Tuesday, March 12, 2024

கந்தர் அநுபூதி - தாயும், தந்தையும்

கந்தர் அநுபூதி - தாயும், தந்தையும் 


பக்திப் பாடல்களில் பொதுவாக பாடப்படும் கடவுளைப் பற்றிய வர்ணனைகள் நிறைந்து இருக்கும். பாடும் கடவுளின் வாகனம், உடல் வண்ணம், அவர் செய்த லீலைகள், அருள் பாலித்த விதங்கள், தீயவர்களை தண்டித்த விதம் என்று இருக்கும். இந்த குணாதிசயங்கள் மீண்டும் மீண்டும் வரும். 


அவற்றை ஒரு முறை வாசித்து விட்டு, பாட்டில் உள்ள மற்றைய செய்திகள்/கருத்துகளுக்குள் நாம் போகலாம். 


அருணகிரியார் சொல்கிறார் ,


"என் தாய் நீ. எனக்கு அருள் செய்யும் தந்தை நீ. என் மனதில் உள்ள சலனங்களை எல்லாம் போக்கி, என்னை ஆட்கொள்"


என்று. 


பாடல் 


எந்தாயு மெனக் கருள் தந்தையு நீ 

சிந்தா குலமானவை தீர்த்தெனையாள் 

கந்தா கதிர் வேலவனே உமையாள் 

மைந்தா குமரா மறை நாயகனே . 



சீர் பிரித்த பின் 


என் தாயும், எனக்கு அருள் தந்தையும் நீ 
 
சிந்தா குலமானவை தீர்த்து எனை ஆள்  

கந்தா கதிர் வேலவனே உமையாள் 

மைந்தா குமரா மறை நாயகனே . 


பொருள் 


என் தாயும் = என்னுடைய தாயும் 


எனக்கு அருள் தந்தையும் நீ = எனக்கு அருள் செய்யும் தந்தையும் நீயே 
 
 
சிந்தா குலமானவை = என் சிந்தையுள் ஏற்படும் சலனங்களை 


தீர்த்து = முடித்து வைத்து 


எனை ஆள் = என்னை ஆட்கொள்வாய் 
  

கந்தா = கந்தா 


கதிர் வேலவனே = கதிர் வீசும் வேலை உடையவனே 


உமையாள் மைந்தா = உமா தேவியின் மைந்தனே 


குமரா = குமரனே 


மறை நாயகனே = வேதங்களின் தலைவனே 

 


சிந்தையில் உள்ள சலனங்கள் நின்றால்தான் இறைவனால் ஆட்கொள்ளப்பட முடியும். அந்தச் சலனங்களை நாமே நிறுத்த முடியுமா?  அருணகிரியார் சொல்கிறார், "முருகா நீயே அந்தச் சலனங்களை நிறுத்தி என்னை ஆட்கொள் " என்று. இறைவனிடமே அந்தப் பொறுப்பையும் விட்டுவிடுகிறார். பூரண சரணாகதி. 


No comments:

Post a Comment