Showing posts with label சிலப்பதிகாரம். Show all posts
Showing posts with label சிலப்பதிகாரம். Show all posts

Sunday, January 1, 2017

சிலப்பதிகாரம் - தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு,

சிலப்பதிகாரம் - தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு, 


சிலப்பதிகாரம் ஒரு ஆச்சரியமான நூல். வில்லன் என்ற பாத்திரமே இல்லாத ஒரு காப்பியம் என்றால் அது சிலப்பதிகாரம் தான். 

இராமாயணத்தில் - இராமன், இராவணன் 
பாரதத்தில் - பாண்டவர்கள், கௌவரவர்கள் 
கந்த புராணத்தில் - கந்தன் , சூரபத்மன் 

இப்படி எந்த கதையை எடுத்துக் கொண்டாலும், அதில் கதாநாயகன் இருப்பான், அவனுக்கு எதிராக ஒரு பலமான வில்லன் இருப்பான். வில்லனை முறியடித்துத்தான் கதாநாயகன் தன் வலிமையை காட்ட முடியும். 

சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு வில்லன் என்று யாரும் கிடையாது. 

விதிதான் வில்லன். 

நடக்கும் சம்பவங்கள் தான் வில்லனின் விளையாட்டு.

ஒரு சின்ன சம்பவம், கதையின் போக்கையே மாற்றி விடுகிறது. 

பாண்டிய மன்னன் அவையில் இருந்து நடனத்தை இரசித்துக் கொண்டிருக்கிறான். அவன் கண்கள் அங்கு நடனமாடும் பெண்கள் மேல் இலயிக்கிறது. அதை , அருகில் இருந்த அவன் மனைவி பார்த்து விடுகிறாள். அது அவளுக்கு பிடிக்கவில்லை. 'தலை வலிக்கிறது' என்று கூறிவிட்டு அந்தப் புறம் நோக்கிச் செல்கிறாள். அவளின் ஊடலை புரிந்து கொண்ட பாண்டியன் அவள் பின்னே செல்கிறான் அவளை சமாதனப் படுத்த. அந்த நேரத்தில் பொற் கொல்லன் வந்து கோவலனைப் பற்றி ஏதோ சொல்ல, தான் இருந்த மன நிலையில் , சரியாக ஆராயாமல் , பாண்டியன் கோவலனுக்கு தண்டனை கொடுத்து விடுகிறான். 

பாடல் 

கூடல் மகளிர் ஆடல் தோற்றமும், 
பாடல் பகுதியும், பண்ணின் பயங்களும், 
காவலன் உள்ளம் கவர்ந்தன’ என்று, தன் 
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து, 
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு, 
குலமுதல் தேவி கூடாது ஏக, 
மந்திரச் சுற்றம் நீங்கி, மன்னவன் 
சிந்து அரி நெடுங் கண் சிலதியர்-தம்மொடு 
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி, 
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின்- 
விழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்திக்

பொருள்

‘கூடல் மகளிர் = கூடத்தில் ஆடும் பெண்களின்

ஆடல் தோற்றமும் = ஆடலும், அவர்களின் தோற்றமும்

பாடல் பகுதியும் = பாடல் பகுதியும்

பண்ணின் பயங்களும் = பாடலின் பயன்களும்

காவலன் = அரசனின்

உள்ளம் கவர்ந்தன’ என்று, = உள்ளத்தை கவர்ந்தன என்று

தன் = தன்னுடைய

ஊடல் உள்ளம் = ஊடல் கொண்ட மனத்தை

உள் கரந்து ஒளித்து = உள்ளே ஒளித்து  வைத்து

தலைநோய் = தலைவலி

வருத்தம் = வருத்தம்

தன்மேல் இட்டு = தனக்கு இருப்பதாகக் கூறி

குலமுதல் தேவி = பாண்டிமாதேவி

கூடாது ஏக = சேர்ந்து இருக்காமல் உள்ளே போக

மந்திரச் சுற்றம் நீங்கி = மந்திரிகளை விட்டு நீங்கி

மன்னவன் = பாண்டிய மன்னன்

சிந்து அரி நெடுங் கண் = சிவந்த அழகிய நீண்ட கண்களை கொண்ட

சிலதியர் = பணிப் பெண்கள்

தம்மொடு = அவர்களோடு

கோப்பெருந்தேவி = அரசியின்

கோயில் = அரண்மனை

நோக்கி, = சென்று

காப்பு உடை  = காவலை உடைய

வாயில் = வாசலில்

கடை காண் = வாசலை அடையும் முன்பே

அகவையின் விழ்ந்தனன் = படியில் வீழ்ந்தான்

கிடந்து = தரையில் கிடந்து

தாழ்ந்துபல ஏத்திக் = பணிந்து பலவாறாக அவளை சமாதானம் செய்து

காமம் , பாண்டியனை அந்த நடனமாடும் பெண்களின் உடலை இரசிக்கத் தூண்டியது. அருகில் அவன் மனைவி இருப்பது கூடத் தெரியாமல். இன்னொரு பெண்ணை கணவன் இரசிப்பதை எந்த பெண்ணாலும் சகித்துக் கொள்ள முடிவதில்லை. 'தலை வலிக்கிறது ' என்று  சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள் .

'போனால் போகட்டும்...அவ எப்போதும் அப்படித்தான் ...அப்புறம் பேசிக் கொள்ளலாம் ...இந்த ஆட்டம் முடியட்டும் ' என்று பாண்டியன் இருக்கவில்லை.

தன் தவறை உணர்ந்தான். அவள் இருக்கும் அரண்மனைக்கு சென்று அவளை சமாதனப் படுத்த முயன்றான்.

அன்பான, இனிமையான தாம்பத்யத்தின் இலக்கணம் அது.

'நான் எவ்வளவு பெரிய ஆள். நீ யார் என்னை கேட்க ' என்று இருக்கவில்லை.

அவன் அந்த அளவுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கிறான் என்றால் அவர்களுக்குள் இருந்த தாம்பத்யம் புலப்படும்.

வெளியில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், மனைவியின் முன்னால் கணவன் , அவ்வளவுதான்.

அந்த ஒரு இக்கட்டான இடத்திலும் ஆண்களுக்கு ஒரு பாடத்தை வைக்கிறார் இளங்கோ அடிகள் .

ஆண் வெளியில் யாராக இருந்தாலும், வீட்டில் , தாய்க்கு பிள்ளைதான், தாரத்துக்கு கணவன் தான், பிள்ளைகளுக்கு தந்தை அவ்வளவுதான் இருக்க வேண்டும்.

இதை புரிந்து கொண்டால் வாழ்வு உறவுகள் பலப்படும். 

Wednesday, November 23, 2016

சிலப்பதிகாரம் - மனைவியின் அருமை

சிலப்பதிகாரம் - மனைவியின் அருமை 


ஒரு பெண் திருமணம் ஆன பின் தன் பெற்றோர், உடன் பிறந்தோர், தோழிகள் என்று எல்லோரையும் விட்டு விட்டு கணவன் பின்னால் வந்து விடுகிறாள். இத்தனையும் விட்டு விட்டு வருவது எவ்வளவு பெரிய கடினமான செயல் என்று ஆண்களுக்கு புரிவது இல்லை, காரணம் அவர்கள் அப்படி எதையும் விட்டு விட்டு வருவது இல்லை.

சரி, அந்த வலி புரியாவிட்டாலும் பரவாயில்லை, அதற்காக ஒரு ஆறுதல் கூட சொல்லுவது கிடையாது. என்ன பெரிய தியாகம் என்று அதை ஒரு சாதாரண செயலாக நினைத்துக் கொண்டு விடுகிறார்கள்.

மனைவியின் அருமை எப்போது தெரிகிறது என்றால் ஒன்று வாழ்வில் அடிபடும் போது அல்லது வயதான காலத்தில் புரிகிறது.

கோவலன் ரொம்பத்தான் ஆட்டம் போட்டான். கையில் மிகுந்த செல்வம். இளமை. கண்ணகியின் அருமை புரியவில்லை.

நாளடைவில் எல்லா செல்வமும் கரைந்து, அடி பட்டு , கண்ணகியிடம் வந்து நிற்கிறான். கண்ணகியும் அவனை வெறுத்து ஒதுக்கவில்லை. கால் கொலுசு இருக்கிறது என்று தருகிறாள்.

இருவரும், மதுரைக்கு போகிறார்கள்.

கண்ணகியை வீட்டில் வைத்துவிட்டு, சிலம்பை விற்க கோவலன் கிளம்புகிறான்.

இந்த இடத்தில்  , கோவலன் , கண்ணகியை போற்றுகிறான். "நீ எல்லோரையும் விட்டு விட்டு என் பின்னால் வந்து விட்டாய். நான் செய்த தவறுகளை எல்லாம் பொறுத்து  எனக்கு துணையாக இருந்தாய். பொன்னே, மணியே, பூவே ...கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி ...நான் போய் இந்த சிலம்பை விற்று, கொஞ்சம் பொருள் கொண்டு வருகிறேன் " என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

பாடல்

குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்

நாணின் பாவாய் நீணில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய்
மாறி வருவன் மயங்கா தொழிகெனக்

பொருள்

குடிமுதற் = குடி முதல், உன் குடும்பம் முதல்

சுற்றமும் = உறவினர்கள்

குற்றிளை யோரும் = குற்று + இளையோரும்.  குற்றேவல் செய்யும் வேலை ஆட்களையும் 

அடியோர் பாங்கும் = வேலை ஆட்களையும்

ஆயமும் நீங்கி = தோழிகளையும் விட்டு வந்தாய் 

நாணமும் = நாணத்தையும்

மடனும் = மடனையும்

நல்லோ ரேத்தும் = நல்லவர்கள் போற்றும்

பேணிய கற்பும் = பெருமையக்குரிய கற்பையும்

பெருந்துணை யாக = பெரிய துணையாகக்

என்னொடு = என்னோடு

போந்து = என்னோடு வந்து

ஈங்கு  = இங்கு

என் = என்னுடைய

துயர் = துன்பத்தை

களைந்த = போக்கிய

பொன்னே = பொன் போன்றவளே

கொடியே = கொடி போன்றவளே

புனைபூங் கோதாய் = பூக்களை புனைந்தவளே )சூடிக் கொண்டவளே )

நாணின் பாவாய் = நாணமே உருவான பெண்ணே

நீணில விளக்கே = நீண்ட இந்த நில உலகிற்கு விளக்கு போன்றவளே

கற்பின் கொழுந்தே = கற்பின் கொழுந்தே

பொற்பின் செல்வி = செல்வம் நிறைந்தவளே

சீறடிச் = உன்னுடைய சிறந்த பாதங்களில் உள்ள

சிலம்பி னொன்று = சிலம்பில் ஒன்று

கொண் டியான்போய் = கொண்டு யான் போய்

மாறி  வருவன் = மாற்றி வருவேன்

மயங்கா தொழிகெனக் = கவலைப் படாதே

பாடலின் உள்ளோடும் சில விஷயங்களை பார்ப்போம்.

முதலாவது,  மனைவியின் தியாகம் என்பதை முதலில் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கணவனுக்கு ஒரு துன்பம் வரும் வரை அல்லது வயதான காலம் வரை காத்திருக்கக் கூடாது.

இரண்டாவது, பெண்ணின் இயல்புகளில் ஒன்று "மடமை" என்பது. மடமை என்றால்  ஏதோ முட்டாள் தனம் என்று கொள்ளக் கூடாது. "கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை" என்பார்கள். அதாவது, சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வது, தான் கொண்ட எண்ணத்தில் இருந்து மாறாமை. ஒரு பெண் மனதில் ஒன்றை நினைத்து விட்டால், அதை மாற்ற யாராலும் முடியாது. சரி, தவறு, போன்ற ஆராய்ச்சிக்கு எல்லாம் இடம் இல்லை. ஆயிரம் காரணம் சொன்னாலும்  எல்லாவற்றிற்கும் சரி சரி என்று தலையாட்டிவிட்டு , கடைசியில் தான்  முதலில் எங்கு ஆரம்பித்தாளோ அங்கேயே வந்து நிற்பாள். தான் கொண்டவற்றின்  விளைவுகளை பற்றி அவளுக்கு கவலை இல்லை.

உதாரணம் , கைகேயி. கணவனை இழந்தாள் , ஆசை ஆசையாக வளர்த்த இராமனை  இழந்தாள் , பரதனும் அவளை இகழ்ந்தான். அதெல்லாம் அவளுக்கு கவலை இல்லை. தான் வேண்டும் என்று கேட்டது வேண்டும்.

உதாரணம், சீதை. பொன் மான் வேண்டும் என்று அடம் . இராமானுக்குத் தெரிந்திருக்கிறது. அவளிடம் சொல்லி புண்ணியம் இல்லை. இராமனுக்குத் தெரியும் பொன் மான் என்று ஒன்று கிடையாது. இலக்குவன் சொல்கிறான். இலக்குவனுக்குத் தெரிந்தது  இராமானுக்குத் தெரியாது. தெரியும். இருந்தும், சீதையிடம் சொல்லி பயனில்லை. அது தான் பெண் மனம்.

இவன் தான் என் கணவன், இது என் குடும்பம் , இதை நான் போற்றி பாதுகாக்க வேண்டும்  என்று ஒரு பெண்ணின் மனதில் விழுந்து விட்டால், பின் அங்கே என்ன நிகழ்ந்தாலும் அவள் அதை விட மாட்டாள்.  கணவனோ, பிள்ளைகளோ, மாமனார் மாமியார் என்று புகுந்த வீட்டில் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், அவள் அதை விட்டு கொடுக்க மாட்டாள்.

கோவலன் செய்தது அனைத்தும் தவறு தான். இருந்தாலும் , அவனுக்கு துணை செய்வது  என்று அவள் முடிவு செய்து விட்டாள் . கடைசியாக இருப்பது சிலம்பு ஒன்று தான். இந்தா, இதையும் பெற்றுக் கொள் என்று நின்றாள்.

அரிச்சந்திரனுக்காக தன்னையே விற்க முன் வந்தாள் சந்திரமதி.

பெண்ணை, என்ன என்று சொல்லுவது. !

பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்றான் பாரதி.


 மூன்றாவது, எப்போதும் நல்ல சொற்களையே சொல்ல வேண்டும். மறந்தும்  அமங்கல சொற்களை  சொல்லக் கூடாது. மொழியிலேயே, அதன் இலக்கணத்திலேயே  மங்கல வழக்கு என்று வைத்த மொழி தமிழ் மொழி. இறந்தார் என்று  சொல்லுவது இல்லை. அமரர் ஆனார், இறைவன் திருவடி அடைந்தார் என்று தான்   சொல்லுவது வழக்கம். 

இங்கே, கோவலன் சிலம்பை விற்று வருகிறேன் என்று சொல்ல வேண்டும்.  விதி,  அவன் வாயில் அவனை அறியாமலேயே அமங்கல சொல் வந்து விழுகிறது. 

 "மாறி வருவன் மயங்கா தொழிகெனக்"

போய் மாறி வருவேன், நீ மயங்காது ஒழிக  என்கிறான்.

அவனுக்குத் தெரியாது  நடக்கப் போவது. இருந்தும், அவன் வாயில் அமங்கலச் சொல்  வருகிறது. பாடலை எழுதிய இளங்கோவுக்குத் தெரியும். கோவலன் வாயில் இருந்து அப்படி ஒரு சொல்லை வரும்படி எழுதுகிறார்.

நமக்கு ஒரு பாடம் அது. 

கோபத்தில் கூட அமங்கல சொல்லைச் கூறக் கூடாது. 

திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் போது, அமங்கல சொற்கள் காதில்  விழுந்து விடக் கூடாது என்று கெட்டி மேளம் வாசிப்பார்கள். 

நல்ல சொற்களை பேச வேண்டும். கேட்க வேண்டும்.

இப்படி ஆயிரம் வாழ்க்கைக்கு வேண்டிய நல்லவற்றை சொல்லுவது நம் தமிழ் இலக்கியம். படியுங்கள். 

நல்லதே நடக்கட்டும். 

 


Tuesday, October 4, 2016

சிலப்பதிகாரம் - மாதவியின் ஓலை

சிலப்பதிகாரம் - மாதவியின் ஓலை 


ஆண் பெண் உறவு என்பது மிகச் சிக்கலானது. எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், கனவுகள், கற்பனைகள், சமுதாய சட்ட திட்டங்கள் என்ற பலப் பல சிக்கல்களுக்கு நடுவில் பின்னப் பட்டது.

அதிலும் , ஒரு ஆணின் வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால் , அது இன்னும் சிக்கல் நிறைந்தது. முக்கோணக் காதல் கதைகளை நாம் நிறைய கேள்விப் பட்டு இருக்கிறோம்.

சிலப்பதிகாரத்தில் , இளங்கோ அப்படி ஒரு சூழ்நிலையை விவரிக்கிறார்.

மாதவியை விட்டு பிரிந்து வந்த கோவலன்  கண்ணகியை அழைத்துக் கொண்டு மதுரை வருகிறான்.

வருகிற வழியில், அவனுக்கு மாதவி ஒரு கடிதம் (ஓலை) கொடுத்து அனுப்புகிறாள்.

கோவலன் இருப்பது கண்ணகியோடு. மாதவியின் ஓலை வருகிறது.

என்ன எழுதி இருப்பாள் ? எப்படி எழுதி இருப்பாள் ? ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.


மாதவி சொல்லுகிறாள் கோவலனைப் பார்த்து (கடிதத்தில்) "நீங்கள் உங்கள் பெற்றோரை விட்டு விட்டு , மனைவியோடு ஊரை விட்டுப் போகிறீர்கள். உங்கள் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன், நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்குச் சொல்லுங்கள்"


பாடல்


அழிவு உடை உள்ளத்து ஆர் அஞர் ஆட்டி,
போது அவிழ் புரி குழல் பூங் கொடி நங்கை,
மாதவி ஓலை மலர்க் கையின் நீட்ட,
உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம்
குறு நெறிக் கூந்தல் மண் பொறி உணர்த்திக்
காட்டியது; ஆதலின் கை விடலீயான்,
ஏட்டுஅகம் விரித்து, ஆங்கு எய்தியது உணர்வோன்,
‘அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்;
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்;
குரவர் பணி அன்றியும், குலப்பிறப்புஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது,
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்;
பொய் தீர் காட்சிப் புரையோய், போற்றி!’
என்று அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து,
‘தன் தீது இலள்’ என, தளர்ச்சி நீங்கி,
‘என் தீது’ என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு-

பொருள்

அழிவு உடை உள்ளத்து = துன்பம் கொண்ட உள்ளத்தோடு

ஆர் அஞர் ஆட்டி,= அஞர் என்ற சொல் ஆழம் மிகுந்த சொல். அதாவது தனது துன்பத்தில் இன்பம் காணும் மன நிலை. Maschocism என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். Sadism என்பதன் எதிர்நிலை.  அப்படி , தனது துன்பத்தில் இன்பம் கண்ட மாதவி

போது = மலர்

அவிழ் = மலர்கின்ற , அரும்புகின்ற

புரி குழல் = இருக்கும் கூந்தல்

பூங் கொடி = பூங்கொடி போன்ற

நங்கை = பெண்

மாதவி ஓலை = மாதவியின் ஓலை

மலர்க் கையின் நீட்ட = மலர் போன்ற கையால் கொடுக்க
,
உடன் உறை காலத்து = அவளோடு கூட இருந்த காலத்தில்

உரைத்த நெய் வாசம் = பூசிய நெய்யின் வாசம்

குறு = செறிந்த , அடர்ந்த

நெறிக் = ஒழுங்காக பின்னப் பட்ட

கூந்தல் = கூந்தல்

மண் பொறி உணர்த்திக் காட்டியது = மண்ணில் விழுந்து, அந்த மண் வாசம் கோவலனின் நாசியில் உணரும்படி காட்டியது

ஆதலின் = ஆதலினால்

கை விடலீயான் = அந்த ஓலையை கையை விட்டு விடாமல் பற்றிக் கொண்டு இருந்த கோவலன்

ஏட்டுஅகம் விரித்து = அந்த ஓலையினை திறந்து

ஆங்கு = அங்கு, மாதவியின் வீட்டில்

எய்தியது உணர்வோன் = நடந்ததை அறிந்தான்

‘அடிகள் முன்னர் = பெரியவரான (கோவலன்) உங்கள் முன்னால்

யான் அடி வீழ்ந்தேன் = நான் உங்கள் கால்களில் வீழ்கிறேன்

வடியாக் = தெளிவில்லாத

கிளவி = சொல். தெளிவில்லாத என் சொற்களை

மனக்கொளல் வேண்டும் = மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது

குரவர் பணி அன்றியும் = உன் பெற்றோர்களை காக்கும் பணியினை விட்டு

குலப்பிறப்பு = உயர்ந்த குலத்தில் பிறந்த

ஆட்டியோடு = பெண்ணான கண்ணகியோடு

இரவிடைக் கழிதற்கு = இரவோடு இரவாக நகரை விட்டு நீங்கள் போனதற்கு

என் பிழைப்பு அறியாது = நான் செய்த குற்றம் என்ன

கையறு நெஞ்சம் = தெரியாமல் தவிக்கும் என் நெஞ்சம்

கடியல் வேண்டும் = அதனை நீங்கள் போக்க வேண்டும்

பொய் தீர் = பொய் கலப்பில்லாத

காட்சிப் = பார்வையைக் கொண்ட

புரையோய் =  உயர்ந்தவனான நீ

போற்றி! = உன்னைப் போற்றுகின்றேன். நீ வாழ்க

என்று அவள் எழுதிய = என்று அவள் எழுதிய

இசைமொழி உணர்ந்து, = இனிய மொழி உணர்ந்து

‘தன் தீது இலள்’ என = அவள் குற்றம் அற்றவள் என்று நினைத்து


தளர்ச்சி நீங்கி = வாட்டம் நீங்கி

‘என் தீது’ என்றே = என்னுடைய குற்றம் தான் என்று

எய்தியது உணர்ந்து-ஆங்கு = நடந்ததை உணர்ந்து , அங்கு

காதலியின் கடிதம் கையில். அவள் கூந்தல் வாசம் அந்தக் கடிதத்தில்  மணக்கிறது. கூந்தல் வாசத்தோடு, அவள் வீட்டின் அந்தத் தரையின் வாசமும் வருகிறது. எனவே கூந்தலை அவிழ்த்து தரையில் விழும்படி  அவள் இருக்கிறாள் என்று கோவலன் அறிந்து கொண்டான். தன்னைப் பிரிந்து கவலையில் இருக்கிறாள் என்று அவன் உள்ளம்  புரிந்து கொண்டது. 

மேலும், அவள் கேட்க்கிறாள் "எனக்காகவா நீங்கள் ஊரை விட்டுப் போகிறீர்கள்.  நான் என்ன தவறு செய்தேன்" என்று கேட்க்கிறாள்.

தாசி குலத்தில் பிறந்தவள்தான். இருந்தும், கோவலன் ஒருவனையே  நினைத்து வாழ்ந்தாள்.


யாரை குறை சொல்லுவது ?

கணிகையர் குலத்தில் பிறந்த மாதவியையா ?

அவள் மேல் காதல் கொண்ட கோவலனையா ?

கோவலனை கண்டிக்காத கண்ணகியையா ?

எல்லாம் விதி. விதியைத் தவிர வேறு எதைச் சொல்லுவது ?

மாதவியின் அந்தக் கடிதத்தை கோவலன் என்ன செய்தான் தெரியுமா ?

தன் தந்தைக்கு அனுப்பி வைத்தான். 

திருமணமான ஒருவன். தன் மனைவி அல்லாத இன்னொரு பெண்ணின் கடிதத்தை , தன்னுடைய தந்தைக்கு அனுப்பி வைக்கிறான். 

மாதவியின் காதலின் மகத்துவம் அது.  கண்ணகி உயர்ந்த குலத்தில் பிறந்த  பெண் என்றும், அவள் கோவலனின் மனைவி என்றும் அவளுக்குத் தெரியும். 

இருந்தும் கடிதம் எழுதுகிறாள். அவனும் அதை புரிந்து கொண்டு அந்தக்  கடிதத்தை தனது தந்தைக்கு அனுப்பி வைக்கிறான். 

  

Sunday, October 2, 2016

சிலப்பதிகாரம் - சதுக்க பூதம்

சிலப்பதிகாரம் - சதுக்க பூதம் 


தவறு செய்பவர்களுக்கு பயம் இல்லாமல் போய் விட்டது. மாட்டிக் கொண்டால் என்ன ? சட்டம், வழக்கு, வக்கீல், சாட்சி, மேல் முறையீடு , சட்டத்தில் உள்ள ஓட்டைகள் , என்று ஏதோ வழியில் தப்பி விடலாம் என்று நினைக்கிறார்கள். தப்பியும் விடுகிறார்கள் பல பேர்.

சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதில் உள்ள பலவீனம் தவறு செய்பவர்களுக்கு வசதியாகப் போய் விடுகிறது.

தெரு முனையில் , போக்கு வரத்து விதியை மீறுபவரை பிடிக்கும் காவலரில் இருந்து , உயர் அதிகாரி வரை இலஞ்சம் கொடுத்து சரி கட்டி விடலாம் என்று பணம் படைத்த தவறு செய்பவர்கள் நினைக்கிறார்கள். பணம் இருந்தால் போதும் , எந்த குற்றத்தில் இருந்தும் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் வலுத்து விட்டது.

மனசாட்சி என்பது இல்லாமல் போய் விட்டது.

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க , பொய்த்த பின், தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்றார் வள்ளுவர்.

சிலப்பதிகார காலத்தில் , சதுக்க பூதம் என்று ஒன்று இருந்தது.

 சதுக்கம் என்றால் நாலு வீதி சேரும் இடம். ஊருக்குப் பொதுவான  ஒரு இடம்.

அங்கே ஒரு பூதம் இருக்குமாம்.

தவறு செய்தால் அல்ல, செய்ய வேண்டும் என்று நினைத்தாலே போதுமாம், அந்த பூதம் பெரிய குரல் எழுப்பி சத்தம் போட்டு, அப்படி தவறு செய்பவர்களை பிடித்து, நடு வீதியில் வைத்து நைய புடைத்து , கடித்து தின்று விடுமாம்.

தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே போதும், பூதம் "ஓ" என்று கத்திக் கொண்டு வந்து, ஊருக்கு நடுவில் வைத்து அடித்து துவைத்து பிழிந்து , கடித்து தின்று விடும்.

தவறான எண்ணம்  வருமா ?

யார் யாரை எல்லாம் அந்த சதுக்க பூதம் பிடித்து தின்னும் என்று இளங்கோ அடிகள் ஒரு பட்டியல்  தருகிறார்.

பாடல்

தவமறைந் தொழுகுந் தன்மை யிலாளர்
அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர்
அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக்
காத நான்கும் கடுங்குர லெடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும


பொருள்

தவ = தவம்

மறைந் தொழுகுந் தன்மை யிலாளர் = வேடத்தில் மறைந்து , தவத்திற்கு உரிய  தன்மை இல்லாதவர்கள்

 
அவமறைந் தொழுகும் = அவலத்தை மறைத்து வாழும்

அலவற் பெண்டிர் = விலை மகளிர் 

அறைபோ கமைச்சர் = சூது செய்யும் அமைச்சர்கள் 

பிறர்மனை நயப்போர் = மற்றவனுடைய மனைவியை விரும்புபவன்

பொய்க்கரி யாளர் = கரி என்றால் சாட்சி. பொய் கரி என்றால் பொய் சாட்சி சொல்பவர்கள்

புறங்கூற் றாளரென் = புறம் கூறுபவர்கள்

கைக்கொள் பாசத்துக் = கையில் உள்ள பாசக் கயிற்றால்

கைப்படு வோரெனக் = வீசிப் பிடித்து  (கையில் கொண்டு)

காத நான்கும் = நான்கு காதமும் கேட்க்கும் படி

கடுங்குர லெடுப்பிப் = பெரிய குரலை எழுப்பி

பூதம்= பூதம்

புடைத்துணும் = அடித்து புடைத்து உண்ணும்

பூத சதுக்கமும = பூதம் வாழும் சதுக்கமும்

போலி சாமியார்களை பிடித்து தின்று விடும்.

பொய் சாட்சி சொல்பவர்களை தின்று விடும்

மற்றவர்களை பற்றி புறம் சொல்லுபவர்கள், மற்றவன் மனைவியை விரும்பினாலே போதும்,  பூதம் வந்து பிடித்துக் கொண்டு போய்விடும்.

சூது செய்யும் அமைச்சர்களை கொண்டு போய் தின்று விடும்.

தவறு செய்யும் எண்ணம் வருமா ?

ஊரின் நடுவில் ஒரு பூதத்தின் சிலை இருக்கும்.

அந்த ஊரில் உள்ள சின்ன பிள்ளைகளுக்கு இப்படி சொல்லி   வளர்ப்பார்கள். தப்பு நினைத்தால் பூதம் கடித்து தின்று விடும் என்று.

போகும் போதும், வரும் போதும்  அதை பார்ப்பவர் மனதில், குறிப்பாக  குழந்தைகள் மனதில் கெட்ட எண்ணங்கள் வளராது.

பூதம் பிடித்து தின்றதோ இல்லையோ. அப்படி இருக்க வேண்டும் என்று  எல்லோரும் நினைத்து ஊர் நடுவில் ஒரு சிலையை வைத்து இருந்தார்கள்.

நாகரீகத்தின் உச்சம் தொட்டவர்கள்  நாம்.

தவறான ஒன்றை நினைப்பதே கூட தவறு என்று  வாழ்ந்தவர்கள் நம் முன்னவர்கள்.

பெருமைப் படுவோம்.



Monday, September 26, 2016

சிலப்பதிகாரம் - வாயிலோயே வாயிலோயே

சிலப்பதிகாரம் - வாயிலோயே வாயிலோயே 


தவறான தீர்ப்பினால் கோவலன் மாண்டு போனான். கண்ணகி வீறு கொண்டு எழுகிறாள்.

வாழும் நாள் எல்லாம் கணவனை பிரிந்து இருந்தவள். கோவலன் மாதவி பின்னால் போய் விட்டான். மனம் திருந்தி வாழலாம் என்று வந்தவனுடன் மதுரை வந்தாள். வந்த இடத்தில் , விதியின் விளையாட்டால் கோவலன் கொல்லப் படுகிறான்.

கண்ணகிக்கு தாங்க முடியவில்லை. இது வரை அமைதியாக இருந்த பெண், ஏரி மலையாக வெடிக்கிறாள்.

வாழ்க்கையின் மேல் உள்ள மொத்த கோபமும் பொங்கி எழுகிறது.

பாண்டியன் அரண்மனைக்கு வருகிறாள்.

வாசலில் நிற்கும் காவலனைப் பார்த்து சொல்கிறாள்...

அறிவில்லாத அரசனின் மாளிகைக்கு காவல் நிற்கும் காவலனே, கையில் ஒரு சிலம்புடன், கணவனை இழந்தவள் வாசலில் நிற்கிறாள் என்று உன் அரசனிடம் போய் சொல் என்கிறாள்.

பாடல்

வாயி லோயே வாயி லோயே 
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து 
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே 
இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள் 
கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று 
அறிவிப் பாயே அறிவிப் பாயே, என


பொருள்


வாயி லோயே = வாசலில் நிற்பவனே (காவல் காப்பவனே)

வாயி லோயே = வாசலில் நிற்பவனே (காவல் காப்பவனே)

அறிவறை போகிய = ஞானம் இல்லாத

பொறியறு = புலன்கள் அறிவோடு தொடர்பு அற்ற

நெஞ்சத்து = மனதைக் கொண்ட

இறைமுறை = அரச முறை

பிழைத்தோன்= பிழைத்த அரசனின்

வாயி லோயே = வாயில் காப்பாளனே

இணையரிச் = இணை + அரி = இணையான அரிய

சிலம்பொன் றேந்திய கையள் = சிலம்பு ஒன்று ஏந்திய கையள்

கணவனை யிழந்தாள் = கணவனை இழந்தவள்

கடையகத் தாளென்று = வாசலில் நிற்கிறாள் என்று

அறிவிப் பாயே அறிவிப் பாயே, என = அறிவிப்பாயே, அறிவிப்பாயே என்றாள்


உணர்ச்சியின் உச்சத்தில் இளங்கோவடிகள் வடிக்கும் கவிதையின் ஆழத்தை  நாம் சிந்திக்க வேண்டும்.

வாயிலோயே, வாயிலோயே,
அறிவிப்பாயே, அறிவிப்பாயே

என்று ஏன் இரண்டு முறை கூறுகிறாள் ?

இந்த மன்னனுக்கு எதுவும் ஒரு முறை சொன்னால் புரியாது. அவசர புத்திக்காரன். ஒண்ணுக்கு இரண்டு முறை சொன்னால் தான் புரியும் என்று  நினைத்து இரண்டு முறை கூறுகிறாள்.

நாம் ஒரு இடத்தில் வேலை பார்க்கிறோம் என்றால், அந்த நிறுவனத்தின்  மேலதிகாரி எப்படி இருப்பானோ அப்படி தான் , அந்த அலுவலகத்தில் இருக்கும் மற்றவர்களும் இருப்பார்கள் என்று உலகம்  எடை போடும்.

அரசன் மோசமானவன் , அப்படிபட்ட அரசன் கீழ் வேலை பார்க்கும் வாயில் காப்பாளனே என்று அவனையும் ஏசுகிறாள் கண்ணகி.


அரசன் மேல் மூன்று குற்றங்களை சுமத்துகிறாள் கண்ணகி.


அறிவறை போகிய = மனத்  தெளிவின்மை

பொறியறு நெஞ்சத்து = பொறி என்றால் புலன்கள். கண் காது மூக்கு
போன்ற புலன்கள் , புத்தியோடு சேர்ந்து வேலை
செய்யவில்லை.காதால் கேட்டதை அப்படியே உண்மை என்று நம்பிவிட்டான்  பாண்டியன். சிந்திக்கவில்லை . அறிவுக்கு வேலை தரவில்லை.

இறைமுறை பிழைத்தோன் = அரசனை இறைவனுக்கு இணையாக வைத்துப் பார்த்தவர்கள்  நம்  முன்னோர்கள். ஏன் என்றால், இறைவனுக்கு  மூன்று தொழில். படைத்தல், காத்தல், அழித்தல் என்று.

நாம் இறைவனிடம் என்ன வேண்டுவோம் ?

இறைவா என்னை படைத்து விடு என்றா ? இல்லை. அது தான் ஏற்கனவே படைத்து  விட்டானே.

இறைவா என்னை அழித்துவிடு என்றா - யாரும் அப்படி கேட்க மாட்டார்கள்.

என்னை காப்பாற்று என்றுதான் வேண்டுவார்கள்.

காப்பதுதான் இறைவனின் தொழில்களில் நாம் விரும்பி வேண்டுவது.

அரசனுக்கும் தன் குடிகளை காக்கும் கடமை இருப்பதால், அரசனை  இறைவனுக்கு ஒப்பிட்டு கூறினார்கள்.

இறை மாட்சி என்று ஒரு அதிகாரமே  வைத்தார் வள்ளுவர்.

இது ஒரு புறம் இருக்கட்டும்.


இருப்பதோ மன்னர் ஆட்சி. மன்னனின் அதிகாரம் வானளாவியது. அவன் ஒன்று  செய்தால் அவனை யாரும் ஏன் என்று தட்டிக் கேட்க முடியாது.

கண்ணகியோ ஒரு அபலைப் பெண். உலகம் அறியாதவள். கணவனை இழந்தவள். புரியாத, தெரியாத ஊர்.

நேரே அரண்மனைக்கு சென்று மன்னனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனையும் தருகிறாள்.

ஆட்சி எப்படி நடந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

முடியுமா இன்று ? தவறு செய்யும் ஒரு அரசியல்வாதியை குடிமக்கள் தட்டிக் கேட்க முடியுமா ?

அருகில் வர விடுவார்களா ?

அரசன், நீதிக்கு கட்டுப் பட்டான். குடிகளின் குறை கேட்டான். தான்  குடி மக்களுக்கு கட்டுப் பட்டவன் என்று நினைத்தான்.

ஒரு கடைக் கோடி பெண் கூட , மாளிகையைத் தட்டி நீதி கேட்க முடிந்தது.

அப்படி இருந்தது ஒரு  காலம்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இன்னொரு பக்கம், இது சொல்லும் வாழ்க்கை நெறி முறை.

தவறை யார் செய்தாலும் தட்டி கேட்க வேண்டும். அந்த போராடும் மனோ நிலை வேண்டும்.  அரசன் என்ன செய்வானோ, ஒரு வேளை என்னையும்  வெட்டி விடுவானோ என்று கண்ணகி பயப் படவில்லை. துணிந்து போராடினாள் . இன்று , ஞாயம் தன் பக்கம் இருந்தால் கூட  போராட தயாராக இல்லை யாரும். பயந்து பயந்து வாழப் பழகி விட்டோம்.

ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவன் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தவறு செய்பவர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ள மற்றவர்களை மாட்டி விட நினைப்பார்கள். தலைமை பொறுப்பில் உள்ளவர்கள்  நிதானமாக இருக்க வேண்டும். ஒரு வினாடி நிதானம் தவறினான் பாண்டியன். ஊரே எரிந்து சாம்பல் ஆனது.

யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும்.

பாடம் படிக்க வேண்டும்.



http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_74.html



Thursday, March 10, 2016

சிலப்பதிகாரம் - சிலம்பு கூறும் அறம்

சிலப்பதிகாரம் - சிலம்பு கூறும் அறம் 




அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்


உலகத்தில் ஒரே ஒரு கதை தான் உண்டு. மீதி அத்தனை கதையும் அந்த மூலக் கதையின் கருவை எடுத்துக் கொண்டு, பெயர்களை, சூழ்நிலைகளை மாற்றி மாற்றி எழுதுவதுதான்.

அது என்ன கதை.

ஒரு ஊரில் ஒரு கதாநாயகன் இருந்தான். அவனுக்கு சில நல்ல குணங்கள் இருந்தன. ஒரு நாள் அவனுக்கு ஒரு துன்பம் நிகழ்ந்தது. தன்னுடைய நல்ல குணங்களைக் கொண்டு அவன் அந்தத் துன்பத்தில் இருந்து மீண்டு வந்தான்.

இந்த ஒரு கதை தான் உண்டு.

அது இராமாயணமாகட்டும் , பாரதமாகட்டும், எந்த தமிழ், ஆங்கிலப் படமாக இருந்தாலும் , இது ஒன்று தான் கதை.

கதைக்கு ஒரு கதாநாயகன் இருப்பான், அவனுக்கு துணையாக ஒரு நாயகி, அவர்களுக்கு சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள். இவர்களுக்கு ஒரு எதிரி அல்லது வில்லன். வில்லனின் கொடுமைகளை வென்று எடுப்பதுதான் கதை.

ஆனால்,

இதிலிருந்து மாறுபட்டு, மிக மிக மாறுபட்டு எழுதப் பட்ட கதை சிலப்பதிகாரம்.

உங்களுக்குத் தெரிந்த கதைதான்.

கோவலன், கண்ணகியை மணந்தான். பின் மாதவியிடம் காதல் வசப்பட்டான். செல்வத்தை இழந்தான். பின் கோவலனும் கண்ணகியும் மதுரை சென்றார்கள். பொய் பழி சுமத்தப் பட்டு கோவலன் கொலையுண்டான். அதனால் சினந்த கண்ணகி மதுரையை தீகிரையாக்கினாள்.

கோவலன் கதாநாயகன்.
கண்ணகி கதாநாயகி.

வில்லன் யார் ?

கோவலனுக்கு வில்லன் யார் ? மாதவியா ? அவள் மேல் அவன் கொண்ட காதலா ?  தான் தப்பிக்க கோவலனைக் கை காட்டி விட்ட பொற்கொல்லனா ? தவறான தீர்ப்பு சொன்ன பாண்டியனா ?

யாரும் இல்லை. கோவலன் அங்கு வருவான் என்று போர்கொல்லன்னுக்குத் தெரியாது. அவனுக்கு கோவலன் மேல் பகை இல்லை.

விதி.

விதிதான் வில்லன் என்று கொள்ளலாம்.

நம் தமிழ் இலக்கியம் விதியை வெகுவாக நம்பி இருக்கிறது.

ஊழ் என்று அவர்கள் அழைத்தார்கள். வினை என்றும் கூறப் பட்டது.

திருக்குறள், கம்ப இராமாயணம் என்று எங்கு பார்த்தாலும் விதியின் பலம் நம்பப் பட்டது.


அவன் கால் பட்டு அழிந்தது என் தலை மேல் அயன் கை எழுத்தே என்பார் அருணகிரிநாதர்.

விதியை நம்பாத  இலக்குவன் கூட பின்னாளில், சீதை அவனை கடிந்து பொன் மான் பின்னே அனுப்பிய   போது , விதியின் போக்கை எண்ணி நொந்து சென்றான்.

சிலப்பதிகாரம் மூன்று அறத்தை முன்னிறுத்தி காப்பியம் சொல்கிறது.


1. அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
2. உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
3. ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்.  அரசியல் என்றால் இந்த பொறுப்பும் அரசியல் தான். தேர்தலில் நின்று வெற்றி பெற்று வருவது மட்டும் அரசியல் அல்ல.

அரசியல் பற்றி கூறவந்த வள்ளுவர், அதனை இறைமாட்சி என்று குறிப்பிடுகிறார். இறைவனின் தொழில் அது.  உயிர்களைக் காப்பது.

அரசியலில் பிழை செய்தவர்களை யார் தண்டிப்பது ?  அரசன் தவறு செய்தால் அவனை யார்   தண்டிப்பது. அறம் அவர்களைத் தண்டிக்கும்.  இதை எல்லா சட்ட சபையிலும், பார்லிமென்ட்டிலும், நிறுவனகளின் தலைமை இடங்களிலும் எழுதி வைக்க வேண்டும். சட்டம் தண்டிக்காமல் விடலாம். நீதி மன்றம் தண்டிக்காமல் விடலாம். தெய்வம் கூட மன்னிக்கலாம். அறம் தண்டித்தே தீரும். யாரும் விதி விலக்கு இல்லை.

நல்ல குணம் உள்ள பெண்களை உயர்ந்தவர்கள் போற்றுவார்கள். பெண் குணம் கெட்டால் சமுதாயம் சீரழிந்து போகும். எனவே, ஒரு சமுதாயம் உயர வேண்டுமானால், அது நல்ல பெண்களை போற்றியே ஆக வேண்டும்.

ஊழ்வினை எங்கு போனாலும் விடாது. செய்த வினைக்கு பலன் கிடைத்தே தீரும். இந்தப் பிறவியில் இல்லாவிட்டால் அடுத்த பிறவியில் கிடைக்கும்.

இந்த மூன்று கருத்துக்களை கொண்டு பின்னப்பட்ட காவியம் சிலப்பதிகாரம்.

அதிலிருந்து சில பாடல்களை வரும் நாட்களில் சிந்திப்போம்.

(for other poems , http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_10.html )

Saturday, August 16, 2014

சிலப்பதிகாரம் - வினை விளை காலம்

சிலப்பதிகாரம் - வினை விளை காலம் 


மற்ற காப்பியங்களில் இருந்து சிலப்பதிகாரம் வித்தியாசப்பட்டது.

இதன் கதாநாயகன் கோவலன். கதாநாயகனுக்கு உரிய பெரிய வலிமையான குணங்கள் எதுவும் கிடையாது. முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து இருந்தது.

நடன மாதைக் (மாதவி) கண்டு சபலப் படுகிறான். அவள் பின்னே போகிறான். சொத்தை அழிக்கிறான்.

மானம் தாங்காமல் மனைவியை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடுகிறான்.

சாதாரண நடுத்தர வீட்டு குடும்பத் தலைவன் போல, மனைவியின் நகையை விற்கப் போகிறான். போன இடத்தில் பொற் கொல்லானால் காட்டிக் கொடுக்கப்பட்டு (தவறாக) வெட்டுப்பட்டு உயிரை விடுகிறான்.

பெரிய பலசாலி இல்லை. பெரிய நண்பர்கள் கிடையாது.  சாதாரண மனிதன். பலவீனன். மனைவியிடம் மன்னிப்பு கேட்க்கிறான். அவள் காலைத் தொடுகிறான். செய்த செயலுக்கு வருந்துகிறான்.

இப்படிப் பட்ட ஒரு சாதாரண மனிதனை சுற்றி பிணையப்பட்ட கதை.

இளங்கோ அடிகள் விதியை  நம்புகிறார்.

வாழ்கை விதியின் வழிப்படி செல்கிறது. தனி மனிதன் அதை ஒன்று செய்ய முடியாது என்று சொல்லிச் செல்கிறார்.

கோவலன் மாதவியைக் கண்டது, அவள் மேல் மனதை பறி கொடுத்தது, கண்ணகி அதை கண்டிக்காமல் விட்டது, அவர்கள் மதுரை சென்றது, அந்த நேரத்தில் அரசியின் கொலுசு காணாமல் போனது, அதை அறியாமல் கோவலன் தன் மனைவியின் கொலுசை விற்கச் சென்றது, பாண்டிய மன்னன் விசாரிக்காமல் கொலை செய்யச் சொன்னது....எல்லாம் விதியின் போக்கு.... யார் என்ன செய்திருக்க முடியும் என்பது போல கதை செல்கிறது.

 

மிக மிக வித்தியாசமான கதை.

அந்தக் கதையில்...

காவலர்கள் அரசனிடம் , அரசியின் கால் சிலம்பை களவாடிய கள்வன் கிடைத்து விட்டான் என்று சொல்ல, தீர விசாரிக்காமால், அவனைக் கொன்று அந்த சிலம்பி கொண்டு வாருங்கள் என்று சொல்கிறான்.

பாடல்

வினைவிளை கால மாதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரா னாகி
ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கென்
தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகில்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக்

பொருள்

வினைவிளை கால மாதலின் = வினை விளைகின்ற காலம் ஆதலின்.

யாவதும் = ஆவதும்

சினையலர் வேம்பன் = சினை என்றால் கிளை. கிளையில் பூத்த வேப்பம் பூவின் மாலையை அணிந்த பாண்டியன் 

தேரா னாகி = ஆராயாமல்

ஊர் காப்பாளரைக் கூவி = ஊர் காவலனைக் கூப்பிட்டு

ஈங்கென் = இங்கு என்

தாழ் பூங்கோதை = மனைவியின்

தன்காற் சிலம்பு = கால் சிலம்பை

கன்றிய கள்வன் = திருடிய கள்வன் 

கைய தாகில் = கையில் இருந்தால்

கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் = (அவனைக்) கொன்று சிலம்பை கொணர்க இங்கு என்றான்.

சற்று உன்னிப்பாக கவனித்தால், வார்த்தைகள் வாழ்கையை புரட்டிப் போட்டது விளங்கும்.

கன்றிய கள்வன் கையதாகில் = சிலம்பு அவன் கையில் இருந்தால் என்பது ஒரு அர்த்தம். திருடிய அந்த கள்வன் உங்கள் கையில் (அகப்பட்டு ) இருந்தால் என்பது இன்னொரு அர்த்தம்.

கொன்றச் சிலம்பு கொணர்க = கொன்ற என்பது கொண்ட என்று இருந்திருந்தால் , அவன் கொண்ட சிலம்பை இங்கு கொண்டு வாருங்கள் என்று  அர்த்தம் வரும். கொன்ற சிலம்பு கொணர்க என்றால் அவனை கொன்று அந்த சிலம்பை  கொண்டு வாருங்கள் என்று அர்த்தம் கொள்வது அவ்வளவு சரியாக இருக்காது.

எது எப்படியோ, வார்த்தைகள் தடம் மாறி, கோவலன் வாழ்க்கை பறி போனது.

அதற்கு காரணம் விதி விளையும் காலம் என்று விதி தான் காரணம் என்கிறார் இளங்கோ  அடிகள்.

வேறு எப்படிதான் இதை விளக்குவது ?


Tuesday, August 12, 2014

சிலப்பதிகாரம் - வண்டு ஊசலாடும் புகார் எம் ஊரே

சிலப்பதிகாரம் - வண்டு ஊசலாடும் புகார் எம் ஊரே 


அவளை, அவன் அப்படி காதலித்தான். அவளோ முதலில் அவனைத் திரும்பி கூட பார்க்கவில்லை. இருந்தும் அவன்  விடவில்லை.அவளுக்கு பரிசு பொருள் எல்லாம் வாங்கித் தருவான்.

நாள் ஆக நாள் ஆக அவளுக்கும் அவன் மேல் அன்பு பிறந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள்.

அப்படியே  சிறிது நாள் சென்றது.

முதலில் இனித்த காதல், நாள் பட நாள் பட சுவாரசியம் குறையத் தொடங்கியது.

அவளை பார்க்க வருவது குறைந்தது. அவளோடு பேசும் நேரமும் குறைந்தது.

அவன் அவளை கெஞ்சியது போக, இப்போது அவள் அவனை கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்.

அந்த ஊரில், வண்டுகள் இருக்கும். அவை குளத்தில் மலரும் நீல மலர்களைத் தேடி வரும். அங்கே பெண்கள் நீராட , நீர் எடுக்க வருவார்கள். அவர்களின் முகம் நீரில் பட்டு பிரதிபலிக்கும்.

அந்த வண்டுகளுக்கு குழப்பம் . எது மலர் என்று ?

உண்மைக்கும், பொய்க்கும் வித்தியாசம் தெரியாமல் தள்ளாடும் வண்டுகளைக் கொண்டது எம் ஊர் என்கிறாள் தோழி.


 ஊடாடும் அர்த்தம் ... நீ நல்லவனா அல்லது மற்றவனா என்று தெரியாமல் தலைவி உன்னிடம் மனதை பறிகொடுத்து விட்டாள்

பாடல்


காதல ராகிக் கழிக்கானற் கையுறைகொண் டெம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாமிரப்ப நிற்பதையாங் கறிகோ மைய
மாதரார் கண்ணு மதிநிழல்நீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப்
போது மறியாது வண்டூச லாடும் புகாரே எம்மூர்.

கொஞ்சம் சீர் பிரிப்போம்

காதலராகிக் கழிக் கானற் கையுறை கொண்டு எம் பின் வந்தார் 
ஏதிலர் தாமாகி யாம் இரப்ப நிற்பதை யாம் அறியோம் ஐய 
மாதரார் கண்ணு மதி நிழல்நீரிணை கொண்டு மலர்ந்த நீலப்
போதும்  அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம்மூர்.


பொருள்


காதலராகிக் = காதலராகி

கழிக் கானற் = கடற்கரையில் உள்ள சோலையில்

கையுறை = பரிசுகள்

கொண்டு எம் பின் வந்தார் = கொண்டு எம் பின்னால் வந்தார்

ஏதிலர் = (இன்று) யாரோ போல

தாமாகி = அவர் ஆகி

யாம் இரப்ப  நிற்பதை = நாங்கள் வேண்டி நிற்பதை

யாம் அறியோம் ஐய = நாங்கள் அறியவில்லை ஐயா. இப்படியும் நடக்கும் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை ஐயா

மாதரார் கண்ணு = பெண்களின் கண்ணும்

மதி நிழல் = நிலவின் நிழலைக்  

நீரிணை கொண்டு = நீரினில் கொண்டு

மலர்ந்த = மலர்ந்த 

நீலப் போதும்  = போது என்றால் மலர். நீல மலர்களை

அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம்மூர் = அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எங்கள் ஊர்

கோவலனும் மாதவியும் தனித்து இருக்கும்போது , மாதவி பாடிய பாடல்



Sunday, August 3, 2014

சிலப்பதிகாரம் - சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்

சிலப்பதிகாரம் - சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்


கணவன் வேறொரு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருக்கிறான். மனைவிக்கும் அது தெரியும். வீட்டில் உள்ள பொருள்களையெல்லாம் அந்த விலை மகளிடம் தருகிறான். எல்லாம் தீர்ந்த பின் ஒரு நாள் மனைவி முன் வந்து நிற்கிறான்.

இன்றைய சூழ்நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ?

மனைவி என்ன சொல்லி இருப்பாள் ? கணவன் என்ன சொல்லி இருப்பான் ?

கோவலன் தவறு செய்தான். மாதவி வீட்டில் இருந்தான். செல்வங்களை எல்லாம் தொலைத்தான்.

பின் கண்ணகியிடம் வந்தான். அவளிடம் தான் தவறு செய்து விட்டதாகக் கூறவில்லை.

மன்னிப்பும் கேட்கவில்லை. எனக்கு வெட்கமாக இருக்கிறது என் செயலைக் கண்டால் என்று மட்டும் கூறுகிறான்.

கண்ணகி தன் கால் சிலம்பைத் தருகிறாள். என்னோடு வா என்று அவளை அழைத்துக் கொண்டு மதுரை வருகிறான்.

வரும் வழி எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. மதுரை வந்து, மாதரி வீட்டில் தங்கும் போது, சொல்லுகிறான்.

கண்டவர்களோடு தங்கினேன். சிறு சொல் பேசும் கூட்டத்தாரோடு சேர்ந்தேன். பெரியவர்கள் சொன்ன வழியில் இருந்து விலகினேன். தாய் தந்தையர்க்கு செய்ய வேண்டிய கடமையையும் செய்ய வில்லை. சிறிய வயதில் பெரிய அறிவுடைய உனக்கும் தீமை செய்தேன். எனக்கு நல்ல கதி கிடைக்காது என்று வருந்தி சொல்கிறான்.


 பாடல்

வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர்

நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ
இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன்
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என்செய் தனையென

பொருள்



வறுமொழியாளரொடு = வறுமையான மொழி உள்ளவர்கள். பயனில்லாத சொல் பேசுபவர்களோடும் 

வம்பப் பரத்தரொடு - வம்பு அளக்கும் பரத்தமை கொண்டோரோடும்

குறுமொழிக் கோட்டி = சிறுமையான மொழி பேசும்

நெடு நகை புக்கு - நகைப்புக்கு இடமாகி

பொச்சாப்பு உண்டு - மறதியும் கொண்டு

பொருள் உரையாளர் = பொருள் நிறைந்த மொழிகளை சொல்லும் பெரியவர்களின்


நச்சுக் கொன்றேற்கு - நல ஒழுக்கத்தை கொன்று

நன்னெறி உண்டோ - எனக்கு நல்ல கதி கிடைக்குமா ?

இருமுது குரவர் = பெற்றோர்கள்

 ஏவலும் பிழைத்தேன் - அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளையும் செய்யாமல் பிழை செய்து விட்டேன்

சிறுமுதுக் = சிறிய வயதில் முதிய அறிவைக் கொண்ட உனக்கும் 


குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் - குறை உண்டாகும்படி சிறுமை செய்தேன்

வழு வெனும் பாரேன் - தவறு என்றும் அறிய மாட்டேன்

மா நகர் = பெரிய ஊரான நம் ஊரை விட்டு

மருங்கு ஈண்டு எழுகென எழுந்தாய் - வா என்று சொன்னபோது உடனே என்னுடன் வந்தாய்

என் செய்தனை என - என்ன பெரிய காரியம் செய்தாய் ;

      

Sunday, July 13, 2014

சிலப்பதிகாரம் - மனைவியின் வாடிய மேனி கண்டு

சிலப்பதிகாரம் - மனைவியின் வாடிய மேனி கண்டு 


மாதவியோடு சில காலம் தங்கி, பொருளை எல்லாம் தொலைத்து விட்டு கண்ணகியைத் தேடி வருகிறான் கோவலன்.

தான் செய்த தவறுக்கு  காரணம் சொல்லவில்லை. கண்ணகியை நேருக்கு நேர் பார்த்து

"பொய்யான பெண்ணோடு கூடி, நம் முன்னோர்கள் சேர்த்துத் தந்த பொருள் யாவும் தொலைத்து விட்டேன். இப்போது ஒன்றும் இல்லாமல் வந்து நிற்கிறேன். இது எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது "

என்றான்.

வீடு வந்தவுடன் நேரே படுக்கை அறைக்குப் போகிறான். "பாடு அமை சேக்கை " என்கிறார் இளங்கோ. பெருமை வாய்ந்த படுக்கை அறை என்று அதற்கு பெருமை சேர்கிறார் இளங்கோ. அங்கே கண்ணகி வாடி வதங்கி படுத்து இருக்கிறாள். அவளை கண்டு வருந்துகிறான் கோவலன்.

பாடல்

பாடமை சேக்கையுட் புக்குத்தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தங்கண் டியாவுஞ்
சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன


 சீர் பிரித்த பின்

பாடு அமை சேக்கையுள் புகுந்து தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம் கண்டு யாவும் 
சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி 
குலம் தரும்  வான் பொருள் குற்றைத்  தொலைந்த
இலம் பாடு நானும் தரும் எனக்கு என 

பொருள்

பாடு அமை = பெருமை சேர்ந்த

சேக்கையுள் = படுக்கை அறையுள். ஒன்று சேரும் அறை சேக்கை

புகுந்து = நுழைந்து

தன் = தன்னுடைய

பைந்தொடி = ஆபரணங்களை அணிந்த பெண். ஒரு வேளை அணிந்திருந்த என்ற நோக்கில் கூறி இருப்பாரோ

வாடிய மேனி = வாடிய மேனி

வருத்தம் கண்டு = வருந்தம் கண்டு

யாவும் = அனைத்தையும்

சலம் புணர் கொள்கைச் = வஞ்சகக் கொள்கை கொண்ட

சலதியொடு ஆடி = பொய்யான பெண்ணின் பின்னால் போய்

குலம் தரும்  = என் முன்னோர்கள் சேர்த்து வைத்த

வான் பொருள் குற்றைத் = வானத்தை எட்டும் அளவுக்கு குன்று போல குவித்து இருந்த செல்வத்தை 

தொலைந்த = தொலைத்த

இலம் பாடு = ஒன்றும் இல்லாமல் படும் பாடு , இலம் பாடு

 நாணும் தரும் எனக்கு என = நாணத்தையும் தரும். நாணும் என்பதில் உள்ள "ம்" பலப் பல பொருள்களைத் தருகிறது.  வருமையைத் தரும், இழிவைத் தரும், துன்பத்தைத் தரும் , நாணத்தையும் தரும்.

எனக்குள் ஒரு சந்தேகம்....

அழகான மனைவி - கண்ணகி ஒன்றும் அழகில் குறைந்தவள் அல்ல.

குன்றைப் போல குவித்து வைத்த செல்வம்.

ஏன் கோவலன் கண்ணகியை விட்டு மாதவி பின் போனான் ?

கோவலனைப் போகத் தூண்டியது எது ?

கண்ணகிகள் சிந்திக்க வேண்டிய விஷயம்.



Friday, May 31, 2013

சிலப்பதிகாரம் - கொலைகாரக் குடும்பம்

சிலப்பதிகாரம் - கொலைகாரக் குடும்பம் 


(வயது வந்தவர்களுக்கு மட்டும்).

இந்த பாடலை படிக்குமுன் இரண்டு விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒன்று, இந்த பாடல் எழுதப்பட்டது முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில். அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்.

இரண்டாவது, இதை எழுதியது இளங்கோவடிகள் என்ற துறவி.

காதலன், அவனுடைய காதலியிடம் செல்லமாக கோவிக்கிறான்....நீயும் உன் குடும்பமும் கொலைகார குடும்பம்.


பாடல் 


கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய். 

பொருள் 

உன் சகோதரர்கள்  கடலில் சென்று மீன்களை பிடித்து (கொன்று) வாழ்கிறார்கள் . நீயோ என் உடலின் உள் சென்று என் உயிரை எடுத்து (கொன்று) வாழ்கிறாய். உன் வலிமையான மார்புகளின் பாரத்தில் உன் சின்ன இடை துன்பப் படுவதை பார்.  


(மிடல் = வலிமை, திண்மை ; இடுகும் = சிறுக்கும்; இழவல் = வருந்துதல், நட்டப்படுதல். இழவு என்றால் உயிரை இழத்தல்)


பாடல் 


கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய். 


பொருள் 

உன் தந்தை மீன் பிடிக்கும் கொடுமையான வலையால் உயிர்களை கொல்லுகிறான். நீயோ, உன் கண் என்ற வலையால் உயிர்களை கொல்லுகிறாய் . மாலை அணிந்த உன் மார்பால் மழை நேர மின்னலைப் போன்ற உன் இடை எவ்வளவு சங்கடப் படுகிறது பார்.



பாடல் 

ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்." 

பொருள் 

மீன் பிடிக்கும் படகில்   சென்று உயிர்களை  உன் தந்தை. நீயோ வளைந்த உன் புருவத்தால் உயிர்களை கொல்லுகிறாய் . மத்தவங்க பெருமையையும் துன்பத்தையும் நீ எங்க பார்க்கிறாய் ? உன் மார்புகளை சுமந்து வாடும் உன் இடையின் கஷ்டத்தையாவது நீ பார். 

இளங்கோ அடிகளுக்குத்தான் என்ன கரிசனம் ! 


Saturday, April 27, 2013

சிலப்பதிகாரம் - பெண் என்னும் வள்ளல்


சிலப்பதிகாரம் - பெண் என்னும் வள்ளல் 


வேலை நிமித்தமாய் வெளிநாடு போய்  இருக்கிறான் கணவன். புது இடம். புது மக்கள். புது சூழ்நிலை. வேறு உணவு. வேறு கால நிலை.  வேலைக்குப் போன இடத்தில் ஆயிரம் பிரச்சனை. அலுப்பு, எரிச்சல், கோபம், ஏமாற்றம் எல்லாம் உண்டு.

என்னடா வாழ்க்கை என்று வெறுப்பு வருகிறது.

இடையிடையே மனைவியின் நினைவு வருகிறது. அவள் புன்னகை, அவளின் இனிமையான தோற்றம், அவளின் மென்மையான குரல்...எல்லாம் வந்து வந்து போகிறது.

அவளை காண வேண்டும் ஏக்கம் எழுகிறது.....

சிறிது நாள் கழித்து வேலை முடிந்து வீடு வருகிறான்.

மனைவியை பார்க்கப் போகிறோம் என்று ஆவல்.

அவளுக்கும் அவனை ரொம்ப நாள் கழித்து பார்க்கப் போகிறோம் என்று ஆவல்.

அதிகாலையிலேயே எழுந்து, ஷாம்பூ போட்டு குளித்து, அப்படியே கொஞ்சம் சாம்பிராணி போட்டு, கூந்தலை அப்படியே அலை பாய விட்டு இருக்கிறாள்....

இராத்திரி எல்லாம் தூக்கம் இல்லை...மணிக்கொரு தரம் எழுந்து மணி பார்க்கிறாள்...தூக்கம் இல்லாததால் கண் எல்லாம் சிவந்து இருக்கிறது....

இதோ வந்து விட்டான்...

அவளைப் பார்க்கிறான்...

வாவ் ...என்று வியக்கிறான்..அலை பாயும் குழல், அதற்க்கு கீழே வளைந்த கரிய புருவம், இன்னும் கொஞ்சம் கீழே சிவந்த கண்கள்...அந்த கண்ணில் காதல், அன்பு, பாசம் எல்லாம் ததும்புகிறது...

வேலைக்கு போன இடத்தில் தூது வந்ததும், அதை காண வேண்டும் என்று என்னை பாடாய் படுத்தியதும் இந்த கண்கள் தான், அந்த துன்பத்திற்கு மருந்து தருவதும் அதே கண்கள் தான்....

என்னங்க, இது எல்லாம் சிலப்பதிகாரத்தில் இருக்கிரதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது...

பாடலைப் பாருங்கள், அப்புறம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்....

பாடல்


அகிலுண விரித்த அம்மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதரரி பரந்த செழுங்கடைத் தூதும்
மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த


பொருள்



Friday, March 29, 2013

சிலப்பதிகாரம் - குதர்க்கவாதிகள்


சிலப்பதிகாரம் - குதர்க்கவாதிகள் 


குதர்க்கம் பேசுபவர்கள் இன்று மட்டும் அல்ல அன்றும் இருந்திருக்கிறார்கள்.

கோவலனும், கண்ணகியும் புகார் நகரை விட்டு மதுரை நோக்கி செல்லும் வழியில் கவுந்தி அடிகளை சந்திக்கிறார்கள். அவர்கள் மூவரும் ஒரு சோலையில் ஓய்வு எடுக்கிறார்கள். அப்போது ஒரு குதர்க்கவாதி வருகிறான். அவனை வறு மொழியாளன் என்கிறார் இளங்கோ. வறுமையான மொழி...மொழியில் சிறப்பு இல்லாமல் வறண்ட மொழிகள்.

அவன் கவுந்தி அடிகளை பார்த்து கேட்க்கிறான் காமனும் அவன் மனைவி ரதியும் போல் இருக்கும் இவர்கள் யார் என்று.

கவுந்தி அடிகள், இவர்கள் என் பிள்ளைகள் என்று கூறினார்

குதர்க்கவாதி - உங்கள் பிள்ளைகள் என்றால் எப்படி அவர்கள் கணவன் மனைவியாக இருக்க முடியும் ?

அதை கேட்ட கண்ணகி நடுங்கிப் போனாள். கையால் காது இரண்டையும் பொத்திக் கொண்டாள். அப்படியே போய் கோவலன் பின்னால் மறைந்து கொண்டாள்.

தீய சொல்லை கேட்டாலே நடுங்கும் குணம். எவ்வளவு சிறந்த குடிப் பிறப்பு. தீச்சொல் சொல்லுவதை விடுங்கள். பிறர் சொல்வதை கேட்டாலே நடுங்கும் குணம்.

பாடல்:


வம்பப் பரத்தை வறுமொழியாளனொடு
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர்,
‘காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர்
ஆர்? எனக் கேட்டு, ஈங்கு அறிகுவம்’ என்றே-
‘நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர்! உடன்
ஆற்று வழிப்பட்டோர் ஆர்?’ என வினவ-


"கவுந்தியின் மறுமொழி"

மக்கள் காணீர்; மானிட யாக்கையர்;
பக்கம் நீங்குமின்; பரி புலம்பினர்’ என-

"தூர்த்தர்கள் பழிப்புரை"

‘உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ? கற்றறிந்தீர்!’ என-

"கவுந்திஅடிகள் சாபம்"

தீ மொழி கேட்டு, செவிஅகம் புதைத்து,
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க-
‘எள்ளுநர் போலும் இவர், என் பூங்கோதையை;
முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக’ என-


பொருள்


Tuesday, March 26, 2013

சிலப்பதிகாரம் - கண் செய்த நோய்க்கு மருந்து


சிலப்பதிகாரம் - கண் செய்த நோய்க்கு மருந்து 


முதலிலேயே சொல்லி விடுகிறேன்...இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும்.

சிலபதிகாரத்தில், கானல் வரிப் பாடல்

அது ஒரு கடற்கரை உள்ள ஊர். கடற்கரை காற்று நீர்த் திவலைகளை சுமந்து வந்து உங்கள் முகத்தோடு உரசிப் போகும். வெண்மையான மணர் பரப்பு.

கரையின் கன்னத்தில் ஓயாமல் முத்தமிடும் அலைகள்.

அந்த கடற்கரையில் வலம்புரி சங்குகள் அங்கும் இங்கும் அலைகின்றன. அப்படி அலைந்ததால், கடற்கரை மணலில் வரி வரியாக கோடு  விழுகிறது. .

அந்த கடற்கையில் நிறைய புன்னை மரங்கள் நிறைந்து இருக்கின்றன. அந்த புன்னை மரங்கள் பூத்து குலுங்குகின்றன.

காற்றடிக்கும் போது, புன்னை மலர்கள் உதிர்கின்றன. புன்னை மரங்கள் பூமிக்கு பூவால் அர்ச்சனை செய்வது போல் இருக்கிறது.

சங்கு வரைந்த கோடுகள், தடங்கள் எல்லாம் இந்த பூக்கள் விழுந்து மறைந்து விட்டன.

காதலனும் காதலியும் ஒருன்றாக இருக்கும் போது ஏற்படும் சில பல தடங்களை ஆடையிட்டு மறைப்பதில்லையா...அது மாதிரி..

அந்த கடற் கரையில் அவனும் அவளும் நாளும் பேசாமல் பேசியது அந்த கடலுக்கு மட்டும் தெரியும்.

இன்று அவள் இல்லை. வரவில்லை. அவன் மட்டும் தனித்து இருக்கிறான்.

இருக்கப் பிடிக்கவில்லை. போகலாம் என்றால் , போய் தான் என்ன செய்ய ?

காதலும் கருணையும் கலந்த அவள் கண்களை காணாமல் அவன் வாடுகிறான்.

இந்த கவலை நோய்க்கு என்னதான் மருந்து ? ஒரே ஒரு மருந்து இருக்கிறது...அதுவும் அவ கிட்டதான் இருக்கு....

பாடல்

துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத
    தோற்ற மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண்தாது
    போர்க்குங் கானல்
நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
    தீர்க்கும் போலும்.

பொருள்


Monday, March 25, 2013

சிலப்பதிகாரம் - அன்றும் இன்றும்


சிலப்பதிகாரம் - அன்றும் இன்றும் 


அவள்: நான் உன் கிட்ட ஒண்ணு சொல்லட்டுமா ?

தோழி: ம்ம்..சொல்லு...என்ன விஷயம்

அவள்: அவனுக்கு வர வர என் மேலே அன்பே இல்லைன்னு தோணுது

தோழி: ஏன், என்ன ஆச்சு ...

அவள்: அப்ப எல்லாம் என் பின்னாடி எப்படி சுத்துவான் ? இப்ப என்னடானா , கண்டுக்க கூட மாட்டேங்கிறான்....

தோழி: அப்படி எல்லாம் இருக்காது...அவனுக்கு என்ன பிரச்சனையோ....கொஞ்சம் பொறு...

பாடல்


காதல ராகிக் கழிக்கானற் கையுறைகொண் டெம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாமிரப்ப நிற்பதையாங் கறிகோ மைய
மாதரார் கண்ணு மதிநிழல்நீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப்
போது மறியாது வண்டூச லாடும் புகாரே எம்மூர்.

சீர் பிரித்தபின்


காதலராகி கழிக் கானற் கையுறை கொண்டு எம் பின் வந்தார் 
ஏதிலர் தாமாகி யாம் இரப்ப நிற்பதை யான் அறியோம் ஐய 
மாதரார் கண்ணும் மதி நிழல் நீரினை கொண்டு மலர்ந்த நிலப் 
போதும்  அறியாது வண்டு ஊசலாடும் புகார் எம்மூர் 

பொருள்

காதலராகி = காதலராகி

கழிக் கானற் = மிக விரும்பி காண்பதற்கு


கையுறை = பரிசு பொருள்கள்

 கொண்டு எம் பின் வந்தார் = கொண்டு என் பின் வந்தார்

ஏதிலர் தாமாகி = (இன்னைக்கு என்னடா என்றால் ), ஏதோ அயலானைப் போல

யாம் இரப்ப நிற்பதை = நான் விரும்பி வேண்டி நின்றாலும்

 யான் அறியோம் ஐய = அறியாதவர் போல் நிற்கிறார்

மாதரார் கண்ணும் = பெண்களின் கண்ணும்

மதி நிழல் = நிலவின் நிழலை

 நீரினை கொண்டு = நீரில் கொண்டு

 மலர்ந்த = மலர்ந்த

 நிலப் போதும் = மலர்களை (போது = மலர் )

அறியாது = எது என்று அறியாது

வண்டு ஊசலாடும் = வண்டு ஊசலாடும்

புகார் எம்மூர் = புகார் எங்கள் ஊர்

வண்டுகள் பெண்களின் முகத்திற்கும், நிலவின் நிழல் சேர்ந்த நீரில் உள்ள மலருக்கும் வித்தியாசம் தெரியாமல் தவிக்கும்  வண்டுகள் உள்ள ஊர் எங்கள் ஊர்.

அந்த வண்டு மாதிரி இந்த தலைவனும், நான் என்று நினைத்து வேறு எவ பின்னாடியோ போய் விட்டானோ என்பது தொக்கி நிற்கும் பொருள்.



Sunday, March 24, 2013

சிலப்பதிகாரம் - அன்னமே, அவ கூட சேராத


சிலப்பதிகாரம் - அன்னமே, அவ கூட சேராத 


பெரிய கடல். எப்போதும் அலை அடிக்கும் கடல். சிலு சிலு என்று காற்று தலை கலைக்கும் கடற்கரை. 

காலோடு இரகசியம் பேசும் பொடி மணல்.

அந்த ஊரில் அவ பெரிய ராங்கிக்காரி. அவ நடையே பெரிய இராணி மாதிரி இருக்கும். கடல் மணலில் அவ கால் படித்து நடப்பதை பார்த்தால் என்னவோ  அவதான் இந்த கடல் பூராவையும் வாங்கிட்ட மாதிரி ஒரு மிதப்பு. 

அவ நடந்து போகும் போது , அவ பின்னாடி ஒரு சில அன்னங்கள் நடந்து போகும். அவ நடக்கிற மாதிரியே நடந்து  பழகிக் கொள்ளலாம் என்று....

நடக்குமா ? நடையாய் நடந்தாலும் நடக்காது....

ஏய், அன்னமே, அவ பின்னாடி போகாத. அவ பின்னாடி போனேனா, அவ நடைய பார்த்துட்டு உன் நடையை எல்லோரும் கேலி பண்ணுவார்கள்.

அவ நடைய பாரு, என்னமோ இந்த உலகத்தையே ஜெயிச்ச மாதிரி, என்ன ஒரு இராணி மாதிரி நடந்து போறா...அவ பின்னாடி போனா உன் நடைய யாரு பாக்கப் போறா...சொல்றத சொல்லிட்டேன்...அப்புறம் உன் இஷ்டம்....

பாடல் 


சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்;
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்:
ஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின்
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்

பொருள் 

Tuesday, March 19, 2013

சிலப்பதிகாரம் - கூடான கூடலான்


சிலப்பதிகாரம் - கூடான கூடலான் 


மதுரை நகருக்கு கூடல் நகர் என்று ஒரு பெயர் உண்டு. நான் மாடக் கூடல் என்றும் சொல்லுவார்கள். 

கூடல் நகரை ஆள்வதால் பாண்டிய மன்னன்  கூடலான் என்று அழைக்கப்பட்டான்.

இந்த உடலை கூடு என்று கூறுவார்கள் . கூடு விட்டு இங்கு ஆவிதான் போனபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள்  அந்தப் பணம் என்பார் ஔவையார். 

உயிர் போய் விட்டால் இந்த உடல் வெறும் கூடு தானே.

அப்படி பாண்டிய நாட்டை ஆண்ட கூடலான், ஒரு நாள் ஒரு பெண்ணின் கூந்தலை கண்டு அஞ்சி  உயிரை விட்டு வேறு கூடாகிப் போனான்...அது எப்போது தெரியுமா ?



பாடல் 

காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும் 
ஆவி குடிபோன அவ்வடிவம்--பாவியேன் 
காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக் 
கூடலான கூடாயி னான்

பொருள் 

Friday, January 25, 2013

சிலப்பதிகாரம் - பார்த்தால் பசி தீரும்


சிலப்பதிகாரம் - பார்த்தால் பசி தீரும் 


உலகத்தில் உள்ள பொருள்களிலேயே அருமையான பொருள் நீ என்று அமரர்கள் உன்னை தங்கள் கண்களால் கண்டு பசி ஆறுகிறார்கள்.
நீயோ, பசியே இல்லாமல், இந்த உலகம் அனைத்தையும் உண்டாய். 
அப்படியும் பசி தீர வில்லை என்று வெண்ணையை  வேறு களவாடி உண்கிறாய்.
சரி அதுதான் போனால் போகிறது என்று பார்த்தால், உண்ட வெண்ணையும் துளசியாய் மாறித் தோன்றுகிறது...தல சுத்துதுபா உன்னோட....

பாடல் 

அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

பொருள் 

Wednesday, January 23, 2013

சிலப்பதிகாரம் - இது என்ன மாயம் ?


சிலப்பதிகாரம் - இது என்ன மாயம் ?


அன்று வடக்கில் உள்ள மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை நாணாக்கி, பாற்கடலை கலக்கினாய். ஆனால் இன்றோ யசோதையின் சின்ன கயிற்றால் கட்டப்பட்டு கிடக்கிறாய். இது என்ன மாயம் ?

பாடல் 

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை யசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே ;

பொருள் 

Sunday, December 30, 2012

சிலப்பதிகாரம் - நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே ?


சிலப்பதிகாரம் - நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே ?


கண்ணன் தான் எவ்வளவு கஷ்டப் பட்டு இருக்கிறான்.

பிறந்து பெரியவானாகும் வரை மாமன் கம்சன் மூலம் பிறந்த சிக்கல்களை சமாளிக்க வேண்டி இருந்தது.

பின் பாண்டவரக்ளுகாக படாத பட்டு பட்டான்.

துரியோதனன் போன்ற மூடனிடம் தூது போனான்.

அறம் அல்ல என்று தெரிந்தும் பாண்டவர்களுக்காக சிலவற்றை செய்தான்.

தன்னை நம்பிய பக்தர்களுக்காக பகவான் தான் என்ன பாடு படுகிறான்.

அவனைப் போற்றாத நா என்ன நாவே....

பாடல்