Thursday, September 26, 2019

பெரிய புராணம் - இளையான்குடிமாற நாயனார் புராணம்

பெரிய புராணம் - இளையான்குடிமாற நாயனார் புராணம்



அந்தக் காலத்தில், நான் சொல்வது 1960 களில், இளங்கலை (BA ) படிப்புக்கு இளையான்குடிமாற நாயனார் புராணம் இருந்தததாக என் தந்தையார் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அது மட்டும் அல்ல, அதே புராணம்தான் அதற்கு முன்பு இருந்த  P  U  C , SSLC  போன்றவற்றிலும் இருந்ததாம்.

ஒரு இலக்கியத்தை சாரமற்றதாகச் செய்ய வேண்டும் என்றால், அதை பள்ளி பாடத் திட்டத்தில் சேர்த்து விட வேண்டும். பின், அதன் மேல் உள்ள மதிப்பு, மரியாதை எல்லாம் அந்த மாணவர்களுக்கு போய் விடும். படித்து மனப்பாடம் செய்து, நாலு மதிப்பெண் பெறுவது ஒன்றே குறிக்கோளாக இருக்கும்.

பெரிய புராணம், 63 நாயன்மார் வரலாற்றை சொல்லுகிறது. அதில் மணிவாசகர் கிடையாது. அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர் தவிர்த்து பல பேருக்கு மற்ற நாயன்மார் பெயர்கள் கூடத் தெரியாது. காரைக்கால் அம்மையார் தெரியும் ஏனென்றால் அவர் மட்டும் தான் ஒரே ஒரு பெண் அந்த நாயன்மார் வரிசையில்.

இந்த நாயன்மார்கள் ஏதோ பக்தி செய்தார்கள், இறைவன் அவர்களை சோதித்தான், பின் முக்தி கொடுத்தான். அவ்வளவுதான். இதைப் படித்து நமக்கு என்ன ஆகப் போகிறது ?

நம்மால் எல்லாம் அப்படி பக்தி செய்ய முடியாது.

இதையெல்லாம் படிப்பது வெட்டி வேலை என்று நாம் நினைக்கலாம்.

கடவுளே இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இருக்கும் போது , பக்தி எங்கிருந்து வரும்?  அதிலும் அடியார்கள் வாழ்க்கை வரலாற்றை படித்து என்ன ஆகப் போகிறது  என்றும் தோன்றும்.

ஞாயமான சந்தேகம்தான்.

கடவுளை விட்டு விடுங்கள்.

பக்தியை விட்டு விடுங்கள்.

வீடு பேறு , முக்தி, சுவர்க்கம் இதையெல்லாம் விட்டு விடுங்கள்.

தெய்வப் புலவர் சேக்கிழாரின் தமிழுக்காக அதை படிக்கலாம். அத்தனையும்  தேன் சொட்டும் பாடல்கள்.

தமிழ் கொஞ்சும்.  கிறங்க அடிக்கும்.

தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாட்டை அறிந்து கொள்ள படிக்கலாம்.

எப்பேற்பட்ட பாரம்பரியத்தில் வந்த நாம், இப்போது இப்படி திக்கு திசை தெரியாமல்,  மேலை நாட்டு நாகரிகம், பண்பாடு இவற்றை நோக்கி கையேந்தி நிற்கிறோம் என்பது புரியும்.

நம் பாரம்பரியம் என்ன என்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தெரிந்தால், "அட, இப்படியும் கூட வாழ முடியுமா? இப்படி கூட வாழ்ந்திருக்கிறார்களா " என்ற ஆச்சரியம் வரும்.

ஒருவேளை அந்த பாரம்பரியம் பிடித்து கூட போகலாம். நாம் நம் ஆதார நிலை நோக்கி  திரும்பலாம்.

எது எப்படியோ, தமிழுக்காக படிக்கலாம். மற்றவை கிடைத்தால், நல்லது. இலவச இணைப்பாக பெற்றுக் கொள்ளலாம்.

இளையான்குடிமாற நாயனார் பற்றி வரும் நாட்களில் சிந்திக்க இருக்கிறோம்.

இது ஒரு முன்னுரை.

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_26.html

1 comment:

  1. உங்கள் வார்த்தை நூற்றுக்கு நூறு சரியானதே. நிறைய எடுத்து சொல்லுங்கள்.நன்றாக புரியும். எல்லாவற்றையும் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்

    ReplyDelete