Monday, June 23, 2014

தேவாரம் - மற்றவர்கள் சிரிக்கும் முன்

தேவாரம் - மற்றவர்கள் சிரிக்கும் முன் 


காலம் உருண்டு ஓடியது.

இளமை முடிந்து, முதுமை வந்து பின் மரணமும் வந்து சேர்ந்தது.

இறந்து கிடக்கும் அவர் அருகில் சுற்றமும் நட்பும்.

இருக்கும் காலத்தில் அவர் பண்ணிய அட்டகாசங்களை மனதுக்குள் எல்லோரும் நினைத்துக்  கொள்கிறார்கள்.

கட்டிய மனைவி கூட நினைப்பாள் ... இந்த கிழத்துக்கு இருக்குற இடத்துல தண்ணி கொண்டு வந்து  தரணும் , கையப் பிடிச்சு விடு, காலப் பிடிச்சு விடு னு என்னா அழிச்சாட்டியம்..இப்ப பாரு கட்டை மாதிரி படுத்து கிடக்கு....

 நண்பர்கள், உடன் வேலை செய்தவர்கள் என்று எல்லோரும் மனதுக்குள் நினைப்பார்கள். அவர் செய்த  தவறுகளை நினைத்து சிரிக்கும் காலம் வந்தது.

அவருக்கு வந்ததுதான் நமக்கும்....அப்படி ஒரு காலம் வருமுன்னே திருச்சிற்றம்பலம் சென்று அடைந்து உய்யுங்கள் என்கிறார் நாவுக்கரசர்.

பாடல்

அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென்றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.


 சீர் பிரித்த பின் 


அரிச் சுற்ற வினையால் அடர்புண்டு நீர்
எரிச் சுற்றக் கிடந்தார் என்று அயலவர்
சிரிச் சுற்றுப் பல பேசப் படா முனம்
திருச் சிற்றம்பலஞ் சென்று அடைந்து உய்ம்மினே.


பொருள் 

அரிச் சுற்ற வினையால் = அரிக்கின்ற வினையால்

அடர்புண்டு =  தாக்கப் பட்டு

நீர் = நீங்கள்

எரிச் சுற்றக் கிடந்தார் என்று = தீ சுற்றிலும் எரியக் கிடந்தார் என்று

அயலவர் = மற்றவர்கள்

சிரிச் சுற்றுப் பல பேசப் படா முனம் = சிரித்துப் பல பேசப்படா முன்னம்

திருச் சிற்றம்பலஞ் சென்று அடைந்து உய்ம்மினே.= திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து பிழைக்கின்ற வழியைப் பாருங்கள்.



இராமாயணம் - அவளை இதுக்கு முன்னால எங்கேயோ பாத்து இருக்கேன்

இராமாயணம் - அவளை இதுக்கு முன்னால எங்கேயோ பாத்து இருக்கேன் 


காதல் வசப்பட்ட நம் பசங்க சொல்லும் டயலாக் "என்னமோ தெரியலடா...அவள பாத்தவுடனேயே மனசு என்னவோ பண்ணுது...இதுக்கு முன்னாடி எப்பவோ அவள பாத்து இருக்கேன் ...ஒரு வேளை போன ஜன்மத்து தொடர்பா இருக்குமோ "

இது நம்ம பசங்க சொல்றது மட்டும் இல்ல....இராவணனும் சொல்கிறான்  - ஒரு படி மேலே போய்.

நம்ம பசங்களாவது பாத்து விட்டு பின் ஜொள்ளு விடுவார்கள்.

இராவணன் பார்க்காமலேயே ஜொள்ளு விடுகிறான்.

இதற்கு முன் சீதையைப் பார்த்தது கூட கிடையாது. இருந்தும் சொல்கிறான்...."கொன்றை காய் போல கூந்தலைக் கொண்ட அந்தப் பெண் என் மனதில் வந்து தங்கி விட்டாள் . அவளை நான் இதற்கு முன்னால் பார்த்து இருக்கிறேன்...".

 பாக்கவும் இல்ல ஒண்ணும் இல்ல...தலைவரு சும்மா உருகுராரு....

பாடல்

'கொன்றை துன்று கோதையோடு ஓர் 
     கொம்பு வந்து என் நெஞ்சிடை 
நின்றது, உண்டு கண்டது' என்று, 
     அழிந்து அழுங்கும் நீர்மையான், 
மன்றல் தங்கு அலங்கல் மாரன் 
     வாளி போல, மல்லிகைத் 
தென்றல் வந்து எதிர்ந்த 
     போது, சீறுவானும் ஆயினான்.


பொருள்

'கொன்றை துன்று = கொன்றை கையைப் போன்ற கூந்தல் உள்ள

கோதையோடு = பெண்ணோடு

 ஓர் கொம்பு வந்து = ஒரு பூங்கொம்பு போன்ற அவள்

என் நெஞ்சிடை நின்றது = என் மனதில் வந்து நின்றாள்

உண்டு கண்டது = அவளை நான் இதற்கு முன் கண்டிருக்கிறேன்

என்று = என்று

அழிந்து = அழிந்து

அழுங்கும் = வருந்தும்

நீர்மையான் = இராவணன்

மன்றல் தங்கு = மணம் பொருந்திய

அலங்கல் = மாலை சூடிய

மாரன் = மன்மதன்

வாளி போல,= அம்பு போல

மல்லிகைத் தென்றல் வந்து எதிர்ந்த  போது = மல்லிகை மணத்தை ஏந்தி வந்த தென்றல் காற்று வந்தபோது. மன்மதனின் அம்புகளில் ஒன்று மல்லிகை மலர். இங்கே தென்றல் மல்லிகை மணத்தை அள்ளிக் கொண்டு வருகிறது. எனவே அது மன்மதனின் அம்பைப் போல இருக்கிறது.

 சீறுவானும் ஆயினான்.= சீற்றம் கொண்டான்.

காதல் படுத்தும் பாடு. 

அப்பேற்பட்ட இராவணனுக்கே இந்த கதி .....


அடைக்கலப் பத்து - தாழியைப் பாவு தயிர் போல்

அடைக்கலப் பத்து - தாழியைப் பாவு தயிர் போல் 




இறைவன் யார் ? அப்படி ஒருவன் இருக்கிறானா ? இருக்கிறான் என்றால் எங்கே இருக்கிறான் ? அவன் ஆணா , பெண்ணா? அலியா ? உலகில் இவ்வளவு துன்பங்களும் பிரச்சனைகளும் இருக்கிறதே ....இறைவன் என்று ஒருவன் இருந்தால் ஏன் இவ்வளவு துன்பம் ?

இது போல பல கேள்விகள் அவ்வப்போது நம் மனதில் எழுந்து போகின்றன. இதையெல்லாம் அறிந்து கொள்ளலாம் என்றால் எங்கே நேரம் இருக்கிறது ? காலை எழுந்து இரவு படுக்கப் போகும் வரை அந்த வேலை, இந்த வேலை, என்று அங்கும் இங்கும் அலைகிறோம் .

பானையில் தயிரை இட்டு கடையும் போது ஒரு முறை இந்தப் பக்கம் போகும், மறு முறை அந்தப் பக்கம் போகும். ஒரு நிலை இல்லாமல் அலையும். அது போல, மாவடு போன்ற கண்களை கொண்ட பெண்களின் பின்னால் அலைகிறேன். என்று , எப்போது உன்னை வந்து காணப் போகிறேன் தெரியவில்லையே. விட்டு விட்டால் நான் இப்படியே இருந்து அழிந்து போவேன். நான் உன் அடைக்கலம். என்னை காப்பாற்று என்று ஓலமிடுகிறார் மணிவாசகர்.


பாடல்

மாழை, மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட, உடைந்து,
தாழியைப் பாவு தயிர் போல், தளர்ந்தேன்; தட மலர்த் தாள்,
வாழி! எப்போது வந்து, எந் நாள், வணங்குவன் வல் வினையேன்?
ஆழி அப்பா! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.


பொருள்

மாழை = மா போன்ற. அதாவது மாவடு போன்ற

மைப் பாவிய = மை தீட்டிய

கண்ணியர் = கண்களைக் கொண்ட

வன் மத்து இட = வலிமையான மத்தை இட

உடைந்து = உடைந்து

தாழியைப் பாவு தயிர் போல் = தாழியில் (பானையில் ) பரவுகின்ற தயிர் போல

தளர்ந்தேன் = தளர்ந்தேன். கட்டியான தயிர் எப்படி மெலிந்து நீர்த்துப் போகிறதோ அது போல தளர்ந்து போகிறேன்

தட மலர்த் தாள் = சிறந்த மலர் போன்ற பாதங்கள்

வாழி! = வாழ்க

எப்போது வந்து = எப்போது வந்து

எந் நாள் = எந்த நாள்

வணங்குவன் = வணங்குவேன்

வல் வினையேன்? = கொடிய வினை உடைய நான்

ஆழி அப்பா! = கடல் போன்ற அருள் கொண்டவனே

 உடையாய்!  = என்னை உடையவனே

அடியேன் உன் அடைக்கலமே. = அடியேன் , உன் அடைக்கலமே

Sunday, June 22, 2014

மெய்யுணர்தல் - நரகம் புகினும் எள்ளேன்

மெய்யுணர்தல் - நரகம் புகினும் எள்ளேன் 


இந்த உலகில் வாழ்வதே எவ்வளவு சிக்கலாக இருக்கிறது ? எத்தனை பிரச்சனைகள் ? ஒரு நாள் போல் இன்னொரு நாள் இல்லை. ஒரு நாள் மகிழ்ச்சியாக இருக்கிறது...இன்னொரு நாள் துன்பம் வருகிறது.

மூப்பு கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறது ?

நோய் உள்ளுக்குள் காத்து இருக்கிறது.

மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் -  நமக்கு மட்டும் அல்ல, நம்மைச் சேர்ந்தவர்களுக்கும்.

இந்த உலக வாழ்வே இப்படி என்றால் நரக வாழ்வு எப்படி இருக்கும் ? நரகம் என்று ஒன்று இருக்கும் என்றால் அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்க முடியுமா ?

மாணிக்க வாசகர் சொல்கிறார்,

இறைவா, உன் திருவருள் இருக்கும் வரை, நரக வாழ்க்கை கிடைத்தாலும் கவலைப் பட மாட்டேன் என்கிறார்.

அவன் திருவருள் இருந்தால், நரக வாழ்கையே ஒரு பொருட்டு இல்லை என்றால், இந்த உலக வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு பெரிய சிக்கலாக இருக்காது.

உன் திருவருள் இருந்தால் போதும்....இந்திரன் பதவியும் பெரிதல்ல, நரக வாழ்வும் பெரிது அல்ல. சொர்கமும் நரகும் ஒரு பொருட்டே அல்ல என்கிறார். உன் அருள் ஒன்றே போதும் என்கிறார்.

பாடல்

கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும்,
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்,
எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா!
உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!


பொருள்

கொள்ளேன் = ஏற்றுக் கொள்ள மாட்டேன்

புரந்தரன் = இந்திரன்

மால் = திருமால்

அயன் = பிரமன்

வாழ்வு = வாழ்வு. அவர்கள் பெற்ற வாழ்வு வேண்டாம்.

குடி கெடினும் = என் குடியே (குடும்பமே) கெட்டாலும்

நள்ளேன்  = மற்றவரோடு உறவு கொள்ள மாட்டேன்

நினது அடியாரொடு அல்லால் = உன் அடியார்களைத் தவிர

நரகம் புகினும் = நரக வாழ்வே கிடைக்கும் என்றாலும்

எள்ளேன் = அதற்காக வருத்தப் படமாட்டேன்

திரு அருளாலே இருக்கப் பெறின் = உன் திருவருள் இருக்கப் பெற்றால்

இறைவா! = இறைவா

உள்ளேன் பிற தெய்வம் = மற்ற தெய்வங்களை நினைக்க மாட்டேன்

உன்னை அல்லாது =உன்னைத் தவிர

எங்கள் உத்தமனே! = எங்கள் உத்தமனே



இராமாயணம் - காம நோய்க்கு மருந்து உண்டா ?

இராமாயணம் - காம நோய்க்கு மருந்து உண்டா ?


காம நோய்க்கு மருந்து உண்டா ?

சீதையின் மேல் காமம் கொண்டான் இராவணன். அரண்மனை பிடிக்காமல் சோலைக்குச் சென்றான். அவனுக்குப் பயந்து அங்குள்ள கிளிகளும், குயில்களும் வாய் மூடி மெளனமாக இருந்தன என்று பார்த்தோம்.

அவன் போட்ட அதட்டலில் வாடைக் காலம் போய் வேனிற் காலம் வந்தது.

வாடை குளிர்ந்தது என்றால் வேனில் காலம் சுடுகிறது.

காமம் மனதில் வந்து விட்டால், காலம் தான் என்ன செய்யும் ?

பாடல்

வன் பணை மரமும், தீயும், 
     மலைகளும் குளிர வாழும் 
மென் பனி எரிந்தது என்றால், 
     வேனிலை விளம்பலாமோ? 
அன்பு எனும் விடம் உண்டாரை 
     ஆற்றலாம் மருந்தும் உண்டோ?- 
இன்பமும் துன்பம்தானும் உள்ளத்தோடு 
     இயைந்த அன்றே?

பொருள்

வன் = உறுதியான

பணை மரமும் = பெரிய மரமும். பணை என்றால் பெரிய. பணைத் தோள்கள் என்றால் பெரிய தோள்கள்

தீயும் மலைகளும் = தீ கொண்ட மலைகளும்

குளிர வாழும் = குளிரும் படி வாழும்

மென் பனி எரிந்தது என்றால் = மென்மையான பனியே எரியும் என்றால்

வேனிலை விளம்பலாமோ? = வேனில் காலத்தை பற்றி என்ன சொல்ல

அன்பு எனும் விடம் உண்டாரை = காமம் என்ற விஷத்தை உண்டவர்களை. இங்கு அன்பு என்பது காமம் என்ற பொருளில் வருகிறது.

ஆற்றலாம் மருந்தும் உண்டோ? = குணப் படுத்தும் மருந்து உண்டா ?

இன்பமும் துன்பம்தானும் = இன்பமும், துன்பமும்

உள்ளத்தோடு இயைந்த அன்றே? = நம் மனதோடு சேர்ந்த ஒன்று

இடமும் (அரண்மனை, சோலை ), காலமும் (வாடைக் காலமும் வேனில் காலமும் ) ஒன்றும் செய்யாது.

இன்பமும் துன்பமும் மனதில் இருந்து வருகிறது.

அறிவும், ஆற்றலும், செல்வமும், அதிகாரமும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் இல்லை. அவை தான் காரணம் என்றால் இராவணன் இன்பமாக இருந்திருக்க வேண்டுமே ? இத்தனையும் இருந்தும் அவன் துன்பப் படுகிறான்.

மனம் தான் காரணம்.

மனம் மாறினால் இன்பமும் துன்பமும் மாறும்.



Saturday, June 21, 2014

அடைக்கலப் பத்து - கல்வி ஞானம் இல்லா அழுக்கு மனம்

அடைக்கலப் பத்து - கல்வி ஞானம் இல்லா அழுக்கு மனம் 


கல்வி வேறு ஞானம் வேறா ?

கல்விக்கு ஒரு அதிகாரம் வைத்த வள்ளுவர், அறிவுடைமைக்கு தனியாக ஒரு அதிகாரம் வைத்து இருக்கிறார் . இரண்டும் ஒன்று என்றால் எதற்கு இரண்டு அதிகாரம்.

கல்வி வெளியில் இருந்து உள்ளே போவது.

ஞானம் உள்ளிருந்து வெளியே வருவது.

படிக்கும் எல்லோருக்கும் ஒரே பொருளா தோன்றுகிறது ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பொருள் தோன்றுகிறதே ஏன்?

உள்ளிருக்கும் ஞானம்.

மணி வாசகர் சொல்கிறார்...

இந்த உடம்பு ...புழுக்கள் நிறைந்த உடம்பு. அதில் கல்வியும் இல்லை, ஞானமும் இல்லை. பொல்லாத சிந்தனைகள், ஆசைகள் மட்டும் நிறைய இருக்கிறது. அழுக்கு படிந்த மனம். கரை படிந்த மனம். இவற்றை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்.

உடம்பாலும் புண்ணியம் இல்லை. அறிவும் ஞானமும் இல்லை. மனமாவது ஒழுங்காக இருக்கிறதா என்றால், அதுவும் அழுக்கு அடைந்து இருக்கிறது.

நான் என்ன செய்வேன் ?

இது ஏதோ மணிவாசகர் தனக்கு சொன்னது போலத் தெரியவில்லை. நம் எல்லோருக்கும் சேர்த்து சொல்லி இருக்கிறார் என்றே படுகிறது.

இறைவா, உன்னிடம் அடைக்கலமாக வந்து விட்டேன். எனக்கு ஒன்றும் தெரியாது. நீ பார்த்து  ஏதாவது செய் என்று தன்னை முழுமையாக அடைக்கலம் தந்து விடுகிறார்.

பாடல்


செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த
பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்;
புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா,
அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே.


பொருள்

செழுக் = செழுமையான

கமலத் = தாமரை மலர்களின்

 திரள்  அன = தொகுப்பு போன்ற

நின் சேவடி சேர்ந்து = உன் திருவடிகளை அடைந்து

அமைந்த = அமைதி அடைந்த

பழுத்த = கனிந்த

மனத்து = மனம் உள்ள

அடியர் உடன் போயினர் = அடியவர்கள் உன் உடன் போயினர்

யான் = நான்

பாவியேன் = பாவியேன்

புழுக்கண்  = புழுக்கள்

உடைப் புன் குரம்பை =உடைய இந்த உடம்பு

பொல்லா = பொல்லாதது

 கல்வி ஞானம் இலா = கல்வியும் ஞானமும் இல்லாதது

அழுக்கு மனத்து அடியேன் = அழுக்கு மனம் கொண்ட அடியவன்

உடையாய்! = என்னை உடையவனே

உன் அடைக்கலமே = நான் உன் அடைக்கலம்

அகங்காரம் அறிவுக்குத் தடை.

அடைக்கலம், அகங்காரத்தை அழிக்கிறது.

எல்லாம் அற என்னை இழந்த நலம் என்றார் அருணகிரி.

இழந்து பாருங்கள். புதியதாய் ஏதாவது கிடைக்கும்.




இராமாயணம் - காலமும் அஞ்சிய காவலன்

இராமாயணம் - காலமும் அஞ்சிய காவலன் 


சூர்பனகை சொல்லக் கேட்டு, சீதையின் மேல் மோகம் கொண்ட இராவணன், தான் இருக்கும் அரண்மனை விட்டு ஒரு சோலை அடைந்தான்.

அது ஒரு குளிர் காலம்.

மன்மதனின் அம்பு பட்டு புண்ணான அவன் நெஞ்சில் வாடைக் காற்றும் பட்டது.

உள்ளே காமத் தீ கொளுந்து விட்டு எரிகிறது. வெளியே வாடைக் காற்று வாட்டுகிறது.

"என்னடா இது காலம் " என்று ஒரு அதட்டு போட்டான்....அவ்வளவுதான், வாடைக் காலம் ஓடிப் போய்விட்டது, வசந்த காலம் வந்தது.

காலமும் அவன் முன் கை கட்டி நின்றது.

பாடல்

பருவத்தால் வாடைவந்த
    பசும்பனி, அநங்கன் வாளி
உருவிப் புக்கு ஒளித்த புண்ணில்
    குளித்தலும், உளைந்து விம்மி,
“இருதுத்தான் யாது அடா? “என்று
    இயம்பினன்; இயம்பலோடும்,
வெருவிப் போய்ச் சிசிரம் நீங்கி,
    வேனில் வந்து இறுத்தது அன்றே.

பொருள் 

பருவத்தால் = பருவ காலத்தால்

வாடை வந்த = வாடைக் காற்று வந்து

பசும்பனி = குளிர்ந்த பனி

அநங்கன் வாளி = மன்மதனின் அம்பு

உருவிப் புக்கு = உடலில் உருவி புகுந்து

ஒளித்த = ஒளிந்து கொண்ட

புண்ணில் = புண்ணில்

குளித்தலும் = நுழைதலும்

உளைந்து = வருந்தி

விம்மி = விம்மி

“இருதுத்தான் யாது அடா?  “ = இருது என்பது உருது, அதாவது பருவகாலம். இது என்ன பருவ காலம் என்று

என்று = என்று

இயம்பினன்; = கேட்டான்

இயம்பலோடும் = அதைக் கேட்டதும்

வெருவிப் போய்ச் = பயந்து போய்

சிசிரம் நீங்கி = அந்த பனிக் காலம் நீங்கி

வேனில் வந்து இறுத்தது அன்றே. = இளவேனில் காலம் வந்தது.

என்ன வந்து என்ன செய்ய ?

காலத்தை கட்டியவனுக்கு காமத்தை கட்டத் தெரியவில்லை.

காலம் அவனை குழந்தையாக்கி தொட்டிலில் போட்டது.

அகில உலகையும் மண்டியிடச் செய்தவன் சீதையின் அழகின் முன் தோற்றுப் போனான்.

அது தோல்வியா என்ன ?