Monday, August 22, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - அல்லவை செய்யார்

     

 திருக்குறள் - அழுக்காறாமை - அல்லவை செய்யார்


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


)


பொறாமை கொள்ளாதே என்று வள்ளுவர் சொல்கிறார்.  பொறாமை கொண்டால் என்ன ஆகும்? இன்னும் சொல்லப் போனால், கொஞ்சம் பொறாமை இருந்தால் தானே மற்றவர்கள் போல் நாமும் உயர முடியும்? அப்படிப் பார்த்தால் பொறாமை நல்லதுதானே? என்று கூட நாம் நினைப்போம். 


அது சரியல்ல. பொறாமை கொண்டால் இம்மைக்கு மட்டும் அல்ல மறுமைக்கும் துன்பம் தொடரும். எனவே, பொறாமை கொள்ளக் கூடாது என்கிறார். 


கீழே உள்ள குறளுக்கு பரிமேலழகர் செய்த உரை வியக்கத் தக்கது. 



பாடல் 

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_22.html


(Pl click the above link to continue reading)



அழுக்காற்றின் = அழுக்காறு, அதாவது பொறாமை காரணமாக 


அல்லவை செய்யார் = அறன் அல்லாதவற்றைச் செய்யார் 


இழுக்காற்றின் = தவறானவற்றின் 


ஏதம் = துக்கம், துன்பம் 


படுபாக்கு = உண்டாவது 


அறிந்து = அறிந்து 


பொறாமை கொள்வதால் வரும் துன்பத்தை அறிந்து அறன் அல்லாதவற்றை செய்யக் கூடாது என்பது பொதுப் பொருள். 


இதில் பரிமேலழகரின் நுணுக்கம் ஆச்சரியமானது.


பொறாமை கொள்வதால் வரும் துன்பங்களை அறிந்து அறன் அல்லாதவற்றை செய்ய மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர். யார் செய்ய மாட்டார்கள் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு பதில் சொல்கிறார் பரிமேலழகர்.


"அறிந்து" என்று கூறியதால், அறிவுள்ளவர்கள் என்று உரை செய்கிறார். பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்று யாருக்குத் தெரியும்? அறிவு உள்ளவர்களுக்குத் தான் தெரியும். அது தெரியாமல் இருந்தால், அவன் அறிவற்ற மூடன் என்று பொருள். பொறாமை கூட நல்லதுதான் என்று யாராவது சொன்னால், அவன் அறிவு அவ்வளவுதான் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். 


"ஏதம்" என்றால் துன்பம்.துக்கம். சில அறிவிலிகள் சொல்லக் கூடும் "துன்பப் பட்டால்தானே சுகம் அடைய முடியும். வேலை செய்வது துன்பம் தான். அதற்காக வேலை செய்யாமல் இருக்க முடியுமா? எனவே,முதலில் துன்பம் வந்தால் என்ன, பின்னால் இன்பம் வந்தால் சரிதான்" என்று கூறக் கூடும். பரிமேலழகர் கூறுகிறார் "இம்மைக்கும் மறுமைக்கும் துன்பம் தரும்" என்று. 


பொறாமை கொண்டால் ஒரு நாளும் இன்பம் வராது. எனவே பொறாமை கொள்வதில் அர்த்தமே இல்லை என்கிறார். 


நான் என மனதுக்குள் பொறாமை கொண்டால் யாருக்கு என்ன? நான் என்ன யார் பொருளையும் திருடுகிறேனா? மற்றவர்கள் மேல் வசை பாடுகிறேனா? ஒன்றும் இல்லையே. என் மனதுக்குள் பொறாமை எழுகிறது. அதில் யாருக்கு என்ன கெடுதல் என்று கேட்கலாம். 


"அல்லவை செய்யார்" என்பதற்கு பரிமேலழகர் "அறன் அல்லாதவற்றைச் செய்யார் என்கிறார். அறன் அல்லாதது எது என்றால் பிறருக்கு மன, மெய், மொழிகளால் தீங்கு செய்தலும், நினைத்தலும் ஆம் என்கிறார். 


யார் மேல் பொறாமை கொள்ளக் கூடாது என்றால் "கல்வியாலும், செல்வத்தாலும் உயர்ந்தவர்கள் மேல்" என்கிறார். 


எவ்வளவு நுணுக்கமான உரை. எவ்வளவு ஆழமாக சிந்தித்து எழுதி இருக்கிறார்கள். 


நம் சொத்தின் மதிப்பு தெரியாமல் இருக்கிறோம். 


 




Friday, August 19, 2022

திருவாசகம் - திரு அம்மானை - அந்தம் இலா ஆனந்தம்

   

 திருவாசகம் - திரு அம்மானை  -   அந்தம் இலா ஆனந்தம்


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி



ஒரு நிறுவனத்தின் மேல் அதிகாரியாக இருப்பார் அவர். அவரைக் கேட்டுக் கொண்டுதான் எல்லாம் நடக்கும். அவர் கையெழுத்துப் போட்டால்தான் எதுவும் நகரும். என்னை விட்டால் இந்த நிறுவனத்தை செலுத்த யார் இருக்கிறார்கள் என்று பெருமிதம் கொள்வார். நான் இல்லாவிட்டால் இந்த நிறுவனம் என்ன ஆகுமோ என்று கவலை கொள்வார். 


ஒரு நாள் அவர்  ஓய்வு அடையும் வயதை அடைவார். அவரை பாராட்டி வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த நிறுவனம் அவர் இல்லாமல் எப்போதும் போல இயங்கிக் கொண்டிருக்கும். 


அவருக்குத் தான் தாங்க முடியாது. நான் அவ்வளவு செய்தேனே...என்னைத் தவிர யாருருக்குத் தெரியும்..நான் இல்லாமல் எப்படி நடக்கிறது, அப்படி என்றால் நான் ஒன்றும் அப்படி ஒரு பெரிய ஆள் இல்லையா, நான் இல்லாவிட்டால் இன்னொருவன் என்றால் நான் சாதரணமானவன் தானா என்று மறுகுவார்.  சில பேர் அந்த வெறுமையை தாங்க முடியாமல் மாரடைப்பு வந்து இறந்தும் இருக்கிறார்கள். 


நமக்கு அதை நினைத்தால் சிரிப்பாக இருக்கும். 


சிரிப்பதற்கு முன் சற்று யோசிப்போம். 


நம் வீட்டில் என்ன நடக்கிறது என்று. 


நான் இல்லாவிட்டால் என் பிள்ளைகள் என்ன ஆகும், என் மனைவிக்கு ஒன்றுமே தெரியாது, நான் இல்லாவிட்டால் என் கணவருக்கு ஒரு காப்பி கூட தெரியாது, அவரை அல்லது அவளை யார் பார்த்துக் கொள்வார்கள், என்று நமக்கு நாமே பெரிய ஆளாக நினைத்துக் கொள்வோம். நம்மை விட்டால் இந்த குடும்பமே சீரழிந்து விடும் என்று நினைப்போம். நாம் தான் இந்த குடும்பத்தை தாங்கி நிற்கிறோம் என்று நினைப்போம். 


அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. சந்தேகம் இருந்தால் உங்களை சுற்றி உள்ளவர்களை கேட்டுப் பாருங்கள். உபசாரத்துக்கு வேண்டும் என்ன்றால்"ஐயோ, நீ இல்லாத வாழ்கையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை" என்பார்கள். அத்தனையும் பொய். யார் இல்லாவிட்டாலும், உலகம் இயங்கிக் கொண்டே இருக்கும். 


நாமே நினைத்துக் கொள்வதுதான்...நாம் பெரிய ஆள், இந்த குடும்ப பாரத்தை நாம் தான் கொண்டு செல்கிறோம் என்று. அப்படி சொல்லிக் கொண்டு நம் பந்த பாசங்களை மேலும் மேலும் இறுக்கமாக்கி கொள்கிறோம். விட்டால் ஒன்றும் ஆகாது. இருந்தாலும், விடவே முடியாது என்று நாமே கற்பனை செய்து கொண்டு "என் குடும்பம், என் பிள்ளைகள், என் கணவன், என் மனைவி, ,என் பொறுப்பு"  ஆணவத்தை வளர்த்துக் கொள்கிறோம். 


அதை விட முடிவது இல்லை. 


விட்டு விட்டு என்ன செய்வது என்ற பெரிய கேள்வி எழும். அதற்கு விடை காண முடியாது. அதற்கு பயந்து, நாம் இதற்கு பின்னால் ஒளிந்து கொள்கிறோம். 


இந்தப் பற்றுகள் விட வேண்டும் என்றால் அவன் அருள் வேண்டும். 


நான் இல்லாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது என்று சொல்ல எத்தனை பேரால் முடியும்? 


"நான் ஒன்றும் பெரிசாக செய்து விடவில்லை. நான் இல்லாவிட்டாலும் எல்லோரும் சந்தோஷமாகத் தான் இருப்பார்கள். இருக்கும் வரை என்னால் முடிந்ததைச் செய்கிறேன்" என்று இருந்தால் மனம் லேசாகும். நான் நான் என்று பறக்காது. என்னை விட்டால் யாரும் இல்லை என்று இறுமாப்பு கொள்ளாது, என்னை கேட்காமல் எப்படிச் செய்யலாம் என்று மனம் கொக்கரிகாது.


"அவரவர்கள் அவர்கள் வேலையை பார்த்துக் கொள்வார்கள்" என்று விட்டு விட்டால் நம் வேலை என்ன என்ற சிந்தனை பிறக்கும். அந்தக் கேள்வியில் இருந்து எல்லையில்லா ஆனந்தம் பிறக்கும் என்கிறார் மணிவாசகர். 





பாடல் 


இந்திரனும், மால், அயனும், ஏனோரும், வானோரும்,

அந்தரமே நிற்க, சிவன் அவனி வந்தருளி,

எம் தரமும் ஆட்கொண்டு, தோள் கொண்ட நீற்றன் ஆய்;

சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான்,

பந்தம் பறிய, பரி மேல்கொண்டான், தந்த

அந்தம் இலா ஆனந்தம் பாடுதும் காண்; அம்மானாய்!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


(pl click the above link to continue reading)


இந்திரனும், = இந்திரனும் 


மால் = திருமாலும் 


அயனும் = பிரமாவும் 


ஏனோரும் = மற்றையவர்களும் 


வானோரும், = வானில் உள்ளவர்களும் 


அந்தரமே நிற்க = அந்தரத்தில் நிற்க 


சிவன் = சிவ பெருமான் 


அவனி = இந்த உலகிற்கு (பூமிக்கு) 


வந்தருளி = வந்து அருளி 


எம் தரமும் = எம்முடைய தரத்துக்கு எங்களையும் 


ஆட்கொண்டு = ஆட் கொண்டு 


தோள் கொண்ட நீற்றன் ஆய்; = தோள்களிலே திருநீற்றை அணிந்து 


சிந்தனையை = மனதை 


வந்து உருக்கும் = வந்து உருக்கும் 


சீர் ஆர் பெருந்துறையான், = சீரிய சிறந்த திருப் பெருந்துறையில் உறைபவன் 


பந்தம் பறிய = நம்முடைய பந்தங்களை எல்லாம் நீக்கி 


பரி மேல்கொண்டான் = குதிரை மேல் வந்தான் 


தந்த = அருள் தந்த 


அந்தம் இலா ஆனந்தம் = முடிவு இல்லாத ஆனந்தம் 


பாடுதும் காண்; அம்மானாய்! = அதைப் பாடுவோம் அம்மானை ஆடும் பெண்ணே 



பந்தங்களை நீக்கியவுடன், அந்தம் இல்லாத ஆனந்தம் தோன்றியது என்கிறார் 


மணிவாசகர் பாண்டிய மன்னன் அவையில் முதல் அமைச்சராக இருந்தார். பாண்டிய மன்னன் நிறைய பொருள் கொடுத்து குதிரைகள் வாங்கி வர அனுப்பினான். அவரும் கிளம்பி விட்டார். 


பார்த்தார் சிவ பெருமான். தன் பக்தன் இப்படி குதிரை வாங்கவும், நாட்டை ஆள்வதில் உதவி செய்வதிலும் பிறவியை வீணே கழிக்கிறானே என்று அவர் மேல் அருள் கொண்டு அவரை தடுத்து ஆட்கொண்டார். 


சிந்திப்போம், மூன்று வேளை சமையல் செய்வதும், துணி துவைத்து உலர்துவதும், வேலை ஆட்களை மேற் பார்வை செய்வதும், நாள் ஒன்றுக்கு பத்து மணி நேரம் ஏதோ ஒரு அலுவலகத்தில் செய்த வேலையையே வருடக் கணக்கில் செய்து கொண்டு இருப்பதுவா வாழ்வின் நோக்கம்?  


இதையே ஏதோ பெரிய இமாலய சாதனை என்று நினைத்துக் கொள்வதும், இதைச் செய்ய என்னை விட்டால் ஆள் இல்லை என்று இறுமாப்பதும் விட்டு விட்டு,கரை சேரும் வழியை நினைப்போம். 


திருச்சிற்றம்பலம் 


Wednesday, August 17, 2022

கந்தரனுபூதி - எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 2

    

 கந்தரனுபூதி -  எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 2


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html




)


எது நிரந்தரமானது, எது அடிப்படையானது எதில் இருந்து இந்த உலகம் தோன்றியது என்ற கேள்விகளுக்கு இங்கு விடை சொல்கிறார் அருணகிரிநாதர். 


இது தான் என்று விடை சொல்லிவிடலாம். இதைத் தவிர வேறு விடைகளும் இருக்கிறதா? இது பற்றி மற்றவர்கள் சிந்தித்து இருக்கிறார்களா? அவர்கள் சொன்ன முடிவு என்ன? என்பதையும் இங்கே கூறுகிறார்.


சமயவாதிகள் பலரைக் ஏதாவது கேட்டால் "அது எல்லாம் ஒரு நம்பிக்கைதான்...அதை எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது...அதெல்லாம் உனக்குப் புரியாது" என்று சொல்லிவிடுவார்கள். 


ஆனால், இந்து சமயத்தை உற்று நோக்கினால் புரியும். இந்த சமயம் முழுவதுமே கேள்வி கேட்பதுதான். தேடல்தான். 


கீதையை கண்ணனே சொல்கிறான். இருந்தும் விடாமல் அர்ஜுனன் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு இடத்தில் கூட கண்ணன் "நான் சொல்கிறேன்...வாயைக் மூடிக் கொண்டு கேள்" என்று சொல்லவில்லை. கடைசி அத்யாயம் வரை கேள்வி தொடர்கிறது. 


உபநிடதங்களும் அப்படியே. குருவின் அருகில் இருந்து கேள்வி கேட்டு தெளிவு பெறுவது. கேள்வி கேட்காமல், கண் மூடித்தனமாக நம்ப வேண்டும் என்று இந்து சமயம் ஒரு இடத்திலும் கூறவில்லை.


இந்தப் பாடலில் எத்தனை கேள்விகள் என்று பார்ப்போம். 


பாடல் 


வானோ? புனல் பார் கனல் மாருதமோ?

ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?

யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்

தானோ? பொருளாவது சண்முகனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


(Pl click the above link to continue reading) 


ஏழு கேள்விகள் கேட்கிறார் அருணகிரியார். 


நாலு வரிக்குள் ஏழு கேள்விகள். கேள்வி கேட்காமல் "நம்பிக்கை நம்பிக்கை" என்று சொல்பவர்கள் கேள்வி கேட்கப் பழக வேண்டும். கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பழக வேண்டும். 


எது பொருள் அதாவது நிரந்தரமான பொருள் எது என்ற கேள்வியை எழுப்புகிறார் அவர்.


இதுவா, அதுவா என்று அவரே சந்தேகத்தை எழுப்புகிறார். 


வானோ?  = வானமா? இந்த ஆகயமா? 


புனல் = நீரா ?


பார் = நிலமா? 


கனல் = நெருப்பா? 


மாருதமோ? = காற்றா? 


ஞானோ தயமோ? = ஞானம் உதயம் ஆன இடமா? 


நவில் நான் மறையோ? = பேசப்படும் நான்கு வேதங்களா? 


யானோ? = நானா? 


மனமோ? = என் மனமா ?


எனை ஆண்ட இடம் தானோ?  = எனை ஆண்ட இடம் தானோ? 


பொருளாவது சண்முகனே = ((நிரந்தர) பொருளாவது சண்முகனே. 


முருகா, நீயே சொல்.


இந்த பஞ்ச பூதங்களா?  வேதங்களா? ஞானமா? நானா? என் மனமா? என்னை ஆட்கொண்ட இடமா? எது பொருள் ? சொல் முருகா என்று முருகனை கேள்வி கேட்கிறார். 


சரி, அவர் கேள்வி கேட்டார். முருகன் பதில் சொன்னானா? என்ன பதில் என்று கேட்டால், இந்தப் பாட்டிலேயே அதையும் சொல்லி விட்டார் அருணகிரியார். 


இதில் எத்தனை தத்துவங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம். 


"வானோ" - வானமா? என்று கேட்கிறார்.  சூனியத்துவம் என்று ஒரு தத்துவம் உண்டு. அந்தத் தத்துவத்தின் படி இந்த உலகிற்கு ஆதாரம் இந்த வெளிதான். எல்லாம் அதில் தோன்றி அதிலே முடிவடைத்து விடும் என்பது இந்த தத்துவத்தின் கொள்கை. இந்த பிரபஞ்சம் முழுவதும், எண்ணில் அடங்கா சூரியன்கள், சந்திரன்கள், கோள்கள், விண்மீன்கள், பால்வெளி, எல்லாம் இந்த சூன்யத்தில் இருந்து தோன்றி, அதில் ஒடுங்கும், எனவே அதுதான் நிரந்தரமானது என்று கூறும் தத்துவம். அப்படியானால் அதுதான் உண்மையா?   அல்லது...


"புனல் பார் கனல் மாருதமோ?


ஏனைய பஞ்ச பூதங்கள்தான் அடிப்படையா? சில சமய தத்துவங்கள் இந்த பிரபஞ்சம் நீரில் தொடங்கி நீரில் முடியும் என்று கூறும். ஊழிக் காலத்தில் இந்த உலகம் முழுவதும் நீரால் சூழப்படும், எங்கள் இறைவன் ஆல் இலை மேல் மிதந்து வருவான் என்று சில சமய பிரிவுகள் கூறும். 


வேறு சில பிரிவுகள், இந்த உலகம் நெருப்பில் தோன்றி , நெருப்பில் மறையும். ஊழிப் பெரு நெருப்பு இந்த உலகம் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கி விடும். அந்த சாம்பலை எங்கள் இறைவர் உடல் முழுவதும் பூசிக் கொள்வார். அந்த நெருப்பு வடிவானவர் எங்கள் கடவுள் என்று சில பிரிவுகள் கூறும். ஜோதி வடிவானவன் என்று பேசும். 


இப்படி ஐம்பெரும் பூதங்களும்தான் உலகின் தொடக்கம், நடு, முடிவு என்று வெவ்வேறு தத்துவங்கள் கூறுகின்றன. 


இதில் எது உண்மை? 


அருணகிரியார் மேலும் தொடர்கிறார் 



ஞானோ தயமோ?  =  இந்த உலகமே ஒரு மாயை. இது உண்மை அல்ல. ஆணவம், கன்மம், மதம், மாச்சரியம் போன்ற மலங்கள் நம்மை உண்மையான உலகை அறிய விடாமல் தடுக்கின்றன. மாயை விலகி ஞானம் பிறந்தால் உண்மை விளங்கும். எனவே, இந்த ஞானமா நிரந்தரமான பொருள்? 


நவில் நான் மறையோ? = அதெல்லாம் இல்லை. என்றும் நிரந்தரமானது உண்மை ஒன்றுதான். அந்த உண்மை வேதங்களில் பொதிந்து கிடக்கிறது. வேதம் என்று தோன்றியது என்று தெரியாது. உண்மையை உள்ளடக்கிய அந்த வேதமா நிரந்தரமான பொருள்?



யானோ?  = பொருள் என்று ஒன்று தனியே கிடையாது. பார்பவரின் புலன்களைப் பொறுத்துத் தான் உலகம். கண் பார்வை இல்லாதவருக்கு நிறம் என்ற ஒன்று இல்லை. அவரைப் பொறுத்தவரை இந்த உலகம் நிறம் என்ற ஒன்று இல்லாதது. அவருக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். எனக்கு நிறம் தெரிகிறதே என்று நாம் கூறலாம். நமக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன. அவருக்கு நான்கு புலன்கள் மட்டும்தான் இருக்கிறது. ஒரு வேளை ஆறாவது அல்லது ஏழாவது புலன் என்று ஒன்று இருந்தால்? நம்மிடம் இல்லை. நமக்கு அது புரியவே புரியாது. கண் இல்லாதவர்க்கு நிறம் புரியாதது போல ஐந்துக்கு மேல் உள்ள புலன்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதற்காக அவை இல்லை என்று நாம் எப்படி கூற முடியும் ? அப்படி என்றால் இங்கே நிரந்தரமான ஒன்று என்பது "நான்" என்று சொல்லப் படும் பொருளா?


மனமோ?  = நான் இருந்தால் மட்டும் போதாது. என் மனம் வேலை செய்ய வேண்டும். சிந்தனை ஓட வேண்டும். ஞாபகம் வேண்டும். புலன்கள் சொல்லும் செய்தியை நாம் அறிய வேண்டும். எனவே, இந்த மனமா நிரந்தரமானது? 


 எனை ஆண்ட இடம் தானோ?  = இதெல்லாம் இல்லை. நீ என்னை ஆட்கொண்டாய் அல்லவா அந்த நிகழ்வுதான் நிரந்தரமான ஒன்று என்கிறார். 


நம் நண்பர் நம்மிடம் கேட்கிறார் "நான் நேற்று ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். அங்க யாரைப் பார்த்தேன் சொல்லு பார்க்கலாம்" என்று நம்மைக் கேட்கிறார். 


நாமும் 


"இராமனா?"  என்கிறோம். 


"இல்லை" என்கிறான். 


"கிருஷ்ணனா" என்று கேட்கிறோம்.


"ம்ஹும்ம்" என்று தலையாட்டி மறுக்கிறான். 


இப்படி ஒவ்வொரு பேராக சொல்லிக் கொண்டே போகிறோம். இல்லை, இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். 


கடைசியில் 


"கண்டு பிடிச்சுட்டேன்...நம்ம பழைய நண்பன் முருகன் தான " என்கிறோம். 


ஆம் என்று தலை அசைக்கிறான். 


அதற்குப் பிறகு நாம் மேலும் பேர் சொல்லிக் கொண்டே இருப்போமா? எப்போது சரியான விடை வந்து விட்டதோ, அதற்குப் பிறகு பேச்சு இல்லை. 


வானோ, புனலோ என்று கேட்டுக் கொண்டே வந்த அருணகிரியார் 


"எனை ஆண்ட இடம் தானோ/" என்று இறுதியாக கேட்டு நிறுத்துகிறார். 


அதற்கு பின்  ஒன்றும் கேட்கவில்லை. அப்படி என்றால் என்ன அர்த்தம்? அதுதான் விடை என்று அர்த்தம். 


இந்த உயிர் இறைவனோடு கலப்பது ஒன்றுதான் நிரந்தரமான ஒன்று. 


பசு, பாசம் என்ற கயிறை அறுத்துக் கொண்டுபதியோடு இணைவதுதான் இறுதியான ஒன்று. 


இந்த ஆன்மா உலகில் பிறந்து, பல அனுபவங்களைப் பெற்று, மீண்டும் இறைவனோடு இணைவது ...இதுதான் எப்போதும் விடாமல் நிகழ்ந்து கொண்டிருப்பது. 


அலை, கடலோடு சேர்வது போல. 


மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாடலின் ஆழம் விளங்கும். 


இப்படி ஐம்பது பாடல்கள் இருக்கின்றன.  என்று அனைத்தையும் படித்து தெளிவது? 


பொருளாவது சண்முகனே.


Tuesday, August 16, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - அறனாக்கம்

    

 திருக்குறள் - அழுக்காறாமை - அறனாக்கம் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்




)


பொறாமை படாதே, பொறாமை படாதே என்று சொன்னால் அது என்ன நம்மைக் கேட்டுக் கொண்டா வருகிறது?  "நான் வரவா" என்று கேட்டால், "வராதே" என்று சொல்லி விடலாம். ஆனால், உண்மையில் அது எங்கே நம்மைக் கேட்கிறது. அது பாட்டுக்கு வந்து மனதில் உட்கார்ந்து கொள்கிறது. 

நாம் என்ன செய்ய முடியும்? 


வள்ளுவர் அதற்கு ஒரு வழி சொல்கிறார். 


எந்த ஒரு வேலையை முதலில் செய்யும் போது கடினமாக இருக்கும். கடினமாக இருக்கிறதே என்று விட்டுவிட்டால் அந்த வேலை செய்யவே வராது. கடினமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். அது மட்டும் அல்ல, அதிகமாகவும் செய்ய வேண்டும். 


உதாரணமாக, 


உடல் பயிற்சி செய்யத் தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதல் நாள் ஒரு கிலோ எடையை தூக்கினாலே கை வலிக்கும். விட்டு விடக் கூடாது. இரண்டு மூணு நாள் செய்ய வேண்டும். கை பழகி விடும். அப்புறம் கொஞ்சம் எடையை கூட்ட வேண்டும். புது எடை கை வலிக்கும். பின் சில நாளில்அது பழகி விடும். இப்போது முதல் நாள் செய்த ஒரு கிலோ எடையை தூக்கினால் மிக எளிதாக இருக்கும். 


கடினமான ஒன்று எப்படி எளிதானாது? அதை விட அதிகமான ஒன்றைச் செய்ததால் அது எளிமையானது. 


பொறாமை வருகிறதா? மற்றவன் ஆக்கம் கண்டு பொறாமை வருகிறதா? அப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், அவன் ஆக்கத்தை போற்று, அதை மேலும் பெரிதாக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தி, பொறாமை போய் விடும் என்கிறார். 


அதை அவர் சொல்லும் விதம் இருக்கிறதே, நம்மால் சிந்தித்தும் பார்க்க முடியாது. அப்படி ஒரு அழகு. 


பாடல் 


அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


(Pl click the above link to continue reading)


அறனாக்கம் = அறனும், ஆக்கமும் 


வேண்டாதான் = வேண்டாம் என்று 


என்பான் = சொல்லுபவன் 


பிறனாக்கம் = பிறருடைய ஆக்கத்தை 


பேணாது = போற்றாமல் 


அழுக்கறுப் பான் = பொறாமை கொள்பவன் 


மிக ஆழமான குறள். 


அறனாக்கம் - இதற்கு பரிமேலழகர் செய்திருக்கும் உரை பிரமிக்க வைக்கக் கூடியது.  அதை அறன் + ஆக்கம் என்று இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார். ஆக்கம் என்றால் செல்வம். செல்வம் இந்த இப்பிறவிக்கு பலன் தரக் கூடியது. அறம் என்பது இம்மைக்கும் மறுமைக்கும் பலன் தரக் கூடியது. எனவே அறனாக்கம் என்பது இம்மைக்கும் மறுமைக்கும் பலன் தரக் கூடியவை. 


இப்படி இம்மைக்கும் பலன் வேண்டாம், மறுமைக்கும் பலன் வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா? 


சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்றால் 


பிறன் ஆக்கம் பேணாது அழுக்காறு கொள்பவர்கள். 


இங்கே இரண்டு விடையத்தைக் கூறுகிறார். 


முதலில் மற்றவர்கள் ஆக்கத்தைப் பேண வேண்டும். பேணுதல் என்றால் பாதுகாத்தல், போற்றுதல் என்று பொருள்.  பக்கத்து வீட்டுக் காரனுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்து இருக்கிறதா? அதை எப்படி நல்லபடியாக முதலீடு செய்து அதை அவன் மேலும் பெருக்க முடியும் என்று சிந்தித்து அதை அவனுக்கு சொல்ல வேண்டும். 


இரண்டாவது, அப்படிச் செய்யாமல் அதைக் கண்டு பொறாமை கொள்ளக் கூடாது. 


போற்றாமலும், பொறாமை கொண்டாலும் அவனுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் ஒரு பலனும் கிடைக்காது என்கிறார்.


யாருக்கு என்ன நன்மை கிடைத்தாலும் அதைக் கண்டு மகிழ வேண்டும். 


மற்றவர்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும்.அந்த மகிழ்ச்சியை மேலும் பெருக்க உதவ வேண்டும். அது கண்டு நாமும் மகிழ வேண்டும். மனம் விரிய வேண்டும். 


அப்படிச் செய்தால் என்ன கிடைக்கும் - இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை கிடைக்கும். 


ஒரு குறளுக்குள் எவ்வளவு அர்த்தம்!


அறன், ஆக்கம் 

பிறன் ஆக்கம் 

பேணுதல் 

அழுக்காறு செய்பவன் 





Monday, August 15, 2022

திருவாசகம் - திரு அம்மானை - வாரா வழியருளி

  

 திருவாசகம் - திரு அம்மானை  -   வாரா வழியருளி


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்




)


வீட்டில் அப்பா(வோ அல்லது அம்மாவோ) ஒரு பெரிய நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கலாம். அல்லது அரசியலில் ஒரு பெரிய தலைவராக இருக்காலம். அவரைப் பார்க்க பலர் , பல நாள் காத்துக் கிடப்பார்கள். ஒரு இரண்டு நிமிடம் கிடைத்தால் போதும் என்று தவம் கிடப்பார்கள். 


ஆனால், வீட்டில் மனைவிக்கு, பிள்ளைகளுக்கு அவர் சாதாரண கணவன் அல்லது தந்தைதான். நான் நாட்டுக்கு முதல் மந்திரி என்று பிள்ளையிடம் இருக்க முடியுமா? அலுவலகத்தில் இருந்து வரும் போதே "பிள்ளை எங்கே" என்று தேடிக் கொண்டு வருவார். 


"உங்களுக்காக இவ்வளவு நேரம் காத்திருந்துவிட்டு இப்பத்தான் தூங்கப் போனான்" என்று மனைவி சொல்லுவாள்.


சரி, இரு போய் பார்த்துட்டு வந்துர்றேன் என்று தூங்கும் பிள்ளையை பார்க்க இவர் ஓடுவார். 


ஊரெல்லாம் இவரைக் காண தவம் கிடக்கிறது. இவர் பிள்ளையை காண ஓடுகிறார். 


இதை காதலன், காதலி மேல் வைத்துப் பாருங்கள். காதலன் பெரிய வேலையில் இருக்கிறான். வருகிறேன் என்று நேரத்துக்கு வரவில்லை. காதலி கோபித்துக் கொள்கிறாள். எவ்வளவு இறங்கி வருவான். எத்தனை முறை 'சாரி' சொல்லுவான். அது அன்புப் பரிமாற்றம். 


மணிவாசகர் சொல்கிறார் 


"விண்ணுலகம், பாதாள உலகம் போன்ற உலகில் உள்ளவர்கள் எல்லாம் சிவனே உன்னைக் காண முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால், நீ எங்களுக்கு எளிமையானாவன்.  எங்களுக்கு உன் மேல் ஒரு பைத்தியம் பிடிக்க வைத்து விட்டாய். அது மட்டும் அல்ல, நாங்கள் இந்த உலகில் மீண்டும் வாராத வழியை அருளினாய். எங்கள் உள்ளத்தில் புகுந்து விட்டாய். கடலில் மீன் பிடிப்பவனைப் போல எம் போன்ற பக்தர்களை நீ வலை வீசிப் பிடிக்கிறாய்" என்கிறார். 


பாடல் 


பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்

ஆராலும் காண்டற் கரியான் எமக்கெளிய

பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி

வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த

ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்

பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய் 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


(pl click the above link to continue reading)



பாரார் = பாரில், இந்த உலகில், உள்ளவர்கள்


விசும்புள்ளார் = விசும்பு என்றால் வானம். வானுலகில் உள்ளவர்கள்


பாதாளத் தார் = பாதாள உலகில் உள்ளவர்கள்


புறத்தார் = இதற்குப் புறத்தும் உள்ள உலகில் உள்ளவர்கள்


ஆராலுங் = யாராலும்


காண்டற் கரியான் = காண்பதற்கு அரியவன்


எமக்கெளிய = எமக்கு எளிய


பேராளன் = பெரிய அன்பு உள்ளவன்


தென்னன் = தென்னாடுடையவன்


பெருந்துறையான் = திருப் பெருந்துறையில் உள்ளவன்


பிச்சேற்றி = நமக்கு அவன் மேல் பித்தை ஏற்றி


வாரா = திரும்பி இந்த உலகத்திருக்கு வந்து பிறக்காமல் இருக்கும் (திரும்பி வரமால்)


வழியருளி = வழியை தந்து அருளி


வந்தென் = அவனே வந்து


உளம்புகுந்த = என் உள்ளம் புகுந்து


ஆரா அமுதாய் = தீராத அமுதமாய்


அலைகடல்வாய் = அலை கடலில்


மீன்விசிறும் = மீன் பிடிக்கும் மீனவன் போல


பேராசை வாரியனைப் = பேராசைக் காரனை (பக்தர்களை வல போட்டு பிடிக்கும்)


பாடுதுங்காண் அம்மானாய். = அம்மானை  பாடி ஆடுவோம்


.பிச்சு என்றால் பைத்தியம். பித்து. "உன்ன இரண்டு நாளா பாக்காம பைத்தியமே பிடிச்சுரும் போல இருக்குடி" என்று காதல்/காதலி சொல்லுவது போல. 


இறைவன் மேல் அவ்வளவு காதல். அவரை பார்க்காமல் பைத்தியமே பிடிச்சுரும் போல இருக்காம். 


"வாரா வழி அருளி"....திரும்பி வர முடியாத வழியைச் சொல்வாராம். அந்த வழியில் போனால், மீண்டும் இந்த பிறவி என்ற ஊருக்கு வர முடியாது. ஒரு வழிப் பாதை. நேரே வீடு பேறுதான். 


மணிவாசகரைத் தவிர யார் இதை இவ்வளவு அழகாகச் சொல்ல முடியும்!


முன்பு கூறியது போல, திருவாசகம் என்பது உணர வேண்டிய ஒன்று. அறிய வேண்டிய ஒன்று அல்ல. 


ஒன்றுக்கு பல முறை வாசித்துப் பாருங்கள். 



Sunday, August 14, 2022

கந்தரனுபூதி - எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1

   

 கந்தரனுபூதி -  எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html

)


இந்த உலகம் ஒரு கலவை. 


எதை எடுத்துக் கொண்டாலும் சில அடிப்படையான விடயங்களைக் கொண்டுதான் அவை படைக்கப் படுகின்றன. 


எப்படி என்று சில உதாரணங்கள் மூலம் காண்போம். 


எத்தனையோ விதமான உணவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு சுவை. அத்தனை சுவைகள் இருக்கின்றனவா என்றால் இல்லை. மொத்தமே ஆறு சுவைதான் உண்டு. இனிப்பு, புளிப்பு, உரைப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு. மொத்தம் அவ்வளவுதான். இவற்றை எந்த விகிதத்தில் கலக்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் சுவை இருக்கும். இந்த ஆறு சுவையைத் தாண்டி இன்னொரு சுவை கிடையாது.


எத்தனையோ விதமான இசை இருக்கிறது. எவ்வளவு பாடல்கள், எத்தனை மொழிகளில். அத்தனைக்கும் அடி நாதம் ஏழு ஸ்வரங்கள்தான். அதை மாற்றி மாற்றிப் போட்டு புதுப் புது இராகங்கள் உண்டாகின்றன. உலகில் உள்ள அத்தனை இசைக்கும் அடிப்படை ஏழு ஸ்வரங்கள்தான். 


எத்தனை விதமான மனிதர்கள். எல்லோருக்கும் அடிப்படை செல் தான். செல்களின் தொகுப்பு திசுக்கள் (tissues ), திசுக்களின் தொகுப்பு உறுப்புகள் (organs ), உறுப்புகளின் தொகுப்பு, உருவம். 


உலகில் உள்ள அத்தனை பொருள்களுக்கும் அடிப்படை அணுக்கள். அதற்கு உள்ளேயும் போகலாம். பொதுவாக அணுக்கள் என்று கொள்வோம். 


வெளித் தோற்றம் உண்மை அல்ல. அடிப்படையில் ஏதோ ஒன்று இருக்கிறது. அது புரிந்து விட்டால் அத்தனை தோற்றமும் புரிந்து விடும். ஒவ்வொன்றாக படிக்க வேண்டும் என்று அல்ல. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html


(Pl click the above link to continue reading) 



எனவே, நாம் எப்போதும் எது அடிப்படையானது என்று தேடிக் கொண்டிருக்கிறோம். அதை தத்துவவாதிகள் நிரந்தர வஸ்து என்பார்கள். சாஸ்வதமானது. அடி நாதமானது எது என்று தேடத் துவங்கினார்கள். 


உலகத் தோற்றம், அதில் உள்ள பொருள்கள், மனிதர்கள், உயிர்கள் எல்லாம் அடிப்படையானது அல்ல என்று புரிந்து கொண்டார்கள். 


இவை எல்லாமே பஞ்ச பூதங்களின் ஒரு விதமான தொகுப்பு என்று புரிந்து கொண்டார்கள். 


பஞ்ச பூதங்கள் அடிப்படையானவையா? அவற்றிற்கு உள்ளே வேறு எதுவும் இருக்கிறதா என்று ஆராயத் தலைப்பட்டார்கள். 


தோற்றம் என்பது என்ன? 


பொருள்களுக்கு என்று தனிக் குணம் இருக்கிறதா? அல்லது அது பார்பவரை பொறுத்து அமைகிறதா?


ஒருவன் ஒரு உணவை உண்டுவிட்டு ஐயோ, அம்மா என்ன காரம் என்று கண்ணீர் விட்டுக் கொண்டு நீரைத்தேடி ஓடுகிறான். அதே உணவை இன்னொருவன் உண்டுவிட்டு "என்ன இது ஒரு உப்பு உரைப்பு இல்லாமல் சப் என்று இருக்கிறது" என்கிறான். எது உண்மை? உணவு காரமாக இருக்கிறதா, இல்லையா? 


காரம் என்பது உணவில் இருக்கிறதா அல்லது உண்பவனின் நாக்கில் இருக்கிறதா? 


இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு போகலாம். 


பொருள் என்பது குணங்களின் தொகுதி என்றால், குணம் என்பது அதை உணர்பவனை பொறுத்து மாறும் அல்லவா? அப்படி என்றால் பொருளுக்கு என்று ஒரு தன்மை கிடையாதா? 


ஆராய்ச்சி தொடர்கிறது. 


அடுத்த பாடலில் அந்த ஆராய்ச்சிகளையும், அதில் யார் யார் என்னென்ன சொன்னார்கள் என்பதையும், தான் கண்டது என்ன என்பதையும் அருணகிரிநாதர் கூறுகிறார்.


அது என்ன என்று நாளை சிந்திப்போம். 



Friday, August 12, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - அஃதொப்பது இல்லை - பாகம் 2

   

 திருக்குறள் - அழுக்காறாமை -  அஃதொப்பது இல்லை - பாகம் 2


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


)


பாடல் 


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்


யாரிடத்தும் பொறாமை கொள்ளாமல் இருப்பது போன்ற உயர்ந்த செல்வம் இல்லை என்று முன் சிந்தித்தோம்.


இனி தொடர்வோம். 


பொறாமை யார் மேல் வரும்?


நம்மை விட ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்தவர்கள் மேல் தானே பொறாமை வரும். 


நம்மை விட கீழே இருப்பவர்கள் மேல் ஏன் பொறாமை வரப் போகிறது?


அந்த உயர்ந்தவர்கள் யார் ?


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2.html


(Pl click the above link to continue reading)


அவர்கள் நமக்கு நெருங்கியவர்களாக இருக்கலாம்.  அல்லது, நமக்கு வேண்டாதவர்களாக இருக்கல்லாம். எதிரியோ, பகைவனோ, வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 


நமக்கு வேண்டியவர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் பிறப்புகள் அவர்கள் நன்றாக இருந்தாலே பலருக்கு அவர்கள் மேல் பொறாமை வருகிறது. 


உடன் பிறந்த சகோதரன்தான். நன்றாக படித்து, பெரிய வேலை, பெரிய வீடு என்று இருந்தால் மற்ற சகோதரனுக்கு பொறாமை வருமா இல்லையா?


வெளியில் சொல்ல மாட்டான். உள்ளுக்குள் இருக்கும். 


எத்தனை அண்ணன் தம்பி சண்டைகள் நீதிமன்றக் கதவை தட்டுகின்றன. 


தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் மனைவி மேல் பொறாமை சிலருக்கு வருகிறது தானே.


தன்னைவிட அழகாக இருக்கும் மகள் மேல் சில தாய்மார்களுக்கு பொறாமை இருக்கத்தான் செய்கிறது. மகளுக்குச் சமமாக ஆடை உடுத்துகிறார்கள், நகை அணிகிறார்கள், அழகு நிலையத்தில் சென்று அழகு படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். உண்டா இல்லையா? 


தன்னை விட படித்து பெரிய ஆள் ஆன மகன் மேல், தன்னை விட அழகாக இருக்கும் மகள் மேல் எல்லாம் பொறாமை வருகிறது. 


அண்ணன் மனைவி, தம்பி மனைவி என் மனைவியை விட அழகாக இருக்கிறாள் என்றெல்லாம் பொறாமை கொள்கிறார்கள். 


சரி இதாவது எப்படியோ சாக்கு போக்கு சொல்லி மனதை திருத்தி விடலாம். நம் தம்பிதானே, நம் அண்ணன்தானே போனால் போகுது என்று ஒரு சமாதானம் அடைய முடியும். 


நம் எதிரி உயர்ந்தால் பொறாமை வருமே. அதை எப்படி மாற்றுவது? நமக்கு வேண்டாதவன் உயர்ந்து கொண்டே போகிறான். நம்மால் சகிக்க முடியுமா? பெரிய வீடு வாங்குகிறான், பெரிய கார் வாங்குகிறான், பத்திரிகைகளில் அவன் பேர் வருகிறது, எல்லோரும் அவனைப் புகழ்கிறார்கள். எப்படி பொறாமை கொள்ளாமல் இருப்பது?


யார்மேலும் பொறாமை கொள்ளக் கூடாது என்பதற்காக 


"யார் மாட்டும்" என்று கூறுகிறார். 


அந்த யார் மாட்டும் என்ற சொல்லுக்குள் எவ்வளவு இருக்கிறது பாருங்கள். 


நமக்கு வேண்டாதவன் உயர்ந்தால் கூட பொறாமை கொள்ளாமல் இருக்க வேண்டும் என்கிறார். 


அது எப்படி என்று பின்னால் சொல்ல இருக்கிறார். 


இப்போதைக்கு சிந்தியுங்கள். யார் மேல் எல்லாம் உங்களுக்கு பொறாமை இருக்கிறது என்று. 


கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை விலக்க முயலுங்கள். கடினம்தான். ஆனால் முடியும். பொறாமை குறைய குறைய மன பாரம் குறையும். மன அழுத்தம் குறையும். நிம்மதி பிறக்கும். அமைதி தோன்றும். 


யார் எப்படி போனால் நமக்கு என்ன.


"வட கோடு உயர்ந்தென்ன தென் கோடு தாழ்ந்தென்ன" என்று இருக்க முயல்வோம்.