Wednesday, March 27, 2024

பெரிய புராணம் - இயற்பகை நாயனார் - நாட்டு வளம்

 பெரிய புராணம் - இயற்பகை நாயனார் - நாட்டு வளம் 


நாம் வாழும் நாட்டின் சிறப்பு நமக்கு பல சமயம் புரிபடுவதில்லை. இந்த நாட்டில் பிறந்தோம், வளர்கிறோம். இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று நினைக்கலாம். 


போரின் காரணமாக சொந்த நாட்டை விட்டு அகதிகளாக போனவர்களிடம் கேட்க வேண்டும். நாடு என்றால் என்ன என்று அவர்களுத்தான் தெரியும். மண்ணின் மகிமை அதை விட்டுப் போனால்தான் புரியும். 


எந்த அயல்நாட்டுக்குப் போனாலும், அது எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், சொந்த மண்ணின் சுகம் எங்கும் வராது. 


மண்ணுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு அவனுடைய ஏனைய தொடர்புகளையும் பாதிக்கிறது என்றே நான் எண்ணுகிறேன். 


நம் இல்லக்கியங்கள் நாட்டு வளம், ஊர் சிறப்பு பற்றி முதலில் பேசிவிட்டுத்தான் சொல்ல வந்த விடயத்துக்குள் நுழையும். மண் நன்றாக இருந்தால் மக்களும் நன்றாக இருப்பார்கள் என்று ஒரு நம்பிக்கை. 


இயற்பகை நாயனார் வரலாறை சொல்ல வந்த சேக்கிழார் பெருமான், நாயனார் பிறந்த நாட்டின் பெருமையை முதலில் சொல்கிறார். 


என்ன ஒரு அழகு அந்த நாட்டுச் சிறப்பை கூறுவதில். 


எத்தனை விடயங்களை அடக்குகிறார் அதில். 


"புகார் நகரம். 

வளமான புகார் நகரம். 

சிறந்த வளமான புகார். 

நலத்தில் சிறந்த வளமான  புகார். 

நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 

பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 

நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 

பொன்னி நதி பாய்ந்து, அது கடலையும் தூய்மை ஆக்கி, நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 


இயல்பாகவே, இயற்கையாகவே தேவையான நீரை அளிக்கும் பொன்னி நதி பாய்ந்து, அது கடலையும் தூய்மை ஆக்கி, நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 


மருத நிலங்களை வளமாக்கி, இயல்பாகவே, இயற்கையாகவே தேவையான நீரை அளிக்கும் பொன்னி நதி பாய்ந்து, அது கடலையும் தூய்மை ஆக்கி, நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 


நீண்ட காலமாகவே மருத நிலங்களை வளமாக்கி, இயல்பாகவே, இயற்கையாகவே தேவையான நீரை அளிக்கும் பொன்னி நதி பாய்ந்து, அது கடலையும் தூய்மை ஆக்கி, நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 


அநபாய சோழ அரசனின் அரச குலம் புகழ் பெருக்கி சிறப்படைய நீண்ட காலமாகவே மருத நிலங்களை வளமாக்கி, இயல்பாகவே, இயற்கையாகவே தேவையான நீரை அளிக்கும் பொன்னி நதி பாய்ந்து, அது கடலையும் தூய்மை ஆக்கி, நல்ல பெரிய நீர் நிறைந்த நலத்துடன் கூடிய சிறந்த வளமான புகார். 


என்று முடிக்கிறார். 


பாடல் 


சென்னி வெண்குடை நீடந பாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்

மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப்

பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக் குவதோர்

நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நலஞ்சி றந்தது வளம்புகார் நகரம்.


பொருள் 


சென்னி = தலை. தலைக்கு மேல் 


வெண்குடை நீள  = வெண் கொற்ற குடை  நீண்டு நிலைத்து இருக்க 


அநபாயன் = அநபாயன் என்ற சோழ அரசனின் 


திருக் குலம் = சிறந்த அரச குலம் 


புகழ் பெருக்கிய = புகழைப் பெருக்கிய 


சிறப்பின் = சிறப்பில் 


மன்னு = நிலைத்து நிற்கும் 


தொல்புகழ் = பழமையான புகழ் 


மருதநீர்  நாட்டு வயல்வ ளந்தர = மருத நிலத்தின் வயல்கள் வளம் பெற 


இயல்பினில் = இயல்பாக, இயற்கையாக 


அளித்துப் = அளித்து 


பொன்னி = பொன்னி என்ற 


நன்னதி = நல்ல நதி 


மிக்கநீர் = மிகுந்த நீர் 


பாய்ந்து = பாய்ந்து 


புணரி தன்னையும் = புணரி என்றால் கடல். அந்த பொன்னி நதி சேரும் கடலையும் 


புனிதமாக் குவதோர் = தூய்மை ஆக்கி 


நன்னெ டும் = நல்ல நீண்ட 


பெருந் தீர்த்தமுன் னுடைய = பெரிய நீர் நிலைகளை உடைய 


நலஞ்சி றந்தது = நலன்கள் சிறந்தது 


வளம் = வளங்கள் நிறைந்த 


புகார் நகரம் = புகார் நகரம்


நாட்டுச் சிறப்பு, ஆற்றின் சிறப்பு, அரசனின் சிறப்பு, என்று அனைத்து சிறப்புகளையும் ஒரே பாடலில் அடக்கி விடுகிறார் சேக்கிழார். 


ஆறு பாய்ந்து, நீர் நிலைகள் நிறைந்து, வயல்கள் செழிப்பாக இருந்து, நல்ல விளைச்சலைத் தந்து, மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து, அரசன் செம்மையாக ஆட்சி செய்து சிறந்து விளங்கும் புகார் நகரம். 


என்ன ஒரு அற்புதமான பாடல் !




No comments:

Post a Comment