Saturday, September 28, 2019

பெரிய புராணம் - இளையான்குடிமாற நாயனார் - நம்பு வாய்மையில்

பெரிய புராணம் - இளையான்குடிமாற நாயனார் - நம்பு வாய்மையில்


நம் உடம்பில் எந்த உறுப்பு உயர்ந்தது ? எது தாழ்ந்தது  என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்? அனைத்து உறுப்புகளும் ஒரே நிலை தான். கண் உயர்ந்தது, காது தாழ்ந்தது, வலது கை சிறந்தது, இடது கை தாழ்ந்தது என்று சொல்ல முடியுமா?

சரி.

சமுதாயத்தில் எந்த வேலை செய்பவர் உயர்ந்தவர்? எந்த வேலை செய்பவர் தாழ்ந்தவர் என்று கேட்டால்?

பூஜை செய்ப்வர் உயர்ந்தவர்....குப்பை அள்ளுபவர் தாழந்தவர் என்று கூற முடியுமா ?

கூறிக் கொண்டிருக்கிறோம். அது சரி அல்ல.

நமது முன்னோர்கள் சமுதாயத்தை நான்காக பிரித்தார்கள். அது இன்றைய பெரிய பெரிய நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

அதாவது,

- உற்பத்தி (production )
- விநியோகம் (distribution )
- நிர்வாகம் (Administration)
- தொலை நோக்கு திட்டமிடுதல் (Strategic Planning )

எந்த பெரிய நிறுவனத்தையும் இந்த நான்கு பிரிவாக பிரித்து விடலாம்.

சமுதாயத்தையும் அப்படியே.

அப்படி பிரித்து வைத்து இருந்தார்கள் -  அதற்கு வர்ணம் என்று பெயர்.

உற்பத்தி அடிப்படை. Goods and Services உற்பத்தி செய்யாவிட்டால் ஒரு சமுதாயம் படுத்து விடும்.  உற்பத்திதான் ஒரு சமுதாயத்தின் உயிர் நாடி. விவசாயம், மருத்துவம், சாலை போடுவது, போக்குவரத்து, தொழிற்சாலை , வங்கிகள்,  தொலை தொடர்பு என்ற அனைத்தும் இதில் அடங்கும். சமுதாயத்தை  இயக்குவது அதுதான். எனவே, அதில் உள்ளவர்களை சூத்திர தாரிகள், அல்லது சூத்திரர்கள் என்று கூறினார்கள்.

உற்பத்தி மட்டும் செய்து விட்டால் போதாது, அதை எல்லோருக்கும் விநியோகம் செய்ய வேண்டும். அவர்களுக்கு வைசியர்கள் என்று பெயர்.

அதே போல நிர்வாகம் செய்பவர்கள் ஷத்ரியர்கள் என்றும் திட்டம் தீட்டுதல்,  ஆராய்ச்சி செய்தல் போன்ற மூளை சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்களை  அந்தணர்கள் என்று பிரித்து பெயர் வைத்தார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இளையான்குடிமாற நாயனார் ஒரு விவசாயி. எனவே அவர் சமுதாய அமைப்பில் ஒரு சூத்திரர். சூத்திரர் என்ற நற்குலத்தில் பிறந்தவர் என்கிறார் சேக்கிழார். சிவனடியார்களை போற்றி அவர்களுக்கு விருந்து உபசரிப்பது என்பது அவரின் விரதம்.

பாடல்

அம்பொன் நீடிய அம்பலத்தினில் ஆடு வார்அடி சூடுவார்
தம்பி ரானடி மைத்தி றத்துயர் சால்பின் மேன்மைத ரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற்குலஞ்செய்த வத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கி னார்இளையான்கு டிப்பதி மாறனார்.


பொருள்

அம்பொன் = அழகிய பொன்

நீடிய = வேய்ந்த

அம்பலத்தினில் = அம்பலத்தில்

ஆடு வார் = ஆடுவார். யார் ஆடுவார்? சிவன்.

அடி சூடுவார் = அவருடைய (சிவனுடைய) அடிகளை சூடுபவர்

தம்பி ரான் = தம்பிரான்

அடி மைத் = அப்படி சிவனுக்கு அடிமையாக இருந்த

திறத்துயர்  சால்பின் = திறத்தினால்

மேன்மைத ரித்துளார் = மேன்மை பெற்றவர்

நம்பு வாய்மையில் = நம்புகின்ற வாய்மையில்

நீடு = உயர்ந்த

சூத்திர = சூத்திர

நற்குலஞ் = நல்ல  குலம்

செய்த வத்தினால் = செய்த தவத்தினால்

இம்பர் = இந்த

ஞாலம் = உலகம்

விளக்கி னார் = விளங்கும்படி

இளையான்கு டிப்பதி மாறனார். = இளையான்குடி பதி மாறனார் இருந்தார்

நம்பு வாய்மை = வாய்மையை நம்ப வேண்டும். வாய்மையே சிறந்த அறம் என்பார் வள்ளுவர்.

யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் தொன்றும் 
வாய்மையின் நல்லபிற

என்பது வள்ளுவம்.

வாய்மையை விட சிறந்தது ஒன்று இல்லை.

இறைவன் ஜாதி, குலம் , சமயம் என்று பாகுபாடு பார்ப்பது இல்லை. அவனுடைய அடியார்கள் என்று  சொல்லிக் கொள்பவர்கள்தான் இந்த பாகுபாடு செய்து கொண்டு  பேதைகளாய் மூடர்களாய் திரிகிறார்கள்.

தெய்வம் பலபல சொல்லிப் -பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய்-எங்கும்

ஓர்பொரு ளானது தெய்வம்.

என்பார் பாரதியார்.


எலும்பிலும், சதையிலும், தோலிலும் இலக்கம் (number ) போட்டு இருக்கிறதா என்று கேட்கிறார் சிவவாக்கியார் என்ற சித்தர்.

பறைச்சி ஆவதேதடா பணத்தி ஆவதேதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ, பணத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப் பாரும் உம்முளே.

சாதி மத பேதங்களை கடந்து, அன்பை நிலை நாட்ட வந்தது பெரிய புராணம்.

மேலும் சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_28.html


No comments:

Post a Comment