Monday, December 11, 2023

இனியவை நாற்பது - அலையாமை இனிது

 இனியவை நாற்பது - அலையாமை இனிது 


நாம் ஒரு இக்கட்டில் இருக்கிறோம். நமக்கு ஒரு உதவி தேவைப் படுகிறது. அதை செய்யும் நிலையில் ஒரு நட்போ உறவோ இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர்களாகவே முன் வந்து செய்திருக்கலாம். செய்யவில்லை. நாம் கேட்கிறோம். அப்போதும் செய்யவில்லை. ஒன்றுக்கு பல முறை கேட்டபின் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 


அப்படி, செய்யமாட்டேன் என்று இருப்பவரை, மீண்டும் மீண்டும் சென்று கேட்பதை விட கேட்காமலே இருப்பது இனிமையானது.


அடுத்ததாக,


இந்த உடல் நிலையானது அல்ல. மரணம் என்றோ ஒரு நாள் கட்டாயம் வரும். அது என்று என்று தெரியாது. அப்புறம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமால் நல்ல காரியங்களை உடனடியாக செய்து விடுவது நல்லது. 


அடுத்தது, 


எவ்வளவு துன்பம் வந்தாலும், அறம் அற்ற செய்யலகளை செய்யாமல் இருப்பது நல்லது. 


பாடல் 


ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே

கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே

ஆக்க மழியினும் அல்லவை கூறாத

தேர்ச்சியின் தேர்வினியது இல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_11.html


(please click the above link to continue reading)


ஆற்றானை = செய்யாதவனை (ஆற்றுதல் = செயல் ஆற்றுதல் ) 


யாற்றென் றலையாமை = செய் என்று அவன் பின்னே அலையாமை (ஆற்று என்று அலையாமை என்று சீர் பிரித்துக் கொள்ள வேண்டும்) 


முன்இனிதே = மிக இனிதானது 


கூற்றம் = காலன், எமன் 


வரவுண்மை = வருகின்ற உண்மை 


சிந்தித்து = அறிந்து கொண்டு 


வாழ்வினிதே = வாழ்வது இனிது 


ஆக்க மழியினும் = சேர்த்து வைத்த அனைத்தும் அழிந்து போகும் என்றாலும் 


அல்லவை = அறம் அல்லாதவற்றை 


கூறாத = சொல்லாத 


தேர்ச்சியின் தேர்வினியது இல் = தெளிந்த தேர்வு செய்வது போன்றது ஒன்று இல்லை 


என்ன ஒழுக்கமாக இருந்து கண்ட பலன் என்ன?  அயோக்கியத்தனம் செய்கிறவன் எல்லாம் மேலே மேலே போய்க் கொண்டு இருக்கிறான். இந்த நீதி, நேர்மை என்று இவற்றைக் கட்டிக் கொண்டு கண்ட பலன் என்ன என்று மனம் தடுமாறாமல், அற வழியில் நிற்கும் நேர்மை நல்லது. இதுதான் சரி என்று தெளிவான சிந்தனையோடு, குழப்பம் இல்லாமல் அற வழியை தேர்ந்து எடுப்பது நல்லது. 


இனியவை நாற்பது என்ற நூலில் இருந்து இந்தப் பாடல். இப்படி நாற்பது பாடல்கள் இருக்கின்றன. 



Friday, December 8, 2023

திருக்குறள் - வாழ்க்கை என்றால் என்ன ?

 திருக்குறள் -  வாழ்க்கை என்றால் என்ன ?


வாழ்க்கை என்றால் என்ன? 


எப்படி வாழ வேண்டும்?  


பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று போவது ஒரு வாழ்க்கையா?  ஒருவன் வாழ்ந்தான் என்று சொல்ல வைப்பது எது?  எத்தனையோ பேர் பிறந்து, உண்டு, உறங்கி, பின் வந்தது தெரியாமல் இறந்து போகிறார்கள். அது ஒரு வாழ்க்கையா?


வாழ்கின்ற காலத்தில் ஏதாவது செய்திருப்பானே? ஒன்றுமே செய்யாமல் ஒருவன் எப்படி இருக்க முடியும்?  அப்படி என்னதான் செய்தான் என்ற கேள்வி வரும் அல்லவா?


செய்யும் வேலையை சிறப்பாக செய்து இருந்தால் அவனுக்கு ஒரு பேர் கிடைத்திருக்கும். அதனால் ஒரு புகழ் உண்டாகி இருக்கும். அவனுக்குப் பின்னும், அவன் பேரை மக்கள் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். அப்படி வாழ்வது ஒரு நல்ல வாழ்க்கை. 


அவனா, அப்படி ஒருவன் இருந்தானா? என்று ஒரு அடையாளமே இல்லாமல் புழு பூச்சி போல் தோன்றி மறைவது ஒரு நல்ல வாழ்க்கையா?


வள்ளுவர் சொல்கிறார், 


"மற்றவர்கள் இகழாதபடி வாழ்பவர்களே வாழ்ந்தவர்கள் என்று  கருதப்படுவார்கள். புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் , வாழாதவர்களே"


என்று


பாடல் 



வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய

வாழ்வாரே வாழா தவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_8.html


(please click the above link to continue reading)



வசையொழிய = பிறர் இகழாதபடி 


வாழ்வாரே  = வாழ்பவரே 


வாழ்வார் = வாழ்கின்றவர் ஆவார் 


இசைஒழிய = புகழ் இல்லாமல் 


வாழ்வாரே = வாழ்பவர்கள் 


வாழா தவர் = வாழாதவர்களாகவே கொள்ளப்படுவர். 


அதாவது புகழ் இல்லாவிட்டால் இகழ்.


எனவே, புகழோடு வாழ்ந்தால், வாழ்ந்ததாகக் கருதப்படுவர்.


இகழோடு வாழ்ந்தால், அவர்கள் வாழாதவர்களாகவே கருதப்படுவர். 


புகழ் அடையும்படி வாழவேண்டும். இல்லை என்றால் நடைபிணம் தான். 


புகழ் அடைவது என்றால் சாதாரண காரியமா?


என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், இதில் யார் எவ்வளவு சிறப்பாக செய்து புகழ் அடைந்து இருக்கிறார்கள், அவர்களை விட நாம் எப்படி சிறப்பாக செய்வது என்று எண்ணி, திட்டம் போட்டு,  காரியம் செய்ய வேண்டும். 


ஒரு நாட்டில், ஒவ்வொரு குடிமகனும் இப்படி முயற்சி செய்தால், அந்த நாடு எந்த அளவுக்கு முன்னேறும்?


ஒவ்வொரு தனிமனிதனும், தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் புகழ் பெற முயல வேண்டும். 




Thursday, December 7, 2023

அறநெறிச்சாரம் - அறவுரைக்கு தேவையான நான்கு

 அறநெறிச்சாரம் - அறவுரைக்கு தேவையான நான்கு 


எந்த ஒன்றையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அது எதனால் ஆக்கப்பட்டது என்று அறிய வேண்டும். ஒரு பொருள் என்றால் அது பல சிறிய பொருள்களின் தொகுப்பு. அந்த சிறிய பொருள்கள் அதனினும் சிறிய பொருள்களின் தொகுப்பு. இப்படி பகுத்துக் கொண்டே போனால், உலகில் உள்ள அத்தனை பொருள்களும் அடிப்படையில் சில மிக நுண்ணிய துகள்களின் தொகுப்பு என்று அறிய முடியும். அந்தத் துகள்களின் தொகுப்புதான் உலகம். 


பிரித்தால்தான் ஆராய முடியும். 


தமிழர்கள் எதையும் சரியான படி பிரித்து, அந்தப் பிரிவுகளின் தன்மைகளை ஆராய்ந்து இருக்கிறார்கள். 


வாழ்வின் நோக்கம் - அறம், பொருள், இன்பம், வீடு என்ற பிரிவுகளை உடையது. 


தமிழ் - இயல், இசை, நாடகம் என்ற பிரிவுகளை உடையது. 


வாழ்க்கை - அகம், புறம் 


அறம் - இல்லறம், துறவறம் 


சுவை - ஆறு சுவை


இசை - ஏழு ஸ்வரங்கள் 


நிலம் - ஐந்து பிரிவு 



இப்படி சரியான படி பிரித்தால், எதையும் நன்றாக புரிந்து கொள்ள முடியும் 


அறத்தின் பிரிவுகள் என்ன ?


அறத்திற்கு நான்கு கூறுகள் என்கிறது அறநெறிச்சாரம். 


அறத்தை சொல்பவன், அதைக் கேட்பவன், சொல்லப்படும் உரை, அதனால் வரும் பயன். 


இந்த நான்கும் அறத்தின் கூறுகள். 


இந்த நான்கிலும், நல்லது, கெட்டது இருக்கும். நல்லவற்றை எடுத்துக் கொண்டு, மற்றவற்றை தள்ளிவிட வேண்டும். 


பாடல் 



உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவ

  துரைத்தனா லாய பயனும் - புரைப்பின்றி

  நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்

  வான்மையின் மிக்கார் வழக்கு.


பொருள் 




(please click the above link to continue reading)


உரைப்பவன் = அறத்தை போதிப்பவன் 


கேட்பான் = அதைக் கேட்கும் மாணவன் 


உரைக்கப் படுவது = சொல்லப்பட்ட அறம் 

 

உரைத்தனா லாய பயனும் = அந்த அறத்தினால் உண்டாகும் பயன் 


புரைப்பின்றி = குற்றம் இன்றி 


நான்மையும் = இந்த நான்கிலும் 


போலியை நீக்கி = நல்லன அல்லாதவற்றை நீக்கி 


அவைநாட்டல் = நல்லதை நிலை நிறுத்துதல் 


வான்மையின் மிக்கார் வழக்கு = ஒழுக்கத்தில் சிறந்தோரது இயல்பு 


அறம் என்பது பயன் நோக்கியது என்று புரிந்து கொள்ள வேண்டும். பலன் இல்லாமல் அறம் செய்வதில் அர்த்தம் இல்லை. 


அறம் சில சமயம் காலத்தோடு ஒன்றாமல் போகலாம். என்றோ சொன்ன அறத்தை காலகாலத்துக்கும் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டிய அவசியம் இல்லை. 


சொல்பவன், கேட்பவன், சொல்லப்படும் அறம், பலன்  - இந்த நான்கிலும் குற்றம் வரலாம் என்கிறது. 


அறத்தில் எப்படி குற்றம் வர முடியும் ?


குறை என்றால், காலத்தோடு ஒவ்வாத அறங்கள். பெண்ணைக் கொல்வது என்பது அறம் அற்ற செயல். இராமன், தாடகை என்ற பெண்ணைக் கொன்றான். அது அறம் வழுவிய செயலா?  தாடகை என்பவள் பெண் உருவில் இருந்தாளே அன்றி பெண்ணின் குணங்கள் இல்லாதவள். அங்கே அறத்தை கொஞ்சம் விரித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. 


குழந்தைத் திருமணம், உடன் கட்டை ஏறுதல் போன்றவை ஒரு காலத்தில் அறம் எனக் கருதப்பட்டது. அதை இப்போது கடைபிடித்தால் அது குற்றம். காலத்தோடு மாற வேண்டும். 


இந்த சொல்பவன், கேட்பவன் இவற்றில் என்ன குற்றம் வந்து விடும்?


பின்னால் அவற்றை விளக்குகிறது இந்த நூல். 


மேலும் சிந்திப்போம். 


 


Wednesday, December 6, 2023

திருக்குறள் - விளைச்சல் நன்றாக இருக்காது

திருக்குறள் - விளைச்சல் நன்றாக இருக்காது 


ஒரு நாட்டில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் துறையில் சிறப்பாக செயல்பட்டு புகழ் உடையவர்களாக இருந்தால் அந்த நாடு எப்படி இருக்கும்?


மாறாக

ஏதோ சொன்ன வேலையை செய்வோம், வர்றது வரட்டும் என்று எல்லோரும் ஏனோ தானோ என்று வேளை செய்தால் எப்படி இருக்கும்?


வள்ளுவர் சொல்கிறார், புகழ் இல்லாதவர்கள் வாழும் நாட்டில், நிலத்தில் நல்ல விளைச்சல் இருக்காது என்று. 


பாடல் 

 

வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_6.html


(pl click the above link to continue reading)


வசைஇலா = குற்றம் இல்லாத 


வண் = செழிப்பான, வளமையான 


பயன் = விளைச்சல் 


குன்றும் = குறையும், எப்போது என்றால் 


இசையிலா = புகழ் இல்லாத 


யாக்கை = உடம்பை 


பொறுத்த நிலம் = பொறுத்து தாங்கி கொண்டிருக்கும் நிலம் 


அது எப்படி, புகழ் இல்லாதவர்களை சுமந்த நிலம் குறைந்த விளைச்சல் தரும் ? புகழுக்கும், விளைச்சலுக்கும் என்ன சம்பந்தம் வள்ளுவர் சார் ?


"பயன்" என்ற சொல்லுக்கு விளைச்சல், உற்பத்தி, என்று கொள்ளலாம். புகழ் விரும்பி இருப்பவர்கள், புகழ் பெறவும், பெற்ற புகழை தக்க வைத்துக் கொள்ளவும் சிறப்பாக செயல்படுவார்கள்.  அப்படி அவர்கள் செயல்படும் போது, அந்த செயல்களின் விளைவு உற்பத்தியை மேலும் பெருக்கும் என்பது கருத்து. 


"இசை இல்லா யாக்கை" என்றார். புகழ் இல்லாமல் ஒருவன் வாழ்கிறான் என்றால்  அவனை உயிர் உள்ள மனிதனாகக் கூட வள்ளுவர் மதிக்கவில்லை. அது ஒரு உடம்பு என்கிறார். யாக்கை என்றால் உடம்பு. எலும்பு, நரம்பு, இரத்தம் என்றவற்றால் கட்டப்பட்டதால், இதற்கு யாக்கை என்று பெயர். யாக்குதல், கட்டுதல். 


நிலம் ஏன் குறைவாக விளையும் என்றால், புகழ் இல்லாத மனிதர்கள், பெரிய முயற்சி எடுக்க மாட்டார்கள். அதனால் பொருள் விரயம், சுற்றுப் புற சூழ்நிலை மாசு படுதல் போன்ற பல தவறுகள் நிகழலாம். 


ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு நெல் விளையும் என்றால், அதையே சிறப்பாகச் செய்தால் அதிக மகசூல் பெறலாம், குறைவான நீரை பயன்படுத்தாலாம், பூச்சிக் கொல்லி, இரசாயன உரம் போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்து உயர்தர விளைச்சலை, குறைந்த செலவில் பெற்றுத் தரலாம். அதற்கெல்லாம் முயற்சி வேண்டும், கடின உழைப்பு வேண்டும். 


அப்படி இல்லாதவர்கள் ஊரில், விளைச்சல், பயன் குறைவாகக் கிட்டும் என்கிறார். 


சிந்திக்க வேண்டிய விடயம். 


எதையும் சிறப்பாக செய்ய வேண்டும், அனைவரும் பாராட்டும்படி செய்ய வேண்டும். 


 




Tuesday, December 5, 2023

அறநெறிச்சாரம் - நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்

 அறநெறிச்சாரம் - நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் 


இந்த உலகில் கெட்டுப் போக எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அதில் எல்லாம் போய் மாட்டிக் கொள்ளாமல், இருக்கிறீர்களே, யார் செய்த புண்ணியமோ. 


அறநெறிச்சாரம் என்ற நூல் அறம் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது. அறம் என்றால் என்ன, அதை யார் சொல்லலாம், யாருக்குச் சொல்லலாம், யார் சொல்லக் கூடாது, யாருக்குச் சொல்லக் கூடாது, அறத்தின் பயன் என்ன, அதை எப்போது செய்ய வேண்டும் என்று அக்கு வேறு ஆணிவேராக பிரித்துப்  பிரித்துத் தருகிறது. 


அறம் என்றால் என்ன, அதை நம்மவர்கள் எப்படி கடைப் பிடித்தார்கள், நமது கலாச்சாரம் என்ன, என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடியும். 


முழு நூலையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை. 


முதலாவதாக, 


"இந்த உலகில் பாவத்தை எடுத்து உரைக்கும் நூல்கள் பல இருக்கின்றன. காமம், ஆசை இவற்றைத் தூண்டும் நூல்கள் பல இருக்கின்றன. அது போல இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தராத நூல்கள் ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டு விட்டு, இந்த நூலை படிக்க வேண்டும் என்று நினைத்தீர்களே, நீங்கள் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள்தான்" 


என்று கூறுகிறது. 


பாடல் 


மறவுரையும் காமத் துரையும் மயங்கிய 

பிறவுரையும் மல்கிய ஞாலத்-தறவுரை

கேட்கும் திருவுடை யாரே பிறவியை

நீக்கும் திருவுடையார்.



பொருள் 




(please click the above link to continue reading)


மறவுரையும் = அறம் அல்லாத உரைகளையும் (பாவத்தைத் தூண்டும்) 


காமத் துரையும் = காமத்து உரையும் = காமம், ஆசை பற்றி பேசும் நூல்களும் 


மயங்கிய = குழப்பம் தரும் 

 

பிறவுரையும் = பிற நூல்களும் 


மல்கிய = நிறைந்த 


ஞாலத்-= இந்த உலகில் 


தறவுரை = அறவுரையை 


கேட்கும் = கேட்கப் பிரியப் பட்டு வந்துள்ள நீங்கள் 


 திருவுடை யாரே = புண்ணியம் செய்தவர்களே 


பிறவியை = இந்தப் பிறவியில் இருந்து 


நீக்கும் = விடுபடும் 


திருவுடையார் = புண்ணியம் உள்ளவர்கள் 


அறவுரையை கேட்பவர்கள் புண்ணியம் பண்ணியவர்கள். அவர்களே இந்தப் பிறவிப் பிணியில் இருந்து விடுபடும் பேறு பெற்றவர்கள். 


அரவுரையைக் கேட்டாலே போதும். அது உள்ளே போகும். மனதில் படியும். சொல்லில், செயலில் கட்டாயம் வெளிப்படும். தவறு செய்வதை மனசாட்சியாக நின்று தடுக்கும். 


வீட பேற்றுக்கு வழி செய்யும். 


aஅந்தக் காலத்திலேயே குப்பைப் புத்தகங்கள் இருந்து இருக்கு. நல்ல புத்தகங்கள், குப்பை புத்தகங்கள் என்று இருக்க வேண்டும் என்றால் மொழியும், மொழி வழி எண்ணங்களை புத்தக வடிவில் பகிர்ந்து கொள்ளும் முறையும் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று இருக்க வேண்டும் !


புத்தகம் என்று சொல்லவில்லை...உரை என்று சொல்கிறது. ஓலைச் சுவடிகளோ, அல்லது வேறு எந்த விதத்திலோ இவை எல்லாம் இருந்திருக்கின்றன. 


சிறந்த புத்தகங்களை தேடிப் பிடித்து படிப்பது என்பது ஒரு கலை. 


முதலில் புத்தகங்களை கண்டு பிடிக்க வேண்டும். பின் படிக்க வேண்டும். பின், அவை புரிய வேண்டும். பின் அதன் படி நடக்க வேண்டும்....







 

Saturday, December 2, 2023

திருக்குறள் - இது இல்லேனா அது

 திருக்குறள் - இது இல்லேனா அது 


புகழ் அடைவது நல்லதுதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், எல்லோராலும் புகழ் அடைய முடிவது இல்லை. புகழ் இல்லாமல், ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், படித்தோம், வேலை பார்த்தோம், திருமணம் செய்தோம், பிள்ளைகளப் பெற்றோம், அவர்களை வளர்த்தோம் என்று இருந்து விட்டு போவதில் என்ன பிரச்சனை. 


புகழ் அடைந்தே ஆக வேண்டும் என்று கட்டாயமா? புகழ் இல்லாமல் எத்தனையோ பேர் வாழ்ந்து மறையவில்லையா? நானும் அப்படி இருந்துவிட்டுப் போகிறேன். எனக்கு புகழ் எல்லாம் வேண்டாம் என்று ஒருவர் சொல்லலாம்.


வள்ளுவர் கேட்கிறார்,


சரி. புகழ் இல்லாமல் வாழ்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். அந்த வாழ்க்கைக்கு என்ன பெயர்? "சாதாரண வாழ்க்கை" என்று கூறலாமா என்றால் கூடாது என்கிறார் பேராசான்.


புகழ் இல்லாத வாழ்க்கை சாதாரண வாழ்க்கை இல்லை, அது ஒரு இழிவான வாழ்க்கை என்கிறார். 


புகழ் இல்லை என்றால் உனக்கு இகழ்தான் கிடைக்கும் என்கிறார். 


இது என்ன புதுக் கதையாக இருக்கிறதே...நீ நீதிபதி ஆகாவிட்டால் திருடன் என்று சொல்லுவது போல இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். 


பாடல் 


வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_2.html

(please click the above link to continue reading)


வசைஎன்ப = இகழ்ச்சி என்று சொல்லுவார்கள் 


வையத்தார்க்கு = உலகில் வாழும் மக்களுக்கு 


எல்லாம் = அனைவருக்கும் 


இசையென்னும் = புகழ் என்ற 


எச்சம் = மிகுதியைப் 


பெறாஅ விடின் = பெறாவிட்டால் 


இசை என்றால் புகழ் என்று பொருள். 


இசை இல்லாவிட்டால் வசைதான் என்கிறார். 


ஏன் அப்படி? வள்ளுவர் சொல்லிவிட்டால் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? 


புகழ் அடைய ஆயிரம் வழிகள் இருக்கிறது. எதில் புகழ் அடைய முடியாது? எதை எடுத்தாலும் அதில் புகழ் பெற முடியும். இந்தத் துறையில் புகழ் பெற முடியாது என்று ஒன்றே கிடையாது. என்ன செய்தாலும் அதில் புகழ் பெறலாம்.


"என்ன அருமையா பிள்ளைகளை வளர்த்து இருக்கிறா"


அது கூட ஒரு புகழ்தான். 


இப்படி ஆயிரம் வழி இருக்க, ஒன்றும் செய்யாமல் இருந்தால் ஊர் என்ன சொல்லும் ?


"யாரு அவனா, ஏதோ இருக்கான்...ஒரு பைசாவுக்கு புண்ணியம் இல்லை" 


என்று சொல்லும். அது இகழ்ச்சிதானே?


ஒரு வேலைக்கு மனு போடுகிறோம். எவ்வளவு மதிப்பெண் என்று பார்த்தால் ஏதோ 50% /60% வாங்கி இருக்கிறோம். அந்த நிறுவனத்தில், விண்ணப்பங்களை சரி பார்க்கும் கடை நிலை ஊழியன், அந்த விண்ணப்பத்தை நேரே குப்பை தொட்டியில் தூக்கி போட்டு விடுவான். 


"அவனவன் 90%, 95% என்று வாங்கிட்டு வேலைக்கு அலையிரானுக, இவரு 50% வாங்கிட்டு வெக்கம் இல்லாம வேலைக்கு மனு வேறு போட வந்துட்டான்" நு மனதுக்குள்ளாவது திட்டுவானா இல்லையா?


சிறந்த மதிப்பெண் பெற்றால் புகழ். அது வாங்காவிட்டால், இகழ்தான். 50% சதவீதம் புகழ் கிடையாது. புகழ் இல்லாவிட்டால் இகழ்.


எனவே, புகழ் வேண்டாம் என்று இருந்தால், இகழ் கிடைக்கும். அது பரவாயில்லையா?





Friday, December 1, 2023

தேவாரம் - பார்த்தா சிரிப்பா வருது

 தேவாரம் - பார்த்தா  சிரிப்பா வருது 


பக்தி என்பது ஏதோ எந்நேரம் பார்த்தாலும் பஜனை, பூஜை, புனஸ்காரம் செய்து கொண்டு, வாழ்கையை முழுவதுமாக நிராகரிப்பது அல்ல. வாழ்க்கையை இரசிப்பதும், அனுபவிப்பதும் பக்தியோடு சேருமா?


ஐயையோ, புலன் இன்பமா? அபச்சாரம், அபச்சாரம் என்று கன்னத்தில் போட்டுக் கொள்வதுதானா பக்தி. 


வாழ்வின் ஒவ்வொரு இன்பத்தையும் மறுதலித்துக் கொண்டே போனால், எப்படி இருக்கும்? புலன்கள் ஒரு புறம் இழுக்கும். மறு புறம் போகாதே என்று பக்தி தடுக்கும். இந்தச் சண்டையில் யார் வென்றாலும் தோற்பது நீங்கள்தான். 


பக்தி வென்று, புலன் இன்பங்களை எல்லாம் துறந்தால், அத்தனையும் இழந்து விட்டோமே என்ற ஏக்கம் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கும். 


மாறாக, புலன் இன்பங்கள் வென்று, பக்தி தோற்றால், இப்படி சிற்றின்பங்களுக்கு ஆட்பட்டு, பேரின்பத்தை இழந்துவிட்டேனே என்று தோன்றும். 


நம் பக்தி இயற்கையை, வாழ்வை, ஆன்மீகப் பாதையில் இருந்து பிரித்து வைப்பது இல்லை. இயற்கையை மீறி, இயற்கைக்கு எதிராக செல்வது அல்ல நம் ஆன்மிகம். இயற்கையோடு ஒன்றிப் போவது. 


அது ஒரு குளம். அந்த குளத்தின் அருகில் முடத்தாழை மரம் இருக்கிறது. அந்த மரத்தின் கிளை அந்தக் குளம் நோக்கி தாழ்ந்து இருக்கிறது. அந்தக் கிளையில் உள்ள மலரின் நிழல் குளத்தில் விழுகிறது. அந்த நிழலை குருகு என்று எண்ணி அந்தக் குளத்தில் இல்ல மீன்கள் பயந்து, தாமரை இலையின் பின்னே ஒளிந்து கொள்கிறது. அதைப் பார்த்த, அருகில் இருந்த கடலில் இருந்த முத்துக்கள் சிரித்ததாம். 


அது சரி, இந்தப் பாடலுக்கும், இதற்கு முன் சொன்ன முகவுரைக்கும் என்ன சம்பந்தம் ?


இந்த அர்த்தம் தொனிக்கும் கவிதையை எழுதியவர் திருஞான சம்பந்தர். சிவ பெருமான் மேல் எழுதிய கவிதை. 


 பாடல் 


விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின்  தண்புறவில்,

மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று,

தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய,

கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post.html


(Please click the above link to continue reading)


விடம் = விஷம் 


உண்ட = சாப்பிட்ட 


மிடற்று = கழுத்தை, தொண்டையை உடைய 


அண்ணல் = பெரியவன் 


வெண்காட்டின் = திரு வெண்காடு என்ற தலத்தில் 


 தண்புறவில் = குளிர்ந்த வெளியில் 


மடல் = பூவிதழ் 


விண்ட  = விரித்த 


முடத்தாழை = முடத்தாழை என்ற மரத்தின் 


மலர் = மலரின் 

 


 நிழலைக் = நீரில் விழுந்த நிழலை 


குருகு என்று = குருகு என்ற சிறு பறவை என்று எண்ணி 

,

தடம் = குளத்தில் உள்ள 


மண்டு = வாழும் 


துறைக் கெண்டை = கெண்டை மீன் 


தாமரையின்பூ மறைய = தாமரை பூ கொடியின் இலையின் கீழே சென்று மறைய 


கடல் விண்ட = கடலில் வாழும் 


கதிர் முத்தம் = ஒளிக் கதிர் வீசும் முத்துக்கள் 


நகை காட்டும் = அதைப் பார்த்து சிரிக்கும் 


காட்சியதே = காட்சியதே 


சமயக் குரவர்களில் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர், குளத்தில் வாழும் மீன் நீந்திப் போவதைப் பார்த்து , இரசித்து, அது மலரின் நிழலுக்கு பயந்து இலையின் அடியில் சென்று ஒளிந்து கொள்வதாக கற்பனை பண்ணி, அதை கண்டு முத்து சிரிப்பதாக கவிதை வரைகிறார். 


இதில் பக்தி எங்கே வந்தது? 


அது தான் பக்தி, இயற்கையோடு ஒன்றிப் போவது, உலகை உள்ளபடி இரசிப்பது, அதில் தன்னை மறந்து ஒன்றிப் போவது...அதுதான் பக்தி. 


ஒவ்வொரு படைப்பும், ஆகச் சிறந்த ஒன்றுதான். உலகம் ஆனந்த மயமானது. அதை இரசிப்பது, அந்த ஆனந்தத்தோடு ஒன்றுவது பக்தி. 


வாழ்கையை இரசியுங்கள். எப்போது பார்த்தாலும் இல்லாத ஒன்றை நினைத்து கனவு கண்டு கொண்டு இருக்காமல், உண்மையில் இருப்பதை கண்டு மகிழுங்கள். 


இந்த ஒரு நொடி மாத்திரமே உண்மை. நேற்றும், நாளையும் பொய்த் தோற்றங்கள். 


மரம், குளம், மீன், குருகு, தாமரை இலை...இதுதான் உண்மை. இதில் மனதை வையுங்கள். நாளைய பற்றிய கனவையும், நேற்றைய பற்றிய கவலைகளையும் விட்டு ஒழியுங்கள்.


அது என்ன விடம் உண்ட கண்டர்?


விஷத்தை எதற்கு உண்டார்? அது விஷம் என்று சிவனுக்குத் தெரியும்தானே. பின் அதை ஏன் உண்ண வேண்டும்? பின் அதை தொண்டைக் குழியிலேயே நிறுத்த வேண்டும்? 


மேலும் சிந்திப்போம்....