Friday, November 18, 2016

திருக்குறள் - இல்லாமையில் பெரிய இல்லாமை

திருக்குறள் - இல்லாமையில் பெரிய இல்லாமை 


பொருள் தேட வேண்டும். பணம் இருந்தால் மற்ற எதைப் பற்றியும் கவலை இல்லை. வேண்டிய அளவு பணம் மட்டும் இருந்து விட்டால் உலகில் மிக சந்தோஷமாக வாழலாம். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடலாம் என்றுதான் எல்லோரும் நம்பி , அந்த பணத்தை சேர்க்க வாழ்நாள் எல்லாம் முயற்சி செய்கிறார்கள்.


பணம் இல்லாவிட்டால் வாழ்வில் மற்றவை எது இருந்தும் பயனில்லை. பணம் ஒன்றுதான் குறி என்று உலகம் சென்று கொண்டிருக்கிறது.

நம்மிடம் பணம் இல்லை, செல்வம் இல்லை , எனவே அதை சேர்க்க முயற்சி செய்கிறோம். இதில் தவறென்ன.

பணம் மட்டும் அல்ல, நாம் வேறு சிலவற்றையும் சேர்க்க முயற்சி செய்கிறோம்.

நல்ல ஆரோக்கியம், உறவுகள், நட்பு, புகழ் , செல்வாக்கு, மதிப்பு, என்று இப்படி  பலவற்றை  சேர்க்க ஆசைப் படுகிறோம். ஆனால் முக்கியமான ஒன்றை மறந்து விடுகிறோம்.

அது என்ன ?

அறிவு !

பாடல்

அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை 
இன்மையா வையா துலகு.

கொஞ்சம் சீர் பிரிக்கலாம் 

அறிவு இன்மை , இன்மையுள் இன்மை பிறிது இன்மை 
இன்மையாக  வையாது உலகு 

பொருள் 

அறிவு இன்மை = அறிவு இல்லாமை 

இன்மையுள் = இல்லாதவற்றில் 

இன்மை  = பெரிய இல்லாதது 

பிறிது இன்மை = மற்றவை இல்லை என்றாலும் 
 
இன்மையாக  = இல்லாததாக 

வையாது = கொள்ளாது 

உலகு = உலகம் 

இல்லாதவற்றில் பெரிய இல்லாதது அறிவு இல்லாததே. மற்றயவை இல்லாவிட்டாலும் அதை பெரிதாக நினைக்காது உலகு. 


இது சரிதானா ? வள்ளுவர் சொல்லுவது நடை முறைக்கு சாத்தியமா ? அறிவு மட்டும் போதுமா ? மற்றவை வேண்டாமா ? பொருள் இல்லாமல் சாப்பாட்டுக்கு என்ன செய்வது, நல்ல உடை, இருக்க இடம், வாழ்க்கை வசதிகள், பிள்ளைகளின் எதிர்காலம் இவற்றிற்கு பொருள் வேண்டாமா ? அறிவை வைத்துக் கொண்டு என்ன செய்வது ?

இது கேள்வி. 

சிந்திப்போம். 

முதலாவது, சரி, அறிவு வேண்டாம். பொருள் மட்டும் வேண்டும் என்று செல்வத்தின் பின்னால் சென்றால் என்ன ஆகும் ? எந்த வழியில் பொருள் சேர்க்க வேண்டும் என்று தெரியாது. எப்படியோ பொருள் சேர்த்தால் சரிதான் என்று நினைத்து , தவறான வழியில் பொருள் சேர்த்து பல சிக்கல்களில் மாட்டித் தவிப்பவர்கள் பலர்.  எனவே, பொருள் சேர்க்கவும் அறிவு வேண்டும். 

இரண்டாவது, சரி எப்படியோ நல்ல வழியில் பொருள் சேர்த்தாகி விட்டது. இனி என்ன  சிக்கல் என்றால் ? சேர்த்த பணத்தை என்ன செய்வது ? பல பேருக்கு பணம்  சேர்க்கத் தெரியும். அதை நல்ல வழியில் செல்வழிக்கத் தெரியாது. நல்ல துணிமணி, பெரிய வீடு, ஆரோக்கியமான சூழ்நிலை என்று வாழத் தெரியாமல் எல்லா பணத்தையும் வங்கிகளிலும், நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்து விட்டு , ஒரு சுகமும் அனுபவிக்காமல் இருப்பார்கள். செலவழிக்கவும் அறிவு வேண்டும்.  


மூன்றாவது,  சேர்த்த பணத்தை நல்ல வழியில் முதலீடு செய்து அதை பாதுகாத்து மேலும் அதை அதிகரிக்கத் தெரியாது.  தவறான இடங்களில் முதலீடு செய்து  கடினமாக உழைத்து சேர்த்த பணத்தை இழந்து முதுமையில் வறுமையால் வாடுவார்கள். எத்தனையோ நடிகர் நடிகைகளை பார்க்கிறோம். சரியான வழியில் முதலீடு செய்யாமல் கைப் பொருளை இழந்து பிச்சைக்காரர்களை விட  கேவலமாக வாழ்பவர்களை பார்க்கிறோம். முதலீடு செய்யவும் அறிவு வேண்டும். 

நான்காவது, சிலர் கையில் நாலு காசு சேர்ந்தவுடன் அதை கண்ணு மண்ணு தெரியாமல் செலவழிப்பார்கள். சூதாட்டம், கள் ,  கெட்ட சகவாசம் என்று செலவழித்து அதனால் பொருளையும் இழந்து, பெருமையையும் இழந்து ஆரோக்கியத்தையும் இழந்து துன்பப் படுவார்கள். 

ஐந்தாவது, சரி பணம் மட்டும் தானா, உறவு நட்பு இது எல்லாம் வேண்டாமா ? அறிவு இல்லை என்றால் சிறந்த நண்பர்களை தேர்ந்து எடுப்பது கடினம். கெட்ட நண்பர்கள் நம்மை துன்பத்தில் தள்ளி விடுவார்கள். உறவுகளில் ஆயிரம் சிக்கல் வரும். ஏன் கணவன் மனைவிக்கு நடுவில் கூட சிக்கல்கள் வரலாம். பணம் இல்லாத ஏழைகள் வீட்டில் கணவன் மனைவி அன்போடு ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக அன்பு செலுத்தி  இன்பமாக இருப்பதைக் காணலாம். பணம் படைத்த வீட்டில் , கணவனும் மனைவியும் அன்பில்லாமல், நாளும் சண்டையிட்டுக் கொண்டு வாழக்கை நரகமாக வாழ்வதையும் காணலாம். தேவை இல்லாத உறவுகளை கொண்டாடுவது, தேவையான உறவுகளை மதிக்காமல் இருப்பது போன்றவை அறிவின்மையால் நிகழும். 

சரி, இதெல்லாம் சரிதான். அதுக்காக எந்நேரமும் படித்துக் கொண்டே இருந்தால் போதுமா என்றால் , அறிவு வளர்ந்தால் பணம் சம்பாதிப்பது எப்படி, செலவழிப்பது எப்படி, இதில் முதலீடு செய்யலாம், எப்படி மகிழ்ச்சியாக வாழலாம், உறவுகளில் வரும் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்று தெரிந்து அதன் படி   செயல் பட முடியும். 

அறிவு இவை அனைத்தையும் கொண்டு வரும். 

எனவே அறிவைப் பெற்றால் அறிவும் கிடைக்கும் மற்றவையும் கிடைக்கும். 

அறிவில்லாத மற்றவற்றாரால் அவ்வளவாக சிறப்பு இல்லை. சில சமயம் அதனால் துன்பம் கூட வரும். 

அது மட்டும் அல்ல, அறிவினால் இம்மைக்கு மட்டும் அல்ல, மறுமைக்கும் வேண்டிய  நன்மைகளை தேடிக் கொள்ள முடியும். 

மற்றவை வேண்டாம் என்று சொல்லவில்லை வள்ளுவர். மற்றவை இல்லாவிட்டால் பரவாயில்லை என்று சொல்லவில்லை. தேவையான பொருள் இல்லாவிட்டாலும், நல்ல உறவும் நட்பும் இல்லாவிட்டாலும், ஆரோக்கியம் இல்லாவிட்டாலும்  குறை தான். ஆனால், அவற்றை ஒரு பெரிய குறையாக உலகம் கருதாது என்றார் வள்ளுவர். 

அறிவைத் தேடுங்கள். மற்றவை தானே வரும். 



 


Thursday, November 17, 2016

திருக்குறள் - இடுக்கண் வருங்கால் நகுக

திருக்குறள் - இடுக்கண் வருங்கால் நகுக 


வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் இரண்டும் நிறைந்ததுதான். இன்பம் மட்டுமே வேண்டும். துன்பம் வேண்டவே வேண்டாம் என்று தான் எல்லா உயிர்களும் விரும்புகின்றன. ஆனாலும் , துன்பம் அழையா விருந்தாளியாக வந்து வந்து போகத்தான் செய்கிறது.

துன்பம் வந்தால் என்ன செய்வது ?  சிரித்து விடுங்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

இடுக்கண் வருங்கால் நகுக அதனை 

அடுத்தூர்வது அஃதொப்பது இல் 

பொருள்

இடுக்கண் = துன்பம்

வருங்கால் = வரும்போது

நகுக = சிரிக்க

அதனை = அந்த துன்பத்தை


அடுத்தூர்வது = சென்று போராடுவது

அஃதொப்பது = அதைப்போன்ற ஒன்று

இல் = இல்லை


வள்ளுவருக்கு என்ன சொல்லிவிட்டு போய் விடுவார். துன்பம் வரும் போது சிரியுங்கள் என்று.  அதெல்லாம் நடக்குமா ? நடைமுறைக்கு சாத்தியமா ? கேட்க வேண்டுமானால்  நல்லா இருக்கும் என்று நாம் எப்போதும் போல நினைப்போம்.

வள்ளுவர் சும்மா சொல்ல மாட்டார். அதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும்.

அது என்னவாக இருக்கும் என்று சிந்திப்போம்.


துன்பம் வேண்டாம் தான் நினைக்கிறோம். ஆனால் நம்மை யார் கேட்கிறார்கள். துன்பம் வந்து விட்டது.

உடல் நிலை குறைவு, பணத் தட்டுப்பாடு, பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் திருமணம்,  தொழிலில் தொய்வு, அலுவலகத்தில் சிக்கல், உறவுகளில் குழப்பம், விரிசல், நெருங்கியவர்கள் புரிந்து கொள்ளாமை , நினைத்தது நடக்காமை, தேர்வில் குறைந்த மதிப்பெண், என்று ஏதோ ஒரு வகையில் துன்பம் வந்து விடுகிறது.

வந்தவுடன் என்ன செய்யலாம் ?

துவண்டு போய் விடலாம்.

வீட்டுக்குள் முடங்கி விடலாம்.

விதியை நோகலாம்.

நமக்கு உதவி செய்ய யாரும் இல்லையே என்று எல்லோரையும் நோகலாம்.

தெய்வத்தை பழிக்கலாம்.

விதியை நோகலாம்.

....

ஆனால் இப்படி எல்லாம் செய்வதனால் வந்த துன்பம் நீங்கி விடுமா ? வந்த துன்பத்தில் இருந்து விடுபட வேண்டுமென்றால் அதை எதிர்த்து போராட வேண்டும்.

என்னால் என்ன முடியும் என்று முடங்கிக் கிடந்தால் எப்படி போராடுவது ?

போராட வேண்டும் என்றால் அதற்கு ஒரு உற்சாகம் வேண்டும், உத்வேகம் வேண்டும், முயற்சி வேண்டும்.

அந்த முயற்சிக்கு ஒரே வழி , "இந்த துன்பத்தை நான் வெற்றிக்கு கொள்வேன் " என்ற  தன்னம்பிக்கை.

இரண்டாவது, துன்பம் வந்தால் யாரிடமாவது உதவி கேட்க வேண்டும். உதவி கேட்கப் போகும் போது முகத்தை வாட்டமாக, தொங்கப் போட்டுக் கொண்டு சென்றால்  உதவி செய்யலாம் என்று நினைப்பவர்கள் கூட செய்ய மாட்டார்கள். நினைத்துப் பாருங்கள், உங்களுக்கு கொஞ்சம் பணம் வேண்டும். சோகமான முகத்துடன், பயந்த விழிகளோடு , தயங்கி தயங்கி கேட்டால் பணம் கிடைக்குமா. தைரியமாக, தன்னம்பிக்கையோடு சிரித்த முகத்தோடு கேட்டால்  கிடைக்குமா ?

பணம் இல்லாதது துன்பம் தான். ஆனால் அதற்காக அழுது வடிந்து கொண்டு இருந்தால் , உதவி செய்ய நினைப்பவர்கள் கூட உதவி செய்ய மாட்டார்கள். மலர்ந்த  முகத்தோடு இருங்கள்.

மூன்றாவது, "அடுத்தூர்வது" என்றார். அது என்ன அடுத்தூர்வது ? அடுத்து + ஊர்வது.

அடுத்தல் என்றால் போராடுதல். அடுகளம் என்றால் போர் களம்.  துன்பத்தை எதிர்த்து போராடுவது என்று அர்த்தம். போராடும் போது ஒரு வலிமை, ஒரு உத்வேகம். இல்லை என்றால் தோல்வி நிச்சயம். பணம் வேண்டுமா, ஒன்றுக்கு பத்து பேரிடம்  கேட்போம் என்று கிளம்ப வேண்டும்.  கட்டாயம் கிடைக்கும் என்று  ஒரு புன்னகையோடு கிளம்ப வேண்டும். "எங்க கிடைக்க போகுது, எவன் தருவான் " என்று சோர்வோடு கிளம்பினால் கட்டாயம் கிடைக்காது.

நோய் வந்து விட்டதா ? அவ்வளவுதான், இனிமேல் பிழைக்க மாட்டேன் என்று துவண்டு விடக் கூடாது. மருந்து வேலை செய்யும். மருத்துவர்கள் உதவி செய்வார்கள். என் குடும்பத்தில் உள்ளவர்கள் எனக்கு உதவி செய்வார்கள். இந்த நொடியில் இருந்து விடுபடுவேன் என்று தன்னம்பிக்கையோடு இருந்தால்  நோயிலிருந்து விடுபடலாம். மாறாக, என்ன மருந்து சாப்பிட்டு என்ன பயன் என்று துவண்டு விட்டால் , நோய் குணமாகாது.

நான்காவது, "அஃதொப்பது இல்" என்றார். அப்படி என்றால் என்ன ? துன்பத்தை வெல்ல பல வழிகள் இருக்கலாம். இறைவனை நம்பலாம். கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்ளலாம். வள்ளுவர் அதை எல்லாம் தவிர்க்கச்  சொல்லவில்லை. துன்பத்தை கண்டு சிரிப்பது உள்ளதிற்குள் சிறந்தது. அதற்கு இணையான ஒன்று இல்லை என்கிறார். அதை விட சிறப்பு குறைந்தவை இருக்கலாம். ஆனால் அதற்கு இணையான ஒன்று இல்லை. சிறந்தது இருக்கும் போது மற்றவற்றை ஏன் நாட வேண்டும் ?

துன்பம் வந்தால், எதிர்த்துப் போராடுங்கள். போராட ஒரு முயற்சி, உற்சாகம், உத்வேகம் வேண்டும்.

அதற்கு ஒரு தன்னம்பிக்கை, ஒரு மலர்ந்த முகம் வேண்டும்.

எனவே, துன்பம் வந்தால் துவண்டு விடாமல், சிரித்த முகத்தோடு போராடுங்கள். அதை விட சிறந்த வழி இல்லை.






Wednesday, November 16, 2016

திருக்குறள் - உடுப்பதும் உண்பதும் இன்றி கெடும்

திருக்குறள் - உடுப்பதும் உண்பதும் இன்றி கெடும் 


சிலர் யாருக்குமே உதவி செய்ய மாட்டார்கள். அது கூட பரவாயில்லை, மற்றவர்கள் உதவி செய்தாலும், உதவி பெறுபவர்களை கண்டு பொறாமை படுவார்கள். அந்த உதவியை தடுக்க நினைப்பார்கள். மற்றவர்களின் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத தன்மையை அழுக்காறு என்பார்கள்.

அப்படி ஒருவன் மற்றவனுக்கு செய்யும் உதவியை கண்டு பொறுக்க மாட்டாதவன் சுற்றத்தார் உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லாமல் கெட்டுப் போவார்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் 
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பொருள்

கொடுப்பது = ஒருவன் மற்றவருக்கு கொடுக்கும் உதைவியை

அழுக்கறுப்பான் = பொறுத்துக் கொள்ள மாட்டாதவன்; அல்லது அதை தடுக்க நினைப்பவன்

சுற்றம் = அவனது சுற்றத்தார்

 உடுப்பதூஉம் = உடுக்க உடையும்

உண்பதூஉம் = உண்பதற்கு உணவும்

இன்றிக் கெடும் = இல்லாமல் கெட்டுப்  போவார்கள் , அல்லது துன்பப் படுவார்கள்.

எளிமையான குறள் தான். இருந்தாலும் மிகுந்த ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டது.

முதலாவது, கொடுப்பது கண்டு பொறாமை படுவது என்பது மிக மிக கேவலமான செயல். அப்படி பொறாமை படுபவன் ரொம்ப துன்பப் படுவான் என்று சொல்ல வந்தார் வள்ளுவர்.

துன்பத்தில் பெரிய துன்பம் எது ? பசிக்கு உணவு இல்லாததும், மானத்தை காக்க உடை இல்லாததும் தான். உணவு இல்லாமல் கூட சில நாட்கள் இருந்து விடலாம். உடை இல்லாமால் இருக்க முடியுமா ? உடையும் உணவும் இல்லாவிட்டால் எவ்வளவு துன்பமாக இருக்கும். அவ்வளவு துன்பப் படுவான் என்று சொல்ல வந்தார்.

சரி, பொறாமை படுபவன் துன்பப் பட்டால் சரி. எதற்காக அவன் சுற்றத்தார் உணவும் உடையும்  இன்றி துன்பப் பட வேண்டும் ?

இரண்டாவது,  ஒருவன் துன்பத்தில் இருக்கிறான் என்றால், உதவி என்று தன் சுற்றத்தாரிடம் போவான்.  அவர்களே உணவும் உடையும் இல்லாமல் இருந்தால், இவன் எங்கே போவான். சுற்றம் கெடும் என்றால், இவனும் கெடுவான் என்பது சொல்லாமல் சொன்னது. மேலும், தான் கெட்டு , சுற்றமும் கெட்டால் , உதவிக்கு கூட யாரும் இல்லாமல் தனித்துப் போவான் என்பது பொருள்.

சிந்தித்துப் பாருங்கள். துன்பம் யாருக்கும் வரும். அப்படி துன்பம் வந்த காலத்து, அதில் இருந்து விடுபட மற்றவர்களின் உதவி வேண்டும். உதவி செய்யவும்  யாரும் இல்லை என்றால் அது எவ்வளவு பெரிய துன்பம் ?


மூன்றாவது, சுற்றம் என்றால் ஏதோ தூரத்து சொந்தம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. தூரத்து  சொந்தக் காரன் எப்படி போனால் நமக்கு என்ன என்று பல பேர் நினைப்பார்கள். சுற்றம் என்றால் பெற்றோர், உடன் பிறந்தோர், மனைவி, மக்கள் என்று  நெருங்கிய சொந்தம்.  பெற்ற பிள்ளை சாப்பாட்டுக்கும் , துணி மணிக்கும்  வழி இல்லாமல் தவிக்கிறான் அல்லது தவிக்கிறாள்  என்று கேட்டால் அந்த பெற்றோரின் மனம்  எவ்வளவு துன்பப் படும்.  அது மட்டும் அல்ல  பிள்ளைக்கு உதவி செய்யக் கூட முடியவில்லை என்றால் அது இன்னும் எவ்வளவு துன்பம்.


நான்காவது, அப்படி நம்முடைய பிள்ளைகளோ, பெற்றோரோ, உடன் பிறப்புகளோ உணவும் உடையும் இன்றி தவிக்க நாமே காரணம் என்று இருந்தால் அந்த நினைப்பு எவ்வளவு துன்பத்தைத் தரும். நம் பிள்ளைகளின் துன்பத்திற்கு நாமே காரணமாகி விட்டோமே என்று நினைத்தால் ஒரு பெற்றோர் எவ்வளவு  வருந்துவார்கள்.

இவ்வளவு பெரிய துன்பம் தேவையா ? மற்றவர்கள் செய்யும் உதவியைக் கண்டு  பொறாமை கொண்டால் இப்படிப் பட்ட துன்பங்கள் நிகழும் என்கிறார் வள்ளுவர்.

ஐந்தாவது, உணவும் உடையும் இல்லை என்றால் மற்றவைகள் இருக்குமா ? வீடு, நிலைக்கு, நகை, வண்டி , வாகனம் என்று எல்லாம் இருக்குமா ? ஒன்றும் இருக்காது அல்லவா ? எல்லாம் இழந்து நடுத் தெருவில் நிற்க வேண்டும். ஆனால், தெருவில் நின்று பிச்சை கூட கேட்க முடியாது காரணம், உடை இல்லை.  உடை இல்லாமல், தெருவில் சென்று பிச்சை கேட்பது எவ்வளவு அவமானம்.

ஆறாவது, துன்பத்தில் இருக்கும் சுற்றத்தார், "இவன் கொண்ட பொறாமையினால் தான், நமக்கு இந்த துன்பம் வந்தது " என்று எண்ணி இவனை வெறுத்து ஒதுக்குவார்கள். ஒண்ட இடம் இன்றி, உடுத்த உடை இன்றி, உண்ண உணவு இன்றி ....எவ்வளவு துன்பம் பாருங்கள்.

ஏழாவது, சரி இவ்வளவுதானா ? தானும், சுற்றமும் உணவும் உடையும் இல்லாமல்  போவோம் அவ்வளவுதானா என்றால் இல்லை. அதற்கு மேலும் சொல்கிறார்  "கெடும்" என்று. இதற்கு மேல் கெடுவதற்கு என்ன இருக்கிறது  ?

இருக்கிறது.

உணவும் உடையும் இல்லாத ஒருவன், தன் பிள்ளைகள் உணவும் உடையும் இல்லாமல் தவிப்பதை பார்க்கும்  ஒருவன் எப்படியாவது அவர்களுக்கு உணவும் உடையும்  பெற்றுத் தர வேண்டும் என்று ஏதாவது தவறான வழியில் முயல்வான். திருடுவான், மற்ற குறுக்கு வழியில் செல்ல நினைப்பான். அதனால் மேலும் பழி  வந்து சேரும்.  சிறைக்குப் போவான். குடும்பத்தை அனாதையாக விட்டு விட்டு சிறை செல்ல நேரிடும்.

மீண்டும் தலை எடுக்கவே முடியாத அளவு  தீராத துன்பத்தில் கிடந்து கெடுவான் என்ற பொருள் பட "கெடும்" என்றார் .

எவ்வளவு கோபமும், வெறுப்பும் இருந்தால் வள்ளுவர் இப்படி ஒரு குறளை எழுதி இருப்பார் ?

கொடுப்பதைக் கண்டு அழுக்காறு கொள்ளக் கூடாது என்பதை இதை விட அழுத்தமாக சொல்ல முடியாது.

சரி, யாரோ யாருக்கோ கொடுத்து விட்டுப் போகிறார்கள். நாம் ஏன் அதை தடுக்கப் போகிறோம். அப்படி எல்லாம் யாரும் செய்வார்களா என்று கேட்டால், சில உதாரணங்கள் காட்டலாம்.

உணவு விடுதியில் , உணவு சாப்பிட்டபின் பில் வரும். நண்பர் , அந்த பில்லோடு சேர்த்து கொஞ்சம் டிப்ஸ் வைப்பார். "எதுக்கு எவ்வளவு டிப்ஸ், கொஞ்சம் குறைத்து வை. இல்லைனா எல்லோரிடமும் இப்படியே எதிர் பார்ப்பார்கள் " என்று நண்பன் கொடுப்பதை குறைப்பவன் , இந்த பட்டியலில் வருவான்.

அலுவலகத்தில், ஒருவனுக்கு பதவி உயர்வோ, அல்லது சம்பள உயர்வோ கொடுக்கும் முன், அவனுடைய மேலதிகாரி நம்மிடம் அபிப்பிராயம் கேட்கலாம். "அவனுக்கா, இப்ப எதுக்கு, அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் " அவனுக்கு வரும் நன்மையை தடுப்பவன் இந்த பட்டியலில் வருவான்.

வீட்டில் மனைவியோ கணவனோ , ஒரு அனாதை ஆசிரமத்துக்கோ அல்லது வேறு ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்துக்கோ நன்கொடை அளிக்கும் போது , எதுக்கு இவ்வளவு நன்கொடை என்று தடுப்பவன் இந்த பட்டியலில் வருவான்.

இப்படி நடை முறையில் எவ்வளவோ விதங்களில் நாம் பிறருக்கு வரும் நன்மைகளை  தடுத்து விடுகிறோம்.

அது தவறு.

கொடுப்பவர்களை வாழ்த்துவோம்.

பெறுபவர்களை , இன்னும் சிறந்து வரட்டும் என்று வாழ்த்துவோம்.



Tuesday, November 15, 2016

இராமாயணம் - பரதன் 15 - அறம் கெட முயன்றவன்

இராமாயணம் - பரதன் 15 - அறம் கெட முயன்றவன்



உன் தாய் செய்தது உனக்குத் தெரியாதா என்று கோசலை பரதனிடம் கேட்டவுடன், பரதன் கூறுவான் , என் தாய் செய்தது மட்டும் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் கீழே சொன்ன பாவங்கள் செய்த நரகத்துக்கு நான் போவேன் என்று கூறுகிறான்.

பாடல்

‘அறம் கெட முயன்றவன்,
    அருள் இல் நெஞ்சினன்,
பிறன் கடை நின்றவன்,
    பிறரைச் சீறினோன்,
மறம் கொடு மன் உயிர்
    கொன்று வாழ்ந்தவன்,
துறந்த மாதவர்க்கு அருந்
    துயரம் சூழ்ந்துேளான். ‘

பொருள்

அறம் கெட முயன்றவன் = அறம் கெட முயன்றவன்

அருள் இல் நெஞ்சினன் = அருள் இல்லாத மனமுடையவன்

பிறன் கடை நின்றவன் = மற்றவர்கள் வீட்டு வாசலில் நின்றவன்

பிறரைச் சீறினோன் = மற்றவர்கள் மேல் சீறி விழுந்தவன்

மறம் கொடு = சண்டையிட்டு

மன் உயிர் = நிலைத்து வாழும் உயிர்களை

கொன்று வாழ்ந்தவன் = கொலை செய்து வாழ்பவன்

துறந்த = பற்றினை துறந்த

மாதவர்க்கு = பெரிய தவம் செய்தவர்களுக்கு

அருந் துயரம் = பெரிய துயரை

சூழ்ந்துேளான்.= செய்பவன்

இவர்கள் எல்லோரும் செல்லும் நரகத்துக்கு செல்வேன்


அறத்தை கெடுக்கக் கூட வேண்டாம்...கெடுக்க நினைத்தாலே நரகம் தானாம். இங்கே அறம்  என்பதற்கு கொடை , தானம் என்றும் கொள்ளலாம் அல்லது தர்மம், நியாயம் என்ற அறக் கோட்டபாடுகளையும் கொள்ளலாம்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்

என்பது வள்ளுவம்.

பாவம் என்பது மற்றவர்களுக்குச் ஏதாவது கெடுதல் செய்தால் தான் என்று இல்லை. மனதில் அருள் இல்லாவிட்டாலும் பாவம் தான்.

நம்மிடம் எந்த தொடர்பும் இல்லாத உயிர்களிடத்து செலுத்தும் கருணைக்கு  அருள் என்று பெயர் என்பார் பரிமேலழகர். தெருவில் திரியும் நாய், பேருந்து நிலையத்தில் உள்ள  பிச்சைக்காரன், டிவி யில் எங்கோ யுத்தத்தில் அடிபடும் உயிர்களின் மேல் வரும் இரக்கம், இதற்கு அருள் என்று பெயர்.

அந்த கருணை எப்போதும் மனதில் இருக்க வேண்டும்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் அந்த மாதிரி  கருணை.

"பிறன் கடை நின்றவன்" ... தன்னிடம் ஒன்றும் இல்லை என்று மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து   அவர்கள் வீட்டு வாசலில் நின்றவன் என்றும் கொள்ளலாம் அல்லது  மற்றவன் மனைவியை கவர நினைத்து அவன் வீட்டு வாசலில் நின்றவன் வேண்டும் கொள்ளலாம். இரண்டும் தவறு தான்.

இப்படி ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறான்.

அதன் முடிவில் ....



Sunday, November 13, 2016

இராமாயணம் - பரதன் 14 - ஐய! நீ அறிந்திலை போலுமால்?

இராமாயணம் - பரதன் 14 - ஐய! நீ அறிந்திலை போலுமால்?


தான் பெற்ற வரங்களினால் தயரதன் இறக்கவும், இராமன் காடு போக நேர்ந்ததையும் கைகேயி சொல்லக் கேட்ட பரதன் அவளை பலவாறாக வைது தீர்க்கிறான். அழுது புலம்புகிறான். அறம் பிழைக்க தானும் ஒரு காரணம் என்று உலகம் சொல்லுமே என்று வருந்துகிறான்.

பின், கோசலையை பார்க்கச் செல்கிறான்.

இங்கே, கொஞ்சம் நிறுத்தி யோசிப்போம்.

பரதன் தன்னுடைய பாட்டனார் வீட்டில் இருந்து  கொண்டு,கைகேயியை தூண்டி விட்டு அரசை பெற்றுக் கொண்டான் என்று சிலர் அவன் மீது பழி சொல்லக் கேட்டிருக்கிறோம். அது உண்மையானால், அவன் கைகேயியை பழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சரி, அது கூட ஒரு நாடகம் என்று வைத்துக் கொண்டால், அவன் கோசலையை பார்க்க போக வேண்டிய அவசியம் இல்லை. ஒரு குற்ற உணர்வு இருந்தால் , அவன் கோசலையை பார்க்க நினைத்திருப்பானா ?

பார்க்கப் போனான்.

கீழானவர்கள் எப்போதும் தங்களது கீழ்மையை மற்றவற்றின் மேல் ஏற்றிக் கூறுவார்கள்.

உயர்ந்த நூல்களை படிக்கும் போது , அந்த நூல்கள் நம்மை மேலேற்றும் படி நாம் பார்த்துக் கொள்ள  வேண்டும்.நம் சிந்தனைகள், எண்ணங்கள் மேலே போக வேண்டும். மாறாக, அந்த நூலை, அதில் சொல்லப் பட்ட உயர்ந்த கருத்துகளை, நம் நிலைக்கு கீழே கொண்டு வர முயலக் கூடாது.  நாம் மேலே போக வேண்டுமே அல்லால்  நம்மை விட உயர்ந்தவற்றை நம் நிலைக்கு கீழே கொண்டு வரக் கூடாது.

பாடல்

மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்;
செய்யனே என்பது தேரும் சிந்தையாள்
‘கைகயர் கோமகள் இழைத்த கைதவம்
ஐய! நீ அறிந்திலை போலுமால்? ‘என்றாள்.

பொருள்

மை = கருமை, தீய எண்ணங்கள்

அறு = அறுந்த , இல்லாத

மனத்து  = மனதை கொண்டவன் (பரதன்)

ஒரு மாசு = ஒரு குற்றம் கூட

உளான் அலன் = இருப்பவன் அல்லன்

செய்யனே = செம்மையானவன். நேர்மையானவன்

என்பது = என்பதை

தேரும் = தேர்ந்து, ஆராய்ந்து அறிந்த

சிந்தையாள் = மனத்தைக் கொண்டவள் (கோசலை)

‘கைகயர் கோமகள் = கேகேய அரச குமாரி

இழைத்த = செய்த

கைதவம் = வஞ்சனை



ஐய! = ஐயனே 

 நீ = நீ 

அறிந்திலை = அறியவில்லை 

போலுமால்? = போலிருக்கிறது 

‘என்றாள் = என்றாள் 

பரதா , உன் தாய் செய்த வஞ்சனை உனக்குத் தெரியாதா என்று கேட்கிறாள்.  அதில்  மறைந்து நிற்கும் தொனி , உனக்கு தெரிந்தே இது நடந்திருக்கும் என்பதே.

பரதன் குற்றமற்றவன் என்று கோசாலைக்குத் தெரியும். மையறு மனத்தன் என்று  அவள் அறிவாள் .

இருந்தும் "உனக்குத் தெரியாதா " என்று ஏன் கேட்டாள் ?

அப்படி கேட்க்காமல் இருந்திருந்தால், பரதனுக்கு ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்கும்  வாய்ப்பு இல்லாமலேயே போய் இருக்கும்.   ,கோசலை   ஒன்றும் கேட்கவில்லை, ஒரு வேளை அவளுக்கும் பரதன் மேல் வருத்தம் இருந்திருக்குமோ என்று   நினைக்க வாய்ப்பு இருக்கிறது. 

அதை சரி செய்கிறான் கம்பன். 


அவள் அப்படி கேட்டவுடன், பரதன் துடித்துப் போகிறான். 

கைகேயி செய்தது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால், இன்னின்ன பாவங்கள் செய்தவர்கள்   போகும் நரகத்திற்கு நான் போகக் கடவேன் என்று பாவங்களின் பட்டியல் தருகிறான். 

எதெல்லாம் செய்யக் கூடாது என்று பாடம் நடத்துகிறான் கம்பன் , பரதன் வாயிலாக.

அவை என்னென்ன என்று பார்ப்போம். 


Wednesday, November 9, 2016

இராமாயணம் - பரதன் 14 - “தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?

இராமாயணம் - பரதன் 14 - “தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?


தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், ஆசிரியன் என்பது எல்லாம் ஒருவரை சேர்ந்தது அல்ல. அது ஒருவர் செய்யும் செயலைப் பொறுத்தது. 

பிள்ளையை பெற்றவள் எல்லாம் தாயாக முடியாது. தாய் என்பது, பிள்ளையை நல்ல முறையில் வளர்ப்பதில் இருக்கிறது. 

தந்தையான இறைவன் தாயும் ஆனான். தாயுமானவன் என்று அவன்  பெயர்.

தந்தை என்ற பெயரில் ஒரு தந்தை செய்யக் கூடாத செயல்களை எல்லாம் செய்பவர்களை பற்றி செய்தித் தாள்களில் படிக்கிறோம். 

ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு தகாத செயல்கள் செய்பவர்களை பற்றியும் படிக்கிறோம். 

எனவே, இவை செய்யும் செயலைப் பொறுத்து அமைவது. 

தாய்மை மனதில் இருந்தால் , ஒரு ஆணும் தாயாக முடியும். அன்பு மனதில் இல்லை என்றல், ஒரு பிள்ளை பெற்ற பெண்ணும் தாயாக முடியாது. 


தாடகை ஒரு பெண் என்பதால் அவளைக் கொல்லாமல் நிற்கிறான் இராமன். அவனைப் பார்த்து கௌசிகன் சொல்வான், "இந்த கொடியவளை பெண் என்று நீ நினைக்கிறாயா" என்று. பெண் போல வடிவம் இருந்தால் பெண்ணாக முடியாது. பெண் என்றால் அந்த பெண்மைக்குரிய குணங்கள் இருக்க வேண்டும். 

‘தீது என்று உள்ளவை யாவையும் செய்து எமைக்
கோது என்று உண்டிலள் : இத்தனையே குறை :
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்
மாது என்று எண்ணுவதோ? மணிப் பூணினாய்! ‘

என்பான் கம்பன்.

தான் பெற்ற இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கும், தயரதனை வானுக்கும் அனுப்பினேன் என்றாள் கைகேயி பரதனிடம்.

அதைக் கேட்டு கொதித்துப் போய் பரதன் சொல்கிறான்

"நீ இன்னுமும் உயிரோடு இருக்கிறாய். நானும் இருக்கிறேன். உன்னை தண்டிக்காமல் இருப்பதற்கு காரணம் நீ தாய் என்பதால் அல்ல, இராமன் கோபப் படுவானே என்பதால் " என்கிறான்.

பாடல்

நீ இனம் இருந்தனை; யானும், நின்றனென்;
“ஏ” எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென்;
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்,
“தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?


பொருள்

நீ = நீ, கைகேயி

இனம் = இன்னும்

இருந்தனை; = உயிரோடு இருக்கிறாய்

யானும் = நானும் (பரதன்)

நின்றனென் = ஒன்றும் செய்யாமல் நின்று கொண்டு இருக்கிறேன்

“ஏ”  = ஏ

எனும் = என்று

மாத்திரத்து = சொல்லும் நேரத்திற்குள்

எற்றுகிற்றிலென் = உன்னை தண்டிக்காமல் இருக்கிறேன்

ஆயவன் = தாய் போன்ற இராமன்

முனியும் = கோபம் கொள்வான்

என்று = என்று

அஞ்சினேன் = அச்சம் கொண்டேன். பயம் கொண்டேன்

அலால் = இல்லை என்றால்

“தாய்” எனும் = தாய் என்ற

பெயர் = பெயர்

எனைத்  = என்னை

தடுக்கற் பாலதோ? = தடுக்கும் சக்தி வாய்ந்ததா ? இல்லை.

 குழந்தையை பெற்று விட்டால் மட்டும் தாயாக முடியாது.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் என்பார் மணிவாசகர். பால் கொடுத்தால் அழகு குறைந்து  விடும் என்று நினைக்கும் ஒரு பெண் தாயாக முடியுமா ?

கைகேயி பரதனைப் பெற்றவள்தான். அதனால் அவளை தாய் என்று கருதவில்லை பரதன். கணவனை கொண்டு, இன்னொரு பிள்ளையை கானகம் அனுப்பிய ஒரு  பெண் எப்படி தாயக இருக்க முடியும் என்பது பரதனின் எண்ணம்.

தவறு செய்த தாய் ஒருபுறம்.

தவறிப் போன அரச நீதி மறுபுறம்.

தாயின் மேல் அன்பு கொண்ட இராமன் இன்னொரு புறம்.

தண்டித்தாலும் தவறு. தண்டிக்காவிட்டாலும் தவறு.

தவிக்கிறான் பரதன். 

சோதனைகள் மனிதனின் உண்மையான  குணத்தை வெளியில் காட்டும். 

பரதன் என்ன செய்தான் என்று பார்ப்போம். 

Tuesday, November 8, 2016

இராமாயணம் - பரதன் 13 - ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்

இராமாயணம் - பரதன் 13 - ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்




நாடு ரொம்ப கெட்டுப் போய் விட்டது. இலஞ்சம், அராஜகம் எல்லாம் தலை விரித்து ஆடுகிறது. நீதி நேர்மை எல்லாம் செத்து விட்டது என்று பல பேர் நொந்து கொள்வார்கள். சரி, இதை சரி செய்ய நீ என்ன செய்தாய் என்றால் "நான் என்ன செய்ய முடியும்..தனி ஒரு ஆள் இந்த நாட்டை திருத்த முடியுமா " என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்வார்கள்.


ஒரு அநீதி நடக்கிறது என்றால் , அதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதும் கூட அந்த அநீதிக்கு துணை போவது போலத்தான் . ஒன்றும் செய்யாமல் இருப்பதும் , அந்த அநீதியை செய்வது போலத்தான் என்பது பரதனின் எண்ணம்.


எனக்கு உன் தந்த இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கு அனுப்பி, உனக்கு நாட்டைப் பெற்றுத் தந்தேன் என்று கைகேயி கூறியதைக் கேட்ட பரதன் தவித்துப் போகிறான்.


அவன் கைகேயி தண்டிக்க முடியவில்லை ஏன் என்றால் கைகேயிக்கு ஏதாவது துன்பம் செய்தால் அது இராமனுக்கு பிடிக்காது என்று தெரியும் பரதனுக்கு. சரி, கைகேயியைத்தான் ஒன்றும் செய்யவில்லை, தானும் இந்த அறம் வழுவிய செயலைக் கண்டு இறக்கவில்லை என்றால் தானும் இந்த அநீதியை பங்கு கொண்டது போலத்தான் என்கிறான்.

பாடல்

‘மாண்டனன் எந்தை, என் தம்முன் மா தவம்
பூண்டனன், நின் கொடும் புணர்ப்பினால்; என்றால்,
கீண்டிலென் வாய்; அது கேட்டும், நின்ற யான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்?

பொருள்

‘மாண்டனன் = இறந்தான்

எந்தை = என் தந்தையாகிய தயரதன்

என் = என்னுடைய

தம்முன் = முன் பிறந்த இராமன்

மா தவம் = பெரிய தவம்

பூண்டனன் = மேற்கொண்டான்

நின் = உன்னுடைய

கொடும் = கொடிய

புணர்ப்பினால் = சூழ்ச்சியால்

என்றால் = என்றால்

கீண்டிலென் வாய் = உன் வாயை கிழிக்கவில்லை

அது கேட்டும் = இவற்றை எல்லாம் கேட்ட பின்னும்

நின்ற யான் = இருக்கும் நான்

ஆண்டனெனே = ஆண்டேன்

அன்றோ  =  இல்லையா

அரசை ஆசையால்? = அரசை ஆசையால்

இப்படிப் பட்ட வரம் கேட்ட உன் வாயைக் கிழிக்கவில்லை. நானும் இறக்காமல் இருக்கிறேன். இது , நான் இந்த அரசை ஆசையோடு ஏற்றுக் கொண்டதற்கு  ஒப்பாகும் என்றான்.

ஒரு தலைவன் , அவனுக்கு கீழே உள்ளவர்கள் தவறு செய்தால் , ஒன்று அவர்களை  தண்டிக்க வேண்டும். அல்லது, தண்டிக்க முடியவில்லை என்றால் அந்த தலைவர் பதவியை விடவேண்டும்.

இல்லை என்றால், அந்த தவறில் தலைவனுக்கும் பங்கு உண்டு. நான் செய்யவில்லை என்று சொல்லி தப்பிக்க முடியாது.

இது அரசியல் தலைவர்களுக்கு மட்டும் அல்ல, ஒரு நிறுவனத்தின் தலைவருக்கும், ஒரு குடும்பத்தின் தலைவருக்கும் பொருந்தும்.

பிள்ளைகள் தவறு செய்தால் கண்டித்து திருத்த வேண்டும்.

பரதனின் சோகத்திலும் ஓங்கி நிற்பது  அறச் சிந்தனையே