Wednesday, March 20, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - உண்ணாமை உள்ளது உயிர்நிலை

திருக்குறள் - புலால் மறுத்தல் - உண்ணாமை உள்ளது உயிர்நிலை 


நாம் மாத்திரை எப்படி சாப்பிடுவோம்? 


முதலில் தலையை சற்று பின்னே சாய்த்து, வாயைத் திறந்து, மாத்திரையை உள்ளே போட்டு, கொஞ்சம் தண்ணி குடித்து, விழுங்கி விடுவோம். பின் வாயை மூடியபடி, தலையை நேரே ஆக்கி விடுவோம். உள்ளே போன மாத்திரை வெளியே வராது அல்லவா? 


அது ஒரு உதாரணம். எதற்கு என்றால், 


ஊண் உண்பவர்களை நரகம் தன் வாயில் போட்டு விழுங்கி விடுமாம். நாம் மாத்திரையை விழுங்கி விடுவது போல. 


இன்று நாம் காண இருக்கும் குறளில் வள்ளுவரின் உயிர் சூழ்நிலை சார்ந்த அறிவை நாம் கண்டு வியக்கலாம். 


காட்டிலே புலி சிங்கம் போன்ற மிருகங்கள் மானை வேட்டையாடி உண்கின்றன. என்னிடம் வலிமை இருக்கிறது என்று இருக்கின்ற மானை எல்லாம் வேட்டையாடி தின்று விட்டால், நாளை உண்பதற்கு மான் இருக்காது. அது மட்டும் அல்ல, அளவுக்கு அதிகமாக வேட்டையாடி, நன்றாக தின்று புலி சிங்கம் போன்றவை தங்கள் இனத்தை வளர்த்துக் கொண்டே போனால், புலி, சிங்கம் நிறைய இருக்கும். அவைகளுக்கு நிறைய மான் வேண்டி இருக்கும். மான் கூட்டமோ குறைந்து கொண்டே வரும். ஒரு கட்டத்தில், மான்களே இல்லாமல் போய் அல்லது மிகக் குறைந்து கடைசியில் புலிகளும், சிங்கங்களும் தங்களுக்குள் உணவுக்காக அடித்துக் கொண்டு சாக வேண்டிய நிலை வரும். 


வள்ளுவர் சொல்கிறார் 


"ஊன் உண்ணாததால் உயிர்கள் நிலைத்து நிற்கின்றன. ஊன் உண்டால், உண்டவனை நரகம் வாயில் போட்டு தின்று விடும். வாயில் போட்ட பின், அது வாயைத் திறக்காது. "


பாடல்  


உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊன் உண்ண,

அண்ணாத்தல் செய்யாது, அளறு.


பொருள் 


உண்ணாமை = ஊன் உண்ணாமல் இருப்பதால் 


உள்ளது உயிர்நிலை = உயிர்கள் நிலைத்து உள்ளன 


ஊன் உண்ண = ஊன் உண்டால் 


அண்ணாத்தல் செய்யாது = (உண்டவனை விழுங்கிய பின்) வாயைத் திறக்காது


 அளறு = நரகம் 


அதாவது, ஊன் உண்பவன், உண்ணும் போது வாயைத் திறந்து, மூடி கடித்து உருசித்து தின்பான். வாயை மூடிக் கொண்டே சாப்பிட முடியுமா?  எலும்பைக் கடிக்க வேண்டும்.  ஆனால், அவனை வாயில் போட்ட நரகம், வாயைத் திறக்கவே திறக்காது. அப்படி என்றால், அதில் இருந்து வெளி வரவே முடியாது என்று அர்த்தம். 


நமது இந்து மதக் கோட்பாட்டின் படி, ஆத்மா அழிவது இல்லை. அது மீண்டும் மீண்டும் வந்து பிறக்கிறது. ஊன் உண்பவர்கள், விலங்குகளின் உடலை கொன்று தின்கிறார்கள். அந்த விலங்குகளின் ஆன்மா மீண்டும் பிறக்க உடல் வேண்டும். எளிய விலங்குகளை எல்லாம் பிடித்துத் தின்று விட்டால், அந்த உயிர்கள் வலிமையான விலங்குகளாக வரும். நாளை அவை நம்மையே தின்னலாம். வள்ளுவர் மிரட்டுகிறார். 


சைவ உணவு உண்பவர்கள் நினைத்துக் கொள்ளலாம், "இது நமக்கு இல்லை. நாம் எங்கே ஊன் உண்கிறோம்" என்று. 


வாயில் போட்டு உண்பது மட்டும் அல்ல, உண்பது என்றால் அனுபவிப்பது. 


விலங்குகளின் தோலை உரித்து பெல்ட் செய்து கொள்வது, செருப்பு, shoe செய்வது, சூட் case செய்வது, கைப் பை, என்று உயிர்களை கொலை செய்து அவற்றின் தோல், மாமிசம் போன்றவற்றை ஏதோ ஒரு வகையில் அனுபவிக்கிறோம். 


எத்தனை இலட்சம் பட்டுப் புழுக்களை கொன்று, பட்டுச் சேலை, பட்டாடை செய்து அணிந்து மகிழ்கிறோம்?  அது கொலை இல்லையா? 


சிப்பியைக் கீறி, அதன் வயிற்றில் இருந்து முத்தை எடுத்து, அணிகலன் செய்து போட்டுக் கொள்கிறோம்.


அது கொலை இல்லையா?  


கன்றுக்கு விடாமல் பாலை கறந்து குடித்து விடுகிறோம். 


பாடுபட்டு தேனீக்கள் சேர்த்த தேனை எளிதாக திருடிக் கொண்டு வந்து விடுகிறோம். உணவு இல்லாமல் அவை என்ன செய்யும்?  


அசுரர்கள் தங்களை விட வலிமை குன்றியவர்களை வாட்டி வதைத்தார்கள். 


நாமும் நம்மை விட வலிமை குன்றிய உயிர்களை கொன்று, அதில் இருந்து வரும் பொருள்களைக் கொண்டு  மகிழ்கிறோம். 


ஒரு வகையில் நாமும் அசுரர்கள்தான்.


அது எல்லாம் அருள் அற்ற செய்கை. உயிர்கள் மேல் அன்பு இல்லாததால் வருவது. 



No comments:

Post a Comment