Monday, June 23, 2014

தேவாரம் - மற்றவர்கள் சிரிக்கும் முன்

தேவாரம் - மற்றவர்கள் சிரிக்கும் முன் 


காலம் உருண்டு ஓடியது.

இளமை முடிந்து, முதுமை வந்து பின் மரணமும் வந்து சேர்ந்தது.

இறந்து கிடக்கும் அவர் அருகில் சுற்றமும் நட்பும்.

இருக்கும் காலத்தில் அவர் பண்ணிய அட்டகாசங்களை மனதுக்குள் எல்லோரும் நினைத்துக்  கொள்கிறார்கள்.

கட்டிய மனைவி கூட நினைப்பாள் ... இந்த கிழத்துக்கு இருக்குற இடத்துல தண்ணி கொண்டு வந்து  தரணும் , கையப் பிடிச்சு விடு, காலப் பிடிச்சு விடு னு என்னா அழிச்சாட்டியம்..இப்ப பாரு கட்டை மாதிரி படுத்து கிடக்கு....

 நண்பர்கள், உடன் வேலை செய்தவர்கள் என்று எல்லோரும் மனதுக்குள் நினைப்பார்கள். அவர் செய்த  தவறுகளை நினைத்து சிரிக்கும் காலம் வந்தது.

அவருக்கு வந்ததுதான் நமக்கும்....அப்படி ஒரு காலம் வருமுன்னே திருச்சிற்றம்பலம் சென்று அடைந்து உய்யுங்கள் என்கிறார் நாவுக்கரசர்.

பாடல்

அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென்றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.


 சீர் பிரித்த பின் 


அரிச் சுற்ற வினையால் அடர்புண்டு நீர்
எரிச் சுற்றக் கிடந்தார் என்று அயலவர்
சிரிச் சுற்றுப் பல பேசப் படா முனம்
திருச் சிற்றம்பலஞ் சென்று அடைந்து உய்ம்மினே.


பொருள் 

அரிச் சுற்ற வினையால் = அரிக்கின்ற வினையால்

அடர்புண்டு =  தாக்கப் பட்டு

நீர் = நீங்கள்

எரிச் சுற்றக் கிடந்தார் என்று = தீ சுற்றிலும் எரியக் கிடந்தார் என்று

அயலவர் = மற்றவர்கள்

சிரிச் சுற்றுப் பல பேசப் படா முனம் = சிரித்துப் பல பேசப்படா முன்னம்

திருச் சிற்றம்பலஞ் சென்று அடைந்து உய்ம்மினே.= திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து பிழைக்கின்ற வழியைப் பாருங்கள்.



No comments:

Post a Comment