல்லாம் இந்த மெய்யியலில் இருந்து வருபவை. 


சரி, அதற்கும், கந்தரனுபூதிக்கும் என்ன சம்பந்தம்? 


இருக்கிறதே. 


அடுத்த பாடலில், அருணகிரிநாதர் போகிற போக்கில் இரண்டு வார்த்தைகளை சொல்லி விட்டுப் போய் விட்டார். அது புரிய வேண்டும் என்றால், அடிப்படை மெய்யியல் தெரிந்து கொள்ள வேண்டும். 


இனி வரும் பாடல்களிலும் இந்த மெய்யியல் தத்துவங்கள் அடிக்கடி வரும். 


எனவே, இந்த இடத்தில் நிறுத்தி அதைப் புரிந்து கொள்வோம். 


மொத்தம் 36 தத்துவங்கள் இருக்கின்றன. 


எனக்கு என்ன சங்கடம் என்றால், இதை சொல்ல நினைத்தால் மிக நீண்டு விடுமோ என்ற பயம். யாரும் படிக்க மாட்டார்களோ என்ற  ஐயம் உண்டு. 


சும்மா, அப்படியே மேலோட்டமாக சொல்லுக்கு அர்த்தம் சொல்லிவிட்டுப் போய் விடலாமா என்றும் தோன்றுகிறது. 


இன்னொரு பக்கம், மெய்யியல் பற்றி ஒரு முன்னுரை தந்தால் ஆர்வம் உள்ளவர்கள் மேலும் தேடி படித்து பயன் பெறுவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. 


என்ன செய்யலாம்?



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


)


 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


4. வளை பட்ட கை - பாகம் 1, 2, & 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_24.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/3.html



)


Saturday, September 3, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஒலிகள்

 

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஒலிகள் 


(வெற்றிப் பாசுரத்தின் முந்தைய பாசுரங்கள் பற்றிய பதிவுகள் இந்த பதிவின் முடிவில் இருக்கிறது. அதை வாசிக்க விரும்புபவர்கள் அந்த வலை தலங்களுக்கு சென்று அவற்றை வாசிக்கலாம்). 


தமிழிலே ஓதம் என்று ஒரு சொல் இருக்கிறது. கடற்கரை ஓரம் உள்ளவர்கள் இந்த வார்த்தையை அடிக்கடி கேட்டு இருப்பார்கள். 


மழை நீர் ஆற்றின் வழியாக ஓடி கடலில் சேரும். அம்மாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் கடல் நீர் பொங்கும். நீர் மட்டம் உயரும். அப்போது, கடல் நீர் ஆற்று நீரை எதிர்த்துச் செல்லும். அதாவது கடல் நீர் மலை நோக்கிச் செல்லும். 


ஒரு பக்கம் மலையில் இருந்து வரும் நீர் கடல் நோக்கி வரும். இன்னொரு புறம் அதை எதிர்த்து கடல் நீர் மலை நோக்கிச் செல்லும். இரண்டு நீரும் ஆற்றில் கலந்து, சுழித்துக் கொண்டு பெரும் ஓசை எழும். 


இதை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். 


இப்போதஅடுத்த பாசுரதுக்குள் போவோம். 


அமுதம் வேண்டி அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மேரு மலையை நட்டு, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு, ஒரு புறம் தேவர்கள், மறு புறம் அசுரர்கள். 


கடல் நீர் கலங்கும் அல்லவா? கடலைக் கடைந்தால் எவ்வளவு சத்தம் வரும். நம் வீட்டில் ஒரு சிறு பாத்திரத்தில் தயிரைக் கடைந்தாலே எத்தனை சப்தம் வருகிறது. ஒரு mixie , grinder போட்டால் எவ்வளவு சத்தம் வருகிறது. கடலைக் கடைந்தால் எவ்வளவு சத்தம் வரும்.  அது ஒரு சத்தம். 


அந்த கடல் நீர் சுழித்துக் கொண்டு ஆறுகளில் எதிர்த்து ஓடி மலை நோக்கிச் செல்லும் அல்லவா. இரண்டு நீரும் ஒன்றோடு ஒன்று மோதி அதனால் உண்டாகும் ஒலி. அது இரண்டாவது ஒலி. 


மலையை கடலுக்குள் நிறுத்தி கடைந்தால், அந்த மலையும் நீரும் உரசும் ஒலி. அது மூன்றாவது ஒலி. 


அப்படி கடையும் போது கடல் நீர் வலம் இடமாக சுழலும் போது உண்டாகும் ஒலி. இது நான்காவது ஒலி. 


இத்தனை ஒலியும் ஒரு சேர எழுந்ததாம்....எப்போது தெரியுமா?


"என் அப்பன் தேவர்கள் மகிழ அமுதத்தை அவர்களுக்கு வழங்கிய போது" என்கிறார் நம்மாழ்வார். 



பாடல் 


ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர


வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்


மாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன்


சாறு படவமு தங்கொண்ட நான்றே.



கொஞ்சம் சீர் பிரிப்போம் 


ஆறு மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி 


அர ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி 


கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி 


அப்பன் சாறுபட அமுதம் கொண்ட நான்றே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html

(pl click the above link to continue reading)



ஆறு = ஆற்று நீர் 


மலைக்கு = மலையை நோக்கி 


எதிர்த்து ஓடும் ஒலி  = எதிர்த்து ஓடும் ஒலி 


அர = அரவு என்றால் பாம்பு. வாசுகி என்ற பாம்பு 


ஊறு = துன்பம், வலியால் 


சுலாய் = சுழன்று 


மலை தேய்க்கும் ஒலி = மலை (மேரு மலை) தேயும் ஒலி 


கடல் மாறு சுழன்று  = கடல் (பாற்கடல்) மாறி மாறி சுழன்று 


அழைக்கின்ற ஒலி  = எழுப்புகின்ற ஒலி 


அப்பன் = எனது தந்தை (திருமால்) 


சாறுபட = (தேவர்கள்) மகிழும்படி


 அமுதம் கொண்ட நான்றே. = அமுதத்தை வழங்கிய நாளில் 


பாற்கடல் என்று ஒன்று உள்ளதா? வாசுகி, மேரு மலை இதெல்லாம் உண்மையா? கடலை கடைய முடியுமா ? அமுதம் என்பது உண்மையா ?


என்ற கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும். 


கற்பனை செய்து பார்க்கலாமே?


எவ்வளவு பிரமாண்டம்.  இத்தனையையும் ஒருவன் மேற் பார்வை செய்து, அமுதத்தை எடுத்து கொடுப்பது என்றால் எவ்வளவு பெரிய வேலை? அதை வெற்றிகரமாக ஒருவன் செய்து முடித்தான் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். 


இப்போது உங்கள் வாழ்வில் உள்ள சவால்களை, பிரச்சனகைளை, சிக்கல்களை பாருங்கள். "ஹா...இதெல்லாம் ஒரு பெரிய வேலையா..." என்று தோன்றும். செய்து முடித்து விடலாம் என்று தோன்றும். நம் பிரச்னை ஒன்று பெரிது அல்ல என்று தோன்றும். 


இல்லை என்றால் நாம் ஒரு சின்ன பிரச்சனையை எடுத்து வைத்துக் கொண்டு, "ஐயோ, எனக்கு இப்படி ஒரு பிரச்னை வந்து விட்டதே, என்ன செய்வேன்" என்று களைத்துப் போவோம். கற்பனை விரிய விரிய, மனம் விரியும். மனம் விரியும் போது, அறிவு விரியும். 


பிரச்சனைகளின் பெரிது, சிறிது தன்மை புரியும். அவற்றைக் கையாளும் மனப் பக்குவம் வரும். தெம்பும் உற்சாகமும் வரும்.  வெற்றி தானே வரும். 


இது போன்ற பாசுரங்களை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். ஒரு முறை படித்துவிட்டு, "நல்லா இருக்கு" என்று சொல்லிவிட்டு "அடுத்த பாசுரம் எப்போது வரும்" என்று கேட்க்கக் கூடாது. 


சரியா?








(முந்தைய பதிவுகள்

பாசுரம் 1 - ஆழி எழ 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


)