Thursday, November 11, 2021

பட்டினத்தார் பாடல் - முன்பு செய்த புண்ணியம்

 பட்டினத்தார் பாடல் - முன்பு செய்த புண்ணியம் 


நாம் முயற்சி செய்கிறோம். நம் தகுதி, உழைப்பு, நேர்மை இவற்றிற்கு ஏற்ப ஏதோ ஒரு ஊதியம் கிடைக்கிறது. 


நம்மைவிட குறைந்த தகுதி, குறைவான உழைப்பு, குறைவான திறமை உள்ளவன் நம்மை விட பல மடங்கு அதிகம் பொருள் ஈட்டுகிறான். 


நம்மை விட தகுதியில், திறமையில், உழைப்பில் உயர்ந்தவன் நம்மை விட குறைவாக பொருள் ஈட்டுகிறான். 


இது நடக்கிறதா இல்லையா இந்த உலகில்?


காரணம் என்ன?


ஊழ் வினைப் ப் பயன் என்று நம் இலக்கியம் மிக ஆழமாக நம்பியது. 


ஏதோ எல்லாம் என்னால் என்று நினைக்காதே. முன் வினைப் பயன் இருந்தால் கிடைக்கும். இல்லை என்றால் என்ன முயன்றாலும் நட்டம்தான் வந்து சேரும். 


மூத்த மைந்தனுக்குத்த் தானே பட்டம் கிடைக்க வேண்டும். அதை விட்டு அவன் கானகம் போனனான். காரணம் என்ன?


"விதியின் பிழை" என்றான் இராமன். 


இங்கே பட்டினத்தார் சொல்லுகிறார்....


"முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் இவ்வளவு செல்வம் வந்தது என்று அறியாமல், ஏதோ இப்போது செய்த முயற்சியால் கிடைத்தது என்று எண்ணாதே என் மனமே. அப்படிப் பட்ட புண்ணியத்தால் வந்த பணத்ததை நல்ல வழியில் செலவழிக்காமல் அதாவது ஏழைக்களுக்கு கொடுக்காமல், இறைப் பணியில் செலவிடாமல், படித்தவர்களுக்கு ஒன்று கொடுக்காமல் இருந்து ஒரு நாள் இறந்து போய்விட்டால் என்ன செய்வாய்? அடுத்த பிறவியில் ஏழையாகப் பிறக்கப் போகிறாயா?"


என்று கேட்கறார். 


பாடல் 



முன் தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்

இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே!

அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்

கற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_17.html


(pl click the above link to continue reading)



முன் தொடர்பில் = முற் பிறவியில் 


செய்த முறைமையால் = செய்த புண்ணியத்தால் 


வந்த செல்வம் = வந்த செல்வத்தை 


இற்றைநாள் = இன்று, இப்போது 


பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே! = பெற்றோம் என்று எண்ணாதே பாழ் மனமே 


அற்றவர்க்கும் ஈயாமல் = பொருள் இல்லாதவர்களுக்கு உதவாமல் 


அரன் பூசை ஓராமல் = சிவ பூசை செய்யாமல் 


கற்றவர்க்கும் ஈயாமல் = கற்றவர்களுக்கும் கொடுக்காமல் 


கண் மறைந்து விட்டனையே. = இறந்து போனாயே 


நீ பெற்ற செல்வதால் உனக்கும் பயன் இல்லை, மற்றவர்களுக்கும் பயன் இல்லை. 


என்னே அறிவீனம்!




கம்ப இராமாயணம் - தாய் என இனிது தாங்குதி

 கம்ப இராமாயணம் - தாய் என இனிது தாங்குதி 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியபின், அவனுக்கு இராமன் சில தர்மங்களை போதிக்கிறான். 


ஒரு தலைவன் தன் குடிகளை எப்படி நடத்த வேண்டும் என்று இராமன் கூறுகிறான். .


"உன் குடிகள் உன்னை தங்கள் தலைவன் என்று நினைக்கக் கூடாது. தங்களின் தாய் என்று நினைக்கும் படி நீ அரசு நடத்த வேண்டும். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு யார் மூலமாகவாவது தீங்கு வந்தால், அப்படி தீமை செய்வோரை அற நெறி மீறாமல் தண்டிப்பாயாக" என்றான். 


பாடல் 


நாயகன் அல்லன்; நம்மை

        நனி பயந்து எடுத்து நல்கும்

தாய் என இனிது பேணத்

        தாங்குதி தாங்குவாரை

ஆயது தன்மையேனும்

        அறவரம்பு இகவா வண்ணம்

தீயன வந்தபோது

        சுடுதியால் தீமையோரை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_11.html


(Please click the above link to continue reading)



நாயகன் அல்லன் = தலைவன் அல்ல 


நம்மை = நம்மை (குடி மக்களை) 


நனி = மிகவும் 


பயந்து எடுத்து நல்கும் = போற்றி எடுத்து கொடுக்கும் 


தாய் என = தாய் என்று சொல்லும்படி 


இனிது பேணத்  தாங்குதி = இனிதாகச் சொல்லும்படி அவர்களை பாதுகாப்பாய் 


 தாங்குவாரை = அப்படி தாங்கும் 


ஆயது தன்மையேனும் = தன்மை இருந்தாலும் 


அறவரம்பு இகவா வண்ணம் = அறத்தின் எல்லைகளுக்கு உட்பட்டு 


தீயன வந்தபோது = தீமைகள் வந்த போது 


சுடுதியால் தீமையோரை = தீயவர்களை தண்டிப்பாய் 


தலைவன் என்று வந்துவிட்டால் ஒரு பெருமை, அகங்காரம், மமதை வந்து விடும். அப்படி இல்லாமல், ஒரு தாய் குழந்தைகளை காப்பது போல காக்க வேண்டும் என்கிறான். 


மேலும், தீமை செய்பவர்களை தண்டிக்க வேண்டும், அதுவும் அறத்திற்கு உட்பட்டு.


உன்னத இலட்சியங்கள். முழுவதுமாக முடியாவிட்டாலும், அதை நோக்கி நாம் தினம் நகர வேண்டும். 


அரசனுக்கு மட்டும் அல்ல. நமக்கும்தான்.





Wednesday, November 10, 2021

திருக்குறள் - அன்பும் மறமும்

திருக்குறள் - அன்பும் மறமும் 


அறம், மறம் என்று இரண்டு இருக்கிறது. 


அறம் நமக்குப் புரிகிறது. மறம் என்ற சொல்லை நாம் அதிகம் பயன்படுத்துவது இல்லை. 


மறம் என்றால் வீரம், தீரம், வெற்றி, சண்டை, சீற்றம், சினம் என்று பொருள்கள் இருக்கின்றன. 


அறத்திற்கு மட்டுமே அன்பு துணை போகும் என்று சில அறியாதவர்கள் கூறுவார்கள். மறத்துக்கும் அந்த அன்பு தான் துணை என்கிறார் வள்ளுவர். 


தவறாக புரிந்து கொள்ளப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்று. 


அது எப்படி சண்டை பிடிக்க அன்பு துணையாக முடியும் ? ஒருவன் மேல் கோபம் கொள்ள அன்பு துணை செய்யுமா? அன்பு இருந்தால் சண்டை பிடிக்க முடியுமா? 


பின் ஏன் வள்ளுவர் அப்படிச் சொல்லி இருக்கிறார். 


பாடல்  


அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_10.html


(Please click the above link to continue reading)


அறத்திற்கே = அறத்திற்கு மட்டுமே 


அன்புசார்பு = அன்பு துணை செய்யும் 


என்ப  அறியார் = என்று கூறுவார் அறியாதவர்கள் 


மறத்திற்கும் = மறத்திற்கும் 


அஃதே துணை. = அந்த அன்பே துணை 


பரிமேலழகர் இல்லாவிட்டால் இந்த குறளுக்கு சரியான அர்த்தம் காண்பது கடினம். 


அவர் உரை சொல்கிறார் "ஒருவன் மேல் கோபம் வந்து விட்டதா, அவன் கூட சண்டை போட வேண்டும் என்று தோன்றுகிறதா? அந்த பகைமையை மாற்றுவதும் அன்புதான்" என்கிறார். .


பகை வந்து விட்டது. பகை நல்லதா என்றால் இல்லை. கோபம் நல்லதா என்றால் இல்லை. 


பின் பகையை எப்படி மாற்றுவது?


அவன் கூட சண்டை போட்டு, அவனை தோற்கடித்தால் பகை முடிந்து விடுமா? வென்றாலும் தோற்றாலும் பகை நிற்கும். இன்னும் சொல்லபோனால் சண்டைக்குப் பின் பகை மேலும் வலுப்படும். 


பகையை மாற்ற ஒரே வழி அன்புதான். 


சின்ன உதாரணம் பார்க்கலாம். 


கணவன் மனைவிக்குள் ஏதோ கருத்து வேறுபாடு. சண்டை வந்து விட்டது. அந்த சண்டை, பகை, கோபம் எப்படிப் போகும்? மேலும் மேலும் சண்டை பிடிக்கலாம். ஒருவருக்கு ஒருவர் பேசாமல் இருக்கலாம். என்ன செய்தாலும் பகை போகாது. சரி விடு என்று யாரோ ஒருவர் விட்டுக் கொடுத்து அன்பு செலுத்தினால்தான் உறவு நிலைக்கும். விட்டுக் கொடுத்தவர்களை பலவீனமானவர்கள் என்று நினைக்கக் கூடாது. எனக்காக அவர்/அவள் விட்டுக் கொடுத்தாள்/ர் என்று அன்பு செய்ய வேண்டும். 


அன்பு எந்தப் பகையையும் மாற்றி விடும். 


அன்பு மட்டும் தான் பகையை மாற்றும். 


சரி, இப்படி பொருள் கொள்ளலாம் என்று பரிமேலழகருக்கு யார் உரிமை தந்தது? இது சரியான விளக்கம் தானா? 


அதற்கும் ஒரு மேற்கோள் காட்டுகிறார் பரிமேலழகர். 


துன்பத்திற்கு யாரே துணையாவார் தாம்உடைய

நெஞ்சம் துணையல் வழி.


என்ற குறளில், "துன்பத்திற்கு யாரே துணையாவார்" என்பதில் யாரும் துன்பத்துக்கு துணை போக மாட்டார்கள் என்று தெரிகிறது அல்லவா. 


அது போல, மறத்துக்கு அன்பு துணை போகாது. ஆனால் மறத்தை மாற்றி அதை அறமாக்க அன்பு துணை செய்யும் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார். 


பகையும், கோபமும், சீற்றமும், சினமும் அன்பினால் மறையும். 


பாசம், அன்பு, கருணை,காதல் இதற்கு மட்டும் துணை செய்வது அல்ல அன்பும். 


பகைமையை மாற்றி நேசத்தை வளர்க்கவும் அன்பு துணை செய்யும் என்கிறார். .


எங்கெல்லாம் கோபம் இருக்கிறதோ, பகை இருக்கிறதோ, அங்கே அன்பு செலுத்துங்கள். 


பகையே இல்லாத வாழ்வு வாய்க்கும். 




Monday, November 8, 2021

கம்ப இராமாயணம் - சிறியர் என்று இகழேல்

 கம்ப இராமாயணம் - சிறியர் என்று இகழேல் 


வாழ்க்கை யாரை எங்கே எப்படி கொண்டு சேர்க்கும் என்று யாருக்கும் தெரியாது. சில சமயம் குப்பை காகிதம் கோபுர உச்சிக்கும் போய் விடும். 


நம்மை விட குறைந்தவர்களை, அவர்கள் சாதரணமானவர்கள் என்று நினைத்து நாம் அவர்களுக்கு ஏதோ தீமை செய்தால், அதை அவர்கள் மனதில் வைத்து இருந்து சரியான நேரத்தில் நமக்கு மிகப் பெரிய தீமையை செய்து விடுவார்கள். நம்மால் தாங்க முடியாது. 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியபின் அவனுக்கு இராமன் சில அறிவுரைகள் வழங்கினான். 

அப்போது இராமன் சொல்கிறான் 


"சிறியர் என்று எண்ணி மற்றவர்களுக்கு துன்பம் செய்து விடாதே. அப்படி செய்ததால், கூனி என்ற ஒரு கிழவி எனக்கு செய்த தீமையால் நான் துயரம் என்ற கடலில் வீழ்ந்தேன்"


என்றான். 


பாடல் 


'சிறியர் என்று இகழ்ந்து நோவு

      செய்வன செய்யல்; மற்று, இந்

நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை

      இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,

குறியது ஆம் மேனி ஆய

      கூனியால், குவவுத் தோளாய்!

வெறியன எய்தி, நொய்தின் வெந்

      துயர்க் கடலின் வீழ்ந்தேன்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_8.html


(please click the above link to continue reading)



'சிறியர் என்று = நம்மை விட அறிவில், பணத்தில், அதிகாரத்தில், சிறியவர்கள் என்று எண்ணி 


இகழ்ந்து = அவர்களை இகழ்வாகப் பேசி 


நோவு செய்வன செய்யல் = துன்பம் தருவனவற்றை செய்யாதே 


மற்று, = மேலும் 


இந்நெறி இகழ்ந்து = இந்த வழியை மறந்து 


யான் = நான் (இராமன்) 


ஓர் தீமை இழைத்தலால் = தீமை செய்ததால் 


உணர்ச்சி நீண்டு = அந்த பகைமை உணர்ச்சியை நீண்ட நாள் மனதில் வைத்து இருந்து 


குறியது ஆம் மேனி ஆய = குறுகிய வடிவை உடைய 


கூனியால் = கூனியால் 


குவவுத் தோளாய்! = திரண்ட தோள்களை உடையவனே (சுக்ரீவனே) 


வெறியன எய்தி = துன்பத்தினை அடைந்து 


நொய்தின்  = வருந்தி 


வெந் துயர்க் கடலின் வீழ்ந்தேன். = துன்பம் என்ற கடலில் வீழ்ந்தேன் 


யோசித்துப் பார்த்து இருப்பானா இராமன். 


சக்ரவர்த்தி திருமகன் அவன். 


அவளோ அரண்மனையில் வேலை பார்க்கும் ஒரு கூன் விழுந்த கிழவி. 


அவளால் என்ன செய்ய முடியும்?


ஆனால், அவள் சாம்ராஜ்யங்களை புரட்டிப் போட்டாள். 


தசரத சக்ரவர்த்தி இறந்தான். இராமன் கானகம் போனான். சீதையும், இலக்குவனும் காடு போனார்கள். இராமன் அரசை இழந்தான். இருக்க இடம் இன்றி, உடுத்த துணி இன்றி காட்டில் பதினாலு வருடம் அலைந்தான். 


பரதன் அரசை ஏற்கவில்லை. இராமன் பாதுகையை வைத்து, அயோத்திக்கு வெளியே இருந்து ஆட்சி செய்தான். 


வாலி இறந்தான். 


இராவணன் இறந்தான். கும்பகர்ணன், இந்திரசித்து போன்றோர் இறந்தனர். 


எல்லாம் யாரால்? அந்தக் கூனியால். 


பெரிய பிழை ஒன்றும் இல்லை. மண் உருண்டை வைத்து அவள் கூன் முதுகில் இராமன் அம்பு விட்டான், சிறு வயதில். 


அது பொறுக்காமல் அந்தக் கூனி இவ்வளவு செய்தாள்.


பெரிய பெரிய படைகள் சாதிக்க முடியாதவற்றை அந்த பெண் தனி ஒரு ஆளாக நின்று செய்தாள். 


வீட்டு வேலை செய்பவர்களை, வண்டி ஓட்டுபவர்களை, காவல்காரர்களை, கீழே வேலை செய்பவர்களை, யாராக இருந்தாலும், அவர்களுக்கு தீமை செய்யக் கூடாது. 


அதிலும் பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு கீழே பலர் இருப்பார்கள். என்றோ ஒரு மறதியில், அசதியில் தவறு இழைத்து விட்டால் பின் ஆயுள் முழுவதும் வருந்த வேண்டி இருக்கும்.  இராமன் வருந்தியதைப் போல. 


சில சமயம் அவர்கள் நமக்கு தீமை செய்தார்கள் என்று கூடத் தெரியாது. இல்லாததும் பொல்லாததும் சொல்லக் கூடாத இடத்தில் போய் சொல்லி விடுவார்கள். நாம் செய்யாததை, சொல்லாததை செய்ததாகவும், சொன்னதாகவும் திரித்துச் சொல்லி நம்மை சிக்கலில் மாட்டி வைத்து விடுவார்கள். 


சிறியாரை இகழேல் என்று தன் அனுபவத்தை பாடமாக்கிச் சொல்கிறான் இராமன். 


படிப்போம். 



Sunday, November 7, 2021

ஔவையார் தனிப்பாடல் - சொல்லின்பம்

 ஔவையார் தனிப்பாடல் - சொல்லின்பம் 


கவிதை என்பது ஒரு அனுபவம். அதை அனுபவித்துத் தான் அறிய முடியும். சொல்லி விளங்க வைக்க முடியாது. 


ஒரு கவிதையில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் உரை சொல்லி விடலாம். எல்லா சொல்லுக்கும் அர்த்தம் தெரிந்து விட்டால், கவிதை புரிந்துவிட்டது என்று அர்த்தம் அல்ல. 


ரோஜா மலரின் அழகு எங்கே இருக்கிறது என்று ஒவ்வொரு இதழாக பியித்து பியித்து பார்த்தால் இறுதியில் காம்புதான் மிஞ்சும். 


ஒரு குழந்தையின் அழகு எங்கே இருக்கிறது? அதன் கண்ணிலா? மூக்கிலா? என்று தேடக் கூடாது. 


சொல்லின் அர்த்தம் தெரியாமல் அழகு புரியுமா என்றால் புரியாதுதான். ஆனால், சொல்லின் அர்த்தம் மட்டும் அல்ல கவிதையின் அழகு. 


பலபேர் சொல்லின் அர்த்தத்தோடு நின்று விடுகிறார்கள். 


எந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம்? இதுவா அர்த்தம்? அது கூட சரியாக வரும் போல் இருக்கிறதே? அப்படிச் சொன்னால் என்ன? என்று சொல்லுக்குள் நின்று விடுகிறார்கள். 


பாடல் 


இலக்கணக் கவிஞர் சொல்லின்பம் தேடுவர்

மலக்கும்சொல் தேடுவர் வன்க ணாளர்கள்

நிலத்துறும் கமலத்தை நீளும் வண்டதீ

தலைக்குறை கமலத்தைச் சாரும் தன்மைபோல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_7.html


(Please click the above link to continue reading)



இலக்கணக் கவிஞர் = நெறிமுறை அறிந்த கவிஞர்கள் 


 சொல்லின்பம் தேடுவர் = சொல்லின் இன்பத்தைத் தேடுவார்கள் 


மலக்கும் சொல் = மயக்கும் சொற்களை 


தேடுவர் வன்க ணாளர்கள் = தேடுவார்கள் கீழானவர்கள் 


நிலத்துறும்  கமலத்தை நீளும் வண்டத் = நிலத்தில் உள்ள வண்டு நீரில் உள்ள கமலத்தை (தாமரையை) நாடி அதில் உள்ள தேனை அனுபவிக்கும் 


ஈ = வண்டு 


தலைக்குறை = முதல் குறைந்த 


கமலத்தைச் = கமலத்தை 


சாரும் தன்மைபோல் = தேடுவதைப் போல 


ஔவையார் குசும்பு.


தலைக்குறை என்றால் தலை இல்லாத. அல்லது தொடக்கம் இல்லாத. 


கமலம் - இதில் முதல் எழுத்து இல்லை என்றால்? 


மலத்தை தேடும் ஈ போல என்று அர்த்தம். 


வார்த்தைகளை விட்டுவிட வேண்டும். அர்த்தத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும். 


என்னைக் கேட்டால், கவிதையின் அர்த்தத்தையும் விட்டுவிடலாம். கவிஞனின் மனதை, அவன் உணர்சிகளை பிடிக்க வேண்டும். 


அபிராமி பட்டர் சொல்லுவார் 


"என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே" என்று அபிராமியை. 


மூப்பு இல்லாத முகுந்தனுக்கு இளையவள் என்றால் என்ன அர்த்தம் என்று மண்டையை போட்டு கசக்கக் கூடாது. 


அவருக்கு, அவள் எப்போதும் இளமையானவள். அவளுக்கு வயதே ஆகாது. அதை எப்படியோ சொல்கிறார். வார்த்தைகளை தாண்டி உணர்சிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். 


அது தான் சொல்லின் இன்பம். 


மனைவி செய்த சமையலின் சுவை அவள் தரும் உணவில் இல்லை. அதை நமக்காக நேரம் செலவழித்து, பொறுமையாக, ஒவ்வொரு பொருளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பார்த்து செய்யும் கனிவில் இருக்கிறது. அந்த அன்பு மனம் புரிந்தால் சமையல் சுவைக்கும். இதில் உப்பு இல்லை, அதில் காரம் கூட இருக்கிறது என்று சொல்லுவது அந்த ஈயை போன்ற செயல். 


அப்பா அல்லது அம்மா, பிள்ளையைத் திட்டுகிறார்கள். சொல்லின் அர்த்தத்தைக் கொண்டா அதைக் கணிப்பது. நாம் நன்றாக வேண்டும் என்ற காதலில் அல்லவா திட்டுகிறார்கள் என்ற அந்த உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும். 


கவிதையை புரிந்து கொள்ள முயல்வதெல்லாம் ஒரு வாழ்க்கைப் பயிற்சி. 




Saturday, November 6, 2021

திருக்குறள் - இன்புற்றார் எய்தும் சிறப்பு

 திருக்குறள் -  இன்புற்றார் எய்தும் சிறப்பு


குடும்ப வாழக்கை வாழும் போதே எல்லாவற்றையும் விட்டு விட்டு, சுவர்க்கம் போகணும், வைகுண்டம் போகணும், கைலாசம் போகணும் என்று நினைக்கிறோம். 


ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். நம்மை போல் எத்தனை பேர் எத்தனை யுகமாக இப்படி வேண்டி அங்கு போய் இருப்பார்கள். எவ்வளவு பெரிய கூட்டமாக இருக்கும்? அதில் போய் என்ன செய்வது?


சுவர்க்கம் என்றால் ஒரே ஒரு ஊர்வசி, ஒரே ஒரு இரம்பை...முப்பது முக்கோடி தேவர்கள்.  அவர்கள் ஆட்டத்தை எத்தனை நாள் தான் இரசிப்பது? 


சலிப்பு வராதா? அலுத்துப் போகாதா? அப்புறம் என்ன செய்வது? அதற்கு மேல் எங்கே போவது? பெரிய பிரச்னை அல்லவா அது. 


வள்ளுவர் சொல்கிறார், அதையெல்லாம் விடுங்கள். 


இந்த உலகில் அன்பு செய்யுங்கள். அதை விட பெரிய சுவர்க்கம் இல்லை. 


கட்டிய கணவன், மனைவி மேல் அன்பு செய்யத் தெரியாதவர்கள் எப்படி காணாத கடவுள் மேல் அன்பு செய்யப் போகிறார்கள். 


அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, நட்பு, உறவு, சுற்றம், பேரன், பேத்தி, அத்தை, மாமா என்று ஆயிரம் பேர் இருக்கிறார்கள் அன்பை அள்ளிக் கொட்ட, திகட்ட திகட்ட முகர்ந்து கொள்ள. 


அதை விடவா சுவர்க்கம் சுகமாக இருக்கப் போகிறது. 


உடன் பிறப்பிடமும், நட்பிலும் அன்பு பரிமாறத் தெரியாதவன் முன்ன பின்ன தெரியாத தேவர்கள் மத்தியில் போய் என்ன செய்வான்? 


அன்பு பரிமாறும் வித்தை தெரிந்து விட்டால் இந்த வாழ்க்கை தான் சுவர்க்கம். 


பாடல் 


அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_6.html


(Please click the above link to continue reading)


அன்புற்று  = அன்பு கொண்டு 


அமர்ந்த = இல்லறத்தோடு 


வழக்கு  = கூடிய வாழ்வின் நெறி என்று


கென்ப  = என்ப, என்று சொல்லுவார்கள் 


வையகத்து = உலகில் 


இன்புற்றார் = இன்பம் அடைந்தவர்கள் 


எய்தும் சிறப்பு  = அடையும் சிறப்பு. 


இந்தப் குறளின் அர்த்தத்தை பரிமேலழகர் கண்டு சொல்கிறார். நாம் தலையால் தண்ணி குடித்தாலும் அந்த உரையின் பக்கம் கூட போக முடியாது. அவ்வளவு ஆழமான சிந்தனை.


அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.


என்ற குறளில், "அன்புற்று அமர்ந்த" என்பதில் அன்புற்று என்றால் என்ன என்று புரிகிறது. அது என்ன "அமர்ந்த" ?


இந்தக் குறள் இல்லறவியலில் இருக்கிறது. எனவே, அமர்ந்த என்றால் "இல்லறத்தில் ஈடுபட்டு" என்று பொருள் கொள்கிறார். 


சரி. "வழக்கு" என்றால் என்ன? 


வழக்கு என்றால் "இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன்" என்று பொருள் சொல்கிறார். 


அன்புற்று அமர்ந்த வழக்கு என்றால் அன்பு கொண்டு இல்லறத்தோடு கூடிய நெறியின் பயன் என்று வந்து விட்டது. 


அடுத்து வருவதுதான் பரிமேலழகர் உச்சம் தொடும் இடம்.


"இன்புற்றார் எய்தும் சிறப்பு".  இன்புற்றவர்கள் யார் என்ற கேள்விக்கு, துன்பமே இல்லாமல், எப்போதும் இன்பத்தில் இருப்பவர்கள், அதாவது தேவர்கள். அவர்கள் நம்மை விட இன்பமாக இருப்பவர்கள் அல்லவா? 


அது எப்படி இன்புற்றார் என்றால் தேவர்கள் என்று கொள்ள முடியும்? என் பக்கத்து வீட்டுக்காரன்  கூட எப்போதும் இன்பமாகத்தான் இருக்கிறான். ஏன் அவனைச் சொல்லக் கூடாது என்று கேள்வி எழும் அல்லவா?


"சிறப்பு" என்றால் என்ன? சிறந்தது, சிறப்பு எனப்படும் அல்லவா. ஐந்து உருபாயையை விட பத்து உருபாய் சிறந்தது. மிதி வண்டியை விட ஆகாய விமானம் சிறந்தது. இப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று சிறந்தது என்று சொல்லிக் கொண்டே போனால், எல்லாவற்றையும் விட சிறந்தது எது?


அதைத்தான் பேரின்பம் என்கிறோம். நீண்ட இன்பம், முடிவில்லா இன்பம். துன்பம் கலக்காத இன்பம். 


அந்த பேரின்பத்தை அடைந்தவர் யார்?  


தேவர்கள். 


எனவே "இன்புற்றார் அடையும் சிறப்பு" என்றால் தேவர்கள் அடையும் சிறப்பு என்று பொருள் கொள்கிறார். 


எனவே அன்போடு இல்லற நெறியின் கண் வாழ்வதின் பயன் தேவர்கள் அடையும் பேரின்பம் என்று பொருள். 


அப்படின்னு யார் சொல்கிறார்கள்? அப்படி யாரும் சொன்ன மாதிரி தெரியவில்லையே?


என்னைக் கேட்டால் மூன்று வேளையும் நல்லா சுவையான உணவை சாப்பிடுவதுதான் சிறப்பு என்பேன்.


பரிமேலழகர் சொல்கிறார் "என்ப" என்றால் அறிவுடையோர் சொல்லுவர் என்று அர்த்தம் என்று. 


இப்படி வாழ்ந்தால் அப்படிபட்ட இன்பம் அடையலாம் என்று அறிவுடையோர் கூறுவார். 


அப்படி கூறாதவர்கள் யார் என்று நாம் முடிவு செய்து கொள்ளலாம். 



அன்பு செய்யுங்கள். மேலும் மேலும் அன்பு செய்து கொண்டே போங்கள். இல்லறம் என்பது அன்பு செய்ய கிடைத்த பெரிய வாய்ப்பு. 


நேற்றை விட இன்று கொஞ்சம் அதிகம் அன்பு செய்ய வேண்டும். இன்றை விட நாளை. 







Friday, November 5, 2021

கம்ப இராமாயணம் - உயர்வன உவந்து செய்வாய்

கம்ப இராமாயணம் - உயர்வன உவந்து செய்வாய் 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியபின் அவனுக்கு இராமன் சில அறிவுரைகள் கூறுகிறான். 


இது அரசனுக்கு கூறியது தானே, நமக்கு எதற்கு என்று நினைக்க வேண்டியது இல்லை. இது எந்தப் பொறுப்பில் உள்ளவர்க்கும் பொருந்தும். 


எவ்வளவு பெரிய அறங்களை எவ்வளவு அழகாக சொல்கிறார்கள். 


யோசித்துப் பார்ப்போம். ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு சொல்வதென்றால் என்ன சொல்லுவோம்? 


எவ்வளவோ சொல்லலாம். எதைச் சொல்வது, எதை விடுவது என்ற குழப்பம் வரும். 


கடுமையான உழைப்பு, நீதி, நேர்மை, என்று சொல்லிக் கொண்டே போகலாம். 


கம்பன் எப்படிச் சொல்கிறான் என்று பாருங்கள். 



பாடல் 


 செய்வன செய்தல், யாண்டும்

      தீயன சிந்தியாமை,

வைவன வந்தபோதும் வசை

      இல இனிய கூறல்,

மெய்யன வழங்கல், யாவும்

      மேவின வெஃகல் இன்மை,

உய்வன ஆக்கித் தம்மோடு

      உயர்வன:  உவந்து செய்வாய்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_5.html


(Pl click the above link to continue reading)



செய்வன செய்தல் = செய்ய வேண்டியதை செய்து விட வேண்டும். ஒரு பொறுப்பு என்று வந்து விட்டால் அதை முடிக்க வேண்டும். வினை முடித்தல். யார் யாருக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றை செய்து விட வேண்டும். 


யாண்டும் = எப்போதும் 

தீயன சிந்தியாமை = தீயவற்றை சிந்திக்கக் கூட கூடாது. 


வைவன வந்தபோதும் = ஒரு பொறுப்பில் இருந்தால், நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள். ஒருவன் நல்லது என்பான். அதையே ஒருவன் கெடுதல் என்று வைவான். பொது வாழ்வில் இதெல்லாம் இயற்கை.  


வசை  இல இனிய கூறல், = அப்படியே ஒருவன் வைத்தாலும், பதிலுக்கு திட்டாமல், இனியவற்றை கூற வேண்டும். அரசாங்கம் என்றால் மாற்றுக் கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு கடுமையான விமரிசனம் என்றாலும் பொறுத்துக் கொண்டு இனிய பேச வேண்டும். 


மெய்யன வழங்கல்  = எது சரியோ அதைச் செய்ய வேண்டும். பிடித்தவன், பிடிக்காதவன் என்று பாராபட்சம் பார்க்காமல், உண்மை எதுவோ, எது சரியோ, அதைச் செய்ய வேண்டும். 



யாவும் மேவின வெஃகல் இன்மை = வெஃகல் என்றால் பிறர் பொருள் மேல் ஆசை கொள்ளுதல். அரசனிடம் ஏராளமான அதிகாரம் இருக்கும். யாரிடம் இருந்தும் எதையும் தன் அதிகாரத்தால் பறிக்க முடியும். அப்படி செய்யக் கூடாது என்கிறார். பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், சொத்து வைத்து இருப்பவர்களை மிரட்டி அவர்கள் பொருள்களை பறிக்கக் கூடாது. பறிக்க நினைக்கவே கூடாது என்கிறார். 

 

உய்வன ஆக்கித்  = உய்தல் காப்பாற்றுதல். 


தம்மோடு உயர்வன = இந்த நல்ல குணங்கள் இருக்கின்றனவே, அவை என்ன செய்யும் என்றால் யார் அவற்றை கடைப் பிடிகிறார்களோ அவர்களை காக்கும். அது மட்டும் அல்ல அவர்களை தங்கள் உயரத்துக்கு உயர்த்தும். அவை கை பிடித்து மேலே தூக்கி விடும். தாமும் உயர்ந்து, தங்களை கடைப் பிடிப்பவர்களையும் உயர்த்தும். 


 உவந்து செய்வாய். = இவற்றை மன மகிழ்ச்சியோடு செய்வாய். அது தான் சிக்கல். நாமாக இருந்தால் என்ன செய்வோம்...."இதெல்லாம் கேக்க நல்லா இருக்கு...நடை முறை சாத்தியம் இல்லை " என்று தள்ளி வைத்து விடுவோம். அல்லது, செய்ய வேண்டுமே என்று கடனே என்று செய்வோம். 


நல்ல காரியங்களை மன மகிழ்ச்சியோடு, விருப்பத்தோடு செய். 


விரதம் இருப்பது நல்லது என்றால், அதை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். 


உடற் பயிற்சி நல்லது என்றால் அதை செய்வதில் ஒரு உற்சாகம் வேண்டும். மூக்கால் அழுது கொண்டே செய்யக் கூடாது. 


தானம் செய்வது என்றால் விருப்பத்தோடு செய்ய வேண்டும். 


செய்வதில் மகிழ்ச்சி இல்லை என்றால் செய்ய மாட்டோம். கொஞ்ச நாள் செய்வோம் அப்புறம் விட்டு விடுவோம். விருப்பம் இருந்தால் மேலும் மேலும் செய்வோம். 


அறம் செய்ய விரும்பு என்றாள் ஔவை. விரும்பிச் செய்ய வேண்டும். 



நல்லவற்றை செய்வதில் விருப்பம் இருக்க வேண்டும். 


"உவந்து செய்வாய்" என்கிறான் இராமன்.