Monday, April 15, 2024

தேவாரம் - திருவீழிமழலை - விழி காட்டும்

 தேவாரம் - திருவீழிமழலை - விழி காட்டும் 


திருவீழிமழலை


ஒரு பெரிய தெளிவான நீர் தேக்கத்தை கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். உங்களூர் ஏரியோ, குளமோ, நீர்த் தொட்டியோ...ஏதோ ஒன்று. தெளிந்த நீர். அதில் தாமரை மலர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பூத்து இருக்கின்றன. அதில் பவளப் பாறைகள் சூரிய ஒளி பட்டு செக்க செவேல் என்று இருக்கிறது. சில பல மீன்கள் அந்த நீரில் விளையாடுகின்றன. 


கற்பனை செய்து கொண்டீர்களா?


அந்த கற்பனையை அப்படியே தூக்கிக் கொண்டு வந்து திருவீழிமழலை என்ற ஊரில் உள்ள சிவன் கோவில் பிரகாரத்தின் மேல் வையுங்கள். 


இளம் பெண்கள் கோவிலை சுற்றி வருகிறார்கள். அவர்கள் முகம் தாமரை மலர் போல் இருக்கிறது. அவர்களது இதழ்கள் பவளம் போல் சிவப்பாக இருக்கிறது. அவர்கள் கண்கள் மீன்கள் போல் அங்கும் இங்கும் அலை பாய்கின்றன.


என்ன இது, கோவிலுக்குப் போனோமா, இறைவனை தர்சித்தோமா என்று இல்லாமல் இது என்ன வர்ணனை என்று நீங்கள் கேட்கலாம். 


செய்தது நான் அல்ல. திருஞான சம்பந்தர். 


அது சிவன் கோவில். எப்படிப்பட்டவன் சிவன், 


உலகமெல்லாம் துன்பப் படி மக்களை இம்சை செய்த அசுரர்களின் கோட்டைகளை, கண்ணாடியின் மேல் உளுந்தைப் போட்டால் எவ்வளவு சீக்கிரம் அது உருண்டு ஓடி விழுந்து விடுமோ, அத்தனை குறுகிய நேரத்தில் அந்தக் கொடிய அசுரர்களை அழித்த சிவன் வாழும் கோவில். அந்தக் கோவில்தான் பெண்கள் வழிபட்டதை ஞான சம்பந்தப் பெருமான் கூறுகிறார். 


பாடல் 


எழுந்துலகை நலிந்துழலு மவுணர்கடம் புரமூன்று மெழிற்கணாடி

உழுந்துருளு மளவையினொள் ளெரிகொளவெஞ் சிலைவளைத்தோ னுறையுங்கோயில்

கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநகம் முகங்காட்டக் குதித்துநீர்மேல்

விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம் வாய்காட்டும் மிழலையாமே.

 

சீர் பிரித்த பின் 


எழுந்து உலகை நலிந்து உழலும்  அவுணர்கடம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி

உழுந்து உருளும் அளவையின் உள்  எரி கொள வெஞ்சிலை வளைத்தோன்      உறையும் கோயில்

கொழுந் தரளம் நகை காட்டக் கோகநகம் முகம் காட்டக் குதித்து நீர் மேல்

விழுந்த கயல் விழி காட்ட விற் பவளம் வாய் காட்டும் மிழலையாமே.


பொருள் 


எழுந்து  = அழிப்பதற்கு எழுந்து 


உலகை = இந்த உலகை 


நலிந்து = நலியச் செய்து 


உழலும் = திரியும் 


அவுணர் = அரக்கர்கள் 


கடம் புரம் = பெரிய கோட்டைகள் 


மூன்றும் = மூன்றும் 


 எழில் = அழகான 


 கண்ணாடி = கண்ணாடி 


உழுந்து உருளும் = அதன் மேல் உளுந்து உருண்டு கீழே விழும் 


அளவைன் = அந்த குறுகிய நேரத்தில் 


உள் = உள்ளாக 


எரி கொள = அவற்றை எரித்த 



 வெஞ்சிலை = வீரமான வில்லை 


வளைத்தோன் = வளைத்த அந்த சிவன் 


 உறையும் கோயில் = இருக்கும் கோவில், அது எது தெரியுமா?


கொழுந் = சிறந்த  


தரளம் = முத்துக்கள் 


 நகை காட்டக்  = புன்னகையில் தெரியும் பற்கள் காட்ட 


கோகநகம் = தாமரை 


 முகம் காட்டக் = முகத்தில் காட்ட 


 குதித்து = குதித்து 


நீர் மேல் = நீரின் மேல் 


விழுந்த = விழும் 


கயல் = மீன் 


விழி காட்ட = விழியில் காட்ட 


விற் பவளம் வாய் காட்டும் = வில் போல் வளைந்த இதழ்கள் பவளத்தைக் காட்ட 


மிழலையாமே. = திருவீழிமழலை என்ற ஊர் 


இந்தத் தலத்தில் உள்ள அம்பாளின் பெயர் ப்ரிஹந்த்குஜாம்பிகை. ஏதாவது புரிகிறதா?  


ப்ரிஹுந் = என்றால் பெரிய, சிறந்த. ப்ருஹந்த்நாயகி = பெரியநாயகி 

குஜம் என்றால் மார்பு.


அம்பிகை = அம்பாள். 


அழகிய முலையம்மை. 


அழகிய தமிழ் பெயர்களை இப்படி புரியாத மொழியில் மாற்றியது யார்? 

Saturday, April 13, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - உயிர் பிரிந்த உடல்

 திருக்குறள் - புலால் மறுத்தல் - உயிர் பிரிந்த உடல் 


https://interestingtamilpoems.blogspot.com/2024/04/blog-post.html

தவறுகள் நிகழ பல காரணங்கள் இருக்கலாம். அதில் இரண்டை நாம் சிந்திப்போம். 


நம் வீட்டில், நாம் பிறந்தது முதலே ஒரு பழக்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது தவறு என்றே நமக்குத் தெரியாது. ஏன் என்றால், சிறு வயதில் இருந்தே அப்படித்தான் செய்கிறோம். நம் பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் அதைத்தான் செய்கிறார்கள். அது எப்படி தவறாக இருக்க முடியும்? அது தவறு என்ற எண்ணமே நமக்கு எழாது. 


இரண்டாவது வகை என்ன என்றால், எந்த ஒரு தவறும் முதல் முறை செய்யும் போது மனம் உறுத்தும். அப்புறம் அப்புறம் பழகிப் போய் விடும். நாளடைவில், அப்படிச் செய்தால் என்ன தவறு என்று வாதிக்கச் சொல்லும். அப்படி செய்யாமல் இருப்பதுதான் தவறு என்று கூட சொல்லும். 


நிறைய பேர் புலால் உண்ணாமல் இருப்பார்கள். கல்லூரியில், வேலை பார்க்கும் இடத்தில் நண்பர்கள் பழக்கி விட்டு விடுவார்கள். நாக்கு உருசி கண்டு விடும். பின் அதை விட மனம் வராது. அது மட்டும் அல்ல, அந்த மாமிச உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது, ஏன் அதை கட்டாயம் உண்ண வேண்டும் என்றெல்லாம் மனம் வாதிக்கத் தொடங்கும். 


அது போல, அசைவ உணவு உண்ணும் குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு அது தவறு என்று புரியவே புரியாது. 


தீவிர சைவ உணவு உண்பவர்களிடம் "மாட்டின் பால் என்பது மாட்டின் இரத்தம் தான். அதைத் தான் நீ குடிக்கிறாய்" என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். அது எப்படி என்றுதான் வாதம் வரும். 


வள்ளுவர் சொல்கிறார், 


"என்னதான் சொன்னாலும், மாமிச உணவு என்பது, பிணத்தை தின்பது மாதிரி. உயிர் அற்ற ஒரு விலங்கை தின்பது, அந்த விலங்கின் பிணத்தைத் தின்பது மாதிரித்தானே. குற்றமற்ற பார்வை, நோக்கம் உள்ளவர்கள் அதை புரிந்து கொண்டு, அந்தக் காரியத்தை செய்ய மாட்டார்கள்" என்கிறார். 


பாடல் 


செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்


பொருள் 



செயிரின்  = குற்றத்தில் இருந்து 


தலைப்பிரிந்த = விலகி நிற்கும், அதோடு தன்னை ஒன்று படுத்தாமல் இருக்கும் 


காட்சியார் = நோக்கம், பார்வை உள்ளவர்கள் 


 உண்ணார் = உண்ண மாட்டார்கள் 


உயிரின் = உயிரை விட்டு 


தலைப்பிரிந்த = பிரிந்து வந்த 


ஊன் = மாமிசம் 


குற்றத்தை நீண்ட நாள் செய்து வந்தால், அது குற்றமாகத் தெரியாது. அதோடு ஒன்றிப் போய் விடுவோம். 


அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்து இருப்பவர்கள் ஒரு வகையில் திருடர்கள்தான் என்று சிலர் சொல்கிறார்கள். பணக்கார்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா?  


நாம் செய்வது சரியா தவறா என்று சற்று தள்ளி நின்று யோசிக்க வேண்டும். நான் செய்வதால் அது சரி என்று ஆகிவிடக் கூடாது. 


சிந்திக்க வேண்டிய குறள்.




Sunday, March 31, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - புலால் என்ற புண்

திருக்குறள் - புலால் மறுத்தல் - புலால் என்ற புண் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/03/blog-post_31.html


நம் உடம்பில் ஒரு வெட்டு காயம் ஏற்பட்டால், அல்லது கீழே விழுந்து அடி பட்டாலோ, ஒரு புண் வரும் அல்லவா. தோல் கிழிந்து, சதை கிழிந்து, இரத்தம் வரும். அந்த புண்ணை யாராவது தின்பார்களா?  


ஒரு விலங்கை கத்தியால் வெட்டினால், அதுவும் அதன் உடலில் வரும் புண்தானே. அந்தப் புண்ணை யாராவது தின்பார்களா?  எவ்வளவு அசிங்கம் அது. எவ்வளவு அருவெறுப்பு அது. அது தெரியாததால் தான் மக்கள் ஒரு விலங்கின் புண்ணை உண்கிறார்கள் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


உண்ணாமை வேண்டும் புலாலைப் பிறிதொன்றின்

புண்ண துணர்வார்ப் பெறின்.


பொருள் 


உண்ணாமை வேண்டும் = உண்ணாமல் இருப்பார்கள் (எப்போது என்றால்)


புலாலைப் = புலால் என்பது 


பிறிதொன்றின் = மற்றொரு உடம்பின் 


புண்ணது = புண் அது (என்று)  


உணர்வார்ப் பெறின் = உணரும் அறிவைப் பெற்றால் 


மாமிசம் என்பது ஒரு விலங்கின் புண். புண்ணை யாராவது தின்பார்களா? என்று ஒரு அருவெறுப்பை உண்டாக்குகிறார். 




Wednesday, March 27, 2024

பெரிய புராணம் - இயற்பகை நாயனார் - நாட்டு வளம்

 பெரிய புராணம் - இயற்பகை நாயனார் - நாட்டு வளம் 


நாம் வாழும் நாட்டின் சிறப்பு நமக்கு பல சமயம் புரிபடுவதில்லை. இந்த நாட்டில் பிறந்தோம், வளர்கிறோம். இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று நினைக்கலாம். 


போரின் காரணமாக சொந்த நாட்டை விட்டு அகதிகளாக போனவர்களிடம் கேட்க வேண்டும். நாடு என்றால் என்ன என்று அவர்களுத்தான் தெரியும். மண்ணின் மகிமை அதை விட்டுப் போனால்தான் புரியும். 


எந்த அயல்நாட்டுக்குப் போனாலும், அது எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், சொந்த மண்ணின் சுகம் எங்கும் வராது. 


மண்ணுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு அவனுடைய ஏனைய தொடர்புகளையும் பாதிக்கிறது என்றே நான் எண்ணுகிறேன். 


நம் இல்லக்கியங்கள் நாட்டு வளம், ஊர் சிறப்பு பற்றி முதலில் பேசிவிட்டுத்தான் சொல்ல வந்த விடயத்துக்குள் நுழையும். மண் நன்றாக இருந்தால் மக்களும் நன்றாக இருப்பார்கள் என்று ஒரு நம்பிக்கை. 


இயற்பகை நாயனார் வரலாறை சொல்ல வந்த சேக்கிழார் பெருமான், நாயனார் பிறந்த நாட்டின் பெருமையை முதலில் சொல்கிறார். 


என்ன ஒரு அழகு அந்த நாட்டுச் சிறப்பை கூறுவதில். 


எத்தனை விடயங்களை அடக்குகிறார் அதில். 


"புகார் நகரம். 

வளமான புகார் நகரம். 

சிறந்த வளமான புகார். 

நலத்தில் சிறந்த வளமான  புகார். 

நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 

பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 

நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 

பொன்னி நதி பாய்ந்து, அது கடலையும் தூய்மை ஆக்கி, நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 


இயல்பாகவே, இயற்கையாகவே தேவையான நீரை அளிக்கும் பொன்னி நதி பாய்ந்து, அது கடலையும் தூய்மை ஆக்கி, நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 


மருத நிலங்களை வளமாக்கி, இயல்பாகவே, இயற்கையாகவே தேவையான நீரை அளிக்கும் பொன்னி நதி பாய்ந்து, அது கடலையும் தூய்மை ஆக்கி, நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 


நீண்ட காலமாகவே மருத நிலங்களை வளமாக்கி, இயல்பாகவே, இயற்கையாகவே தேவையான நீரை அளிக்கும் பொன்னி நதி பாய்ந்து, அது கடலையும் தூய்மை ஆக்கி, நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 


அநபாய சோழ அரசனின் அரச குலம் புகழ் பெருக்கி சிறப்படைய நீண்ட காலமாகவே மருத நிலங்களை வளமாக்கி, இயல்பாகவே, இயற்கையாகவே தேவையான நீரை அளிக்கும் பொன்னி நதி பாய்ந்து, அது கடலையும் தூய்மை ஆக்கி, நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 


என்று முடிக்கிறார். 


பாடல் 


சென்னி வெண்குடை நீடந பாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்

மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப்

பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக் குவதோர்

நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நலஞ்சி றந்தது வளம்புகார் நகரம்.


பொருள் 


சென்னி = தலை. தலைக்கு மேல் 


வெண்குடை நீள  = வெண் கொற்ற குடை  நீண்டு நிலைத்து இருக்க 


அநபாயன் = அநபாயன் என்ற சோழ அரசனின் 


திருக் குலம் = சிறந்த அரச குலம் 


புகழ் பெருக்கிய = புகழைப் பெருக்கிய 


சிறப்பின் = சிறப்பில் 


மன்னு = நிலைத்து நிற்கும் 


தொல்புகழ் = பழமையான புகழ் 


மருதநீர்  நாட்டு வயல்வ ளந்தர = மருத நிலத்தின் வயல்கள் வளம் பெற 


இயல்பினில் = இயல்பாக, இயற்கையாக 


அளித்துப் = அளித்து 


பொன்னி = பொன்னி என்ற 


நன்னதி = நல்ல நதி 


மிக்கநீர் = மிகுந்த நீர் 


பாய்ந்து = பாய்ந்து 


புணரி தன்னையும் = புணரி என்றால் கடல். அந்த பொன்னி நதி சேரும் கடலையும் 


புனிதமாக் குவதோர் = தூய்மை ஆக்கி 


நன்னெ டும் = நல்ல நீண்ட 


பெருந் தீர்த்தமுன் னுடைய = பெரிய நீர் நிலைகளை உடைய 


நலஞ்சி றந்தது = நலன்கள் சிறந்தது 


வளம் = வளங்கள் நிறைந்த 


புகார் நகரம் = புகார் நகரம்


நாட்டுச் சிறப்பு, ஆற்றின் சிறப்பு, அரசனின் சிறப்பு, என்று அனைத்து சிறப்புகளையும் ஒரே பாடலில் அடக்கி விடுகிறார் சேக்கிழார். 


ஆறு பாய்ந்து, நீர் நிலைகள் நிறைந்து, வயல்கள் செழிப்பாக இருந்து, நல்ல விளைச்சலைத் தந்து, மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து, அரசன் செம்மையாக ஆட்சி செய்து சிறந்து விளங்கும் புகார் நகரம். 


என்ன ஒரு அற்புதமான பாடல் !




Sunday, March 24, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - கொல்வதும், தின்பதும்

 திருக்குறள் - புலால் மறுத்தல் - கொல்வதும், தின்பதும் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/03/blog-post_24.html


இப்போது எல்லாம் பெரிய பெரிய தொழிற்சாலைகளில் அசைவ உணவை உற்பத்தி செய்கிறார்கள். விலங்குகளை கொல்வதும், அதை சரியானபடி வெட்டி, பதப்படுத்தி, தேவையான மசாலா பொருட்களை சேர்த்து, டப்பாவில் அடைத்து விற்கிறார்கள். அந்தத் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் என்ன நினைப்பார்கள் ?


"நான் அசைவ உணவு உண்பது இல்லை. யாரோ உண்கிறார்கள். அவர்களுக்காகத்தானே இந்த விலங்குகளை கொல்கிறோம். என்னைப் பொறுத்தவரை இது ஒரு வேலை. இது பாவம் என்றால், எனக்கு இந்தப் பாவத்தில் பங்கு இல்லை"


என்று சொல்லுவார்கள். 


வள்ளுவர் சொல்கிறார்...


"தின்பவர் யாரும் இல்லை என்றால், விலங்குகளை கொல்பவர் யாரும் இருக்க மாட்டார்கள். தின்பவர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்"


என்கிறார். 


பாடல் 


தினற்பொருட்டாற் கொள்ளா துலகெனின் யாரும்

விலைப்பொருட்டா லூன்தருவா ரில்.


பொருள் 


தினற்பொருட்டாற் = தின்பதற்கு என்று 


கொள்ளாது = வாங்காது 


உலகெனின்  = உலகில் உள்ளவர்கள் என்றால் 


யாரும் = ஒருவரும் 


விலைப்பொருட்டால் = விலைக்கு விற்பதற்கு என்று 


லூன்தருவா ரில் = ஊன் தருவார் இல். அதாவது ஊனை விற்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 


வாங்குபவர்கள் யாரும் இல்லை என்றால், விற்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 


வாங்குபவர்கள் என்றால் வாங்கி உண்பவர்கள். மாமிசத்தை உண்பவர்கள் இருப்பாதால் தான், உயிர்களை கொன்று அவற்றின் உடலை விற்பவர்கள் இருக்கிறார்கள். 


எனவே, தின்பவர்கள்தான் அந்த கொலைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்கிறார். 




Saturday, March 23, 2024

பெரிய புராணம் - இயற்பகை நாயனார் - பாகம் 1

 பெரிய புராணம் - இயற்பகை நாயனார் - பாகம் 1

https://interestingtamilpoems.blogspot.com/2024/03/1.html

நமக்கு தெரிந்து பக்தர்கள் இறைவனை நோக்கி ஓலம் இட்டு அழைத்து கேட்டு இருக்கிறோம். 


"சிவனே சிவனே என்று ஓலம் இடினும்" என்பார் மணிவாசகர். 


மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

       போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய் படிறீ கடைதிறவாய்

       ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்

       சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)

"ஓலம்" இடினும் உணராய் உணராய் கான்

       ஏலக்குழலி பரிசு ஏலோர் எம்பாவாய்.


இறைவனே பக்தனை நோக்கி ஓலம் இட்டு, ஒரு முறை அல்ல, பல முறை ஓலம் இட்டு  கூப்பிட்ட கதை தெரியுமா?


அதுதான் இயற்பகை நாயனார் கதை. 


இப்படியும் கூட ஒரு பக்தியா என்று வியக்க வைக்கும் பக்தி. 


கண்ணில் நீரை வரவழைக்கும் பக்தி. 


சிவ பெருமானின் அடியார்களை தொகுத்து சுந்தர மூர்த்தி நாயனார் ஒரு நீண்ட பட்டியல் தந்து இருக்கிறார். அந்த நீண்ட நெடிய பட்டியலில் மூன்றாவது இடம் இயற்பகை நாயனாருக்கு. அப்படி என்றால் அவரின் சிறப்பு தெரியும். 




தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

  திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

  இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

  விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்

  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே


சரி, அப்படி என்னதான் அவர் செய்தார்?  

சிந்திப்போம். 


Wednesday, March 20, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - உண்ணாமை உள்ளது உயிர்நிலை

திருக்குறள் - புலால் மறுத்தல் - உண்ணாமை உள்ளது உயிர்நிலை 


நாம் மாத்திரை எப்படி சாப்பிடுவோம்? 


முதலில் தலையை சற்று பின்னே சாய்த்து, வாயைத் திறந்து, மாத்திரையை உள்ளே போட்டு, கொஞ்சம் தண்ணி குடித்து, விழுங்கி விடுவோம். பின் வாயை மூடியபடி, தலையை நேரே ஆக்கி விடுவோம். உள்ளே போன மாத்திரை வெளியே வராது அல்லவா? 


அது ஒரு உதாரணம். எதற்கு என்றால், 


ஊண் உண்பவர்களை நரகம் தன் வாயில் போட்டு விழுங்கி விடுமாம். நாம் மாத்திரையை விழுங்கி விடுவது போல. 


இன்று நாம் காண இருக்கும் குறளில் வள்ளுவரின் உயிர் சூழ்நிலை சார்ந்த அறிவை நாம் கண்டு வியக்கலாம். 


காட்டிலே புலி சிங்கம் போன்ற மிருகங்கள் மானை வேட்டையாடி உண்கின்றன. என்னிடம் வலிமை இருக்கிறது என்று இருக்கின்ற மானை எல்லாம் வேட்டையாடி தின்று விட்டால், நாளை உண்பதற்கு மான் இருக்காது. அது மட்டும் அல்ல, அளவுக்கு அதிகமாக வேட்டையாடி, நன்றாக தின்று புலி சிங்கம் போன்றவை தங்கள் இனத்தை வளர்த்துக் கொண்டே போனால், புலி, சிங்கம் நிறைய இருக்கும். அவைகளுக்கு நிறைய மான் வேண்டி இருக்கும். மான் கூட்டமோ குறைந்து கொண்டே வரும். ஒரு கட்டத்தில், மான்களே இல்லாமல் போய் அல்லது மிகக் குறைந்து கடைசியில் புலிகளும், சிங்கங்களும் தங்களுக்குள் உணவுக்காக அடித்துக் கொண்டு சாக வேண்டிய நிலை வரும். 


வள்ளுவர் சொல்கிறார் 


"ஊன் உண்ணாததால் உயிர்கள் நிலைத்து நிற்கின்றன. ஊன் உண்டால், உண்டவனை நரகம் வாயில் போட்டு தின்று விடும். வாயில் போட்ட பின், அது வாயைத் திறக்காது. "


பாடல்  


உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊன் உண்ண,

அண்ணாத்தல் செய்யாது, அளறு.


பொருள் 


உண்ணாமை = ஊன் உண்ணாமல் இருப்பதால் 


உள்ளது உயிர்நிலை = உயிர்கள் நிலைத்து உள்ளன 


ஊன் உண்ண = ஊன் உண்டால் 


அண்ணாத்தல் செய்யாது = (உண்டவனை விழுங்கிய பின்) வாயைத் திறக்காது


 அளறு = நரகம் 


அதாவது, ஊன் உண்பவன், உண்ணும் போது வாயைத் திறந்து, மூடி கடித்து உருசித்து தின்பான். வாயை மூடிக் கொண்டே சாப்பிட முடியுமா?  எலும்பைக் கடிக்க வேண்டும்.  ஆனால், அவனை வாயில் போட்ட நரகம், வாயைத் திறக்கவே திறக்காது. அப்படி என்றால், அதில் இருந்து வெளி வரவே முடியாது என்று அர்த்தம். 


நமது இந்து மதக் கோட்பாட்டின் படி, ஆத்மா அழிவது இல்லை. அது மீண்டும் மீண்டும் வந்து பிறக்கிறது. ஊன் உண்பவர்கள், விலங்குகளின் உடலை கொன்று தின்கிறார்கள். அந்த விலங்குகளின் ஆன்மா மீண்டும் பிறக்க உடல் வேண்டும். எளிய விலங்குகளை எல்லாம் பிடித்துத் தின்று விட்டால், அந்த உயிர்கள் வலிமையான விலங்குகளாக வரும். நாளை அவை நம்மையே தின்னலாம். வள்ளுவர் மிரட்டுகிறார். 


சைவ உணவு உண்பவர்கள் நினைத்துக் கொள்ளலாம், "இது நமக்கு இல்லை. நாம் எங்கே ஊன் உண்கிறோம்" என்று. 


வாயில் போட்டு உண்பது மட்டும் அல்ல, உண்பது என்றால் அனுபவிப்பது. 


விலங்குகளின் தோலை உரித்து பெல்ட் செய்து கொள்வது, செருப்பு, shoe செய்வது, சூட் case செய்வது, கைப் பை, என்று உயிர்களை கொலை செய்து அவற்றின் தோல், மாமிசம் போன்றவற்றை ஏதோ ஒரு வகையில் அனுபவிக்கிறோம். 


எத்தனை இலட்சம் பட்டுப் புழுக்களை கொன்று, பட்டுச் சேலை, பட்டாடை செய்து அணிந்து மகிழ்கிறோம்?  அது கொலை இல்லையா? 


சிப்பியைக் கீறி, அதன் வயிற்றில் இருந்து முத்தை எடுத்து, அணிகலன் செய்து போட்டுக் கொள்கிறோம்.


அது கொலை இல்லையா?  


கன்றுக்கு விடாமல் பாலை கறந்து குடித்து விடுகிறோம். 


பாடுபட்டு தேனீக்கள் சேர்த்த தேனை எளிதாக திருடிக் கொண்டு வந்து விடுகிறோம். உணவு இல்லாமல் அவை என்ன செய்யும்?  


அசுரர்கள் தங்களை விட வலிமை குன்றியவர்களை வாட்டி வதைத்தார்கள். 


நாமும் நம்மை விட வலிமை குன்றிய உயிர்களை கொன்று, அதில் இருந்து வரும் பொருள்களைக் கொண்டு  மகிழ்கிறோம். 


ஒரு வகையில் நாமும் அசுரர்கள்தான்.


அது எல்லாம் அருள் அற்ற செய்கை. உயிர்கள் மேல் அன்பு இல்லாததால் வருவது.