Sunday, September 29, 2019

பெரிய புராணம் - இளையான் குடி மாறனார் - விருந்து

பெரிய புராணம் - இளையான் குடி மாறனார் - விருந்து 


விருந்தினரை உபசரிப்பதை ஒரு அறமாகக் கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.  விருந்தை எப்படி உபசரிக்க வேண்டும் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

விருந்தினரை எப்படி நடத்த வேண்டும் என்பதில் உச்சம் தொட்டவர்கள் நம்மவர்கள்.

சேக்கிழார் சொல்கிறார்,  விருந்தினர் தூரத்தில் வரும் போது, அவர் கண்ணுக்கு நாம் தெரிவோம். நாம் நிற்கும் நிலை, நமது மலர்ந்த முகம், சிரிப்பு, விரிந்த கைகள், அல்லது கூப்பிய கைகள் இவைகள்தான் விருந்தினருக்கு தெரியும். அந்த பார்வையிலேயே வருகின்ற விருந்தினர்க்குக்கு தெரிந்து விடுமாம், இவன் நம் வருகையை விரும்புகிறானா அல்லது நாம் அழையா விருந்தாளியா என்று.

இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால், நாம் பேசுவது அவருக்கு கேட்கும். "வாங்க வாங்க...என்ன உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு, இப்பவாவது என் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதே" என்று இன் சொல் சொல்லி வரவேற்க வேண்டும்.

முதலில் பார்வைக்கு குளிர்ச்சியாக இருக்க வேண்டும். முகத்தை கடு கடு என்று வைத்து இருந்தால் வருகிறவன் கூட அப்படியே போய் விடுவான். அப்புறம், கொஞ்சம் கிட்ட வந்த பின், இன் சொல் கூற வேண்டும்.

பாடல்


ஆர மென்புபு னைந்த ஐயர்தம் அன்பர் என்பதொர் தன்மையால்
நேர வந்தவர் யாவ ராயினும் நித்த மாகிய பத்திமுன்
கூர வந்தெதிர் கொண்டு கைகள்குவித்து நின்றுசெ விப்புலத்
தீர மென்மது ரப்ப தம்பரிவெய்த முன்னுரை செய்தபின்.


பொருள்

ஆரம் = கழுத்தில் அணியும் மாலை

என்பு புனைந்த = எலும்பை அணிந்த

ஐயர்தம்  = தலைவரின்

அன்பர் = அன்பர்

என்பதொர் தன்மையால் = என்கிற தன்மையால்

நேர வந்தவர் = நேரே வந்தவர்

யாவ ராயினும்  = யாராக இருந்தாலும்

நித்த மாகிய = எப்போதும் இருக்கும்

பத்தி = பக்தி

முன் கூர = முன்பு வர

வந்தெதிர் = வந்து எதிர்

கொண்டு  = கொண்டு

கைகள் குவித்து = கைகளை குவித்து

நின்று = நின்று

செ விப்புலத் தீர = அவர்கள் காதில் விழும்படி

மென் = மென்மையாக

மது ர = மதுரமான

பதம் = சொற்களை கூறி

பரி வெய்த = பரிவுடன்

முன்னுரை செய்தபின். = வரவேற்புரை கூறிய பின்

இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு, வாங்க வாங்க என்று சொல்லக் கூடாது. எதிரில் சென்று அழைக்க வேண்டும்.

உட்கார்ந்து கொண்டே வாங்க என்று சொல்லக் கூடாது. எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும்.

கை கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும்.

இனிமையான சொற்களை மென்மையாக பேசி வரவேற்க வேண்டும்.

வீட்டுக்கு யார் வந்தாலும் அப்படி வரவேற்க வேண்டும். வேண்டியவர், வேண்டாதவர், பணக்காரர், பெரியவர், சின்னவர் என்று பேதம் பார்க்கக் கூடாது.

இதெல்லாம் ஒரு பண்பாடு. அப்படி வாழ்ந்தார்கள் நம் முன்னவர்கள்.

அது ஒரு நல்ல பழக்கம் என்று தெரிந்தால், கடைபிடிப்பது நல்லது தானே?

அது மட்டும் அல்ல, பிள்ளைகளுக்கு இதை கதையாக சொல்லித் தர வேண்டும்.  அவர்கள் மனதில் பதியும். செய்வதும் செய்யாததும் அவர்கள் விருப்பம்.

நல்லதை விதைப்போம்.  அல்லதா விளைந்து விடும்?

சரி, இன் முகம் காட்டி, இன் சொல் கூறி வரவேற்றாகி விட்டது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_29.html

1 comment: