Thursday, April 28, 2016

பிரபந்தம் - வினையாட்டியேன் காதன்மையே.

பிரபந்தம் - வினையாட்டியேன் காதன்மையே.


பாடல் 

வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்,
செய்கொள் செந்நெ லுயர்திருவண்வண் டூருறையும்,
கைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு,
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.

நம்மாழ்வாரின் அருமையான பாசுரம்.

அது ஒரு அமைதியான கடற்கரை. எங்கு பார்த்தாலும் வெண் மணல். காதோரம் கவிதை பாடும் கடல் காற்று. சற்று தூரத்தில் , ஒரு அந்த கடலில் வந்து சேருகிறது. அங்கே நிறைய நாணல்களும், கோரை புற்களும் வளர்ந்து இருக்கின்றன. அவற்றில் சில குருகுகள் வாழ்கின்றன. அவை தினமும் இரை தேடி அங்கும் இங்கும் அலையும்.

அங்கே வருகிறாள் தலைவி. அவளுக்கோ அவன் நினைப்பு. அவனை பார்க்க வேண்டும், அவனோடு பேச வேண்டும் , அவனோடு இருக்க வேண்டும் என்று ஆசை. அவன் இருக்கும் இடமோ வேறு இடம். எப்படி போவது. வீட்டில் விட மாட்டார்கள். நிறைய வேலை வேறு இருக்கிறது.

தவிக்கிறாள்.

அங்கே வந்த குருகை தூது விட நினைக்கிறாள்.

ஏய் குருகே, என்னால் தான் அவன் இருக்கும் இடத்துக்கு வர முடியவில்லை. அவனால் இங்கே வர முடியும் அல்லவா. எனவே, நீ போய் என் காதலை அவனுக்குச் சொல்லிவிட்டு வா என்று குருகை தூது அனுப்புகிறாள்.


காதலனுக்கு குருகை தூது விடுவதாக அமைந்த பாசுரம்.

பொருள்


வைகல் = தினமும்.

இந்த வைகல் என்ற வார்த்தையை வைத்து நாலடியாரில் ஒரு இனிமையான பாடல் உண்டு.

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.


பூங் கழிவாய் = ஆறும் கடலும் சேரும் இடத்திற்கு கழிவாய் என்று பெயர். பூக்கள் நிறைந்த அந்த இடம். ஆறு வரும் வழியில் உள்ள மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்களை சுமது வருவதால் அது பூக்கள் நிறைந்த கழிவாய் .

வந்து மேயும் = இங்கேயே இருப்பது இல்ல. இங்கே வந்து மேயும்

குருகினங்காள் = குருகு இனத்தை சேர்ந்த பறவையே

செய்கொள் செந் நெல் உயர் =  செய்த, உற்பத்தி செய்த , கொள் கலங்கள் நிறைந்த நெல் உள்ள

திருவண் வண்டூர் = திருவண்  வண்டூர் என்ற திருத் தலத்தில்

உறையும் = வசிக்கும்

கைகொள் = கையில் கொண்ட

சக்கரத் = சக்கரம்

என் = என்னுடைய

கனி வாய் = கனிந்த வாய். ஆகு பெயராக புன் முறுவலைக் குறிக்கும்

பெருமானைக் கண்டு = பெருமானைக் கண்டு
,
கைகள் கூப்பிச் = கைகளை கூப்பி

சொல்லீர் = சொல்வீர்களாக

வினையாட்டியேன் = வினையால் ஆட்படுத்தப் பட்ட என்

காதன்மையே = காதல் தன்மையை

ஏதோ காதலனுக்கு காதலி அனுப்பிய தூது மாதிரி தான் இருக்கிறது.

நம்மாழ்வார் போன்ற பெரியவர்கள் ஏதோ சினிமாவுக்கு பாட்டு எழுதுவது மாதிரி எழுதிப் போபவர்கள் அல்ல.

என்ன சொல்ல வருகிறார் என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

காலம் காலமாய் மனிதன் இறைவனை தேடிக் கொண்டிருக்கிறான். இறைவன் இருக்கிறானா இல்லையா என்று கூட இன்னும் அறிந்த பாடில்லை. சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

நிராகரிக்கவும் முடியவில்லை.

நமக்குத்தான் அவனைத் தெரியவில்லை. அவனுக்கு நம்மைத் தெரியும்தானே. அவன் விரும்பினால் தன்னை நமக்கு காட்டலாம்தானே ?

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர்.

அவன் நமக்கு அருள் தரலாம் அல்லவா ?

சில மகான்கள், பெரியவர்கள் தோன்றி இறைவனைப் பற்றி சொல்கிறார்கள். அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. அவர்களிடம் கேட்டால் , அவர்கள் நினைத்தால் இறைவனை காண வேண்டும் என்ற நம் ஆர்வத்தை இறைவனிடம் போய் சொல்ல முடியும் அல்லவா ?

அதைத்தான் ஆழ்வார் இந்தப் பாசுரத்தில் கூறுகிறார்.


இறைவனைப் பற்றி ஏதோ கொஞ்சம் அங்கும் இங்கும் படித்து தெரிந்து வைத்து இருக்கிறோம். (சக்கரம், செங்கனி வாய்). அது முழுமையான வடிவம் இல்ல. யார் நேர்ல பார்த்தது.

குருகு என்பது ஆச்சாரியனுக்கு உவமை.

குருவைப் பற்றினால் இறைவனை அடையலாம்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்றார் அருணகிரி.

அந்த குருவருள் உங்களுக்கும் சித்திக்கட்டும் .

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/04/blog-post.html )

Thursday, April 21, 2016

இராமாயணம் - வாலி வதம்

இராமாயணம் - வாலி வதம்


வாலி வதம்   முடிந்து விட்டது. வாலி இறந்து கிடக்கிறான். அங்கே , வாலியின் மகன் அங்கதன் வருகிறான். அங்கதனை இராமனிடம் அடைக்கலமாக கொடுத்த பின், வாலி விண்ணுலகுக்கு அப்பால் ஏகினான்.

வாலியை இராமன் மறைந்து இருந்து கொன்றான். அது சரியா தவறா என்ற வாதம் இன்று வரை நீண்டு கொண்டே இருக்கிறது. 

அந்த வாதத்திற்கு ஒரு வதம் இன்று !

மற்றவர்கள் எப்படியோ நினைத்து விட்டுப் போகட்டும்...இராமன் என்ன நினைத்தான் ? மறைந்து இருந்து கொன்றது தவறு என்று இராமன் நினைத்தானா ? அது பற்றி அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இருந்ததா ? அல்லது தான் செய்தது சரி என்று அவன் நினைத்தானா ? 

இராமனுக்கு அவன் செய்ததில் ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை. தான் , தன் கடமையை செய்ததாகவே அவன் நினைக்கிறான். 

எப்படி ?

வாலி அடிபட்டுக் கிடக்கிறான், உயிர் எந்த நிமிடமும் பிரியலாம், அந்த நிலையில் வாலியின் மகனை தனது மெய் காப்பாளனாக இராமன் நியமிக்கிறான். தான் வாலியை கொன்றது சரி இல்லை என்று இராமன் நினைத்திருந்தால், அங்கதனை தன் மெய் காப்பாளனாக நியமித்து இருப்பானா ? ஒரு வேளை , அங்கதன் தன்னை சரியான சமயத்தில் பழி வாங்கிவிட்டால் என்ற என்ன பய உணர்ச்சி இராமனிடம் இல்லை. தான் செய்தது சரி இல்லை என்று இராமன் நினைத்து இருந்தால், அங்கதனை தன் அருகிலேயே வர விட்டிருக்க மாட்டான் அல்லவா ? 



தன்னுடைய பொன்னாலான  வாளை அங்கதனிடம் தந்து, இந்த துக்கத்தை நீ பொறுத்துக் கொள் என்று சொல்கிறான். 


பாடல் 

தன் அடி தாழ்தலோடும்
    தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி,
    ‘நீ இது பொறுத்திஎன்றான்;
என்னலும், உலகம் ஏழும்
    ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு
    அப்புறத்து உலகன் ஆனான்.

பொருள் 

தன் அடி தாழ்தலோடும் = தன் அடியில் வீழ்ந்து வணங்கிய அங்கதனை 

தாமரைத் தடங்கணானும், = தாமரை போன்ற பெரிய கண்களை கொண்ட இராமனும் 

பொன் உடை வாளை நீட்டி, = தன்னுடைய பொன்னாலான வாளை தந்து 

‘நீ இது பொறுத்தி ‘என்றான் = நீ இந்த துக்கத்தை பொறுத்துக் கொள் என்றான் 

என்னலும் = அப்படி சொன்ன பின் 

உலகம் ஏழும் ஏத்தின; = இராமனை உலகம் எழும் போற்றியது 

இறந்து, வாலி, = வாலி இறந்து 

அந் நிலை துறந்து, = அந்த நிலையை துறந்து 

வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான். = வானுக்கு அப்புறம் உள்ள உலகத்துக்குச் சென்றான் 


அரசர்கள் தங்கள் வாளை அவர்களுடைய மெய் காப்பாளர்களுக்குத்தான் தருவார்கள். அது மிக மிக நம்பிக்கைக்கு உரிய பதவி. இராமன், தன் உடைவாளை இலக்குவனிடம் கூட தரவில்லை. அதற்கு இலக்குவனிடம் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் அல்ல. இலக்குவனுக்கு இணையாக, இன்னும் சொல்லப் போனால் அதை விட ஒரு படி மேலான இடத்தை, நெருக்கமான இடத்தை அங்கதனுக்குத் தருகிறான் இராமன்.

அதுவும் எப்போது ? 

யுத்தம் முடிந்து, பொது குழு, செயற் குழு எல்லாம் கூட்டி, ஆலோசனை செய்து முடிவு எடுக்கவில்லை. போர் முடிந்த அந்தக் கணமே முடிவு எடுக்கிறான். யாரையும் கேட்கவில்லை. 

தான் செய்தது தவறு என்று இராமன் நினைத்து இருந்தால், அப்படி ஒரு முடிவை எடுத்திருப்பானா ?

சரி. இராமன் மனதில் களங்கம் இல்லை. அங்கதனுக்காவது இராமன் செய்தது தவறு என்று  எப்போதாவது தெரிந்ததா ? இராமனுக்கு அருகில் எந்நேரமும் இருக்கிறான். உடை வாளோடு. இராமன் , தன்னுடைய தந்தையை அநியாயமாகக் கொன்று விட்டான் என்று அங்கதன் நினைத்திருந்தால் , இராமன் தனியாக இருக்கும் நேரத்தில் ஏதேனும் செய்து இருக்கலாம். குறைந்த பட்சம் , அந்த மெய் காப்பாளன் பதவியையாவது வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். 

இல்லை. அங்கதன் அதை ஏற்றுக் கொள்கிறான். 

சரி, இது ஏதோ இராமன் அங்கதனை சமாதனம் செய்ய எடுத்த ஒரு இராஜதந்திர முடிவு என்று  நினைக்கலாமா என்றால், முடியாது. 

ஏன் முடியாது ?

வெறும் அலங்கார பதவி இல்லை இராமன் கொடுத்தது. 

இராவணனிடம் தூது போக அங்கதனை அனுப்புகிறான். 

இலக்குவனை அனுப்பி இருக்கலாம். அனுமனை அனுப்பி இருக்கலாம். அனுமன் இலங்கை பற்றி நன்கு அறிந்தவன். அங்கதனை விட அறிவில், ஆற்றலில் , அனுபவத்தில் உயர்ந்தவன். அனுமனை அனுப்பவில்லை. அங்கதனை அனுப்புகிறான். 


அங்கதனை அவன் எவ்வளவு தூரம் நம்பி இருந்தால் அந்த வேலையை அவனிடம் ஒப்படைத்து இருப்பான்  !

சரி அதோடு முடிந்ததா என்றால்  இல்லை. 

இராவண வதம் முடிந்தது. எல்லோரும் அயோத்தி வந்து விட்டார்கள். இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள். 

அங்கும் அங்கதன் உடை வாளை ஏந்திக் கொண்டு வந்து நிற்கிறான். 

பாடல் 

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரை செறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி

பொருள் 

அரியணை அனுமன் தாங்க, = அரியணையை அனுமன் தாங்க 

அங்கதன் உடை வாள் ஏந்த = அங்கதன் உடை வாளை ஏந்த 

பரதன் வெண் குடை கவிக்க = பரதன் வெண்கொற்றக் குடை பிடிக்க 

 இருவரும் கவரி பற்ற = இலக்குவனும் சத்ருக்கணும் கவரி வீச 

விரை செறி குழலி ஓங்க = சீதை சிறப்புடன் நிற்க 

வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் = சடையப்ப வள்ளலின் 

மரபுளோர் கொடுக்க = மரபில் வந்தவர்கள் கொடுக்க 

வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி = வசிட்டனே இரமானுக்கு முடி சூட்டினான் 

இராவண யுத்தம் முடிந்தவுடன் அங்கதனை இராமன் விட்டு விடவில்லை. தன்னோடு அயோத்திக்கு அழைத்து வந்து விடுகிறான். குகன் வருகிறேன் என்று சொன்ன போது   வேண்டாம் என்று மறுத்தான். வீடணனை இலங்கையில்  தங்க வைத்து விட்டான். ஆனால், அங்கதனை மட்டும் தன்னோடு கொண்டு நடக்கிறான் இராமன். 

வாலியை கொன்றதில் ஒரு  குற்ற உணர்வு இருந்திருந்தால், அங்கதனை தவிர்த்து இருப்பான்  இராமன். இராமன் செய்தது தவறு என்று நினைத்து இருந்தால் அந்தப் பதவியை ஏற்று இருக்க மாட்டான் அங்கதன். 

இது இரண்டுமே நடக்கவில்லை. 

தன்னிடம் அடைக்கலம் என்று வாலி தந்த பின், அங்கதனை தன் பிள்ளை போலவே நடத்தி இருக்கிறான் இராமன். 

தன் உயிருக்கு பாதுகாவலனாக அவனை நம்பி இருக்கிறான் இராமன்.

இராமன் தவறு செய்தான் என்று வாலி நினைக்கவில்லை.

அவன் மகன் அங்கதன் நினைக்கவில்லை. 

இராமனும் நினைக்கவில்லை. 

நாம் மட்டும் ஏன் நினைக்க வேண்டும் ?


Sunday, April 17, 2016

இராமாயணம் - வினையின் வழி

இராமாயணம் - வினையின் வழி 


இராமன் பிறக்கப் போகும் அயோத்தி நகரைப் பற்றி கம்பன் வர்ணித்துக் கொண்டே செல்கிறான். முதலில் மழை வளம் பற்றிப் பாடுகிறான். அந்த மேகம் எப்படி சிவனைப் போல சென்று திருமாலைப் போல கறுத்து வந்தது என்று கூறியதைப் பார்த்தோம்.

அந்த மழை மலையின் மேல் பொழிந்து ஆறாக பெருகி வருகிறது.

எப்படி வருகிறது என்று சொல்கிறான் கம்பன் இந்தப் பாடலில்.

அதற்கு முன்.....


நம் வாழ்க்கை ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் எப்படி இருந்தது ? இப்போது எப்படி இருக்கிறது. இப்படி இருக்கும் என்று நாம் நினைத்துப் பார்த்தோமா ?

நினைக்காததை எல்லாம் விதி நடத்திவிட்டுப் போய் விடுகிறது.

நல்லதும் நடந்திருக்கும், அல்லாததும் நடந்திருக்கும்.

இன்னும் பத்து பதினைந்து வருடத்தில் நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியுமா ? விதி எதை எப்படி மாத்துமோ யாருக்குத் தெரியும் ?

விதியை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், சரயு நதி போகும் வழியில் உள்ள இடத்தை எல்லாம் தலை கீழாக மாற்றி போட்டுவிட்டுப் போய் விடுகிறது.

விதி, வாழ்கையை மாற்றுவதைப் போல.

பாடல்

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,
    மருதத்தை முல்லை ஆக்கிப்
புல்லிய நெய்தல் தன்னைப்
    பொரு அரு மருதம் ஆக்கி,
எல்லை இல் பொருள்கள்
    எல்லாம் இடை தடுமாறும் நீரால்
செல் உறு கதியில் செல்லும்
    வினை எனச் சென்றது அன்றே.

பொருள்

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி = முல்லை நிலத்தை குறிஞ்சி நிலமாக்கி
மருதத்தை முல்லை ஆக்கிப் = மருத நிலத்தை முல்லை நிலமாக்கி
புல்லிய நெய்தல் தன்னைப் = மென்மையான நெய்தல் நிலத்தை
பொரு அரு மருதம் ஆக்கி = உயர்ந்த மருத நிலமாகச் செய்து
எல்லை இல் பொருள்கள் = எல்லை இல்லாத பொருள்கள்
எல்லாம் = எல்லாம்
இடை தடுமாறும் நீரால் =  இடத்தை விட்டு தடுமாறி நீரால்
செல் உறு கதியில் செல்லும் = செல்கின்றன கதியில் செல்லும்
வினை எனச் சென்றது அன்றே = வினையைப் போலச் சென்றது


முல்லையை குறிஞ்சி ஆக்குகிறது. மருத நிலத்தை முல்லை நிலமாக்குகிறது. நெய்தல் நிலத்தை மருதமாக்குகிறது. 


வேலை கிடைக்காது என்று நினைத்திருப்போம். கிடைத்து விடும். கிடைத்த வேலை  நிலைக்கும் என்று நினைத்திருப்போம், ஏதோ காரணத்தால் கை விட்டுப் போய் விடும். திருமணம், குழந்தைகள், அவர்களின் படிப்பு, துணையின் உடல் நலம், உடன் பிறப்புகளின் நிறம் மாற்றம் என்று விதி எப்படியெல்லாம்  வாழ்கையை மாற்றிப் போடுகிறது. 

பாடலின் உள் அர்த்தத்தை பார்பதற்கு முன்னால் , அது என்ன முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம்....என்று பார்ப்போம்.

தமிழர்கள் தாங்கள் வாழும் நிலத்தை பிரித்தார்கள். 

எப்படி பிரித்தார்கள் தெரியுமா ?

ஆற்றின் கரையில் தான் நாகரிகம் பிறக்கிறது. 

ஆறு எங்க தொடங்குகிறதோ அங்கிருந்து தொடங்கி அதன் போக்கிலேயே போய்  நிலத்தை பிரித்தார்கள். 

ஆறுகள் பொதுவாக மலையில் தான் பிறக்கும் - எனவே முதல் நிலம் குறிஞ்சி. மலையும் மலை சார்ந்த இடமும்.

பின் ஆறு மலையில் இருந்து இறங்கி கரடு முரடான  காட்டின் வழி வரும். எனவே அடுத்த இடம்  முல்லை - காடும் காடு சார்ந்த இடமும். 

பின் அது வேகம் குறைந்து நிதானமாக நிலத்தில் ஓடத் தொடங்கும்.  அது மருதம். வயலும் வயல் சார்ந்த இடமும். 

பின் ஓடிப் போய் கடலில் சேரும். அது நெய்தல். கடலும், கடல் சார்ந்த இடமும். 

இப்படி ஆற்றின் ஓட்டத்தின் கூடவே தாங்கள் வாழும் நிலத்தைப் பிரித்தார்கள். 

சரி, பாலை ஒன்று ஒரு நிலம் உண்டே, அது எங்கே ?

பாலை என்பது ஒரு தனி  இடம் இல்லை. 

குறிஞ்சியும் முல்லையும்  தம்முள் திரிந்து  பாலை என்றோர் படிவம் கொள்ளும்  என்றார்கள். 

அது ஏன் குறிஞ்சியும் முல்லையும் மட்டும் பாழ் பட்டு பாலை என்றோர் படிவம் கொள்ள வேண்டும் ?  ஏன் மருதமும் நெய்தலும் பாழ் பட்டு பாலையாகக் கூடாதா என்றால் .....

மருத நிலத்தில் விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய நீரை ஏரி , குளம் என்று தேக்கி வைப்பார்கள்.  எனவே அது பாலையாக மாறாது. 

அதே போல நெய்தல் நிலத்தில் கடல் செடிகள் - நாணல், கடல் பாசி போன்ற தாவரங்கள் வளரும்  எனவே அவையும் பாலையாக மாறாது. 

எவ்வளவு நுணுக்கமாக  ஆராய்ந்து நிலத்தை பிரித்திருக்கிறார்கள் !

சரி, இந்த பாடலில் அப்படி என்ன அர்த்தம் இருக்கிறது ?

மழை பொழிந்தது. ஆற்றில் நீர் வந்தது என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே.

இதை அதாக  மாற்றியது,இதை இதாக மாற்றியது என்று ஏன் இந்தப் பீடிகை ?


பின்னால் இராமனின் வாழ்க்கையில் இப்படி எல்லாம் சம்பவங்கள் நிகழப் போகின்றன.


இரவில், சும்மா இருந்தவனைக் கூப்பிட்டு , சகரவர்த்தி பட்டத்தை ஏற்றுக் கொள் என்று சொன்ன  தசரதன், மறு நாள் காலையில் மாண்டு போய் விட்டான். சக்ரவர்த்தியாக வேண்டிய இராமன் கானகம் போனான். எங்கோஇருந்த  பரதன், சக்ரவர்த்தியாக்கப்பட்டான்.  அவனும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இராமனின் பாதுகைகள் முடி சூட்டிக் கொண்டன. 

யார் நினைத்திருப்பார்கள் இப்படி எல்லாம் நடக்கும் என்று. 

விதி  விளையாடிப் விட்டுப் போய் விட்டது. 

வரும் வாழ்க்கைக்கு கட்டியம் கூறுகிறான் கம்பன். 

விதியை யாரே மாற்ற வல்லார் ?


( மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/04/blog-post_17.html )

Monday, March 28, 2016

இராமாயணம் - இராமவதாரம் - மழை பொழிந்த காரணம்

இராமாயணம் - இராமவதாரம் - மழை பொழிந்த காரணம் 


திருநீறு அணிந்த சிவனைப் போல வெளுத்த மேகங்கள் கடலில் நீரைக் கொண்டு திருமாலைப் போலக் கருத்து திரும்பி வந்தன என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.

அந்த மேகங்கள் எங்கே போயின ?

நேரே மலைக்கு மேலே சென்றன , அங்கே சென்று மலையின் மேல் மழை பொழிந்தன.

ஏன் ?

ஆறுகள் எல்லாம் மலையின் மேல் உற்பத்தி ஆகின்றன. பின் அவை எல்லாம் போய் கடலில் கலக்கின்றன. கடல் ஆறுகளுக்கு கணவன் போல. மலை என்ற பிறந்த வீட்டில் இருந்து கடல் என்ற கணவன் வீட்டுக்கு இந்த ஆறுகள் போகின்றன. அப்படி பார்த்தால் இந்த மலை , கடலுக்கு மாமன் முறை வேண்டும். பெண்ணை கொடுத்தவன் என்ற முறையில்.

மலை உயர்ந்து நிற்கும். அதனால் அதன் மேல் வெயில் நன்றாகப் படும். வெயில் பட்டு  ரொம்ப சூடாகி இருக்கும். அவன் வெம்மையை தணிப்போம் என்று கடல் மேகத்தை அனுப்பி வைத்ததாம்.

பாடல்

பம்பி மேகம் பரந்தது, ‘பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;
அம்பின் ஆற்றதும்’ என்று அகன்குன்றின்மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே.

பொருள்

பம்பி = நெருங்கி

மேகம் = மேகங்கள்

பரந்தது =சூழ்ந்து

‘பானுவால் = சூரியனால்

நம்பன் மாதுலன் = நமது மாமன்

வெம்மையை நண்ணினான்; = சூட்டினை அடைந்தான்

அம்பின் ஆற்றதும்’ = நீரால் குளிப்பாட்டுவோம்

என்று = என்று

அகன் குன்றின்மேல் = அந்தக் குன்றின் மேல்

இம்பர் = இந்த உலகில் உள்ள

வாரி = கடல்

எழுந்தது போன்றதே = எழுந்து வந்தது போன்றதே

அந்த மேகம் எங்காவது மழை   பொழிந்து விட்டுப் போயிருக்கலாம். கம்பன் கஷ்டப்பட்டு ஒரு இடம் தேடுகிறான்.  வெயிலில் சூடேறி துன்பப்படும் மலையின்  சூட்டை ஆற்ற அந்த மேகம் வந்தது என்றான்.

எங்கெல்லாம் துஷ்டர்கள் தோன்றி அறத்திற்கு கேடு விளவிக்கிறார்களோ , எங்கெல்லாம் நல்லவர்கள் துன்பப் படுகிறார்களோ அவர்களை காக்க யுகம் தோறும் யுகம்  தோறும் நான் அவதரிப்பேன் என்று கண்ணன் சொன்ன மாதிரி துன்பம் வந்த இடத்தில் , அதை துடைக்க அந்த மேகம் சென்றதாம்.

அவதாரம் என்றாலே அது தான். உதவி செய்ய மேலிருந்து கீழே வருவதுதானே அவதாரம். அதை மறைமுகமாகச் சொல்கிறான் கம்பன்.

இராமன் வரப் போகிறான். திருமால் அவதரிக்கப் போகிறார். தேவர்களின் துயர் துடைக்க  அவன் வரப் போகிறான் என்று கட்டியம் கூறுகிறான் கம்பன்.


மலை மேல் பொழிந்த மழை எப்படி கீழிறங்கி வந்தது  தெரியுமா ?

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_28.html )

Sunday, March 27, 2016

இராமாயணம் - இராமன் வரவு

இராமாயணம் - இராமன் வரவு 


நம் வீட்டுக்கு திருமணமாகி மருமகளோ, மருமகனோ முதன் முதலாக வருகிறார்கள் என்றால் வீட்டை எவ்வளவு அழகு படுத்துவோம் ? முடிந்தால் வெள்ளை அடித்து, திரைச் சீலைகள் எல்லாம் மாத்தி, படுக்கை விரிப்பு, தலையணை உறை எல்லாம் மாத்தி வீட்டையே புத்தம் புதிதாக மாற்றி விடுவோம் அல்லவா ?

மருமகன், மருமகளுக்கே எந்த பாடு என்றால்,  பரம் பொருளான இறைவனே வரப் போகிறான் என்றால் என்ன செய்ய மாட்டோம் ?

கம்பனுக்குத் தெரியும் இராமன் அயோத்தியில் பிறக்கப் போகிறான் என்று. அந்த ஊரை தன் கற்பனையில் அழகு படுத்துகிறான் கம்பன். இழைக்கிறான்.

நமது திரைப் படங்களில் கதாநாயகனை அறிமுகப் படுத்தும் போது அவன் காலைக் காட்டி, கையைக் காட்டி, கொஞ்சம் கொஞ்சமாக ஆவலைத் தூண்டி முடிவில் முகத்தைக் காட்டுவதைப் போல, இராமன் பிறந்து தொட்டிலில் கிடக்கிறான், அதைக் காட்டுவதற்கு முன்னால் , கம்பனின் காமிரா எங்கெல்லாம் போகிறது , எதையெல்லாம் படம் பிடிக்கிறது என்று பார்ப்போம்.

முதலில், காமிராவை மேகத்தை நோக்கி focus பண்ணுகிறான். Long Shot .

வெண்ணிற மேகங்கள் மிதந்து செல்கின்றன. கடல் நோக்கி சென்று, கடலில் உள்ள நீரை "மேய்ந்து" அயோத்திக்கு வந்து மழை பொழிகின்றன.


பாடல்

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே

பொருள் 

நீறு அணிந்த = திருநீறு அணிந்த

கடவுள் = சிவன்

 நிறத்த வான் = வெண்மையான நிறம் கொண்ட மேகங்கள்

ஆறு அணிந்து சென்று = வழியே என்று

ஆர்கலி = ஆரவாரிக்கும் கடலினை

மேய்ந்து = மேய்ந்து

அகில் சேறு = சந்தன குழம்பை

அணிந்த = அணிந்த

முலைத் = மார்பகங்களைக் கொண்ட

திரு மங்கை தன் = திருமகளின்

வீறு அணிந்தவன் = சிறப்பினைக் கொண்டவன் (விஷ்ணு)

மேனியின் மீண்டதே = கருத்த மேனி போல் மீண்டு வந்ததே

சிவனைப் போல சென்று திருமாலைப் போல வந்ததாம்.

திருமால் வரப் போகிறான் என்பதை சூசகமாக தெரிவிக்கிறான் கம்பன்.

இதற்கு இடையில் மத நல்லிணக்கம் வேறு.  ஒரே மேகம் தான் - சிவனைப் போலவும் இருக்கிறது, திருமாலைப் போலவும் இருக்கிறது.

பரம் பொருளுக்குள் வேறுபாடு ஒன்றும் கிடையாது.  வடிவங்கள்தான் வேறு வேறே தவிர  அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான் என்று சொல்கிறான்.

மேலும், பெண்ணின் சக்தியை போற்றுகிறான்.

திருமகளின் வீறு அணிந்தவன் - சிறப்புகளை, வீரியத்தை, சக்தியை கொண்டவன் என்று பெண்ணின் பெருமையை போற்றுகிறான்.

வெண் மேகம் கடலில் சென்று நீரைக் குடிக்கிறது. அதனால் அது கறுத்துப் போகிறது. அதைப் பார்க்கும் போது கம்பனுக்கு ஏதோ கருத்த எருமை மாடு புல் மேய்வது  போலத் தோன்றுகிறது. கடல் நீரை மேய்ந்து என்கிறான்.

அந்த மேகம் எங்கே போயிற்று தெரியுமா ?

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_27.html )

Wednesday, March 23, 2016

இராமாயணம் - அவை அடக்கம் - பிள்ளைகளின் கிறுக்கல்

இராமாயணம் - அவை அடக்கம்  - பிள்ளைகளின் கிறுக்கல்



சிறு பிள்ளைகள் தரையில் வீட்டின் படம் வரைந்து,  இது சமையல் அறை , இது பூஜை அறை , என்று விளையாடுவார்கள். அப்போது அந்தப் பக்கம் வந்த கட்டிடக் கலை வல்லுநர் ஒருவர், அந்தப் படத்தைப் பார்த்து விட்டு, அந்தப் படம் சரி இல்லை, நீள அகலங்கள் சரியான படி இல்லை என்று விமர்சினம் செய்ய மாட்டார். "ஆஹா , என்ன அழகான படம் " பிள்ளைகளை பாராட்டுவர். அவருக்குத் தெரியும் படம் சரி இல்லை என்று. இருந்தாலும், இது பிள்ளைகளின்  விளையாட்டுத் தானே. இதில் என்ன இருக்கிறது விமர்சினம் செய்ய என்று விட்டு விடுவார்.

அது போல, முறையாக நூல் கற்றவர்கள் விமர்சினம் செய்யாமல் பாராட்டி விட்டுப் போங்கள் என்கிறார் கம்பர்.

தன் கவி சிறு பிள்ளைகளின் கிறுக்கல் போன்றது என்று அடக்கமாகச் சொல்கிறார்.

பாடல்

அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி,
முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ? 

பொருள்

அறையும் = பல்வேறு அறைகளும் (பூஜை அறை , சமையல் அறை )

ஆடரங்கும் = ஆடும் இடமும்

மடப் பிள்ளைகள் = அறிவில் முதிர்ச்சி இல்லாத பிள்ளைகள்

தறையில் கீறிடின் = தரையில் படம் வரைந்தால்

தச்சரும் = மர  வேலைகளில் வல்ல தச்சரும்

காய்வரோ? = கோபம் கொள்வாரா ? (மாட்டார் )

இறையும் = கொஞ்சம் கூட

ஞானம் இலாத = ஞானம் இல்லாத

என் புன் கவி, = என்னுடைய பிழையான கவிதைகளை

முறையின் = முறைப்படி

நூல் உணர்ந்தாரும் = புத்தகங்களைப் படித்தவர்களும்

முனிவரோ? = கோபிப்பார்களோ ? (மாட்டார்கள் )

அவை அடக்கம் என்பது மேலோட்டமான செய்தி.

அதற்கு கீழே உள்ளது கம்பனின் ஆளுமை.

தன் நூலை யாரும் குறை சொல்லாதபடி ஒரு வேலி அமைக்கிறான் கம்பன்...மிக மிக சாமர்த்தியமாக.

பிள்ளைகளின் படத்தை ஒரு பெரிய பட வல்லுநர் (drawing master ) குறை சொன்னால்  பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்...இந்த வல்லுநர் கொஞ்சம் புத்தி  கழண்டவன் என்றுதானே  நினைப்பார்கள். "ஏதோ சின்ன பிள்ளை வரைஞ்சிருக்கு...அதை பாராட்டிடுப் போகாம பெரிய மேதாவி மாதிரி குறை சொல்ல வந்துட்டார் " அப்படின்னு அந்த வல்லுனரைத்தான் குறை சொல்லுவார்கள்.

அது போல, என் கவியை யாராவது குறை சொன்னால், குறை சொல்பவர்களைத்தன்  உலகம் தூற்றும் என்று சொல்கிறான் கம்பன்.

அதாவது, பேசாமல் பாராட்டி விட்டுப் போங்கள் என்பது அவனுடைய மறைமுகக் கட்டளை.

எப்படி, கம்பனின் அவை "அடக்கம்"  ?

கம்பனைப் படிக்கும் போது இந்த எழுத்துச் சாதுரியமும் நமக்குள் வரும்.

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_23.html )



Monday, March 21, 2016

இராமாயணம் - பித்தரும் பேதையரும் சொன்னது - அவை அடக்கம்

இராமாயணம் - பித்தரும் பேதையரும் சொன்னது - அவை அடக்கம் 



பாடல்


முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞருக்கு ஒன்று உணர்ந்தவென்:-
‘பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும், 
பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?’ 

பொருள்

முத்தமிழ்த் = இயல், இசை, நாடகம் என்ற மூன்று பகுதியான தமிழின்

துறையின் = ஒவ்வொரு துறையிலும்

முறை நோக்கிய = முறையாக பயின்ற

உத்தமக் கவிஞருக்கு = உயர்ந்த கவிஞர்களுக்கு

ஒன்று உணர்ந்தவென் = ஒன்று உணர்த்துவேன்

‘பித்தர் சொன்னவும் = பைத்தியம் பிடித்தவர்கள் சொன்னதும்

பேதையர் சொன்னவும் = பேதையர் சொன்னதும்

பத்தர் சொன்னவும் = பக்தர்கள் சொன்னதும்

பன்னப் பெறுபவோ? = ஆராயத் தக்கதோ ? (இல்லை)

பாடலையும், அதன் சொற்களுக்கு அர்த்தத்தையும் பார்த்தாச்சு. வேறு என்ன இருக்கிறது  இந்த பாடலில்.

பித்தர்கள், பக்தர்கள், பேதைகள் சொன்னதை பெரிய கவிஞர்கள் ஆராய்வார்களா என்று கேட்டு முடிக்கிறான் கம்பன்.

பாடலுக்கு பின்னால் வருவோம்.

தமிழர்களின் மேல் பொதுவாக சொல்லப் படும் ஒரு குறை என்னவென்றால் நல்ல விஷயங்களை பாராட்டுவதே கிடையாது. என்ன செய்தாலும் ஒரு திருப்தி இல்லை. ஏதோ குழந்தைகளை பாராட்டி விட்டால் அவர்களுக்கு தலைக்கனம் வந்து விடும் என்று பிள்ளைகளை பாராட்டுவதே இல்லை.

அதே போல், தான் ஏதாவது பெரியதாக சாதித்தாலும், அதெல்லாம் ஒண்ணும் இல்லை..இது என்ன பெரிய சாதனை என்று நினைத்துக் கொள்வது.

14000 பாடல்களுக்கு மேலே பாடிய கம்பன், தன் பாடல்களை ஏனோ பைத்தியக்காரன் பாடியது, முட்டாள் பாடியது , என்று குறைத்து சொல்கிறான்.

இது என்ன ஒரு வித தாழ்வு மனப்பான்மையா ?

கம்பன் மட்டும் அல்ல, அனைத்துப் புலவர்களும் அவை அடக்கம் பாடுகிறார்கள். "நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை, என் பாட்டு ரொம்ப சுமாரு தான் " என்று தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள்.

ஏன் ?

காரணம், தாழ்வு மனப்பான்மை இல்லை.

கல்வியின் வீச்சு, கல்வியின் ஆழம் தெரிந்தமையால் வந்த அடக்கம்.

கல்வி கடல் போன்றது. அதில் எந்த கொம்பனும் கரை கண்டு விட முடியாது.

இது புரிந்ததால் தான், அடங்கி ஒடுங்கி அவை அடக்கம் வாசிக்கிறார்கள்.


ஒண்ணும் தெரியாதவன் தான், ஏதோ கொஞ்சம் வாசித்து விட்டு தனக்குத் தான்  எல்லாம் தெரியும் என்று தலைக் கனம் பிடித்துத் திரிவான்.

படிக்க படிக்க, பயம் வரும்.

நாம் என்ன புதிதாகச் சொல்லி விடப் போகிறோம் என்று. அவ்வளவு இருக்கிறது.

எனவே, அவை அடக்கம் பாடுகிறார்கள்.

ஆனாலும், கம்பன் ஒரு கொம்பன். அவனுக்குத் தெரியும் தான் ஒரு நல்ல கவிஞன் என்று.

தன் பாடல்களை குறை சொல்லவே கொஞ்சம் பேர் வருவார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

அவர்களின் வாயை அடைக்க வேண்டும்.

எப்படி ?

பார்த்தான் கம்பன் ...


பித்தர் சொன்னதும், பேதையர் சொன்னதையும் பெரிய கவிஞர்கள் ஆராய்வார்களா என்று கேட்பதன் மூலம், என் கவிதையை நீங்கள் ஆராய்ந்தால், நீங்கள் பெரிய கவிஞர்கள் இல்லை என்று நிரூபணம் ஆகிவிடும் என்றான்.

இனிமேல் அவன் ஏன் வாயைத் திறக்கப் போகிறான்.

இப்படி, பெரிய புலவர்களை ஒரே வரியில் ஓரங் கட்டிவிட்டான் கம்பன்.

அது மட்டும் அல்ல, வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல ஒரு விஷயம் சொல்கிறான்.


முத்தமிழ் துறையின் முறை போக்கிய

அப்படினா என்ன அர்த்தம்.

வெறும் தமிழ் பாடம் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. இசை ஞானமும் வேண்டும். நாடக ஞானமும் வேண்டும். ஒரு பாட்டு என்ன இராகம் என்று சொல்லத் தெரிய வேண்டும். அந்த இராகத்தில், சொன்ன தாளத்தில், பாவத்தோடு பாடத் தெரியவும் வேண்டும். அது மட்டும் அல்ல, நடிக்கவும் தெரிய வேண்டும்.

அப்போதுதான், ஒருவன் முழுமையான தமிழ் அறிஞன் என்று ஏற்றுக் கொள்ள முடியும்.


உங்களில் எத்தனை பேருக்கு இசையும் நடிப்பும் தெரியும் என்று கேட்கமால் கேட்கிறான் கம்பன்.

அவர்களுக்கு மட்டும் அல்ல, நமக்கும் சேர்த்துத்தான் கம்பன் சொல்கிறான்...தமிழ் படிக்க வேண்டுமா ? இசையும் நடிப்பும் சேர்ந்து படியுங்கள் என்று.

நாளை முதல் யாரவது தமிழ் தெரியுமா என்று கேட்டால், 1/3 -ல் கொஞ்சம் தெரியும் என்று தான்  சொல்ல வேண்டும்.

தமிழ் பாடல்களை இசையோடு படிக்கும் போது அதற்கு உள்ள அழகே வேறு. சில சமயம் அர்த்தமே கூட மாறிப் போகும்.

தமிழை இரசிக்க வேண்டுமா , கொஞ்சம் இசையும் தெரிந்திருக்க வேண்டும்.

அவை அடக்கத்துக்குள் இவ்வளவு அர்த்தங்களை அடக்கியவன் கம்பன்.

எப்பேர்பட்ட பரம்பரையில் பிறந்தவர்கள் நாம் !

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_21.html )

Sunday, March 20, 2016

இராமாயணம் - ஆசை பற்றி அறையல் உற்றேன்

இராமாயணம் - ஆசை பற்றி அறையல் உற்றேன் 


கம்பன் தன் காவியத்தை தொடங்குமுன் அவை அடக்கம் பாடுகிறான்.

பாடல்

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 

பொருள்


ஓசை பெற்று = எப்போதும் ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும்

உயர் = உயர்ந்த

பால் கடல் உற்று = பால் கடலை அடைந்த

ஒரு பூசை = ஒரு பூனை

முற்றவும் = முழுவதுமாக

நக்குபு = நக்கி குடித்து விட

புக்கு என = புகுந்தது போல

ஆசை பற்றி = ஆசையால்

அறையல் உற்றேன்; = சொல்லத் தொடங்கினேன்

மற்று = மேலும்

இக் = இந்த

காசு = குற்றம்

இல் =இல்லாத

கொற்றத்து = வெற்றி அரசனாகிய

இராமன் கதை அரோ = இராகவனின் கதையை

பாற்கடலில் உள்ள பால் அனைத்தையும் குடிக்க புறப்பட்ட பூனையைப் போல இந்த  இராம காதையை நான் சொல்லப் புறப்பட்டிருக்கிறேன் என்று ஆரம்பிக்கிறார் கம்பர்.

சரி. இதில் என்ன பெரிய விசேஷம் ?

இது ஒரு புறம் இருக்கட்டும். 

குற்றவியலில், ஒரு குற்றம் முதலில் மனதில் நடக்கிறது, அதன் பின் தான் உண்மையிலேயே நிகழ்கிறது. அதாவது, குற்றம் முதலில் மனதில் அரங்கேறுகிறது. ஒரு தவறை செய்வதற்கான காரணம் (motive ), செய்யும் திட்டம், என்று பல நிகழ்வுகள் மனதில் ஒத்திகை பார்க்கப்பட்டு பின் நிஜ உலகில் நிகழ்கின்றன. 

தீமைக்கு அப்படி என்றால், நல்லதுக்கும் அப்படியே.

நல்லது நிகழ வேண்டும் என்றால், முதலில் அது மனதில் நிகழ வேண்டும். அதைப் பற்றிய   ஒரு எண்ணம், ஆசை மனதில் விதையாக விழ வேண்டும். பின் அது முளை விட்டு, வேர் பரப்பி, தளைத்து வளரும். 

சரி தானே ?

இன்னும் ஒரு படி மேலே போவோம்.

மனதில் எவ்வளவு பெரிதாக நினைக்கிறோமோ அவ்வளவு பெரிதாக நிகழும். 

40 மதிப்பெண் பெற்று எப்படியாவது தேர்ச்சி அடைந்தால் போதும் என்று நினைத்தால் அவ்வளவுதான் படிப்போம். 

நூத்துக் நூறு பெற்று மாநிலத்திலேயே முதலாவதாக வர வேண்டும் என்று நினைத்தால், அதற்கான முயற்சியில் ஈடு படுவோம்.

மனம் விரிய விரிய செயலும் அதன் விளைவுகளும் விரியும். 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியராகப் பெறின் என்பார் வள்ளுவர். 

எப்படி நினைக்கிறோமோ அப்படியே நடக்கும் என்கிறார் வள்ளுவர். 

வள்ளுவர் தாப்பாகச் சொல்வாரா ?

மார்பு விரிய வேண்டும் என்றால் பளு தூக்கி, உடற் பயிற்சி செய்து மார்பை விரியச் செய்யலாம். 

மனம் உயர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ? 

உயர்ந்த இலக்கியங்களை படிக்க வேண்டும். 

இலக்கியங்கள் மனம் விரிய உதவி செய்கின்றன. 

எப்படி ?

உங்களால் மாரத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்க முடியுமா ? உங்களால் எவரெஸ்ட் மலை உச்சியை அடைய முடியுமா ? நீங்கள் எடை அதிகம் உள்ளவர்கள் என்றால், உங்களால் ஒரு வருடத்தில் 10 கிலோ எடையை குறைக்க முடியுமா ?

இப்படி பெரிய இலக்கை கொடுத்தால் நம் விடை முடியாது என்பதுதான். நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்று விட்டு விடுவோம்.

பத்து கிலோ குறைக்க முயன்றால் , ஆறு அல்லது ஏழு கிலோவாவது குறைப்போம் அல்லவா ? அது நல்லது தானே. 

மாநிலத்தில் முதல் மாணவனாக முயன்று முடியாவிட்டால் மாவட்டத்தில், அல்லது குறைந்த பட்சம் பள்ளிக்காவது முதல் மாணவனாக வர முடியும் அல்லவா. 

பெரிய காரியங்களை நினைத்து பயப்படக் கூடாது. 

ஒரு ஊரில் ஒரு பூனை இருந்தது. அதற்கு , அதிக பட்சம் ஒரு டம்பளர் பால் குடிக்க முடியும். மிக முயன்றால் இரண்டு டம்பளர் குடிக்கலாம். ஆனால், அந்த பூனை என்ன செய்தது தெரியுமா ? நேரே பாற்கடலுக்குச் சென்றது. அந்த பாற்கடல் முழுவதையும் நக்கியே குடித்து தீர்த்து விடுவது என்று நக்கத் தொடங்கியது. 

நமக்குத் தெரியும், அந்த முட்டாள் பூனையால் முடியாது என்று. 

இறைவனின் புகழ் எவ்வளவு பெரியது ? அதை தனி ஒரு ஆள் சொல்லி முடியுமா ? முடியாது. இருந்தாலும் , நான் சொல்லப் போகிறேன் என்று ஆரம்பிக்கிறான் கம்பன். 

பாற்கடலை பூனை நக்கி குடித்து முடித்துவிட நினைத்ததைப் போல குற்றமற்ற இராமனின் கதையை நான் சொல்ல நினைக்கிறேன் என்கிறான். 

சொல்லி முடித்தானா இல்லையா ? 

பூனையாவது, பாற்கடலை குடித்து முடிப்பதாவது என்று நினைத்திருந்தால் ? 

பெரிய விஷயங்களை கண்டு மிரண்டு விடக் கூடாது. துணிச்சலாக ஆரம்பிக்க வேண்டும். 

இது இலக்கியங்கள் நமக்கு கற்றுத் தரும் பாடம். 

மனம் விரிவடைய இல்லக்கியங்கள் வழி செய்யும். 

பாற்கடல் என்ற ஒன்றை நினைக்கும் போதே உங்கள் மனம் எவ்வளவு கற்பனையில் விரிகிறது ?


நல்ல இல்லக்கியங்களை தேடி படியுங்கள். 

உங்கள் மனம் விரியும். மனம்  .உயரும். மனம் உயர உங்கள் வாழ்க்கை உயரும். 

உயரட்டும். 

Friday, March 18, 2016

திருக்குறள் - இல்வாழ்வின் பண்பும் பயனும்

திருக்குறள் - இல்வாழ்வின் பண்பும் பயனும் 



பாடல்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

எளிமையான குறள் . அன்பும் அறமும் ஒரு குடும்பத்தில் இருந்தால் அதுவே அந்த குடும்பத்தின் பண்பும் பயனும் ஆகும்.

அது ஒரு புறம் இருக்கட்டும். 

ஒரு குடும்ப வாழ்கை இனிமையாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள். இருப்பினும், எத்தனை குடும்பங்கள் சந்தோஷமாக இருக்கின்றன ?

ஏதோ ஒரு சில நேரம் சந்தோஷமாக இருந்தாலும், அந்த சந்தோஷம் எவ்வளவு நாள் நீடிக்கிறது ?

எப்போதும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும் ?


இல்வாழ்கை என்பது என்ன - குடும்ப வாழ்கை என்றால் கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர் , சுற்றத்தார் இவர்கள் அனைவரும் சேர்த்ததே ஒரு குடும்ப வாழ்கை.

இந்த குடும்ப வாழ்கை அவ்வளவு எளிதான ஒன்று அல்ல.

ஒவ்வொருவருக்கும் ஒரு  தேவை இருக்கும். இந்தத் தேவைகள் ஒன்றோடு ஒன்று முட்டி  மோதும். அப்போது சிக்கல் பிறக்கும்.

இந்த குடும்ப வாழ்க்கைக்கு இரண்டு விஷயங்களை வள்ளுவர் சொல்கிறார்.

முதலாவது அன்பு.

கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உறவினர் இவர்கள் ஒருவரோடு ஒருவர் இடையறதா அன்பு செலுத்த வேண்டும். அன்பு அனைத்து சிக்கலையும் விடுவிக்கும். சுயநலம் வரும்போதுதான் சிக்கல்கள் தீர்க்க முடியாமல் போய் மன வருத்தம் வருகிறது.  நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற ஆணவ மனப் போக்கு, என் தேவைகள் பூர்த்தி செய்யப் பட வேண்டும், மற்றவர்கள் தேவைகள் எப்படியும் போகட்டும் என்று சுயநலமாக நினைப்பது போன்ற அன்பற்ற செய்கைகளால் குடும்பத்தில் சந்தோஷம் குறைகிறது.

சரி, அன்பு மட்டும் இருந்தால் போதுமா ?

போதாது.

அந்த குடும்பம் அற வழியில் செல்ல வேண்டும். அற வழியில் செல்லாத யாருக்கும் இன்பம் இருக்காது. அறத்தை விட்டு விலகினால் கட்டாயம் துன்பம் வந்து சேரும்.

எனவே, குடும்பத்தில் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தி, குடும்பத்தில் அனைவரும் அற வழியில் நின்றால் ....

நின்றால் என்ன ஆகும் ?

அன்பு குடும்பத்தின் பண்பாக இருந்தால், அந்த குடும்பம் அற வழியில் சென்றால், அதனால் விளைவது எதுவோ , அதுவே அதன் பயன் ஆகும்.

அதாவது நிரந்தர இன்பமே அதன் பயனாக விளையும்.

ஒருவர் மேல் அன்பு செலுத்துங்கள்.

அற வழியில் செல்லுங்கள்.

இன்பத்தை அடைவீர்கள்.

(For other poems http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_18.html )




Saturday, March 12, 2016

அபிராமி அந்தாதி - பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.

அபிராமி அந்தாதி -  பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.


பாடல்

தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு 
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரந்தது எங்கே?-- 
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள் 
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.

பொருள்

தைவந்து = மலர்களோடு வந்து (தைத்த மலர்கள் என்று கூறுகிறார்கள்)

நின் = உன்

அடித் தாமரை = திருவடியாகிய தாமரையில்

சூடிய சங்கரற்கு  = தலையை வைத்த சங்கரற்கு

கைவந்த தீயும் = கையில் உள்ள தீயும்

தலை வந்த ஆறும் = தலையில் உள்ள கங்கை ஆறும்

கரந்தது எங்கே? = மறைந்தது எங்கே

மெய் வந்த நெஞ்சின் அல்லால் = உண்மை ஒளி விடும் மனதைத் தவிர

ஒருகாலும் = ஒருபோதும்

விரகர் தங்கள் = தீயவர்கள்

பொய்வந்த நெஞ்சில் = பொய் இருக்கும் மனதில்

புகல் அறியா = செல்லத் தெரியாத

மடப் பூங் குயிலே = பூங்குயிலே

பெரும்பாலான துன்பங்களுக்குக் காரணம் நான் எனது என்ற எண்ணங்களே.

எனக்கு வேண்டும் என்ற ஆசை. என் பொருள், என் மனைவி, என் சொத்து , என் கார் , என் வீடு என்ற பெருமிதம்.

அவை கை விட்டுப் போய் விடுமோ என்ற பயம்.

என்னை விட மற்றவன் அதிகம் வைத்து இருக்கிறானே என்ற பொறாமை, ஆதங்கம்.

என் திறமை மேல் கொண்ட பெருமிதம். அதற்கு ஒரு பங்கம் வரும் போது வரும் அவமானம்.

என்று நமக்கு வரும் அத்தனை துபங்களுக்கும் காரணம் நான், எனது என்ற அகங்காரம், மமகாரங்களே.

இவற்றை எப்படி விடுவது ? இவற்றைத் தாண்டி எப்படி போவது ?

மனிதன் எத்தனையோ வழிகளை தேடிகொண்டிருக்கிறான்.

சிலர் மதுபானம் அருந்தி தன்னை மறக்கிறார்கள்.

சிலர் சினிமா, நாடகம், விளையாட்டு என்று அதில் மூழ்கி தங்களை மறக்கிறார்கள்.

சிலர் படிப்பு, இசை, ஊர் சுற்றுவது என்று தன்னை மறக்கிறார்கள்.

அனைத்து முயற்சிகளும் "நான்" என்ற இந்த அகங்காரத்தை இழந்து, அதன் சிறையில் இருந்து  விடுபடுவதுதான்.

தன்னை மறப்பது பெரிய சுகம்.

எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபுபதியே என்பார் அருணகிரிநாதர்.

சரி அதற்கும் இந்த பாடலுக்கும் என்ன சம்பந்தம் ?

அபிராமியைக் காண சிவன் வருகிறான்.

அவளுடைய பாதங்களில் விழுந்து வணங்குகிறான். அவளுடைய திருவடிகளை   தன் தலையில் சூடிக் கொண்டான்.

அந்த சமயத்தில், அவன் தன்னையே இழக்கிறான்.

அவன் கையில் உள்ள தீயும், தலையில் உள்ள கங்கையும் மறைந்து போய் விட்டது என்கிறார் பட்டர்.

நான் பெரிய ஆள், கங்கையை தலையில் கொண்டவன், தீயைக் கையில் கொண்டவன் என்பவை போய் விட்டது.

அவளில் அவன் கரைந்தான்.

தான் என்ற ஒன்று இல்லாமல் சிவம் சக்தியில் கரைவதுதான் உலகம் முழுதும் நடக்கும் லீலை.

கைலாய காட்சி கண்டபின் நாவுக்கரசர் உலகம் முழுவதும் ஆண் சக்தியும் பெண் சக்தியும் பின்னி பிணைந்து கிடப்பதைக் காண்கிறார். அதைத் தவிர வேறு எதுவும் அவர் கண்ணுக்குப் படவில்லை.

ஆண் யானையும், பெண் யானையும், (மடப் பிடியோடு களிறு) வருவன கண்டேன், கண்டேன் அவர் திருபாதம், கண்டறியாதன கண்டேன் என்று வியக்கிறார்.

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேனவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்.

இதில் இன்னும் ஆழமான கருத்து என்ன என்றால்,

இந்த ஆணும் பெண்ணும்  வெளி உருவங்கள் அல்ல.

நாம் ஒவ்வொருவரும் தாய் (பெண்) மற்றும் தந்தையின் (ஆண் ) கலப்பில் தான் உருவாகிறோம்.

நமக்குள் ஆணும், பெண்ணும் சரி விகிதத்தில் இருக்கிறது.

இதை அறிந்த நம்  முன்னவர்கள்,அர்த்த நாரி என்ற வடிவை படைத்துக் காட்டினார்கள். ஒவ்வொருவரும் ஆணும் பெண்ணும் கலந்த கலவை தான் என்று சொல்லும் வடிவம் அது.

நம் சமூகச் சூழ்நிலை ஆணுக்கு சில குணங்கள் என்றும் பெண்ணுக்கு சில குணங்கள் என்று வரையறத்து வைத்து இருக்கின்றது. நாம் அந்த வரையறைக்கு உட்பட்டு  வாழ்கிறோம்.

நாளடைவில், ஒரு ஆணுக்கு, அவனுக்குள் இருக்கும் பெண் குணங்கள் அழுந்திப் போகிறது.

அதே போல் பெண்ணுக்கும், அவளுக்குள் இருக்கும் ஆண் குணங்கள் அழுந்திப் போகிறது.

அழுந்திக் கிடக்கிறதே தவிர , அழிந்து போவது இல்லை.

ஒவ்வொருஆணும், தனக்குள் இருக்கும் பெண்ணை வெளியே தேடுகிறான். பெண்ணும் அப்படியே.

உள்ளுக்குள் இருக்கும் பெண்ணோடு ஒரு ஆண் இணைவதுதான் உண்மையான திருமணம். அப்போது அந்த ஆணோ பெண்ணோ முழுமை அடைகிறார்கள். அது வரை, ஒரு பாதி இன்னொரு பாதியைத் தேடி அலைந்து கொண்டே தான்  இருக்கும்.

தேடுங்கள்,

நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், உங்களுக்குள் இருக்கும் பெண்ணையும்,
நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்களுக்குள் இருக்கும் ஆணையும் தேடுங்கள்.

அதுதான் உண்மையான கலவி. கலப்பு. கரைதல்.

சிவன் அபிராமியோடு கரைந்தான்.

உங்கள் அபிராமியை ,உங்களுக்குள்ளேயே கண்டு பிடியுங்கள்.

(For other poems - http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_12.html )

Thursday, March 10, 2016

சிலப்பதிகாரம் - சிலம்பு கூறும் அறம்

சிலப்பதிகாரம் - சிலம்பு கூறும் அறம் 




அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்


உலகத்தில் ஒரே ஒரு கதை தான் உண்டு. மீதி அத்தனை கதையும் அந்த மூலக் கதையின் கருவை எடுத்துக் கொண்டு, பெயர்களை, சூழ்நிலைகளை மாற்றி மாற்றி எழுதுவதுதான்.

அது என்ன கதை.

ஒரு ஊரில் ஒரு கதாநாயகன் இருந்தான். அவனுக்கு சில நல்ல குணங்கள் இருந்தன. ஒரு நாள் அவனுக்கு ஒரு துன்பம் நிகழ்ந்தது. தன்னுடைய நல்ல குணங்களைக் கொண்டு அவன் அந்தத் துன்பத்தில் இருந்து மீண்டு வந்தான்.

இந்த ஒரு கதை தான் உண்டு.

அது இராமாயணமாகட்டும் , பாரதமாகட்டும், எந்த தமிழ், ஆங்கிலப் படமாக இருந்தாலும் , இது ஒன்று தான் கதை.

கதைக்கு ஒரு கதாநாயகன் இருப்பான், அவனுக்கு துணையாக ஒரு நாயகி, அவர்களுக்கு சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள். இவர்களுக்கு ஒரு எதிரி அல்லது வில்லன். வில்லனின் கொடுமைகளை வென்று எடுப்பதுதான் கதை.

ஆனால்,

இதிலிருந்து மாறுபட்டு, மிக மிக மாறுபட்டு எழுதப் பட்ட கதை சிலப்பதிகாரம்.

உங்களுக்குத் தெரிந்த கதைதான்.

கோவலன், கண்ணகியை மணந்தான். பின் மாதவியிடம் காதல் வசப்பட்டான். செல்வத்தை இழந்தான். பின் கோவலனும் கண்ணகியும் மதுரை சென்றார்கள். பொய் பழி சுமத்தப் பட்டு கோவலன் கொலையுண்டான். அதனால் சினந்த கண்ணகி மதுரையை தீகிரையாக்கினாள்.

கோவலன் கதாநாயகன்.
கண்ணகி கதாநாயகி.

வில்லன் யார் ?

கோவலனுக்கு வில்லன் யார் ? மாதவியா ? அவள் மேல் அவன் கொண்ட காதலா ?  தான் தப்பிக்க கோவலனைக் கை காட்டி விட்ட பொற்கொல்லனா ? தவறான தீர்ப்பு சொன்ன பாண்டியனா ?

யாரும் இல்லை. கோவலன் அங்கு வருவான் என்று போர்கொல்லன்னுக்குத் தெரியாது. அவனுக்கு கோவலன் மேல் பகை இல்லை.

விதி.

விதிதான் வில்லன் என்று கொள்ளலாம்.

நம் தமிழ் இலக்கியம் விதியை வெகுவாக நம்பி இருக்கிறது.

ஊழ் என்று அவர்கள் அழைத்தார்கள். வினை என்றும் கூறப் பட்டது.

திருக்குறள், கம்ப இராமாயணம் என்று எங்கு பார்த்தாலும் விதியின் பலம் நம்பப் பட்டது.


அவன் கால் பட்டு அழிந்தது என் தலை மேல் அயன் கை எழுத்தே என்பார் அருணகிரிநாதர்.

விதியை நம்பாத  இலக்குவன் கூட பின்னாளில், சீதை அவனை கடிந்து பொன் மான் பின்னே அனுப்பிய   போது , விதியின் போக்கை எண்ணி நொந்து சென்றான்.

சிலப்பதிகாரம் மூன்று அறத்தை முன்னிறுத்தி காப்பியம் சொல்கிறது.


1. அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
2. உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
3. ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்.  அரசியல் என்றால் இந்த பொறுப்பும் அரசியல் தான். தேர்தலில் நின்று வெற்றி பெற்று வருவது மட்டும் அரசியல் அல்ல.

அரசியல் பற்றி கூறவந்த வள்ளுவர், அதனை இறைமாட்சி என்று குறிப்பிடுகிறார். இறைவனின் தொழில் அது.  உயிர்களைக் காப்பது.

அரசியலில் பிழை செய்தவர்களை யார் தண்டிப்பது ?  அரசன் தவறு செய்தால் அவனை யார்   தண்டிப்பது. அறம் அவர்களைத் தண்டிக்கும்.  இதை எல்லா சட்ட சபையிலும், பார்லிமென்ட்டிலும், நிறுவனகளின் தலைமை இடங்களிலும் எழுதி வைக்க வேண்டும். சட்டம் தண்டிக்காமல் விடலாம். நீதி மன்றம் தண்டிக்காமல் விடலாம். தெய்வம் கூட மன்னிக்கலாம். அறம் தண்டித்தே தீரும். யாரும் விதி விலக்கு இல்லை.

நல்ல குணம் உள்ள பெண்களை உயர்ந்தவர்கள் போற்றுவார்கள். பெண் குணம் கெட்டால் சமுதாயம் சீரழிந்து போகும். எனவே, ஒரு சமுதாயம் உயர வேண்டுமானால், அது நல்ல பெண்களை போற்றியே ஆக வேண்டும்.

ஊழ்வினை எங்கு போனாலும் விடாது. செய்த வினைக்கு பலன் கிடைத்தே தீரும். இந்தப் பிறவியில் இல்லாவிட்டால் அடுத்த பிறவியில் கிடைக்கும்.

இந்த மூன்று கருத்துக்களை கொண்டு பின்னப்பட்ட காவியம் சிலப்பதிகாரம்.

அதிலிருந்து சில பாடல்களை வரும் நாட்களில் சிந்திப்போம்.

(for other poems , http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_10.html )

Wednesday, March 9, 2016

அபிராமி அந்தாதி - கட்டி குடுத்தாச்சு

 அபிராமி அந்தாதி - கட்டி குடுத்தாச்சு 


பாடல்

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன் 
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த 
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம், 
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

பொருள்

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை = குயில் போல இருப்பாள் கடம்பா அடவியில் (அடவி என்றால் காடு)


கோல வியன்  = அழகிய

மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை = மயில் போல இருப்பாள் இமய மலையில்

வந்து உதித்த  = வந்து உதித்த

வெயிலாய் இருக்கும் விசும்பில் = மலையின் மேல் வெயில் போல இருப்பாள்

கமலத்தின்மீது அன்னமாம் = தாமரை மலரின் மேல் தோன்றும் அன்னப் பறவை போல இருப்பாள்

கயிலாயருக்கு = கயிலை மலையில் இருக்கும் சிவனுக்கு

அன்று இமவான் அளித்த கனங்குழையே = அன்று ஒரு நாள் இமவான் அளித்த

பாடல் இவ்வளவுதான். 

இதில் என்ன இருக்கிறது ? 

மயில் போல, குயில் போல, அன்னம் போல , வெயில் போல, அன்னம் போல இருக்கிறாள்  அபிராமி என்று கூறுகிறார். இதில் புதுமையான விஷயம் ஒன்று இல்லை என்றே தோன்றும்.

பொறுங்கள். 

மிக மிக ஆழமான, நுண்ணியமான செய்தியை கூறுகிறார் பட்டர்.

நாம் பேசும் போது , அந்த சப்தம் நமக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் கேட்கிறது  அல்லவா ?

நாம் மனதுக்குள் பேச முடியும் அல்லவா ? மாணவர்களை மனதுக்குள் படியுங்கள் என்று சொன்னால் அவர்கள் படிப்பார்கள். ஒவ்வொரு எழுத்தாய் , ஒவ்வொரு வார்த்தையாய் வாசிப்பார்கள்.  அந்த வார்த்தைகளின் சப்தம் அவர்களுக்கு கேட்க்கும் , அருகில் இருப்பவர்களுக்கு கேட்க்காது. 
இன்னும் ஒரு படி உள்ளே போகலாம்.  அக்ஷரம் இல்லாமல் வார்த்தைகள் இல்லாமல்  சொல்ல வேண்டியதை நினைக்க முடியும். ஒலி வடிவம் இல்லை ஆனால்  அந்த வார்த்தைகள் தரும் அர்த்தம் மொத்தமும் உள்ளே ஓடும். 

அதற்கும் முந்தைய நிலை இருக்கிறது. அந்த நிலையில் சப்தம் தோன்றும்.  சொல்பவருக்கே கூட  தெரியாது. 

இதை  சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்ற நாலு விதமான நிலை என்று சொல்லுவார்கள். 

சூக்குமை...சூட்சுமமானது. நமக்கும் மற்றவர்களுக்கும் தெரியாது. மூலாதாரத்தில்  இது தோன்றும். 

அடுத்த நிலை பைசந்தி, வார்த்தை முழுதுமாக உருவாவிட்டாலும் அது தோன்றுவது  தெரியும். நாபிக் கமலத்தில் இருக்கும் இது. 

அடுத்த நிலை மத்திமை - தொண்டையில் இருப்பது. மூச்சுக் காற்றுடன் சேர்ந்து ஒலி வடிவம் இருக்கும். நமக்கு கேட்கும். மற்றவர்களுக்கு கேட்காது. ஆரூடம் சொல்பவர்கள் இந்த ஒலியை கேட்க்கும் சக்தி படைத்தவர்கள். நாம் வாய் விட்டு சொல்லாமலே மனதுக்குள் ஒலிக்கும் அந்த ஒலியை அவர்களால் கேட்க முடியும். நாம் நம்மைப் பற்றி நினைப்பதை, கேட்க நினைப்பதை அவர்கள் நம்மிடம் இருந்தே கேட்டுக் கொள்ளவார்கள். நாம் நினைப்போம், இது எப்படி  அவர்களுக்குத் தெரிந்தது , நாம் சொல்லவே இல்லையே என்று.  
மந்திரங்களை இந்த இடத்தில் சொல்ல முடியும். அதற்கு அசபா மந்திரம் என்று பெயர். 

இதைத்தான் ஔவையார் 

குண்டலியதனிற் கூடிய அசபை , விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி’

என்பார் 

வைகரி - இறுதியாக வெளிப்படுவது. நமக்கும் மற்றவர்களுக்கும் கேட்கும். 

சூக்குமையில் இருக்கும் போது , வாக்கு ஒளி வடிவில் இருக்கும்.    மேலே எழுந்து வரும் போது அது ஒலி வடிவம் பெறும்.


குயிலாய் இருக்கும் = குயில் கூவுவது கேட்கும். இது வெளிப்பட்ட சப்தம். குயில் இருக்கும் இடம் தெரியாது. ஒளி வடிவம் இல்லை.


மயிலாய் இருக்கும் = மயில் பார்பதற்கு உகந்தது.  அழகாய் இருக்கும். ஒளி வடிவமானது.


வந்து உதித்த = உதித்தல் என்றால், இருப்பது வெளிப்படுவது. சூரியன் உதிப்பான். சூரியன் தோன்றினான் என்று சொல்லக் கூடாது.

வெயிலாய் இருக்கும் = மயில் சற்று மயக்கமான உருவைத் தரும். நீளமும், பசுமையும், இடை இடை வெளியும் விட்டு, அசையும் போது அதன் அழகு தெரியும், ஆனால் முழுவதும் தெரியாது. ;ஆனால், வெயில் தெளிவாகத் தெரியும்.

கமலத்தின்மீது அன்னமாம் = ஞான முக்தி அடைந்தவர்களை அன்னம் என்று குறிப்பிடுவார்கள். அன்னத்திற்கு வட மொழியில் ஹம்சம் என்று பெயர்.

இராம கிருஷ்ண பரம ஹம்சர்.

ஞானம் என்பது உண்மையையும் , உண்மை அல்லாததையும் கண்டு தெளிவது. எனவே ஞானிகளை ஹம்சர் என்று குறிப்பிடுவார்கள்.

இந்த உண்மைகளை அறியும் போது ஞானம் பிறக்கும் என்று பட்டர் கூறுகிறார்.


இந்த மயில் , குயில் எல்லாம் உண்மையா ? வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

வானத்தில் மயில் ஆடக் கண்டேன் 
மயில் குயில் ஆச்சுதடி குதம்பாய், மயில் குயில் ஆச்சுதடி  


என்பார் குதம்பைச் சித்தர்.

அபிராமி அந்தாதி ஒரு ஞானப் பெட்டகம்.

ஆழ்ந்து படிக்க வேண்டும்.


For other entries: http://interestingtamilpoems.blogspot.com/2016/03/blog-post_9.html

Monday, February 29, 2016

திருக்குறள் - இல்வாழ்வான் கடமை - பாகம் 3

திருக்குறள் - இல்வாழ்வான் கடமை - பாகம் 3


பிரமச்சாரி, வானப்ரஸ்தம் சென்றவன், துறவிகள் என்று முதலில் காக்க வேண்டிய மூவரைச் சொன்னார்.

அடுத்தது,

துறந்தார், துவ்வாதார், இறந்தார் என்ற மூவரைச் சொன்னார்.

அடுத்த குறளில் 5 பேரைச் சொல்கிறார்.


பாடல்

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.

பொருள்

தென்புலத்தார் = தென் திசையில் உள்ளவர்கள்

தெய்வம் = தெய்வம்

விருந்து = விருந்து

ஒக்கல் = சுற்றத்தார்

தான் = தான்

என்று ஆங்கு = என்று அங்கு

ஐம்புலத்து ஆறு = ஐந்து இடங்களில் உள்ளவர்களை

ஓம்பல் தலை = காப்பது சிறந்தது


ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தென் புலத்தார் - இது இறந்த நம் முன்னோர்களைக் குறிக்கும். அவரக்ளுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம் போன்ற  கடமைகளைச் செய்ய வேண்டும்.

தெய்வம் = தெய்வத்தை போற்றுவது, கோவில்களில் செய்யப்படும் நற்காரியங்களுக்கு உதவி செய்வது இதில் அடங்கும்.

விருந்தினர் = விருந்து என்றால் புதியது என்று அர்த்தம். புதியதாய் தன் இல்லத்திற்கு வந்தவர்களை போற்றி உபசரித்தல் இல்லறத்தில் உள்ளவனின் கடமை. இந்த விருந்து இரண்டு வகைப் படும். ஒன்று தெரிந்து வருவது. இன்னொன்று தெரியாமல்  வருவது.  தெரியாமல் என்றால் நமக்கு முன் பின் தெரியாதவர்  நம் இல்லத்திற்கு வந்தால் அவரை வரவேற்று உபசரிக்க வேண்டியது இல்லறத்தில் உள்ளவனின் கடமை.


ஒக்கல் = சுற்றத்தார். உறவினர்களுக்கு வேண்டிய , முடிந்த உதவிகளைச் செய்வது. இந்த சுற்றத்தில் மனைவியும், பிள்ளைகளும் கூட அடங்குவர்.

அப்படி என்றால்   நான் என் மனைவிக்கு ஒரு புடவை வாங்கித் தந்தால் அது ஒரு  அறமா என்றால் அதுவும் ஒரு அறம் தான்.

மனைவி மற்றும் பிள்ளைகளின் நியாமான ஆசைகளை தேவைகளை நிறைவேற்ற வேண்டியது  ஒரு இல்லறத்தானின் கடமை என்று கூறுகிறார் வள்ளுவர்.  மனைவி என்பவள் நம் தேவைக்கு இருப்பவள் என்று இல்லாமல், அவளின் தேவைகளையும்  பூர்த்தி செய்வது அறத்தின் பாற்பட்டது.

தான் = தனக்குத் தானே செய்து கொள்வது. இது தான் உள்ளதிற்குள்ளேயே ஆழ்ந்த  சிந்தனை கொண்ட கருத்து. ஒருவன் தனக்குத் தானே வேண்டியவற்றை, நல்லனவற்றை செய்து கொள்ளுதலும் அறமே என்கிறார் வள்ளுவர்.

அது எப்படி அறமாகும் ?

மேலே சொல்லப் பட்ட அனைத்து அறங்களையும் செய்வதற்கு இல்லறத்தில் இருப்பவன்  நல்ல நிலையில் இருந்தால் தானே முடியும். அவன் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தால் அவன் எங்கே விருந்தினரை உபசரிக்க முடியும், உறவினர்களுக்கு உதவ முடியும் ? எனவே ஒருவன் தன்னைத் தான் பேணி பாதுகாத்துக் கொள்வதும் இல்லறமே.

அது சுயநலம் இல்லை. இல்லறத்தில் இருப்பவனே அறத்தின் ஆணி வேர். அவன் நன்றாக இருந்தால் தான் சமுதாயத்தில் அறம் நிலைக்கும். எனவே, தன்னையும்  சேர்த்துச் சொன்னார் வள்ளுவர்.

திருக்குறளில் மூன்று பாலை வரிசை படுத்திய  முறையாகட்டும்,அவற்றுள் அதிகாரங்களை  வரிசைப் படுத்திய முறையாகட்டும், ஒவ்வொரு அதிக்கரத்திலும்  உள்ள குறள்களை வரிசைப் படுத்திய முறையாகட்டும், ஒவ்வொரு குறளிலும் உள்ள வார்த்தைகளை வரிசைப் படுத்திய முறையாகட்டும் எல்லாவற்றிலும் ஒரு முறைமை இருப்பதைக்  காணலாம்.

இங்கே 5 பேரைச் சொன்னார்.

தென் புலத்தார்
தெய்வம்
விருந்து
சுற்றம்
தான்

என்ற ஐந்தில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. ஒரு காரணம் இருக்கிறது. ஏன் இந்த வரிசையை மாற்றிச் சொல்லி இருக்கக் கூடாதா ?

தென் புலத்தாரும், தெய்வமும் கண்ணுக்குத் தெரியாதவர்கள். ஒரு நம்பிக்கையில்  செய்வது தான். யாருக்குத் தெரியும் அவர்களுக்குச் செய்யும் தர்மங்கள் அவர்களை சென்று அடையும் என்று.

சுற்றமும், தானும் ...இவர்களுக்குச் செய்யும் தர்மத்தில் ஒரு சுயநலம் இருக்கிறது. என் அண்ணன் தம்பிக்கு, அக்காள் தங்கைக்கு, மனைவி மக்களுக்கு நான் செய்வது ஒரு சுயநலத்தின் பாற்பட்டது.

எனவே இந்த இரண்டுக்கும் மத்தியில்  விருந்தை வைத்தார்.

மேலும், தனக்குச் செய்து கொள்ள வேண்டியதை கடைசியில் வைத்தார். இல்லை என்றால், தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மம் என்று சொல்லி, இன்னும்  எனக்கே மிஞ்சவில்லை, நான் எப்படி மற்றவர்களுக்குச் செய்ய முடியும் என்று  செய்யாமலே இருந்து விடுவான்.

சுயநலம் வேண்டும், ஆனால் அது கடைசியில் வர வேண்டும்.

பிதுர்களுக்கு, தெய்வத்திற்கு, விருந்தினருக்கு, சுற்றத்தாருக்கு செய்த பின் தனக்கு செய்து கொள்ள வேண்டும்.

வீட்டில் உணவு கொஞ்சம் கம்மியாக இருந்தால், முதலில் விருந்தினருக்கு தர வேண்டும். அவர் உண்டது போக மீதம் இருந்தால் மனைவி மக்களுக்குத் தர வேண்டும். அவர்கள் உண்ட பின் மீதம் இருந்தால் , எவ்வளவு இருக்கிறதோ அதை தான் உண்ண வேண்டும்.

முதலில் எனக்குப் போடு என்று உள்ளதை எல்லாம் உண்டு முடித்து விடக் கூடாது.

இல்லறம் என்று சொல்லும் போது கணவனும் மனைவியும் சேர்ந்ததுதான் இல்லறம்.

எனவே, கடைசியில் உள்ளதை கணவனும் மனைவியும் பகிர்ந்து உண்ணலாம்.

இப்படி அறத்தை சொன்ன இன்னொரு மொழி இருக்குமா உலகில் ?


அது என்ன "ஐம்புலத்து ஆறு"

புலம் என்றால் இடம். இந்த ஐந்தும் அறம் செய்யும் இடங்கள். ஆறு என்றால் வழி. இந்த ஐந்து இடத்திலும் நல்ல வழியில் அறம் செய்ய வேண்டும்.

தனக்கு உள்ள வருமானத்தை ஐந்தாகப் பிரித்து இந்த வழியில் செலவு செய்ய வேண்டும். அப்படி என்றால் அரசனுக்கு தரவேண்டிய வரியை ஏன் வள்ளுவர் சொல்லாமல் விட்டார் ? வரி செலுத்துவது தர்மம் இல்லையா என்று கேட்டால், நாம் செலுத்தாவிட்டாலும் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். தர்மம், அறம் என்பது நாம் மனம் வைத்துச் செய்வது. வரி, நாம் மனம் வைக்காவிட்டாலும், அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அதை இந்த பட்டியலில்  சேர்க்கவில்லை.

இல்லறம் என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு, எத்தனை சமுதாய நோக்கு உடையது என்று குறள் காட்டுகிறது.

அறிவோம். அறியத் தருவோம்.










Saturday, February 27, 2016

திருக்குறள் - இல் வாழ்பவனின் கடமை

திருக்குறள் - இல் வாழ்பவனின் கடமை 


முந்தைய குறளில் பிரமச்சாரி, வானப்ரஸ்தம் அடைந்தவர்கள், துறவிகள் இந்த மூவருக்கும் உதவி செய்வது இல்லறத்தில் ஈடு பட்டவர்களின் கடமை என்று கூறப் பட்டதைப் பார்த்தோம்.

அடுத்த மூன்று கடமைகளை இங்கு சொல்கிறார் வள்ளுவர்.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

துறந்தார்
துவ்வாதார்
இறந்தார்

ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

துறந்தார் - அது தான் முந்தைய குறளிலேயே சொல்லியாச்சே துறவிகளுக்கு உதவி செய்யணும்னு. அப்புறம் என்ன மீண்டும் துறந்தார்னு இந்த குறள்ல வேற ?

முந்தைய குறள் , தானே துறந்தவர்கள்.

இந்த குறளில் பிறரால் துறக்கப் பட்டவர்கள், அல்லது கை விடப் பட்டவர்கள். யாருமற்றவர்கள். அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டியது ஒவ்வொரு இல்லறத்தானின் கடமை ஆகும்.

அடுத்தது துவ்வாதார். அது என்ன துவ்வாதார் ?

உயிர்கள் எப்போதும் இன்பங்களை துய்க்க விரும்பும். இன்பங்களை அனுபவிக்க விரும்பும். இன்பத்தை விரும்பாத உயிர் எது. அப்படி இன்பத்தை அனுபவிக்க  முடியாதவர்கள் துவ்வாதார்.


அது யார் இன்பத்தை அனுபவிக்க முடியாதவர்கள் என்றால் அது ஒரு பட்டியல் போடலாம்.

முதலாவது, வறுமை உற்றவர்கள். கையில் செல்வம் இல்லாமையால் இன்பங்களை அனுபவிக்க முடியாமல் இருப்பவர்கள். இன்பங்கள் என்றால் ஏதோ ஆடம்பரமான   இன்பங்கள் அல்ல. நல்ல உணவு, நீர், சுத்தமான உடை, இருக்க இடம், பாதுகாப்பு போன்ற அடிப்படை இன்பங்களை கூட அனுபவிக்க முடியாதவர்கள்.

நம் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் குழந்தை பள்ளியில் படிக்கிறது என்று வைத்துக் கொள்வோம் .  பள்ளியில் கட்ட வேண்டிய கட்டணத்தை கட்ட பணம்  இல்லாமல் இருக்கலாம். கற்பதனால் வரும் இன்பத்தை அந்தக் குழந்தை பெற முடியாமல் போகலாம். அதற்கு உதவி செய்வது.

இரண்டாவது, உடல் ஊனம் அடைந்தவர்கள். கண் இல்லை என்றால் நல்ல காட்சியை பார்க்க முடியுமா? தெருவில் பயமின்றி நடக்க முடியுமா, கால் இல்லாதவன் , நோய் வாய் பட்டவர்கள் இன்பத்தை அனுபவிக்க முடியாது. அவர்களுக்கு  இல் வாழ்வான் துணையாக இருக்க வேண்டும்.

மூன்றாவது, மன நோய் கொண்டவர். மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள், அதீதமான துக்கத்தால் மன நிலை  பாதிக்கப் பட்டோர் போன்றோருக்கு இல்வாழ்வான்  துணை செய்ய வேண்டும்.

அடுத்ததாக , இறந்தார்.

இறந்தாருக்கு எப்படி உதவி செய்ய முடியும் ?

அதாவது, அனாதையாக இறந்தவருக்கு ஈமக் கடன் செய்ய வேண்டியது ஒரு இல்லறத்தானின் கடமை.

சடாயு இறந்த போது , அவருக்கு இராமன் அவருக்கு ஈமக் கடன் செய்தான். சடாயுவை தன் தந்தையாகவே நினைத்து அவருக்கு ஈமக் கடன் செய்தான்.


இந்தனம் எனைய என்ன கார் 
     அகில் ஈட்டத்தோடும் 
சந்தனம் குவித்து, வேண்டும் 
     தருப்பையும் திருத்தி, பூவும் 
சிந்தினன்; மணலின் வேதி 
    தீது அற இயற்றி, தெண் நீர் 
தந்தனன்; தாதை தன்னைத் தடக் 
     கையான் எடுத்துச் சார்வான்,

மீதிக் கடமைகளை அடுத்த குறளில் பார்ப்போம்.


Friday, February 26, 2016

திருக்குறள் - திருமணம் செய்வது எதற்காக ?

திருக்குறள் - திருமணம் செய்வது எதற்காக ?


இது என்ன கேள்வி ?

கல்யாணம் பண்ணிக் கொண்டால் மனைவியோடு (அல்லது கணவனோடு) உல்லாசமாக இருக்கலாம், பிள்ளைகளை பெற்றுக் கொள்ளலாம், அவர்களை வளர்ப்பது ஒரு சுகம், நமக்கென்று ஒரு வீடு, மனைவி, மக்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கலாம் ...இதற்குத்தானே கல்யாணம் பண்ணிக் கொள்கிறோம் என்பதே நம் விடையாக இருக்கும்.

இவை எல்லாம் சுய நலத்தின் பாற்பட்டது.

திருமணம், குடும்பம் என்பது அவ்வளவுதானா ? குடும்பத்திற்கு ஒரு சமுதாயப் பொறுப்பு என்று ஒன்றும் இல்லையா ?

இருக்கிறது.

பதினொரு பொறுப்புகளைச் சொல்கிறார் வள்ளுவர்.


திருமணம் என்பதே ஒரு மிகப் பெரிய பொறுப்பு என்கிறார்.

இந்தப் பொறுப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் திருமணம் செய்து கொள், இல்லையென்றால் திருமணம் உனக்கு ஏற்றது அல்ல என்கிறார்.

அது என்ன பதினொரு கடமைகள் ?

இருப்பது ஒண்ணே முக்கால் அடி, ஏழே ஏழு வார்த்தைகள் அதில் பதினொரு கடமையை எப்படிச் சொல்ல முடியும்?

மூன்று குறளாக பிரித்துக் கொண்டு, அந்த பதினொரு பொறுப்புகள் அல்லது கடமைகளைச் சொல்கிறார்.

முதல் குறள்

பாடல்

இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

பொருள்

இல்வாழ்வான் என்பான் = இல் வாழ்க்கையில் வாழ்பவன் என்பவன்

இயல்பு உடைய மூவர்க்கும் = இயல்பான மூன்று பேருக்கு

நல்லாற்றின் = அவர்கள் நல்ல வழியில் போக

நின்ற துணை = துணையாக

அது யார் மூன்று பேர் ?

- பிரமச்சாரி
-  இல்லத்தைத் துறந்து மனைவியோடு வனம் சென்றவன்
- முற்றும் துறந்த துறவி

இந்த மூன்று பேருக்கும், இல்லத்தில் மனைவியோடு இருப்பவன் உதவி செய்ய வேண்டும்.

சரி, ஒரு பிரமச்சாரி தவறான வழியில்  போகிறான் என்றால் அதற்கும் உதவி செய்ய வேண்டுமா ?

இல்லை,

"நல்லாற்றின் "

நல்ல வழி என்று பொருள். அவர்கள் நல்ல வழியில் போக உதவி செய்ய வேண்டும்.

திருமணம் முடிக்காத ஒருவன் உங்கள் இல்லத்திற்கு வந்தால், அவனுக்கு உணவு  அளிக்க வேண்டியது உங்கள் கடமை, நீங்கள் இல்லறத்தில் இருந்தால்.

திருமணம் முடித்தவன் , திருமணம் முடிக்காத ஒருவன் வீட்டுக்குப் போனால் அந்த பிரமச்சாரி இவனுக்கு உணவு அளிக்க வேண்டியது கடமை இல்லை.

இதை வேறு ஒரு விதத்தில் சிந்தித்துப் பார்ப்போம்.

நம் குழந்தைகள் படிப்பிற்காக அல்லது புதிதாக வேலை பொறுப்பை ஏற்று வெளி நாட்டில்  இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களை யாராவது  பொறுப்பாக பார்த்துக் கொண்டால் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா ?

அதே போல், நாம் இருக்கும் இடத்தில் , நமக்குத் தெரிந்த பிரமசாரிகள் யாராவது இருந்தால்  அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்.

அடுத்தது இல்லத்தை துறந்த கணவன் மற்றும் மனைவி. இவர்களையும் ஒரு இல் வாழ்வான்  காக்க வேண்டும்.

ஏன் ?

வயதான தம்பதிகளுக்கு பிள்ளை இல்லாமல் இருக்கலாம். அல்லது பிள்ளைகளால் கை விடப் பட்டவர்களாக  இருக்கலாம் அல்லது பிள்ளைகள் வெளி நாட்டில்  இருக்கலாம். அப்படிப்பட்ட தம்பதிகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள  முடியாதவர்கள். அவர்களை இல்வாழ்வான் பாதுகாக்க வேண்டும்.

நம் வீட்டுக்கு அருகில் அப்படி யாராவது இருந்தால், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை  செய்ய வேண்டும்.

மூன்றாவது, முற்றும் துறந்த துறவிகள்.

துறவிகளுக்கு நம் சமுதாயம் மிக உயர்ந்த மதிப்பு தந்து வந்திருக்கிறது.

ஏன் என்றால், ஒரு துறவி தான் சுயநலக் கலப்பு இல்லாமல், அறத்தை மக்களுக்கு  எடுத்துச் சொல்ல முடியும். அறம் வாழ வேண்டும் என்றால் துறவிகளை  போற்ற வேண்டும்.

இது முதல் மூன்று கடமைகள்.

இன்னும் வரும்.


  

Thursday, February 11, 2016

நற்றிணை - என்றும் என் தோள் பிரிவது அறியார்

நற்றிணை - என்றும் என் தோள் பிரிவது அறியார்




நின்ற சொல்லரநீடுதோன் றினியர்
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி
நறுநுதல் பசத்த லஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பறி யலரே.


தலைவன் உன்னை விட்டு பிரிந்து போகப் போகிறான் என்று தலைவியிடம் தோழி சொல்கிறாள்.

அவர்களுக்குள் இன்னும் திருமணம் ஆகவில்லை. காதல்தான்.

அவனுக்கு, அவள் மேல் உள்ள காதலை விட, அவளுக்கு, அவன் மேல் உள்ள காதல்  அதிகம். அது மட்டும் அல்ல, அவன் தன்னை அளவு கடந்து நேசிக்கிறான்  என்றும் அவள் நினைக்கிறாள். மேலும், அவனைப் பிரிந்து அவளால் இருக்க முடியாது என்பதையும் அவன் அறிவான் என்றும் நினைக்கிறாள்.


இவை எல்லாம் உண்மையா ? தெரியாது.

அவன் தன்னை விட்டுப் பிரிந்து போகப் போகிறான் என்று சொன்னவுடன், தலைவி  உருகுகிறாள்.

அப்படியெல்லாம் இருக்காது.

"அவன் எப்போதும் என் தோள்களை விட்டுப் பிரிய மாட்டான். இந்த உலகுக்கு நீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அவன் எனக்கு முக்கியம் என்பதை அவன் அறிவான். அவனை விட்டுப் பிரிந்தால், நான் வாடிப் போய்விடுவேன் என்பது அவனுக்குத் தெரியும். எனவே  அவன் என்னை விட்டுப் பிரிய மாட்டான்"

சீர் பிரித்த பின்

நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் 
என்றும் என் தோள் பிரிவு அறியலரே 
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந் தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின்ற்றி அமையா உலகம் போலத்
தம் இன்றி அமையா நன்மை நயந்து அருளி 
நறு நுதல் பசத்தல் அஞ்சி 


சிறுமை உறுபவோ செய்வது அறியலரே 

பொருள் 

நின்ற சொல்லர் = நிலைத்த சொல்லை உடையவர். பேச்சு மாறாதவர். ஒன்று சொன்னால், அதில் எப்போதும் நிலையாக நிற்பவர்

நீடு தோன்று இனியர் = எப்போதும் இனிமையானவர். நீடு என்பதற்கு நீண்ட நாட்களாக என்று பொருள் கொள்ளலாம். நீண்ட நாள் இனிமையாக இருப்பவர் என்பதால், இப்போதும் அந்த இனிமை மாறமாட்டார் என்ற பொருள் மறைந்து நிற்கிறது.

என்றும் = எப்போதும்

என் தோள் = என் தோள்களை

பிரிவு அறியலரே = பிரிவு என்ன என்றால் அறியாதவர். பிரிந்தால் அல்லவா , பிரிவு என்ன என்பதை அறிய

தாமரைத் = தாமரை மலரின்

தண் = குளிர்ந்த

தாது = மகரந்தமும்

ஊதி = பறந்து

மீமிசைச் = மேலே சென்று

சாந்தின் தொடுத்த = சந்தன மரத்தில் உள்ள

தீந் தேன் போலப் = சுவையான தேனைப் போல

புரைய மன்ற = புரை என்றால் உயர்ந்த என்று பொருள். புரைய மன்ற என்றால் உயர்ந்தது அன்றோ

புரையோர் கேண்மை = உயர்ந்தவர் நட்பு

நீரின்ற்றி அமையா உலகம் போலத் = தண்ணீர் இல்லாமல் இயங்க முடியாத உலகம் போல. பயிர் வளர்க, உயிர் வளர்க நீர் எவ்வளவு முக்கியமோ அவன் எனக்கு அவ்வளவு முக்கியம். நீர் இல்லாவிட்டால், பயிர் வாடி, வதங்கி கருகி விடும். அது போல, அவன் இன்றி நான் வாடி வதங்கி இறந்து போய் விடுவேன். மழைத் துளி விழுந்தவுடன் செடிகள் சிலிர்த்து புத்துயிர் பெற்று விளங்கும். அது போல, அவன் வந்தால் நான் மலர்ந்து, சிலிர்த்து புதுப் பொலிவுடன் இருப்பேன்.

தம் இன்றி = அவர் இன்றி

அமையா = என்னால் உயிர் வாழ முடியாது

நன்மை நயந்து அருளி = என் மேல் அன்பு வைத்து நன்மையை விரும்பி அருளிச் செய்த

நறு நுதல் = என் நெற்றி

பசத்தல் அஞ்சி = பசலை நிறம் அடைவதை நினைத்து



சிறுமை உறுபவோ = என்னை விட்டுப் பிரியும் அந்த சிறிய செயலை

செய்வது அறியலரே = செய்வது எப்படி என்று அறிய மாட்டார்

தன்னை விட்டு அவன் பிரியப் போகிறான் என்ற கவலையால் இவற்றை சொல்கிறாள்  என்பது பாட்டில் நேரடியாக இல்லை. அது ஊடாடும் சோகம்.

கவிதை என்பது வார்த்தைகளைத் தாண்டி, வரிகளைத் தாண்டி, உள்ளாடும் உணர்வு.

அந்த உணர்வு , இந்தக் கவிதையில் உங்களுக்குப் புரிந்தால், நீங்கள் பாக்கியசாலிகள்.



Sunday, February 7, 2016

பிரபந்தம் - சொல் நல்லதென்று சொல்லி

பிரபந்தம் - சொல் நல்லதென்று சொல்லி




பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே

பிரபந்தம் போன்ற நூல்களை மனப்பாடம் செய்து அப்படியே ஒப்பிக்கக் கூடாது. மனனம் செய்து திருப்பிப் படிப்பது என்றால் அதற்கு நாம் எதற்கு ? ஒரு ஒலிப் பதிவு நாடா (tape recorder) போதுமே. ஒரு முறை பதிவு செய்து விட்டால் மீண்டும் மீண்டும் அது அப்படியே பாடும்.

பெரியாழ்வார் சொல்கிறார்....இந்த பல்லாண்டு பாடல்களை நவில வேண்டும் என்று.

"நவின்றுரைப் பார்"

நவின்று உரைப்பார்.

அது என்ன நவில்தல் ?

நவில்தல் என்றால் அறிந்து கொள்ள வேண்டும் என்று வாசிப்பது . சும்மா மேலோட்டமாக வாசித்துக் கொண்டு போவது அல்ல. ஒரு நூலின் ஆழ்ந்த பொருளை  அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு வாசிப்பதற்கு நவில்தல் என்று பெயர்.

திருவள்ளுவர் சொல்லுவார் ....


 நவிறொறு நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு. (783)

நவில் தொரும் நூல் நயம் போலும் பயில் தொரும் பண்புடையாளர் தொடர்பு.

ஒரு நூலை நவில நவில எப்படி அதில் புது புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறதோ, அது போல நல்லவர்களின் தொடர்பு புது புது நன்மைகளை  தரும் என்கிறார்.

திருப்பல்லாண்டை நவில வேண்டும். ஆழ்ந்து கற்க வேண்டும்.

இது ஒரு செய்தி.

அறிய வேண்டும், கற்க வேண்டும் என்றால் எதை அறிய வேண்டும் ? எதை கற்க வேண்டும் என்ற கேள்வி வரும்.

அதற்கும் அவர் விடை தருகிறார்.

"நல்லாண் டென்று நவின்று "

இது நமக்கு நல்லது என்று அறிந்து கொண்டு.

பெரியாழ்வார் சொன்னார் என்பதற்காக கற்க வேண்டாம், அது பெருமாள் மேல் பாடப் பட்ட  பாடல் என்பதால் கற்க வேண்டாம், உங்களுக்கு நல்லது என்று அறிந்து  கொள்ளுங்கள்  என்கிறார்.

சரி, ஆழ்ந்து படித்து, அதில் உள்ள நன்மைகளை அறிந்து கொண்டாயிற்று, அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

மற்றவர்களுக்கும் சொல்லுங்கள். நீங்கள் மட்டும் அதை அறிந்தால் போதாது. அறியாத மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

"நல்லாண் டென்று நவின்றுரைப் பார்"

நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார்

நமக்கு நல்லது என்று அறிந்து (நவின்று) உரைப்பார்

எதை உரைப்பார்கள் ?

"நமோ நாராய ணாயவென்று"

நமோ நாராயாணாய  என்று

இப்போது பாடலை முழுதும் பார்ப்போம்

பாடல்

பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே

சீர் பிரித்தபின் 


பல்லாண்டு என்று  பவித்திரனை பரமேட்டியை சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராய ணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர்  பல்லாண்டே




பொருள்




பல்லாண்டு என்று = பல்லாண்டு என்று 

பவித்திரனை = பவித்தரமானவனை 

பரமேட்டியை = பரம ஏட்டில் பரம பதத்தில் உள்ளவனை 

சார்ங்கம் என்னும் = சார்ங்கம் என்ற 

வில் ஆண்டான் தன்னை = வில்லை ஆண்டவனை 

வில்லிபுத்தூர் விட்டுசித்தன் = ஸ்ரீ வில்லிபுத்தூர் என்ற ஊரில் இருந்த விஷ்ணு சித்தன் என்ற நான் 

விரும்பிய சொல் = விரும்பிய இந்த பல்லாண்டு என்ற பாடல்களை 

நல் ஆண்டு என்று = நல்லது என்று 

நவின்று = கற்று உணர்ந்து 

உரைப்பார் = மற்றவர்களுக்கு சொல்லுவார் 

நமோ நாராய ணாய என்று = நமோ நாராய ணாய என்று

பல்லாண்டும் = பல ஆண்டுகள் 

பரமாத்மனைச் = பரமாத்மனை, பெருமாளை 

சூழ்ந்து இருந்து ஏத்துவர்  பல்லாண்டே = சுற்றி இருந்து புகழ்வர் பல்லாண்டே 

இந்தப் பாசுரத்தோடு திருப்பலாண்டு நிறைவு பெறுகிறது 

இந்தத் திருப்பலாண்டு ஒரு புரட்சிகரமான வெளிப்பாடு. 

பொதுவாக வாழ்த்துபவர், வாழ்த்து பெறுபவரை விட உயர்ந்தவராக இருக்க வேண்டும். 

பெற்றோர், பிள்ளைகளை வாழ்தலாம், ஆசிரியர் மாணவனை வாழ்தலாம்...ஆனால் மாணவன் ஆசிரியரை வாழ்துவது என்பது நம்மால் நினைத்துப் பார்க்க முடியாது. 

பெருமாள், பெரியாழ்வாரை விட எந்த விதத்தில் குறைந்தவர். இருந்தும் பெரியாழ்வார் "நீ பல்லாண்டு வாழ்க" என்று வாழ்துகிறார். அது மட்டும் அல்ல, அவர் பெருமாளை மட்டும் அல்ல, பெருமாளையும், ஸ்ரீதேவியையும், சங்கு , மற்றும் சக்ரத்தையும்  வாழ்துகிறார். 

அது எப்படி சரியாகும் ?

பக்தியின் உச்ச கட்டம் - அன்பு மட்டுமே நிறைந்த மனம். வாழ்த்த வயது, அறிவு போன்ற  தகுதி எதுவும் வேண்டாம்....அன்பு மட்டும் இருந்தால் போதும். அது ஒன்றே தகுதி.

வைணவர்கள்தான், வாழ்த்த அன்பைத் தவிர வேறு ஒரு தகுதியும் வேண்டாம் என்று   முன் மொழிந்தவர்கள். 

இனிமேல், வாழ்த்த தகுதியை பார்க்காதீர்கள். 

இது ஒரு செய்தி.

மற்றொன்று, எவ்வளவு கிடைத்தாலும், இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று தான் மனிதன் பறக்கிறான். 

கோவிலுக்குப் போனால், ஏழைகளை விட பணக்காரன் தான் அதிக ம் கேட்கிறான். அதைக் கொடு, இதைக் கொடு என்று பிச்சைக் காரனைப் போல கடவுளிடம் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கிறான். 

இருப்பது போதும் என்ற எண்ணம் வருவதே இல்லை. 

இத்தனை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்ல மனம் வருவது இல்லை. இன்னும் தா, இன்னும் தா என்று கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

"நீ இதுவரை எனக்கு தந்ததற்கு நன்றி. போதும். நீ உன் மனைவி மற்றும் சொத்துக்களோடு நல்லா இரு" என்று கடவுளிடம்  கூறிய முதல் ஆள் பெரியாழ்வார். 

திருப்தி படுங்கள். கிடைத்தவற்றிற்கு நன்றி சொல்லுங்கள். கொடுத்தவனை வாழ்த்துங்கள்.

எல்லாம் நல்லபடியா நடக்கும்.